Tuesday, September 28, 2021

பிசிராந்தையார் 2 : ந. சஞ்சீவி

 

அகரமுதல




(பிசிராந்தையார் 1 : ந. சஞ்சீவி தொடர்ச்சி)

சங்கக்காலச் சான்றோர்கள் – 24

4. பிசிராந்தையார் 

ஒரு நாட்டிற்கு வாழ்வளிக்கும் தலை சிறந்த செல்வம் அந்நாட்டின் மண்ணும் மலையும் அல்ல; ஆறும் அடவியும் அல்ல. அந்நாட்டின் அழியாப் பெருஞ் செல்வம் அமிழ்தொழுகும் கனிவாய்க் குழந்தைகளே ஆம். வருங்கால உலகைப் படைக்கும் தெய்வங்களல்லரோ அச் செல்வச் சிறார்கள்? இவ்வுண்மையை நாடாளும் தலைவனாகிய பாண்டிய மன்னன் உணர்ந்திருந்தான்; தான் உணர்ந்ததோடன்றித் தான் உணர்ந்த அவ்வுணர்வைத் தமிழிலக்கியம் உள்ள வரை அதைக் கற்பார் உணர்ந்து பயன் பெறுமாறு சொல்லோவியமாகவும் ஆக்கித் தந்துள்ளான் என்றால், அவன் மாட்சியினை என்னென்று போற்றுவது!

கரவற்ற குழந்தைகள் வழங்கும் பேரின்பத்தில் மூழ்கித் திளைக்கும் பண்பு பெற்று விளங்கிய பாண்டியன் கோல் கோடா ஆட்சி புரிவதிலும் கருத்துடையவனாய் விளங்கினான், அவனுக்கு அரசியல் நெறியினை நன்கு அறிவுறுத்தக் கருதிய புலவர் பெருமானார் அவனிடம் சென்றார்; தம் உள்ளக் கருத்தை எடுத்துரைக்க முனைந்தார்; சிறந்ததோர் எடுத்துக்காட்டு வாயிலாகத் தம் எண்ணத்தை விளக்கலாயினார்: ‘களிறு ஒன்று தனியே நெல் வயலில் புகுந்து உண்ணத் தொடங்கின், நூறு காணியாயினும், அழியும்; களிற்றின் வாயில் புகும் உணவினும் காலில் மிதியுண்டு பல மடங்கு உணவுப்பொருள் அழியும். ஆயின், செய்களில் உள்ள செந்நெற்கதிர்களை முற்றவிட்டுக் காய்த்த நெல்லை அறுத்து அரிசியாக்கிக் கவளம் செய்து தருவதானால், ஒரு சிறு பகுதியே அதற்குப் பல நாளுக்குப் போதுமானதாகும். அதே போல, அறிவற்ற மன்னன் தன் வலி கருதிக் குடிகளை வருத்திப் பொருள் பெறத் தொடங்கின், அவனும் வாழான்; அவனால் உலகமும் கெடும். அவ்வாறன்றி, அறிவுடை வேந்தன் வளம் நிறைந்து வாழும் குடிமக்களிடமிருந்து ஆறில் ஒன்று கடமையாகப் பெறுவானாயின், அரசும் சிறக்கும்; நாடும் செழிக்கும்,’ என்னும் கருத்தமைந்த

காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே
மாநிறை(வுஇல்லதும் பன்னாட்(குஆகும்;
நூறுசெறு ஆயினும் தமித்துப்புக்(குஉணினே
வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்;
அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே
கோடி யாத்து நாடுபெரிது நந்தும்;
மெல்லியன் கிழவன் ஆகிவைகலும்
வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு
பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்,
யானை புக்க புலம்போலத்
தானும் உண்ணான்உலகமும் கெடுமே.’         (புறநானூறு. 184)

என்னும் பாடலைப் பாடினார்.

