அகரமுதல
(சங்கக்காலச் சான்றோர்கள் – ந. சஞ்சீவி 8 இன் தொடர்ச்சி)
சங்கக்காலச் சான்றோர்கள் – 9
கபிலர்
(அடுத்துக் காண்பது ஒளவையாரை)
(தொடரும்)
முனைவர் ந. சஞ்சீவி:
சங்கக்காலச் சான்றோர்கள்
அகரமுதல
(சங்கக்காலச் சான்றோர்கள் – ந. சஞ்சீவி 8 இன் தொடர்ச்சி)
(அடுத்துக் காண்பது ஒளவையாரை)
(தொடரும்)
முனைவர் ந. சஞ்சீவி:
சங்கக்காலச் சான்றோர்கள்
(அகல் விளக்கு – மு.வரதராசனார்: 11. தொடர்ச்சி)
பங்குனி மாதம் பிறந்தால் எங்கள் ஊர்க்கு ஒரு புத்துயிர் பிறக்கும். பங்குனித் திருவிழா கோயிலில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும். அதை ஒட்டித் தேரோடும் தெருக்கள் எல்லாம் மிகவும் அலங்காரம் செய்யப்படும். கடைத்தெரு மிகப் பொலிவாக விளங்கும். வழி எல்லாம் பந்தல்களும் தோரணங்களும் கட்டப்படும். திருவிழாத் தொடங்கியவுடன், வீடுதோறும் ஆட்கள் மூன்று மடங்கு நான்கு மடங்காகப் பெருகிவிடுவார்கள். ஒவ்வொரு வீட்டிற்கும் வெளியூரிலிருந்து உறவினர்களும் நண்பர்களும் திருவிழாவைப் பார்ப்பதற்காக வந்து தங்கியிருப்பார்கள். எங்கள் தெருவின் வீடுகளிலும் விருந்தினர் பலர் இருப்பார்கள். அல்லாமலும், எங்கள் தெருத்திண்ணைகள் தோறும் வெளியூரார் முன்பின் அறியாதவர் பலர் கேட்காமலே வந்து தங்கிப் படுத்துக்கொள்வார்கள். வேப்ப மரங்களைச்சுற்றி ஆண்களும் பெண்களும் கட்டுச்சோறு தின்றுகொண்டும் வெற்றிலைபாக்கு மென்று கொண்டும் இருப்பார்கள்.
திருவிழாக் காலத்தில், யார், ஏன் வந்தீர்கள் என்று வீட்டுக்காரர் வெளியாரைக் கேட்கமாட்டார்கள்; கேட்கவும் கூடாது. எல்லாரும் இறைவனுடைய மக்கள் என்ற மெய்யுணர்வு பெற்றுவிட்டதாகக் கூற முடியாது. ஆனாலும் வழி வழியாக வந்த நாகரிகமாக அதைக் கருதினார்கள். ஆகையால், திருவிழாக் காலத்தில் வீட்டின் உட்பகுதி மட்டுமே வீட்டுக்காரர்க்கும் அவர்களின் உறவினர்க்கும் உரிமையாக இருக்கும்; வீட்டின் வெளிப்பகுதி, திண்ணை முற்றம் முதலியன வெளியார் எல்லார்க்கும் உரிய பொது இடமாகக் கருதப்பட்டு வந்தன. இன்னும் சொல்லப்போனால், திண்ணை முற்றம் முதலியவைகளே அல்லாமல் அந்தந்த வீட்டுக் கிணறுகளும் எல்லார்க்கும் பொதுவுடைமையாக இருந்தன. சென்னை முதலான நகரங்களில் நாள்தோறும் திருவிழாப் போன்ற கூட்டம் இருந்தபோதிலும், இந்தப் பரம்பரை நாகரிகம் பொதுவுடைமை நாகரிகம் அவர்களுக்குத் தெரியாது. சட்டமும் சட்டத்தை மீறும் தந்திரமும் அவர்களுக்குத் தெரியுமே தவிர, இப்படிப்பட்ட பரம்பரை நாகரிகமும் அதன் பெருமையும் அவர்களுக்குத் தெரிவதில்லை.
