Friday, September 04, 2026

தமிழ் எழுச்சியின் சின்னமாகவும் இயக்கமாகவும் வாழ்ந்து காட்டிய பேரா. சி. இலக்குவனார்-தமிழ் வானம் சுரேசு

      04 September 2026      அகரமுதல



”சலுகை போனால் போகட்டும் – என்

அலுவல் போனால் போகட்டும்

தலைமுறை ஒரு கோடி கண்ட – என்

தமிழ் விடுதலை ஆகட்டும்”

என்ற புரட்சிக்கவிஞரின் பாட்டு இலக்கணத்திற்கு இலக்கியமாகவும் தமிழ் எழுச்சியின் சின்னமாகவும் விளங்கியவர்தான் ‘இருபதாம் நூற்றாண்டுத் திருவள்ளுவர்’ என்று போற்றப்படும் பேரா. சி. இலக்குவனார். நாட்டு விடுதலைக்காக ஆயுதம் ஏந்திப் புரட்சி நடத்திய போராளிகளை உலகம் அன்று முதல் இன்று வரை கண்டு வருகிறது. ஆயுதம் ஏந்தாமல் மக்கள் உள்ளங்களில் தம் எண்ணங்களை விதைத்துப் புரட்சி ஏற்படுத்தும் போராளிகளையும் உலகம் சந்தித்து வருகிறது. ஏட்டில் எழுத்தாலும், நாட்டில் உரையாலும் செயலாலும் களத்தில் நின்றும், மக்கள் நலனுக்காகப் போராடிய சிந்தனையாளர்கள் சிலரே உள்ளனர். அத்தகையோருள் எண்ணத்தக்க ஒருவரே தமிழ்ப்போராளி பேராசிரியர் சி. இலக்குவனார்.

”என் வாழ்க்கையே தமிழ்நலம் நாடிய போராட்டக்களம் தான்” என பேராசிரியரே ‘என் வாழ்க்கைப்போர்’ என்னும் தம் வாழ்க்கை வரலாற்று நூலில் குறிப்பிட்டுள்ளார். புகழ் வாய்ந்த தமிழறிஞர்களையும், நாட்டுத்தலைவர்களையும் கண்டுள்ள தமிழ் உலகில் மொழி காக்கும் போராளியாகத் திகழ்ந்த ஒரே பேராசிரியர். சி. இலக்குவனார் அவர்கள்தாம். கட்டுக்கடங்காத தமிழார்வமும் பொங்கி எழும் பைந்தமிழ் எழுச்சியும் பேராசிரியரின் மாணவ வாழ்க்கையையே போர்க்களமாக அமைத்தது.

பேரா. சி. இலக்குவனார் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம், வாய்மேடு என்ற சிற்றூரில் மு. சிங்காரவேலு, இரத்தினம் அம்மாள் இணையருக்கு இரண்டாவது மகனாக 17-11-1909 இல் பிறந்தார். பெற்றோர் அவருக்குச் சூட்டிய பெயர் இலட்சுமணன்.  அறிஞர் சாமி சிதம்பரனாரின் அறிவுரையை ஏற்றுத் தன் பெயரை இலக்குவன் என்று மாற்றி தமிழர்க்குப் பெயர் தமிழில்தான் இருத்தல் வேண்டும் என்பதை நடைமுறைப் படுத்தினார். வாய்மேட்டில் சுப்பையா ஆசிரியர் நடத்திய திண்ணைப்பள்ளியிலும், கண்ணுசாமி ஆசிரியர் நடத்திய திண்ணைப்பள்ளியிலும் பயின்றார். ஐந்தாம் வகுப்பு வரை படித்திருந்த இலக்குவனாரின் பள்ளிப்படிப்பு தடைப்பட்டது. தமது அண்ணன் நல்லபெருமாளுக்கு உதவியாக வயல் வேலைகளைக் கவனிப்பதும் மாடுகளை மேய்ப்பதுமே அவரது வேலையாக இருந்தது. தன் பிள்ளை படிக்க வேண்டும் என்று அவரது தாயார் விழைந்தமையால் உயர்நிலைப் படிப்பை படித்து முடித்தார். திருவையாறு அரசர் கல்லூரியில் புலவர் கல்வி கற்றுத் தேர்ந்தார். பணியில் அமர்ந்தபின் படித்து பி.ஓ.எல்., எம்.ஓ.எல்.,எம்.ஏ. பட்டங்களைப் பெற்றார். தொல்காப்பியம் முழுவதையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றார்.

1936 சூன் மாதத்தில் திருவாரூர் கழக உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணியைத் தொடங்கினார். கலைஞர். மு. கருணாநிதி இவரிடம் தமிழ் பயின்றார். “தமக்குத் தமிழுணர்வுடன் சுயமரியாதைப் பண்பையும் ஊட்டியவர் பேரா. சி. இலக்குவனார்” என்று தமது தன் வரலாற்று நூலாகிய ‘நெஞ்சுக்கு நீதி’யில் கலைஞர் குறிப்பிட்டுள்ளார்.

1955–56 ஆம் கல்வியாண்டில் திருவெறும்பூர் முக்குலத்தோர் உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர், 1956 முதல் 1958 வரை ஈரோடு காசனக் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளர், 1958 முதல் 1961 வரை நாகர்கோவில் தெ.தி.இந்துக் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவர், 1961 முதல் 1965 வரை மதுரை தியாகராசர் கலைக்கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவர், சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவர், 31-12-1970 வரை நாகர்கோவில் தெ.தி.இந்துக்கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றி ஓய்வு என இவர் பணியாற்றிய கல்லூரிகளின் பட்டியல் பெரிதாகும். இவரது அஞ்சாநெஞ்சமும், தன்மான உணர்வும் எவ்விடத்திலும் தொடர்ந்து பணிபுரிய இடமளிக்கவில்லை.

மாணவர்களிடையே தமிழுணர்வை இவர் ஊட்டியமை, இவர் மாணவர்களைப் புரட்சிக்குத் தூண்டுவதாகக் கல்லூரிப் பொறுப்பாளர்களைக் கருதச் செய்தது. 1944 இல் இவர் திருநெல்வேலி ம.தி.தா இந்துக்கல்லூரியில் பணிபுரிந்து கொண்டிருந்த போது இவரிடம் தமிழ்பயின்ற இன்றைய இந்தியப் பொதுவுடமைக் கட்சித் தலைவர்களில் ஒருவராகிய தோழர் நல்லக்கண்ணு இவரது அஞ்சா நெஞ்சத்தையும் சிறப்பாக பாராட்டுகிறார். அன்றைய தமிழ் வகுப்புகளில் வருகைப் பதிவை ஆங்கிலத்தில் மாணவர்கள் கூறி வந்த நிலையை மாற்றி ‘உள்ளேன் ஐயா’ எனக்கூற வைத்தவரும், பிற்காலத்தில் தமிழகமெங்கும் இம்மாற்றம் ஏற்படவும் காரணமாக இருந்தவர் இலக்குவனாரே என நல்லக்கண்ணு அவர்கள் கூறுகிறார்.

முனைவர் கி.வேங்கட சுப்பிரமணியன், முன்னாள் அமைச்சர் காளிமுத்து, கவிஞர் நா. காமராசன், கவிஞர் இன்குலாப், சேடப்பட்டி முத்தையா ஆகியோர் இவரிடம் தமிழ் பயின்ற மாணாக்கர் ஆவர்.

சங்க இலக்கியம், இலக்கியம், திராவிடக்கூட்டரசு, குறள்நெறி, Dravidan Fedaretion, Kural Neri ஆகிய பத்திரிகைகளைத் தொடங்கி ஆசிரியர், வெளியீட்டாளர் பொறுப்பு ஏற்று, அவை மூலம் தம் கொள்கைகளைப் பரப்பினார். தமிழ்ப் பேராசிரியர்களில் தமது வாழ்க்கை முழுவதும் இதழ் வெளியீட்டுப் பணியிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு மொழிக்கென தியாகம் செய்தவர் இலக்குவனாரே ஆவார்.

