Saturday, September 30, 2023

உ.வே.சா.வின் என் சரித்திரம் 55 : தளிரால் கிடைத்த தயை

 




(உ.வே.சா.வின் என் சரித்திரம் 54 : அத்தியாயம் 29. தந்தையார் விடைபெற்றுச் செல்லுதல் 2/2 – தொடர்ச்சி)

என் சரித்திரம்
அத்தியாயம் 30. தளிரால் கிடைத்த தயை

சவேரிநாத பிள்ளையிடம் நைடதம் பாடங்கேட்டு வரும்போது இடையிடையே நான் அவரைக் கேள்விகேட்பதை என் ஆசிரியர் சில சமயம் கவனிப்பதுண்டு. என் கேள்விக்கு விடை சொல்ல முடியாமல் அவர் சும்மா இருக்கும்போது பிள்ளையவர்கள், “என்ன சவேரிநாது, இந்த விசயங்களை எல்லாம் நீ தெரிந்துகொள்ள வேண்டாமா? அவர் தாமே படித்து விசயத்தைத் தெரிந்துகொண்டிருக்கிறாரே” என்று சொல்லுவார். அப்போது எனக்கு ஒரு திருப்தி உண்டாகும். என் இயல்பைப்பற்றிப் பாராட்டுவதனால் உண்டான திருப்தி அன்று; எனக்குக் கற்பிக்கும் தகுதி சவேரிநாத பிள்ளையிடம் இல்லையென்பதை அவர் தெரிந்துகொண்டாரே என்ற எண்ணத்தால் உண்டான திருப்தியே அது.

இளமை முறுக்கு

பிள்ளையவர்கள் அருகில் இருக்கும் சமயங்களில் நான் அடிக்கடி கேள்விகள் கேட்பேன். எப்படியாவது பிள்ளையவர்களே நேரில் எனக்குப் பாடம் சொல்லித்தர வேண்டும் என்பது என் நோக்கம். நான் இவ்வாறு கேள்வி கேட்பதனால் சவேரிநாத பிள்ளைக்கு ஒரு சிறிதும் கோபம் உண்டாகவில்லை. வேறொருவராக இருந்தால் என்மேல் பிள்ளையவர்களுக்கு வெறுப்பு உண்டாகும்படியும் செய்திருப்பார். எனது ஆசையும் இளமை முறுக்கும் சேர்ந்துகொண்டன; சவேரிநாத பிள்ளையின் நல்லியல்பு இணங்கி நின்றது. நான் அவரைக் கேள்வி கேட்பது குறைவென்று அவர் நினைக்கவே இல்லை. என்னிடம் அன்பாகவே நடந்து கொள்வார். இனிமையாகப் பேசுவார்; பிள்ளையவர்கள் பெருமையையும் அவர்களிடம் தாம் வந்த காலம் முதல் நிகழ்ந்த பல செய்திகளையும் எடுத்துச் சொல்வார்.

நைடத பாடம் நடந்து வந்தது. பிள்ளையவர்களிடம் பாடம் கேளாமையால் அவரை நேரே கண்டு பேசிப் பழகுவதற்குரிய சமயம் வாய்க்கவில்லை. அவரிடமே பாடம் கேட்க வேண்டுமென்ற என் விருப்பத்தைத் தெரிவிப்பதற்கும் பயந்தேன்.

தோட்டம் வளர்த்தல்

பிள்ளையவர்கள் இருந்த வீடு அவர் தம் சொந்தத்தில் விலைகொடுத்து வாங்கியது. அவ்வீட்டின் பின்புறத்தில் விசாலமான தோட்டமும் அதன்பின் ஒரு குளமும் உண்டு. அவர் இயற்கைத் தோற்றங்களிலே ஈடுபட்டவர். கவிஞராகிய அவர் பச்சைப் பசும்புல் வெளிகளிலும் பூம்பொழில்களிலும் மரமடர்ந்த காடுகளிலும் ஆற்றோரங்களிலும் இத்தகைய பிற இடங்களிலும் போக நேர்ந்தால் அப்படியே அங்குள்ள காட்சிகளைக் கண்டு இன்புற்று நின்றுவிடுவார். தாம் வாங்கிய புதிய வீட்டின் தோட்டத்தில் மரங்களையும் செடி, கொடிகளையும் வைத்து வளர்த்து வரவேண்டுமென்பது அவர் எண்ணம். சிவபூசை செய்வதில் நெடுநேரம் ஈடுபடுபவராகிய அவர் தோட்டத்தில் நிறையப் பூச்செடிகளை வைத்து வளர்க்க வேண்டுமென்ற ஆசையுடையவராக இருந்தார். நாரத்தை, மா, முதலிய மரங்களின் பெரிய செடிகளை வேரோடு மண் குலையாமல் தோண்டி எடுத்து அம்மண்ணின் மேல் வைக்கோற்புரி சுற்றி வருவித்து ஆழ்ந்த குழிகளில் நட்டு வளர்ப்பது அப்பக்கங்களில் உள்ள வழக்கம். என் ஆசிரியரும் அவ்வாறு சில செடிகளை வருவித்துத் தோட்டத்தில் வைத்திருந்தார். நான் அவரிடம் பாடம் கேட்க வந்தபோது இந்த ஏற்பாடு நடந்து வந்தது.

தளிர் ஆராய்ச்சி

ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் என் ஆசிரியர் தோட்டத்துக்குப் போய்ச் செடிகளைப் பார்வையிடுவார். அவற்றில் ஏதாவது பட்டுப்போய் விட்டதோ என்று பார்ப்பார்; எந்தச் செடியாவது தளிர்த்திருக்கிறதாவென்று மிக்க கவனத்தோடு நோக்குவார். ஏதாவது தளிர்க்காமல் பட்டுப்போய் விட்டதாகத் தெரிந்தால் அவர் மனம் பெரிய தனத்தை இழந்ததுபோல வருத்தமடையும். ஒரு தளிரை எதிலாவது கண்டுவிட்டால் அவருக்கு உண்டாகும் சந்தோசத்திற்கு அளவே இராது. வேலைக்காரர்களிடம் அடிக்கடி அவற்றைச் சாக்கிரதையாகப் பாதுகாக்கும்படி சொல்லுவார். மாலைவேளைகளில் தம்முடைய கையாலேயே சில செடிகளுக்குச் சலம் விடுவார்.

அவர் இவ்வாறு காலையும் மாலையும் தவறாமல் செய்து வருவதை நான் கவனித்தேன். அவருக்கு அந்தச் செடிகளிடம் இருந்த அன்பையும் உணர்ந்தேன். “இவருடைய அன்பைப் பெறுவதற்கு இச்செடிகளைத் துணையாகக் கொள்வோம்” என்று எண்ணினேன்.

மறுநாள் விடியற்காலையில் எழுந்தேன்; பல்லைக்கூடத் தேய்க்கவில்லை. நேரே தோட்டத்திற்குச் சென்றேன். அங்குள்ள செடிகளில் ஒவ்வொன்றையும் கவனித்தேன். சில செடிகளில் புதிய தளிர்கள் உண்டாகியிருந்தன. அவற்றை நன்றாகக் கவனித்து வைத்துக்கொண்டேன். சிறிது நேரத்தில் ஆசிரியர் அங்கே வந்தனர். அவர் ஒரு மரத்தின் அருகே சென்று மிக்க ஆவலோடு தளிர்கள் எங்கெங்கே உள்ளனவென்று ஆராயத் தொடங்கினார். நான் மெல்ல அருகில் சென்றேன். முன்பே அத்தளிர்களைக் கவனித்து வைத்தவனாதலின், “இக்கிளையில் இதோ தளிர் இருக்கிறது” என்றேன்.

அவர் நான் அங்கே எதற்காக வந்தேனென்று யோசிக்கவுமில்லை; என்னைக் கேட்கவுமில்லை. “எங்கே?” என்று ஆவலுடன் நான் காட்டின இடத்தைக் கவனித்தார். அங்கே தளிர் இருந்தது கண்டு சந்தோசமடைந்தார். பக்கத்தில் ஒரு செடி பட்டுப் போய்விட்டது என்று அவர் எண்ணியிருந்தார். அச்செடியில் ஓரிடத்தில் ஒரு தளிர் மெல்லத் தன் சிறுதலையை நீட்டியிருந்தது. “இதைப் பார்த்தால் பிள்ளையவர்கள் மிக்க சந்தோசமடைவார்கள்” என்று நான் எண்ணினேன். ஆதலின், “இதோ, இச்செடி கூடத் தளிர்த்திருக்கிறது” என்று நான் சொன்னதுதான் தாமதம்; “என்ன அதுவா? அது பட்டுப்போய்விட்டதென்றல்லவா எண்ணினேன்! தளிர்த்திருக்கிறதா? எங்கே, பார்க்கலாம்” என்று சொல்லிக்கொண்டே விரைவாக அதனருகில் வந்தார். அவர் பார்வையில் தளிர் காணப்படவில்லை. நான் அதைக் காட்டினேன். அந்த மரத்தில் தளிர்த்திருந்த அந்த ஒரு சிறிய தளிர் அவர் முகத்தில் மலர்ச்சியை உண்டாக்கியது; அம்மலர்ச்சியைக்கண்டு என் உள்ளம் பூரித்தது. “நம்முடைய முயற்சி பலிக்கும் சமயம் விரைவில் நேரும்” என்ற நம்பிக்கையும் உண்டாயிற்று. அத்தளிர்களை வாழ்த்தினேன்.

நான் அதோடு விடவில்லை. பின்னும் நான் ஆராய்ந்து கவனித்து வைத்திருந்த வேறு தளிர்களையும் ஆசிரியருக்குக் காட்டினேன். காட்டக் காட்ட அவர் பார்த்துப் பார்த்துச் சந்தோசமடைந்தார்.