புலவர் பாடலில் அறத்தின் குரல் முழங்குகின்றதன்றோ? புலவரின் முழக்கம் கேட்ட புவியாள் மன்னன் கலை நெஞ்சும் கருணை உணர்வும் கொண்ட காவலன் அல்லனோ? கவிதை உள்ளத்தில் ஆழ்ந்திருக்கும் உண்மையின் ஆற்றலை அனுபவத்தால் அறிந்த தமிழரசன் அல்லனோ? அவன் சான்றோராகிய பிசிராந்தையாரின் சொற்களைப் பொன்னே போல் போற்றி நல்லாட்சி நடத்தினான். ‘அறிவுடை நம்பி’ என்ற இயற்பெயர் பெற்ற அவன், அதனையே அழியாப் புகழ்ச் சிறப்பினைக் குறிப்பதாகவும் பெற்றான், அவன் அல்லனோ மன்னன்! அவன் அரசன்றோ தமிழரசு!

அறிவுரம் பெற்ற பிசிராந்தையாரின் உடல் பாண்டி நாட்டில் உலாவிக்கொண்டிருந்தது. ஆனால், அவர் உள்ளமோ, உறந்தையிலேயே வாழ்ந்தது. அந்நாளில் உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த சோழ வேந்தன் கோப்பெருஞ்சோழன். அவன் ஆட்சியில் பொன்னி வளநாடு குறையேதுமின்றிப் பொலிவுற்று விளங்கியது. பாணரும் பரிசிலரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்திருந்தனர். சோழன் தலை வாயிலை நாடி வந்த கலைஞர் அனைவரும் கைநிறையப் பொன்னும் பொருளும் மணியும் துகிலும் பரிசிலாகப் பெற்று மீண்டனர். பசியால் வாடி வந்த இரவலர்க்கெல்லாம் ஆமையின் இறைச்சியையும் ஆரல்மீனின் கொழுவிய சூட்டையும் விளைந்த வெங்கள்ளையும் அவர் வேட்கை தீருமட்டும் தருவதில் என்றும் மன்னன் சலிப்புக் கண்டதில்லை. அவன் திருவோலக்கம் எஞ்ஞான்றும் இசை முழங்கும் பெருவிழாக் காட்சியையே அளித்ததுஅவன் நன்னாடோ, நாளும் வற்றாத புது வருவாய் மிக உடையது. இத்தகைய சிறப்புக்களை யெல்லாம் பெற்று விளங்கிய அக்கோப்பெருஞ்சோழன், கோழியூராம் உறையூரினைத் தலைநகராக உடைய ஒப்பற்ற வேந்தனாய் விளங்கினான்; தன் வாழ்நாள் முழுதும் பாணர் குடியை வாட்டி வதைத்து வந்த பசிப்பிணிக்குப் பெரும் பகைவனாய் விளங்கி விழுப்புகழ் பெற்றுத் திகழ்ந்தான்; அதோடு புரையில்லா நட்பினை உடைய பொத்தியார் என்னும் புலவரோடு மாறாத் தோழமை பூண்டு நாடோறும் மகிழ்ச்சிக் கடலில் திளைத்து இன் புற்றிருந்தான். இவ்வுண்மைகளையெல்லாம் சான்றோராகிய பிசிராந்தையார் பாடல் ஒன்றே நமக்கு உளங்கொளும் வகையில் சாற்றுகின்றது :

நும்கோ யாரென வினவின் எம்கோக்
களமர்க்(குஅரிந்த விளையல் வெங்கள்
யாமைப் புழுக்கிற் காமம்வீட ஆரா
ஆரற் கொழுஞ்சூ(டுஅங்கவு ளடாஅ
வைகுதொழின் மடியு மடியா விழவின்
யாணர் நன்னாட் டுள்ளும் பாணர்
பைதற் சுற்றத்துப் பசிப்பகை யாகிக்
கோழி யோனே கோப்பெருஞ் சோழன்
பொத்தில் நண்பிற் பொத்தியொடு கெழீஇ
வாயார் பெருநகை வைகலும் நக்கே.”         (புறநானூறு. 212)