இந்த ஆண்டில் பங்குனித் திருவிழாவின் போது எங்கள் வீட்டுக்கு வேலம், அம்மூர் முதலான கிராமங்களிலிருந்தும் சென்னையிலிருந்தும் உறவினரும் நண்பரும் வந்திருந்தார்கள். பாக்கிய அம்மையார் வீட்டுக்கும் யாரோ வந்திருந்தார்கள். சந்திரன் வீட்டிற்கு அவனுடைய தாயும் தங்கையும் வந்திருந்தார்கள். எங்கள் வீட்டுக்கு வந்த உறவினரில் முக்கியமானவர்கள் என் சொந்த அத்தையும் அத்தை கணவரும் அத்தை மகள் கயற்கண்ணியும் ஆவார்கள்.
சந்திரனுடைய தாயைப் பார்த்தபோதுதான், சந்திரன் அவ்வளவு அழகாக இருப்பதற்கு காரணம் தெரிந்து கொண்டேன். அந்த அம்மா கடைந்தெடுத்த பதுமை போல் இருந்தார். நல்ல ஒளியான நிறம், அளவான உயரம், மென்மையான உடல், ஓவியம் தீட்டினாற்போன்ற புருவமும் விழியும் நெற்றியும் உடையவர் அவர். சந்திரனுடைய தந்தைக்கும் உடம்பில் ஒரு குறையும் இல்லை. ஆனாலும் அவருடைய தோற்றம் மிக அழகானது என்று கூற முடியாது. சந்திரனுடைய தாய் அழகின் வடிவமாக விளங்கினார். அந்த அழகிற்கு ஏற்ற அமைதியும் அவரிடம் விளங்கியது. சந்திரனுடைய முகத்தில் தாயின் சாயல் நன்றாகப் புலப்பட்டது. அந்த உண்மை அவனுடைய தங்கையைப் பார்த்தபோது தெளிவாயிற்று. தாயின் அழகுக்கும் அண்ணனின் அழகுக்கும் ஒரு பாலம் போல் விளங்கினாள் அவள்.
அவள் பெயர் கற்பகம், பெருங்காஞ்சியிலேயே சந்திரன் படித்த பள்ளிக்கூடத்திலேயே அவள் படித்து வந்தாள். அவள் அப்போது ஏழாவது படித்துவந்தாள். ஏறக்குறைய அவள் வயதாக இருந்தாள் என் அத்தை மகள் கயற்கண்ணி. அவள் ஐந்தாவதுதான் படித்து வந்தாள். அந்த ஊரில் ஐந்தாவதுக்குமேல் படிக்க வகுப்பு இல்லாத காரணத்தால் “என் மகளுடைய படிப்பு இதோடு முடிந்துவிட்டது. நீ சீக்கிரம் படித்து முடித்து இவளைக் கல்யாணம் செய்துகொள்” என்று அத்தை என்னைப் பார்த்துச் சொல்லிச் சிரித்தார். “உன் மகள் படிப்பு முடிந்து போச்சு; அதனால் என் மகனுடைய படிப்பையும் சீக்கிரம் முடிக்கச் சொல்கிறாயா?” என்று அம்மா வேடிக்கையாகக் கேட்டார். அதைக் கேட்ட கயற்கண்ணி, “போதும் மாமி! சும்மா இருங்கள், உங்களுக்கு இதே பேச்சு!” என்பாள்.
கற்பகத்தைப் போலவே கயற்கண்ணி சுறுசுறுப்பாக இருந்தபோதிலும் அவ்வளவு அழகாக இல்லை. வளர்ந்த பிறகும் என் அத்தைபோல் தான் இருப்பாள் என்று எனக்குத் தோன்றியது. அது மட்டும் அல்ல; அவளுடைய வாயாடித் தன்மை எனக்கு எப்போதும் பிடிப்பதில்லை. யாராவது ஒன்று சொன்னால், அவள் இரண்டு மூன்று சொல்வாள். யாரையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று துடுக்காகக் கேட்டு விடுவாள். ஏதாவது அறிவுரை சொன்னாலும், “ஆமாம் உங்களுக்குத்தான் நிரம்பத் தெரியுமோ? போதும் நிறுத்துங்கள்” என்பாள். எனக்கு அந்தப் பேச்செல்லாம் பிடிக்காது. என் தங்கை மணிமேகலையிடமும் அவள் அடிக்கடி வம்பாகப் பேசுவாள். வலுச்சண்டை இழுப்பாள். அதைக் கண்ட நான் உடனுக்குடன் கடிந்து பேசுவேன். அம்மா அவ்வப்போது என்னைத் தடுத்து, “வேலு! சின்னப் பெண் அப்படித்தான் பேசுவாள். கிராமத்தில் பழகி வளர்ந்தவள். அங்கெல்லாம் அப்படித்தான் பேசுவார்கள். நீ கோபித்துக் கொள்ளக்கூடாது” என்று மெல்ல என்னிடம் சொல்வார். தொலைந்து போகட்டும் என்று நான் விட்டு விடுவேன்.
