Thursday, June 29, 2017

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (8) – வல்லிக்கண்ணன்

அகரமுதல 192, ஆனி 11, 2048 / சூன் 25, 2017

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (8)

2.தமிழ் முழக்கம் (தொடர்ச்சி)

  இம் மாபெரும் சாதனையைக் கவிதையில் பதிவு செய்யும் வகையில், பெருங்கவிக்கோ “தமிழ் நடைப் பாவை’ என்ற நூலை இயற்றியுள்ளார். தமிழ் இலக்கி: யத்தில் நித்தியமான நிரந்தரமான இடத்தைப் பெற்றுள்ள திருப்பாவை: திருவெம்பாவை பாணியில் எழுதப்பட்டுள்ள தமிழ்நடைப்பாவை கவிஞரின் புலமைக்கு நல்ல சான்றாகத் திகழ்கிறது. இனிய சொல் லோட்டம், நல்ல கருத்துகள், உணர்ச்சி ஒட்டம், சந்த நயம் முதலியன கொண்ட அருமையான படைப்பாக அமைந்துள்ளது. இது. ‘தமிழா, சாதியை மற, தமிழை நினை. மதத்தை மற, தமிழை நினை. கட்சியை மற, தமிழை நினை’ என்று, முழக்கமிட்டுத் தமிழுக்கு மாண்பு தேட முயன்ற நடைப் பயணத்தின் நோக்கங்கள், உதவிய பெருமக்களின் பங்களிப்புகள், நடைப்பயணத்தின் போது ஏற்பட்ட பட்டறிவுகளை எல்லாம் இந்தப் பாவை நூல் விவரிக் கிறது.
 ‘கும்பிடும் சாமிக்குக்
கொம்புத் தேன் வானமுதம்
நம்புசெவி பாயா
 நடைமுறை ஆகாதோ?

நம் தமிழர் ஆட்சிதுறை
தாங்கும் அலுவலகம்
நம் தமிழ் ஆட்சி
 நடைமுறை ஆக்காதோ?

 தெம்புநீதி மன்றஉரை
தீந்தமிழ் சொல்லாதோ?
 செம்பொருட் காவியங்கொள்
சங்கத் தமிழ்நஞ்சோ?
பம்பிக்கை பார்ப்பார்தம்
பாதகத்தில் வீழ்ந்துகெட்டோம்
நம்பித் தமிழரெல்லாம்
 நன்னடைதே ரெம்பாவாய்’

மானமில்லார் நம்மறிஞர்
மாத்தமிழ் வாழ்வெண்ணார்
ஈனமில்லாப் பாவலர்கள்
 பாப்புனைத லோடுசரி

ஞானமில்லா மக்களுக்கோ
நாளெல்லாம் கீழ்வழக்கு!
தானமில்லாச் செல்வரிங்கே
தண்டமிழை யாரறிவார்?

மோன மில்லா யோகியர்க்கோ
 மூச்சடக்கும் வாசிநிலை
 ஆனநிலை ஈதானால்
அன்னைமொழி காப்பார்யார்?

வானமுயர் வையமுயர்
 வண்டமிழ்க்குச் சக்தியுண்டு
 போனதமிழ் ஆற்றல்பெறப்
 பூத்தநடை எம்பாவாய்!”

காடு மணக்கும்
கழனியெல்லாம் மணக்கும்
வீடு மணக்கும்
விளைவெல்லாம் பூமணக்கும்

பாடு மணக்குதமிழ்
ஏடெல்லாம் பாமணக்கும்
தேடுபொரு ளெல்லாமே
தெய்வ மணங்கமழும்

ஊடுபொய்கைத் தாமரை நீ
ராம்பல் உளமணக்கும்
கோடு மணக்கும்
கொடையெலாம் மேல்மணக்கும்

 நாடு மணக்குதமிழ்
 நாடெல்லாம் தெய்வமணத்
 தேடு தமிழ்மணக்கும்
 பீடுநடை எம்பாவாய்
(தொடரும்)
வல்லிக்கண்ணன்:
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்

Saturday, June 24, 2017

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙோ) – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல 191, ஆனி 04, 2048 / சூன் 18, 2017


தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙோ)

