Tuesday, September 17, 2019

தென்னாட்டின் கண் ஓர் ஒப்பற்ற அறிவுச்சுடர் சோமசுந்தரர் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

அகரமுதல


தென்னாட்டின் கண் ஓர் ஒப்பற்ற 

அறிவுச்சுடர் சோமசுந்தரர்

   கடந்த இரு நூற்றாண்டுகளில் வாழ்ந்த புலவர்கள் பலரும் பழமைக்குப் பாலமாகத் திகழ்ந்து அளப்பரும்  தமிழ்த்தொண்டாற்றி யுள்ளனர். அவர்களுள் குறிப்பிடத்தக்களவர், சைவச் சித்தாந்தப் பெரும்புலவர், வைதிக சைவச் சித்தாந்தச் சண்ட மாருதம், பரசமயக்கோளரி என்று பல  பட்டங்கள் பெற்ற சோமசுந்தர(நாயக)ர் ஆவார்.
  சோமசுந்தர(நாயக)ர், இராமலிங்க நாயகர் – அம்மணி அம்மையார் ஆகிய இல்லற இணையரின் மூத்தமகனாக ஆவணி 02, 1877 / ஆகத்து 16, 1846 அன்று சென்னையில் பிறந்தவர். இவரி்ன் தந்தை சைவ நெறியினராகவும் தாய் வைணவராகவும் விளங்கினர். தந்தையார் தம் மனைவியின் விருப்பத்திற்கிணங்க அனைவருக்கும் வைணவப் பெயர்களையே சூட்டியுள்ளார். தம்பியர் திருவேங்கடசாமி(நாயகர்), நாதமுனி(நாயகர்), வரதராச(நாயக)ர், தங்கை தாயாரம்மை ஆவர். அதன்படி இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் அரங்கசாமி என்பதாகும் ஆனால், இவர் அச்சுதானந்த சுவாமிகளிடம் சேர்ந்து சைவநெறியாளராக மாறிய பொழுது சோமசுந்தரம் எனப் பெயர் சூட்டிக் கொண்டார். தமிழ்ப்பழங்குழுவினரே நாயகர் என அழைக்கப்பெற்றனர் என்று, இவரைத் தமிழ்க்குடியினர் என மறைமலையடிகள் விளக்கியுள்ளார்.
    சோமசுந்தர(நாயக)ர்  பள்ளியில் தெலுங்கும் ஆங்கிலமும்  கற்றார்; புலவர் முத்து வீரர் என்னும் ஆசிரியரிடம் தமிழும் சமற்கிருதமும் கற்றார்.
  சோமசுந்தர(நாயக)ர் சிவஞானம்  என்னும் பெண்ணின் நல்லாளை மணம் புரிந்து இல்லறம் நடத்தினார். இவர்களுக்கு, சகதாம்பாள், விசாலாட்சி, உலோகாம்பாள் என மூன்று பெண்மக்களும் சிவபாதம் என்னும் மகனும் பிறந்தனர்.
  சோமசுந்தர(நாயக)ர் பிள்ளைமைப் பருவத்தில் நன்னூல், யாப்பருங்கலக்காரிகை,   முதலான இலக்கண நூல்கள், திருக்குறள், நாலடியார், முதலான அறநூல்கள், பெரியுராணம், கந்தபுராணம்,  திருவிளையாடல் புராணம்,   கம்பராமாயணம்,  வில்லிபுத்தூரார் பாரதம், முதலான புராண நூல்கள், தேவாரம், திருவாசகம் முதலான 11 திருமுறைகள், சிவஞானபோதம், சிவஞான சித்தியார் முதலான 14 சித்தாந்த நூல்கள், ஒழிவிலொடுக்கம், வள்ளலார் சாத்திரம், திருப்போரூர் சன்னதி / சந்நிதி முறை முதலான எண்ணற்ற நூல்களை நன்கு கற்றுப் புலமை பெற்றார்; இளமைக்காலத்தில்,  கைவல்யம், ஞானவாசிட்டம்,  பிரவோத சந்திரதோயம்,  பிரபுலிங்கலீலை முதலான மாயாவாத நூல்களையும் கற்றார்; அடுத்து நாலாயிரத்திவ்விய பிரபந்தத்தினையும் இதன்உரை நூல்களையும்  ஆராய்ந்து கற்றார்.
