Saturday, April 13, 2024

உ.வே.சா. வின் என் சரித்திரம் 52: சிதம்பரம்பிள்ளையின் கலியாணம்

 




(உ.வே.சா. வின் என் சரித்திரம் 51: மகா வைத்தியநாதையர் – தொடர்ச்சி

என் சரித்திரம்
அத்தியாயம்-51

சிதம்பரம்பிள்ளையின் கலியாணம்

திருவாவடுதுறையில் இரண்டு பிரிவாக நடைபெற்று வந்த பாடங்களில்
சின்ன வகைக்குரிய பாடம் பழனிக்குமாரத் தம்பிரான், ஆறுமுகத்தம்பிரான்
முதலியவர்கள் விரும்பியபடி சில தினங்களுக்குப் பிறகு காலையிலே நடைபெற
ஆரம்பித்தது. குமாரசாமித் தம்பிரானும் நானும் கேட்டு வந்த பாடம்
பிற்பகலிலும் முன் இரவிலும் நடந்தது. அப்பாடத்தில் திருநாகைக்காரோணப் புராணம் முடிந்தவுடன் காசி காண்டத்தையும் பிரமோத்தர
காண்டத்தையும் 
நாங்கள் படித்தோம். அப்பால் கந்த புராணம்
ஆரம்பிக்கப்பட்டது. பாடம் மிகவும் வேகமாக நடந்தது. அப்போது
கண்ணப்பத் தம்பிரானென்பவரும் கும்பகோணம் வைத்தியநாத
தேசிகரென்பவரும் 
உடனிருந்து பாடம் கேட்டு வந்தனர். அவ்விருவரும்
இசையில் வல்லவர்கள்.

குமாரபுரிப் படலம்

கந்தபுராணத்தின் முதற் காண்டத்தில் குமாரபுரிப் படலமென்ற ஒரு
பகுதி உள்ளது. அதில் முருகக் கடவுள் சேய்ஞலூரை உண்டாக்கி அங்கே
தங்கியிருந்தாரென்ற செய்தி வருகிறது. சண்டேசுவரர் அவதரித்த தலமும்
அதுவே.

முருகக் கடவுள் அங்கே எழுந்தருளியிருந்தபோது அவரோடு வந்த
தேவர்களும் இந்திரனும் தங்கியிருந்தார்கள். இந்திரன் இந்திராணியைப் பிரிந்து
வந்து வருத்தத்தை ஆற்ற மாட்டாமல் இரவெல்லாம் தூங்காமல்
புலம்பினானென்று கவிஞர் வருணிக்கின்றார். அப்பகுதி விரிவாகவும்
இந்திரனது மயல் நோயின் மிகுதியைத் தெரிவிப்பதாகவும் அமைந்துள்ளது.

சாமிநாத பிள்ளை

சில காலத்திற்குப் பின்பு திருநெல்வேலி ஜில்லாவிலுள்ள
வண்டானமென்னும் ஊரிலிருந்து சாமிநாத பிள்ளையென்பவர் மடத்தில் தமிழ்
படிப்பதற்காக வந்தார். ஓரளவு பயிற்சியுள்ளவர்களுக்கு என் ஆசிரியரும்
சுப்பிரமணிய தேசிகரும் பாடம் சொல்வார்கள். நூதனமாக வந்தவர்களுக்குப்
பழைய மாணாக்கர்கள் சிலர் பாடம் சொல்வதுண்டு. முக்கியமாகக் குமாரசாமித்
தம்பிரானும் நானும் அவ்வாறு சொல்லுவோம்.

சாமிநாத பிள்ளை குமாரசாமித் தம்பிரானுக்குப் பூர்வா சிரமத்தில்
உறவினர். அவர் அத்தம்பிரானிடம் பாடம் கேட்டு வந்தார். ஒரு நாள் இரவு
பத்து மணி வரையில் அம்மாணாக்கர் தம்பிரானிடம் பாடம் கேட்டனர். பிறகு
தம்பிரான் சயனித்துக் கொண்டார். நானும் அங்கே ஓரிடத்திற் படுத்துத்
துயின்றேன்.

சேய்ஞலூர் இந்திரன்’

குமாரசாமித் தம்பிரான் நள்ளிரவில் பன்னிரண்டு மணிக்கு எழுந்து
பார்த்தபோது, சாமிநாதபிள்ளை படுத்து உறங்காமலேதூணில் சாய்ந்தபடியே இருந்தார். ‘இவர் ஏன் இப்படி இருக்கிறார்?’ என்று எண்ணினார். “ஏதோ யோசித்துக் கொண்டிருப்பதாகத் தோற்றுகிறது. நாம் இப்போது கலைக்க வேண்டாம்” என்ற கருத்தோடு தம்பிரான் மீட்டும் படுத்தனர். அப்பால் சிறிது நேரங்கழித்து விழித்துப் பார்த்தபோதும் அம்மாணாக்கர் முன்பு இருந்த படியே இருந்தார். அன்று இரவு இப்படி நான்கு முறை விழித்துப் பார்த்தபோதும் அவர் அந்நிலையில் இருந்ததைக் கவனித்த
தம்பிரான், “இவர் ஏதோ மன வருத்தத்தால் இம்மாதிரி இருக்கிறார் போலும்!
அவ்வருத்தத்துக்குக் காரணம் இன்னதென்று தெரிந்து நீக்க வேண்டும்” என்று
முடிவு செய்தனர்.

தம்பிரான் தினந்தோறும் காலையில் ஐந்து மணிக்கே எழுந்து காவிரிக்கு
குளிக்கப் போவார். அப்படி அன்று காலையில் எழுந்தபோதும்
சாமிநாதபிள்ளை தூணிற் சாய்ந்தபடியே இருந்ததைப் பார்த்து, “இராத்திரி
முழுவதும் குத்த வச்சுக் கொண்டிருந்தீரே! காரணம் என்ன? என்ன துக்கம்
வந்துவிட்டது?” என்று கேட்டார்.

அவர் ஏதோ கனவிலிருந்து திடீரென்று தெளிந்தவரைப்போல எழுந்து,
“அவளைத்தான் நினைத்துக்கொண்டிருந்தேன்” என்றார்.

அம்மாணாக்கர் கலியாணம் ஆனவர். தம் மனைவியைப் பிரிந்து
வந்தவர் அந்த விசயம் தம்பிரானுக்குத் தெரியுமாதலின் சாமிநாதபிள்ளையின்
வருத்தத்திற்குரிய காரணத்தையும் தெரிந்து கொண்டார்.

நான் எழுந்தவுடன் தம்பிரான் என்னைப் பார்த்துச் சிரித்தபடியே,
“சேய்ஞலூர் இந்திரன் இங்கே இருக்கிறானே, தெரியுமா?” என்று கேட்டார்.

எனக்கு ஒன்றும் விளங்கவில்லை.

“கந்த புராணத்தில் குமாரபுரிப்படலத்தில் இந்திரன் இரவெல்லாம்
தூங்காமல் வருந்தியதாகச் சொல்லப்பட்டுள்ள விசயம் ஞாபகம்
இருக்கிறதோ?”

“ஞாபகம் இல்லாமல் என்ன? ஐயா அவர்கள், காவியங்களில்
அத்தகைய செய்திகள் வருமென்று சொன்னார்களே” என்றேன்.

“அதைப்பற்றி நான் சொல்ல வரவில்லை. சேய்ஞலூரில் தூங்காமல்
இந்திராணியை நினைத்துக் கொண்டிருந்த இந்திரன் இப்போது சாமிநாத
பிள்ளையாக அவதரித்து வந்திருக்கிறான்”என்று சொல்லிச் சிரித்தபடியே அம்மாணாக்கரைப் பார்த்தார். அவர் தம் முகத்தைக் கவிழ்த்துக் கொண்டார்.

பிறகு குமாரசாமித் தம்பிரான் எனக்கு விசயத்தை விளக்கின போது
நானும் அவரோடு சேர்ந்து சிரித்தேன். அதுமுதல் அம் மாணாக்கரை நாங்கள்
‘சேய்ஞலூர் இந்திரன்’ என்றே அழைத்து வரலானோம்.

சிதம்பரம்பிள்ளையின் விவாக முயற்சி

என் ஆசிரியருக்குச் சிதம்பரம்பிள்ளை என்று ஒரு குமாரர் இருந்தார்.
அவருக்குத் தக்க பிராயம் வந்தபிறகு கலியாணம் செய்வதற்குரிய முயற்சிகள்
நடைபெற்றன. சீகாழியிலிருந்த குருசாமிபிள்ளை என்பவருடைய பெண்ணை
நிச்சயம் செய்து மாயூரத்திலேயே கலியாணம் நடத்த ஏற்பாடாகியிருந்தது. சிரீ
சுப்பிரமணிய தேசிகரும் மடத்து உத்தியோகத்தில் இருந்த தம்பிரான்களும்
வேறு கனவான்களும் பொருளுதவி செய்தனர். கலியாண
ஏற்பாடுகளையெல்லாம் கவனிக்கும் பொருட்டு ஆசிரியர் மாயூரத்திற்குச்
சென்றார். நானும் உடன் சென்றேன்.