மதுரை தியாகராசர் கல்லூரித் தமிழ்த்துறை தலைவராகப் பணிசெய்த போது 1965 ஆம் ஆண்டு மாணவர்களின் இந்தி எதிர்ப்புப் போராட்டம் தீவிரமாக இருந்தது. அதற்கு இலக்குவனாரே மூலக்காரணம் என்று குற்றம் சாட்டி காவல்துறையினர் 1-2-1965, 1-5-1965 நாட்களில் இரண்டுமுறை கைது செய்தனர். அவருடைய அச்சகமும் வீடும் சோதனையிடப்பட்டன. புத்தகங்களும் பொருள்களும் காவல்துறையால் எடுத்துச்செல்லப்பட்டன. அதனால் மதுரை தியாகராசர் கல்லூரியிலிருந்து நீக்கப்பட்டார்.

தமிழ் மொழியைக் காப்பதற்கும் வளர்ப்பதற்கும் தமிழ்க்காப்புக் கழகம் நிறுவினார். அதன் சார்பில் மாணவர்களுடன் ஊர்வலமாகச் சென்று கடைப்பெயர்களைத் தமிழில் எழுதுமாறு கோரினார். புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் தமிழியக்கம் வெளியிட்டுள்ள கொள்கைகளையே இக்கழகத்தின் குறிக்கோள் ஆக்கினார். பாரதிதாசன் இக்கழகத்தின் செயல்முறைகளைப் பாராட்டினார்.

7-1-1963 இல் மதுரை தியாகராசர் கல்லூரியில் ‘தத்துவப்போர்’ என்ற தலைப்பில் அறிஞர் அண்ணா பேசினார். அப்போது அக்கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் இலக்குவனார் பேசுகையில் “விலைவாசிப் போராட்டம் தேவையான ஒன்று தான். அதைவிட முக்கியமாக இந்தி ஆட்சிமொழி ஆவதைத் தடுப்பதற்குரிய போராட்டங்களைத் தொடங்க வேண்டும்” என்று கோரினார். “நல்ல கருத்து, பொதுக்குழுவைக் கூட்டிப் போராட்டத் திட்டம் வகுப்பேன்” என்று அறிஞர் அண்ணா அவருடைய கோரிக்கையை ஏற்றுப் பேசினார். அதன்படியே சட்ட எரிப்புப் போராட்டத்தைத் தொடங்கினார். ஆட்சிமொழிச் சட்டப் பிரிவை எரித்துப் பலரும் சிறை சென்றார்கள். மாணவர்கள் இந்தி எதிர்ப்பு இயக்கத்திற்குக் காரணமாகவும், அதற்கு தலைவராகவும் இருக்கிறார் என்றும், அமைச்சர்களைக் கொல்ல சதி செய்தார் என்றும் 14 குற்றச்சாட்டுக்களைக் கூறியும் 1-2-1965 இல் காவல்துறையினரால் இலக்குவனார் கைது செய்யப்பட்டார்.

இலக்குவனார் மதுரைத் தியாகராசர் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்த போது தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, விரிவாக ஆய்வும் நிகழ்த்தித் தமது முனைவர் பட்டப்பேற்றிற்கான ஆய்வேட்டை அளித்தார். 1963 இல் முனைவர் பட்டப்பேற்றிக்காக Tholkappiyam in English with Critical Studies என்னும் ஆய்வேட்டை அளித்து 1963 ஆம் ஆண்டில் முனைவர் பட்டம் பெற்றார். தமது பல்வேறு பணிகளின் காரணமாகவும் காலந்தாழ்ந்து 53 ஆவது அகவையில் இப்பட்டத்தை இவர் பெற்றதும் தமிழ் நெஞ்சங்கள் மகிழ்ந்து போற்றின. குமரி முதல் சென்னை வரை இவருக்குத் தமிழ்நாடெங்கும் பாராட்டு விழாக்கள் நடந்தன. இவரது தொல்காப்பிய ஆங்கில நூலுக்கு அறிஞர் அண்ணா அவர்கள் அணிந்துரை வழங்கிப் பாராட்டியுள்ளார். பின்னர் அண்ணா தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற போது, தமது அயல்நாட்டு சுற்றுபயணங்களின் போது இந்நூலை போப்பாண்டவர் அவர்களுக்கும், அமெரிக்க நூலகங்களுக்கும் தமிழக அரசின் சார்பில் அன்பளிப்பாக வழங்கினார்.

இலக்குவனாருக்கு வாழ்க்கைத் துணைவியாக வந்து குடும்ப வாழ்வுக்கும், தமிழ்த் தொண்டுக்கும் பெருந்துணை செய்தவர்கள் மலர்கொடி, அவருடைய தங்கை நீலகண்டேசுவரி என்ற பெருமைக்குரிய பெண்மணிகள் ஆவர். இவர்களுக்கு ஆறு ஆண்மக்களும் ஐந்து பெண்மக்களும் பிறந்து பெருமை சேர்த்துள்ளனர். அவர்களுள் பொறியாளர் திருவேலன், முனைவர் மறைமலை, ஆட்சித்தமிழ் அறிஞர் திருவள்ளுவன் மூவரும் தந்தையின் தொண்டு, பேச்சு, எழுத்து மூன்றையும் போற்றிப் பேணி பரப்பி வருகிறார்கள்.

பேரா. வையாபுரிப் பிள்ளையின் திருக்குறள் பற்றிய தவறான கருத்துகளை அவர் வாழ்ந்த காலத்திலேயே மறுத்து முறையான கருத்துக்களை நிலைநாட்டிய பெருமை இலக்குவனாரையே சாரும்.என்னை உருவாக்கியதில் பெரும்பங்கு திருக்குறளுக்கு உண்டு’ என உள்ளத்தால் உரைத்தவர் இலக்குவனார்.

இவர் முத்தமிழ்க் காவலர், செந்தமிழ்மாமணி, பயிற்சிமொழிக் காவலர், தமிழர்தளபதி, தமிழ் காத்த தானைத்தலைவன், இலக்கணச்செம்மல், தமிழ் அரிமா, தமிழ்ப் போராளி, இருபதாம் நூற்றாண்டு தொல்காப்பியர், இரண்டாம் நக்கீரர், பெரும் பேராசிரியர், தன்மானத் தமிழ் மறவர், இந்தி எதிர்ப்புப் படைத்தளபதி, செந்தமிழ்ப் படையின் மானச்செம்மல் என்றும், மேலும் பல பட்டங்களையும் தமிழ்கூறும் நல்லுலகு அளித்து சிறப்பித்துள்ளது.

இலக்குவனார் “எழிலரசி அல்லது காதலின் வெற்றி” (செய்யுள் – 1933), “மாணவர் ஆற்றுப்படை” (செய்யுள்), “துரத்தப்பட்டேன்” (செய்யுள்), “தமிழிசைப் பாடல்கள்’ (செய்யுள்), “என் வாழ்க்கைப் போர்” (ஆராய்ச்சி – 1972), “அமைச்சர் யார்?” (ஆராய்ச்சி – 1949), “திருக்குறள் எளிய பொழிப்புரை” (விளக்கவுரை), “தொல்காப்பிய ஆராய்ச்சி” (விளக்கவுரை), “மாமூலனார் காதற்காட்சிகள்”, ‘வள்ளுவர் வகுத்த அரசியல்” (ஆராய்ச்சி), “வள்ளுவர் வகுத்த இல்லறம்” (ஆராய்ச்சி), “இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல்”, “கர்மவீரர் காமராசர்”, “அண்ணாவிற்கு பாவியல் வாழ்த்து”, “பழந்தமிழ்” “சங்க இலக்கியச் சொல்லோவியங்கள்”, “தமிழ் கற்பிக்கும் முறை”, “எல்லோரும் இந்நாட்டு மன்னர்” (ஆராய்ச்சி – 1956) உட்பட 22 தமிழ் நூல்களும், 10 ஆங்கில நூல்களும் இவர் எழுதி வெளிவந்துள்ளன. தொல்காப்பியர் நாள், திருவள்ளுவர் நாள், இளங்கோ அடிகள் நாள், ஔவையார் நாள் என்று நால்வருக்கும் அரசு விழா எடுத்துக் கொண்டாட வேண்டும் என்பது இலக்குவனாரின் நோக்கமாகும்.

“ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” என்னும் கொள்கை அடிப்படையில், உறுபசியும், ஓவாப்பிணியும் செறுபகையும் நீங்கிய மக்களினத்தை உருவாக்கவும், மொழிவழி மாநிலங்கள் முழுத் தன்னாட்சி பெற்று முழு உரிமையுடன் சாதி மத வர்க்க வேறுபாடு அற்ற மக்களாட்சி சமநிலைக் குடியரசுகளாய் இணைந்து வாழும் வன்மைமிக்க பாரதக் கூட்டரசை உருவாக்கவும், அந்தந்த மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகட்கே முதன்மை என்ற அடிப்படையில் மொழிகளின் சம உரிமையை நிலைநாட்டவும், தமிழ்நாட்டில் தமிழுக்கே முதன்மை தமிழில்தான் எல்லாம் என்ற நிலையை விரைவில் உண்டாக்கவும், தமிழர் பங்குபெற உரிமையுள்ள இடங்களில் எல்லாம் தமிழும் இடம்பெறவும், காலத்துக்கேற்ப, மரபுகெடாது தமிழை எல்லா வகையாலும் வளப்படுத்தவும், ஒல்லும் வகையால் அயராது உழைப்பதே இனி எனது வாழ்நாட் பணியாகும் என இலக்குவனார் உறுதிபட உரைத்துள்ளார்.

தமிழும் தமிழர் முன்னேற்றமுமே தம் மூச்சாகவும், பேச்சாகவும், செயலாகவும் வாழ்ந்த இலக்குவனார் 3-9-1973 அன்று உலகை விட்டு மறைந்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையினரால் 26-11-2009 அன்று இலக்குவனாருக்கு நூற்றாண்டு விழா நடத்திச் சிறப்பித்தார்கள். விழாவில் பேரா. அன்பழகன், ஔவை நடராசன் முதலான அறிஞர் பெருமக்களும் கலந்து கொண்டனர். நாகர்கோவிலில் குமரித்தமிழ்வானம் அமைப்பின் சார்பில் 2012 ஆம் ஆண்டில் இலக்குவனார் நினைவுச் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழ் எழுச்சியின் சின்னமாகவும் இயக்கமாகவும் விளங்கி வாழ்ந்து காட்டிச் சென்றுள்ள பேரா. சி. இலக்குவனாரின் பிறந்த நாளை ‘தமிழ் எழுச்சி நாளாக தமிழக அரசு அறிவிக்க வேண்டுமென்பதே தமிழ் அமைப்புகளின் கோரிக்கையாகும்.

பேராசிரியர் புலவர் சி. இலக்குவனார் நினைவு நாள் இன்று (03-09-1973), விடுதலை

இந்நாள் – அந்நாள்

Last updated: September 3, 2026 3:39 pm

viduthalai

இந்நாள் - அந்நாள்

பேராசிரியர் புலவர் சி. இலக்குவனார் நினைவு நாள் இன்று (03-09-1973)

பேராசிரியர் சி. இலக்குவனார் தமிழறிஞர்கள் வரிசையில் தனித்தன்மையானவர். ஓய்வறியாத் தமிழ் பணியாளர்.

இலக்குவனார் தஞ்சாவூர் மாவட்டம் வாய்மேடு என்னும் கிராமத்தில் சிங்காரவேலர்–  இரத்தினம் அம்மையார் ஆகியோருக்கு மகனாக 17-11-1909 அன்று பிறந்தார். உள்ளூர் தொடக்கப்பள்ளியில் படித்த அவர் பி.ஓ.எல் மற்றும் முதுகலை பட்டங்களையும் பெற்றார்.

தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளையும் கற்றுத் தேர்ந்தவர். பகுத்தறிவு பேராசான் தந்தை பெரியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூலான ‘தமிழர் தலைவர்’ நூலை எழுதிய சாமி.சிதம்பரனாரின் மாணவர் ஆவார்.

பி.ஏ.ஆனர்சு எனும் படிப்பு மாறி எம்.ஏ. படிப்பு அறிமுகமானபோது தமிழ்ப் பாடத்தை எடுத்துவிடலாம் என 1959-ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தினர் முடிவு செய்தனர். அப்படி தமிழ்ப் பாடத்தை நீக்குவது தவறு என ஒரு கூட்டத்தில் பேசினார். அப்போது அங்கு வந்து இருந்த செட்டிநாட்டு அரசர் முத்தையா செட்டியார் தமிழ் படித்து பலர் வேலை தேடி திண்டாடுகிறார்கள். எனவே இந்த முடிவு எனது முடிவே என்று கூறியுள்ளார். அரசர் முடிவு என்று தெரிந்தும் இலக்குவனார் விடவில்லை. “உங்கள் தந்தையார் அண்ணாமலை அரசர் இந்த நிறுவனத்தை தமிழுக்கு முதன்மை அளிக்கவே தொடங்கியதாக கூறினாரே? நீங்கள் உங்கள் தந்தையார் போலவே தமிழைப் போற்ற வேண்டாமா என்று அரசரையே கேட்கவும் அரசர் தமது வாதத்தை கைவிட்டு இனி எப்போதும் என் பல்கலைக்கழகம் தமிழுக்கு முதன்மையளிக்கும்” என்று கூறினார். மிகத்துணிச்சலாக அரசருடன் வாதாடி தமிழ் படிப்பு தொடங்கிட வழிவகுத்த இலக்குவனாரை அனைவரும் பாராட்டினர்.

கலைஞரின் ஆசிரியர்

இலக்குவனாரின் இந்தப் போராட்ட குணம் பல போராளிகளை உருவாக்க வழி வகுத்தது. திருவாரூர் அரசு உயர் நிலைப்பள்ளியில் அவரிடம் 9, 10-ஆம் வகுப்புகளில் படித்த மாணவர் தான் கலைஞர். அதன் பின்னர் அவர் திருநெல்வேலி ம.தி.தா. இந்துக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய போது அவரிடம் இரண்டு ஆண்டுகள் படித்த மாணவர் தான் இந்தியப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் இரா.நல்லக்கண்ணு. மதுரை தியாகராசர் கல்லூரியில் அவர் பேராசிரியராகப் பணியாற்றியபோது அவரிடம் படித்த கா.காளிமுத்து, நா.காமராசன் இருவரும் இந்தி ஆட்சி மொழிச் சட்டத்தை எதிர்த்துச் சிறை சென்ற போராளிகள். நெஞ்சுக்கு நீதியில் கலைஞர் “அவர் மாணவர்களை உருவாக்கினார் என்பதை விடத் தமிழ் உரிமைக்கான போராளிகளை உருவாக்கினார் என்பதே பொருந்தும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தந்தை பெரியார் அவர்களுடன்

தி.மு.க. பிரிந்த போது தந்தை பெரியார் அவர்களுடன் தமிழ்நாடெங்கும் சுற்றுப் பயணம் செய்தவர் பேராசிரியர் சி. இலக்குவனார். இவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த தொல்காப்பியம் நூலைத்தான் முதலமைச்சர் அண்ணா அமெரிக்கா சென்றபோது பலருக்கும் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 ஓய்வறியாத தமிழ்ப் பணியாளர்

நெல்லை இந்துக் கல்லூரி, 1940 களில் தனித்தமிழ் மணம் கமழும் பூஞ்சோலையாக விளங்கியது. காரணம், அங்கு தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய சி.இலக்குவனார்.  அப்போது அவரிடம் பயின்ற, பொதுவுடைமை இயக்கத் தலைவர் இரா.நல்லகண்ணுவும் கல்வியாளர் வேங்கடசுப்பிரமணியமும் அந்தக் காலகட்டத்தைப் பற்றிய நினைவுகளை ஆவணப்படுத்தியிருக்கிறார்கள்.

