Sunday, September 25, 2016

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ங] – இலக்குவனார் திருவள்ளுவன்




முன் அட்டை -தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார், திரு ; mun-attai_poaraali_ilakkuvanar_ila-thiru

தமிழ்ப்போராளி  பேராசிரியர் சி.இலக்குவனார்

[1.முன்னுரை  – முற்பகுதி

  நாட்டு விடுதலைக்காக ஆயுதம் ஏந்திப் புரட்சி நடத்திய போராளிகளை உலகம் அன்று முதல் இன்று வரை கண்டு வருகிறது. ஆயுதம் ஏந்தாமல் மக்கள் உள்ளங்களில் தம் எண்ணங்களை விதைத்துப் புரட்சி ஏற்படுத்தும் போராளிகளையும்  உலகம் சந்தித்து வருகிறது. ஏட்டில் எழுத்தாலும், நாட்டில் உரையாலும் செயலாலும் களத்தில் நின்றும், மக்கள் நலனுக்காகப் போராடிய சிந்தனையாளர்கள் சிலரே உள்ளனர். அத்தகையோருள் எண்ணத்தக்க ஒருவரே தமிழ்ப்போராளிப் பேராசிரியர் சி.இலக்குவனார். தத்தம் பகுதி அளவில் சிந்தனையாளராகத் திகழ்ந்து இலக்கியவாதிகளாக மிளிர்ந்து புரட்சியாளராக ஒளிர்ந்தவர்களையும் உலக  அளவில் மதித்துப் போற்றுவதே உலக வழக்கு. தமிழ்நாட்டின் அறிஞர்களையும் புரட்சியாளர்களையும்  மன்னர்களையும் தலைவர்களையும் நாம் சுருங்கியக் கண்ணோட்டத்தில் பார்க்கின்றோம். அவ்வாறில்லாமல் உலக அளவிலேயே பார்க்க வேண்டும். அத்தகைய உலக ஆன்றோர்கள் தமிழ் நாட்டில் எண்ணற்றோர் இருந்துள்ளனர். அவர்களுள் குறிப்படத்தகுந்த கடந்த நூற்றாண்டுப் புரட்சிப் போராளியே பேராசிரியர் சி.இலக்குவனார் ஆவார்.
என் வாழ்க்கையே தமிழ்நலம் நாடிய போராட்டக் களம்தான்” எனப் பேராசிரியரே ‘என் வாழ்க்கைப்போர்’ என்னும் தம் வாழ்க்கை வரலாற்று நூலில் குறிப்பட்டுள்ளார். புகழ் வாய்ந்த தமிழறிஞர்களையும் நாட்டுத் தலைவர்களையும் கண்டுள்ள தமிழ் உலகில் மொழிகாக்கும் போராளியாகத் திகழ்ந்த ஒரே பேராசிரியர், பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் அவர்கள்தாம். கட்டுக்கடங்காத் தமிழார்வமும் பொங்கி எழும் பைந்தமிழ் எழுச்சியும் பேராசிரியரின் மாணவ வாழ்க்கையையே போர்க்களமாக அமைத்தது.
மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் பேராசிரியரைப்பற்றிப் பன்வருமாறு தெரிவித்துள்ளார் (வீ.முத்துச்சாமி : இலக்குவனார் ஆய்வுப்பண்பு):
“மொழியில் தமிழின் தூய்மையையும் தலைமையையும் கடுமையாய்ப் பேணுபவர். குலவியலில், வெளிப்படையாகவேனும் மறைவாகவேனும் வெறியற்றவர். மதவியலில் நடுநிலையானவர், சமநிலையுணர்வினர்.