கயற்கண்ணியிடம் எனக்கு எவ்வளவு வெறுப்பு வளர்ந்ததோ, அவ்வளவும் கற்பகத்திடம் விருப்பமாக வளர்ந்தது. அடிக்கடி சந்திரன் வீட்டுக்குப் போய்க் கற்பகம் பேசுவதையும் செய்வதையும் கவனித்தேன். திருவிழாப் பார்க்க அவள், போனால் நானும் போவேன். கடைத்தெருவுக்கு நானும் சந்திரனும் போகும் போது, “கற்பகமும் வருவதாக இருந்தால் வரட்டுமே, வந்து பார்க்கட்டுமே” என்று அழைத்துக் கொண்டு போவேன்.
பொய்க்கால் குதிரை, மயில் நடனம், பொம்மலாட்டம், தெருக்கூத்து முதலியவற்றைப் பார்ப்பதற்குச் சந்திரனுடைய தாயும் கற்பகமும் என் அத்தையும் கயற்கண்ணியும் என் தங்கை மணிமேகலையும் சேர்ந்து போவார்கள். சந்திரன் தேர்வுக்குப் படிக்க வேண்டும் என்று நின்றுவிடுவான். “அவன் போகிறானா, பார், படிப்பில் எவ்வளவு அக்கறையாக இருக்கிறான்! நீ மட்டும் போகலாமா? உள்ளே போய்ப் படி, சாமி ஊர்வலம் வரும் போது கூப்பிடுவேன். அப்போது வா” என்று அம்மா என்னைக் கடிந்து அனுப்பி விடுவார். அப்பா கடையிலிருந்து திரும்பிவரும் நேரம் என்று நானும் போகாமல் நின்றுவிடுவேன்.
திருவிழா முடியும் வரையில் எங்கள் தெரு நிறையக் கூட்டம் போனது போனபடி, வந்தது வந்தபடி இருந்தது. கிராமத்து ஏழைமக்களே பெரும்பாலோராக இருந்தார்கள். ஒருவகையில் ஊரைச் சுற்றி அசுத்தம் செய்யப்பட்ட போதிலும் தெருவெல்லாம் எச்சிலும் எச்சிலையுமாக இருந்தபோதிலும், எல்லோருடைய மனமும் மகிழ்ச்சி நிரம்பியிருந்தது. உழைத்த உழைப்பே உழைத்து, குடித்த கூழே குடித்து, உடுத்த கந்தலே உடுத்து, படுத்த தரையிலேயே படுத்து, ஆடுமாடுகளோடு சேர்ந்து குடிசைகளில் வாழும் ஏழைமக்களுக்கு இந்தத் திருவிழா ஒரு மாறுதல் தந்து நன்மை செய்வதை அவர்களின் மலர்ந்த முகங்களில் கண்டேன்.