அது முதல் தினந்தோறும் காலையில் தளிர் ஆராய்ச்சியை நான் நடத்திக்கொண்டே வந்தேன். சில நாட்களில் மாலையிலே பார்த்து வைத்துக்கொள்வேன். பிள்ளையவர்களும் அவற்றைக் கண்டு திருப்தியடைந்து வந்தனர்.

அன்பு தளிர்த்தல்

ஒரு நாள் அவர் எல்லாச் செடிகளையும் பார்த்துவிட்டுத் திரும்பியபோது என்னை நோக்கி, “இந்தச் செடிகளைப் பார்த்து வைக்கும்படி யாராவது உம்மிடம் சொன்னார்களா?” என்று கேட்டார்.

ஒருவரும் சொல்லவில்லை. நானாகவே கவனித்து வைத்தேன்” என்றேன் நான்.

“எதற்காக இப்படி கவனித்து வருகிறீர்?”

“[1]ஐயா அவர்கள் தினந்தோறும் கவனித்து வருவது தெரிந்தது; நான் முன்னதாகவே கவனித்துச் சொன்னால் ஐயா அவர்களுக்குச் சிரமம் குறையுமென்று எண்ணி இப்படிச் செய்து வருகிறேன்” என்றேன்.

சாதாரண நிலையிலிருந்தால் இவ்வளவு தைரியமாகப் பேசியிருக்க மாட்டேன். சில நாட்களாகத் தளிரை வியாசமாகக்கொண்டு அவரோடு நெருங்கிப் பழக நேர்ந்தமையால் தைரியம் எனக்கு உண்டாயிற்று. நாளடைவில் அவரது அன்பைப் பூரணமாகப் பெறலாமென்ற துணிவும் ஏற்பட்டது.

“நல்லதுதான். இப்படியே தினந்தோறும் பார்த்து வந்தால் அனுகூலமாக இருக்கும்” என்று என் ஆசிரியர் கூறினார். நானாகத் தொடங்கிய முயற்சிக்கு அவருடைய அனுமதியும் கிடைத்துவிட்ட தென்றால் என் ஊக்கத்தைக் கேட்கவா வேண்டும்?

தினந்தோறும் காலையில் பிள்ளையவர்களை இவ்வாறு சந்திக்கும்போது அவரோடு பேசுவது எனக்கு முதல் இலாபமாக இருந்தது. அவர் வர வர என் விசயத்தில் ஆதரவு காட்டலானார். என் படிப்பு விசயமாகவும் பேசுவது உண்டு. “இப்போது பாடம் நடக்கிறதா? எது வரையில் நடந்திருக்கிறது? நேற்று எவ்வளவு செய்யுட்கள் நடைபெற்றன?” என்ற கேள்விகளைக் கேட்பார். நான் விடை கூறுவேன்.

நைடதம் முடிந்தது

எங்களுடைய சம்பாசணை வர வர எங்களிருவருக்கும் இடையே அன்பை வளர்த்து வந்தது. நான் ஒரு நாள், பிள்ளையவர்களிடமே பாடம் கேட்க வேண்டுமென்ற ஆவல் இருப்பதை மெல்ல நேரிற் புலப்படுத்தினேன். “நைடதம் முழுவதும் பாடம் கேட்டாகட்டும். பிறகு ஏதாவது நூலைப் பாடம் கேட்கத் தொடங்கலாம்” என்று அவர் கூறியபோதுதான் என் மனத்திலிருந்த பெரிய குறை தீர்ந்தது. “நைடதம் எப்போது முடியும்?” என்று எதிர்பார்த்திருந்தேன். சவேரிநாத பிள்ளை சில செய்யுட்களே பாடம் சொன்னாலும் நான் வற்புறுத்தி மேலும் சில செய்யுட்களைச் சொல்லும்படிக் கேட்பேன். எப்படியாவது அந்நூலை விரைவில் பூர்த்தி செய்துவிட்டுப் பிள்ளையவர்களிடம் பாடம் கேட்க வேண்டுமென்பதில் எனக்கு அவ்வளவு வேகம் இருந்தது.

நைடதம் எத்தனை காலந்தான் நடக்கும்? ஒரு நாள் அது முடிவு பெறவேண்டியதுதானே? சில நாட்களில் அது முடிந்துவிட்டது. அது நிறைவேறிய அன்றே நான் பிள்ளையவர்களிடம் சென்று, “நைடதம் பாடம் கேட்டு முடிந்தது” என்று சொன்னேன்.

“சரி, நாளைக்கு ஏதாவது பிரபந்தம் பாடம் சொல்லுகிறேன்” என்று அவர் கூறினார்.

முதற் பாடம்

மறுநாட் காலையில் என் ஆசிரியர் தாமே என்னை அழைத்து, “உமக்குத் திருக்குடந்தைத் திரிபந்தாதியைப் பாடம் சொல்லலாமென்று நினைக்கிறேன்” என்று சொல்லி அந்நூல் எழுதியிருந்த ஏட்டுச் சுவடியை வருவித்துக் கொடுத்தார். நான் பாடம் கேட்கத் தொடங்கினேன்.

திருக்குடந்தைத் திரிபந்தாதி என்பது பிள்ளையவர்கள் இயற்றியது. கும்பகோணத்தில் எழுந்தருளியுள்ள சிரீகும்பேசுவரர் விசயமானது. திரிபந்தாதியாதலால் சற்றுக் கடினமாகவே இருக்கும்.

அந்நூலில் நாற்பது பாடல்களுக்கு மேல் அன்று பாடம் கேட்டேன். திரிபு யமக அந்தாதிகளில் ஒரு நாளைக்கு ஐந்து, ஆறு பாடல்களுக்கு மேல் பாடம் சொல்பவரை அதுவரையில் நான் பார்த்ததில்லை. பிள்ளையவர்கள் பாடம் சொல்லுகையில் விசயங்களை விரிவாக உபமான உபமேயங்களோடு சொல்லுவதில்லை. எந்த இடத்தில் விளக்க வேண்டியது அவசியமோ அதை மாத்திரம் விளக்குவார். அவசியமான விசேசச் செய்திகளையும் இலக்கண விசயங்களையும் சொல்லுவார். மாணாக்கர்களுக்கு இன்ன விசயம் தெரியாதென்பதை அவர் எவ்வாறோ தெரிந்துகொள்வார். நான் படித்து வரும்போது எனக்கு விளங்காத இடத்தை நான் கேட்பதற்கு முன்னரே அவர் விளக்குவார்; எனக்குத் தெரிந்ததை அவர் விளக்க மாட்டார். “நமக்கு இது தெரியாதென்பதை இவர் எப்படி இவ்வளவு கணக்காகத் தெரிந்து கொண்டார்” என்ற ஆச்சரியம் எனக்கு உண்டாகும். தம் வாழ்வு முழுவதும் மாணாக்கர்களுக்குப் பாடம் சொல்லிச் சொல்லிப் பழகியிருந்த அவர் ஒவ்வொருவருடைய அறிவையும் விரைவில் அளந்தறிந்து அவர்களுக்கு ஏற்ப பாடம் சொல்வதில் இணையற்றவராக விளங்கினார்.

நிதிக்குவியல்

அவர் பாடம் சொல்வது பிரசங்கம் செய்வதுபோல இராது. அரியிலூர்ச் சடகோபையங்கார் முதலிய சிலர் ஒரு செய்யுளுக்கு மிகவும் விரிவாகப் பொருள் சொல்லிக் கேட்போர் உள்ளத்தைக் குளிர்விப்பார்கள். பிள்ளையவர்கள் பாடம் சொல்லும் முறையே வேறு. அவர்களெல்லாம் தம்மிடம் ஒரு குறிப்பிட்ட அளவு செல்வத்தைப் பாதுகாத்து வைத்திருப்பவர்களைப்போல் இருந்தார்கள். யாருக்கேனும் பணம் கொடுக்கும்போது ஒவ்வொரு காசையும் தனித்தனியே எடுத்துத் தட்டிக்காட்டிக் கையிலே கொடுப்பார்கள். பிள்ளையவர்களோ நிதிக்குவியல்களை வாரி வாரி வழங்குபவரைப்போல இருந்தார். அங்கே காசு இல்லை. எல்லாம் தங்க நாணயமே. அதுவும் குவியல் குவியலாக வாரி வாரி விடவேண்டியதுதான். வாரிக்கொள்பவர்களுடைய அதிருட்டம்போல இலாபம் கிடைக்கும். எவ்வளவுக்கெவ்வளவு ஆசை அதிகமாக இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு வாரிச் சேமித்துக்கொள்ளலாம். பஞ்சமென்பது அங்கே இல்லை.

பசிக்கு ஏற்ற உணவு

எனக்கிருந்த தமிழ்ப்பசி மிக அதிகம். மற்ற இடங்களில் நான் பாடம் கேட்டபோது அவர்கள் கற்பித்த பாடம் யானைப் பசிக்குச் சோளப்பொரி போல இருந்தது. பிள்ளையவர்களிடம் வந்தேன்; என்ன ஆச்சரியம்! எனக்குப் பெரிய விருந்து, தமிழ் விருந்து கிடைத்தது. என் பசிக்கு ஏற்ற உணவு; சில சமயங்களில் அதற்கு மிஞ்சிக்கூடக் கிடைக்கும். அமிர்த கவிராயரிடம் திருவரங்கத்தந்தாதியில் ஒரு செய்யுளைக் கேட்பதற்குள் அவர் எவ்வளவோ பாடுபடுத்திவிட்டாரே! அதற்குமேல் சொல்லுவதற்கு மனம் வராமல் அவர் ஓடிவிட்டாரே! அந்த அனுபவத்தோடு இங்கே பெற்ற இன்பத்தை ஒப்பிட்டுப் பார்த்தேன். “அடேயப்பா! என்ன வித்தியாசம்! தெரியாமலா அவ்வளவு பேரும் ‘பிள்ளையவர்களிடம் போனால்தான் உன் குறை தீரும்’ என்று சொன்னார்கள்?” என்று எண்ணினேன். “இனி நமக்குத் தமிழ்ப்பஞ்சம் இல்லை” என்ற முடிவிற்கு வந்தேன்.

