Saturday, August 22, 2009

தமிழ் இமயம் வ.சுப.மாணிக்கம்!



""எளிய வாழ்வு, அளவான பேச்சு, எந்நிலையிலும் எதிர்கால நம்பிக்கை, பதவிகளைத் தொண்டாக மதித்தல், தன்னைப் பற்றிய திருத்தமான சிந்தனைகள், வாழ்க்கைத் திட்டங்கள், பெரியவர்களின் வரலாறுகளைப் படித்தல், சோர்வுக்கு இடங்கொடாத ஊக்கங்கள், பகட்டின்றித் தூய எண்ணத்தால் இறைவனை வழிபடுதல் இவையெல்லாம் நான் கண்ட முன்னேற்ற நெறிகள். தமிழுக்குத் "தொல்காப்பியமும்', வாழ்வின் உயர்வுக்குத் "திருக்குறளும்', உயிர்த் தூய்மைக்குத் "திருவாசகமும்' எனக்கு வழிகாட்டிய தமிழ் மறைகள்'' என்று கூறி, வாழ்ந்த மூதறிஞர், தமிழ் இமயம் எனப் போற்றப்பட்ட வ.சுப.மாணிக்கனார். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மேலைச்சிவபுரியில் 1917-ஆம் ஆண்டு ஏப்ரல் 17-ஆம் தேதி நாட்டுக்கோட்டை நகரத்தார் வகுப்பில் வ.சுப்பிரமணியன் செட்டியாருக்கும் - தெய்வானை ஆச்சிக்கும் ஐந்தாவது மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் அண்ணாமலை. பிற்காலத்தில் மாணிக்கம் என்ற பெயரே இவருக்கு நிலைத்து விட்டது. வ.சுப.மாணிக்கத்திற்கு ஆறு வயது ஆனபோது அவரது தாய் இறந்தார். அடுத்த பத்தாவது மாதம் தந்தையும் இறந்ததால், சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து துன்புற்றார். இச்சூழ்நிலையில், தாய்வழிப் பாட்டி மீனாட்சியும் தாத்தா அண்ணாமலை செட்டியாருமே அவரை மகனாகப் பாவித்து வளர்த்தனர். ஏழு வயதுவரை புதுக்கோட்டையில் உள்ள பள்ளி ஒன்றில் இரண்டாண்டுகள் ஆரம்பக்கல்வி பயின்றார். பதினொன்றாம் வயதில் தொழில் கற்றுக்கொள்வதற்காக பர்மாவுக்கு அனுப்பப்பட்டார். பர்மாவின் தலைநகரான ரங்கூனில், ஒரு வட்டிக் கடையில் வேலைபார்த்து வந்தார். கடை முதலாளி அவரிடம், ""குறிப்பிட்ட நபர் வந்து கேட்டால் முதலாளி இல்லை என்று சொல்லி விடு!'' என்று கட்டளை இட, ""முதலாளி வெளியில் சென்றிருந்தால் இல்லை என்பேன்; இருக்கும்போது எவ்வாறு இல்லை என்று கூறுவது? அப்படியெல்லாம் நான் பொய் சொல்ல மாட்டேன்'' என்று முதலாளியிடம் பதில் கூறியதால், அன்றே பணியிலிருந்து நீக்கப்பட்டார் வ.சுப.மா. இந்நிகழ்ச்சியினாலேயே "பொய் சொல்லா மாணிக்கம்' என்று பின்னாளில் அவர் அழைக்கப்பட்டார் என்றுகூட சொல்வர் அறிஞர் பெருமக்கள். பர்மாவில் இருந்து திரும்பிய வ.சுப.மா.வை, தமிழ் மொழியின் மீது மிகுந்த நாட்டம் கொள்ளச் செய்தவர் பண்டிதமணி மு.கதிரேசச்செட்டியார். அவரது பெரும் உதவியால் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வித்துவான் வகுப்பில் சேர்ந்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார் வ.சுப.மா. பின்னர் 1945-இல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் பி.ஓ.எல், எம்.ஏ.,(1951) ஆகிய பட்டங்களைப் பெற்றார். பின்னர் "தமிழில் வினைச்சொற்கள்' என்ற பொருளில் ஆராய்ந்து எம்.ஓ.எல். பட்டமும், "தமிழில் அகத்திணைக் கொள்கை' என்னும் பொருளில் ஆராய்ந்து பிஎச்.