சிரீ நமச்சிவாய தேசிகர்

அயலூரிலுள்ள கனவான்கள் பலருக்கு விவாக முகூர்த்த பத்திரிகை
அனுப்பப் பெற்றது. சிலருக்கு விரிவான கடிதங்களும் எழுதப்பட்டன.
ஒவ்வொரு கடிதத்திலும் தலைப்பில் ஒரு புதிய பாடலை எழுதச் செய்தல்
ஆசிரியர் வழக்கம்.
 அக்கடிதங்களை எல்லாம் எழுதியவன் நானே.
கல்லிடைக்குறிச்சியில் சின்னப் பண்டார சந்நிதியாக இருந்த சிரீ நமச்சிவாய
தேசிகருக்கு ஒரு கடிதம் எழுதத் தொடங்கும்போது அவர் விசயமாக ஐந்து
பாடல்களைச் சொன்னார். கடிதம் எழுதியபிறகு நமச்சிவாய தேசிகருடைய
இயல்புகளை எனக்கு எடுத்துக் கூறினார்:-

“சிரீ நமச்சிவாய தேசிகர் நல்ல கல்வி அறிவுள்ளவர். தமிழிலும் வட
மொழியிலும் ஆழ்ந்த பயிற்சியுடையவர். இடைவிடாமற் பாடம் சொல்லுபவர்.
இலௌகிகத்திலும் திறமையுள்ளவர். கல்லிடைக்குறிச்சியில் இருந்து கொண்டு பல
சீர்திருத்தங்களைச் செய்திருக்கிறார். அவரை யாராலும் ஏமாற்ற முடியாது
உம்மைக் கண்டால் அவர் மிகவும் சந்தோசிப்பார்.”

“திருவாவடுதுறையில் இராமல் கல்லிடைக்குறிச்சியில் இருப்பதற்குக்
காரணம் என்ன?” என்று நான் கேட்டேன் .திருவாவடுதுறை மடத்திற்குத் திருநெல்வேலி சில்லாவில் பல கிராமங்கள் இருக்கின்றன. கல்லிடைக்குறிச்சியைச் சார்ந்தும் பல உள்ளன.

(தொடரும்)

என் சரித்திரம், உ.வே.சா.

Saturday, April 06, 2024

உ.வே.சா. வின் என் சரித்திரம் 51: மகா வைத்தியநாதையர்

 




(உ.வே.சா. வின் என் சரித்திரம் 50: கலைமகள் திருக்கோயில் – தொடர்ச்சி)

என் சரித்திரம்
அத்தியாயம்-50
மகா வைத்தியநாதையர்

ஒவ்வொரு நாளும் பிள்ளையவர்களிடம் பாடம் கேட்கும் நேரம் போக
மற்ற நேரங்களிற் பழைய பாடங்களைச் சிந்தித்து வருவது மாணாக்கர்கள்
வழக்கம். சில சமயம் நான் ஆசிரியர் சொல்லும் புதிய பாடல்களையும்
கடிதங்களையும் எழுதுவேன்.

தேசிகர் பாடம் சொல்லுதல்

அவகாசம் ஏற்படும்பொழுது சுப்பிரமணிய தேசிகர் தாமே சிலருக்குப்
பாடம் சொல்லுவார். திருக்குறள் பரிமேலழகருரையில் அவருக்கு மிக்க
விருப்பம் உண்டு. அதனையும், திருக்கோவையார் இலக்கண விளக்கம் என்னும்
நூல்களையும் யாருக்கேனும் பாடம் சொல்லுவார். தேசிகர் இலக்கணச்
செய்திகளை வரையறையாகச் சொல்வதும், உரிய இடங்களில் வடமொழிப்
பிரயோகங்களையும் வடநூற் செய்திகளையும் சொல்லுவதும் மிகவும்
இனிமையாக இருக்கும். சில குறிப்பிட்ட பாடங்களையே அவர் சொல்வார். ஆனால் அவற்றைத் திருத்தமாகச் சொல்வார். தமக்குப் புலப்படாத விசயம் வந்தால்,
“பிள்ளையவர்களைக் கேட்க வேண்டும்” என்று வெளிப்படையாகச் சொல்வார்.

மகா வைத்தியநாதையர் பட்டம் பெற்ற வரலாறு

சில நாட்களில் இரவில் பாடம் நடவாதபோது சுப்பிரமணிய தேசிகரிடம்
நான் போவதுண்டு. அப்பொழுது பிள்ளையவர்கள் சொல்லும் பாடங்களைப்
பற்றி விசாரிப்பார்; என்ன என்ன அரிய விசயங்கள் சொன்னார்கள்
என்பதைக் கேட்டறிந்து பாராட்டுவார். பல பழைய வரலாறுகளைச்
சொல்லுவார். நான் சங்கீதத்திற் பயிற்சியுடையவன் என்பதை அறிந்தவராதலின்
சங்கீத வித்துவான்களைப் பற்றிய பல செய்திகளைச் சொல்லுவார்.

ஒரு நாள், “மகா வைத்தியநாதரைத் தெரியுமோ?” என்று அவர்
கேட்டார்.

“அவர்களைப் பற்றி நான் கேட்டிருக்கிறேன்; நேரே பார்த்ததில்லை”
என்றேன்.

“நீர் அவசியம் பார்த்து அவருடன் பழகவேண்டும். இம்மடத்துக்கு
வேண்டியவர்களுள் அவர் முக்கியமானவர். தமிழ் விசயத்தில்
பிள்ளையவர்கள் எப்படியோ அப்படியே சங்கீதவிசயத்தில் அவரைச்
சொல்லவேண்டும். அவர் தமிழிலும் நல்ல பயிற்சியுள்ளவர். அவர் இங்கே
அடிக்கடி வந்து நம்மை மகிழ்வித்துப் போவார்.”

‘அவர்களது சங்கீதத்தை இதுவரையில் கேளாமற் போனது என்
துரதிர்ட்டமே” என்றேன்.

“அவரை முதலில் நாம் கல்லிடைக் குறிச்சியில் சின்னப்பட்டத்தில்
இருந்தபோது பார்த்தோம். அப்பொழுது அவர் மிகவும் பால்யமாக இருந்தார்.
அப்போதே அவரிடத்தில் சங்கீதத் திறமை மிகுதியாக விளங்கியது. பெரிய
வைத்தியநாதையர், சின்ன வைத்தியநாதையர் என்ற இரண்டு வித்துவான்களும்
வேறு பலரும் வந்திருந்தனர். இவ்விடம் போலவே கல்லிடைக் குறிச்சியிலும்
அடிக்கடி பல வித்துவான்கள் வந்து போவார்கள். ஒரு நாள் ஒரு மகாசபை
கூட்டி இந்த மூன்று வைத்தியநாதையர்களையும் பாடச் சொன்னோம்.
மற்றவர்களைவிட மகா வைத்தியநாதையருடைய சக்திதான் சிறந்ததாக
இருந்தது. இவ்விசயத்தை அவரோடு போட்டியிட்ட வித்துவான்களே
ஒப்புக்கொண்டனர். அந்த மகா சபையில் எல்லாவித்துவான்களுடைய சம்மதத்தின் மேல் அவருக்கு ‘மஃகா’ என்ற பட்டம் அளிக்கப்பெற்றது. அதற்கு முன் வெறும் வைத்தியநாதையராக இருந்த அவரை அன்று முதல்தான் யாவரும் மகா வைத்தியநாதையரென்று அழைத்து வரலாயினர்.”

சுப்பிரமணிய தேசிகர் பின்னும் அச்சங்கீத வித்துவானுடைய
பெருமைகளை எடுத்துக் கூறிவிட்டு, “மகா வைத்தியநாதையருடைய
தமையனாராகிய இராமசுவாமி ஐயரென்பவர் தமிழிலே நல்ல அறிவுடையவர்.
செய்யுட்களும் கீர்த்தனங்களும் இயற்றுவார். பெரிய புராணம் முழுவதையும்
கீர்த்தனங்களாகச் செய்திருக்கிறார். மகா வைத்தியநாதையருடைய தமிழறிவு
விருத்தியாவதற்கு அவர் முக்கியமான காரணம்” என்றார்.

மகா வைத்தியநாதையரது பெருமையையும் அவரிடம் ஆதீனத்
தலைவருக்கு இருந்த அன்பையும் நன்றாகத் தெரிந்து கொண்டது முதல்
அப்பெரியாரைத் தரிசிக்க வேண்டுமென்ற விருப்பம் எனக்கு உண்டாயிற்று.
அவர் தமிழிலும் நல்ல அறிவுள்ளவரென்று தெரிந்தபோது என் விருப்பம்
அதிகமாயிற்று. அது நிறைவேறும் காலம் வந்தது. ஒரு நாள் கோடக நல்லூர்
சிரீ சுந்தர சுவாமிகள்
 என்னும் பெரியாருடன் அவர் மடத்திற்கு வந்தார்.