நட்பிலும் பெட்பிலும் சிறந்து விளங்கிய கோப்பெருஞ்சோழன் நற்பண்புகள், சான்றோராகிய பிசிராந்தையாரின் நெஞ்சைக் கவர்ந்தன. தாம் இருப்பது பாண்டி நாடே ஆயினும், அவன் வாழ்வது சோழ நாடே ஆயினும், ‘கேட்டு வேட்ட’ அவர் கலை நெஞ்சம் கோப்பெருஞ்சோழன் பால் மாறா அன்பு கொள்ளலாயிற்று. புலவரைப் போன்றே கோப்பெருஞ்சோழனும் நெடுந் தொலைவில் இருந்த புலவர் பெருமானாராகிய பிசிராந்தையாரின் இளமை தவழும் வளமை நிறைந்த வாழ்வினையும் புலமை நலங்கனிந்த கலைநெஞ்சின் ஆழத்தையும், உறுதி படைத்த ஒழுக்கத்தின் விழுப்பத்தினையும் ‘செவி வாயாக நெஞ்சு களனாக’ப் பல காலும் சான்றோர் வாயிலாகக் கேட்டு அறிந்து, அவர்பால் தீராக் காதல் கொண்டான். இருவருக்கும் இடையே எழுந்த அன்புணர்வு-ஆர்வமாய் -நட்பாய்-காதலாய்-அதனினும் சிறந்த பெரும்பேருணர்வுமாய் உருக்கொள்ளல் ஆயிற்று. இருவருக்கும் இடையே இருந்த நட்பின்-காதலின்-திறத்தையெல்லாம் அவர்கள் பாடிய அருந்தமிழ்ப் பாடல்களே இன்றும் நமக்கு எடுத்துரைக்கும் வல்லமை பெற்று விளங்குகின்றன. சான்றாக ஈண்டுப் புலவர் பிசிராங்தையார் பாடல் ஒன்றைக் காணல் சாலும்.

விரிகதிர் பரப்பி உலகமுழுதாண்ட ஒருதனித் திகிரி உரவோன்’ மலை வாயில் வீழ்ந்துவிட்டான். கதிரவனை விழுங்கிய காரிருளைத் துரத்திக்கொண்டே நீல வானில் பால் நிலவு தன் முழு அழகையும் காட்டிய வண்ணம் எழுகிறது. தமிழ் போல ஓங்கி உயர்ந்து விரிந்து பரந்து கிடக்கும் விண்ணில் தோன்றிய முழு நிலவை-அத்தண்ணிலவைப்-பருகிய வண்ணம் பிசிராந்தையார் தம் இல்லத்து இளமரக்காவில் வீற்றிருந்தார். கங்குல் நங்கை சூடிய மல்லிகை மலர் போல விளங்கும் அவ்வழகிய நிலா அவர் உள்ளத்தில் இன்ப வெள்ளத்தைப் பாய்ச்சியது. அஃது இன்ப உணர்வை அள்ளி வழங்கிய அந்நேரத்திலேயே துன்ப உணர்வையும் தோற்றுவித்துப் புலவர் பெருமானரின் கலை நெஞ்சை வெதுப்பத் தொடங்கியது. புலவர் பிசிராந்தையார்-கோப்பெருஞ்சோழனது ‘ உயிர் ஒம்பும்’ உழுவல் நண்பர்-உள்ளம் காதற்கடலாயிற்று. வெண்ணிலவைக் கண்டு பொங்கும் விரிதிரைக் கடல் போல அவர் காதல் நெஞ்சில் உணர்வு அலைகள் ஓவென எழுந்து முழங்கலாயின. அம்முழக்கத்தின் எதிரொலியை இன்றும் நாம் அவர் பாடிய அழகிய பாடலில் கேட்கலாம்.