(தொடரும்)
முனைவர் மு.வரதராசனார்
அகல்விளக்கு
(சங்கக்காலச் சான்றோர்கள் – ந. சஞ்சீவி 7 இன் தொடர்ச்சி)
தாம் கண்ட காட்சியை கல் நெஞ்சையும் உருக்கும் கடுந்துயரக் காட்சியை-தாம் கேட்ட குரலை-குழலின் துன்ப இசை போன்ற அழுகுரலை யெல்லாம் வள்ளல் பேகனது அகவிழிகட்குக் கவிதையாலேயே காட்சிப்படுத்திக் காட்டினார். “கைவண்மை சான்ற பேக, நேற்று அருவழி கடந்து வருந்தி வந்த சுற்றத்தின் பசியைப் போக்க, உன் சீறூர் எய்தி உன் வாயிலில் வாழ்த்தி நின்றேன்; உன்னையும் உன் மலையையும் பாடினேன். அதனைக் கேட்ட அளவில் துயரம் மிகுந்து கண்ணீர் சொரிந்து அதனை நிறுத்தவும் ஆற்றாளாய் விம்மி விம்மி மிக அழுதாள் ஒருத்தி. அவள் அழுத குரலும் குழலின் துன்ப இசைபோல இருந்தது! அவள் யாரோ! இரங்கத்தக்கவளாய் இருந்தாள்!” என்றார் கபிலர்.
என்ற அருந்தமிழ்க் கவிதையை அவன் மனத்தில் தைக்கும் வண்ணம் அஞ்சாது கூறினார்.
(தொடரும்)
முனைவர் ந. சஞ்சீவி:
சங்கக்காலச் சான்றோர்கள்
(சங்கக்காலச் சான்றோர்கள் – ந. சஞ்சீவி 6 இன் தொடர்ச்சி)
ஆனால், விச்சிக்கோவைப் போலவே இருங்கோவேளின் இதயமும் இரும்பாயிருந்தது. அவன் சொல்லோ, அதனினும் கொடிய கூர்வேலாயிருந்தது. அவன் பாரியின் அருமையும் அறியாது, அவன் ஆருயிர்த்தோழர் கபிலர் பெருமையையும் உணராது, அச்சான்றோரின் நெஞ்சைத் தகாதன கூறிப் புண்ணாக்கினான். இருங்கோவேளின் பொருந்தாச் சொற்கேட்ட புலவர் பெருமானார், ஆற்றொணாக் கோபங்கொண்டார். “இயல்தேர் அண்ணலே, ஒலியல் கண்ணிப் புலிகடி மாலே, வெட்சிக்காட்டில் வேட்டுவர் அலைப்பப் புகலிடம் காணாத கடமாவின் நல்லேறு சாரல் மணி கிளம்பவும், சிதறுபொன் மிளிரவும் விரைந்தோடும் நெடுவரைப் படப்பையில்-வென்றி நிலை இய விழுப்புகழ் இருபாற்பெயரிய உருகெழு மூதூரில்-கோடி பல அடுக்கிய பொருள் நிற்குதவிய நீடுநிலை அரையம் அழிந்த வரலாறு கேள்: நின் முயற்சியானன்றி நுந்தை தாயம் நிறைவுறப் பெற்றுள்ள புலிகடி மாலே, உன்னைப் போல அறிவுடையனாய் உன் குடியில் உனக்கு முன் பிறந்த ஒருவன் என்போல் புலவராகிய கழாத்தலையாரை இகழ்ந்ததால் கிடைத்த பயன் அது! இயல்தேர் அண்ணலே, இவ்வருமைச் செல்வியர் கைவண் பாரியின் மகளிர். ‘இவர் எவ்வியின் பழங்குடியிற் படுவாராக,’ என்று நான் கூறிய தெளியாத புன்சொல்லைப் பொறுப்பாயாக! பெருமானே, புலிகடி மாலே, கருங்கால் வேங்கை மலர் வீழ்ந்து கிடக்கும் துறுகல் கடும்புலி போலக் காட்சியளிக்கும் காட்டின் தலைவனே, நின் பால் விடை கொண்டேன் , போகின்றேன்; நின்வேல் வெல்வதாக!” [புறம்.202] என இருங்கோவேளின் சிறுமைப்பண்பை இகழ்ந்து கூறி அவன் நாட்டை விட்டு வெளியேறினார் புலவர் பெருமானார். இனி என் செய்வார்!