டி. (முனைவர்) பட்டமும் பெற்றார். 1945-இல் நெற்குப்பையைச் சேர்ந்த ஏகம்மை ஆச்சியைத் தம் வாழ்க்கைத் துணைவியாக ஏற்றார். 1941 - 1948 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். பின் அங்கிருந்து விடைபெற்று, காரைக்குடி அழகப்பா கல்லூரியில் முதுகலைப் பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்றார். ஆறு ஆண்டுகள் அக்கல்லூரியில் முதல்வராகவும் பணிபுரியும் வாய்ப்பைப் பெற்றார். மீண்டும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 1970 முதல் 1977 வரை ஏழாண்டுகள் தமிழ்த்துறைத் தலைவராகவும், இந்திய மொழிப்புல முதல்வராகவும் பணிபுரிந்தார் வ.சுப.மா. வள்ளுவம், தமிழ்க்காதல், கம்பர் போன்ற அவரது ஆய்வு நூல்கள் தமிழக அரசின் பரிசு பெற்றவை. தொல்காப்பியப் புதுமை, எந்தச் சிலம்பு, இலக்கிய விளக்கம், சிந்தனைக் களங்கள், ஒப்பியல் நோக்கு, தொல்காப்பியத் திறன் போன்றவை பல்பொருள் குறித்த ஆய்வு நூல்கள். மனைவியின் உரிமை, நெல்லிக்கனி, உப்பங்கழி, ஒரு நொடியில், ஆகிய நான்கும் நாடக நூல்கள். கொடை விளக்கு, மாமலர்கள், மாணிக்கக் குறள் என்பன அவரது கவிதை நூல்கள். இரட்டைக் காப்பியங்கள், நகரத்தார் அறப் பட்டயங்கள் இரண்டும் வ.சுப.மா. பதிப்பித்த நூல்கள். "தொல்காப்பியம் - எழுத்ததிகாரம் நூன்மரபும் மொழிமரபும் மாணிக்கவுரை', திருக்குறள் தெளிவுரை, நீதிநூல்கள் உரை என்பன அவர் வெளியிட்டுள்ள உரை நூல்கள். பட்ங் பஹம்ண்ப் இர்ய்ஸ்ரீங்ல்ற் ர்ச் ப்ர்ஸ்ங், அ நற்ன்க்ஹ் ர்ச் பஹம்ண்ப் யங்ழ்க்ஷள், இர்ப்ப்ங்ஸ்ரீற்ங்க் டஹல்ங்ழ்ள், பஹம்ண்ப்ர்ப்ர்ஞ்ஹ் என்பன வ.சுப.மா. எழுதியுள்ள ஆங்கில நூல்கள். இவைதவிர "தலைவர்களுக்கு' என்பது வ.சுப.மா. கடித வடிவைக் கையாண்டு எழுதியுள்ள குறிப்பிடத்தக்க நூல். ""பெண்ணுக்குக் கற்பினைப் போன்றது கவிஞருக்குக் கற்பனை. கற்பனை இல்லாமல் கவிஞர் இருக்க முடியாது; கவிதை பிறக்க முடியாது. கவிதை என்றால் அதில் கற்பனை கட்டாயம் கலந்திருக்கும்; புலவர்கள் குறிக்கோள் உடையவர்கள். அக்குறிக்கோளைப் பதியவைப்பதற்கு அன்னவர்கள் கையாளும் இலக்கியக் கருவியே கற்பனை யென்பது'' என தமிழ்க்காதல் என்ற நூலில் கற்பனைக்கு விளக்கம் தந்துள்ளார் வ.சுப.மா. உரையாசிரியர், கவிஞர், நாடக ஆசிரியர், ஆய்வாளர், உரைநடை ஆசிரியர் போன்ற பன்முகங்கொண்ட வ.சுப.மா. மிகச்சிறந்த சிந்தனையாளராகவும் திகழ்ந்தார். அவரது சிந்தனைச் செழுமையை அவரது நூல்கள் அனைத்திலும் காணமுடிகிறது. வ.சுப.மா. பழமையைப் போற்றியது மட்டுமல்லாமல் புதுமையை இருகரம் கொண்டு மனமார வரவேற்கும் சிறந்த பண்பாளராகவும் விளங்கினார். உயர்ந்த குறிக்கோள் உடைய வாழ்வே வாழ்வு; குறிக்கோள் இல்லையென்றால் அதற்குப் பெயர் வீழ்வு! என்று கூறும் வ.சுப.