(தொடரும்)

முனைவர் . சஞ்சீவி

சங்கக்காலச் சான்றோர்கள்

Friday, September 24, 2021

பிசிராந்தையார் 1 : ந. சஞ்சீவி

 அகரமுதல



(சங்கக்காலச் சான்றோர்கள் – 23: ந. சஞ்சீவி தொடர்ச்சி)

சங்கக்காலச் சான்றோர்கள் – 24

4. பிசிராந்தையார் 

உலகின் வளர்ச்சிக்கும் வாழ்விற்கும் அடிப்படையாய் விளங்கும் உயிர் ஊற்று, அன்பு என்னும் நல்லுணர்வேயாகும். ஞாயிற்றின் ஒளியின்றேல் எவ்வாறு ஞாலம் அழிந்து ஒழிந்து நாசமாகிவிடுமோ, அவ்வாறே அன்பு என்ற உணர்வும் உயிர்கள் மாட்டு இல்லையாயின் உலகமும் உலக வாழ்வும் சீர் கெட்டுப் பாழடைந்து போதல் ஒருதலை. அதனலன்றோ வான்மறை தந்தருளிய பெரியார் வள்ளுவரும்,

அன்பின் வழிய(துஉயிர்நிலைஅஃதிலார்க்(கு)
என்புதோல் போர்த்த உடம்பு.’         (குறள், 80)

என்று இயம்பல் ஆயினர்? இவ்வாறு உலக உயிர்களை நடமாடும் பிணமாக அல்லாமல், உண்மையிலேயே உயிர் படைத்த ‘நடமாடும் கோயில்’களாக விளங்கச் செய்யும் அன்பின் பெருமையைக் கூறாத நூல்கள்- கலைகள்-காவியங்கள் நானிலத்தில் உண்டோ? அவ்வன்பின் மாண்பினைப் போற்றாத கலைஞர்களும் சான்றோர்களும் வையகத்தில் உண்டோ? உலகம் தொடங்கிய நாள் தொட்டு இன்று வரை இவ்வுலகின் பல்வேறு பிணிகட்கும் உற்ற நன்மருந்தாய் விளங்குவது அன்பெனும் அமிழ்தமே அன்றோ? இத்தகு சிறப்பு வாய்ந்த அன்பெனும் உணர்வு முதிருங்கால், அந்தந்த நிலைகட்கு ஏற்ப ஆர்வம், நட்பு, காதல், பத்தி, அருள் என்றெல்லாம் பெயர் பெறல் கண்கூடு.

அன்(பு)ஈனும் ஆர்வம் உடைமைஅது ஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு.’         (குறள், 74)

அருளென்றும் அன்(புஈன் குழவி         (குறள், 757)

என்னும் இக்குறள் மொழிகள், பெரும்பேருணர்வுகட்கெல்லாம் அடிப்படையாய்-தாயுணர்வாய்-விளங்குவது அன்பே என்ற உண்மையை அழகுற விளக்குகின்றன அல்லவோ? இத்தகைய ஆற்றல் நிறைந்த அன்புணர்வு வளர்ச்சி பெற்ற நிலையில் அடையும் பெயர்களில் ‘நட்பு’ என்பதும் ஒன்றாகும். இந்நட்புக்குத்தான் எவ்வளவு ஆற்றல்! மனித குலத்தின் வாழ்வை ஒளியும் பயனும் நிறைந்ததாக்குவதில் இந்நட்பே தலை சிறந்து விளங்குகின்றது அன்றோ?

நட்பிற்கும் காதலுக்குமிடையே மிகச் சிறிய வேறு பாடே உள்ளது எனலாம். ஒரோவழி அவ்வேறுபாடு இல்லையாகிவிடலும் இயற்கை. ஒத்த தலைவன் தலை வியரிடை ஊறி எழும் அன்பின் முதிர்வே ‘காதல்’ ஆகும். ஆனால், நட்போ, ஆடவர் இருவர்க்கு இடையேயோ, அரிவையர் இருவர்க்கு இடையேயோ, ஓர் ஆண் ஒரு பெண் ஆகியோரிடத்தோ, அன்றிப் பலரிடமோ, தோன்றி வளரும். இத்தகு அன்பின் முதிர்வே நட்பு எனப்படும். இஃதன்றி அடிப்படையை ஆராயுமிடத்து அன்பின் முதிர்வே நட்பும் காதலும் எனலாம்.