சுந்தர சுவாமிகள்

சுந்தர சுவாமிகள் என்பவர் அதி வருணாசிரமம் பூண்ட ஒரு துறவி.
வேதாந்த கிரந்தங்களிலும், சிவ புராணங்களிலும் தேர்ந்த அறிவுள்ளவர்.
சூதசம்ஃகிதையை அங்கங்கே விரிவாகப் பிரசங்கம் செய்து பலருடைய
உள்ளத்தில் சிவ பக்தியை விதைத்த பெரியார் அவர். திருவையாற்றோடு
சார்ந்த சப்த தான தலங்கள் ஏழிலும் திருமழபாடியிலும் பல
செல்வர்களைக் கொண்டு திருப் பணிகள் செய்வித்து அந்த எட்டு
தலங்களுக்கும் ஒரே நாளில் கும்பாபிசேகம் நடத்த எண்ணிய அப்பெரியார்
அதன் பொருட்டுத் தமிழ் நாட்டிலுள்ள சிவநேசச் செல்வர்களிடம் பொருளுதவி
பெற்று வந்தனர்.

அவருடைய சிசுயர்கள் பலர். எல்லா வகுப்பினரிலும் அவருக்குச்
சிசுயர்கள் உண்டு. மகா வைத்தியநாதையர் அவரிடம் மந்திரோபதேசம்
பெற்றுச் சில வேதாந்த நூல்களையும் பாடம் கேட்டனர். திருநெல்வேலியில்
ஐயாசாமிபிள்ளை என்னும் அன்பர் அவருடைய உபதேசம் பெற்று ஒரு மடம்
கட்டிக் கொண்டு தத்துவ விசாரமும் ஞானசாதனமும் செய்து வாழ்ந்து வந்தார்.
தத்துவராயர் இயற்றிய பாடுதுறை முதலிய நூல்களில் ஆழ்ந்த பயிற்சியுள்ளவர்
அவர்.

திருவாவடுதுறைக்குச் சுந்தர சுவாமிகள் வந்தது கும்பாபிசேகத்திற்குப்
பொருளுதவி பெறும் பொருட்டே. அவருடன் மகா வைத்தியநாதையர்,
திருநெல்வேலி ஐயாசாமி பிள்ளை முதலிய பலர் வந்தனர்.

பிள்ளையவர்களுக்கும் சுந்தர சுவாமிகளுக்கும் முன்பே பழக்கம் உண்டு.
பிள்ளையவர்கள் தமிழில் சூதசம்ஃகிதையை மொழிபெயர்த்து இயற்றியிருப்பது
தெரிந்து அதிலுள்ள செய்யுட்களை மகா வைத்தியநாதையர் மூலமாகக் கேட்டு
அதன் சுவையில் ஈடுபட்டுச் சுந்தர சுவாமிகள் பாராட்டுவார். வடமொழிச்
சூதசம்கிதையில் நிரம்பிய ஞானமுள்ள அவருக்குத் தமிழ் நூலின் பெருமை
நன்றாக வெளிப்பட்டது. அவர் தம்முடைய பிரசங்கங்களில் இடையிடையே
தமிழ்ச் சூதசம்ஃகிதையிலிருந்தும் சில செய்யுட்களைச் சொல்வதுண்டாம்.

சுவாமிகள் தம் பரிவாரத்துடன் ஓரிடத்தில் தங்கிச் சுப்பிரமணிய
தேசிகரை எப்பொழுது பார்க்கலாம் என்று விசாரித்து வர ஒருவரை
அனுப்பினார். அதற்குள் அவருடைய வரவை அறிந்த எங்கள் ஆசிரியர் அவர்
இருந்த இடத்திற்கு வந்து அவரை வந்தனம் செய்தார்.

சுவாமிகளும் தேசிகரும்

அப்பால் இருவரும் சைவ சம்பந்தமான அரிய விசயங்களைப் பற்றி
ஒருவரோடொருவர் சில நேரம் மிக அழகாகப் பேசிக்கொண்டார்கள்.
எங்களுக்கு அச்சம்பாசணையால் பல நூதன விசயங்கள் தெரியலாயின.

சுப்பிரமணிய தேசிகர் தம் வரவை எதிர்பார்த்திருக்கிறார் என்றறிந்து
சுவாமிகளும் பிறரும் எழுந்து சென்றார்கள். தேசிகர் ஒடுக்கத்தின் வாயிலுக்கு
வந்து சுவாமிகளை வரலேற்று அழைத்துச் சென்று அவரை இருக்கச் செய்து
தாமும் ஆசனத்தில் அமர்ந்தார். அவர் உத்தரவுப்படியே யாவரும் அருகில்
இருந்தனர். அக் கூட்டத்தில் இருந்த நான் மகா வைத்தியநாதையர்
முகத்தையும் சுந்தர சுவாமிகள் முகத்தையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டே
இருந்தேன்.

தேசிகரும் சுவாமிகளும் முதலில் முகமன் கூறிக் கொண்டு அப்பால் பல
விசயங்களைப் பற்றிப் பேசினர். தாம் வந்தகாரியத்தைச் சுவாமிகள் தெரிவித்தார். தேசிகர் உசிதமான பொருளுதவி செய்வதாக வாக்களித்தார்.

என் ஆவல்

மகா வைத்தியநாதையரைப் பார்ப்பதே எனக்கு மிகவும் ஆனந்தமாக
இருந்தது. அவர் முகத்திலே இருந்த ஒளியும் அமைதியும் அவர் உள்ளத்தின்
இயல்பை விளக்கின. அத்தோற்றத்தினால் மட்டும் என் ஆவல்
அடங்கவில்லை. அவர் இடையிடையே பேசின மெல்லிய வார்த்தைகளிலே
இனிமை இருந்தது. அந்த இனிமையும் என் மனத்தைக் கவர்ந்தது. ஆனால்
அவ்வார்த்தைகளாலும் என் ஆவல் அடங்கவில்லை. வைத்தியநாதையராக
இருந்த அவர் எதனால் மகா வைத்தியநாதையர் ஆனாரோ அச்சங்கீதத்தைக்
கேட்க வேண்டுமென்ற ஆசை எனக்கு அதிகரித்தது. ‘இவர் வந்திருக்கிற
காரியமோ வேறு. இக்கூட்டத்தில் ஒரு சம்பந்தமும் இல்லாமல் நமது ஆவலை
நிறைவேற்றுவதற்காக இவர் பாடுவது சாத்தியமாகுமா? நமக்கு இவ்வளவு ஆசை
இருப்பது இவருக்குத் தெரிவதற்குத்தான் சந்தர்ப்பம் உண்டா?……..எப்படியாவது
ஒரு பாட்டைக் கேட்டால் போதுமே…..ஒரு பாட்டானால் என்ன? நூறு
பாட்டானால் என்ன? அதற்கு இதுவா சமயம்?’ என்று என் மனத்துக்குள்ளே
ஆட்சேப சமாதானங்கள் எழுந்தன. இந்த யோசனையிலே சுந்தர சுவாமிகளும்
தேசிகரும் என்ன பேசினார்கள் என்பதைக் கூட நான் நன்றாகக்
கவனிக்கவில்லை.

திடீரென்று எனக்கு ஆச்சரியம் உண்டாகும்படி சுப்பிரமணிய தேசிகர்
பேசத் தொடங்கினார்: “உங்களுடைய சங்கீதத்தைக் கேட்க வேண்டுமென்று
இங்கே படிக்கும் மாணாக்கர்கள் சிலர் ஆசைப்படுகிறார்கள். பிள்ளையவர்கள்
வாக்கிலிருந்து சில பாடல்களைச் சொன்னால் திருப்தியாக இருக்கும்” என்று
அவர் மகா வைத்தியநாதையரை நோக்கிக் கூறிய போது, நான் என்
காதுகளையே நம்பவில்லை. ‘நாம் கனவு காண்கிறோமோ? நம்முடைய
யோசனையினால் விளைந்த பகற் கனவா இது?’ என்று கூட நினைத்தேன்
நல்லவேளை, அது வாசுதவமாகவே இருந்தது.

தேவகானம்

“அதற்கென்ன தடை? காத்திருக்கிறேன்” என்று சொல்லி மகா
வைத்தியநாதையர் பாட ஆரம்பித்து விட்டார். தேவகானமென்று
சொல்வார்களே அச்சங்கீதம் அப்படித்தான் இருக்குமோவென்று எனக்குத்
தோற்றியது. முதலில் தமிழ்ச் சூத சங்கிதையிலிருந்து சில செய்யுட்களைச்
சொல்லத் தொடங்கினார். தமிழ்ச் செய்யுளாகஇருப்பதனாலே முதலில் அவை மனத்தைக் கவர்ந்தன. பிள்ளையவர்கள் வாக்கென்ற பெருமையும் அவைகளுக்கு இருந்தது. மகா வைத்தியநாதையருடைய இன்னிசையும் சேர்ந்து அப்பாடல்களுக்கு
என்றுமில்லாத அழகைக் கொடுத்தது. அந்த இன்னிசை முதலில் இந்த
உலகத்தை மறக்கச் செய்தது. பாவத்தோடு அவர் பாடுகையில் ஒவ்வொரு
வார்த்தையும் உள்ளத்துள்ளே படிந்து படிந்து ஒரு பெரிய காட்சியை
நிருமாணம் செய்து வந்தது.