‘எஸ் சார்’ என்றும் ‘பிரசென்ட் சார்’ என்றும் கல்லூரி மாணவர்கள் ஆங்கிலத்தில் வருகைப்பதிவு கூறிவந்த நாட்கள் அவை. அவர்களை ‘உளன் அய்யா’ என்று தனித்தமிழில் வருகைப்பதிவு அளிக்கச் செய்தார் சி.இலக்குவனார். ‘உள்ளேன் அய்யா’ என அது மருவி தமிழ்நாடெங்கும் பரவியது. சி.இலக்குவனார் பள்ளிப் பருவத்திலேயே தனது பெயரைத் தமிழ்ப்படுத்திக்கொண்டவர். சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த சாமி.சிதம்பரனார் இலக்குவனாரின் பள்ளி ஆசிரியராக வாய்த்ததே காரணம். அவரது தமிழ்ப் பணிகள் அப்போதே தொடங்கிவிட்டன.

1933 இல் திருவையாறு அரசர் கல்லூரி யில் புலவர் பட்டப் படிப்புக்குப் படித்துக்கொண்டிருந்தபோது, ‘எழிலரசி’ என்ற குறுங்காவியத்தை எழுதினார். தஞ்சையில் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியபோது, தொல்காப்பியர் விழா, இளங்கோவடிகள் விழா, திருவள்ளுவர் விழா, அவ்வையார் விழா என்று பல்வேறு விழாக்களை நடத்தி, தமிழின் சிறப்பை மாணவர்களிடம் மட்டுமின்றி அவர்களது பெற்றோர்களிடம் எடுத்துரைத்தார்.

தான் செல்லும் இடமெங்கும் தமிழ்க் கழகம் நிறுவியும் இதழ்கள் நடத்தியும் தனித் தமிழ், திருக்குறள், தொல்காப்பியம் ஆகியவற்றின் சிறப்புகளைப் பரப்புவதுமே அவரது வாழ்நாள் பணியாக இருந்தது. நெல்லையில் ‘சங்க இலக்கியம்’, விருதுநகரில் ‘இலக்கியம்’, தஞ்சை யில் ‘திராவிடக் கூட்டரசு’, புதுக்கோட்டையிலும் மதுரையிலும் ‘குறள்நெறி’ என்று சோர்வின்றி இதழ்களை நடத்திவந்தார்.

ஆய்வரங்குகளில், மக்கள் மன்றங்களில், கல்விக் கூடங்களில் என வாய்ப்புக் கிட்டும் இடங்களில் எல்லாம் தமிழின் சிறப்புகளை எடுத்துரைக்கவும் தமிழுக்கு இழைக்கப்படும் தீங்குகளைக் கண்டிக்கவும் செய்தவர் சி.இலக்குவனார். அவருடைய இந்தப் பண்புகளே எந்த இடத்திலும் நிலையாகப் பணிபுரிய இயலாத சூழலை ஏற்படுத்தின. காலமெல்லாம் ஊர்விட்டு ஊர் பெயர்வதே அவர் வாழ்வாகிப்போனது.

1968 இல் அவர் விரும்பிய, அவரையும் விரும்பிய திராவிட இயக்கம் தமிழகத் தின் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது, அய்தராபாத்து உசுமானியா பல்கலைக்கழகத்துக்குத் தனது 55 ஆவது வயதில் பணிபுரியச் செல்ல வேண்டியிருந்தது என்பது வரலாற்றின் நகைமுரண். முதுமையின் காரணமாக அந்தப் பணியிலும் அவர் தொடரவில்லை. இரண்டாண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடு திரும்பிவந்துவிட்டார்.

1970 வரை, நாகர்கோவில் தெ.தி.இந்துக் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றி ஓய்வுபெற்றார். ஆசிரியப் பணிக்கு ஓய்வுண்டு. தமிழ்ப் பணிக்கு? மீண்டும் ‘குறள்நெறி’ இதழை நடத்த ஆரம்பித்தார்.

இலக்குவனார் பெயரில் அவர் பிறந்த வாய்மேடு உயர்நிலைப் பள்ளிக்கு அவர் பெயரே சூட்டப்பட்டுள்ளது.

தமிழுக்காக உயிரையே பணயம் வைக்கும் போராளிகளை உருவாக்கிய புலவர் சி.இலக்குவனார் 1973 ஆம் ஆண்டு செட்டம்பர் 3 ஆம் நாளில் இயற்கை எய்தினார். இந்நினைவு நாளில் அவருடைய புகழ்களை நினைவுக் கூர்வோம்.

