Friday, December 11, 2020

பாரதியிடம் கேட்டேன், இளசை சுந்தரம்

 அகரமுதல



பாரதியிடம் கேட்டேன்!

தேடிச் சோறு நிதம் தின்று – பல

சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்

வாடித் துன்பம் மிக உழன்று – பிறர்

வாடப் பல செயல்கள் செய்து – நரை

கூடிக் கிழப் பருவம் எய்தி – பின்பு

கூற்றுக்கு இரையென மாயும் பல

வேடிக்கை மனிதரைப் போலே

வீழ்வேன் என்று நினைத்தாயோ!

ஆம்! பாரதியின் வாழ்க்கை வேடிக்கையானது அல்ல. வேகமானது விவேகமானது.

சொல் புதிது! பொருள் புதிது! சுவை புதிது! சோதிமிக்க நவகவிதை

என்று தன் கவிதைக்கு மகுடம் சூட்டிக் கொண்டவர்.

தாலாட்டுப் பாடல்

நேற்று இரவு பாரதி என் கனவில் வந்தார். பல நாட்களாக என் மனத்தில் தேங்கிக் கிடந்த ஒரு கேள்வியைக் கேட்டேன்.’பல்வகைப் பாடல்களைப் பாடிய நீங்கள் தாலாட்டுப் பாணியில் ஒரு பாடலும் பாடவில்லையே ஏன்?’ அதற்குப் பாரதி சொன்ன பதில் என்னைப் பிரமிக்க வைத்தது.

அடிமை இந்தியாவில் ஏற்கெனவே உறங்கிக் கிடக்கின்ற மக்களை உசுப்பி விடப் பிறந்தவன் இன்னும் உறங்க வைக்கின்ற தாலாட்டை நான் எப்படிப் பாடமுடியும்? அதனால்தான் திருப்பள்ளியெழுச்சி பாடினேன். ஆண்டவனையும் அரசனையும் துயில் எழுப்பப் பாடிய துறையை மாற்றி ஒரு நாடு துயில் எழவேண்டும் என்பதற்காகப் பாரதமாதா திருப்பள்ளி எழுச்சி பாடினேன். அதில் கூட ஒரு புதுமை செய்தேன். தாய்தான் குழந்தைகளை எழுப்புவாள். ஆனால் இங்கு, விடுதலை தவறிக் கெட்டு உறங்கிக் கொண்டிருந்த பாரதமாதா என்ற தாயை, விடுதலைக்குப் போராடும் தேசியத் தலைவர்கள் என்ற குழந்தைகள் எழுப்புவதாக அமைத்தேன்.

‘மதலைகள் எழுப்பவும்

தாய் துயில்வாயோ

மாநிலம் பெற்றவள்

இது உணராயோ’

– பாரதியின் விளக்கம் என்னைக் கவர்ந்தது.

முரண்பாடு

இன்னொரு கேள்வியும் கேட்டேன். பாரதி! நாய்பற்றிப் பாடியதில் குழப்பமும் முரண்பாடும் இருப்பது போல் தோன்றுகிறது. பாப்பா பாடலில் வாலைக் குழைத்து வரும் நாய்தான் மனிதருக்குக் தோழனடி என்று பாடிவிட்டு புதிய ஆத்திசூடியில் ஞமலி போல் வாழேல்; நாயைப்போல் வாழாதே என்று பாடியிருப்பது சரியா? எதை எடுத்துக் கொள்வது?

அதற்குப் பாரதி விடை சொன்னார். இதில் முரண்பாடு ஏதுமில்லை. நாயினுடைய இரு வேறு நிலைப்பாடுகளை எடுத்துக் கூறியிருக்கிறேன். நன்றி உணர்ச்சிக்கு நாய் சிறந்த எடுத்துக்காட்டு. அதற்காக அதைப் போற்றலாம்.ஆனால் நாயிடம் இன்னொரு மோசமான குணம் உண்டு. அதுதான் அடிமைப் புத்தி. தனக்குச் சோறு போடுகிறவன் கொள்ளைக்காரனாக இருந்தாலும், கொலைகாரனாக இருந்தாலும் அவனுக்காகவும் நன்றி காட்டி வாலாட்டும். இந்த அடிமைத்தனத்தை நான் வெறுக்கிறேன். எனவே எனது பாடல்களில் அடிமைத்தனம்பற்றிக் குறிப்பிடும் போதெல்லாம் நாயைப் பற்றிச் சொல்லியிருப்பதைப் பார்க்கலாம்.நன்றி உணர்ச்சிக்கு நாயைப் பின்பற்றுங்கள். அடிமைப் புத்தியில் அதைப் பின்பற்றாதீர்கள்’ என்று இருவேறு நிலைகளில் பாடியிருக்கிறேன்.”

கம்பனுக்கு வந்த பெருமை

கனவு கலைந்துவிட்டது. எனக்கும் தெளிவு ஏற்பட்டது. இந்த அடிப்படையில் பாரதியின் பாடல்களை ஆராயலாமோ என்று தோன்றியது. முதன்மையான தமிழ்ப் புலவர்களை வரிசைப்படுத்த வந்த பாரதி,

யாமறிந்த புலவரிலே

கம்பனைப் போல், வள்ளுவன் போல் இளங்கோ போல்

பூமிதனில் யாங்கணுமே கண்டதில்லை”

என்றார். வரிசை மாறிக் கிடக்கிறது. வரலாற்று வரிசையில் கடைசியில் வரவேண்டிய கம்பன் முதலில் வந்திருக்கிறான். இஃது ஏன்? இது தற்செயலாக அமைந்த வரிசையா? அல்லது பாரதி திட்டமிட்டு அமைத்த வரிசையா? இதுதான் ஆய்வுக்குரியது.

இது தற்செயலாக நேர்ந்த வரிசை இல்லை. ஏனென்றால் தமிழ்நாட்டின் பெருமை பற்றி பாடவந்த பாரதி,

“கல்வியிற் சிறந்த தமிழ்நாடு – புகழ்க்

கம்பன் பிறந்த தமிழ்நாடு”

என்று கம்பனைத்தான் முதன்மைப்படுத்துகிறார். பிறகுதான்

“வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து

வான்புகழ் கொண்ட தமிழ்நாடு”

என்று கூறுகிறான். அதன் பிறகுதான் இளங்கோ வருகிறார். ஆக, ஏதோ ஒரு வகையில் கம்பன் பாரதியைக் கவர்ந்திருக்கிறான்.

அஃது என்ன?

தமிழகத்தில் மன்னர்கள் ஆண்ட முடியாட்சிதான் நடந்து கொண்டிருந்தது. ‘மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்’. மன்னன்தான் உயிர். மக்கள் உடம்பு. அந்த உயிருக்காக உழைக்க வேண்டும். மற்ற புலவர்கள் அதை அடியொற்றித்தான் பாடினார்கள். ஆனால் கம்பன் ஒரு புரட்சி செய்தான். மக்களை உயிராக்கி மன்னனை உடம்பாக்கினான். தயரத மன்னனைப் பற்றிக் கூறும்போது ‘உயிர்கள் உறைவதோர் உடம்பு ஆயினான்’ என்று கூறுகிறான்.