அடிக்குறிப்பு

  1. பிள்ளையவர்களை ஐயா அவர்களென்றே வழங்குவது வழக்கம் நேரில் பேசும்போது அப்படியே கூறுவோம்.

(தொடரும்)
என் சரித்திரம், உ.வே.சா
.


Sunday, September 24, 2023

ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 16 : கோயில் தருமகருத்தாவாக வேலைபார்த்தது

 




(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 15 : 55 வயதுக்கு மேற்பட்ட சரித்திரம் – தொடர்ச்சி)

9. நான் கோயில் தருமகருத்தாவாக வேலைபார்த்தது

  • தெய்வ பக்தி என்பது என்னுடன் பிறந்திருக்க வேண்டு மென்று நினைக்கிறேன். என் தாய் தந்தையர் எனக்குச் சம்பந்தம் என்று பெயரிட்ட காரணத்தை முன்பே எழுதியிருக்கிறேன். தினம் பூசை செய்யும் அவர்கள் என்னைச் சிறு வயது முதல் பக்தி மார்க்கத்தில் செலுத்தினார்கள் என்பதற்கு சந்தேகமில்லை. நான் சுமார் 2 வயது குழந்தையாய் இருந்தபோது என் தகப்பனார் சிவபூசை செய்த பூக்களை யெடுத்து அவரது பாதக்குரடு ஒன்றை எடுத்து அதன் பேரில் என் தகப்பனார் செய்வதுபோல பூசை செய்ததாக என் தாயார் எனக்குப் பிறகு கூறியிருக்கிறார்கள். இது எனக்கு ஞாபகமில்லை. ஆயினும் இது நேர்ந்திருக்க வேண்டுமென்று நம்புகிறேன். என் தாயார் பொய் சொல்லவேண்டிய காரண மில்லை.

எனக்கு ஞாபக சக்தி உ.தித்த காலமுதல், சாதாரணமாக என் விளையாட்டெல்லாம் பெரும்பாலும் பிள்ளையார், மீனாட்சி அம்மன், வெங்கடேசப் பெருமாள் இவர்களுடைய செப்பு அல்லது மர விக்குரகங்களை வைத்து அவற்றுக்கு அலங்காரம் செய்து, உற்சவம் செய்வதேயாம். சனிக்கிழமை வந்தால், முன்னாள் வெள்ளிக்கிழமை என் தாயார் விசேட பூசை செய்த பூக்களை வைத்துக்கொண்டு நான் என் நேர் மூத்தவராகிய ஆறுமுகத்துடன் சாமி தூக்கி விளையாடுவோம்.

அன்றியும் என் தகப்பனார் சென்னையில் ஏகாம்பரேசுவரர் கோயிலுக்கும் பெரிய காஞ்சீபுரம் கோயிலுக்கும் தரும கருத்தாவாயிருந்தபடியால் அக்கோயில்களின் உற்சவங்களுக்கு என்னையும் என் தமையனையும் அடிக்கடி அழைத்துக் கொண்டு போன படியால் கோயில்களின் உற்சவங்களைப் பார்ப்பதில் எனக்கு மிகுந்த சந்தோசம் ஏற்பட்டது.

மேலும் எங்கள் கல்விப் பயிற்சிக்கு இன்றியமையாததாக எண்ணி எங்கள் தகப்பனார் எங்கள் பள்ளிக்கூடத்து, கோடை விடுமுறை தோறும் எங்களை வெளியூர்களுக்கு அனுப்புவார். அச்சமயங்களில் ஆங்காங்குள்ள கோயில்களைப் பார்ப்பதே எனக்குப் பெரிய ஆனந்தமாயிருந்தது. எனது 10 அல்லது 11 வயதில் நான் பார்த்த காஞ்சீபுரம், தஞ்சாவூர், மதுரை முதலிய இடங்களிலுள்ள பெரிய கோயில்களின் அழகிய, உருவங்கள் அப்படியே என் மனத்தில் பதிந்திருக்கின்றன. அக் கோயில்களையெல்லாம் ஒரு முறை பிறகு நான் பார்த்திருக்கிறேன் ஆயினும் அவற்றை முதன் முதல் நான் பார்த்த போது எனக்குண்டான சந்தோசம் பிறகு கிடைக்கவில்லை. என்னுடைய 21-ஆவது வயதில் (எனக்கு ஞாபகமிருக்கிறபடி) என் தகப்பனார் எனக்குச் சிவதீட்சை செய்துவைத்தார் எங்கள் குருக்களாகிய திருவாலங்காடு குருக்களைக் கொண்டு.

என் தமையனார் ப. ஐயாசாமி முதலியார் சில வருடங்கள் மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் தருமகருத்தாவாக நியமிக்கப்பட்டு வேலை பார்த்து வந்தார். அவர் 1900-வது வருடம் மாவட்ட உரிமையியல்(முன்சீப்பாக) நியமிக்கப்பட்ட போது நான் அக்கோயில் தருமகருத்தாவாக நியமிக்கப்பட்டேன். அது முதல் 1934-ஆம் வருடம்வரையில் அவ்வேலை பார்த்துவந்தேன். இந்த 24 வருடங்களும் என்னுடன் வேலை பார்த்து வந்த தருமகருத்தாக்களுடனாவது மேற்பார்வை(ஓவர்சியர்)களுடனாவது கோயில் சிப்பந்திகளுடனாவது சச்சரவு வழக்கின்றி நடந்தேறிய தென்று சந்தோசத்துடன் இங்கு எழுதுகிறேன்.

என் காலத்தில் நேர்ந்த சில சீர்த்திருத்தங்களைப்பற்றி எழுத விரும்புகிறேன். அதற்கு முன்பாக உற்சவப் பத்திரிகையில் கண்டபடி, மணிப்பிரகாரம் உற்சவங்கள் நடந்தேறுவதில்லை. உற்சவங்களையெல்லாம் இலக்கினப்படியும் பத்திரிகைகளில் கண்ட மணிப்பிரகாரம் நடத்தும்படி ஏற்பாடு செய்தேன், தருமகருத்தாக்கள் கோயில் பணத்தை நேராக வாங்கவும் கூடாது, நேராகச் செலவழிக்கவும் கூடாது என்று ஏற்பாடு செய்தேன். எல்லா தேவத்தான வரும்படியும் முன்பு பாங்கில் கட்டப்பட்டுச் செலவெல்லாம் காசோலை மூலமாகச் செய்யப்பட வேண்டுமென்று ஏற்படுத்தினேன். இவ்விரண்டு ஏற்பாடுகளையும் இங்கு எழுதியது. ஏதோ தற்புகழ்ச்சியாகவல்ல. இவற்றை மற்ற கோயில் தருமகருத்தாக்கள் பின்பற்றி நடந்தால் தேவத்தானங்களைப்பற்றி மற்றவர்கள் குறைகூற அதிக இடமிராதென்று தெரிவித்துக்கொள்வதற்கே எழுதுகிறேன்.

என் காலத்தில் கோயிலுக்குக் கோபுரமில்லாக் குறை நிவர்த்தியாயது. அதை முடித்துவைத்த பெருமை திருவல்லிக்கேணியிலிருந்த கோபுரம் செட்டியார் என்று பெயர்பெற்ற இரண்டு சகோதர்களுக்கு உரித்தாம். (அவர்கள் பெயர் எனக்கு ஞாபகமில்லை.) அவர்களுக்கு என்னால் இயன்ற அளவு உதவி செய்தேன். அன்றியும் என் காலத்தில் திருமயிலை கோயில் குளமானது கருங்கல்லால் அமைக்கப்பட்டது. அதற்கு முன்பு இரண்டு சிறு படித்துறைகள் தவிர மற்ற பாகமெல்லாம் துருக்கல்லாய் இருந்தது. இதைப்பற்றிய சில விவகாரத்தை எழுத விரும்புகிறேன்.

இப்பெரிய வேலையை ஆரம்பித்தபோது கோயிலில் இதற்காக ஒரு சன்னியாசி சேமித்து வைத்த 5000 உரூபாய் தானிருந்தது. இதை முடிக்க வேண்டுமென்று நான் ஆரம்பித்த போது மைலாப்பூர்வாசிகளில் பலர் இப்பெரிய வேலைக்கு குறைந்தபட்சம் ஓர் இலட்சமாவது பிடிக்குமே, இவரால் என்ன முடியப்போகிறது என்று கூறினார்கள். “சுவாமி யிருக்கிறார்” என்று அவர் மீது பாரத்தைச் சுமத்தி இவ்வேலையை ஆரம்பித்தேன். இதற்காகப் பணம் சேர்ப்பதற்குப் பல உபாயங்கள் தேடினேன். பல செல்வவந்தர்களிடம் யாசித்தேன். தம்பிடி காலணா உண்டியில் மாத்திரம் சுமார் 8000 உரூபாய்கள் சேர்த்தேன். எதிலும் போதுமான வரும்படி வரவில்லை. ஒருநாள் பரமசிவத்தின் கருணையினால் எனக்கு ஒரு யோசனை தோன்றியது. அதன் படி படியின் செலவின் பொருட்டு 108 உரூபாய் கொடுப்பவர்களுக்கு அவர்கள் பெயரால் ஒரு கல்வெட்டு படித்துறையில் போடப்படும் என்று பிரசுரம் செய்தேன். உடனே விரைவில் குளத்தை முற்றிலும் கருங்கல்லாய் ஆக்கவேண்டிய பணம் வந்து சேர்ந்துவிட்டது!