சூதசங்கிதையில் கைலாசத்தில் சிவபெருமான் எழுந்தருளியிருக்கும்
காட்சியை வருணிக்கும் செய்யுட்கள் அவை. வெறும் பாடல்களை மாத்திரம்
படித்தபோதும் எங்களுக்கு உள்ளத்துள்ளே காட்சிகள் எழும். புறத்தே உள்ள
பார்வையும் இருக்கும். ஆனால் அப்பாடல்கள் இசையோடு கலந்து
வந்தபோதோ எல்லாம் மறந்து போயின. அப்பாட்டு எப்படிச் சுருதியிலே
லயித்து நின்றதோ அப்படி எங்கள் மனம் அப்பாட்டின் பாவத்திலே லயித்து
நின்றது. ஒரு பாடலைக் கூறி நிறுத்தும் போதுதான் அவர் பாடுகிறார், நாம்
கேட்கிறோம் என்ற வேற்றுமை உணர்ச்சி உண்டாயிற்று.

பாடல்களைக் கூறிவிட்டுப் பிறகு பொருளும் சொன்னார். பாடல்
சொல்லும்போதே பொருள் தெரிந்து விட்டது.

பாட ஆரம்பித்துவிட்டால் அதை நிறுத்திவிட மனம் வருமா?
கேட்பவர்களுக்குப் போதுமென்ற திருப்திதான் உண்டாகுமா? சூத
சங்கிதையிலிருந்து அப்பெரியாருடைய இசை வெள்ளம் வேறு மடைகளிலே
திரும்பியது. பிள்ளையவர்கள் வாக்காகவுள்ள வேறு பல பாடல்களை அவர்
இசையுடன் சொன்னார்.

பிறகு சுப்பிரமணிய தேசிகர், “உங்கள் தமையனார் வாக்காகிய பெரிய
புராணக் கீர்த்தனையிலிருந்து சில கீர்த்தனங்கள் பாட வேண்டும்” என்றார்.
வைத்திய நாதையரிடத்திலுள்ள ‘சரக்கு’ இன்னதென்று தேசிகருக்கு நன்றாகத்
தெரியும். அவர் ஒவ்வொன்றாகக் கேட்டுக் கொண்டே வர அந்தச் சங்கீத
சிகாமணி தடையின்றிப் பாடி வந்தார்.

அவர் கீர்த்தனங்களைப் பாடும்போது பிடில், மிருதங்கம் முதலிய பக்க
வாத்தியங்கள் இல்லை. அக்காரணத்தால் அவர் இசைக்குக் குறைவு இருந்ததாக
எனக்குத் தோற்றவில்லை. அவர் கையினால் மெல்லத் தாளம் போட்டுப்
பாடியபோது ஒவ்வொருவருடைய இருதயமும் அப் பாட்டோடு ஒன்றிப்
பக்கவாத்தியம் வாசித்ததென்றுதான் சொல்ல வேண்டும்
.

இணையற்ற இன்பம்

அதுவரையில் அடைந்திராத இன்பத்தை அன்று அடைந்தேன்.
‘இவர்களுடனே போய் இருந்து சங்கீத அப்பியாசம் செய்யலாமா?’ என்ற
ஆசைகூட இடையே தோற்றியது. ஒருவாறு மகா வைத்தியநாதையரது கான
மழை நின்றது. சுந்தர சுவாமிகள் விடை பெற்றுக் கொண்டனர். அவரோடு மகா
வைத்தியநாதையரும் பிறரும் விடை பெற்று எழுந்தனர். அவர்கள் யாவரும்
மடத்தில் அவரவர்களுக்குரிய இடத்தில் விருந்துண்டு பிற்பகலில்
திருவையாற்றுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

அன்று பிற்பகலில் சுப்பிரமணிய தேசிகரை நான் பார்த்த போது,
“காலையில் மகா வைத்தியநாதையர் பாட்டைக் கேட்டீரா?” என்று அவர்
கேட்டார். “இந்த மாதிரி சங்கீதத்தை இதுவரை நான் கேட்டதே இல்லை.
அவர்களுடைய சாரீரம் எல்லாருக்கும் அமையாது. வெறும்
சாதகத்தால்மட்டும் வந்ததன்று அது” என்றேன்.

“சாதகம் மாத்திரம் போதாதென்பது உண்மைதான். அவர் நல்ல
சிவபக்தர். சிவகிருபை அவருக்கு நல்ல சாரீரத்தை அளித்திருக்கிறது. அவர்
செய்துவரும் அப்பியாசம் அந்தச் சாரீரத்திற்கு வளப்பத்தைத் தருகிறது.
எல்லாவற்றிற்கும் மேலாக அவரது தூய்மையான ஒழுக்கம் அந்தத் திவ்விய
சாரீரத்தின் அழகு கெடாமல் பாதுகாக்கிறது” என்று சொல்லி விட்டு, “அவர்
தமிழறிவும் உமக்குப் புலப்பட்டிருக்குமே!” என்றார்.

“ஆம், அவர் பாடல் சொல்லும்போதே பொருள் தெளிவாகிறது”
என்றேன்.

(தொடரும்)

என் சரித்திரம், உ.வே.சா.

Saturday, March 23, 2024

உ.வே.சா.வின் என் சரித்திரம் 49 : அபய வார்த்தை

 




(உ.வே.சா.வின் என் சரித்திரம் : அத்தியாயம்- 48 : சில சங்கடங்கள்-தொடர்ச்சி)

என் சரித்திரம்
அபய வார்த்தை

ஓதுவார், “ஐயா, அவரைச் சொன்னால் நாக்கு அழுகிப்போம்.
இருந்திருந்து பரம சாதுவாகிய அவரைச் சொல்ல உமக்கு எப்படி ஐயா மனம்
வந்தது!” என்றார். அம் மனிதர் ஒன்றும் சொல்ல மாட்டாமல் எழுந்து போய்
விட்டார்.

அபய வார்த்தை

அந்த மூவர் வார்த்தைகளையும் நான் கேட்டேன். “நல்ல வேளை,
பிழைத்தோம்” என்ற ஆறுதல் எனக்கு உண்டாயிற்று. உடனே எழுந்தேன்.
“இவ்வளவு நேரம் என்னைப் பற்றி நடந்த சம்பாசணையைக் கவனித்தேன்.
எனக்கு முதலில் உண்டான சங்கடத்தை நீங்கள் நீக்கி விட்டீர்கள். என்
உள்ளம் பதறிவிட்டது. இப்போது தான் என் மனம் அமைதியை அடைந்தது.
என்னை ஒரு பெரிய அபவாதத்திலிருந்து காப்பாற்றினீர்கள்” என்று
அவர்களை நோக்கிக் கூறினேன். அப்படிப் பேசும்போது எனக்கு ஒரு
விதமான படபடப்பு இருந்தது. அதைக் கவனித்த பன்னிருகைத் தம்பிரான்,
“நீங்கள் ஏன் கவலைப்படவேண்டும்? நாங்கள் எதையும் நம்பிவிடுவோமா?
எந்தக் காலத்தும் உங்களுக்கு ஒரு குறைவு வரும்படி செய்ய மாட்டோம்.
வந்த மனுசன் ஏதோ அசட்டுத் தனமாய்ச்சொன்னானென்று நினைக்க வேண்டும். அதை மறந்து விடுங்கள்”
என்று சொல்லி என்னைத் தேற்றினார். “இந்த அபய வார்த்தைகளை நான்
ஒரு போதும் மறவேன்” என்று கூறினேன்.

கண்டி அகப்பட்டது

எங்கே பார்த்தாலும் இந்தக் களவைப்பற்றிய பேச்சாகவே இருந்தது.
மறுநாட் காலையில் பத்து மணிக்கு மடத்தின் ஒரு பக்கத்தில் பன்னிருகைத்
தம்பிரான் சிலரோடு பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று
குளப்புரையிலிருந்து ஒரு வேலைக்காரன் மிகவும் வேகமாக ஓடிவந்து
தம்பிரானிடம் அந்தக் கண்டியைக் கொடுத்து, “சாமீ, இன்று காலையில் நான்
எல்லா இடங்களையும் பெருக்கிக் கொண்டிருந்தேன். படித்துறைச் சுவரின் மாட
மொன்றில் உள்ள விநாயகருக்குப் பின்னே ஏதோ பளிச்சென்று தெரிந்தது.
உடனே கவனித்தேன். இந்தக் கண்டி அகப்பட்டது” என்று சொன்னான்.