மக்களாட்சி மலர்வதற்கான விதை போடப்படுகிறது. மக்களாட்சித் தத்துவத்தில் அஃதாவது சனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட பாரதிக்கு இது மிகவும் பிடித்திருக்கிறது.

விம்மிய பாரதி

பிசி என்ற வெளிநாட்டுத் தீவில் கரும்புத் தோட்டங்கள் அதிகம். அங்கு வேலை செய்ய தமிழகப் பெண்கள் அடிமைகளாக இறக்குமதி செய்யப்பட்டனர். அதிகமாக வேலை செய்ய அவர்களை வாட்டி வதைத்தனர். வேதனை தாங்காமல் பெண்கள் கண்ணீர் வடித்தனர். அதுகுறித்துப் பாரதி பாடல் எழுதினார்.

“அவர் விம்மி, விம்மி, விம்மி, விம்மி

அழும் குரல் கேட்டிருப்பாய் காற்றே”

இங்கே நாம் கவனிக்க வேண்டியது, ஒரு கருத்தை வலியுறுத்த மூன்று முறை சொன்னால் போதும் என்பது மரபு. ஆனால் பாரதியார் விம்மி என்ற சொல்லை நான்கு முறை பயன்படுத்துகிறார். ஏன்? அதற்குச் சொல்லப்படுகின்ற இலக்கிய நயம் என்ன தெரியுமா? பெண்கள் விம்மியது மூன்று முறை. அதை எழுதும்போது பாரதியும் விம்மியது நான்காவது விம்மல். இது வெறும் இலக்கிய நயம் மட்டுமல்ல, உண்மையும்கூட.பாரதியார் தன்னுடைய கவிதைகளில் புதையல்களைப் புதைத்து வைத்திருக்கிறார். நாம்தான் முயன்று அதைக் கண்டெடுக்க வேண்டும். மேலோட்டமாக கவிதைகளைப் படித்துவிட்டுப் போவதில் பயனில்லை.

முனைவர் இளசை சுந்தரம், வானொலி நிலைய முன்னாள் இயக்குநர், மதுரை. 98430 62817

தினமலரில் ‘புதிய நோக்கில் பாரதி’; ;இன்று (திச.11) பாரதி பிறந்த நாள்; என்னும் தலைப்பில் வந்த கட்டுரை. 11.12.2020

 

Monday, November 16, 2020

வரலாற்றில் இன்று - 17 NOV | History Today | Historical Events Happened |...

8.06 - 11.47 மணிக்கூறுகளில் தமிழ்ப்போராளி பேராசிரியர ்சி.இலக்குவனார் குறித்த தகவல் வந்துள்ளது. சத்தியம் தொலைக்காட்சிக்கு நன்றி.



Tamil Archives - ஐயா சி. இலக்குவனார் அவர்களின் தமிழ்ப் பணிகள் - பகுதி - III

பேராசிரியர் சி.இலக்குவனார் பற்றி முனைவர் ஔவை நடராசன் அவர்களும் சுப.வீரப...

நறுமுகை - இலக்குவனார்

#முன்னோர்கள் #இலக்குவனார்#தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்

ஆளுமைகள் - 2 : பேராசிரியர் சி. இலக்குவனார் (அறிமுகம் : பி. பாலசுப்பிரமணி...

இந்தி எதிர்ப்பு போராளி செந்தமிழ் காவலர் இலக்குவனார்

செப்டம்பர் 3 : இலக்கணச் செம்மல் பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவு தினம் ...

Monday, November 02, 2020

அயலகத் தமிழ்ப்பரப்புநர் பேரா. பெஞ்சமின் இலெபோ: இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல

அயலகத் தமிழ்ப்பரப்புநர் பேரா. பெஞ்சமின் இலெபோ

 தாம் செல்லும் இடங்களில் எல்லாம் ஒல்லும் வகையெல்லாம் தமிழ் பரப்பும் பெருந்தகை பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ. அயல்நாட்டில் இருந்து தமிழைப்போற்றித் தமிழைப் பரப்பும் சிலருள் இவரும் ஒருவர்.

திருவாளர் செவாலியே தியாகு இலெபோ – திருவாட்டி அன்னம்மாள் இலெபோ இணையர் திருமுகனாக  ஐப்பசி 18, 1978 / 03.11.1947 அன்று பிறந்தார். இவர் மனைவி இலெபோ உலூசியா, இவரைப்போலவே தமிழார்வமும் தமிழ்த்தொண்டுச் செயற்பாடுகளும் மிக்கவர்.  இவர்களுக்கு மணவாழ்க்கையை எதிர்நோக்கும் மகன் ஒருவரும் பெண்மக்கள் இருவரும் அவர்கள் வழி ஒவ்வொரு பெயர்த்தியும் உள்ளனர்.

பாரதியார் 1908 இல் புதுவைக்கு வந்தபோது அவரைக் கைது செய்து சென்னைக்கு அனுப்பும்படி ஆங்கிலேய அரசு புதுவையில் இருந்த பிரஞ்சு ஆளுநருக்கு அழுத்தம் கொடுத்தது. அவ்வாறு அனுப்பாமல் இருக்க வேண்டுமானால் ஆவணச் சான்றுரைஞர்(notary  public) ஐவரின் நன்னடத்தைப் பொறுப்பு ஒப்பம் தேவைப்பட்டது. அவ்வாறு கையொப்பமிட்ட ஐவருள் ஒருவர் இவரின் தந்தை வழித் தாத்தா இலெபோ(LE  BEAU) ஆவார். இக்குடும்ப மரபில் வந்த இவருக்குத் தமிழ்ப்பணியிலும் பொதுப்பணியிலும் ஆர்வம் வந்ததில் வியப்பில்லை.

கல்வி :

–           – சென்னை இலயோலா கல்லூரியில்  இயற்பியல் துறையில் இளம் அறிவியல்(B.Sc – Physics) பட்டம் பெற்றவர். இவர் மாணவப்பருவத்தில் தமிழ் இலக்கிய நிகழ்ச்சிகளிலும் போட்டிகளிலும் பங்கேற்றுத் தன் திறமையை வெளிப்படுத்தினார். எனவே, தமிழ் ஆர்வமும் இதன் காரணமாக ஆங்கில ஆர்வமும் புதுச்சேரியில் பிறந்து வளர்ந்தமையால் பிரெஞ்சு மொழி ஆர்வமும் கொண்டு விளங்கினார். எனவே, தமிழ்(சென்னை பச்சையப்பன் கல்லூரி), ஆங்கிலம்(திருப்பதி வேங்கடேசுவரா பல்கலைக்கழகம்), பிரெஞ்சு(பிரெஞ்ச கல்வியியல் கழகம்/Académie Fraçaise, புதுதில்லி) என மும்மொழிகளிலும் முதுகலைப்பட்டங்கள் பெற்றார்.