ஒருமுறை ஆளுநர் ஒருவர் அமெரிக்காவிலிருந்து சில துரைசானிகளும் துரைகளும் வந்திருப்பதாகவும் அவர்கள் மயிலை கபாலீசுவரர் கோயிலைப் பார்க்க விரும்புவதாகவும் சொல்லி அனுப்பினார். அதற்கு நான் அவர்கள் கோயிலுக்குள் கொடிமரம் வரையில் பார்க்கலாமென்றும் அன்றியும் கோயிலுக்குள் நுழையும் முன் அவர்கள் தங்கள் காலணிகளைக் களைந்துவிட்டுத்தான் வரக்கூடும் என்று பதில் சொல்லி அனுப்பினேன், என்னிடம் கடிதம் கொண்டு வந்த ஐரோப்பியர் இரண்டாவது நிபந்தனைக்கு அவர்கள் உடன்படுவது கடினம் என்று தெரிவித்தார். அதற்கு நான் அப்படி செய்யா விட்டால் அவர்கள் கோயிலுக்குள் வரக் கூடாது என்று மறுத்தேன். பிறகு அமெரிக்கச் சீமான்களும் சீமாட்டிகளும் தங்கள் பாதரட்சைகளைக் களைந்துவிட்டே கோயிலுக்குள் வந்தனர்.

இன்னொருமுறை பிரம்மோற்சவத்தின்போது ஐந்தாம் நாள் (இ)ரிசபவாகன உற்சவத்தைப் பார்க்க மாடவீதியில் ஒரு வீட்டின் மெத்தையின் பேரில் ஆளுநரும், அவரது மனைவியும் சில சிநேகிதர்களுடன் வந்திருந்தனர். சுவாமி அவ்வீட்டிற்கு எதிரில் வந்தபோது சுவாமியை வாகனத்துடன் அவர்கள் இருந்தபுறம் திருப்பிக் காட்டவேண்டும் என்று அந்த வீட்டின் சொந்தக்காரர் கேட்டார். அப்படி செய்யமுடியாது அவர்கள் சுவாமியை நேரில் தரிசனம் செய்ய வேண்டுமென்றால் கீழே இறங்கிவந்து நேராகத் தரிசனம் செய்யட்டும் என்று பதில் உரைத்தேன்.

இவ்விரண்டு விசயங்களையும் நான் எழுதியது நான் இவ்வாறு செய்துவிட்டேன் என்று தற்பெருைமயாகச் சொல்லுவதற் கல்ல. நாம் நம்முடைய மதத்தையும் ஒழுக்கத்தையும் நாமே தாழ்த்திக்கொள்ளலாகாது என்று எனது நண்பர்களுக்குத் தெரிவிக்கும் பொருட்டே.

மற்றொருதரம் சென்னை நகராட்சித் தலைவர் (Municipal chairman) ஆக இருந்த ஓர் ஆங்கிலேயர் இரண்டு குதிரைகள் பூட்டிய வண்டியில் பிராடிசு சாலை வழியாக அடையாறு மன்றத்திற்கு(கிளப்புக்கு)ப் போய்கொண்டிருந்தபொழுது எதிரில் பஞ்ச மூர்த்திகள் வரப் பெரும்கும்பலாய் இருந்தபடியால் தான் போவதற்கு இடைஞ்சலாய் இருக்கிறதென்று சொல்லி, சுவாமிகளை ஒருபுறம் ஒதுக்கும்படி கேட்டனுப்பினார். அதற்கு நான் மனிதனுக்காகத் தெய்வத்தை ஒதுங்கச்செய்வது ஒழுங்கல்ல, தெய்வத்திற்காக மனிதன் தான் ஒதுங்கிப் போகவேண்டும் என்று சொல்லி அனுப்பினேன். அதன்பேரில் இந்த அதனப்பிரசங்கி பதில் யார் சொன்னது என்று விசாரிக்க, அருகிலிருந்த காவல் ஆய்வாளர் என் பெயரைச் சொல்லி அவர் பிடிவாதக்காரர் என்று சொன்னாராம். அதன் மேல் அந்த ஐரோப்பியர் தன் வண்டியைப் பக்கத்து வீதி வழியாக சுற்றிக்கொண்டு சென்றனராம். நம்மிடத்தில் தவறில்லாத போது நாம் ஒருவருக்கும் பயப்படவேண்டியதில்லை என்பது என் அபிப்பிராயம்.

1924-ஆம் வருடம் எனக்குச் சிறிய நீதிமன்ற நீதிபதி வேலை யானபோது ‘உன் நீதிமன்றத்திலேயே ஏதாவது கோயில் விவகாரங்கள் தீர்ப்புக்கு வரலாம். ஆகவே நீ கோயில் தருமகத்தா வேலையை விட்டு விலகிக்கொள்வது நியாயம்’ என்று சர் சி. பி. இராமசுவாமி ஐயர் அவர்கள் சொன்னதின்பேரில் அரை மனத்துடன் மயிலை கபாலீசுவரர் கோயில் தருமகருத்தா வேலையினுன்றும் விலகினேன்

(தொடரும்)

பம்மல் சம்பந்தம்

என் சுயசரிதை

Saturday, September 23, 2023

உ.வே.சா.வின் என் சரித்திரம் 54 : அத்தியாயம் 29. தந்தையார் விடைபெற்றுச் செல்லுதல் 2/2

 




(உ.வே.சா.வின் என் சரித்திரம் 53 : அத்தியாயம் 29. தந்தையார் விடைபெற்றுச் செல்லுதல் 1/2 – தொடர்ச்சி)

அத்தியாயம் 29. தந்தையார் விடைபெற்றுச் செல்லுதல் 2/2

அவ்வூரிலும் அயலூரிலும் இருந்த சங்கீத வித்துவான்கள் பாரதியாரை அடிக்கடி பார்க்க வருவார்கள். மாயூரத்தில் சாத்தனூர்ப் பஞ்சுவையர், கோட்டு வாத்தியம் கிருட்டிணையர், திருத்துறைப்பூண்டி பாகவதர், பெரிய இராமசாமி ஐயர் முதலிய சங்கீத வித்துவான்கள் இருந்தனர். வேதநாயகம் பிள்ளை முன்சீபாக இருந்தமையால் அவரிடம் உத்தியோகம் பார்த்த குமாசுத்தாக்களும் வக்கீல்களும் அவருடைய பிரியத்தைப் பெறும்பொருட்டு அவர் இயற்றிய கீர்த்தனங்களைப் பாடுவார்கள். அதற்காகச் சங்கீதம் கற்றுக்கொண்டார்கள். இவர்களெல்லாம் பாரதியாரிடமும் வந்து செல்வார்கள்.

உணவுக்கு ஏற்பாடு

என் தந்தையார் மாயூரத்தில் சில நாட்கள் தங்கியிருந்தனர். அக்காலத்தில் அந்நகரில் தமக்குத் தெரிந்தவர்களிடமெல்லாம் சென்று என்னைக் கவனித்துக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். அவர் அங்கே இருந்த வரையில் சிறிய தகப்பனார் வேட்டகத்தில் ஆகாரம் செய்து வந்தேன். என் சிறிய தாயாரும் அப்போது அங்கே வந்திருந்தார். எப்போதும் அந்த வீட்டில் உணவுகொள்வது உசிதமாக இராது என்று எண்ணி என் தந்தையார் வேறு ஏற்பாடு செய்யத் தொடங்கினார்.

அக்காலத்தில் மகாதானத் தெருவில் ஒரு வீட்டில் அறுபது பிராயம் சென்ற விதவை ஒருத்தி அவ்வூர் உத்தியோகசுத்தர்கள் சிலருக்கும் பள்ளிக்கூட மாணவர் சிலருக்கும் சமைத்துப்போட்டு அதனால் கிடைக்கும் வருவாயைக்கொண்டு சீவனம் செய்து வந்தாள். பள்ளிக்கூட மாணவர்களுக்குக் காலையில் பழையதும் பகலிலும் இரவிலும் ஆரோக்கியமான உணவும் அளிக்கப்படும். இதற்காக அந்த அம்மாள் மாதம் ஐந்து உரூபாய்தான் பெற்று வந்தாள். என் சிறிய தாயாராகிய இலட்சுமி அம்மாள் அக்கிழவியிடம் சொல்லி எனக்குச் சாக்கிரதையாக உணவு அளிக்கும்படி ஏற்பாடு செய்தார்.

என் தந்தையார் எனக்கு வேண்டிய பணத்தை என்னிடம் அளித்தார். பிறகு அவர் மாயூரத்தைவிட்டுச் செல்ல எண்ணித் தம் நண்பர்களிடம் விடைபெற்றுக்கொண்டார். புறப்படும் தினத்துக்கு முதல் நாள் இரவு முழுவதும் எனக்குப் பலவிதமான போதனைகளைச் செய்தார். நான் இன்ன இன்னபடி நடந்துவர வேண்டுமென்றும், உடம்பைச் சாக்கிரதையாகக் கவனித்துக்கொள்ள வேண்டுமென்றும், அடிக்கடி எண்ணெய் தேய்த்துக் கொள்ளவேண்டுமென்றும் பல முறை சொன்னார்.

விடை பெற்றது

புறப்படும் தினத்தன்று காலையில் அவர் என்னுடன் பிள்ளையவர்களிடம் வந்தார்.