அதை வாங்கிக் கொண்டு பன்னிருகைத் தம்பிரான் மிகவும் மகிழ்ச்சி
அடைந்து, “நேற்று நான் அனுசுட்டானத்துக்குப் போகையில் அங்கே இதை
மாடத்தில் வைத்து விட்டுத் தோட்டத்துக்குப் போனேன். அப்போது
திடீரென்று ஒரு சேவகன். “சந்நிதானம் அவசரமாக அழைக்கிறது” என்று
குடல் தெறிக்க ஓடிவந்து சொன்னான். என்னவோ ஏதோ என்று நானும்
மிகவும் வேகமாக வேறொன்றையும் கவனியாமல் சந்நிதானத்திடம் போனேன்.
சந்நிதானம் ஒரு முக்கியமான விசயத்தைப்பற்றிக் கட்டளையிட்டது. சில நேரம்
அதே கவலையாக இருந்தேன். கண்டியைப் பற்றிய ஞாபகமே எனக்கு
உண்டாகவில்லை. சிறிது நேரம் பொறுத்தே அந்த ஞாபகம் வந்தது. பல
தடவை யோசித்துப் பார்த்தும் வைத்த இடம் ஞாபகத்துக்கு வரவில்லை. நான்
வைத்த இடத்தைவிட்டு மற்ற இடங்களிலெல்லாம் தேடினேன். பிறரையும்
தேடச் செய்தேன் அகப்படவில்லை. எப்படியோ இது சந்நிதானத்துக்கும்
தெரிந்து விட்டது. வயசு ஆக ஆக மறதி உண்டாகிறது. அனாவசியமாகப்
பலருக்குக் கவலை ஏற்பட்டது. பாவம்? சாமிநாதையர் மிக்க சஞ்சலத்தை
அடைந்து விட்டார்” என்று எல்லோரிடமும் சொன்னதோடு, உடனே எனக்கும்
அதைப்பற்றிச் சொல்லி அனுப்பினார். இச்செய்தி காதில் விழுந்ததும் நான்
விநாயகர் சந்நிதி சென்று வந்தனம் செய்தேன்.

கோளால் வந்த துன்பம்

வேறொரு சமயம் என் ஆசிரியரிடம் யாரோ ஒருவர் சென்று
என்னைப்பற்றிக் கோள் கூறினார்
. அதனால் பிள்ளையவர்கள் என்பால் சினங் கொள்ளலாயினர். யாரிடமேனும் கோபங் கொண்டால் அவரிடம்
பேசாமல் இருந்துவிடுவது ஆசிரியரது வழக்கம். என்னிடமும் அவ்வாறு
இருக்கத் தொடங்கினார். மடத்திற் பாடம் நடக்கையில் படிப்பதும், ஆசிரியர்
ஏதேனும் பாடல் சொன்னால் எழுதுவதுமாகிய வேலைகளையே நான் செய்து
வந்தேன். நான் அருகில் இருக்கும்போது, “ஏடு எடுத்துக் கொள்ளும், எழுதும்”
என்று சொல்ல மாட்டார். படுத்துக் கொண்டே ஏதேனும் ஒரு பாடலின் முதல்
அடியை ஆரம்பிப்பார். அது புதுப் பாடலாக இருந்தால் அதனை எழுத
வேண்டுமென்பது அவர் குறிப்பென்று நான் அறிந்து, ஏட்டையும்
எழுத்தாணியையும் எடுத்து எழுதத் தொடங்குவேன்.
 அவர் சொல்லிக்
கொண்டே போவார். நிறுத்த வேண்டுமானால் சரியென்பார். அந்தக் குறிப்பை
அறிந்து நான் நிறுத்தி விடுவேன்.

தனியே பாடங் கேட்பதும் பேசுவதும் இன்றி இந்நிலையில் சில நாள்
நான் இருந்து வந்தது என் மனத்தை மிகவும் உறுத்தியது. இதை வேறு
யாரிடமும் தெரிவிக்கவில்லை; உள்ளத்துள்ளே நான் மறுகினேன்.

அப்போது மாயூரத்தில் வசந்தோற்சவம் நடந்தது. அந்த உற்சவ
தரிசனத்துக்குச் சுப்பிரமணிய தேசிகர் ஒருநாள் திருக் கூட்டத்துடனும்
பரிவாரங்களுடனும் சென்றார். 
ஆசிரியரும் சென்றார். அவருடன் நானும் சில
மாணாக்கர்களும் சென்றோம். மாலையில் மாயூரம் போய்ச் சேர்ந்தோம்.
சுப்பிரமணிய தேசிகர் பரிவாரங்களுடன் சிரீ மாயூரநாதராலயத்திற்குப் போய்த்
தரிசனம் செய்து பிறகு மடத்துக்கு வந்தார். வருங்காலத்தில் என்னை ஒரு
காரியத்தரோடு அனுப்பி ஆகாரம் செய்து வரும்படி சொன்னார். இவ்விசயம்
பிள்ளையவர்களுக்குத் தெரியாது. அவர் தம் வீட்டில் தங்கியிருந்தார்.

நான் போசனம் செய்துவிட்டுப் பிள்ளையவர்கள் வீட்டுக்கு வந்து
திண்ணையில் இருந்தேன். அப்போது மடத்தில் பந்தி நடந்தமையால் அங்கே
ஆகாரம் செய்து கொள்ளப் பிள்ளையவர்கள் போயிருந்தார்.

ஆச்சரிய நிகழ்ச்சி

மடத்தில் பந்தி நடைபெறும் பொழுது சுப்பிரமணிய தேசிகரும் அங்கே
போய் உணவு கொள்வார். அப்பந்தியில் தம்பிரான்களும் சைவர்களாகிய
வெள்ளை வேட்டிக்காரர்களும் தனித்தனியே வரிசையாக இருந்து புசிப்பார்கள்.
வெள்ளை வேட்டிக்காரர்கள் வரிசையில் முதல் இடம் பிள்ளையவர்களுக்கு
உரியது
.

வழக்கம்போல் ஆசிரியர் அவ்விடத்தில் அமர்ந்தபோது அவர் எப்பொழுதும்
இருப்பதைப் போன்ற தெளிவோடு இல்லை. ஏதோ ஒரு கவலை அவர்
முகத்தில் தோற்றியது. போசனம் செய்யும் பொருட்டு ஆசனத்தில் அமர்ந்தவர்
திடீரென்று எழுந்தார். அவ்வாறு யாரும் செய்யத் துணியார். சம்பிரதாயத்தை
நன்கு அறிந்த பிள்ளையவர்கள் அப்படி எழுந்திருந்ததைக் கண்டு யாவரும்
பிரமித்துப் போனார்கள். சுப்பிரமணிய தேசிகர் அவருக்கு ஏதோ கவலை
இருப்பதை அறிந்து ஒருவர் மூலம் விசாரித்தார். “சாமி நாதையர் என்னுடன்
வந்தார். அவர் ஆகாரம் செய்வதற்கு ஒன்றும் ஏற்பாடு செய்யாமல் வந்து
விட்டேன். பட்டினியாக இருப்பாரே என்று எண்ணி விசாரித்து வருவதற்காக
எழுந்தேன்” என்று அவர் சொன்னதைக் கேட்ட தேசிகர், “அவரை ஒரு
காரியாத்தரோடு ஆகாரம் செய்ய அனுப்பியிருக்கிறோம். இதற்குள் அவர்
போசனம் செய்து வந்திருப்பார்” என்றார்.

‘அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்?’

ஆசிரியர் ஒருவாறு ஆறுதலுற்றார். ஆனாலும் அவர் மனம் சமாதானம்
அடையவில்லை. உணவிலே மனம் செல்லாமல் போசனம் செய்பவர் போலப்
பாவனை செய்து இருந்துவிட்டு யாவரும் எழுவதற்கு முன்பே எழுந்து கையைச்
சுத்தி செய்து கொள்ளாமலே வேகமாக மடத்திற்கு அடுத்ததாகிய தம் வீடு
நோக்கி வந்தார். அவர் வேகமாக வருவதைக் கண்டு திண்ணையில் இருந்த
நான் எழுந்து நின்றேன்.

நான் இருந்த இடத்தில் தீபம் இல்லாமையால் அவர் என் சமீபத்தில்
வந்து முகத்தை உற்று நோக்கி, “சாமிநாதையரா? ஆகாரம் செய்தாயிற்றா?”
என்று கேட்டார், “ஆயிற்று” என்று சொன்னதைக் கேட்ட பிறகே அவர் மனம்
சமாதானம் அடைந்தது. உள்ளே சென்று கையைச் சுத்தம் செய்துகொண்டு
தீபம் கொணர்ந்து வைக்கச் சொன்னார்.