மா., குறிக்கோள் இல்லாத வாழ்வு எத்தகையது என்பதை ஒரு கவிதை மூலம் அழகாக; தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளார். ""குறிக்கோள் இலாத வாழ்வு கோடுகள் இலாத ஆட்டம்; நெறிக்கோள் இலாத நெஞ்சு நிறைநீர் இலாத யாறு; மறிக்கோள் இலாத கல்வி வரப்புகள் இலாத நன்செய்; செறிக்கோள் இலாத மேனி திறவுகோல் இலாத பூட்டாம்''(மாமலர்கள்-ப.60) தமிழின் வளர்ச்சிக்குப் புதிய சொல்லாக்கங்களை உருவாக்குவது மிகவும் இன்றியமையாதது என்பது வ.சுப.மா.வின் அசைக்கமுடியாத கருத்து. இத்தகைய சொல்லாக்கங்களைப் படைப்பது அவருக்குக் கைவந்த கலை. "தமிழ் வழி கல்வி இயக்கம்' என்ற அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்று, தமிழகம் முழுவதும் தமிழ் பரப்ப, தமிழ் யாத்திரை மேற்கொண்டார். தன் சொத்தில் ஆறில் ஒரு பங்கை அற நிலையத்திற்கு வழங்கவேண்டும்; தாம் பிறந்த ஊரான மேலைச்சிவபுரியில் கல்வி, மருத்துவம், நலவாழ்வு, குழந்தைநலம், சாதி சமய வேறுபாடின்றி இலவசமாகச் செலவு செய்ய வேண்டும் என்றும், தம் நூலகத்தில் தாம் தொகுத்து வைத்துள்ள நூல்களை காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்திற்கு அன்பளிப்பாக வழங்க வேண்டும் என்றும் இவ்வாறு தமது விருப்பத்தை உயிலில் குறித்துவைத்திருந்தார். எங்கும் தமிழ்; எதிலும் தமிழ் என்று முழங்கிய அந்தத் தமிழ் மாமலை, 1989-ஆம் ஆண்டு ஏப்ரல் 25-ஆம் தேதி புதுச்சேரியில் சரிந்தது. என்றாலும் இன்று வரை அவரது ஆன்மா, தமிழ் உள்ள இடங்களில் எல்லாம் நூல் வடிவில் வாழ்ந்துகொண்டிருக்கிறது!

Sunday, August 09, 2009

கல்வெட்டறிஞர் கா.ம.வேங்கடராமையா



தஞ்சாவூர் அரண்மனையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் 1981-இல் தொடங்கப்பட்டு, செயல்பட்டுக் கொண்டிருந்தது. அருங்காட்சியகம், ஓலைச்சுவடித்துறை, அரிய கையெழுத்துச் சுவடித்துறை, கல்வெட்டியல்துறை ஆகிய துறைகள் செயல்பட்டுக் கொண்டிருந்தன. ஒருநாள் தமிழ்ப் பேராசிரியரும், கல்லூரி முதல்வரும், கவிஞருமான சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் வந்தார். அவர் தம் காலணியை அறைக்கு வெளியில் விட்டுவிட்டு அரிய கையெழுத்துச் சுவடித்துறை அறைக்குள் நுழைந்தார். அந்த அறையில் இருந்த பேராசிரியரை நெடுஞ்சாண் கிடையாக நிலந்தோய்ந்து விழுந்து வணங்கினார். அதன் பின்னர் சுமார் 1 மணி நேரம் வரை அங்கிருந்த இருக்கையில் அமராமல் பணிவுடன் கைகட்டி, வாய் புதைத்து அப்பேராசிரியர் சொன்னதைக் கேட்டுச் சரி, ஆம் என்ற பதில்களைச் சொல்லி வந்தார். பேராசிரியர் சொன்ன எதற்கும் எவ்வித மறுப்பும் சொல்லவில்லை. இந்நிகழ்வுகளைக் கண்ட எனக்கு உடம்பு சிலிர்த்தது. அந்தக் கல்லூரி முதல்வர் வேறு யாருமில்லை. அவர் பேராசிரியர் ம.வே.பசுபதி. அவர் காண வந்த பேராசிரியர் அவரது தந்தையாரான கா.ம.வேங்கடராமையா ஆவார்.சென்னை-பூவிருந்தவல்லியை அடுத்த காரம்பாக்கம் என்னும் சிற்றூரில் 1912-ஆம் ஆண்டு ஏப்ரல் 4-ஆம் தேதி, கா.கிருஷ்ணையர்-வேங்கடசுப்பம்மாள் தம்பதிக்கு மகவாகப் பிறந்தார் வேங்கடராமையா. இவர் தாய்மொழி தெலுங்கு.