அன்பு, அடக்கமுடைமை, செருக்காமை, ஆரவாரமின்மை, அழுக்காறின்மை, உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசாமை, கொள்கையுறைப்பு, அஞ்சாமை, ஊக்கமுடைமை, பணத்தினும் பண்பாட்டைப் பெரிதாகக் கொள்கை, தலைசிறந்த தமிழ்ப்பற்று, ஆகியன அவரிடம் நான் கண்ட பண்புகள்.”
  தலைவனுக்கும் போராளிக்கும் இருக்கவேண்டிய இப்பண்புகள் பேராசிரியரிடம்  குடிகொண்டிருந்தமையால்  அவரால் பிறரை வழிநடத்திச் செல்லும் போராளியாகத் திகழ முடிந்தது.
  முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் மேற்குறித்த நூல் வழியாகப் பின்வருமாறு பேராசிரியரின் புலமைச் சிறப்பையும் நாடு தழுவித் தனித்தமிழ் இயக்கம் நடத்திய மேன்மையையும் குறிப்பட்டுள்ளார்:
“ஆங்கிலக்கடல் நீந்தித், தமிழ்க்கரை ஏறிய அறிஞர் பெருமக்களில் ஒருவர். தமிழ் இலக்கியங்களில் ஆழ்ந்த புலமையும் இலக்கண நூல்களில் நுணுகிய ஆராய்ச்சியும் உடையவர்.
உள்ளத்தில் கபடம் இன்றி, எதையும் வெளிப்படையாகவும் துணிவாகவும் கூறும் ஆற்றல் படைத்தவர்.
தமிழ் வளரவும் தமிழகம் செழிக்கவும் தமிழ்மக்கள் நல்வாழ்வு வாழவும் தம் வாழ்நாள் முழுவதும் தன்னலமின்றிப் பெரிதும் உழைத்து வந்தார்… தமிழ்க்காப்புக் கழகத்தை அவர்  தோற்றுவித்து மாவட்டங்களிலும் சிற்றூர்களிலும் அதன் கிளைகளை நிறுவிப்பெருந்தொண்டு புரிந்தவர். அவ்வியக்கத்தின் நோக்கம் பிற மொழிகள் கலப்பின்றித் தனித்தமிழ் மொழியில் எழுதவும் பேசவும் வேண்டும் என்பது. இது பெரும்பாலும் மறைமலை அடிகளின் வழியைப் பின்பற்றியது. இது தமிழகத்தில் ஓரளவு வெற்றிபெற்று வளர்ச்சியடைந்து கொண்டு வருகிறது.”
பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையார்,
“ஆரவாரமும் சார்பும் அற்ற அவரது திறனாய்வுரைகள் நாம் விரும்பும் இடத்திலும் சீரியது, நாம் விரும்பாத இடத்தில்கூடச் சீரியதேயாகும். நான் அவரிடம் கருத்து வேற்றுமை அற்ற நிலையில்கூட, கருத்து வேறுபாடுடையவர்கள்  நலக்கூறுகளை அவர் உணர்ந்து பாராட்டுமிடங்களில் இவ்வுண்மை கண்டு வியந்துள்ளேன்.
 பெரியாரிடம் அசைக்கமுடியாத உறுதியான பற்றுடையவர். அவர் குறிக்கோள் வழியைத் தம் ஆராய்ச்சியால் கண்டு உறுதி கொண்டு விளக்குபவர்.
  எவ்வளவு பெரியவரையும், எவ்வளவு நண்பரையும், குற்றங்காணின் மழுப்பாது இடித்துரைத்துக் கண்டனக் குரல் எழுப்பும் நக்கீர மரபினர். இதனால் பலதடவை பதவிக்கே ஊறு நேர்ந்ததுண்டு.”   
என்று பேராசிரியரின் நடுநிலைத் திறனாய்வையும் குற்றம் கண்டவிடத்து இடித்துரைக்கும் துணிவையும் பாராட்டி உள்ளார்.
(தொடரும்) 
   இலக்குவனார் திருவள்ளுவன்

Sunday, September 11, 2016

பேரா.சி.இலக்குவனார் வழியில் செந்தமிழ் நடை பேணுவோம்! : 2 – இலக்குவனார் திருவள்ளுவன்