பிறகு என்னுடன் மிக்க அன்போடு பேசத் தொடங்கினார். அவர்
அவ்வளவு வேகமாக வந்ததும், என் முகத்தைக் கூர்ந்து கவனித்ததும், சில
தினங்களாகப் பேசாதவர் அவ்வளவு அன்போடு பேசியதும் எனக்குக் கனவு
நிகழ்ச்சிகளைப் போல இருந்தன.

சிறிது நேரத்திற்குப் பிறகு மடத்திலே இருந்து சிலர் வந்து என்னைக்
கண்டு, “ஐயாவுக்கு உம்மிடத்திலே உள்ள அன்பை இன்று நாங்கள் அறிந்து
கொண்டோம். உம்முடைய பாக்கியமே பாக்கியம்
” என்று கூறி அங்கே
நிகழ்ந்தவற்றைச் சொன்னபோது எனக்கு எல்லாம் விளங்கின. சில நாட்களாகத் தாம் என்பால் காட்டி வந்த பராமுகத்துக்குத் தாமே பரிகாரம் தேடியவரைப் போல என் ஆசிரியர் விளங்கினார்.

அன்பை எவ்வளவு காலம் தடைப்படுத்த முடியும்? தடைப்படுத்தப்பட்ட
அன்பு என்றாவது ஒரு நாள் மிக வேகமாக வெளிப்படத் தான் வேண்டும்
அப்போது ஏற்படும் நிகழ்ச்சிகள் ஆச்சரியமாகவே இருக்கும்.

(தொடரும்)

என் சரித்திரம், உ.வே.சா.


Saturday, March 16, 2024

உ.வே.சா.வின் என் சரித்திரம் : அத்தியாயம்- 48 : சில சங்கடங்கள்

 




(உ.வே.சா.வின் என் சரித்திரம் 78 : அன்பு மூர்த்திகள் மூவர்-தொடர்ச்சி)

என் சரித்திரம்
அத்தியாயம்- 48

சில சங்கடங்கள்

ஒரே மாதிரியான சந்தோசத்தை எக்காலத்தும் அனுபவிப்பதென்பது
இவ்வுலகத்தில் யாருக்கும் சாத்தியமானதன்று. மனிதனுடைய வாழ்விலே
இன்பமும் துன்பமும் கலந்து கலந்தே வருகின்றன. செல்வத்திலே
செழித்திருப்பவர்களாயினும், வறுமையிலே வாடுபவர்களாயினும் இன்பம்
துன்பம் இரண்டும் இடையிடையே கலந்து அனுபவிப்பதை அல்லாமல்
இன்பத்தையே அனுபவிக்கும் பாக்கியவான்களும் துன்பத்திலே வருந்தும்
அபாக்கியர்களும் இல்லை.

எனக்கு வேண்டிய நல்ல வசதிகளும் தமிழ்க் கல்வி இலாபமும்
திருவாவடுதுறையிலே கிடைத்தன
. மனத்திலே சந்தோசம் இடையறாது
உண்டாவதற்கு வேண்டிய அனுகூலங்களெல்லாம் அங்கே குறைவின்றி
இருந்தன. ஆனாலும், இடையிடையே அச்சந்தோசத்திற்குத் தடை நேராமல்
இல்லை.

ஒவ்வாத உணவு

இரண்டு வகையாக நடந்து வந்த பாட வகுப்பில் நானே படித்து
வந்தமையால் சில நாள் என் தொண்டையும் நாக்கும் புண்ணாகிவிடும். ஆகாரம் செய்துவந்த சத்திரத்தில் எல்லோரையும் போல் நானும் ஒருவனாக இருந்து ஆகாரம் பண்ணிவந்தேன் என் அசௌகரியத்தை அறிந்து கவனித்து அதற்கேற்ற உணவுகளை அளிப்பவர் யாரும் அங்கே இல்லை. எனக்கு இன்ன வகையான உணவு செய்துபோட
வேண்டுமென்று துணிந்து சொல்லுவதற்கும் நான் அஞ்சினேன். சத்திரத்தில்
அப்போது உணவு அளித்து வந்தவள் ஒரு கிழவி. மடத்திலிருந்து வரும்
உணவுப் பொருள்களுக்குக் குறைவு இல்லை. உணவருந்த வருபவர்களுக்கு
அவற்றைக் கொண்டு நல்ல உணவு சமைத்து வழங்குவதற்குரிய சக்தி அந்த
அம்மாளுக்கு இல்லை. எல்லாம் சரியாகவே நடந்து வருமென்பது
மேலேயுள்ளவர்களது கருத்து. “இவ்வளவு பெரிய இடத்தில் இப்படி
இருக்கிறார்களே!” என்று நான் வருந்தினேன்.

சத்திரத்து உணவு என் தேகத்துக்கு ஒவ்வாமையால் சில நாட்கள் நான்
அன்னத்தோடு மோரை மட்டும் சேர்த்துக் சாப்பிட்டதுண்டு.
அயலூர்களிலிருந்து திருவாவடுதுறைக்கு வரும் வித்துவான்களிலும்
கனவான்களிலும் சிலர் சில சமயங்களில் சமையற்காரர்களை அழைத்து
வருவார்கள்; சில சமயங்களில் குடும்பத்துடன் வருவதுமுண்டு. நான் பண்டார
சந்நிதிகளுக்கு வேண்டியவனென்று தெரிந்தவர்களாதலால் என் நிலைமையை
அறிந்து தங்களுடன் சேர்ந்து சாப்பிடும்படி அவர்கள் என்னை
வற்புறுத்துவார்கள். அப்போது எனக்கு மெத்த ஆறுதல் ஏற்படும்.

குழம்பு செய்த குழப்பம்

ஒரு நாள் எனக்கு வயிற்றுப் போக்கு உண்டாயிற்று. மாங்கொட்டைக்
குழம்பு வைத்துச் சாப்பிட்டால் அந்நோய் நீங்குமென்று
 எனக்குத்
தெரியுமாதலால் அக்கிழவியிடம் நயமாகப் பேசி அதைச் செய்து போடும்படி
கேட்டுக் கொண்டேன். அந்த அம்மாள் அப்படியே செய்து போட்டாள். நான்
ஆகாரம் செய்ய உட்கார்ந்த பின் என் இலையில் அந்தக் குழம்பைப்
பரிமாறினாள். என்னுடன் உணவருந்தியவர்களுள் ஒருவர் இதைக் கவனித்தார்,
திருவாலங்காட்டுக்குச் சென்று சம்சுகிருதம் படித்து வருபவர் அவர்.
அவருக்கு மனம் பொறுக்கவில்லை. “எல்லாரும் சாப்பிடுகிற
இப்பொதுவிடத்தில் இவருக்கு மட்டும் தனியாக எதையோ செய்து
போடுகிறாளே!” என்று அவர் எண்ணினார். அந்நினைவு வளர்ந்தது. ஒரு
பெரிய தவறு சத்திரத்தில் நேர்ந்ததென்று தோற்றும்படி அச்செய்தியை மிகவும்
சாதுரியமாக விரித்து அவர் சுப்பிரமணிய தேசிகர் காதில் விழும்படி செய்து
விட்டார்
. உடனே கிழவிக்கு மடத்திலிருந்து உத்தரவு வந்தது; “பலர்
சாப்பிடுகையில்ஒருவருக்கு மட்டும் தனியே உபசாரம் செய்வது தப்பு; இனிமேல்
இம்மாதிரியான காரியம் செய்யக்கூடாதென்று உத்தரவாகிறது” என்று
காரியத்தர் வந்து கிழவியிடம் கண்டிப்பாகச் சொல்லிவிட்டுப் போனார்.

இந்நிகழ்ச்சி எனக்கு மிக்க மனத் துன்பத்தை உண்டாக்கியது, “பண்டார
சந்நிதிகள் நம்மிடமே நேரில் விசயத்தை விசாரித்துத் தெரிந்து
கொண்டிருக்கலாமே! யாரோ ஒருவர் சொன்னதைக் கேட்டு இப்படிச்
செய்தார்களே” என்று வருந்தினேன். “ஒரு நாளும் அவர்கள் அப்படிச்
செய்யமாட்டார்கள். யாரோ ஒருவர் போய் எனக்கு விசேட உபசாரம்
நடந்ததாகச் சொல்லியிருக்கக் கூடும். பொதுவிடத்தில் பட்சஷபாதம் இருப்பது
சரியன்று என்று எண்ணி இப்படி உத்தரவு அனுப்பியிருக்கலாம்
. நமக்கு நடந்த
உபசாரம் மாங்கொட்டைக் குழம்புதான். அதுவும் தேக அசௌக்கியத்துக்காக
ஏற்பட்டதென்று தெரிந்திருந்தால் நம்மிடம் விசேட அன்பு வைத்திருக்கும்
அவர்கள் இப்படிச் செய்திருக்க மாட்டார்கள்” என்று நானே சமாதானம்
செய்து கொண்டேன்.