மும்மொழிப் புலமை மிக்க இவர் மின்னியல் (Diploma in Electronics, பிரித்தானியப் பொறியியல் தொழில் நுட்பப்பயிலகம்/British Institute of Engineering and Technology,மும்பை) மொழியியல் (Diploma în Linguistics, கேரளா பல்கலைக்கழகம்) பட்டயங்கள் பெற்றவர். கணிணி இயலிலும் எழுநிலைச்சான்றிதழ் பெற்று வல்லமை மிக்கவர். வெவ்வேறு நகரங்களில் கல்வி கற்றமையும் அறிஞர் மு.வரதராசனார், அறிஞர் வ.ஐ.சுப்பிரமணியம் முதலான அறிஞர்களின்மாணாக்கர்களாகத் திகழ்ந்தமையும் இவருக்கு விரிந்துபரந்துபட்ட அறிவு பெற வாயிலாக அமைந்தன.

பணிகள் :

–           புதுச்சேரி தாகூர்க்  கலைக் கல்லூரியில் தமிழ்த் துணைப் பேராசிரியராகத் தம் பணியைத் தொடங்கினார் பேரா.பெஞ்சமின் இலெபோ. பின்னர் 14 ஆண்டுகள், கிழக்கு ஆப்பிரிக்க நாட்டில் (சீபூத்தீ / Djibouti))  இந்தோசுயெசு வங்கி என்ற பிரஞ்சு வங்கியில் முது நிலை அதிகாரியாகப் பணியாற்றினார். அதன்பின் 1990 முதல் பிரான்சு கிறித்தியான் இலக்ரூவா (Christian Lacroix ) என்ற பன்னாட்டு நிறுவனத்தின் செயல் அலுவலராகப் பணியாற்றி 2010 இல் பணி  நிறைவு பெற்றார்.

படைப்புப்பணி:

இவரது எழுத்தார்வம் மாணவப்பருவத்திலேயே சிறப்பாக மலர்ந்தது. புகுமுக மாணாக்கராக இருந்த பொழுது(1965) கல்லூரி மாணவர்க்கான ‘ஆக்க வேலையில்  அணுச்சக்தி’ என்னும் தலைப்பிலான கலைக்கதிர்  அறிவியல் கட்டுரைப்  போட்டியில் முதல் பரிசு பெற்றார்.

 அறிவியல் இளங்கலைப் படிப்பின் போது அனைத்துக் கல்லூரிப் பேச்சுப் போட்டியில் பேரறிஞர் அண்ணா அவர்கள் திருக்கரங்களால் சுழற்கோப்பை பெற்றார்.

இவரின் கலைச்சொல் ஆர்வம் பொறியியல் படிப்பில் நுழைந்ததுமே தொடங்கிவிட்டது. 1969-இல் கிண்டி பொறியியற் கல்லூரி நடத்திய கலைச்சொல்லாக்கப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றுள்ளார். மூன்றாம் பரிசாக இருந்தாலும் கலைக்கல்லூரி நிலையில் முதலிடமாக இஃது அமைந்தது.

1992-இல் நடைபெற்ற பாவேந்தர் பாரதிதாசனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு உலகளாவிய கட்டுரைப் போட்டி நடைபெற்றது. ‘கவிஞனின் காதலி’ என்னும் தலைப்பில் கட்டுரை அளித்து, நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் திருக்கரங்களில் இருந்து முதல் பரிசு பெற்றார்.

தமிழ்க்காப்புக் குரல்:

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 2010 ஆம் ஆண்டு சூன் 23 முதல் சூன் 27 வரை கோயம்புத்தூரில்  நடைபெற்றதல்லவா? அப்போது தமிழ் எழுத்துச்சீர்திருத்தம் என்ற பெயரில் தமிழுக்கான சிதைவு முயற்சியும் நடைபெற்றது. அறிஞர் ஒருவரின் வேண்டுகோளை ஏற்று அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி அது குறித்த அறிவிப்பை வெளியிடுவதாக இருந்தார். இதனால்,   நானும் ஒருங்கிணைப்பாளராக இருந்த தமிழ்எழுத்துப்பாதுகாப்பு இயக்கம் உருவாகிக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வாகை சூடி அந்த அறிவிப்பை வெளிவராமல் செய்தது. இந்த இயக்கத்தில் பங்கேற்ற ஐரோப்பிய நாட்டவராக இவர் மட்டுமே இருந்தார். மேலும், இந்த மாநாட்டிற்கு அரசு சார்பில் அழைக்கப்பெற்ற ஐவருள் ஒருவராகவும் திகழ்ந்தார். இச்செம்மொழி மாநாட்டில் ‘தமிழ் எழுத்துச் சீர்திருத்தமா! தமிழுக்கது பொருத்தமா?’ என்ற ஆய்வுக் கட்டுரையையும் அளித்தார்.

விருதாளர் :

தமிழ்ப்பணிக்காக இவர் பெற்ற விருதுகளில் குறிக்கத்தக்கன வருமாறு:

      2015-2016 ஆம் ஆண்டிற்கான அயலகத்  தமிழறிஞர்கள் இலக்கண விருதை நூறு ஆயிரம் உரூபா பொற்கிழியுடன் முதல் முதலாகப் பெற்ற சிறப்பிற்குரியவர்.

கோலோன் பல்கலைக்கழகம்(Univeritat zu  KÖLN) பாரீசு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துடன் [பெயர் மாற்றப்பட்ட பன்னாட்டு உயராய்வு நிறுவனம்(Institut International des Études Supérieures’ /International Institute of Higher Studies)] இணைந்து இவருக்குப் போப்பு விருது வழங்கிச் சிறப்பித்துள்ளது.

 பிரான்சில் தமிழ்ப்   பணிகள் :

 பிரான்சு கம்பன் கழகப் பொருளாளர் ஆகவும் செயலர் ஆகவும் இருந்து அம்மண்ணில் தமிழ்க்குரல் முழங்கச் செய்கிறார். அத்திசு மோன்சு(Athis-Mons) நகரின் கலை இலக்கியப் பண்பாட்டுக் கழகம், முத்தமிழ் மன்றம்  முதலானவற்றின் அறிவுரைஞராக இருந்தும் பல சங்கங்களுக்கு வழி காட்டியாக இருந்தும் நிகழ்ச்சிகள் நடத்திக் கொடுத்தும்  பிறரின் தமிழ்ப்பணிகளுக்குத் தூண்டுகோலாக உள்ளார். 

 பிரான்சு கம்பன் கழகத்தின் மகளிர் அணிக்காக வலைப்பூ  (blog) உருவாக்கித் தந்ததுடன்  அதன் தொழில்நுட்ப வினைஞராகவும் பணியாற்றியுள்ளார்.

 இந்தியக் கத்தோலிக்கத் தமிழ் ஞானகத்தின் (Aumônerie Catholique Tamoule Indienne, Paris) மூத்த உறுப்பினர் என்ற பெருமைக்ககுரியவர். அதற்காக 2000 ஆம் ஆண்டு இணையத்தளம் உருவாக்கி இவரே 2019 வரை அதை நடத்தித்  தந்துள்ளார். அதன் வெளியீடான ‘ஞான தீபம்’ இதழைக்  கணிணியில் ஏற்றி 2018 வரை நடத்தி வந்துள்ளார். 