இத்தகைய நட்பும் காதலும் நெருங்கிய பழக்கத்தாலேயே வளரும். அவ்வாறு உளங்கலந்து-உயிர் கலந்து-பழகிய நட்பே உரனுடையதாக விளங்கலும் உலக இயற்கை. ஆனால், இப்பொது விதிக்கு விலக்காய் உள்ள இன்னொரு வாய்மையினையும் வள்ளுவர் கூறியுள்ளார். ‘இரு உள்ளங்களிடையே தோன்றும் உணர்வு ஒன்றுபடுதல் போதும். புணர்ச்சியும் பழக்கமும் வேண்டுதிவல்லை. அவ்வுணர்வு ஒன்றே நட்பினை வளர்க்கும்,’ என்பது அச்சான்றோரின் கருத்து.

புணர்ச்சி பழகுதல் வேண்டாஉணர்ச்சிதான்
நட்பாம் கிழமை தரும்.’         (குறள், 784)

என்பது தமிழ் மறை.

இத்தமிழ் மறைக்குத் தக்க சான்றாய் விளங்கிய ஒரு பெரியார் சங்க காலத்தில் வாழ்ந்தார். அவரையே பிசிராந்தையார் எனப் போற்றுவர்.

சங்கம் நிறுவித் தமிழ் வளர்த்த பெருமை தண் பாண்டி நன்னாட்டிற்கு உண்டு. அத்திரு நாட்டில் ‘பிசிர்’ என்ற ஊரில் ஆந்தையார்’ என்ற புலவர் தோன்றினார். ‘ஆதன் தந்தையார்’ என்னும் பெயரே ‘ஆந்தையார்’ என மருவி வழங்கலாயிற்று. பண்டைய தமிழர் தம் கால வழக்கப்படி அவரைப் பிசிராந்தையார் என அவர் ஊர்ப்பெயரும் தோன்றி விளங்கும்படி வழங்க லாயினர். பிசிராந்தையார் வாழ்க்கை பிஞ்சிளம்பருவம் தொட்டே எல்லா நலங்களையும் எய்தியிருந்தது. அவர் கற்பன கற்றார்; கேட்பன கேட்டார்; அவற்றோடு அமையாது, தாம் கற்றனவும் கேட்டனவும் உணர்த்திய நன்னெறியில் நின்று வாழ்க்கையை நடத்தலாயினார், அஃகி அகன்ற அறிவும், ஆழ்ந்த நுண்ணுணர்வும் பெற்றவராய்த் திகழ்ந்தார். சான்றாண்மைக்குரிய எல்லாப் பண்புகளும் அவர்பால் இளமை தொட்டே அமைந்து விளங்கலாயின. இத்தகைய செம்மை சான்ற பண்பு நலனும், சீரிய புலமை வளனும் ஒருங்கே பெற்றுத் திகழ்ந்த அப்பெரியார்க்கு வாய்த்த வாழ்க்கைத் துணைவியாரும், குலமகளிர்க்கெல்லாம் மணி விளக்காய்த் திகழ்ந்தார். ‘வாழ்க்கைத் துணை நலம்’ என்ற அதிகாரத்தில் இல்லத்தின் அரசிக்கு இன்றியமையாது வேண்டுவன வென்று திருவள்ளுவர் எடுத்தோதியுள்ள அரும்பெறற் பண்புகட்கெல்லாம் உறைவிடமாய் அவ்வன்னை யார் திகழ்ந்தார். அதனால், ‘ஏறுபோல் பீடு நடை’யராய் விளங்கிய பிசிராந்தையார் வாழ்வில் எஞ்ஞான்றும் இன்பத் தென்றல் வீசிய வண்ணம் இருந்தது. மாசில் வீணையாய்-மாலை மதியமாய்-வீசு தென்றலாய்-வீங்கிள வேனிலாய்த் திகழ்ந்த அவர் வாழ்வு மேலும் மேலும் ஒளியும், சுவையும், பயனும் காணும் வகையில் அவர்க்கு அருமருந்தன்ன மக்கள் தோன்றினர்கள்.