தகவல் : பாணாவரம் பெ.வீரமணி

விடுதலை, 03.09.2026

Wednesday, September 02, 2026

இலக்குவனார் போலே இன்னொருவர் இதுவரையில் இல்லை – பாவரசு முனைவர் வதிலை பிரதாபன்



    அன்னைத்தமிழ் அரும்புதல்வர் அவனிதனில் நிறைந்திருக்க

    திண்ணைதனில் காத்திருந்து  தன்வழியென வீற்றிராது

    உணர்வுடைத்த உளத்தோடு உயிரெனவே உரமூட்டும்

    தமிழினமே  தரணியிலே தகைமையெனச் சான்றுடைத்து

    ஆக்கமும் ஊக்கமுமாய் 

    ஆண்டாண்டு ஒளிர்ந்திட்ட

    அன்பறமும் அறிவொளியும் அமைந்தநல் தொன்மையாய்

    சிந்தைகுளிர் சொல்லுடைத்து செவ்விதழில் சிறப்புடைத்த

    வண்டமிழின் வாழ்விற்கு வளமுடைத்து காத்திடவே

    மொழிகளது வரிசையிலே  முக்கனிகள் தோற்றோட

    தென்றலது மென்மையிலே புயல்கூட வெட்கமுற

    ஆழ்மனத்துச் சிந்தையிலே ஆக்கமுற நிறைந்தவளாய்

    அறிவார்ந்த இனத்தோரின் அகங்குளிர வேண்டுமென

    உளமார்ந்த உழைப்பாலே உரமிட்டுத் தமிழ்காத்த

    தகைமைசார் தமிழரிடை தானுமுண் டெனக்கூறும்

    நிலைதனையே உணர்த்திட்டு நோக்குதல் தேவையில்லை

    இலக்குவனார் என்றேதான் இனிதாகப் பெயருடைத்த

    தண்டமிழின் சிறப்பிற்காய்த் தனையீந்த பெருமகனார்

    தனதுநலந் துறந்திட்டு தமிழ்மணக்கப் பேசியவர்

    பேராற்றல் பெருகியதோர் பேராசான் என்றாகி

    போர்முழக்கப் பாதைதனில் புரட்சிவிதை தூவியதால்

    புலமைக்குக் காட்டாக பண்பாட்டுச் சிற்பியெனப்

    படைப்புகளால் அறிந்திடவே பலவற்றைத் தந்ததனால்

    தமிழறிஞர் வரிசையிலே தனியிடத்தைப் பெற்றனரே

    ஓரித்தில் நில்லாது நூறிடத்தில் மாற்றமிட்டு

    குதித்தோடும் பந்தெனவே கலங்கடித்த வரலாறும்

    கலங்கித்தான் கிடக்கிறது கிஞ்சித்தும் ஓயவில்லை

    கிள்ளைமொழி வளத்தினிலே கண்களிலே மகிழ்வுடைத்தார்

    தொன்மைக்குத் தொல்காப்பியத் தரவுகளைச் சொன்னாலும்

    காப்பியத்தின் காலமல்ல வள்ளுவத்தின் காலமதே

    சாதியெனும் சொல்லொன்று சமவெளியில் விளைச்சலிட

    முன்னேராய் வந்தயினம் முடங்கித்தான் கிடக்கிறதே

    முயற்சியின்றித் தரைதனிலே மண்டியிட்டு மடிகிறதே

    படைப்புவழிச் சிந்தனையால் பண்டைத்தமிழ் பரப்பிட்டு

    வள்ளுவத்தின் வழிதனிலே வாழ்க்கைநெறி உரைத்திட்டு

    இல்லறத்தின் பெருமைதனை இயம்பித்தான் மறைந்திட்டு

    துறவறத்தின் வழிதனிலும் தூய்மையது இல்லறமே

    தலைவனவன் துணையென்று தலைவிதனைப் புகழ்ந்திட்டார்

    குறள்வழியே வாழ்விற்குக் கரையொன்றும் வகுத்திட்டார்

    மாந்தரினம் பெருமையுற மன்னவனும் மகிழ்ச்சியுற

    வள்ளுவத்தின் பாதையிலே வழங்கிட்ட அரசியலை

    வரிவரியாய் விலக்கிட்டு வகைவகையாய் எடுத்துரைத்தார்

    வாழ்க்கையெலாம் தனக்கன்றி வேறெவர்க்காய் வாழ்ந்திட்டார்?

    காலங்கள் கடந்தாலும் கருத்தாழம் கொள்வதற்கு

    தம்மக்கள் யாவருக்கும் தமிழுணர்வு ஊட்டியதால்

    உணர்வூட்டி உரமுடைத்த உயர்ந்தநெறி பரப்பியதால்

    மாண்பமைந்த மறைமலையார் மதிப்புடைத்த திருவள்ளுவர்

    மக்களெனக் கொண்டதனால்

    மாண்புடைத்து வாழ்கின்றார்

    அவருடைத்த அகரமுதலி அவதரித்த வேளையிலே

    அறியாமல் இருந்தாலும் அமராமல் ஒளிர்கிறது

    அன்னைத்தமிழ் சிறப்பிற்கு அடிநாதம் இசைக்கிறது

    தெள்ளுதமிழ் வளர்ப்பதற்கு தென்றலெனப் பொழிகிறது

    தேமதுரத் தமிழோசை திகட்டாமல் இனிக்கிறது

    தன்காலம் மறைந்தாலும் தந்தைபுகழ் பரப்புகின்ற

    தகைமைசால் செயலுடைக்கும் தமிழாய்ந்த பிள்ளைகளும்

    இலக்குவனார் படைப்பினிலே இனிதெனவே தெரிகிறது

    இவர்போலே இன்னொருவர் இதுவரையில் இல்லையென

    ஏங்கித்தான் தவிக்கிறது ஏனென்றும் வியக்கிறது

    காலங்கள் கரைந்தாலும் கனவுகளாய் மறைந்தாலும்

    விளைந்திட்ட பயிராக ஒளிர்கின்ற விளக்காக

    தமிழ்போலே தழைத்திடுவார் தமிழறிஞர் இலக்குவனார்

    Sunday, April 27, 2025

    உ.வே.சா.வின் என் சரித்திரம் : 128- அத்தியாயம்-87: கவலையற்ற வாழ்க்கை

          28 April 2025      கரமுதல



    (உ.வே.சா.வின் என் சரித்திரம் : 127 – சிலப்பதிகார ஆராய்ச்சி – தொடர்ச்சி)

    நான் வேலையை ஒப்புக்கொண்டபோது கும்பகோணம் கல்லூரியில் உயர்நிலைப்பள்ளி வகுப்புக்களும் இருந்தன. அவ் வகுப்புக்களுக்கு திரு தி.கோ.நாராயணசாமி பிள்ளை என்பவர் தமிழ்ப் பாடம் சொல்லி வந்தார்.

    கல்லூரி வேலை தானாக என்னைத் தேடி வந்தாலும் அதனைப் பெறுவதற்குப் பலர் முயற்சி செய்தார்களென்ற செய்தியை நான் அறிந்த போதுதான் அவ்வேலையின் அருமை எனக்குப் புலப்பட்டது. பங்களூர்க் கல்லூரியில் தமிழ்ப் பண்டிதராக இருந்த நாராயணசாமி பிள்ளையும், இராமாயண வெண்பாவும் பல புராணங்களும் பாடிய தஞ்சைச் சதாவதானம் சுப்பிரமணிய ஐயரும், சேலம் கல்லூரித் தமிழ்ப் பண்டிதர் சரவணப் பிள்ளையும் அவ்விதம் முயன்றவர்களிற் சிலர். அவர்கள் கல்வியிலாகாத் தலைவருக்கு நேரே விண்ணப்பம் செய்து கொள்ள, அவற்றை அவர் கோபாலராவுக்கு அனுப்பி விட்டனர். “தக்கவர் கிடைத்து விட்டமையால் இந்த விண்ணப்பங்களைக் கவனிக்கக்கூட வில்லை” என்று இராயர் பதில் அனுப்பி விட்டதாகத் தெரிந்தது.

    நான் விடுமுறையில் திருவாவடுதுறைக்குச் சென்றிருந்தபோது திரிசிரபுரம் வித்துவானும் வித்தவச்சன சேகரருமாகிய கோவிந்தபிள்ளை கும்பகோணத்திற்கு வந்தார். தியாகராச செட்டியார் வேலையினின்று விலகியதை மட்டும் அறிந்த அவர் கோபாலராவிடம் சென்று தம் குமாரருக்குக் கல்லூரித் தமிழ்ப் பண்டிதர் வேலையைக் கொடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். முதல்வர், “வேறொருவரை நியமித்து விட்டோம்” என்று சொல்லவே, கோவிந்த பிள்ளை வேகமாக, “யார் அவர்?” என்று கேட்டார். நான் வேலைக்கு வந்திருப்பதாக அவர் சொல்லவே பிள்ளை, “அப்படியா மிகவும் சந்தோசம். அவரை எனக்குத் தெரியும். நன்றாகப் படித்தவர்” என்று சொல்லி விடைபெற்றுச் சென்றார்.

    தியாகராச செட்டியார் வேலையை விட்டு நீங்கினாலும் ஓய்வூதிம் விசயமாகச் சில சிக்கல்கள் இருந்தமையால் அவற்றைக் கவனிப்பதற்காக ஆறு மாத காலம் வரையில் அவர் கும்பகோணத்திலேயே தங்கியிருந்தார். அப்பால் அவர் தம் ஊருக்குப் போக ஏற்பாடு செய்தார். பல வருசங்கள் கும்பகோணத்திலிருந்து புகழ்பெற்ற அவருக்கு நகரத்தில் நண்பர்கள் பலர் இருந்தனர். கல்லூரி ஆசிரியர்களும் வேறு கமலசாலை ஆசிரியர்களும் அவரிடம் மிக்க மதிப்பு வைத்திருந்தனர். செட்டியார் கும்பகோணத்தை விட்டுப் புறப்படப் போகிறாரென்ற செய்தியை அறிந்து யாவரும் வருத்தமுற்றனர். அவருக்குத் தக்க உபசாரம் செய்து அனுப்ப வேண்டுமென்றும் ஞாபகார்த்தமாக நல்ல பொருள்களை வழங்க வேண்டுமென்றும் எண்ணினர். முடிவில் ஏறுமுக உருத்திராட்ச கண்டியொன்றையும், நல்ல சால்வை ஒன்றையும் கொடுப்பதாக அபிமானிகள் நிச்சயித்தனர். செட்டியார் புறப்படுவதற்கு முதல் நாள் மாலையில் கலியாணராமையர் தெருவில் உள்ள வக்கீல் டி.சுந்தரமையர் பங்களாவில் கோபாலராவு தலைமையில் செட்டியாருக்கு உபசாரம் நடைபெற்றது. அநேகர் செட்டியாருடைய திறமைகளைப் பற்றிப் பேசினர். நான் அவர் விசயமாகப் பத்துப் பாடல்கள் இயற்றிப் படித்து அவரைப் பாராட்டிப் பேசினேன். அப்பாடல்களில் ஒன்று வருமாறு:-