சென்னை லயோலா கல்லூரியில் இளங்கலை பொருளாதாரம் படித்தார். செங்கல்பட்டிலுள்ள தூய கொலம்பா உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். தமிழ் ஆர்வம் காரணமாக பி.ஓ.எல். தேர்ச்சி பெற்றார். ஆங்கிலத்தில் முதுகலைத் தேர்விலும் வென்றார்.1947 முதல் 1972 வரை 25 ஆண்டுகள் திருப்பனந்தாள் காசி மடத்துச் செந்தமிழ்க் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றினார். அந்நாளைய தமிழக ஆளுநர் கே.கே.ஷா தொடங்கிய தமிழ், சம்ஸ்கிருதம் மற்றும் இந்திய மொழிகள் ஆய்வு நிறுவனத்தில் ஏறத்தாழ மூன்றரை ஆண்டுகள் ஆராய்ச்சியாளராக இருந்தார். அங்கிருந்த காலத்தில், பன்மொழி இலக்கண ஒப்பீட்டு ஆய்வுகளைச் செய்து வந்தார். அதன் பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் திருக்குறள் இருக்கையில் மூன்றரை ஆண்டுகள் ஆராய்ச்சியாளராகப் பணியாற்றினார்.1981-இல் தஞ்சாவூரில் தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டபோது அரிய கையெழுத்துச் சுவடித்துறையின் முதல் தலைவராகப் பொறுப்பேற்று, ஏறத்தாழ 5 ஆண்டுகள் வரை பணியாற்றினார். நிறைவாகத் திருவனந்தபுரத்தில் உள்ள பன்னாட்டுத் திராவிட மொழியியல் கழகத்தில் பணி புரிந்தார்.சிறந்த வைதிக வைணவக் குடும்பத்தில் பிறந்த இவர், சைவ சமயத்தில் ஆழ்ந்த ஈடுபாடும், ஆழங்காற்பட்ட அறிவும் உடையவராகத் திகழ்ந்தார். அத்துடன் சைவ சமயச் சொற்பொழிவாளராய், திருமுறைகளில் புலமையும் கொண்டிருந்தார். திருமுறைகளை ஒட்டியே இவரது பெரும்பாலான ஆய்வுகள் அமைந்தன.வேங்கடராமையா, தமிழுக்கும் சமயத்திற்கும் ஆற்றிய பணிகள் ஏராளம். ஆய்வுப் பேழை, கல்வெட்டில் தேவார மூவர், இலக்கியக் கேணி, கல்லெழுத்துக்களில், சோழர் கால அரசியல் தலைவர்கள், திருக்குறள் உரைக்கொத்து, திருமுருகாற்றுப்படை உரைக்கொத்து, திருக்குறள் குறிப்புரை, பன்னிரு திருமுறைப் பதிப்பு, கந்தபுராணப் பதிப்பு, திருவிளையாடற்புராணப் பதிப்பு, தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும், தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு, சிவனருள் திரட்டு (500-பாடல்களுக்கு உரை, ஆங்கில மொழிபெயர்ப்பு), நீத்தார் வழிபாடு, தஞ்சை மராட்டிய மன்னர் கால மோடி ஆவணமும் தமிழாக்கமும், திருக்குறள் பரிப்பெருமாள் உரையும் ஆய்வுரையும், திருக்குறளும் - நாலாயிர திவ்வியப் பிரபந்தமும், மும்மொழி வெண்பாக்களில் நாயன்மார் வரலாறு, பெரியபுராணமும் - திருக்குறளும், திருக்குறள் சமணர் உரை போன்ற பல நூல்களை எழுதியும் பதிப்பித்தும் உள்ளார்.""திருமுறைகளுக்கு உரை எழுதினால் இறந்து விடுவார்கள்'' என்று மக்கள் நம்பிக்கை கொண்டிருந்த காலத்தில், 1949-இல் காரைக்கால் அம்மையார் எழுதிய அற்புதத் திருவந்தாதிக்குக் குறிப்புரை எழுதிப் பதிப்பித்தார். இந்நூல்தான் இவர் பதிப்பித்த முதல் நூல். காசித் திருமடத்தின் வெளியீடாக வந்தது. இவர் பதிப்பித்த அனைத்து நூல்களிலும் நூலாசிரியர் வரலாறு, நூல் பற்றிய செய்திகள், கல்வெட்டில் ஏதேனும் குறிப்புகள் கிடைப்பின் அவற்றையும் குறிப்பிடுவது வழக்கமாகும்.