 இவர் எழுதியுள்ள இலக்கண,  இலக்கிய, அறிவியல் கட்டுரைகள் பலவாகும். யாவுமே தமிழ் நலம் சார்ந்தவை. எழுத்தாளராக மட்டுமல்லாமல் தலை சிறந்த  பேச்சாளராகவும் திகழ்கிறார். -ஆண்டு தோறும் இந்திய வருகையின் போது  புதுச்சேரித் தமிழ்ச் சங்கம், மதுரைத் தமிழ்ச் சங்கம், புதுவை, தமிழகக்  கல்லூரிகளில் தகைநிலைப்பேராசிரியராக(professor emeritus)உரை நிகழ்த்தி வருகிறார்.

 2010 இல் பாரீசில் இலக்கியத்தேடல் அமைப்பை உருவாக்கித் தொடர்ந்து நடத்தி வருகிறார்.

 பன்னாட்டுக் கருத்தரங்குகள், இணையத்தளக் கருத்தரங்குகளில் கலந்துகொண்டு ஆராய்ச்சி உரை வழங்கி வருகிறார்.

பிரான்சு கம்பன் கழகம் பொங்கல் விழா, பட்டிமன்றம், கவியரங்கம் முதலான பொதுவான விழாக்களுடன் செந்தமிழ்க் காவலர் முனைவர் சி. இலக்குவனார் நூற்றாண்டு விழா, மு.வரதராசனார் நூற்றாண்டு விழா முதலான அறிஞர்கள் விழாக்களையும் கம்பன்கழகம் சிறப்பாக நடத்தி வருகிறது.  இதன்மூலம் பல்வேறு திசைகளிலிருந்தும் தமிழ்ப்பொழிவாளர்களை வரவழைத்து இலக்கிய இன்பங்களைப் பிரான்சுத்தமிழர்களுக்கு வழங்கி வருகிறது. மேடைவாய்ப்பு மூலம் உரையாளர்கள்,கவிஞர்கள், செயற்பாட்டாளர்களுக்கு வாய்ப்புகள் நல்கி அவர்கள் திறமைகளை மேம்படுத்தி வருகிறது. இதில் செயற்பாட்டாளர் பெஞ்சமின் இலெபோவிற்கும் முதன்மைப் பங்கு உள்ளது.

“உலகில் எங்கிருந்தாலும் தமிழன் தமிழன்தான்! தமிழ்ப்பணியை மூச்சாகக் கொள்பவன்தான்!” என்பதை மெய்ப்பிக்கும் வகையில் பிரான்சுநாட்டில் இருந்து பேச்சாலும் எழுத்தாலும் செயலாலும் அங்கும் எங்கும் தமிழ்ப்பணியாற்றும் பெருந்தகை பேரா.பெஞ்சமின் இலெபோ நூறாண்டு கடந்தும் வாழ்க! வாழ்கவே!

இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை, அகரமுதல

 

உலூசியா இலெபோ( lucia lebo)

Friday, October 23, 2020

இணையத் தமிழ்ச்சுடர் தேமொழி – இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல

இணையத் தமிழ்ச்சுடர் தேமொழி

இணையவழித் தன் தமிழ்ப்படைப்புகள் மூலம் சுவையான அருமையான கருத்துகளைத் தெரிவித்து வருபவர் முனைவர் தேமொழி.

திருச்சி மரு.முனைவர் சிவக்கண்ணு, சானகி ஆகியோர் திருமகள்.  விலங்கியலில் இளம் அறிவியல் பட்டத்தைச் சென்னைப் பல்கலைக்கழகத்திலும் முதுநிலைப்பட்டத்தைப் பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலும் ஆய்வியல் பட்டத்தை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் பெற்றவர்.

 திருமணமானதும் கணவருடன் 1987 இல் அமெரிக்கா குடி புகுந்தார். இங்கே  சியார்சு வாசிங்கடன் பல்கலைக்கழகத்தில் பொறியியல் மேலாண்மையில் முதுகலைப் பட்டம் (Master of Engineering Management) பெற்றார். நகரகக் கல்வி- பொது மேலாண்மையில் முதுநிலைப்பட்டத்தை (Master of Urban Studies and Public Administration) முது தொமினியன் பல்கலைக்கழகத்தில்(Old Dominion University) பெற்றார். பொதுக்கோட்பாடு-பொது மேலாண்மையில் முனைவர் பட்டத்தை (Ph.D. in Public Policy and Public Administration) – Old Dominion University) இதே பல்கலைக்கழகத்தில் பெற்றார்.

ஒக்கலஃகோமா(Oklahoma) அரசு முகமையில்  திட்ட ஆய்வாளராகப்  (Program Analyst) பணியாற்றியவர். கடந்த 33 ஆண்டுகளாக அமெரிக்காவில் பல இடங்களில், வசித்து இப்பொழுது சான் பிரான்சிசுகோவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

‘வல்லமை’ மின்னிதழ் இதழாளர் முனைவர் அண்ணாகண்ணனால் நிறுவப்பட்டு எழுத்தாளர் பவளசங்கரியைச் செயல் ஆசிரியராகக் கொண்டு இயங்குவது. இவ்விதழின் துணை ஆசிரியராகப் பணியாற்றிய பொழுது வாரந்தோறும் அருவினைபுரிந்த ஒருவரைத் தேர்ந்தெடுத்து ‘வல்லமையாளர் விருது’ வழங்கியவர் இணையத் தமிழ்ச்சுடர்தேமொழி. இலக்கிய உலகம், படைப்புலகம், மன்பதை நிலை எனப் பல்வேறு சூழல்களில் உள்ளவர்களைத் தெரிவு செய்து இவர் வல்லமையாளர் விருதுகளை வழங்கியுள்ளார். இந்நூற்றுவரைப்பற்றியும் ‘எனது வல்லமையாளர்கள்’ என்னும் தலைப்பில் நூல் வெளியிட்டுள்ளார்(2017). இந்நூல்கள் மூலம் புதிய செய்திகளையும் புதியவர்களையும் அறியும் வாய்ப்பு படிப்பவர்களுக்குக் கிடைக்கிறது.

வல்லமை மின்னிதழ் மடல் இலக்கியப்பரிசுப் போட்டியை நடத்தியது. அதில் வெற்றி பெற்றவர்களின் மடல்களைத் தொகுத்து ‘அன்புள்ள மணிமொழிக்கு…’ என்னும் நூலை வெளியிட்டுள்ளார்(2017).

தேமொழியின் தங்கை மருத்துவராகச் சிறப்பாகப் பணியாற்றி மறைந்த மணிமொழியின் பெயரில் தலைப்பு அமைந்துள்ளது. எனினும் மணிமொழி என்னும் பாத்திரத்தைத் தாயாக, உடன்பிறந்தவளாக, மகளாக, மருமகளாக, பேத்தியாக, தோழியாக, காதலியாக உருவகப்படுத்தி மடல்கள் எழுதியுள்ளனர். மொத்தம் 12 மடல்கள் உள்ளன. இவை கட்டுரையாக அமையாமல் கதைக்கூறுகளுடன்  ஆர்வத்துடன் படிக்கும் வகையில் அமைந்துள்ளன.