இரவில் பொழுது போக்கு

இரவில் ஆகாரம் செய்த பிறகு மடத்திற்கு வந்து அங்குள்ள
குமாரசாமித் தம்பிரானுடன் பாடத்தைப் படித்துச் சிந்தித்து வருவேன். பிறகு
அங்கேயே படுத்துக் கொள்வேன். இவ்வழக்கம் திருவாவடுதுறை சென்ற பிறகு
சில மாதங்கள் வரையில் இருந்தது. மடத்தில் தங்கி வந்த காலத்தில் ஒரு நாள்
இரவு அவருடன் வழக்கம்போலவே படித்துவந்தேன். மடத்தின் கீழ்ப்பக்கத்தில்
இருந்த சவுகண்டியில் தம்பிரான்கள் தங்கியிருப்பதற்காக இரண்டு அறைகள்
உண்டு. குமாரசாமித் தம்பிரான் ஓர் அறையில் இருந்து வந்தார். அதற்கு
எதிரே உள்ள அறையில் பன்னிருகைத் தம்பிரான் என்பவர் இருந்தார். அவர்
நல்ல செல்வாக்குடையவர். ஆதீனத்தில் பொறுப்புள்ள உத்தியோகங்களை
வகித்தவர். அறைகளுக்கு மத்தியிலுள்ள கூடத்தில் நாங்கள் இருந்து படித்த
நூல்களைச் சிந்தனை செய்வோம். அப்போது அவரும் உடனிருந்து
கவனிப்பார். படித்துக் கொண்டிருந்த நான் அலுப்பு மிகுதியால் அங்கே
படுத்துத் தூங்கி விட்டேன். இரவு மணி பத்து இருக்கும். குமாரசாமித்
தம்பிரானும் பன்னிருகைத் தம்பிரானும் பேசிக்கொண்டிருந்தனர். முத்துசாமி
ஓதுவார் அங்கே வந்தார்.

எதிர்பாராத சம்பவம்

மடத்திலும் கோயிலிலும் அர்த்த சாமத்தில் நிவேதனமாகும்
பிரசாதங்களில் ஒரு பகுதி சுப்பிரமணிய தேசிகருக்கு வரும். அவற்றில் சிறிது, தாம் உபயோகித்துக் கொண்டு பாக்கியைத் தனித்தனியே பிரித்துக்
தம்பிரான்களுக்கும் அனுப்புவார். ஒவ்வொரு நாளும் 10 மணிக்கு வடை,
சுகியன், தேங்குழல் முதலிய பிரசாதங்கள் தம்பிரான்களுக்குக் கிடைக்கும்.
குமாரசாமித் தம்பிரானுக்கும் பன்னிருகைத் தம்பிரானுக்கும் கொடுப்பதற்காக
அப்போது முத்துசாமி ஓதுவார் அவற்றை எடுத்து வந்தார். அவர் வந்த சமயம்
தம்பிரான்கள் இருவரும் அன்று மாலையில் நடந்த ஒரு களவைப் பற்றிச்
சம்பாசித்திருந்தனர்.

பன்னிருகைத் தம்பிரான் ஒரு சிறந்த ஏறுமுகருத்திராட்ச கண்டியை
அணிந்திருந்தார். அதன் இரு தலைப்பிலும் கல்லிழைத்த தங்க முகப்புகள்
உண்டு ஏறக்குறைய இரண்டாயிர உரூபாய் பெறுமானமுள்ளது. அன்று மாலை
தம்பிரான் குளப்புரைக்குப் போய் வந்து சில வேலைகளைக் கவனித்தார். சிறிது
நேரமான பிறகு பார்த்த போது கண்டி காணப்படவில்லை. விலையுயர்ந்த
பொருளாதலால் மடத்துக் காரியத்தர்கள் அதைத் தேடலாயினர்.

“தவசிப் பிள்ளைகளை விசாரிக்கச் சொல்லவேண்டும். இந்த மடத்தில்
இந்த மாதிரி நடப்பதென்றால் ஆதீனத்துக்கே குறைவல்லவா?” என்றார்
பன்னிருகைத் தம்பிரான்.

“ஒவ்வொரு பயலாகக் கூப்பிட்டு விசாரிக்க வேண்டும். திருடினவன்
இலேசில் சொல்ல மாட்டான். கட்டிவைத்து அடிக்கவேண்டும்” என்று சொன்னார்
குமாரசாமித் தம்பிரான்.

அங்கே இருந்த முத்துசாமி ஓதுவார் அவர்களுடைய பேச்சு இன்ன
விசயத்தைப் பற்றியதென்பதை அறிந்து, ‘இது தெரிந்து சந்நிதானம் கூட
மிகவும் கவலையோடிருக்கிறது. இவ்வளவு துணிவான காரியத்தைச் செய்தவன்
யாரா யிருப்பான்? அங்கங்கே எல்லோரும் விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள்”
என்று சொல்லி அச்சம்பாசணையில் கலந்தனர்.

அவர்கள் மூவரும் பேசிய சத்தத்தால் என் தூக்கம் கலைந்தது. நன்றாகத்
தூங்கின எனக்குச் சிறிது விழிப்பு உண்டாயிற்று. கண்ணைத் திறவாமல்
மறுபடியும் தூக்கத்தை எதிர்பார்த்துப் படுத்த வண்ணமே இருந்தேன்.
அப்போது அங்கே வந்த வேறொரு மனிதர், “இங்கே வந்திருக்கும் புதிய
மனிதர்களையும் விசாரிக்கவேண்டும்” என்றார்.

“புதிய மனிதர்கள் யார் இருக்கிறார்கள்? எல்லாம் பழைய
பெருச்சாளிகளே. அவர்கள் வேலையாகத்தான் இருக்கும் இது” என்றார்
குமாரசாமித் தம்பிரான்“அப்படிச் சொல்லலாமா? இந்த ஐயர் புதியவர் அல்லவா? இவர்
எடுத்திருக்க மாட்டாரா?” என்று அந்த மனிதர் சொன்னார்.

அந்த வார்த்தை என் காதில் விழுந்ததோ இல்லையோ எனக்கு
நடுக்கமெடுத்தது. அரை குறையாக இருந்த தூக்க மயக்கம் எங்கேயோ பறந்து
போயிற்று.

“ஐயோ! ஒரு பாவமும் அறியாத நம்மைச் சந்தேகிக்கிறார்களே!
திருட்டுப் பட்டம் கட்டிக் கொள்ளவா இவர்களுடன் பழகுகிறோம்! எதற்காக
நாம் இங்கே வந்தோம்!” என்றெல்லாம் என் மனம் சிந்திக்கத் தொடங்கியது.

“என்ன சொன்னாய்? அடபாவி! அந்த வார்த்தையை மறுபடி சொல்ல
வேண்டாம்” என்று பன்னிருகைத் தம்பிரான் அம்மனிதரை நோக்கிச்
சொன்னார்.

குமாரசாமித் தம்பிரானோ மிக்க கோபக் குறிப்புடன், “உம்மை யாரையா
கேட்டார்? மனிதர்களுடைய தராதரம் இலவலேசமும் தெரியாத நீர்
அபிப்பிராயம் சொல்ல வந்து விட்டீரே! வந்த வழியைப் பார்த்துக்கொண்டு
போம். இனி இங்கே நிற்க வேண்டா” என்று கடுமையாகக் கூறினார்.

(தொடரும்)


என் சரித்திரம், உ.வே.சா.


Saturday, March 09, 2024

உ.வே.சா.வின் என் சரித்திரம் 78 – அன்பு மூர்த்திகள் மூவர்

 




(உ.வே.சா.வின் என் சரித்திரம் 77 : அத்தியாயம்-46.2 – தொடர்ச்சி

என் சரித்திரம்

அத்தியாயம்-47

அன்பு மூர்த்திகள் மூவர்

திருவாவடுதுறை மடத்தில் இருவகைப் பாடங்களும் காலையிலும்
மாலையிலும் முறையாக நடந்து வந்தன சுப்பிரமணிய தேசிகருடைய அன்பு
என்மேல் வர வர அதிகமாகப் பதியத்தொடங்கியது
 பிள்ளையவர்களுக்கு
என்பாலுள்ள அன்பின் மிகுதியை அறிந்த தேசிகர் என்னிடம் அதிக ஆதரவு
காட்டினர். அவ்விருவருடைய அன்பினாலும் மற்றவர்களுடைய பிரியத்தையும்
நான் சம்பாதித்தேன். மடத்திலே பழகுபவர்கள் என்னையும் மடத்தைச் சார்ந்த
ஒருவனாகவே மதிக்கலாயினர். மடத்து உத்தியோகத்தர்கள் என்னிடம்
பிரியமாகப் பேசி வந்தவுடன் எனக்கு ஏதேனும் தேவை இருந்தால் உடனே
கொடுத்து உதவித் தங்கள் அன்பைப் பலப்படுத்தினர். எல்லாருடைய
அன்பும் நிலைத்திருக்க வேண்டுமென்ற கவலையால் யாரிடமும் நான் மிகவும்
பணிவாகவும் சாக்கிரதையாகவும் நடப்பதை ஒருவிரதமாக மேற்கொண்டேன்.