தலைப்பு-இலக்குவனார் வழியில் செந்தமிழ்நடை 02, திரு ;படம்-இலக்குவனார் திருவள்ளுவன் ;thalaippu_ilakkuvanar_senthamizhnadai2_thiru

பேரா.சி.இலக்குவனார்  வழியில்

செந்தமிழ் நடை பேணுவோம்! –  2 / 2

  தமிழியக்கப்பணிகளாலும் திராவிட இயக்கப்பணிகளாலும் தமிழ் மறுமலர்ச்சி ஏற்பட்டது குறித்து மகிழ்ந்தவர் பேராசிரியர் சி.இலக்குவனார். அவர், இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்று புதுமைப் பாவலர்கள்  முழக்கம் செய்தனர். எங்கு நோக்கினும் இன்பத்தமிழ்; செந்தமிழ்; இதழ்களில் செந்தமிழ்மேடைப்பேச்சுகளில் நற்றமிழ்; மாநாடுகளில்வண்டமிழ்; நற்றமிழில் பேசுதலே  நற்புலமைக்கு அடையாளம் என்ற எண்ணம் உருப்பெற்று விட்டது. நமஃச்காரம் போய் வணக்கம் வந்தது. சந்தோசம் மறைந்து மகிழ்ச்சி  தோன்றியது. விவாகம்  விலகித் திருமணம் இடம் பெற்றது. வருசம் கழிந்து ஆண்டு  நிலை பெற்றது. இவ்வாறு தமிழ் மீண்டும் மலரத் தொடங்கியது.
 பழந்தமிழ் (1962 )(இலக்குவனார் இலக்கிய இணைய மறுவெளியீடு) பக்.214
  இருந்தாலும் தமிழ் மறுமர்ச்சி 1967இற்குப்பின்னர் மெல்ல மெல்லத் தேய்ந்தது குறித்துப் பெரிதும் கவலைப்பட்டார். இப்பொழுது நிலைமை மேலும் மோசமாக உள்ளது.  தமிழ்ச்சொற்கள்  யாவை, அயற்சொற்கள் யாவை  என அறியாமலே மக்கள் பிற மொழிச் சொற்களைக் கயைாண்டு வருகின்றனர். அருந்தமிழ்ச் சொற்களை விலக்கி வருகின்றனர். இனியேனும் நாம் (நல்ல)தமிழில் பேசுவதையும் எழுதுவதையும் நம் கடமையாகக் கொள்வோம்.
  தமிழ்ச்சொற்களின் ஒலி இனிமை, சொல்வளம் குறித்துப் பேரா.இலக்குவனார் பின்வருமாறு உணர்த்துகிறார்.
  தமிழ் என்று தோன்றியது என்று காலவரையறை செய்ய முடியாது; அது உலகமொழிகளின் தாய் என்று சொல்லக்கூடியது; இந்திய மொழிகளின் தாய் என்று எளிதே நிலைநாட்டப்படும் பெருமையை உடையது. இனிய இலக்கியங்களையும் பண்பட்ட இலக்கணத்தையும் பெற்றிருப்பதனால் மட்டும் சிறப்புடையது அன்று. மொழி என்ற அளவிலும் அதனின் இனிமைப் பண்பாலும், எளிய அமைப்பாலும் கற்போர் உள்ளத்தைக் கவரக்கூடியது. தமிழைக் கற்கத் தொடங்கி அதன் சுவையை நுகரத்  தொடங்குவரேல் ஏனைய மொழிகள் தமிழோடு ஒப்பிடப்படுமிடத்து இனிமையற்றதாகவே தோன்றும். தீந்தமிழ் என்றும் இன்பத்தமிழ் என்றும் சொல்லுவதற்கேற்ப அமைந்துள்ளமையை யாவரும் அறிவர். அதன் வடிவ அமைப்பே  உயிருக்கே இன்பம் அளிக்கக்கூடியதாகும்.  