‘சுதந்திர தேவியின் மண்ணில்…’ என்பது இவரின் மற்றொரு கட்டுரைத் தொகுப்பாகும்(2017). இதில் உள்ள 25 கட்டுரைகளும் அழகு தமிழில் ஆற்றொழுக்கான நடையில் கருத்துச் செறிவோடும் சிந்தனை வளத்தோடும்  எழுதப்பெற்றவை என மேகலா இராமமூர்த்தி முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.

பல்கலைக்கழகங்கள், அருங்காட்சியகங்கள், மகளிர் சமத்துவ நாள் முதலான சிறப்பு நாள்கள் எனப் பலவற்றையும் உள்ளத்தில் பதிய வைக்கிறார். ‘அமெரிக்க வாழ் சீனர்களின் தாய்மொழிப்பற்று’ என்னும் கட்டுரை மூலம், தமிழர்கள் எங்கிருந்தாலும் தமிழ்ப்பற்றைப் புறக்கணிக்கக்கூடாது என வலியுறுத்துகிறார். இக்கட்டுரை இறுதியில், “தமிழரைத் தவிரப் பிறர் தங்கள் மொழியினைப் புறக்கணிக்கத் தயாரில்லை என்பதைக் கண்டறிந்த பிறகாவது தமிழர்கள் தாய்மொழியைப் புறக்கணிக்காது பிற மொழி மயக்கத்திலிருந்து விடுபடுவது தமிழுக்குச் செய்யும் உதவியாக இருக்கும். வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!” என முடித்திருப்பார். இவ்வரிகள் இவரின் உள்ளக்கி்டக்கையை உணர்த்தி நம்மைத் தமிழ்ப்பற்றுடன் இருக்கத் தூண்டுகின்றன.

‘அனிச்ச மலர்கள்’ என்னும் சிறுகதைத் தொகுப்பு(2017) இவரது படைப்பாக்கத்தில்  முதன்மையான ஒன்றாகும். கதைப் பாத்திரங்களின் அன்றாடச் செயல்பாடுகள் அங்கும் இங்குமாக நாட்டில் நடப்பதைப் படம்பிடித்துக் காட்டுவதுபோல் அமைந்துள்ளமை இவரது எழுத்து வன்மைக்குச்சான்றாகும். வாழ்ந்த இடங்களையும் வாழும் இடங்களையும் கதைச்சூழல் ஆக்குவதால் உள்ளத்தில் பதியும் வண்ணம் கதைகளைப் படைத்து விடுகிறார். ஜினா என்றொரு க்ருயெல்லா என்ற தலைப்பில் இவர் எழுதிய கதை மாதத்தின் சிறந்த சிறுகதை என்று திரு. வெங்கட்டு சாமிநாதன் அவர்களால் தேர்வு செய்யப்பட்டது பாராட்டும் பெற்றுள்ளது.  பிறமொழிக் கலப்பின்றி எழுத வேண்டும் என்ற விருப்பத்தைச் சில கதைகளில் நிறைவேற்றியுள்ளார். எல்லாப் படைப்புகளிலும் தமிழ்ச் சொற்களையே இனிப் பயன்படுத்த வேண்டும்.

‘எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்’ நூல் இலக்கியம், கல்வெட்டு, ஊரகக்கலைகள் முதலானவை சார்ந்த 23 கட்டுரைகளின் தொகுப்பு ஆகும். இந் நூல் குறித்து,”நூலாசிரியர் தேமொழிக்கு உண்மை காணும் நாட்டமும் அதற்குத் தேவையான அயராத உழைப்பும் ஒருபாற் கோடாத நடுவுநிலையான நோக்கும் இயல்பாகவே அமைந்துள்ளன என அணிந்துரையில் எழில்முதல்வன் கூறியுள்ளது பிறரின் கருத்துமாகும்.

கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ கதையைச் சுருக்கிய பதிப்பாக 2012இல் கொணர்ந்துள்ளார். ஆங்கிலத்தில் இத்தகைய சுருக்கப்பதிப்புகளை நிறைய காணலாம். ஆனால், தமிழில் மிகக் குறைவு. ஆதலின், தமிழ்ப்புதினங்கள், நாடகங்களைச் சுருக்கி எழுதுவோர் வரிசையில் இவரும் இடம் பெற்றுள்ளார்.

இலக்கிய ஆய்வு, நூலாய்வு, அறிஞர்களின் சிறப்பு, அன்றாட நிகழ்வுகளின் வாழ்வியல் நலக் கண்ணோட்டம்  எனப் பலவகையிலும் சிறகு இதழுக்கு அழகும் வளமும் சேர்க்கும் இவரது நூற்றுக்கு மேற்பட்ட படைப்புகளைச் சிறகு இணையத்தளத்தில் (http://siragu.com/author/themozhi/ ) காணலாம்.

இதேபோல் வல்லமைக்கு வலிவும் பொலிவும் சேர்க்கும் நூற்றுக்கணக்கான படைப்புகளை அளித்து வருகிறார். ( https://www.vallamai.com/?author=182)

கடந்த 9 ஆண்டுகளாகத் திண்ணை, கீற்று முதலான பிற இணைய இதழ்களிலும்  சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் முதலான இவரது படைப்புகள் வருகின்றன. ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட இவரது படைப்புகள் தமிழ்ப்படைப்புலகில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெறுகின்றன.

தன்னார்வலராக முன்னர் வல்லமை இதழின் துணை ஆசிரியராகச் சிறப்பாகச் செயலபட்டார். இப்பொழுது தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் ‘மின்தமிழ்மேடை’  காலாண்டு  இதழின் பொறுப்பாசிரியராகத் திகழ்கிறார்.

மேலும், தமிழ் மரபு அறக்கட்டளை அமைப்பின் செயலாளராகவும், தமிழ் மரபு அறக்கட்டளையின் கூகுள் மின்தமிழ் குழுமத்தின் மட்டுறுத்தராகவும் செயல் பட்டு வருகிறார்.

தமிழ்நல நேயர். எனவே, மடலாடல் குழுக்களில் தமிழுக்கு எதிராக யாரும் கருத்து தெரிவித்தால் பொங்கி எழுந்து அவர்களுக்கு உரிய மறுப்பைத் தெரிவிப்பார்.

பெண்படைப்பாளர்கள் முன்பை விடக் கூடுதலாகக் காணப்படுகின்றனர். எனினும் மேலும் பெண் படைப்பாளர்கள் பெருக வேண்டும். பிற்போக்குத்தனம் இல்லாத தமிழ் நலமும் மனித நேயமும் கொண்ட பழந்தமிழ்ச் சிறப்பைப் போற்றி வளர் தமிழுக்கு வளம் சேர்ப்போர் இவர் வழியில் உருவாக வேண்டும்.