   சோமசுந்தர(நாயக)ர் தொடக்கக் காலத்தில் தோல் கிடங்கில் கணக்கராகப் பணியாற்றினார். ஆனால், உயிர்க்கொலை புரிந்து தோலை எடுத்து விற்பனைபுரியும் கொலைக்கூடத்தில் பணியாற்றவிருப்பமின்றி  வேலையை விட்டார்.  பின்னர் அவர், சென்னை நகராண்மைக்கழகத்தில் எழுத்தர் பணியில் சேர்ந்து பணியாற்றினார். ஆனால், 1881 இல் திருவொற்றியூரில் நடைபெறும் மகிழடி விழாவிற்குச்செல்ல அரைநாள் விடுப்பு கேட்டதற்கு, அது புல்லிய காரணமென்றுகூறி விடுப்பு மறுக்கப்பட்டது. “பொய்யான காரணங்களுக்கு விடுப்பு தருவோர் மெய்யான காரணத்திற்கு அரைநாள் விடுப்பு மறுக்கிறார்கள்” எனக் கூறி வேலையைவிட்டு நீங்கி விட்டார். 
 பிற சமய நெறிகளில் ஆராய்ச்சியறிவு பெற்றுத் தாம் கொண்டிருந்த  சைவநெறிப் புலமையால், நாடெங்கும் சைவநெறிச் சொற்பொழிவுகள் ஆற்றி இறைநெறித் தொண்டராகத் திகழ்ந்துள்ளார்கள். இவரின் சமற்கிருதப் புலமையால், பிராமணர்களும் இவரைப் போற்றி மதித்தார்கள். தொன்மங்களில் சொல்லப்பட்ட இழிவான கட்டுக் கதைகளை மறுத்தும் அயலாரால் சிவமதத்தில் நுழைக்கப்பட்ட கொள்கைக் குழப்பங்களை அகற்றியும் சொற்பொழிவுகள் ஆற்றியமையால் முற்போக்காளர்களும் இவரது உரையை விரும்பிக் கேட்டனர். இவரது உரைச்சிறப்பை யறிந்த விவேகானந்தர் 1900 இல் சென்னை வந்திருந்தபொழுது இவரின் ‘சைவ சித்தாந்த’  உரையைக்கேட்டு மகிழ்ந்துள்ளார். பல்லாயிரம் செற்பொழிவுகள் நிகழ்த்திய பெரியார் இவருக்கு முன்னரும் பின்னரும் எவருமில்லை என்னும் சிறப்பிற்குரியவர் இப்பெருந்தகையார்.
 இவரது நூல்கள் பெரும்பாலும் சமற்கிருதக் கலப்பாகவே இருக்கும். ஆனால்சொற்பொழிவுகள் நல்ல தமிழில் அமைந்திருக்கும். நல்ல  தமிழில் சொற்பொழிவாற்றியவர் நல்ல தமிழில்  நூல்களை எழுதாமல் போனது தமிழுலகிற்கு இழப்பே ஆகும்.
“சோமசுந்தரத்தின் மாணவர் மறைமலையடிகள் பிற்காலத்தில் தனித் தமிழில் ஈடுபாடு கொண்டதால் சோமசுந்தரமும் தூய தமிழில் எழுதவும் பேசவும் தொடங்கினார்” என்று பிறர் குறிப்பிடுவது தவறாகும்.  1916 இல் தனித்தமிழ்இயக்கம் அமையும் சூழல் ஏற்பட்டிருந்தாலும் அதற்கு முன்னர் இருந்தே மறைமலையடிகள்  தனித்தமிழ் ஈடுபாட்டில் கருத்து செலுத்திவந்தார். எனவே, பிற்காலத்தில்தான் தனித்தமிழ்  ஈடுபாடு மறைமலையடிகளுக்கு வந்தது என்பது தவறாகும். எனவே, அதனால் தனிததமிழில் பேசவும் எழுதவும் சோமசுந்தரர்  ஈடுபாடு கொண்டார் என்பதும் தவறாகும்.