  குறள்நெறி இதழ்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் திங்கள் இருமுறைதான் வந்தன. தமிழன்பர்கள் “வார இதழாக மாற்றக்கூடாதா? பக்கங்களைக் கூட்டக்கூடாதா” என்றெல்லாம் வேண்டினர். வார இதழாக மாற்றுவதை விட நாளிதழாக மாற்றுவதே தக்க பணியாகும் எனப் பேராசிரியர் இலக்குவனார் கருதினார். இதழ்கள் வாயிலாக மொழிக்கொலை நடைபெறுவதால் அதைத் தடுத்து நிறுத்தத் தாமே முன்முறையாக நன்முறையாக நற்றமிழில் நாளிதழ் நடத்த வேண்டும் என்று முடிவெடுத்து குறள்நெறி நாளிதழும் தொடங்கினார். இது குறித்த நாளிதழ் ஆசிரிய உரை வருமாறு:
நற்றமிழில் உரையாடவேண்டும், எழுத வேண்டும் என்று கருதுபவர்களால் கூட நற்றமிழைப் பயன்படுத்த முடியாத சூழ்நிலை உருவாகி விடுகின்றது.
 நமக்கோ நாளும் நாளும் செந்தமிழ் சாகடிக்கப்படுவதைப் பார்த்துக் கொண்டு பாழும் வயிற்றை வளர்த்துக் கொண்டிருக்க இயலவில்லை. ‘மெல்லத்தமிழ் இனிச் சாகும்’ எனும் பேதை மொழியை நாம் அணுவாகச் செத்தேனும் பொயாக்க வேண்டும் என்று உறுதி பூண்டுவிட்டோம். உள்ளம் உடைமை உடைமை எனும் திருவள்ளுவரின் திருவாய் மொழிக்கேற்ப உள்ள நாம் செந்தமிழ் காக்கும் பணியில் இச்செய்தியிதழை ஆளாக்க முற்பட்டு விட்டோம்.
 நாட்டு மக்களின் நல்லெண்ணம் நம்பால் உள்ளது எனும் துணிவுடையோம். தமிழ்க்காப்பு என்பது கட்சிகளுக்கு அப்பாற்பட்டது. அனைத்துக் கட்சிகட்கும் உரியது. ஆயினும் இன்று ஆளுங்கட்சியாம் காங்கிரசு இந்திமொழித் திணிப்புக்கு உடந்தையாய் இருப்பதனால் தமிழ்காப்புக்கு உரிமை கொண்டாட இயலாது. இந்தி முதன்மை நாளும் நாளும் சுமத்தப்பட்டு வருகின்றது. இதனை அகற்றலே தமிழ்க் காப்பின் முதற்பணியாகும். உண்மைத் தமிழ்ப் பற்றுடைய காங்கிரசுக் கட்சியினர் உள்ளத்தால் நம் பக்கமே இருப்பர்.
குறள்நெறி நாளிதழ்: ஐப்பசி16,1997:செவ்வா: 1.11.1966:
  பெரும் பெரும் பணமுதலைகளுடன் போட்டிப் போட்டுக் கொண்டு நாளிதழ் நடத்த வேண்டும் என்ற முடிவே பேராசிரியர் இலக்குவனாரின் பெரும் துணிவையும் தமிழ்க்காப்பிற்காக எத்தகைய இழப்பையும் எதிர்கொள்ள ஆயத்தமாக இருந்த அவரின் தமிழ்ச்சால்பையும் வெளிப்படுத்தின எனலாம். தமிழ் நாளிதழ் என்றாலும் உலகச்செய்திகளைத் தமிழக மக்கள் அறிய வேண்டும் என்பதற்காகப் பன்னாட்டுச் சிக்கல்கள்பற்றி யெல்லாம் கருத்துகளை வெளியிட்டார். மாணவ நிலையிலேயே ஆழ்ந்து படித்தச் சிறந்த படிப்பாளராயிற்றே பேராசிரியர் இலக்குவனார். ஆகவே, படிப்போருக்காக எட்டுத் திக்கும் அறிந்து செய்திச்செல்வங்களைக் கொணரும் ஆற்றலுடன்  நாளிதழை நடத்தியமையால் பெரிதும் வரவேற்பு பெறலாயிற்று.
 செய்திகளைத் தெரிந்து கொள்ளும் துடிப்பும் நல்ல தமிழை அறிந்து கொள்ளும் ஆர்வமும் மாணவர்களிடையே பெருகியமையால் குறள்நெறி அவர்களிடையே செல்வாக்கு பெற்றது. பின்னர்க் குறள்நெறி நாளிதழ் நின்று போனாலும் அதன் தேவை இன்றைக்கும் மிகுதியாக உள்ளது. கடந்த கால வரலாற்றை உணராமல் மொழிக்கொலை புரியும் ஊடகத்தில்  நாளிதழ்கள் முதன்மைப் பங்கு வகிக்கின்றன. நல்ல தமிழில் நடத்த  வேண்டும் என்ற நோக்குடன் வெளிவரும் ‘தமிழோசை‘ இதழைத் தான் நாம் பாராட்ட வேண்டும். ஆனால், அவ்விதழினரும் விற்பனைக் குறைவிற்குக் காரணம் தமிழ்நடை எனத் தவறாகப் புரிந்து கொண்டு செய்தித் தலைப்புகளிலும் கட்டுரைகளிலும் அயற் சொல்லிற்கு இடம் கொடுத்து வருகின்றனர்.
தமிழ்உணர்வுச் செய்திகளையும் நல்ல தமிழில் எழுதுவதற்கான தொடரையும் வெளியிடும் ‘தினமணி’யிலும் கலப்பற்ற நல்ல தமிழ்நடைக்கு முதன்மை கொடுக்காத போக்கே உள்ளது.
 நாம்தமிழர் உணர்வை விதைத்த பெரியார் ஆதித்தனாரின் குடும்ப இதழ்களான மாலைமுரசு போன்றவற்றில் இன உணர்வுச் செய்திகளும் கட்டுரைகளும் முதன்மையாக இடம் பெற்றாலும் மக்களிடம் நல்ல தமிழ்நடையைக் கொண்டு செல்ல வேண்டிய அரும்பணியை ஆற்றாதது வருந்தத்தக்கதே.
  குமரி மாவட்டத்தைத் தமிழ்நாட்டுடன்  சேர்க்க வேண்டும் என்று போராடிய பெருந்தகை இராமசுப்பு அவர்கள் நிறுவிய ‘தினமலர்‘ இதழ்கூட மக்கள் சிக்கல்களில் கருத்து செலுத்துவது போல் மொழிச்சிக்கலும் மக்களுக்கான சிக்கல் என உணராமல் நல்ல தமிழை மறந்து விடுவதும் தமிழுக்கு எதிரான கருத்துகளுக்கு முதன்மை அளிப்பதும் வருத்தத்திற்குரியதே.
 தமிழின விடுதலைக்காகக் குரல் கொடுக்கும் தந்தை பெரியாரின் ‘விடுதலை‘ இதழில் ஒற்றுப்பிழையில்லா ஒரு தொடரைக்கூடக்காண இயலவில்லை.
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்