    ”வருந்தியருந் தமிழ்நமக்கு யார்புகல்வா ரென்றேங்கும்
    மனத்தி னோர்கள்
    திருந்தியசெந் தமிழ்ச்செல்வன் தியாகரா சப்புலவர்
    திலகன் றன்பாற்
    பொருந்தியவன் விளங்கவெடுத் துரைத்திடுநல் லுரைகளைத்தம்
    புந்தி வைப்பின்
    மருந்தியலைந் தியலுணர்வார் கலிபுகல்வார் பிரசங்கம்
    வகுப்பார் மன்னோ.”

    [புந்தி – அறிவில், ஐந்தியல்-ஐந்திலக்கணங்கள்.]

    எல்லாம் நிறைவேறிய பிறகு செட்டியார் கோபாலராவை நோக்கி, “நாளைக் காலையில் நான் ஊருக்குப் புறப்படுகிறேன். விடையளிக்க வேண்டும். நான் சிபார்சு செய்தவர் திருப்தி உண்டாகும்படி நடந்து கொள்ளுகிறரா?” என்றார்.

    இராயர் உடனே, “தாங்கள் சொல்லியபடி அவர் எல்லாவகையிலும் திருப்தியாகவே நடந்து கொள்ளுகிறார். பிள்ளைகளுக்கும் அவரிடம் மிக்க திருப்தி இருக்கிறது. இந்தச் சபையிலும் தம் திறமையை வெளிப்படுத்தி விட்டாரே” என்று சந்தோசமாகச் சொன்னார். இந்த விசயத்தைச் செட்டியார் அடிக்கடி விசாரித்துப் பலவாறாகத் தெரிந்து கொண்டிருந்தாலும் தாம் விடை பெறும் போது இராயருடைய வாயாலேயே ஒருமுறை கேட்டுவிட வேண்டுமென்று எண்ணியிருந்தார். இராயருடைய வார்த்தைகளைக் கேட்டவுடன் செட்டியார் முக மலர்ச்சியோடு என்னைப் பார்த்தார் நாணத்தால் நான் முகங் கவிழ்ந்தேன்.

    கூட்டங் கலைந்த பின் செட்டியாரோடு அவர் வீடு சென்றேன். அவர் மறுநாள் ஊருக்குப் புறப்படுவாரென்பதை நினைத்தபோது எனக்கு ஏதோ ஒரு விதமான துயரம் உண்டாயிற்று. அவரோடு எப்போதும் இருக்க வேண்டுமென்ற எண்ணம் எழுந்தது. வீட்டில் தம்மிடம் பாடங் கேட்டு வந்த மாணாக்கர்களை எனக்குக் காட்டி ஒவ்வொருவரைப் பற்றியும் தனித் தனியே எடுத்துக் கூறி, “இவர்கள் என்னிடம் சில சில நூல்களைப் பாடம் கேட்டு வருபவர்கள். இனிமேல் இவர்களுக்கு நான் பாடம் சொல்ல இயலாது. ஆதலால் இவர்களை உங்களிடம் ஒப்பிக்கிறேன். நான் சொல்லி வந்த பாடங்களைத் தொடர்ந்து சொல்லி வரவேண்டும்” என்றார்.

    “தங்கள் உத்தியோகத்தை ஏற்றுக்கொண்ட எனக்கு இது முக்கியமான கடமை தானே?” என்று கூறினேன். அவ்வாறு என்னிடம் பாடம் கேட்கத் தொடங்கியவர்கள் சதாசிவ செட்டியார், குமாரசாமி ஐயர் (வீர சைவர்), இராமலிங்க பண்டாரம், சாமி பண்டாரம், கிருட்டிணசாமி உடையார் என்பவர்கள்.

    கல்லூரியில் பாடம் சொல்லுவது எனக்குச் சிரமமாகத் தோற்றவில்லை. ஒவ்வொரு நூலையும் முதலிலிருந்து இறுதி வரையில் விரிவாகப் பாடம் சொல்லப் பழகிய எனக்குக் கல்லூரி வகுப்புக்களுக்குப் பாடமாக வந்துள்ள சில நூற்பகுதிகளைச் சொல்லுவது ஒரு பெரிய காரியமன்று. தனியே யாருக்கேனும் மடத்திற் சொல்லியபடி பிரபந்தங்களையும் வேறு இலக்கண இலக்கியங்களையும் சொல்ல வேண்டுமென்று விரும்பினேன். என் கல்வியறிவு மழுங்காமல் இருப்பதற்கு அதுதான் வழியென்பதை அறிந்தவன் நான். இந்த நிலையில் தியாகராச செட்டியார் தம் மாணாக்கர்களை என்னிடம் ஒப்பித்தது எனக்கு மிக்க திருப்தியைத் தந்தது. அவர்களுக்கு உசிதமான பாடங்களைச் சொல்லத் தொடங்கினேன். கல்லூரிப் பிள்ளைகளிற் சிலர் தனியே என் வீட்டிற்கு வந்து சில நூல்களைப் பாடம் கேட்கலாயினர். கும்பகோணத்திலுள்ள வேறு சிலரும் தமக்கு வேண்டிய நூற்களை என்னிடம் பாடம் கேட்டனர்.

    உபசாரம் நடந்த மறுநாள் செட்டியார் கும்பகோணத்தை விட்டுப் புறப்பட்டுத் திருச்சிராப்பள்ளியைச் சார்ந்த திருவானைக்காவை அடைந்து அங்கே வசித்து வரலானார். அவ்விடம் சேர்ந்தபின் கும்பகோணத்திலுள்ள நண்பர்களுக்குக் கடிதங்கள் எழுதினார். எனக்கனுப்பிய கடிதத்தில் விடுமுறைக் காலங்களில் வந்து தம்முடன் இருக்கவேண்டுமென்று வற்புறுத்தி எழுதினார். பின்னும் அடிக்கடி கடிதங்கள் எழுதினார். நானும் அவ்வப்போது பதில் எழுதினேன்.

    முதலில் நான் செட்டியாருக்கு வசன நடையிலேயே கடிதங்கள் எழுதினேன். ஒரு பதிற் கடிதத்தில் அவர், “இப்படி எழுதினால் உங்களுக்குச் செய்யுள் செய்யும் பழக்கம் நின்றுவிடும். ஐயா அவர்கள் எழுதும் வழக்கப்படியே முதலில் ஒரு செய்யுளெழுதி அப்பாற் செய்திகளைத் தெரிவிக்கவேண்டுமென்பது என் கருத்தன்று. உங்களுக்குச் செய்யுட் பழக்கம் விடாமலிருக்க வேண்டு மென்பதே என் எண்ணம்” என்று குறிப்பித்திருந்தார். அப்பால் நான் அவ்வாறு செய்யுட்களெழுதி வரலானேன். சில சமயங்களில் கடிதம் முழுவதையும் செய்யுளாகவே எழுதியதுண்டு. அவரும் தம் கடிதங்களின் தலைப்பில் என்னைப் பாராட்டிச் செய்யுட்களை எழுதுவார். என் செய்யுட்களையும் பாராட்டுவார்.

