தமிழ்மொழிக்குப் பெருமை சேர்க்கும் செல்வி கு.அ.தமிழ்மொழி

இன்றைய இளைஞர் கூட்டம் பெரும்பாலும் திரைக்கலைஞர்கள் பின்னால் சென்று நேரத்தை வீணடித்துக் கொண்டுள்ளனர். பிறரில் பெரும்பான்மையர் கட்சிக் கொத்தடிமைகளாக இருந்து வாழ்க்கையைப் பாழ்படுத்திக் கொண்டுள்ளார்கள். சில இலக்கியக் கூட்டங்களில் இளைஞர்கள் இருவரோ ஒருவரோ பங்கேற்பது உண்டு. இன்றைய இளைஞர்களில் நல்ல படைப்பாளிகளைக் காண்பது அரிது. ஆனால் இவற்றுக்கெல்லாம் விலக்காக இளநங்கை ஒருவர் சிறப்பாகப் பெரும்பணி ஆற்றி வருகிறார். அவர்தான் செல்வி கு.அ.தமிழ்மொழி.

அகவை 27 ஐத் தாண்டவில்லை. அதற்குள் நூலாசிரியராகவும் கவிஞராகவும் கட்டுரையாளராகவும் பேச்சாளராகவும் நூற் தொகுப்பாளராகவும் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் இதழாளராகவும் தமிழ்நலனுக்கான போராட்டக்காரராகவும் பன்முகப்பாங்குடன் திகழ்கிறார்.

அருந்தவச்செல்வியான இவரைப் பெறும் பேறு பெற்றவர்கள் அறிவியல் ஆசிரியர் பெ.குமாரி, நூலகர் சீனு.அசோகன் ஆகிய இணையர். இவரது இளவலாகப் பேறு பெற்றவர் இளங்களலை இயன் மருத்துவரான கு.அ.அறிவாளன்.

தமிழ்நெஞ்சன் என்னும் புனைபெயரில் அறியப்பட்ட எழுத்தாளர், கவிஞர், தனித்தமிழ்க்காப்பாளர் புதுவைத்தமிழ்நெஞ்சனின் திருமகள் என்ற முறையில் இவர் வளரும் பொழுதே தமிழ்ச்சூழலில் வளர்ந்தவர். எனவே தமிழ் இவர் வயமானதில் வியப்பில்லை.

 தொண்டுள்ளத்தால் செவிலித்துறையில் இளங்கலைப்பட்டம் பெற்றார். தந்தையின் நூலகப்பணி ஈர்ப்பால் நூலகம்-செய்தி அறிவியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். எனினும் இவரது குரல் வளமும் நா நலமும் இவரை ஊடகத்தின்பக்கம் திருப்பியது. இருபதுக்கும் மேற்பட்ட நூல் வெளியீட்டு விழாக்களையும் கல்லூரி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். எனவே, அகில இந்திய வானொலி நிலையப் பண்பலை அறிவிப்பாளர் ஆகப் பணியாற்றுகிறார்.

அதுபோல் சுட்டி விகடன் மாணவ ஆசிரியர் (2008-2009) பொறுப்பில் இருந்துள்ளார். மூவடி துளிப்பா திங்களிதழ் செய்தி ஆசிரியர் ஆகவும் திகழ்கிறார்.   சிறந்த மொழி பெயர்ப்பாளராகவும் விளங்குகிறார்.            :

இக்கால  இருபால் இளைஞர்களிடமும் தமிழ் ஆர்வம் என்பது குறைவாகவே உள்ளது. இவரோ தனித்தமிழ் ஆர்வலராக விளங்கித் தூய தமிழில் நூல்கள் இயற்றிப் பரிசுகளும் பெற்றுள்ளார்.

  1. சிறகின் கீழ் வானம் ( துளிப்பா )
  2. கல் ! நில்! வெல்! ( சிறார் பாடல் )
  3. புத்தனைத் தேடும் போதி மரங்கள் ( துளிப்பா )
  4. நினைவில் வராத கனவுகள் ( புதுப்பா )
  5. திரி திரி பந்தம் ( சிறார் பாடல் )
  6. பறக்கும் பூந்தோட்டம் ( சிறார் சிறுகதைகள்)

என்பன இவரின் நூல்களாகும்.