“நான் இன்று ஊருக்குப் போகலாமென்று எண்ணியிருக்கிறேன். விடைதரவேண்டும்” என்று தகப்பனார் சொன்னார்.

“ஏன்? இன்னும் சில தினங்கள் இருந்து மாயூரநாத சுவாமி தரிசனம் செய்துகொண்டு போகலாமே.”

“அயலூரில் அயலார் வீட்டில் எவ்வளவு காலம் இருப்பது? என்னுடைய பூசை முதலிய விசயத்திற்கு இவ்வூர் சௌகரியமாக இல்லை. தவிர, இங்கே எனக்கு வேறு வேலை ஒன்றும் இல்லை. வந்த காரியம் ஈசுவரக் கிருபையாலும், உங்களுடைய தயையினாலும் நிறைவேறியது. இவனை உங்களிடம் ஒப்பித்துவிட்டேன். இவன் இனிமேல் விருத்தியடைவான் என்ற தைரியம் எனக்கு உண்டாகிவிட்டது. நான் என்னுடைய காரியங்களை இனிமேல் கவனிக்க வேண்டாமா?”

“சரி; போய் வாருங்கள். ஞாபகம் இருக்கட்டும்.”

“இவனைப் பற்றி இனிமேல் ஒரு கவலையுமில்லை என்று தெளிவாகத் தெரிந்தாலும் காரணமில்லாத துன்பமொன்று மனத்தில் உண்டாகிறது. இவனை நான் பிரிந்து இருந்ததே இல்லை. இவனுடைய தாய்க்கு இவனை ஒருநாள் பிரிந்திருந்தாலும் சகிக்க முடியாத துயரம் ஏற்படும். இப்போது இவனைப் பிரிந்து செல்வதற்கு மனம் தயங்குகிறது. தனக்கு வேண்டிய காரியங்களைப் பிறர் உதவியின்றிக் கவனித்துக்கொள்ளும் வழக்கம் இவனுக்கு இல்லை. தாங்கள் இவனைச் சாக்கிரதையாகக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தானத்தில் இருந்து இவனைக் காப்பாற்றுவது தங்கள் கடமை.”

இப்படிச் சொல்லும்போது என் தகப்பனார் கண்களில் நீர் துளித்தது. அதுகாறும் அவர் அவ்வாறு என்னைப் பற்றி வருந்தியதை நான் பார்த்ததில்லை. அவர் உள்ளத்துக்குள் மறைந்து கிடந்த அன்பு முழுவதும் அப்போது வெளிப்பட்டது. அவர் கண்களில் நீரைக் கண்டு எனக்கும் மனம் கலங்கியது; கண்ணீர் துளித்தது; துக்கம் பொங்கி வந்தது.

அவரது அன்பை நன்கு உணர்ந்த என் ஆசிரியர் புன்னகை பூத்துக்கொண்டே, “நீங்கள் இவருடைய பாதுகாப்பைக் குறித்துச் சிறிதும் கவலைப்படவேண்டா. நான் சாக்கிரதையாகக் கவனித்துக்கொள்கிறேன். நீங்கள் தைரியமாக ஊருக்குப் போய்வாருங்கள். இவரைப் பார்க்க வேண்டுமென்று எப்போது விரும்புகிறீர்களோ அப்போது இவரை உங்களிடம் அனுப்புகிறேன். நீங்களும் அடிக்கடி இந்த ஊருக்கு வந்து பார்த்துவிட்டுப் போகவேண்டும்” என்று கூறி விடையளித்தார்.

என் தகப்பனார் ஊருக்குப் புறப்பட்டார். நான் சிறிது தூரம் உடன்சென்று வழியனுப்பிவிட்டு வந்தேன். அவர் சென்ற பிறகுதான் எனக்கு ஏதோ ஒரு புதிய துன்பம் வந்தது போன்ற தோற்றம் உண்டாயிற்று. நான் முன்பு அறியாத ஒன்றை, தாய் தந்தையரைப் பிரியும் துன்பத்தை, அப்போது உணர்ந்தேன்.

மனோதைரியமும் கட்டத்தைச் சகிக்கும் ஆற்றலுமுடைய என் தந்தையாரே என்னைப் பிரிந்திருக்க வருந்தினாரென்றால், என் அருமைத் தாயார் எவ்வளவு துடித்து வருந்துவார் என்பதை நினைத்தபோது என் உள்ளம் உருகியது. குன்னத்தில் இருந்த காலத்தில் நான்கு நாள் பிரிந்திருந்து திரும்பி வந்தபோது என்னை அவர் தழுவிக்கொண்டு புலம்பிய காட்சி என் அகத்தே தோற்றியது.

நான் தந்தையாரை அனுப்பிவிட்டு வந்தவுடன் பிள்ளையவர்கள் எனக்குப் பலவிதமான ஆறுதல்களைக் கூறினார்; என்னுடைய துன்பத்தை மாற்றுவதற்குரிய பல வார்த்தைகள் சொன்னார்.

“சில நாட்களில் திருவாவடுதுறைக்குப் போகும்படி நேரும். அங்கே சந்நிதானம் உம்மைப் பார்த்து சந்தோசமடையும். நீர் இசைப்பயிற்சி உடையவரென்று தெரிந்தால் உம்மிடம் தனியான அன்பு வைக்கும்” என்று சொல்லித் திருவாவடுதுறை ஆதீன விசயங்களையும் வேறு சுவையுள்ள சமாசாரங்களையும் கூறினார். அவர் வார்த்தைகள் ஒருவாறு என் துன்பத்தை மறக்கச் செய்தன.

நாளடைவில் தமிழின்பத்தில் அத்துன்பம் அடியோடே மறைந்துவிட்டதென்றே சொல்லலாம்.

(தொடரும்)
என் சரித்திரம்.வே.சா.

Sunday, September 17, 2023

ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 15 : 55 வயதுக்கு மேற்பட்ட சரித்திரம்

 




(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 14 : முதிர்பருவம் – தொடர்ச்சி)

ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை

  1. 55 வயதுக்கு மேற்பட்ட சரித்திரம்

1928-ஆம் வருடம் பிப்பிரவரி மாதம் முதல் தேதி முதல் நான் அரசு வேலையிலிருந்து விலக வேண்டி வரும் என்று முன்பே அறிந்திருந்தபடியால் அதற்காக அது முதல் என் வாழ்நாட்களை எப்படி கழிப்பது என்று ஒரு தினசரிப் பட்டி ஏற்படுத்திக்கொண்டேன். அதை எழுது முன் எனது நண்பர்களில் பலர் நீ ஏன் மறுபடியும் வழக்குரைஞராகப் பழகலாகாது என்று என்னைக் கேட்டிருக்கின்றனர். அன்றியும் சனவரி மாதம் 31-ஆந்தேதி என் நீதிமன்ற வேலையை முடித்தவுடன் சிறுவழக்கு நீதிமன்ற வழக்குரைஞர்கள் ஒன்றுகூடி காலஞ்சென்ற எனது நண்பர் பி. எம். சிவஞான முதலியார் மூலமாக என் பிரிவைப்பற்றி ஏதோ உபசார வார்த்தைகளை கூறிய பிறகு “நீங்கள் மறுபடியும் உயர்நீதிமன்ற வழக்குரைஞராக வந்து கலந்து கொண்டால் எங்களுக்குத் திருப்திகரமாயிருக்கும்” என்று கூறியபோது “அப்படிச் செய்ய எனக்கு விருப்பமில்லை, நீங்கள் கேட்பதை மறுப்பதற்காக மன்னிக்க வேண்டும்” என்று கூறினேன். அதற்கு முக்கிய காரணம் ஒருமுறை நீதிபதியாயிருந்த பிறகு மறுபடியும் வழக்குரைஞராகப் போவது சரியல்ல என்று நான் தீர்மானித்ததேயாம். மறு நாள் ஒரு தினசரி ஆங்கில பத்திரிகையின் செய்தியாளர் (Reporter) என்னிடம் வந்து “இனி உங்கள் காலத்தை எப்படிக் கழிக்கப் போகிறீர்கள்” என்று கேட்டபோது, “ஈசுவரன் எனக்கு இனி அருளும் ஆயுட்காலத்தையெல்லாம் தமிழ் நாடகத்திற்காகவும் தமிழ்மொழிக்காகவும் தொண்டு செய்யத் தீர்மானித்திருக்கிறேன்” என்று பதில் கூறினேன். அன்று முதல் இந்நாள் வரை அந்த இரண்டு தொண்டுகளையும் என்னாலியன்ற அளவு செய்து வருகிறேன் என்பதை இதை வாசிக்கும் எனது நண்பர்கள் அறிவார்கள் என்று நினைக்கிறேன். பிறகு வழக்குரைஞராகப் புகவேண்டுமென்று என்னை வற்புறுத்திய என் பல பந்துக்களுக்கும் சிநேகிதர்களுக்கும் நான் கூறின பதிலை இங்கு எழுதுகிறேன். அவர்கள் என்னிடம் வந்து “நீங்கள் ஏன் மறுபடியும் வழக்குரைஞராகச் சேரலாகாது?” என்று கேட்டதற்கு நான் “ஏன் மறுபடியும் வழக்குரைஞராகும்படிக் கேட்கிறீர்கள்?” என்று நான் வினவினேன். அதற்கு அவர்கள் “இல்லை நீங்கள் 7 வருடம் அரசு உத்தியோகத்தில் இல்லாதபடியால் உங்களுக்கு ஓய்வூதியம் (Pension) கூட ஒன்றும் கிடையாதே. ஆகையால் மற்றவர்கள் செய்வதுபோல் நீங்கள் மறுபடியும் சுலபமாக வழக்குரைஞராக (Advocate) ஆகி வேலை பார்த்து பணம் சம்பாதித்து சுகமாய் வாழலாமே என்று கேட்கிறோம்” என்றார்கள். அதற்கு நான் “மறுபடியும் இந்த வேலை பார்த்து கட்டப்பட்டுப் பணம் சம்பாதித்து அடையவேண்டு மென்கிற சுகத்தை அந்தக் கட்டமெல்லாம் இல்லாமல் இப்போது அநுபவித்துக் கொண்டிருக்கிறேனே. அதையேன் தடுக்கிறீர்கள்” என்று பதில் சொன்னேன்.