    செட்டியார் வற்புறுத்தியது முதல், தோத்திரங்களும் சமயோசிதப் பாடல்களும் செய்து வந்தேன். சிரீ கும்பேசுவரர் விசயமாகத் தனித் தோத்திரங்களும் சிரீ நாகேசுவரர் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள பெரியநாயகி விசயமாக ஓர் இரட்டை மணிமாலையும் சுவாமிமலை முருகக் கடவுள் மீது பல செய்யுட்களும் இயற்றினேன்.

    ஆடிக் காற்றும் வெள்ளமும் மிகுந்து அவ்வருசம் மரங்களெல்லாம் மிக்க சேதமடைந்தன. அந்த விசயத்தை வைத்துச் சில செய்யுட்கள் இயற்றி நண்பர்களுக்குப் படித்துக் காட்டினேன் அவற்றுள் இரண்டு செய்யுட்கள் வருமாறு:

    கழுத்துயர முறுமுடலொட் டகமாதி பன்மிருகம்
    கவலப் பல்வீக்
    குழுத்துயரக் கமுகுபனை தெங்காதி மரங்கள்குலை
    குலைய வேரோ
    டிழுத்துயர வெறிந்துயிர்கள் விழுத்துயர மருவமருத்
    தியற்றும் நோயாம்
    முழுத்துயர மாயவிதைக் காற்றுயர மெனவெவரும்
    மொழிவா ரென்னே”

    [கழுத்து உயரம் உறும் – உடலையுடைய ஒட்டகம். கவல-கவலையை அடைய, பல்வீ குழு துயர-பல பறவைக் கூட்டங்கள் துயரத்தை அடைய. வேரோடு இழுத்து-உயர எறிந்து. விழுத் துயரம்-மிக்க துன்பத்தை. கால் துயரம்-காற்றினால் உண்டான துயரம்; காற்பங்காகிய துயரம்.)

    உரம்பயிலும் பலமரமு மரம்பையுமிக் காற்றினால்
    ஒடிந்து சாய்ந்த
    வரம்பையறு காலுதையா லெவ்வுயிருந் தலைசாய்தல்
    மரபா மன்றோ
    சிரம்பயிலும் பந்தருறும் பலகாலிவ் வொருகாலிற்
    சிதைந்து வீழ்ந்த
    தரம்பயிலீ ததிசயங்கொ லொன்றுபல வற்றைவெலல்
    சகச மன்றோ.”

    (அரம்பை-வாழை. கால் உதையால்-காற்று அடித்தலினால், காலால் உதைத்தலால். பந்தருறும் பலகால்-பந்தலிலேயுள்ளபலகால்கள். ஒரு காலில்-ஒரு காற்றால்; ஒற்றைக் காலால்.)

    “இப்படியே ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நிகழும் நிகழ்ச்சிகளை வைத்துக்கொண்டு பாடல் இயற்றுவது மேல் நாட்டார் வழக்கம்” என்று அவர்கள் சொல்லி மகிழ்ந்தார்கள். அந்தப் பாடல்களில் கருத்தைக் காட்டிலும் பதங்களின் சமற்காரம் அதிகமாக இருக்கும். அத்தகைய பாடல்களைப் படித்தும் கேட்டும் அக்காலத்தினர் மிக்க இன்புற்றார்கள்.

    திருப்பனந்தாளில் காசி மடத்துத் தலைவராக இருந்த இராமலிங்கத் தம்பிரானை ஒரு சமயம் கண்டு எனக்கு வேலையானதைத் தெரிவித்து வரவேண்டுமென்று சுப்பிரமணிய தேசிகர் சொல்லவே நான் ஒரு சனி ஞாயிறு விடுமுறையில் சென்று அவரோடு சல்லாபம் செய்து இருந்து வந்தேன். அவர், “உங்கள் தந்தையார் செய்த பூசா பலன். பிள்ளையவர்கள் உங்கள்பால் வைத்த அன்பு வீண்போகவில்லை. தியாகராசசெட்டியார் மூலமாக அது பயனளித்தது” என்று பாராட்டினார்.

    சில மாதங்களுக்குப் பிறகு இராமலிங்கத் தம்பிரான் தமக்கு இளவரசாக என் நண்பரும் திருவாவடுதுறையாதீன வித்துவானாக இருந்தவருமான குமாரசாமித் தம்பிரானை நியமித்தார்.அந்தச் செய்தி தெரிந்தபோது எனக்கு உண்டான சந்தோசம் அளவு கடந்து நின்றது. உடனே திருப்பனந்தாள் சென்று அவரைப்பார்க்க வேண்டுமென்ற ஆவலுடன் இருந்தேன். சந்தர்ப்பம் கிடைத்தவுடன் போய்ப் பார்த்து என் சந்தோசத்தைத் தெரிவித்து வந்தேன்.
    அவர், “எல்லாம் சந்நிதானத்தின் பரிபூர்ண கிருபையால் உண்டானவை. உங்களுக்கு ஒரு பதவி கிடைத்தது. உங்கள் நண்பனான எனக்கு இந்தப் பதவி கிடைத்தது” என்று நன்றியறிவோடு சொல்லிச் சுப்பிரமணிய தேசிகருடைய குணாதிசயங்களை மிகவும் பாராட்டினார்.

    எனக்குக் கல்லூரியில் வேலையான சில மாதங்களுக்குப் பிறகு இறைவன் திருவருளால் நான் குடியிருந்த வீட்டில் எனக்கு ஒரு குமாரன் பிறந்தான். இந்தச் சந்தோசச் செய்தியைத் தெரிவிக்க என் பிதா திருவாவடுதுறைக்குச் சென்றார். கற்கண்டு சருக்கரையுடன் சுப்பிரமணிய தேசிகரைப் பார்க்க வேண்டிய இடத்தில் பார்த்துச் சொன்னபோது அவர் பரம சந்தோச மடைந்தார். உடனே வீசைக் கணக்காகக் கற்கண்டு கொண்டு வரச் செய்து மடத்திலுள்ள யாவருக்கும் அளித்து, “நம்முடைய சாமிநாதையருக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது” என்று தாமே சொல்லிச் சொல்லி இன்புற்றார். அவருடைய மாசு மறுவற்ற அன்பைக் கண்டு என் தந்தையார் விம்மிதமுற்றார். குழந்தையின் சாதகத்தைக் கவனித்தவர்கள், “இக்குடும்பத்திற்கு இனி மேன்மேலும் நன்மை உண்டாகும்” என்று சொன்னார்கள். என் தந்தையார் அந்தச் செய்தியைக் கேட்டு ஆறுதலுற்றார். உத்தமதானபுரத்திற்கு அருகிலிருக்கும் சிறந்த சிவத்தலமாகிய திருநல்லூரில் கோயில் கொண்டெழுந்தருளியுள்ள சிரீ கலியாண சுந்தரேசுவரருக்குச் செய்து கொண்ட பிரார்த்தனையின் மேல் பிறந்தமையால் குழந்தைக்கு ‘கலியாண சுந்தரம்’ என்று நாமகரணம் செய்தார்கள். மதுரைப் பெருமானுக்கும் உரிய திருநாமமாகிய அது ஒரு வகையில் என் ஆசிரியருடைய ஞாபகத்தையும் உண்டாக்கியது.