6 ஆம் வகுப்பு படிக்கும் பொழுதே அதுவரை இவர் எழுதிய 660 துளிப்பாக்களில் இருந்து சிலவற்றைத் தொகுக்கப்பெற்ற இவரது நூல் ‘சிறகின் கீழ் வானம்’ வெளிவந்தது. கருவிலே திருவுடைய இவருக்கு இஃது எளிய செயலே! இந்நூல் 2007ஆம் ஆண்டில் நடுவண் அரசின் தேசியக் குழந்தை விருதினையும் கவிஞாயிறு தாராபாரதி சிறப்புப் பரிசையும் மாரியப்பன் சுந்தராம்பாள் அறக்கட்டளை பரிசையும் பெற்றுள்ளது.           

புத்தனைத் தேடும் போதி மரங்கள்’  என்னும் நூல் அனைந்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் பரிசையும் சென்னை கன்னிமாரா வாசகர் வட்டத்தின் மதிப்புறு பரிசையும்(2017) சிகரம் இலக்கிய இதழ்(சேலம்) நடத்திய துளிப்பா நூல் போட்டியில் முதல் பரிசையும் பொதிகை மின்னல் (சென்னை)17 ஆம் ஆண்டு விழா முதல் பரிசையும் பெற்ற சிறப்பிற்குரியது.

மேலும் இந்நூல் குறித்து திருவள்ளுவர் பல்கலைக்கழக முதுகலைத் தமிழ்ப் பட்டதிற்காக மாணவி   தே.அசுவினியா “புத்தனைத் தேடும் போதிமரங்கள் – ஓர் ஆய்வு”  என்னும் தலைப்பில் ஆராய்ந்து ஆய் வேட்டையும் அளிததுள்ளார்.

இந்நூலுக்கான மற்றொரு சிறப்பு, இதில் இடம் பெற்றுள்ள குறும் பாக்கள் சில, தி.இரா.நினவு(எசு.இராமசாமி) நினைவுக் கல்லூரியின் இளநிலைப் பட்ட வகுப்புகளுக்குரிய “இக்காலக் கவிதையும், சிறுகதையும் சமய இலக்கியமும் புதினமும்” என்ற பாடநூலில் துளிப்பா (ஐக்கூ) பிரிவில் இடம்பெற்றுள்ளன.

புதுக்கவிதைகள், துளிப்பாக்கள் என்றாலே பிற மொழிச்சொற்களைக் கலந்து எழுதுவதையே பெருமையாகப் பெரும்பான்மையர் எழுதுகின்றனர்.  ஆனால், இவர் அயல்மொழிக் கலப்பின்றித் தன் பெயருக்கேற்ப தமிழ்மொழியை மட்டுமே பயன்படுத்துகிறார். இவர் பாடல்கள் மன்பதை நலம் சார்ந்தவையாக உள்ளன. சான்றுக்கு இரண்டு வருமாறு: –

 “அமைதிப் புறா

குண்டடிபட்டுச் சிவப்பானது

ஈழப் படுகொலை “

 

“புத்தனைத் தேடும்

போதி மரங்கள்

எண்திசையிலும் போர்க்குரல்”

 

தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத் தமிழ் இன்பத்

தமிழ் எங்கள் உயிருக்கு நேர்

என்பதைப் படிக்கும் பொழுதே உள்ளத்தில் பதித்துக் கொண்டார். எனவே, மாணவ நிலையிலேயே பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதைப்போட்டி ஆகியவற்றில் பங்கேற்றுப் பரிசுகளும் சிறப்புகளும் பெற்றவர். பின்னரும் பரிசுகள் இவரை நாடி வந்தன.