சிலர் உங்களுக்காக இல்லாவிட்டாலும் உங்கள் குழந்தைகளின் பொருட்டு நீங்கள் அப்படிச் செய்யலாகாதா? என்று கேட்டதற்கு அடியிற் கண்டபடி பதில் உரைத்தேன்:- “ஈசன் கருணையினால் எனக்கிருப்பது ஓர் ஆண் பிள்ளையும் இரண்டு பெண்களும். அப்பிள்ளைக்கு நான் சம்பாதித்து வைத்த பொருளே போதுமானது. என் இரண்டு குமாரத்திகளையும் தக்க இடத்தில் விவாகம் செய்து கொடுத்து விட்டேன். அவர்கள் தங்கள் புருசன் வீட்டில் பரமேசுவரன் கருணை யினால் சுகமாக வாழ்கிறார்கள். இப்படியிருக்க எதற்காக நான் மறுபடியும் நீதிமன்ற வழக்கு வேலையில் கட்டப்பட வேண்டும்”. என்று சொல்லி “என் இச்சைப்படி, தமிழுக்காக உழைப்பதைத் தடுக்காதீர்கள்” என்று கேட்டுக் கொண்டேன்.

(தொடரும்)

பம்மல் சம்பந்தம்

என் சுயசரிதை

Saturday, September 16, 2023

உ.வே.சா.வின் என் சரித்திரம் 53 : அத்தியாயம் 29. தந்தையார் விடைபெற்றுச் செல்லுதல்

 




(உ.வே.சா.வின் என் சரித்திரம் 52 : அத்தியாயம் 28. பாடம் கேட்கத் தொடங்கியது 2/2)

அத்தியாயம் 29. தந்தையார் விடைபெற்றுச் செல்லுதல் 1/2

மாயூரத்திற்குச் சென்ற மூன்றாம் நாள் ‘பாடங் கேட்க ஆரம்பித்துவிட்டோம்’ என்ற சந்தோசத்தில் நான் மூழ்கினேன். “சாமா, நீ இன்றைக்கு நைடதம் கேட்க ஆரம்பித்ததே நல்ல சகுனம். கலியின் தொல்லைகள் நீங்குவதற்கு நைடதத்தைப் படிப்பார்கள். இனிமேல் நம் கட்டம் தீர்ந்துவிட்டதென்றே சொல்ல வேண்டும்” என்று என் தந்தையார் சொன்னார். அது வாசுத்தவமென்றே நான் நம்பினேன். மனிதன் முயற்சி செய்வதெல்லாம் ஏதாவது நம்பிக்கையை வைத்துக்கொண்டு தானே?

பாடங் கேட்ட சந்தோசத்தோடு நானும் என் தந்தையாரும் சாகைக்கு வந்து போசனம் செய்தோம். என் தந்தையார் திண்ணையில் சிரமபரிகாரம் செய்துகொண்டார். நான் அருகில் உட்கார்ந்து ஏதோ புத்தகத்தைப் படித்து வந்தேன்.

கோபாலகிருட்டிண பாரதியாரைக் கண்டது

அப்போது வீதி வழியே ஒரு கிழவர் கையில் மூங்கில்கழி ஒன்றை ஊன்றிக்கொண்டு சென்றார். அவரைக் கண்டவுடன் என் தகப்பனார் எழுந்து, “பாரதியாரவர்களா?” என்று கேட்டுக்கொண்டே திண்ணையைவிட்டு இறங்கினார். அக்கிழவர், என் தந்தையாரைப் பார்த்துவிட்டு, “யார்? வேங்கடசுப்பையரா? ஏது இவ்வளவு தூரம்?” என்று கூறியவாறே நாங்கள் இருந்த திண்ணையில் வந்து உட்கார்ந்தார். என் தந்தையார் அந்த முதியவரை நமசுக்கரிக்கும்படி கூறவே நான் வணங்கிவிட்டு நின்றேன்.

“இந்தப் பிள்ளையாண்டான் யார்?” என்று பாரதியார் கேட்டார்.

“இவன் என் குமாரன்.”

“என்ன செய்துகொண்டிருக்கிறான்? சங்கீதம் அப்பியாசம் செய்து வருகிறானா?”

“செய்து வருகிறான். தமிழ் படித்தும் வருகிறான். இங்கே மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களிடம் படிக்கச் செய்யலாமென்று வந்திருக்கிறேன்.”

“அப்படியா? சந்தோசம். மீனாட்சிசுந்தரம் பிள்ளை நல்ல வித்துவான். நல்ல குணசாலி, உபகாரி, சிறந்த கவி. ஆனால் அவர் சங்கீத விரோதி. சங்கீத வித்துவானென்றால் அவருக்குப் பிரியமிருப்பதில்லை.”

இந்த விசயத்தைப் பாரதியார் சொன்னபோது நான் அதை நம்பவில்லை. பாரதியாருடைய அழகற்ற உருவத்தைப் பார்த்து நான் வியப்படைந்தேன். அவருடைய கோணலான உடம்புக்கும் அவருடைய புகழுக்கும் சம்பந்தமே இல்லை என்பதை அன்றுதான் உணர்ந்தேன். “நந்தனார் சரித்திரத்தை இவரா இயற்றினார்?” என்றுகூட நான் நினைத்தேன். அச்சரித்திரத்தில் இருந்த மதிப்பு அவரைப் பார்த்தபோது அவர்பால் உண்டாகவில்லை. கவர்ச்சியே இல்லாத அவரது தோற்றமும் அவர் கூறிய வார்த்தையும் என் மனத்தில் திருப்தியை உண்டாக்கவில்லை. ஆயினும் என் தகப்பனார் அவரிடம் காட்டிய மரியாதையைக் கண்டு நானும் பணிவாக இருந்தேன்.

“இவனுக்குச் சங்கீதத்தில் எந்த மட்டும் அப்பியாசம் செய்துவைத்திருக்கிறீர்கள்? கனம் கிருட்டிணையர் கீர்த்தனங்கள் வருமா?”

“எனக்குத் தெரிந்த மட்டிலும் சொல்லி வைத்திருக்கிறேன். கனம் கிருட்டிணையர் கீர்த்தனங்களில் எனக்குத் தெரிந்தவற்றிற் சிலவற்றை இவனும் பாடுவான்.”

“அப்படியா! அந்தக் கீர்த்தனங்களைக் கேட்டு எவ்வளவோ நாளாகிவிட்டது. எங்கே [1] ‘குசுமகுந்தளாம்பிகையே’ என்ற கீர்த்தனத்தைப் பாடப்பா; கேட்கலாம்” என்று பாரதியார் என்னைப் பார்த்துச் சொன்னார். நான் அதைப் பாடினேன்.

“நல்லது; பையனுக்குச் சாரீரம் இருக்கிறது. இதை வீண் பண்ணிவிடக் கூடாது. மேலும் மேலும் அப்பியாசம் செய்து வர வேண்டும்” என்று சொல்லிவிட்டு வேறு சில கீர்த்தனங்களையும் பாடும்படி சொன்னார். நான் பாடினேன். என் தகப்பனாரும் சில கீர்த்தனங்கள் பாடினார். நாங்கள் இருவரும் சேர்ந்து சிலவற்றைப் பாடினோம்.

“இந்த மாதிரி கீர்த்தனங்களை இங்கே யார் பாடுகிறார்கள்? இந்தப் பிள்ளை இவ்வளவு நன்றாகப் பாடுவதைக் கேட்க எனக்குச் சந்தோசமாக இருக்கிறது.”

“எல்லாம் உங்களைப் போன்ற பெரியவர்கள் ஆசீர்வாதம்தான். இவனை இங்கேயே விட்டுவிட்டுப் போகலாமென்று எண்ணி வந்திருக்கிறேன். தாங்கள் இவனுக்குச் சங்கீத அப்பியாசம் செய்து வைக்கவேண்டும்” என்று என் தகப்பனார் பாரதியாரைக் கேட்டுக்கொண்டார்.

“அதற்கு என்ன தடை? எனக்கும் பொழுது போகும்” என்று அவர் சம்மதித்தார்.

என் தந்தையாரும் பாரதியாரும் பழைய சமாசாரங்களைப் பற்றி வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தனர். அப்பேச்சினால் பாரதியார் கனம் கிருட்டிணையர் கீர்த்தனங்களில் எவ்வளவு விருப்பமுடையவரென்பது தெரிந்தது. பின்பு சாகைக்கு வந்து பார்ப்பதாக என் தந்தையார் சொல்லவே பாரதியார் விடைபெற்றுச் சென்றார்.

பாரதியாரிடம் சங்கீத அப்பியாசம் செய்தது

மறுநாள் விடியற்காலையிலேயே நானும் என் தந்தையாரும் பாரதியார் தங்கியிருந்த சாகைக்குச் சென்றோம். அவர் அக்காலத்தில் தம் மாணாக்கராகிய இராமசாமி ஐயருடைய வீட்டில் வசித்து வந்தார். இராமசாமி ஐயர் மாயூரநாத சுவாமி ஆலயத்தில் கைங்கரியம் செய்வார்.