  இது குறித்து மறைமலையடிகள் விளக்கும் பொழுது அக்காலத்தில்,  சமற்கிருதப் புலவர்கள் தமிழ்நெறிக்கு மாறாக எழுதி வந்தமையால், சமயநூல் படைப்பாளர்கள்,  அவற்றை மறுப்பதற்காக இத்தகைய நடையைத் தேர்ந்தெடுத்திருந்திருக்கிறார்கள் என்கிறார். எனினும்,
இங்ஙனமாக வடநூல் தமிழ்நூல்களில் அரிதின்  உணர்தற்பாலனவாய்க் கிடந்த சமய நுண்பொருள்களையெல்லாம் எண்ணிறந்த சொற்பொழிவுகளானும் பற்பல நூல்களானும் வெளிப்படுத்திஇத்தென்னாட்டின்கண் ஓர் ஒப்பற்ற அறிவுச்சுடரென உலவித் தமிழ்மக்கள் உள்ளத்துப் பரவியஅறியாமை இருளைப் போக்கிஅவர்க்கு அறிவொளி காட்டிய சித்தாந்த ஆசிரியரான சோமசுந்தரநாயகரவர்கள் தாம்அரிது முயன்றெழுதிய பல நூல்களையுந் தனிச் செந்தமிழ் உரை நடையில் எழுதியிருந்தனர்களாயின் அது தமிழுக்கும் அவை தமிழ்மக்கட்கும் விலையிடுதற்கரிய முழுமணிகள் நிறைந்த கருவூலமாய்ச் சிறந்து திகழா நிற்கும்”  என்றும் மறைமலையடிகள்  கூறுகிறார்.
 அதே நேரம்,  “அவர்கள் இயற்றிய பல தமிழ்ச்செய்யுட்களானும் ஆசார்யப் பிரபாவம் என்னும் தமதரிய  நூலின் பல இடங்களில் அவர்கள்  செந்தமிழ்ச் சுவை பெருகவெழுதிய உரைப்பகுதிகளானும்   இவர் தனித்தமிழில் எழுதும் வல்லமை பெற்றவர் என்பது நன்கறியப்படும் என்கிறார் மறைமலையடிகள் .
 மேலும் இவரது 39 அகவைக்குப் பின்னரே தனித்தமிழ்ப் பேரிலக்கணமான தொல்காப்பியமும் தனித்தமிழ் இலக்கியங்களான பத்துப்பாட்டு எட்டுத்தொகை முதலியனவும் வந்தமையால் அவற்றைப் படிக்கும் வாய்ப்பு பெறாமையும் தனித்தமிழ் நடை இல்லாமைக்குக் காரணம் என்கிறார் மறைமலையடிகள்.
“நாயகரவர்களின் அரிய பெரிய ஆராய்ச்சியுரைகள் தனிச்செந்தமிழ் உரைநடையில் எழுதப்பட்டிருக்குமாயின் அவை தமிழுக்குப் பெரியதோர் அறிவுக்களஞ்சியமாய் இருந்திருக்கும். ஆனால், அவை வடசொற்கலப்பு மிகுதியும் உடைய உரைநடையில் அமைந்தததே தமிழ்மொழிக்கு ஒரு பேரிழப்பாயிற்று.”
 என்றும் மறைமலையடிகள் தெளிவாகக்  கூறுவதால், சமயம் சார்ந்த நூல்களில் சமற்கிருதக் கலப்பு நடையே இவரின் நடையாக இருந்தது எனலாம்.