“என்றும் தமிழ் எங்கும் தமிழ்” என்பதை இலக்காகக் கொண்டுள்ள இதழாளர், கதையாசிரியர், கட்டுரையாளர், கவிஞர், படைப்பாளர் முதலான பன்முகம் கொண்ட இணையத் தமிழ்ச்சுடர் முனைவர் தேமொழி நூறாண்டு வாழிய வாழியவே!

– இலக்குவனார் திருவள்ளுவன்

இவரது நூல்களுக்கான இணைப்பு:

அனிச்ச மலர்கள்  (2017)

https://books.google.com/books?id=covEAgAAQBAJ

எனது வல்லமையாளர்கள் (2017)

https://books.google.com/books?id=6YoyDwAAQBAJ

சுதந்திர தேவியின் மண்ணில்  (2017)

https://books.google.com/books?id=YTRCDwAAQBAJ

அன்புள்ள மணிமொழிக்கு  (2017)

https://books.google.com/books?id=OaRvDgAAQBAJ

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்   (2018)

https://books.google.com/books?id=uSdNDwAAQBAJ

கல்கியின் பொன்னியின் செல்வன் – சுருக்கப்பட்ட பதிப்பு  (2012)

https://books.google.com/books?id=MN_bAgAAQBAJ

Wednesday, September 02, 2020

சிறப்புக் கட்டுரை: இன்னோர் இலக்குவனார் வருவாரா? – மின்னம்பலம்

     03 September 2020      No Comment

இன்னோர் இலக்குவனார் வருவாரா?- இலக்குவனார் திருவள்ளுவன்

[03.09.2020 தமிழ்ப்போராளி சி.இலக்குவனாரின் 47ஆவது நினைவு நாள்]

“இந்தி முதன்மை இன்னும் நீங்கியபாடில்லை. இந்தி முதன்மையை அகற்றப் பெரும் அறப்போரைத் தொடங்க வேண்டியிருக்கும்போல் உள்ளது (குறள்நெறி நாளிதழ்: கார்த்திகை 1, 1997: 16.11.66) என 1966இல் தமிழ்ப்போராளி இலக்குவனார் குறிப்பிட்டார். இன்றும் அதே நிலைதான் உள்ளது. ஆனால் தொலைநோக்கு அறிஞரான இலக்குவனார் 1965இல் இந்தி மட்டுமே ஆட்சி மொழி என்ற அவலநிலை வராமல் காத்திடச் செயல்பட்டு வெற்றியடைந்தார். இன்றைக்கு அப்படி ஓர் அறிஞரோ, தலைவரோ இல்லை என்பதுதான் வருந்தத்தக்க நிலை.

புலவர் கல்லூரி மாணாக்கராக இருக்கும்போதே அவர், “நமக்குத் தேவை தமிழில் முழு எழுத்தறிவுக் கல்வி. இந்தி பரப்புரை அவை எதற்குத் தேவை இங்கு?” என்று வினாவெழுப்பினார்.. இலக்கியப் பரப்புரைகளுடன் தாய்த்தமிழ் காக்கவும் மக்களிடையே உணர்ச்சியைத் தூண்டினார். 1940களிலேயே இந்தி என்பது பிற தேசிய மொழிகளை அழிக்கும் கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது என எச்சரித்தார்.

இந்தியா விடுதலை பெற்ற காலத்தில் விருதுநகரில் பணியில் சேர்ந்தார். அப்போது அவர், “ஒரேமொழி ஒரே நாடு என்பதை இந்தியைத் திணிப்பதன் மூலம் நிறுவ மத்திய அரசு முயல்கிறது. இதனால் பிற தேசிய மொழியினர் தத்தம் உரிமைகளை இழக்கின்றனர்” என்றார்.

தமிழ்ப்போராளி இலக்குவனார் கல்லூரிப் பணி தவிர, வார விடுமுறை நாள்களில் தமிழ் வகுப்புகள் எடுத்துத் தமிழ்ப்புலவர்கள் பலரையும் பட்டதாரிகளையும் உருவாக்கினார். பணியாற்றும் ஊர்களில் எல்லாம் தமிழ் அமைப்புகள் நிறுவி, தமிழ் உணர்வை மக்களுக்கு ஊட்டினார். “எங்கும் தமிழ்! என்றும் தமிழ்!” என்பதை வலியுறுத்தினார். திருக்குறள் விழா, திருவள்ளுவர் விழா, தொல்காப்பியர் விழா, ஒளவையார் விழா, தமிழ் மறுமலர்ச்சி விழா, சங்கப்புலவர்கள் விழா முதலான பல்வேறு விழாக்களை நடத்தி மக்களிடையே தமிழ் இலக்கியங்கள், தமிழ்ப்புலவர்கள் குறித்த விழிப்புணர்வை ஊட்டினார். இவற்றுடன் தமிழ் காக்கப்பட வேண்டும் என்றால் அயல் மொழித் திணிப்பு கூடாது என்பதை வலியுறுத்தி இந்தித் திணிப்பு எதிர்ப்பு உணர்வையும் ஏற்படுத்தினார். மாணாக்கர்களும் இளைஞர்களும் இவர் உரைக்கும் எழுத்துக்கும் கட்டுப்பட்டனர். இதழ்கள் வாயிலாகத் தமிழ் உணர்வும் இந்தி எதிர்ப்புணர்வும் ஊட்டியதால் நாடெங்கும் உள்ள பொதுமக்களும் இவருக்குச் செவி மடுத்தனர்.

அன்றும் அதே உத்தி

இதனால், அவர் பணியாற்றிய விருதுநகரில் பேராயக் (காங்கிரசுகட்சியினர், “இலக்குவனாரைச் கைது செய்!” என்றும் “இலக்குவனார் மீது நடவடிக்கை எடுத்து வேலை நீக்கம் செய்!” என்றும் சுவரொட்டிகள் ஒட்டினர்சட்டமன்றத்தில்அரசு உதவி பெறும் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டு அரசின் கொள்கைக்கு எதிராக இந்தியை எதிர்த்து மாணாக்கர்களைத் திசை திருப்புகின்றனர் என்று பேசினர்இதனால் அரசு கல்லூரி நிருவாகத்திற்கு இவரை வேலை நீக்கம் செய்யுமாறு கட்டளை அனுப்பினர். ஆனால், இவர் பணியாற்றிய வி.இ.நா.செந்தில் குமாரநாடார் கல்லூரி ஆட்சிக்குழுவினர், “இவரின் கல்லூரிப் பணி சிறப்பாக உள்ளது. நல்ல மாணாக்கர்களை உருவாக்குகிறார். கல்லூரிக்கு வெளியே இவர் என்ன செய்தாலும் அது குறித்துக் கல்லூரி கவலைப்படவும் நடவடிக்கை எடுக்கவும் தேவையில்லை” என்று மறுத்துவிட்டனர்.