Friday, June 23, 2017

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (7.) – வல்லிக்கண்ணன்

அகரமுதல 191, ஆனி 04, 2048 / சூன் 18, 2017

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன்

(7.)

2.தமிழ் முழக்கம் (தொடர்ச்சி)

மேலும் கவிஞர் கூறுவது தமிழ்நலம் கருதுவோர் உளம் கொள்ள வேண்டிய உண்மைகள் ஆகும்.
முற்றிலுமே தமிழ் முழக்கம் ஆகவேண்டும்!
முத்தமிழின் இயல் பலவும் செப்பும் நூல்கள்
 கற்றவர்கள் இன்றெழுத வேண்டும்! நல்ல
கருத்தெல்லாம் தமிழ் முழங்கக் கருதவேண்டும்

நற்றவத்தால் தமிழறிந்த தலைவர் இந்த
 நாடாள வேண்டும்;ஆம்! வேண்டும்! வேண்டும்
 பற்றிவரு இந்திமொழி நீங்க வேண்டும்
பார்போற்றத் தமிழ்முழக்கம் செய்வோம் வாரீர்!’
இன்று தமிழ்நாட்டில் தமிழ் மொழிக்கு ஏற்றம் இல்லை. ஆட்சியில், நீதித் துறையில், கல்வி நிலையங்களில் சமூக வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் தமிழ் தனக்குரிய இடத்தைப் பெற்றிருக்கவில்லை. கடைத்தெருவில் பலகை களில் தமிழ் இல்லை. இந்த இழிநிலையால் கவிஞர் உளம் கொதிப்பதில் வியப்பெதுவும் இல்லை.
விழாக்களுக்குக் குறைவுண்டா? தமிழின்பத்தை
விள்ளுதற்குக் குறைவுண்டா? தமிழாம் அன்னை
அழாக் குறையாய் வாழ்வது தான் வாழ்க்கை எனற
அவலநிலை தமிழ் நாட்டில் இனும் நீடித்தால்
பலாப்பழமாய் ஆட்சிபெற்றுப் பயன்தான் என்ன?
பயனின்றிச் சுற்றுகின்ற ஈக்களா நாம்
 இலாக்குறையை நாம் நீக்கவேண்டும் என்றால்
இவ்வாட்சி தமிழாட்சிப் பழம் அறுப்போம்”
  இம் மாபெரும் சாதனையைக் கவிதையில் பதிவு செய்யும் வகையில், பெருங்கவிக்கோ ‘தமிழ் நடைப் பாவை’ என்ற நூலை இயற்றியுள்ளார். தமிழ் இலக்கியத்தில் நித்தியமான நிரந்தரமான இடத்தைப் பெற்றுள்ள திருப்பாவை, திருவெம்பாவை பாணியில் எழுதப்பட்டுள்ள தமிழ்நடைப்பாவை கவிஞரின் புலமைக்கு நல்ல சான்றாகத் திகழ்கிறது. இனிய சொல்லோட்டம், நல்ல கருத்துகள், உணர்ச்சி ஒட்டம், சந்த நயம் முதலியன கொண்ட அருமையான படைப்பாக அமைந்துள்ளது. இது, ‘தமிழா, சாதியை மற, தமிழை நினை. மதத்தை மற, தமிழை நினை. கட்சியை மற, தமிழை நினை’ என்று: முழக்கமிட்டுத் தமிழுக்கு மாண்பு தேட முயன்ற நடைப் பயணத்தின் நோக்கங்கள், உதவிய பெருமக்களின் பங்களிப்புகள், நடைப்பயணத்தின் போது ஏற்பட்ட பட்டறிவுகளை எல்லாம் இந்தப் பாவை நூல் விவரிக் கிறது.