அன்றே நான் பாரதியாரிடம் சங்கீத அப்பியாசத்தைத் தொடங்கினேன். அது முதல் பெரும்பாலும் தினந்தோறும் விடியற்காலையில் பாரதியாரிடம் போய் வரலானேன். சில நாட்களில் மாலைவேளைகளில் செல்வதும் உண்டு; பிற்பகலில் அவரோடு காவேரித் துறையாகிய துலாக்கட்டத்துக்குச் சென்று சந்தியாவந்தனம் செய்து வருவேன். துலாக்கட்டத்தில் அக்காலத்தில் முன்சீப் கச்சேரி இருந்தது. மாயூரம் முன்சீபாக வேதநாயகம் பிள்ளை உத்தியோகம் பார்த்து வந்தார். அவர் தமிழ் வித்துவானென்று நான் கேட்டிருந்தேன். தூரத்தில் இருந்தபடியே அவர் கச்சேரி பண்ணுவதை நான் சில சமயங்களில் கவனிப்பேன்.

பாரதியாரோடு பழகப் பழக அவர் பெரிய மகானென்ற எண்ணம் எனக்கு உண்டாயிற்று. அவர் சாரீரம் கம்மலாக இருந்தது. அதனால் அவர் சில வருசங்களாகப் பிடில் வாத்தியத்தைப் பயின்று தனியே இருக்கும் நேரங்களில் அதை வாசித்துப் பொழுதுபோக்கி வந்தார். காலைவேளைகளிலும் மாலைவேளைகளிலும் மாயூரநாதர் கோயிலிலுள்ள அகசுத்தீசுவர சுவாமி சந்நிதியில் நெடுநேரம் யோகம் செய்துகொண்டேயிருப்பார்.

வேடிக்கையாகப் பேசுவதிலும் கதைகள் சொல்லுவதிலும் அவர் வெகுசமர்த்தர். ஏதாவது ஒரு வார்த்தை சொன்னால் அந்த வார்த்தையோடு ஒரு புராண கதையைச் சம்பந்தப்படுத்திச் சொல்வார். பொழுதுபோவதே தெரியாது. பேசும்போது அடிக்கொரு தரம் பழமொழிகள் அவர் வாக்கிலிருந்து வரும்.

அவரிடம் நான் பல கீர்த்தனங்களைக் கற்றுக்கொண்டேன். அவர் இயற்றிய கீர்த்தனங்கள் பலவற்றைத் தெரிந்து கொண்டேன். நந்தனார் சரித்திரக் கீர்த்தனங்களுக்கு உரிய மெட்டையும் இராகதாளங்களையும் அவர் சொல்லிக் காட்டினார். சில சமயங்களில் அவர் மாணாக்கராகிய இராமசாமி ஐயரும் எனக்குக் கீர்த்தனங்களைச் சொல்லித் தருவார்.

(தொடரும்)
என் சரித்திரம், உ.வே.சா.

அடிக்குறிப்பு

1. இக்கீர்த்தனம் உடையார்பாளையம் சிவாலயத்திலுள்ள அம்பிகை விஷயமானது.

Sunday, September 10, 2023

ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 14 : முதிர்பருவம்

 




(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என்சுயசரிதை’ 13 : வழக்குரைஞராகவேலைபார்த்தது 2/2 – தொடர்ச்சி)

என் சுயசரிதை

7. முதிர் பருவம்

நான் எனது 51-ஆவது வயதில் சிறுவழக்கு நீதிமன்ற நீதிபியாக நியமிக்கப்பட்டேன். எனக்கு 55 வயதானவுடன் அவ் வயதிற்குமேல் அரசாங்க உத்தியோகத்திலிருந்து விலக வேண்டும் என்னும் நியமனப்படி அவ் வேலையிலிருந்து! விலகினேன். இதனிடையே சில மாதங்கள் முதன்மை மாநில நடுவராக(C.P.M.) வேலை பார்த்தேன். மேற்கண்டபடி நீதிபதியாக இருந்தகாலத்தின் சில வியவகாரங்களை இங்கு எழுதுகிறேன்.

நான் நீதிபதியாக முதல் நாள் உட்கார்ந்தபோது வழக்குரைஞர்களின் தரப்பாக காலஞ்சென்ற சீமான் சேசாச்சாரியார் அவர்கள் என்னை வரவேற்றுச் சில வார்த்தைகள் பேசியபோது அதற்கு நான் பதில் சொன்னபோது “நான் நீதிபதி வேலை நடத்துங்கால் மனிதர் எவருக்கும் பயப்படாது தெய்வம் ஒன்றிற்கே பயந்து நடப்பேன்” என்று உரைத்தது ஞாபகமிருக்கிறது. அதன்படி தினம் நான் நிதிமன்றத்திற்குப் போய் என் நாற்காலியில் உட்காரு முன் நியாயப்படி விசாரித்துத் தீர்மானம் கொடுக்க எனக்குப் புத்தியையும் மன உறுதியையும் கொடுக்கும்படியாக ஈசனைத் தொழுத பிறகே உட்காருவேன். சாதாரணமாக 25 வருடங்களுக்கு மேல் சிறுவழக்கு நீதிமன்றத்தில் வழக்குரைஞராக வியவகாரங்கள் நடத்திய படியால் இந் நீதிமன்றத்தில் நீதிபதி வேலை பார்ப்பது எனக்குச் சுலபமாக இருந்தது.

சிறுவழக்கு நீதிமன்ற வழக்குகளைப் பற்றிச் சில விசயங்கள் எழுத விரும்புகிறேன். என் தமையனார் 1894-ஆம் வருசம் வக்கீலாக வழக்கு நடத்திய போது இந்தச் சின்ன நீதிமன்றத்தில் மாத்திரம் 32 ஆயிரம் வழக்குகளுக்குக் குறையாமலிருந்தன! அது குறைந்து கொண்டே வந்து. நான் 1898-ஆம் வருசம் வழக்குரைஞரானபோது ஏறத்தாழ 25 ஆயிரம் வழக்குகள் வருடத்திற்குத் தீர்மானிக்கப்பட்டன. நான் நீதிபதியான போது ஏறத்தாழ 20 ஆயிரம் வழக்குகள் இருந்தன. வருடம் ஒன்றிற்குத், தற்காலம் 5 அல்லது 6 ஆயிரம் வழக்குகளுக்கு மேல் இல்லை.

நீதிபதியான ஒரு வாரத்திற்கெல்லாம் வழக்குகளை, சீக்கிரம் முடிக்கும் வழியைக் கற்றுக் கொண்டேன். இதற்கு இரண்டு மூன்று குணங்கள் அநுகுணமாய் இருந்தன. அதாவது அக் காலத்தில் சாதாரணமாக மாறுபாடிகள் வழக்குகள் தான் அதிக மாயிருந்தன. வழக்குரைஞராயிருந்த போது ஏறக்குறைய எல்லா மாறுபாடிகளும் என்னிடம் தங்கள் வழக்குகளை ஒப்புவிப்பார்கள். இதனால் அவர்கள் கணக்கு ஊழல்களெல்லாம் நன்றாய்த் தெரியும். ஆகவே அவர்களுடைய வழக்குகள் நான் நீதிபதியாக இருக்கும் போது என் முன் வந்தால் அவர்கள் கணக்குகளின் மருமங்களையெல்லாம் அறிந்திருந்தபடியால், அவர்கள் பொய் சொல்லி என்னை ஏமாற்றுவது அசாத்தியமாயிருந்தது. இதைக் கண்ட மாறுபாடிகள் தங்கள் வழக்குகள் என் நீதிமன்றத்திற்கு முன்பு வராதபடி செய்ய முயன்றனர். இதையறிந்த அக்கால முதன்மை நீதிபதியாக இருந்த திவான் பகதூர் சி.ஆர். திருவேங்கடாச்சாரியார் இதைத் தடுத்து வந்தனர். மாறுபாடிகள் என் நீதிமன்றத்திற்கு முன்பாக வருவதற்கே அஞ்சுவார்கள் என்றே சொல்ல வேண்டும். அவர்கள் நீதிமன்றத்திற்கு வெளியில் என்னை எப்போதாவது சந்தித்தால் “என்னாங்க சாமி, வக்கீலாக எங்ககிட்டே கட்டணம் (Fees) வாங்கிச் சாப்பிட்டுவிட்டு இப்போ எங்க வாயிலே மண்ணை போடுகிறீர்களே” என்று கேட்பார்கள். இரண்டாவது, வழக்குரைஞர்கள் தங்கள் – வழக்குகளைத் தள்ளி வைக்க வேண்டுமென்று அடிக்கடி கேட்காம லிருக்க ஓர் உத்தி செய்தேன். வழக்கை ஒத்திவைக்க வேண்டுமென்று கேட்கும் வழக்குரைஞர்களை யெல்லாம் மறு வழக்குநாட்கள்(வாய்தாக்கள்) எதிர்ப்பட்சத்திற்கு தினம் படி (Day fees) கொடுக்க வேண்டுமென்று உத்தரவிடுவேன். இதனால் இரண்டு நன்மைகள் உண்டாயின. ஒன்று கட்டாயமாக ஒத்திவைப்பு வேண்டியவர்கள் தான் இதற்கு உடன்பட்டு கேட்பார்கள், இரண்டாவது இதனால் வழக்குரைஞர்களுக்கு மாத வரும் படி அதிகமாகியது. நான் நீதிமன்றத்தை விட்டு விலகியபின் எனது சிநேகிதர்களான பல வழக்குரைஞர்கள் என்னைச் சந்திக்கும் போது “உங்களுடன் எங்களுக்கு நாட்செலவு வரும்படி அற்றுப் போச்சுது” என்று முறையிட்டிருக்கின்றனர்.