புதுச்சேரி படைப்பாளர் இயக்கம் ‘எழுக தமிழினமே’ என்ற தலைப்பில் நடத்திய பாப் போட்டியில் முதல் பரிசு(2017), தி.தேவிதாசனார் அறக்கட்டளை ‘வாணிதாசன் பா வளம்’ என்ற தலைப்பில் நடத்திய கட்டுரைப் போட்டியில் இரண்டாம்பரிசு (2019)

உரோமன் உரோலண்டு நூலகத்தின் 175 ஆம் ஆண்டு நினைவுப் பேச்சுப் போட்டியில் இளையோருக்கான முதல் பரிசு, நூலகத் தந்தை அரங்கநாதன் பிறந்தநாள் விழாவில் கட்டுரைக்கான முதல் பரிசு, பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாவில் கட்டுரைக்கான முதல் பரிசு (பத்தாயிரம் உரூவா) முதலியன இவரது திறமையை உலகிற்கு உணர்த்துவன.

இவரது படைப்புகள் பல்வேறு இதழ்களில் வந்துள்ளன. அவற்றில் குறிக்கத்தக்கன

1.தமிழ்ச்சிட்டு, 2. தாமரை, 3. மிகத் தெளிவு, 4. கங்கா காவேரி, 5. நெல்,   6. கரந்தடி, 7. உண்மை, 8. நற்றமிழ், 9. தமிழியக்கம், 10. மண்மொழி, 11. தை,  12. இனிய ஐக்கூ, 13. தச்சன், 14. நாளை விடியும், 15. நம்மொழி, 16. சூழல், 17. செம்பருத்தி, 18. பட்டாம்பூச்சிகள், 19. நாற்று, 20. தமிழர் கண்ணோட்டம், 21. தினகரன், 22. பெரியார் பிஞ்சு, 23. ஏழை தாசன், 24. மாந்தன், 25. பொதிகை மின்னல், 26. வானகமே வையகமே, 27. உங்கள் பாரதி, 28. கலை, 29. புதுவை பாரதி, 30. புதுவை பாமரன், 31. குட்டி, 32. சுட்டி விகடன், 33. தமிழ்த்தேசம், 34. அருவி, 35. மஞ்சரி, 36. நற்றிணை, 37. தமிழ்நெஞ்சம் மின்னிதழ், 38. ஆக்கம் மின்னிதழ், 39. மின்மினி, 40. கொலுசு மின்னிதழ், 41. இனிய உதயம், 42. காமதேனு, 43.பொம்மி, 44. மங்கையர் மலர், 45.பாவையர் மலர், 46. மகளிர் ஓசை, 47. பெண்மை டுடே,  48. சிறுவர் மணி, 49. மூவடி, 50. உங்கள் பாரதி

இவரது படைப்புகள் பின்வரும் தொகுப்புகளிலும் இடம் பெற்றுள்ளன.

  1. திசை எங்கும் ஐக்கூ, 2. சிநேகம் வளர்க்கும் புன்னகை, 3 .தொகுப்பல்ல துடிப்பு, 4. கவித் தோரணம், 5. பெண்பாப் பேரிகை, 6. கண்ணாடி மனசு, 7. பேச நிறைய இருக்கிறது, 8. உயிர்த் துளி, 9. மாமனிதர் அபுதுல் கலாம், 10. குடையின் கீழ் வானம், 11.நிலா சூடிய நெற்றி, 12. சாவி துவாரத்தில் சூரியன், 13. தென்றலின் சுவடுகள், 14.காற்றில் மிதக்கும் சொற்கள், 15. கவித்தோரணம், 16. பட்டுக்கோட்டை பவள விழா மலர், 17. கவிமாலை, 18. தொட்டில் வாசம், 19. விருப்பக் குறியீடுகளில் வளைந்து நிற்கும் சொற்கள், 20. காற்றில் மிதக்கும் சொற்கள், 21. தமிழினக் களப் போராளி பெ.பராங்குசம், 22. பிரெஞ்சிந்திய விடுதலைப் போராளி தோழர் இரா. சீனுவாசன், 23. தமிழ்மாமணி நற்றமிழ் ஆசிரியர் புலவர் மு.இறைவிழியனார் வாழ்வும் பணியும், 24. குறிஞ்சி விழா மலர், 25. தாய்மொழிக் கல்வி சிறப்பு மலர், 26. திசையெங்கும் தீப்பொறி 27. ஐக்கூ ஆயிரம் – இலக்கியக் கழகம் ( சாகித்திய அகாதெமி ), 28.பெண்ணென

இவரது செவ்விகளால்(பேட்டிகளால்) சிறப்புற்ற இதழ்கள் வருமாறு

முகம், பெண்ணே நீ, சுட்டி விகடன் , நறுமுகை, தடம், புதிய தலைமுறை, பெண், பாண்டி (இ)டைம்சு, தினகரன், தச்சன், காமதேனு, தெக்கான் கிரானிக்கிள்.