  செந்தமிழ்நடையில் பெரு விருப்பு கொண்டிருந்த  மறைமலையடிகள் தம் ஆசிரியர்போல் சமற்கிருதம் கலந்தும் சில நூல்கள் எழுதினார். தம் ஆசிரியரிடம் எவ்வாறு எழுத வேண்டும் என்று கேட்டதற்குச் சோமசுந்தர(நாயக)ர், “நீ என் நடையைப் பின்பற்ற  வேண்டா. உன் செந்தமிழ்நடை இனிமையாக உள்ளது. அதையே பின்பற்றுக” எனக் கூறி மறைமலையடிகளின் தமிழ்நடைக்கு ஊக்கமளித்துள்ளார்.
நூல்கள்:
 வேதசமாசம், பிரம்மசமாசம்  ஆகிய வழியில், உருவவழிபாடு கூடாதென்று வெளிவந்த நூலொன்ற‌ை மறுத்து 22 ஆம் அகவையில் எழுதிய  வேதபாஃக்யசமசகண்டநம  என்பதே இவரது முதல் நூலாகும்.
  சோமசுந்தர(நாயக)ருக்கும் மறைமலையடிகளுக்கும் இடையே ஆசிரியர் மாணவர் என்ற நிலைக்கு அப்பாற்பட்டுத் தந்தை-மகன் உறவுபோல் பிணைப்பு இருந்தது. சோமசுந்தர(நாயக)ர் மாசி 11, 1932 / பிப்.22, 1901 அன்று மறைந்தபோது மறைமலை யடிகள் சோமசுந்தரக் காஞ்சியைப் பாடினார். மேலும் சோமசுந்தரக் காஞ்சியாக்கம்,  ‘சோமசுந்தர நாயகர் வரலாறு‘ என்னும் நூல்களையும் மறைமலையடிகள் எழுதினார்.
வான்மதி மீனினநீங்க வழுக்கியிம் மண்ணிடை வீழ்ந்ததுவோ
   மல்லலங் கற்பமரஞ் சிவம்வீசியிம் மண்ணிடை வீழ்ந்ததுவோ
நான்முக னான்மறையுட் பொருள்கூற  நலத்தக வந்ததுவோ
  நல்லகல்லாலமர் நம்பர் கைகாட்டுரை நாட்டவெ ழுந்ததுவோ
மான்மக ணாமகடூ மகள்கூடி வளந்தர வந்ததுவோ
   மாதவவாழ் வொடுமில்வினை காட்டிட வள்ளுவர் வந்ததுவே
சூன்முதிர் வண்பயனூன் முறைதந்து சுரந்திமட வந்ததுவோ
   சோமசுந்தர னெனூநாம மொடிங்கு நீ தோன்றிய தெங்குருவே
நாயினிழிந் தவெம்புன்மை களைந்து நலந்தர வந்தனையோ
  நல்லது தீயது நன்றுபகுத்து நவின்றிடவந்தனையோ
தாயினுமென் னுயர்தந்தை யினும்முயர் தன்மையில் வந்தனையோ
  தண்டமிழிற் படுவண்டுறை நன்றுநீ தந்திட வந்தனையோ
காயினுமல் லதுவப்பினு  மன்பது காட்டிட வந்தனையோ
  கன்மனமி யாவுமொர்நன் மனமாயெமைக் காத்திட வந்தனையோ
என மறைமலையடிகள் சோமசுந்தரக் காஞ்சியில் தன் ஆசான் சோமசுந்தர(நாயக)ர் குறித்துக்  கூறியுள்ளமை சோமசுந்தரரின் சிறப்பையும் இருவர்கிடையேயிருந்த உறவையும் தெள்ளிதின் விளக்குகின்றது.
– இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி18092019

Monday, September 02, 2019

தமிழ்க்காப்பு உணர்வின் வித்து – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல

தமிழ்க்காப்பு உணர்வின் வித்து இலக்குவனார்

தமிழ்க்கடல் மறைமலை அடிகள் வழியில் தனித்தமிழ் உணர்வை ஊட்டிப் பரப்பிய அறிஞர்கள் பலர் உள்ளனர். ஆசிரியப் பணி மூலமும் இயக்கங்கள் மூலமும் பரப்புரை மூலமும் படைப்புகள் மூலமும் இதழ்கள் மூலமும்  விழாக்கள் மூலமும் போராட்டங்கள் மூலமும் எனப் பலவகைகளில் தனித்தமிழ் பரப்பித் தூய தமிழ்க் காவலராகத் திகழ்ந்தவர் பேராசிரியர் இலக்குவனார்[தோற்றம்:  கார்த்திகை 01,  தி.பி.1940(17.11.1909); மறைவு: ஆவணி 18, தி.பி.2004 (03.09.1973)]  மட்டுமே!