 இதை வலியுறுத்தும் வகையில், தமிழ் மக்களிடையே தமிழ்த் தாக்கங்களை ஏற்படுத்தும் விதத்தில் பெருங் கவிக்கோ தமிழ் நடை மறுமலர்ச்சி இயக்கத்தை நடத்தியது முக்கியமான தமிழ்ப் பணி ஆகும்.
  எண்ணற்ற தமிழ் அறிஞர்கள், ஆதரவாளர்கள் கலந்து கொள்ள இந்த இயக்கம் கன்னியாகுமரியிலிருந்து தமிழகத்தின் தலைநகராம் சென்னைக்குத் தமிழ் நடைப் பயணம் மேற்கொண்டது.
. பின்னர் தமிழ் ஊர்திப் பயணம் நடத்தியது. வழி நெடுகிலும் உள்ள முக்கிய ஊர்களில் மக்களிடையே தமிழ் முழக்கம் செய்து, தனது கொள்கைகளை எடுத்துக் கூறி, மக்களைத் தமிழ் உணர்வு கொள்ளும்படித் தூண்டியது. தமிழ் நாட்டில் தமிழுக்கு முதன்மை வேண்டும். அனைத்து ஆட்சித் துறைகளிலும் தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் கண்டிப்பாகச் செயலாக்கம் பெற வேண்டும். அனைத்துக் கல்வியும் தமிழ் வாயிலாகவே பயிற்றுவிக்கப்பட வேண்டும். தமிழகத்தின் வணிக நிலையங்கள், தொழில் நிறுவனங்கள். அரசு நிறுவனங்கள் ஆகிய அனைத்துப் பெயர்ப் பலகையும் தமிழில் எழுதப்பட வேண்டும். நீதிமன்றங்களில் தமிழ்தான் நிருவாக மொழியாக இருக்க வேண்டும். எங்கும் தமிழ், எதிலும் தமிழ்இவற்றைக் கோரிக்கைகளாகக் கொண்டு இவ் எழுச்சிப் பயணங்களுக்கு ஏற்பாடு செய்திருந்தார் பெருங்கவிக்கோ
  தமிழா ஒன்று சேர்! தமிழால் ஒன்று சேர்! தமிழுக்காக ஒன்று சேர்! இம்முழக்கங்களை ஒலித்தவாறு முன்னேறிய தமிழ்நடைப் பயணம் தமிழ்நாட்டில் மக்களின் பேராதரவைப் பெற்றது.
 தமிழகத்தில் தமிழ்த்தாயின் இன்றைய அவலநிலையை மாற்றித் தமிழுக்கு முதன்மை பெற்றுத்தரும் முயற்சியில், நற்கருத்துக்களை உயிரும் உணர்வும் நிறைந்த கவிதைகளாக இயற்றியுள்ள கவிஞர், ஏறத்தாழ ஐம்பது நாட்கள் தமிழகம் முழுதும் நடந்து நடந்து கொள்கை முழக்கம் செய்தது அரும்பெரும் சாதனையே ஆகும். இதன் மூலம் தான் வெறுமனே எழுதிக் கொண்டிருக்கும் கவிஞரல்ல, எழுத்தில் வடித்துத்தரும் உயர் கருத்துகளுக்குச் செயல் வடிவமும் கொடுக்கிற வீரமறவரும்கூட என்பதை நாடு உணரும்படி செய்த சாதனையாளரும் ஆகிறார் பெருங்கவிக்கோ.
(தொடரும்)
வல்லிக்கண்ணன்:
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்