    நான் ஒரு குழந்தைக்குத் தந்தை யென்னும் நிலையை அடைந்தும் குடும்பப் பாதுகாப்பில் நான் குழந்தையாகவே இருந்தேன். நான் உண்டு, என் வேலை உண்டு, என் புத்தகங்கள் உண்டு. – இவ்வளவோடு நான் நின்றேன். குடும்பப் பாதுகாப்பைப் பற்றியோ, வரவு செலவைப் பற்றியோ, விசேசங்களைப் பற்றியோ நான் கவலை கொள்ளுவதில்லை. அவற்றைக் கவனிக்கும் பொறுப்பு முழுவதையும் என் தந்தையாரே மேற்கொண்டார். சம்பளம் வந்தவுடன் அதை அவர் கையில் கொடுத்து விடுவேன். ஒரு பைசா வேண்டுமானாலும் அவரிடமிருந்து பெற்றே செலவிடுவேன். இந்நிலையில் எவ்வளவோ சௌகரியம் இருப்பதை நான் அனுபவத்தில் உணர்ந்தேன். உப்பில்லை, புளியில்லை யென்ற குறை காதில் விழாதிருப்பதைப்போன்ற சுகம் வேறு இல்லை. குடும்பப் பாதுகாப்பு விசயத்தில் அவசியமான செலவை முன்பே யோசித்துச் செட்டாகச் செய்யும் கடமையை என் தந்தையார் ஏற்றுக் கொண்டார். இல்லையேல், ஒரு நாளில் பாதி நேரம் அதிலேயே எனக்குச்” சென்றிருக்கும். என்தந்தையார் எனக்கு இளமை முதல் உதவி புரிந்தாலும் குடும்பச் சுமையை என் தலையில் வைக்காமல் யான் கவலையின்றி வாழும்படி செய்த உபகாரத்தை யான் என்றும் மறக்க இயலாதுதமிழுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு வர வரப் பெருகி வளர்வதற்கு அந்த உதவியே காரணமாயிற்று.

    (தொடரும்)

    Sunday, April 20, 2025

    உ.வே.சா.வின் என் சரித்திரம் : 127 – சிலப்பதிகார ஆராய்ச்சி

     




    நான் வேலையை ஏற்றுக் கொண்ட வருடத்தில் சிலப்பதிகாரத்தில்

    கானல்வரி முதல் நான்கு காதைகள் பாடமாக வந்திருந்தன. அதைக் கோடை

    விடுமுறை முடிந்தவுடன் பாடம் சொல்ல வேண்டியவனாக இருந்தேன். “இவர்

    சிலப்பதிகாரத்தை எப்படிப் பாடம் சொல்லப் போகிறார்?” என்று சிலர்

    சொல்லிக் கொண்டிருந்ததாக என் காதில் பட்டது. ஆகவே அதைக் கூடிய

    வரையில் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டுமென்று நிச்சயம் செய்து

    கொண்டேன். இருந்த அச்சுப் பிரதியின் உதவி கொண்டு விசயத்தைத்

    தெரிந்துகொள்ளுவது கடினமாகவே இருந்தது. இந்த விசயங்களை நான்

    சுப்பிரமணிய தேசிகரிடம் சொன்னபோது அவர், “மடத்தில் ஏட்டுப்

    பிரதியிருக்கிறது. சின்னப் பண்டாரத்தினிடம் படித்துத் தெரிந்து கொள்ளலாம்”

    என்றார். பிள்ளையவர்களுக்கே சந்தேகமான புத்தகத்தில் நமசிவாய தேசிகர்

    தேர்ச்சியடைய நியாயம் இல்லை. ஆனாலும் சிறந்த அறிவாளியாகிய

    அவருடன் சேர்ந்து ஆராய்ந்து வரையறை செய்து கொள்வதில் பல இலாபம்

    உண்டு. அதனால் நான் சிலப்பதிகார ஏட்டுச் சுவடியை எடுத்துக் கொண்டு

    நமசிவாய தேசிகரிடம் சென்று படித்தேன். இருவரும் கவனித்து ஆராய்ந்தோம்.

    ஒரு விதமாகப் படித்து முடித்தோம்; பொருள் வரையறையும் செய்து

    கொண்டோம்.

    இப்படிச் சில நாட்கள் சென்றன. வேறு நூல்களைப் படிப்பதும், பாடஞ்

    சொல்வதுமாக மற்ற நாட்கள் போய்க் கொண்டிருந்தன.

    விடுமுறை முடிந்தவுடன் கும்பகோணத்தில் நிரந்தரமாகக் குடித்தனம்

    வைத்து விடலாமென்று என் தந்தையார் சொன்னார். அதன் பொருட்டு அங்கே

    ஒரு வீடு பார்ப்பதற்காக அவர் கும்பகோணத்திற்கு புறப்பட்டார்.

    புறப்படும்போது என் தாயார், “காவேரிக்குப் பக்கமாக இருந்தால் நல்லது”

    என்றார். “கல்லூரிக்கும் பக்கமாக இருந்தால் சௌகரியமாக இருக்கும்”

    என்றேன் நான். அவர் கும்பகோணத்திற்கு நடந்தே சென்றார். இரெயில்

    வண்டியில் ஏறும் வழக்கம் அவருக்கு இல்லை. கும்பகோணத்தில் சில தெருக்களைப் பார்த்து விட்டுப் பக்தபுரி அக்கிரகாரத்துக்குள் செல்லும்போது, “மங்களாம்பா இருக்கிறாள்; பயமில்லை” என்று யாரோ இருவர் பேசிக் கொண்டிருந்தது அவர் காதில் பட்டது.

    கும்பகோணம் கும்பேசுவரராலயத்தில் எழுந்தருளியிருக்கும் அம்பிகையின்

    திருநாமம் அது. அந்த வார்த்தைகள் நல்ல சகுனமாகத் தோன்றவே அவர்

    அந்தத் தெருவின் மத்தியில் கீழ்ச் சிறகில் ஒரு வீட்டைப் பார்த்துத் திட்டம்

    செய்தார். மாதம் மூன்றரை உரூபாய் வாடகை பேசினார். பதினைந்தடி அகலமும்

    நாற்பதடி நீளமும் உள்ளது அது. வீட்டிற்குப் பின் நீண்ட தோட்டமும்

    இருந்தது.

    வீடு எல்லாரும் இருப்பதற்குப் போதுமானதாக இராவிட்டாலும்

    சகுனத்தின் விசே்த்தால் என் தந்தையாருக்கு அதுவே பெரிய மாளிகையாகத்

    தோற்றியது. வாழ்க்கையில் பல வகையான துன்பங்களையும், வறுமையின்

    சங்கடங்களையும் அனுபவித்துத் தேர்ந்த அவருக்குப் பணம் கிடைத்தால்

    எவ்வளவு செட்டாக வாழமுடியுமோ அவ்வளவு செட்டாக வாழ வேண்டுமென்ற

    சங்கற்பம் இருந்தது. அதனால் அவருடைய நோக்கத்துக்கு அந்த வீடு

    ஏற்றதாகவே அமைந்தது.

    வீட்டைப் பார்த்துத் திட்டம் செய்துவிட்டு நடந்தே திருவாவடுதுறை

    வந்து சேர்ந்தார். “காவிரிக்கும் கல்லூரிக்கும் பக்கமாக இருக்கிறது; இரண்டாம்

    வேளை ஆகாரத்துக்கு வீட்டுக்கு வந்து போகலாம். நல்ல சகுனமாயிற்று”

    என்று சொல்லி எங்களுக்குச் சந்தோசத்தை உண்டாக்கினார்.

    விடுமுறை முடிந்தது. என் தகப்பனாருக்குத் திருவாவடுதுறையை விட்டுப்பிரிய மனம் வரவில்லை. ஆனாலும் ஒரு வகையாகச் சமாதானம் செய்து கொண்டார். யாவரும் சுப்பிரமணிய தேசிகரிடத்திலும் மற்ற அன்பர்களிடத்திலும் விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டுக் கும்பகோணம் வந்து புது வீட்டில் புகுந்தோம். அதுவரையில் திருவாவடுதுறை வாசியாக இருந்த நான் அன்று முதல் கும்பகோண நகர வாசியாக என் வாழ்க்கையைத் தொடங்கினேன்

    (தொடரும்)