கதிர்காமம் அரசு பெண்கள் மேனிலைப் பள்ளியில் காலைப் பேரவையில் மூன்று ஆண்டுகள் துளிப்பா சொல்லி மாணாக்கர்களுக்குக் கவிதை ஈடுபாட்டை ஏற்படுத்தினார். அதன் பின்னர்ப் பாட்டரங்கங்களிலும் பாஙகுடன் பங்கேற்றுத்தமிழ் மணம் பரப்பி வருகிறார். அவற்றுள் சில வருமாறு:

ஐக்கூ கவிதைத் திருவிழா – வந்தவாசி

மகளிர் மகா கவியரங்கம்

முழு நிலா பாட்டரங்கம்

திங்கள் பாவரங்கம்

சாகித்திய அகாதெமி பாடல் வாசிப்பு

குறிஞ்சி விழா – செஞ்சி

புதுவைத் தமிழ்ச் சங்க மகளிர் நாள் விழா

புதுவைத் தமிழ்ச் சங்க வாணிதாசன் விழா

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்

பாட்டு நங்கை போராட்ட நங்கையாகவும் திகழ்கிறார்.இவர் பங்கேற்ற போராட்டங்கள் சில.

தமிழ்ப் பயிற்று மொழிப் போராட்டக் குழு சார்பில் 2000 இல் நடந்த ஆர்ப்பாட்டப் பேரணி

தமிழ் வளர்ச்சி நடவடிக்கைக் குழுவினர் அரசுப்பணியாளர்கள் தமிழில் கையெழுத்துப் போட வேண்டும் என வலியுறுத்திய ஆர்ப்பாட்டம்

தமிழர் நலக் காப்பணி சார்பில் ஆங்கில மழலை வகுப்புகளை அரசுப் பள்ளிகளில் கொண்டு வருவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் , மறியல்

தமிழ்த் திரைப்படங்களுக்குத் தமிழில் பெயர் வைக்கக்கோரித் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடந்த போராட்டம்

தாத்தா விடுதலை வீரர் புதுவை இரா. சீனுவாசன் வழியில் நாட்டுப்பணிகளில் ஈர்க்கப்பட்டார். ஆதலின், பொதுப்பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு மக்களுக்குத் தொண்டாற்றி வருகிறார். மாணவர் பொதுநலத் தொண்டியக்கத்தின் தலைவர், பூந்தோட்டம் சிறார் சிந்தனைச் சிறகத்தின் செயலர், செம்படுகை நன்னீரகம் , புதுவைத் தமிழ் எழுத்தாளர் கழகம், புதுச்சேரிப் படைப்பாளர் இயக்கம் ஆகியவற்றின் உறுப்பினர் என்ற முறைகளில் மக்கள் தொண்டாற்றி வருகிறார்.சுற்றுச் சூழல் விழிப்புணர்வு – பாதுகாப்பு குறித்த கள நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார்.ஆழிப்பேரலைக்காக 1500 உருவாய் புதுச்சேரி முதலமைச்சரிடம் மாணவர் பொது நலத் தொண்டியக்கத்தின் சார்பாகக் கொடுத்துள்ளார்.