அதனுடைய சொற்களின் அசையமைப்பும் ஒலி  இனிமையும்  சொல்வளமும் சொற்பொருள் சிறப்பும் தமிழுக்குரிய உயர் இயல்புகளுள் முதன்மை பெற்றனவாகும்.
– பழந்தமிழ்(இலக்குவனார் இலக்கிய இணைய மறுவெளியீடு) பக்.212
  உரையாசிரியர்கள் ஆரிய முறையில் விளக்கம் அளித்துள்ளமையைப் பேரா. இலக்குவனார் கடிந்துரைத்துத் தமிழ்நெறியை உணர்த்துவார். சான்றுக்கு ஒன்றாக நச்சினார்க்கினியரின் நால்வருண முறைத்திணிப்பைக் கண்டித்துள்ளதைக் காண்போம்.
  உயர்ந்தோ ரெனக் கூறலின் வேளாளரை ஒழிந்தோர் என்றுணர்க என்று நச்சினார்க்கினியர் கூறியுள்ளார். முற்றிலும் பொருந்தா உரை கூறித் தொல்காப்பியத்தை இழிநிலைக்குக் கொண்டு வந்துவிட்டனர் உரையாசிரியர்கள். உரையாசிரியர் காலத்தில்  ஆரிய முறையாம் நால்வகை வருண நெறி நாட்டில் செல்வாக்கு  பெற்றிருந்திருக்கலாம். தொல்காப்பியர் காலத்தில் தமிழகத்தில் இடம் பெற்றிலது. அன்றியும் தொல்காப்பியர் தமிழக மக்கள் வாழ்வினைக் கூற வந்தனரேயன்றித் தமிழர்க்குத் தொடர்பில்லாப் பிற நாட்டினர் வாழ்க்கையைக் கூற நூல் செய்திலர். தொல்காப்பியர்க்குப் பிற்பட்டுத் தோன்றிய திருவள்ளுவர் உழவரை உயர்ந்தோரெனச் சிறப்பித்திருக்கவும் அவர்க்கு முன் வாழ்ந்த தொல்காப்பியர், உழவரை – வேளாளரை – உயர்ந்தோரல்லர் என ஒதுக்கியிருத்தல் எங்ஙனம் சாலும்? ஆதலின் உரையாசிரியர்கள் நால்வகை வருணம் பற்றிக் கூறுவன வெல்லாம் தொல்காப்பியர் கொள்கைக்கும் காலத்துக்கும் முரண்பட்டன பொருந்தாதன என்று அறிதல் வேண்டும்.
– தொல்காப்பிய ஆராய்ச்சி(பூம்புகார்பதிப்பகம்) பக்கம் 110
  கற்புநெறி என்பது இருபாலாரும் பின்பற்ற வேண்டிய ஒழுக்கமுறை என்பதே தமிழர்நெறி என்பதைப் பேரா.இலக்குவனார் வலியுறுத்தியுள்ளார். அவற்றில் ஒன்று வருமாறு:
 கற்பு கணவன் மனைவி இருசாரார்க்கும் இருக்க வேண்டிய இயல்புப்பண்பாகும். …….. திருமணத்திற்கு வேண்டப்படுவது காதல் என்றால், காதலுக்கு வேண்டப்படுவது கற்பேயாகும். காதலால் கூடிய இருவரும் என்றும் காதலில் திளைத்து வாழக் கற்பு மிக மிக இன்றியமையாதது.