மங்கலம் என்ப மனைமாட்சிமற்(றுஅதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.’         (குறள், 60)

என்ற வள்ளுவர் வாய்மொழிக்கு ஏற்ற எடுத்துக்காட்டாய்ப் பிசிராந்தையார் வாழ்க்கை பொலிவுற்றுத் திகழ்ந்தது. குழலினும் யாழினும் இனிய மழலைச் செல்வங்களைப் பெற்ற புலவர் பெருமானார் வாழ்க்கை யாதொரு குறையும் கண்டிலது. மனைவி, மக்கள், மன்னன், ஏவலர் அனைவரும் அவர் மனக்கு இனியராய் விளங்கினர். துன்பம் சிறிதும் காணாத் தண்டமிழ்ப் புலவரின் சீரிய வாழ்க்கையில் கவலைக்கு இடமேது? வாழ்வைக் கொல்லும் நஞ்சாய் விளங்கும் கவலை சிறிதும் இல்லாத களி துளும்பும் வாழ்க்கை புலவர் பெருந்தகையின் நல்லுடைமை ஆயிற்று. இதனினும் செல்வம் பிறிதுண்டோ?

இத்தகைய தமிழ்ச் செல்வர் வாழ்ந்த காலத்தில் பாண்டி நாட்டை நீதி வழுவாது ஆட்சி புரிந்து வந்த தமிழ் மன்னன், பாண்டியன் அறிவுடை நம்பி யாவான். தமிழரசோச்சித் தமிழரசு தலை நிமிர்ந்திருந்த அந்நாளில் பூவேந்தரெல்லாரும் புலமை நலமிக்க பாவேந்தராய் விளங்கியதில் வியப்பொன்றும் இல்லையன்றோ? பாண்டியன் அறிவுடை நம்பி நாடாளும் மன்னன் மட்டுமன்றி, ஏடாளும்-எண்ணமாளும்-ஆற்றல் படைத்தவனாயும் கவிச்செல்வம் நிரம்பப் பெற்றவனயும் திகழ்ந்தான். அவன் பாடிய அழகிய பாடலொன்று புறநானூற்று மணிகளுள் தலை சிறந்த ஒன்றாய் விளங்கித் தமிழ் இலக்கியத்தை அணி செய்கின்றது. ‘ஒருவர் உலகில் படைக்கப்படும் செல்வம் பலவற்றையும் படைத்துப் பலரோடு உண்ணும் வளம் செறிந்த பெருவாழ்வைப் பெற்றவராய் விளங்கலாம். ஆயினும், குறுகுறு என நடந்தும், சின்னஞ்சிறு கரம் நீட்டி உண் கலத்திலுள்ள சோற்றைத் தரையிலே இட்டும், தோண்டியும், வாயிற்கெளவியும், கையால் துழாவியும், மேலெல்லாம் நெய்ச்சோறு படுமாறு அள்ளி எறிந்தும் ஆடி மகிழும் அமிழ்தங்களை-அறிவினை இன்பத்தால் மயக்கும் செல்வக் களஞ்சியங்களை-அடையாதார்-மக்கட்பேற்றினைப் பெறாதார்-வாழ்வின் பயனையே பெறாதார் ஆவர்’ என்பதே பாண்டியன் அறிவுடை நம்பியின் அரிய பாடலின் கருத்தாகும்.

படைப்புப் பல்படைத்துப் பலரோ(டுஉண்ணும்
உடைப்பெருஞ் செல்வர் ஆயினும்இடைப்படக்
குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லைத் தாம்வாழு நாளே.’         (புறம். 188)

என்பது அவர் பாட்டு.

(தொடரும்)
முனைவர் . சஞ்சீவி
சங்கக்காலச் சான்றோர்கள்