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா

ஊக்க முடையா னுழை.   (திருவள்ளுவர், திருக்குறள் 594)

அஃதாவது ஊக்கமுடையவன்(ள்) இடத்திற்கு வழி கேட்டு ஆக்கம் அவனை (ளை)ச் சென்று சேருமாம். அவ்வாறுதான் ஊக்கமுடையவராக இவர் விளங்குகிறார். எனவே, பரிசுகளும் விருதுகளும் இவரை நாடி வருகின்றன. இவரது படைப்பாற்றலால் மகிழ்ந்த பல்வேறு அமைப்புகள் இவருக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பித்து மகிழ்ந்தன. அவற்றுள் குறிப்பிடத்தக்கன

1.) சீவா விருது 2003, புதுச்சேரி மாநிலக் கலை இலக்கியப் பெருமன்றம்

2.) கவித் தென்றல் 2005, உலகத் தமிழ் மாமன்றம், திண்டுக்கல்

3.) மனிதநேய முரசு 2005 , பெரியார் காமராசர் பேரவை, சோலையார்பேபேட்டை

4.) சிறுவர் கலைச் சிறகம் 2006, குழந்தைகள் கலை இலக்கிய வளர்ச்சிக் கழகம்

5.) அரிமதி தென்னகனார் அன்னை கோவிந்தம்மாள் விருது 2007, இளைஞர் அமைதி மையம் புதுச்சேரி

6.) சிந்தனைச் செம்மல் விருது 2007, தமிழ்க் கல்வி ஆராய்ச்சி நிறுவனம் சென்னை

7.) (இ)யுவ கலா பாரதி விருது  2007, பாரதி (இ)யுவ கேந்திரா, மதுரை

8.) தேசியக் குழந்தை விருது 2007, நடுவண் அரசு மகளிர் -குழந்தைகள் மேம்பாட்டுத் துறை, புதுதில்லி

9.) துளிப்பாத் துளிர் விருது 2007, செம்படுகை நன்னீரகம் புதுச்சேரி

10.)சிந்தனைச் செல்வி விருது 2007, புதுச்சேரி இலக்கியப் பொழில் இலக்கிய மன்றம்

11.)இளம் படைப்பாளி விருது 2017, புதுவைத் தமிழ்க் கலை மன்றம்

12.) அரும்பணி ஆலயம் விருது 2017, புதுவைத் தமிழ்க் கலை மன்றம்

13.) நட்சத்திரக்கவி விருது 2018, கவி ஓவியா இதழ்

14.) சிங்காரவேலர் பற்றாளர் விருது 2018, மீனவர் கலை இலக்கிய ஆய்வு மையம்

மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி இவன்தந்தை

என்னோற்றான் கொல்எனும் சொல்

(திருவள்ளுவர், திருக்குறள் 70)

என்பதற்கேற்ப பெற்றோர் மகிழும் வண்ணம் மட்டுமல்லாமல் தான் பிறந்த புதுவை மண்ணுக்கும் தமிழ் மொழிக்கும் பெருமை சேர்க்கும் வகையில் பல்துறை வித்தகராக விளங்குகிறார் செவ்வி கு.அ.தமிழ்மொழி.

பல உயரிய விருதுகள் இவரை அடைவதற்காக வழி கேட்டுக் காத்துக்கொண்டிருக்கின்றன. கவிஞர் கு.அ.தமிழ்மொழிபற்றிய இக்கட்டுரை அவருக்கான சிறப்பல்ல. அவரைப்பற்றி எழுதி வெளியிடுவதே இவ்விதழுக்குச் சிறப்பு.

அவரது தந்தை புதுவைத்தமிழ்நெஞ்சன் கூறுவதுபோல்

தமிழ்நிலம் காக்கத் தன்னறி வாலே
தக்க தெல்லாம் செய்திடுவாள் – கு.அ.
தமிழ்மொழி …………………………………

………………………………………              நாம்
முன்னம் வாழ்ந்த முத்தமிழ்க் குடியின்
மூச்சாய் இருந்து
காத்திடுவாள்!

புரடடாசி 24, 2012 / 10.10.1993 இல் பிறந்த பன்முகக் கலைஞராகத் திகழும் கவிஞர், ஓவியர், படைப்பாளர் செல்வி கு.அ.தமிழ்மொழி நலம், வளம், புகழ், உயர்வு, சிறப்பு அடைந்து தமிழுடன் நூறாண்டு வாழ்க ! வாழ்கவே!

வாழ்த்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை, அகரமுதல