அவருக்கு வழங்கிய பட்டங்களும் சிறப்பு அடைமொழிகளும் நூற்றுக்கு மேற்பட்டன.  அவற்றுள், இலக்கணச் செம்மல், சங்கத்தமிழ் வளர்த்த சான்றோர், செந்தமிழ்மாமணி, செந்தமிழ் நலம் பேணும் செல்வர், தமிழ் ஞாயிறு, தொல்காப்பியச்செல்வர், முத்தமிழ்க்காவலர், தமிழ் மொழியின் தனிச்செல்வர், தமிழ்க் கொண்டல், தமிழ்த்தாய் முதலிய பட்டங்கள் அவரின் பிறமொழிக் கலப்பில்லாத செந்தமிழ்ப்புலமையையும் அவற்றை மக்களிடையே கொண்டு சென்ற பரப்புரைகளையும் உணர்த்துவன.
தன்மானத்தமிழ் உணர்வு ஆசிரியர்களின்  மாணாக்கராகப் பள்ளியில் இவர் படித்தது இவரின் கிடைத்தற்கரிய பேறு என்று சொல்ல வேண்டும். இவர்களால் பள்ளி வாழ்க்கையிலேயே தூயதமிழ் உணர்வு இவரிடம் முளைவிட்டுப் பரவலாயிற்று. பள்ளியில் பாராட்டு விழா, வழியனுப்பு விழா முதலான விழாக்கள் நடைபெறும்பொழுது நல்ல தமிழில் பாடல்கள் எழுதிப் புகழ் பெற்றார்.
புலவர் கல்லூரி மாணாக்கனாக இருந்த பொழுது உடன் படித்த நண்பர்களை இணைத்துக் கொண்டு விடுமுறைகளில் தூயதமிழ்ப் பரப்புரை மேற்கொண்டார். இளம்புலவர் வகுப்பில் படிக்கும்பொழுது ‘எழிலரசி அல்லது காதலின் வெற்றி’ என்னும் தனித்தமிழ்க் குறும்பாவியத்தை எழுதினார். படிக்கும் பொழுதே தனித்தமிழ்ப்பாவலாகத் திகழ்ந்து தூயதமிழ் வளர்க்கும் பணிகளில் ஈடுபட்டார்.
வகுப்பில் கல்லூரி முதல்வர் பேராசிரியர் பி.சா.சுப்பிரமணிய(சாத்திரியார்)தொல்காப்பியத்தின் தொன்மையைச் சமசுகிருத நூல்களுக்குப் பின்னராகக் கற்பித்தார். தமிழ்ச்சொற்களின் மூலமாகச் சமசுகிருதச் சொற்களைக் காட்டினார். தூயதமிழ்க்காப்பு என்பது பிற மொழிச்சொற்களை அகற்றி நல்ல நடையைப் பேணுவது மட்டுமல்ல. தமிழின் மீது திணிக்கப்பட்ட அயல்கருத்துக் கறைகளைப் போக்குவதும்தான் என்பதே இலக்குவனாரின் இலக்கு. எனவே, அவற்றை உடனுக்குடன் ஆதாரங்களுடன் மறுத்தார். இதன்மூலம் உடன் பயில்வோருக்கும் தமிழ்க்காப்பு உணர்வு வரலாயிற்று.