– தொல்காப்பிய ஆராய்ச்சி(பூம்புகார்பதிப்பகம்) பக்.132
  பேரா.இலக்குவனார் பன்மொழியறிந்த இருமொழிப்புலவர். தாம் எழுதும் இடங்களில் ஆங்கில அறிஞர்களின் மேற்கோளைத் தமிழில் தந்து அடைப்பிற்குள் ஆங்கிலத்தில் குறிப்பிடுவதையும் தம் நடைப்பாங்காகக் கொண்டிருந்தார். சான்றாக மொழியையும் இலக்கியத்தையும் விளக்கும் பின்வரும் கருத்தைக் கூறலாம்.
உள்ளக் கருத்தை வெளிப்படுத்துவதும் அறியச்  செய்வதும் மொழி. வாழ்க்கை நுகர்ச்சியை வெளிப்படுத்துவதும் பிறர் அறியச்செய்வதும் இலக்கியம்.  (Literature exists not only in expressing a thing; it equally exists in the receiving of a thing expressed. – Abercrombie, Principles of Literary Criticism, page 28). புலவன் ஒருவன் தான் நுகர்ந்ததை நுகர்ந்தவாறு பிறர் அறிகின்ற வகையில் சொல்லோவியப்படுத்த வேண்டும்.
– தொல்காப்பிய ஆராய்ச்சி(பூம்புகார்பதிப்பகம்) பக் 152
  மொழியால் வாழ்வும்  இனத்தால்  மொழியும் உயரும்; எனவே, தமிழும் தமிழரும் உயர வேண்டும் எனப் பேரா.சி.இலக்குவனார் பின்வருமாறு வலியுறுத்துகிறார்.
  மக்களைப் பிரிவுபடுத்துகின்றவற்றுள் மொழியே பிறப்பொடு வந்து இறப்பொடு செல்வதாகும்.  ஏனைச் சமயமும் சாதியும் நிறமும் பொருள்நிலையும் பதவியும் இடையில் மாற்றத்திற்குரியன. உலகில் உள்ள மக்கள் கூட்டத்தினருள் பெரும்பகுதியினர் மொழியாலேயே வேறுபடுத்தப்பட்டு அழைக்கப்படுகின்றனர். மொழியால் மக்களினம் பெயர் பெற்றதா? மக்களினத்தால் மொழி பெயர்பெற்றதா? எனின், தமிழர்களைப் பொறுத்தவரை மொழியால்தான் மக்களினம்  பெயர் பெற்றுள்ளது. தமிழ் என்றாலும் தமிழர் என்ற பொருளுண்டு. பழந்தமிழ்பற்றி அறிந்த நாம், பழந்தமிழர்பற்றியும் அறிதல் இன்றியமையாதது. தமிழின் உயர்வே தமிழர் உயர்வு; தமிழர் உயர்வே தமிழின் உயர்வு. மக்கள் உயர்ந்தால் மொழி உயரும்; மொழி உயர்ந்தால் மக்கள் உயர்வர்.
பழந்தமிழ் (இலக்குவனார் இலக்கிய இணைய வெளியீடு), பக்.177
பேராசிரியர் இலக்குவனார் வழியில் நாமும்
தமிழ்த்தாயின் மீது படிந்துள்ள
அயற்சொல்அழுக்குகளை அகற்றுவோம்!
அழகுபடுத்துவோம்!
ilakkuvanar-thiruvalluvan
 – இலக்குவனார் திருவள்ளுவன்