மேற்கண்ட மார்க்கங்களின் மூலமாக வழக்குகளைத் துரிதமாகத் தீர்மானிக்கும் வழிகண்டபின் தினம் என் நீதிமன்ற வழக்குகளை முடித்துவிட்டு முதல் நீதிமன்றத்திலிருந்து வழக்குகளை அனுப்பும்படி தலைமை நீதிபதிக்கு வேண்டுகோள் அனுப்புவேன். ஒரு சமயம் முதல் நீதிபதியும் மூன்றாவது நீதிபதியும் ஏதோ அவசர நிமித்தமாய் நீதிமன்றத்திற்கு வராமவிருந்தபோது மூன்று நீதிமன்ற வழக்குகளையும் நான் கவனித்தது ஞாபகமிருக்கிறது

சாதாரணமாக 4 மணிக்குள் நீதிமன்ற வேலையை முடித்துக் கொண்டு சபைக்குப் போய் விடுவேன். சாயங்காலம் ஐந்து மணியானவுடன் எந்த வழக்கானாலும் நடத்தாது ஒத்திவைத்து விடுவேன். ஐந்து மணிக்குமேல் நீதிமன்றம் நடப்பது தவறு என்பது என் அபிப்பிராயம். நான் வழக்குரைஞராக இருந்தபோது ஐந்து மணிக்கு மேல் வழக்குகளை நடத்துவதை ஆட்சேபித்திருக்கிறேன். 1926-ஆம் வருசம் நான் நீதிபதியாக இருந்தபோது நடந்த ஒரு சம்பவத்தை இங்கு எழுதுகிறேன். முன்னாள் இரவு மரித்த என் மனைவியின் தேகத்தை இடுகாட்டிற்குக் கொண்டு போய் சம்சுகாரம் செய்தவுடன் வீட்டிற்கு வந்து குளித்துவிட்டுப் பூசையை வழக்கம் போல் முடித்துவிட்டு உணவு கொண்டு நீதிமன்றத்திற்கு வழக்கம் போல் போனேன். அப்பொழுது. சுமார் 11 மணியிருக்கும். இதற்குள் எனக்கு துக்ககரமான சம்பவத்தைக் கேள்விப்பட்டு முதல் நீதிபதியாக இருந்த சிரீமான் திருவேங்கடாச்சாரியார் நான் அன்று நீதிமன்றத்திற்கு வரமாட்டேனென்று என் நீதிமன்ற வழக்குகளை யெல்லாம் ஒத்திவைப்பதற்காகத் தன் நீதிமன்றத்திற்கு மாற்றிக்கொண்டார். நான் நீதிமன்றத்திற்கு வந்ததாகக் கேள்விப்பட்டவுடனே என் அறைக்கு வந்து துக்கம் விசாரித்துவிட்டு “திரு. சம்பந்தம் இன்றைக்கு ஏன் நீதிமன்றத்திற்கு வந்தாய்” என்று கொஞ்சம் வெறுப்புடன் கேட்டார். அதற்கு நான் “என்னை மன்னிக்க வேண்டும். என் மனைவி நோயாயிருந்தபோது என்னால் இயன்ற அளவு சிகிச்சை செய்து பார்த்தேன். இறந்த பின் துக்கப்பட்டு என்ன பயன். என் மனதைத் தேற்றிக் கொண்டேன். என்னுடைய துக்கம் என்னுடனிருக்க வேண்டும். என்னால் மற்றவர்களுக்குக் கட்டம் கொடுப்பதில் என்ன பலன்? இன்றைக்கு என் நீதிமன்றத்தில் வாதிப் பிரதிவாதிகளும் சாட்சிகளும் சேர்த்து சுமார் 100 பெயர்களிருக்கலாம். இத்தனை பெயர்களும் மற்றொரு நாள் வரும்படியான கட்டத்திற்கு நான் அவர்களை உள்ளாக்கக் கூடாதென்று தீர்மானித்து வந்தேன் இங்கு; அன்றியும் நீதிமன்றத்திற்க வந்து வேலை பார்த்தால் என் துக்கத்தைக் கொஞ்சம்மறந்திருப்பேன்” என்று சொல்லி அவரை என் நீதிமன்ற வழக்குகளையெல்லாம் என் நீதிமன்றத்திற்கே அனுப்பிவிடும்படி கேட்டுக்கொண்டேன். இச் சந்தர்ப்பங்களில் நான் தலைமைநீதிபதியாகச் சிலகாலம் பொறுப்பு வகித்தபோது நடந்த ஒரு வியவகாரத்தை இங்கு எழுதுகிறேன். ஒரு நாள் ஐந்தடித்தவுடன் கீழே சிறுவழக்கு நீதிமன்ற அலுவலகத்திற்குள் நுழைந்து ஐந்து மணிக்குமேல் வேலை செய்து கொண்டிருந்த குமாசுக்களையெல்லாம் அழைத்து “அரசார் உங்களுக்கெல்லாம் ஐந்து மணி வரையில் வேலை செய்யச் சம்பளம் கொடுக்கிறார்களே யொழிய வேறில்லை. ஆகவே நீங்கள் ஐந்தடித்தவுடன் கட்டுக்களைக் கட்டிவிட்டு வீட்டிற்குப் போங்கள். மறு நாள் சரியாக பத்தரை மணிக்கு வந்து விடுங்கள்” என்று சொல்லி எல்லாரையும் வீட்டிற்கனுப்பினேன்.

சின்ன நீதிமன்றப் பிணையாட்கள் (Bailiff) சாதாரணமாக இலஞ்சம் வாங்குகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த விசயமே இதைத் தடுக்க ஒரு சிறிது நான் முயன்றேன் என்று சொல்ல வேண்டும். ஒருமுறை ஒரு வழக்குரைஞர் ஒரு பிணையாளர் இலஞ்சம் வாங்கிக்கொண்டு பிரதிவாதியைப் பிடிக்காமலிருக்கிறான் என்று என்னிடம் வந்து முறையிட்டார். நான் மத்தியான போசனத்திற்காக 2 மணிக்கு என் அறைக்குப் போனவுடன் அந்தப் பிணையாளை அழைத்து அந்தப் பிரதிவாதியை சாயங்காலத்திற்குள் பிடித்துக்கொண்டு வரவேண்டுமென்று கண்டிப்பாய்க் கூறினேன். இதன் பலனாக நான் 3 மணிக்கு நீதிமன்றத்திற்குப் போகுமுன் அந்தக் கட்சிக்காரனைப் பிடித்துக்கொண்டு வந்து விட்டான். இம்மாதிரியாக நான் கொஞ்சம் கண்டிப்பாயிருந்ததினால் என் காலத்தில் பிணையாளிகள் லஞ்சம் வாங்குவதே நின்றுவிட்டது என்று நான் சொல்லவில்லை. ஆயினும் மேல் அதிகாரிகள் கவனித்தால் இவ்வழக்கம் மிகவும் குறையும் என்பது என் அபிப்பிராயம்.

இவ்வாறு நான் கண்டிப்பாய் இருந்தபடியால் வழக்குரைஞர்கள் பெரும்பாலர்களுடைய அன்பினைப் பெற்றேன் என்று நினைக்கிறேன். நான் எனது 55-ஆவது வயதில் இவ்வேலையினின்றும் விலகியபோது அவர்கள் எனக்கு ஒரு தேநீர் விருந்து கொடுத்தனர். அன்றியும் நீதிமன்றச் சிப்பந்திகளும் தனியாக வேறொரு தேநீர் விருந்து கொடுத்தனர்.

இதற்கிடையில் சில மாதங்கள் சீப் பிரசிடென்சி மாஜிஸ்டிரேட்டாக வேலை பார்க்கும்படி நேரிட்டது. அக்காலமெல்லாம் நீதிமன்ற வேலையெல்லாம் மத்தியானத்திற்குள் முடித்துக்கொண்டு என் நீதிமன்ற வீடுபோய் சேர்வேன், ஒரு நாளாவது சாயங்காலத்தில் நீதிமன்ற வேலை பார்த்ததாக எனக்கு ஞாபகமில்லை. அதுசமயம் இப்போதிருப்பதுபோல், அத்தனை மதிப்புநிலை நடுவர் மன்றங்கள் கிடையா. தற்காலம் இந்த மதிப்புநிலை நடுவர் மன்றங்கள் பல ஏற்படுத்தப்பட்டும் ஐந்து உதவித்தொகை (Stipendiary) நீதிமன்றங்களுக்கு என்ன வேலையிருக்கிறதென ஆச்சரியப்படுகிறேன்.

சுமார் 4 வருசங்கள் நான் நீதிபதியாயிருந்தபோது ஒரே ஒரு வழக்கில்தான் என் தீர்மானம் உயர்நீதிமன்றத்தால் மாற்றப்பட்டது என்று எழுத விரும்புகிறேன்.

மேற்கண்டபடி உரிமை வழக்கு நீதிமன்றத்திலும் குற்ற வழக்கு நீதிமன்றத்திலும் நான் நியாயாதிபதியாக இருந்திருக்கிறேன். இவ்விரண்டில் உரிமை மன்ற நீதிபதியாக யிருந்ததுதான் என் மனதிற்குப் பிடித்தது. ஏனென்றால் சிறுவழக்கு நீதிமன்ற வழக்குகுளில் என்னையுமறியாதபடித் தவறாகத் தீர்மானித்தாலும் வழக்கி் தோற்றக் கட்சிக்காரனுக்கு சொல்ப நட்டத்துடன் போகிறது. நடுவராக நான் தவறாக ஒருவனைத் தண்டித்தால் அவனுடைய வாழ்க்கையே அழிந்தாலும் அழியுமல்லவா?

(தொடரும்)

பம்மல் சம்பந்தம்

என் சுயசரிதை