ஆர்வத்துடன் அணுகி வேண்டிய இரண்டிடங்களும் பயனற்றுப் போயின! பதடிகளால் மனமும் புண்ணாகியது. இந்நிலை எண்ணித் துடித்தழுத புலவர் உள்ளம் சிந்தனையில் தோயலாயிற்று. “அந்தோ! அருந்தமிழ் வள்ளல் பாரியின் அருமைச் செல்வியரினும் செல்வம் பெரிதுண்டோ! இதனை ஏற்கவும் காக்கவும் சிறுமதியாளர் சிந்தனை இசையவில்லையே! என்னே கொடுமை! என்ன காரணம் இதற்கு?” என்று எண்ணினார். ”ஆம்! காய்த்த மரத்திலன்றோ கல்லெறியும் இவ்வுலகம்? கோவேந்தன் குடியானாலும், பொன்னும் பொருளும் இன்றேல், மன்னரானார் மதிப்பரோ?” என்று எண்ணினார்;
(தொடரும்)
முனைவர் ந. சஞ்சீவி
சங்கக்காலச் சான்றோர்கள்
(சங்கக்காலச் சான்றோர்கள் – ந. சஞ்சீவி 4 இன் தொடர்ச்சி)
மீகானற்ற மரக்கலமும்-பால் நிலவற்ற காரிருள் வானமும்-உயிரற்ற உடலும் ஆயிற்று வேள் பாரியின் விழுமிய நாடு. விண்ணும் மண்ணும் அழுதன. ஆரமும் வேங்கையும், அணிநெடுங்குன்றும், கறங்கு வெள்ளருவியும் அழுதன. மானும் மயிலும், ஆவும் கன்றும் கதறிக் கலங்கின. புள்ளும் மாவும், முல்லையும் முழுநிலவும் புலம் பித் தேம்பின. இந்நிலையில் வள்ளல் பாரியின் மக்களும் அவன் ஆருயிர்த் தோழர் கபிலரும் அழாமல் இருப்பரோ! பேச்சின்றி மூச்செறிந்து பொருமி அழுதன பிற உயிர்களெல்லாம். வாய் திறந்து, நெஞ்செரிந்து கதறி யாற்றினர் புலவர் கோவும் பொற்றொடி மங்கையரும். அஞ்சா நெஞ்சம் படைத்த புலவர் பெருமானும் அரிவை நல்லாரும் பச்சிளங்குழந்தைகள் போலப் பதைபதைத்து அழுதனர். ஒப்பற்ற தந்தையாரின் அருகா அன்பில் வாழ்நாள் முழுதும் ஆடித் திளேத்து மகிழ்ந்திருந்த அந்த இளநங்கையர் இப்போது இதயம் துடித்து விம்மி விம்மி அழுதனர்.
மூவேந்தரும்முற்றுகையிட்டிருந்த அற்றைத் திங்களில் அவ்வெள்ளிய நிலாவின் கண் எம்முடைத் தந்தையும் உடையேம்; எம் குன்றையும் பிறர் கொள்ள வில்லை. ஆனால், ஐயோ! இற்றைத் திங்களில் இவ்வெள்ளிய நிலவின்கண் வென்றறைந்த முரசினையுடைய வேந்தர் எம்மலையும் கொண்டார்; எம் தந்தையையும் இழந்தோம் !’ எனும் வேதனை மிக்க கருத்தமைந்த
அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவின்
எத்தையும் உடையேமெங் குன்றும் பிறர்கொளார்;
இற்றைத் திங்க ளிவ்வெண் ணிலவின்
வென்றெறி முரசின் வேந்தரெம்
குன்றும் கொண்டார்;யாம் எந்தையும் இலமே!’
(புறம், 119) என்ற பாடலைக் கூறி மண்ணாண்ட வேள் பாரி முழுமதி யாகி வஞ்சகர் வாழாத விண்ணாளச் சென்றான் போலக் கார் வானத்து வெளிக்கிளம்பிய வெண்ணிலாவைக் கண்டதும் கண்பொத்திக் கதறியழுதனர் அக்கோமான் செல்வியர்.