காசி மடத்தின் வெளியீடுகளுள் திருக்குறள் உரைக் கொத்துப் பதிப்புகள் பதிப்பு வரலாற்றில் குறிப்பிடத்தக்கன. திருக்குறள் உரைக்கொத்தைப் பதிப்பிக்கும்போது, எம்.எஸ்.பூர்ணலிங்கம் பிள்ளை, வி.ஆர்.இராமச்சந்திர தீட்சிதர், எம்.ஆர்.இராசகோபால ஐயங்கார், வ.வெ.சு.ஐயர், ரெவரண்ட் லாசரஸ் ஆகியோரின் ஆங்கில மொழிபெயர்ப்புகளை ஒப்பிட்டுத் தகுந்த மொழிபெயர்ப்பைத் தேர்ந்தெடுத்து ஒவ்வொரு குறளுக்கும் கீழே வெளியிட்டார்.தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தின் மூலமாகத் திருக்குறளுக்குச் சைனர் எழுதிய உரையைப் பதிப்பித்தார். இதற்காக இவர் சைன சமயத்தைச் சார்ந்த பலரிடமும் சென்று அச்சமயம் சார்ந்த பல செய்திகளைக் கேட்டு நன்கறிந்தார். பல்வேறு பதிப்புகளையும் ஒப்பு நோக்குதல், மூல ஓலையுடன் கையெழுத்துப் படியை ஒப்பு நோக்குதல் முதலான பலவற்றைத் தேவையான வகையில் செப்பனிட்டு விரிவான முறையில் ஆய்வு முன்னுரை எழுதி, திருத்தமான முறையில் அந்நூலைப் பதிப்பித்தார். பெரும்பாலும் இவர் எழுதிய நூல்களிலும், கட்டுரைகளிலும் முன்பு எவரும் எழுதாத செய்திகளையே தருவதைக் காணலாம். "தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்' என்ற நூலில், தஞ்சாவூர் மராட்டியர்தம் ஆட்சிக்குட்பட்ட சமுதாயத்துக்கு மராட்டிய மன்னர்கள் செய்த நன்மைகள், கலைச் சிறப்புகள், அக்காலத்திய பழக்க வழக்கங்கள், அரசியல் நிலைமைகள் போன்ற பலவற்றை மோடி ஆவணங்கள், கல்வெட்டுச் சான்றுகள், இலக்கியச் சான்றுகள் போன்றவற்றின் துணையுடன் ஆராய்ந்து எழுதியுள்ளார். மெக்கன்சி சுவடி, போனஸ்லே வம்ச சரித்திரம் போன்றவற்றின் துணைகொண்டு இந்நூல் பதிப்பிக்கப்பட்டுள்ளது.இலக்கணம், இலக்கியம், கல்வெட்டு, வரலாற்றுப் புலமை, ஆங்கிலம், வடமொழி, தெலுங்கு மொழிப் புலமையும் அறிவும் கொண்டவர் கா.ம.வேங்கடராமையா. இவர் கல்வெட்டாராய்ச்சிப் புலவர், செந்தமிழ்க் கலாநிதி, தமிழ் மாமணி முதலான பல்வேறு பட்டங்களைப் பெற்றுள்ளார். காலம் தவறாமை, நேரத்தை வீணாக்காமல் பலதுறை அறிவு நூல்களைக் கற்றல், ஐயம் என்று தன்னை நாடி வந்தவர்க்கு, தாம் அறியாத செய்தியாக இருந்தாலும் அரிதின் முயன்று அறிந்து விடை கூறுதல், கடமை உணர்வு, கண்ணியத்துடன் நடந்து கொள்ளுதல் ஆகிய பண்பு நலன்கள் இவரிடம் இருந்தன.காலத்தை உயிரெனக் கருதினார். உயிர் போனால் திரும்ப வராது என்பதை அடிக்கடி கூறுவார். "காலம் பொன் போன்றது' என்று கூறக்கூடாது; "காலம் உயிர் போன்றது' என்பார். எந்த ஒரு செயலைச் செய்தாலும் அதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளும் தன்மை மிக்கவர் வேங்கடராமையா.வேங்கடராமையா, 1995-ஆம் ஆண்டு ஜனவரி 31-ஆம் தேதி இறைநிழல் அடைந்தார். இன்றைக்கு கா.ம.வேங்கடராமையா இல்லாவிட்டாலும் அவர் ஆற்றிய பணிகள், பதிப்பித்த நூல்கள், எழுதிய நூல்கள் முதலானவை தமிழ் உள்ளவரை என்றென்றும் நிலைத்திருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.