Wednesday, September 07, 2016

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 41: ம. இராமச்சந்திரன்





தலைப்பு-இலக்குவனார்கவிதைகள் : ilakkuvanar kavithaikal_or_aayvu_thalaippu

காமராசர் ; kamarasar அழகப்பச்செட்டியார் ;azhagappa chettiyar

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 41

  தமிழ்நாட்டின் முதலமைச்சர் காமராசர் தமிழர். தமிழ் வளர்ச்சிக்கும் பாடுபடுதல் அவர் கடமையாகும். தமிழ் வளர்ச்சிக்கு உதவும் அவரைப் பாராட்டுவதும் எம் கடமைகளுள் ஒன்றாகும் என்று கவிஞர் குறிப்பிட்டுள்ளார்.
  ‘கருமவீரர் காமராசர் நூலினைப் படித்த நுண்ணறிவுடையீர்’ என்ற தொடங்கும் கவிதை பொருண்மொழீக் காஞ்சி என்னும் துறையில் பாடப் பெற்ற கவிதையாகும். முனிவர் முதலியோர் தெளிந்த பொருளைச் சொல்லுதல் பொண்மொழிக் காஞ்சித் துறையாம்.
   இக்கவிதை யாம் முதுமொழிக் காஞ்சி என்று உரைப்பினும் அமையும். அறிவுடைய புலவர் அறம் பொருள் இன்பங்களில் இயல்பினை உணர்த்தியது. முதுமொழிக்காஞ்சி என்னும் துறையாம்.
‘எரிந்தி லங்கு சடைமுடி முனிவர்
 புரிந்து கண்ட பொருள்மொழிந் தன்று’ 126
 ‘பலர் புகழ் புலவர் பன்னினர் தெரியும்
 உலகியல் பொருள் முடி புணரக் கூறின்று’ 127
என்று ஐயனாரிதனாரும்.
‘கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய முதுமையும்’ 128
என்று தொல்காப்பியரும் கூறுவர்.
 ‘பல்சான்றீரே பல்சான்றீரே’129 என்னும் புறநானூற்றுப் பாடலும் ‘முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇ’130 என்ற புறநானூற்றுப் பாடலும், ‘குழவி இறப்பினும் உளன்றடி பிறப்பினும்’131 என்ற புறநானூற்றுப் பாடலும் இத்துறைக்குச் (பொருள் மொழிக் காஞ்சி) சான்றாக அமைந்துள்ளன.
 ‘கருமவீரர் காமராசர்’ என்னும் கவிதை பதினேழு அடிகளையுடையது. நிலைமண்டில ஆசிரியப்பா வகையைச் சார்ந்து.
 ‘தமிழ்நாடு வளரவும், தமிழ் மொழி சிறக்கவும், சாதி முறைகளை ஒழியவும், சமத்துவம் நிலைபெறவும், பசியும் பிணியும் பகையும் உலகினின்று ஒழியவும் தொண்டுகள் செய்யுங்கள். அறத்தின் வழியே சென்று வாய்மை போற்றுங்கள். இன்சொல் பேசுங்கள். உழைப்பே உயர்வைத் தரும். ஒழுக்கமே உயர்ந்த குடிப்பெருமையாகும். இன்ப வாழ்வு எவர்க்கும் உரியதாகும்.
  அன்பே கடவுள்; அறமே ஒருவனுக்கு நல்ல துணை; தகுதி படைத்த சான்றோரைத் தாழ்வடைய விடாதீர். தக்கோரை உயர்பதவியில் அமர்த்தி பயன்மிகு அடைவீர். கடமையினின்றும் தவறி பேதமை நிலை பெறாதீர். இன்னாச் சொற்களை வெறுத்தொதுக்குங்கள். தெய்வத்தைப் போற்றுங்கள். பிறர்க்கென வாழும் பெருமைக்குணமுடையவராகத் திகழுங்கள்.
‘உழைப்பே உயர்வு, ஒழுக்கமே குடிமை
 இன்ப வாழ்வு  எவர்க்கும் உரித்தாம்
 அன்பே கடவுள்; அறமே நற்றுணை
 …………………………………
 …………………………………
 …………………………………
 …………………………………
 பிறர்க்கொன வாழும் பெற்றியில் விளங்கி
 வாழியர் நெடிது; வளர்க இன்பமே’132
அழகப்ப(ச் செட்டியா)ர்