ஒரு நாடு தன் மொழியை இழக்குமேல் மீண்டும் பெறல் அரிது. எடுத்துக்காட்டுக்கு வேறு எங்கும் வேண்டாம். நம் நாடே தக்க சான்றாகும். … … செந்தமிழ்ப் பகுதிகளெல்லாம் வேற்று மொழி நாடுகளாக மாறுபட்டு விளங்குகின்றன. இனி மீண்டும் அவற்றைத் தமிழ் வழங்கும் நாடாகக் காணல் கூடுமா? ஆதலின் எதனை இழப்பினும் மீண்டும் பெறலாம்! மொழியை இழப்பின் மீண்டும் பெறல் என்றும் இயலாது என்பதனைத் தெளிதல் வேண்டும்” என மக்களிடையே இந்தித் திணிப்பால் ஏற்படும் விளைவுகளை எடுத்துரைத்தார்.

இந்தியை விருப்பப்பாடமாகப் பொய்யுரை கூறும் மத்திய அரசுக்கு எதிராக இந்தி மொழியைக் கற்றால்தான் வாழ்வுண்டு என்ற நிலையை ஏற்படுத்திவிட்டு ‘‘இந்தியை விரும்பாதவர் மீது சுமத்தவில்லை’’ என்று கூறுவது அறநெறிக்கு ஒத்தாகவும் இல்லை; மக்களாட்சி முறைக்கு மாறான தனிக் கொடுங்கோன்மையாட்சிக்குரியதாகவும் உள்ளது என்பதைப் பசுமரத்தாணிபோல் மக்களிடம் புரிய வைத்தார்.

அரசியலமைப்புச் சட்டத்தின்படி 1965 சனவரியில் இந்தி ஒற்றை ஆட்சி மொழியாக மாறும் என்பதைப் பலவகையிலும் அறிவுறுத்தினார். எனினும் இதனை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்பதற்காகக் ‘குறள்நெறி’ இதழை மீண்டும் தொடங்கினார். இது குறித்து அவரே, பின்வருமாறு கூறியுள்ளார்.

“இந்தி முதன்மையைத் தடுப்பதும் தமிழைத் தூய நிலையில் வளம்படுத்துவதும் குறள்நெறியில் மக்கள் வாழ்வதற்கு ஒல்லும் வகையால் உழைப்பதும் மக்களாட்சி முறை மாண்புற வழிகாட்டுவதுமே நம் இதழின் குறிக்கோளாகும்.”

அண்ணாவும் இலக்குவனாரும்

மொழிப்போரில் முப்பதாண்டுக் காலமாக ஈடுபட்ட பேராசிரியர் வகித்த முன்னோடிப் பங்களிப்பைப் பேரறிஞர் அண்ணா அவர்களின் பின்வரும் உரை தெள்ளிதின் விளக்குகிறது; முப்பதாண்டு காலமாகப் பேராசிரியர் இலக்குவனார் ஊட்டிய தமிழ் உணர்ச்சி நூறாயிரக்கணக்கான தமிழர்களைத் தமிழுணர்வு கொண்ட நற்றமிழர்களாக மாற்றி இருக்கிறது என்பதை ஆட்சியாளர்கள் அறியவில்லை போலும்.” என்றார் இலக்குவனாரின் 55ஆவது பிறந்தநாள் பெருமங்கலத்தின் பொழுது.

இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்பது கட்சிகள் சார்பான எழுச்சியாக மாறினால்தான் முழுப்பயன் கிட்டும் என்பதை பேரா.இலக்குவனார் உணர்ந்தார். எனவே, 1960இல் பேரறிஞர் அண்ணாவைத் தியாகராசர் கல்லூரிக்கு அழைத்தார்திமுக விலைவாசிப்போராட்டம் போன்றவற்றில் ஈடுபடுவதை விடத் தமிழ்மக்களின் வாழ்வை அழிக்கும் இந்தித் திணிப்பிற்கு எதிராகப் பெரும் போராட்டம் நடத்த வேண்டும் என்றார்இல்லையேல் 1965 இல் இந்தி ஒற்றையாட்சி மொழியாகிப் பிற எல்லா மொழிகளையும் அழிக்கும் என்றார். இதனை ஏற்றுக்கொண்ட பேரறிஞர் அண்ணா, கட்சியினரைக் கூட்டி இது குறித்த முடிவை ஏற்று அறிவிப்பதாகக் கூறினார். பேரா.சி.இலக்குவனார் இவ்வாறு உணர்த்தியிராவிட்டால் திமுக. இந்தி ஆட்சிமொழி என்பதற்கான போராட்டத்தில் ஈடுபட்டிருக்காது. திமுகவின் போராட்டங்களால் மக்களிடையே எழுச்சி ஏற்பட்டது.

பேரறிஞர் அண்ணா இந்தி ஆட்சிமொழியாக மாற உள்ள 1965ஆம் ஆண்டுக் குடியரசு நாளான 26.01.1965 ஐக் கறுப்பு நாளாக அறிவித்தார். எனினும் மாணாக்கர்களிடம், “ஒவ்வொருவரும் மிக மிக அமைதியான முறையில் அவரவர் இல்லத்தில் இந்தி எதிர்ப்புக்கு அடையாளமாகக் கறுப்புக் கொடியைப் பறக்க விடுங்கள். வேறு போராட்டத்தில் ஈடுபட வேண்டாம்” என்றார். (முனைவர் தமிழரசி ம.நடராசன் எழுதிய இந்தி எதிர்ப்புப்போர் குறித்த நூல்)

ஆனால், பேராசிரியர் சி.இலக்குவனார், இந்தித்திணிப்பு மாணாக்கர்களின் எதிர்காலத்தை அழிக்கும் செயல். அவர்கள் போராடாமல் யார் போராடுவார்கள் என்று கேட்டு மாணாக்கர்களை இந்தி எதிர்ப்புப் போரில் குதிப்பதை வரவேற்றார். நாடெங்கும் மாணாக்கர்கள் இந்தி எதிர்ப்புப் போரில் தீவிரமாக ஈடுபட்டனர்.

சட்ட எரிப்புப் போராட்டம்

மதுரையில் மாணாக்கர்கள் இந்தி ஆட்சிமொழிச் சட்டம் தொடர்பான பக்கத்தின் தட்டச்சுப்படியை எரிக்கப்போவதாக அறிவித்தனர். நா.காமராசு, கா.காளிமுத்து முதலான மாணாக்கர்கள் வாழ்த்து பெறுவதற்காகப் பேரா.சி.இலக்குவனாரை வந்து சந்தித்தனர்.

மதுரையில் திலகர் திடலில் அல்லது சான்சிராணி பூங்கா அருகில் உள்ள நியூ சினிமா எனப்படும் திரையரங்கு முன்னர் எரிக்க இருப்பதாகத் தெரிவித்தனர். பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களிடம், சட்டத்தை எரிக்க ஓரிடத்தைத் தெரிவு செய்துவிட்டு மற்றோர் இடத்தில் எரிக்க இருப்பதாக அறிவியுங்கள்சட்டத்தை எரிப்போர் தலைமறைவாகி விடுங்கள்பிறர் களப்பணியாற்றுங்கள்உரிய நாளில் திட்டமி்ட்டவாறு சட்டத்தை எரித்து விடுங்கள் என்றார். அதற்கேற்ப அவர்கள் செயலாற்றியதால் காவல் துறையினர் மோப்பம் பிடித்து வருவதற்குள் சட்டத்தை எரித்து விட்டனர். இதனால் கைதாகி ஆறு மாதச் சிறைத்தண்டனையும் பெற்றனர். பேரா.சி.இலக்குவனார் வறுமையில் இருந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு ஆறு மாதங்களும் பொருளுதவி அளித்து வந்தார்.