தமிழாசிரியராகப் பணியில் சேர்ந்து முதல்வராகப் பணி நிறைவு பெற்றது வரை தூயதமிழை வளர்க்கும் பணிகளிலேயே ஈடுபட்டார். வருகையின் பொழுது “Yes Sir”, “Present Sir”  என்றெல்லாம் சொல்வதற்கு முற்றுப்புள்ளி இட்டார். “உள்ளேன் ஐயா” எனச் சொல்ல வைத்தார்.  பின்னர் “உள்ளேன் ஐயா” என்பது தமிழ்நாடு முழுவதும் பரவியது.  விளையாட்டிலும் அனைவரும் எண்களைத் தமிழில் சொல்லவும் ‘Love all’ என்று சொல்லாமல் அன்பே கடவுள்’ என்று சொல்லவும் வைத்தார்.  வகுப்பில் பிற சொற்கள் கலப்பில்லாமல் நல்ல தமிழிலேயே பேசவேண்டும் என்ற உணர்வை விதைத்தார். அப்படி யாரும் தவறுதலாகப் பிற மொழிச்சொல்லைப் பயன்படுத்தினால், “ஐயா, நம் வகுப்பில் மறந்தும் பிற சொல் பேசலாமா ஐயா. அதற்காகவா நான் இத்தனை பாடுபடுகிறேன் ஐயா” என வருந்தி உரைப்பார்.
பேராசிரியர் இலக்குவனார் “இனிய எளிய தமிழைப் பயன்படுத்த வேண்டும். அதுவே தமிழ் வளரும் வழி.” என்னும் நோக்கம் கொண்டவர். எனவேதான் சங்க இலக்கியம், இலக்கியம், குறள்நெறி, திராவிடக் கூட்டரசு முதலான திங்களிதழ், திங்களிருமுறை இதழ்கள், நாளிதழ் எனப் பலவகைகளிலும் இதழ்கள் மூலம் மக்களிடையே நல்ல தமிழைக் கொண்டு சேர்த்து மக்களின் அறிஞராகத் திகழ்ந்து தூய தமிழைப் பரப்பினார். ‘Dravidian Federation’, ‘Kural Neri’ ஆகிய ஆங்கில இதழ்கள் நடத்தி அவற்றின் மூலம் தூய தமிழ்ப்பண்பாட்டையும் தூய தமிழ் நெறியையும் தமிழ் அறியாதவர்க்கு உணர்த்தினார்.
இவர் பாடங்கள் நடத்தும் பொழுது தொடர்புடைய வேர்ச்சொல் விளக்கங்கள், தமிழ்ச்சொற்களின் தொன்மை, தமிழ்ச்சொற்களில் இருந்து உருவான சமசுகிருதச் சொற்களை மூலச்சொற்களாகக் காட்டும் அறியாமை ஆகியவற்றை விளக்கினார். “தமிழைச் சிதைக்கும் அயற்சொற்களை அகற்றுவதும் இனி அயற்சொற்கள் நுழையாமல் தடுப்பதுமே தமிழாசிரியர் கடமை” என்ற அவர் தாமும் அவற்றைப் பின்பற்றினார். புலவர் விழாக்களையும் இலக்கிய விழாக்களையும் நடத்தித் தூயதமிழ் உணர்வுகளை மாணாக்கர்களிடையே பரப்பினார். தனிப்பட்ட வகுப்புகள் நடத்திப் பொதுமக்களும் தமிழ்ப்புலவராக வழி வகுத்தார். மக்களிடையேயும் தூய தமிழ் உணர்வைப் பரப்பினார். மக்கள் பெயர்களைத் தமிழில் சூட்டவும் கடைப்பெயர்களைத் தமிழில் இடவும் ஊர்வலங்கள் மூலம் எழுச்சி ஏற்படுத்தினார். தமிழுக்காக ஊர்வலம் நடத்துவதில் இவரே முன்னோடி! தனித்தமிழ்க்காப்புத் தலைவராகப் பன்முகச்சிறப்புடன் திகழ்ந்து  தூயதமிழ் பரப்பியவர் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்.
தூயதமிழ்க்காவலர் இலக்குவனார் வழியில் நாமும் மொழித்தூய்மை பேணுவோம்! தமிழின் புகழை நிலைக்கச் செய்வோம்!
– இலக்குவனார் திருவள்ளுவன்
தினச்செய்தி, 03.09.2019