கபிலர் பெருமானாரது நிலையைச் சொல்லவும் வேண்டுமோ! ஆடி விழும் அருவியிலும் அண்ணல் பாரியின் அழகுச் சாயலைப் பார்த்தவர் அவர்; மாவண் பாரிக்குத் தம் மனத்தையே அரண்மனையாக்கிக் கொடுத்தவர்; தாமுறையும் கோயிலாகப் பாரியின் நெஞ்சு இருப்பது கண்டு பெருமையும் பூரிப்பும் கொண்டவர். அண்ணல் பாரியின் புகழ் நினையாத நாளே அவர் வாழ்நாள் கண்டதில்லை. விண்ணும் மண்ணும், காடும் மலையும், அருவியும் சுனையும் எல்லாம் தம் ஆருயிர்த் தலைவன் பாரியின் புகழாகவே அவர் கண்கட்கு விளங்கின. அத்தகு காட்சியில் தோய்ந்திருந்த கபிலர் பெருமானார், உணர்வு வெள்ளம் நுரையிட்டுப் பாய, எத்தனை அருமையான கவிதைகளை அவன் புகழ் தெரித்துப் பாடினர்! ஆம் ! கால வெள்ளத்தில் கரைந்தோடியது போக, எஞ்சியுள்ள பாடல்களிலேயே ‘இருநிலம் பிளக்க வீழ்க்கும்’ வேரனைய அவர்களுடைய நட்பு எத்துணை அழகுடையதாய் இருந்தது என்பது புலனாகின்றதன்றோ! வையகம் உள்ளவரை பாரியின் புகழ் அழியா வண்ணம் கபிலர் பாடி யுள்ள பாடல்கள் எத்துணைச் சிறப்பின! கலையிலும் கருணையிலும் கொடையிலும் குணத்திலும் சிறந்தவனல்லனோ பாரி! அவன்பால் சென்ற பாணரும் விறலியரும் பெறாத பொன்னும் பொருளும் உண்டோ? வழியிற்கண்ட விறலியை,
‘சேயிழை பெறுகுவை வாணுதல் விறலி!
… … …
பாரி வேள்பாற் பாடினை செலினே.’ (புறம். 105)
என்று செந்தமிழ்ப் புலவர் ஆற்றுப்படுத்தும் அளவிற்கு அவன் கொடை வளம் சிறந்திருந்தது. அத்தேர் வீசு இருக்கை நெடியோன், பரிசிலர் இரப்பின், ‘தாரேன்’ என்னாது, அவர்க்குத் தன்னையும் அளிக்கும் தகைமையனாய் விளங்கினான். அம்மட்டோ! அழுக்காறு படைத்த இகல் வேந்த ர்க்கு அவன் இன்னான் ஆயினும், இரவலர்க்கு எஞ்ஞான்றும் இனியனாய் விளங்கினான் எனவும், வீரத்தில் எவருக்கும் இளைக்காத அவ்வேளிர் குலத் தலைவன் உயிர் குடிக்கத் தேடிவரும் வேலுக்கு அரியன் ஆயினும், உயிர் உருகப் பாடி வரும் கிணை மகளின் கலை விழிகட்கு என்றும் எளியன் எனவும் அன்றோ கபிலர் ‘பெருமானார் போற்றிப் புகழ்கின்றார்? இரவலர்க்கு ‘இல்லை’ என்னாது ஈயும் அத்தகைய வள்ளியோன் இறந்துபடக் கபிலர் இதயம் பொறுக்குமோ? கைவண் பாரி, மாவண்பாரி, தேர்வண்பாரி, நெடுமாப்பாரி என்றெல்லாம் பொய்யா நாவினராகிய அவர் போற்றிப் புகழ்ந்த பறம்பின் கோமான் பொன்னுடலம் மூச்சின்றிப் பேச்சற்று வீழ்ந்து கிடக்க ஒருப்படுவரோ? ‘பாரியின் புகழ்க்கு உலகின் கண்ணேறு வருமோ!’ என அஞ்சியவர் போல, “பாரி பாரி எனப்பல ஏத்தி, ஒருவர்ப் புகழ்வர் செந்நாப்புலவர்; உலகீர், பாரி ஒருவனும் அல்லன் ; மாரியும் உண்டு, ஈண்டு உலகு புரப்பது, எனக் கூறிக் கண்ணேறு கழித்த பெருமானார், இன்று அக்கருணை மாரி வறங்கூர்ந்து போக இசைவரோ?
(தொடரும்)
முனைவர் ந. சஞ்சீவி
சங்கக்காலச் சான்றோர்கள்