மாணவர்களைக் கட்டுப்படுத்தும் மதுரை விசை

எதிர்பார்த்ததைவிட இந்தி எதிர்ப்புப் போர் பன்மடங்கு தீவிரமடைந்தது. தமிழ்நாட்டைப் பார்த்து பிற மாநிலங்களிலும் இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் வெடித்தன. இதனால் அஞ்சிய அரசு, மாணவர்கள் போராட்டங்களை நிறுத்தச் சொல்லி அறிக்கை விடுமாறு திமுக தலைவர் பேரறிஞர் அண்ணாவிடம் வேண்டியது. அவரோ, இது திமுகவின் போராட்டமல்லநான் சொன்னால் கேட்பதற்கு மாணாக்கர்கள் திமுகவினருமல்லர்பல கட்சியினரும் கட்சி சாராதவர்களும் உள்ளனர்எனவேநான் அறிவித்தால் பயனில்லைமாணாக்கர்களைக் கட்டுப்படுத்தும் விசை மதுரையில் பேராசிரியரிடம் (சி.இலக்குவனாரிடம்உள்ளது என்றார்.

இதனால் மதுரை வந்த காவல் துறை அதிகாரிகள் பேரா.சி.இலக்குவனார் பணியாற்றிய தியாகராசர் கல்லூரியின் தாளாளர் கருமுத்து தியாகராசரைச் சந்தித்தனர். இலக்குவனாரிடம் பேசுமாறு கூறிய அவர்களிடம் அவர், “தமிழ் அரிமா இலக்குவனாரின் ஆளுமைக்கு முன்னர் நான் மாணாக்கனாக நடந்து கொள்வேன். என்னால் அவரிடம் ஒன்றும் பேச இயலாது” என்றார்.

பின்னர் அவர்கள் நேரடியாகப் பேரா.சி.இலக்குவனாரைச் சந்தித்து “இந்தி எதிர்ப்பை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். நீங்கள் போராட்டத்தை நிறுத்துங்கள்” என அறிக்கை விடுமாறு கேட்டனர். அதற்கு அவர், “தங்களின் எதிர்கால நலன்களுக்காகப் போராடும் மாணாக்கர்களிடம் இவ்வாறு தெரிவித்தால் நான் எப்படி நல்ல ஆசிரியனாக இருக்க முடியும்? ஒருவேளை நான் தெரிவித்து அவர்கள் அதன்படி நடந்தால் அவர்கள் எப்படிச் சிறந்த மாணாக்கர்களாக இருக்க முடியும்” என்று மறுத்து விட்டார். போராட்டம் மேலும் மேலும் தீவிரமடைந்ததால் பேரா.சி.இலக்குவனாரை ‘இந்தி எதிர்ப்புப் போரின் படைத் தளபதி’ என்று குற்றம் சாட்டி 01.02.1965 அன்று கைது செய்தனர். உலகில் மொழிக்காக கைதான முதல் பேராசிரியராக இலக்குவனார் இருந்தார்இவ்வழக்கில் விடுதலையானதால், 02.05.1965 அன்று இந்தியப் பாதுகாப்புச் சட்டப்படி அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்தி: அன்றும் இன்றும்

1965ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போர் திடீரென்று ஒரு நாளில் வெடித்தது அல்ல. ஒரு நாள் கூத்தாக இருந்தால் இந்தி எதிர்ப்பு என்பது நீறுபூத்த நெருப்பாக இன்றும் இருக்காது. எந்த ஓர் ஆணையுமின்றி 26.01.1965 அன்று இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சிமொழியாகும் என்ற அரசமைப்புச் சட்டத்தின் விளைவுகளைப் பிறர் பொருட்படுத்தாமல் இருந்தனர். அப்பொழுது இதனால் பிற மொழி பேசுநர் வாழ்வு இருண்டுபோவதை உணர்ந்த பேராசிரியர் சி.இலக்குவனார் தொலைநோக்கு உணர்வுடன் சிந்தித்து இதற்கு எதிராக மக்களை ஆயப்படுத்தினார். எனவேதான் 1965ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போரால் அச்சட்டம் நிறுத்தப்பட்டது. அதற்குக் காரணமாக இருந்த பேராயக் (காங்கிரசு) கட்சி தமிழக அரிணையை இழந்தது. அதன் பின்னர் மீண்டும் அரியணை ஏறமுடியாமல் தவிக்கின்றது.

இன்றைக்கு மத்திய பாசக ஆட்சி ‘புதிய கல்விக் கொள்கை’ என்ற பெயரில் சில நூறுபேர் அறிந்த சமசுகிருத மொழியை நூறு கோடிக்கும் மேற்பட்ட மக்களிடம் திணிக்கத் திட்டமிட்டுள்ளது. விருப்பப்பாடம் என்ற போர்வையில் இந்தியை நாடெங்கும் திணிக்கவும் செயலாற்றுகிறது. இதனை அறிஞர்களும் தமிழ் அமைப்பினரும் எதிர்க்கின்றனர். எனினும் பாசக சிலர் கூறும் ஆதரவு உரைகளைப் பரப்பி மக்களை மூளைச்சலவை செய்ய முயல்கிறது.

தமிழ் படித்துத் தமிழால் செல்வம் திரட்டித் தமிழால் தரணி எங்கும் உலா வருவோரும் திமுகவினரால் இந்தி படிக்க முடியாமல் போயிற்று என்று அழுகுரல் எழுப்புகின்றனர்.

அவர்களுக்குத் தெரியும் அவர்கள் இந்தி படித்திருந்தால் இருந்த இடம் விட்டு வேறு எங்கும் சென்றிருக்க மாட்டார்கள் என்று. எனினும் பொய்யுரை புகல்கின்றனர். இத்தகைய பொய்யுரைகளை ஊடகங்கள் மூலம் விளம்பரப்படுத்துகின்றனர்.

தேசிய மொழிகள் பல பேசப்படும் நம்நாட்டில் புதிய கல்விக் கொள்கையால் அவை யாவும் அழிவுப்பாதைக்குத் தள்ளப்படுகின்றன. அம்மொழிகள் பேசுநர் நான்காம்தரக் குடிமக்களாக மாற்றப்பட்டு இருண்ட திசைக்குத் திருப்பப்படுகின்றனர். ஆனால், இது குறித்து ஆழமாகவும் விரிவாகவும் மக்களிடையே கொண்டு செல்வோர் யாருமிலரே!

தொலைநோக்கு உணர்வுடன் செயல்பட்டு இந்தித் திணிப்பை விரட்டிய இலக்குவனார் போல் இன்றைய இந்தி, சமசுகிருதத் திணிப்புகளை விரட்ட இன்னோர் இலக்குவனார் வருவாரா?

– இலக்குவனார் திருவள்ளுவன்

மின்னம்பலம்

வியாழன், 3.09. 2020