  பசும்பொன் மாவட்டம்* காரைக்குடி வட்டத்திலுள்ள கோட்டையூரில் நகரத்தார் மரபில் தோன்றியவர். தாம் ஈட்டிய பொருள் அனைத்தையும் கல்விப் பணிக்கே செலவிட்டவர். கல்லூரி பல தோற்றுவித்தவர். அவர் பெயரால் காரைக்குடியில் அழகப்பா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டுள்ளது.
  இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னரே கல்விப்பணிக்கென கோடி கோடியாய் பணம் வழங்கிய வள்ளல். தான் குடியிருந்த வீட்டையும் கொடுத்தவர். இத்தகு சிறப்புடைய அழகப்பரை கவிஞர் பாடியுள்ளர். இக்கவிதை அழகப்பா மணி (நினைவு) மலரில் இடம் பெற்றுள்ளது. நான்கு அடிகளையுடையது நேரிசை வெண்பாவாகும் இக்கவிதை.
  கலைகள் பல பெருகவும், கற்றவர் எண்ணிக்கை மிகவும் தொடக்கப் பள்ளி முதல் உயர்கல்வியாம் முதுகலை வரை கல்வி நிறுவனங்களை அமைத்துள்ளார். நாள் தோறும் அயராது பணியாற்றினர். நிலையான கல்விப் பணிகள் புரிந்த வள்ளல் அழகப்பாவைப் போற்றிப் புகழ்வோம் என்று கவிஞர் கூறியுள்ளார்.
 ‘கலைகள் பெருகவும் கற்றோர் மிகவும்
 நிலையான தொண்டுகள் நித்தம் – உலையாமல்
 ஆற்றிய வள்ளல் அழகப்பர் சீர்பரவிப்
 போற்றிப் புகழ்வோம் புரிந்து’ 133
திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் மீதும் திருவள்ளுவர் வகுத்த நெறியில் மீதும் மிக்க விருப்புடையவர் இலக்குவனார்.
‘குலமும் குடியும் ஒன்றே
 வழிபடு கடவுளும் ஒன்றே
 யாதும் ஊரே யாவருங்கேளீர்
 குறள் நெறி யோங்கினால் குடியர சோங்கும்’ 134
என்ற கொள்கைளே எம் வாழ்வை இயக்குவன என்று கூறுகிறார் கவிஞர். கல்விக்கூடங்களிலும் கல்லூரிகளிலும் யாவர்க்கும் பொதுமையாம் திருக்குறளை நன்கு பயிலுவதற்குரிய வாய்ப்பினை அளிக்கக் கல்வித் திட்டத்தில் இடமிருக்கச் செய்ய வேண்டும் என்று கூறுகிறார் இலக்குவனார். வள்ளுவர் மீது அளவற்ற காதல் கொண்ட இலக்குவனார் குறள் வெண்பா ஒன்று பாடியுள்ளார்.
‘வள்ளுவனா ரேற்றினார் வையத்து வாழ்வார்கள்
 உள்ளிரு ணீக்கும் விளக்கு’ 136
  மக்கள் மனத்தின் கண் அமைந்துள்ள இருளைப் போக்கும் விளக்கு திருக்குறள். அவ்விளக்கை ஒவ்வொருவரும் தம் நெஞ்சத்தில் ஏற்ற வேண்டும். வள்ளுவர் ஒளியைத் தம் உள்ளத்தில் ஏற்றியவரே வாழ்த்துவராவர்.
குறிப்புகள்:
  1. ஐயனாரிதனார், புறப்பொருள் வெண்பாமாலை கொளு: 271
  2. ஐயனாரிதனார், புறப்பொருள் வெண்பாமாலை கொளு: 269
  3. தொல்காப்பியர், தொல்காப்பியம், நூற்பா: 1025.
  4. நரிவெருஉத்தலையார், புறநானூறு செ.எ. 195.
  5. குடபுலவயனார், புறநானூறு, செ.எ. 18
  6. சேரமான்கணைக்கால் இரும்பொறை, புறநானூறு செ.எ. 74.
  7. சி. இலக்குவனார், கரும வீரர் காமராசர், ப.80. அ-ள் 9-17.
  8. சி. இலக்குவனார், அழகப்பர் மணி மலர், ‘அழகப்பர் பாமாலை’ காரைக்குடி 1970, ப-18, அ-ள் 1-4.
  9. சி. இலக்குவனார், கருமவீரர் காமராசர், நாஞ்சில் புத்தக மனை நாகர் கோவில் 1956, ப-4.
  10. சி. இலக்குவனார், குறள்நெறி, மதுரை 1-6-1966, ப-1.
* இப்போதைய சிவகங்கை மாவட்டம்
தலைப்பு-தொடரும் : thalaippu_thodarum
பெயர்-ம.இராமச்சந்திரன் _peyar_ma.ramachnathiran