‘சந்நிதானத்தின் உத்தரவு’

மாசி மாதம் மகா சிவராத்திரி வந்தது. திருவாவடுதுறையில்
உள்ளவர்களுக்கு ஏதேனும் சாமான்கள் வேண்டுமானால் மடத்து
உக்கிராணத்திலிருந்துதான் பெற்றுக் கொள்ளவேண்டும். அக்காலத்தில்
அவ்வூரில் கடைகள் இல்லை. சிவராத்திரியாதலால் மாலையில் கோமுத்தீசுவரர்
ஆலயத்துக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்ய எண்ணினேன். தேங்காய்,
பழம், பாக்கு, வெற்றிலை முதலியவை வேண்டும். கடைகளோ இல்லை.
ஆதலால் ‘மடத்து உக்கிராணத்திலே வாங்கிக் கொள்ளலாம்’ என்று நினைத்துக்
காலைப் பாடம் முடிந்தவுடன் அவ்விடத்தையடைந்து வெளியில் நின்றபடியே
உக்கிரணக்காரரிடம் எனக்கு வேண்டியவற்றைச் சொன்னேன். “ஐயரவர்கள்
எப்போது எது கேட்டாலும் கொடுக்க வேண்டுமென்று சந்நிதானத்தில்
உத்தரவு” என்று கணீரென்று ஒரு சப்தம் கேட்டது. அசரீரி வாக்கைப்போன்ற
அவ்வொலி எங்கிருந்த வந்ததென்று கவனித்தேன். கந்தசாமி ஓதுவாரென்பவர்
அவ்வாறு சொல்லிக்கொண்டே வந்தார். அங்கே அயலிலிருந்த ஒரு
சன்னலுக்கு அப்புறத்தில் பண்டார சந்நிதிகள் அமர்ந்திருந்ததைக் கண்டேன்.
உடனே எனக்குச் சிறிது நாணம் உண்டாயிற்று. “எது வேண்டுமானாலும்
வாங்கிக் கொள்ளலாமென்று உத்தரவாகிறது” என்று அருகில் வந்த ஓதுவார்
மீட்டும் சொன்னார். அதனை உறுதிப்படுத்துவது போலத் தேசிகர் புன்னகை பூத்தார். வேண்டிய பொருள்களையெல்லாம் தடையின்றி நான் பெற்றுக் கொண்டேன். இயல்பாகவே வேண்டும்போது எனக்கு உதவி வரும் அந்த உக்கிராணக்காரர் அன்று முதல் என் குறிப்பறிந்து எனக்கு வேண்டுவனவற்றை அப்பொழுதப்பொழுது உதவி
வந்தார். பிற்காலத்திலும் எனக்கு வேண்டிய பொருள்களை வேண்டிய
சமயங்களில் அந்த உக்கிராணம் கொடுப்பதும் நான் பெற்றுக் கொள்வதும்
வழக்கமாயின.

காலைப் பாடத்தில் திருவானைக்காப் புராணம் முற்றுப் பெற்றது.
அதன்பின் திருநாகைக்காரோணப் புராணம் ஆரம்பமாயிற்று. முன்னரே
அந்நூலை நான் பட்டீச்சுரத்திலே பாடங் கேட்டிருந்தமையால் மடத்திற்
படிக்கும்போது மிக்க தெளிவோடு படித்தேன். அவ்வப்போது இன்ன இன்ன
இராகத்தில் படிக்க வேண்டுமென்று சுப்பிரமணிய தேசிகர் கூறுவார். அங்ஙனமே
நான் படிப்பேன்.

ஓதுவாரது அன்பு

ஒரு நாள் காலையில் மடத்திலிருந்து வெளியே வந்து ஆகாரம்
செய்யும் இடத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்தேன். அப்போது மணி
பதினொன்றுக்கு மேல் இருக்கும். என்க்கெதிரே மடைப்பள்ளி
விசாரணைக்காரராகிய முத்துசாமி ஓதுவாரென்பவர் வந்தார்
. அவருடைய
அன்பும் மரியாதையும் எப்போது கண்டாலும் அவரோடு சில வார்த்தைகள்
பேச வேண்டுமென்று என்னைத் தூண்டும். ஆதலால் அவரைப் பார்த்தவுடன்.
கிழக்கேயிருந்து வருகிறீர்களே; அக்கிரகாரத்தில் ஏதேனும் வேலை
இருந்ததோ!” என்று கேட்டேன்.

“ஐயாவையும் அம்மாவையும் பார்த்துவிட்டு வருகிறேன்” என்றார்.

“உங்கள் வீடு வடக்கு வீதியில் அல்லவா இருக்கிறது? இங்கே உங்கள்
தாயார் தகப்பனார் வரக் காரணம் என்ன?”

“இல்லை. அண்ணாவுடைய ஐயா அம்மா வந்திருக்கிறார்கள்” என்று
அவர் சொன்னவுடனே, “என்ன! எங்கே வந்தார்கள்?” என்று பரபரப்போடு
அவர்களைப் பார்க்க வேண்டுமென்ற என் ஆவலைப் புலப்படுத்தினேன்.

ஓதுவார் பிராயத்தில் என்னைவிட முதிர்ந்தவராக இருந்தாலும் என்னை
அண்ணாவென்றே அழைத்து வந்தார். என் பெற்றோர்கள் அன்றைத்தினம்
வருவதாக எனக்கு முன்னமே தெரிவிக்கவில்லை. அவர்களை நான் எதிர்ப்பார்க்கவுமில்லை. “அவர்கள் எங்கே தங்கியிருக்கிறார்களோ? பழக்கமில்லாத இடமாயிற்றே! சாப்பிடும் நேரமாயிற்றே! அப்பா பூசை பண்ணவேண்டுமே!” என்றெல்லாம் நான் விரிவாக யோசனை செய்தேன். என் உள்ளத்து உணர்ச்சிகளை முகக் குறிப்பால் ஒருவாறு ஊகித்து உணர்ந்த ஓதுவார், “கவலைப்படவேண்டா. அவர்கள் காலையிலே வந்து விட்டார்கள். அவர்கள் வந்து அண்ணாவைப் பற்றி விசாரித்தபோதே இன்னாரென்று தெரிந்து கொண்டேன். அவர்களுக்குச் சத்திரத்தில் தக்க இடம் கொடுத்து வேண்டிய சாமான்களை அனுப்பினேன். ஐயாவின் பூசைக்கு
வேண்டிய பால் முதலிய திரவியங்களையும் அனுப்பியிருக்கிறேன். அவர்கள்
அங்கே குளியலையும் பூசையையும் முடித்துக் கொண்டு அண்ணாவின்
வருகைக்காகக் காத்திருக்கிறார்கள். போய் ஆகாரம் செய்ய வேண்டியதுதான்.
இப்போது அங்கே போய் விசாரித்து விட்டுத்தான் வருகிறேன்” என்றார்.

எனக்குத் தெரியாமலே நிகழ்ந்த அச்செயல்களைக் கேட்டு நான்
ஆச்சரியமடைந்தேன். ஓதுவாருடைய அன்பையும் விதரணையையும் மடத்தில்
உள்ள ஒழுங்கையும் பாராட்டியபடியே நான் விரைவாக என் தாய் தந்தையர்
உள்ள இடத்துக்குச் சென்றேன்.

பெற்றோர் மகிழ்ச்சி

நான் அங்கே போனவுடன், “எப்படிப்பட்ட மனுசர்கள்! என்ன
ஏற்பாடுகள்! என்ன விசாரணை!” என்று என் தந்தையார் தம் சந்தோசத்தை
வெளிப் படுத்தினார். “சாமா, இம்மாதிரியான இடத்தை நான்
பார்த்ததேயில்லை. நாங்கள் உன்னைப் பார்த்து விட்டுப் போகலாமென்று
இன்று காலையில் இங்கு வந்தோம். சிலர் சத்திரத்தில் தங்கலாமென்று
சொன்னார்கள். அப்போது இவ்விடம் வந்தோம். இங்கே ஒருவர்
எதிர்ப்பட்டார். ‘நீங்கள் யார்?’ என்று கேட்டார். உன்னைப் பார்க்க
வந்திருப்பதாகச் சொன்னேன். உடனே எங்களுக்கு வேண்டியவற்றையெல்லாம்
விசாரித்து விசாரித்துக் கொடுத்து உதவினார். “இந்த மாதிரியான
மனுசர்களை நான் இதுவரை பார்த்ததில்லை அவர் யார்?” என்று என்
தாயாரும் கேட்டார்.

“அவர் எனக்கு ஒரு தம்பி” என்று மனத்துக்குள்ளே சொல்லிக்
கொண்டேன். ஓதுவாருடைய அன்பை என் மனம் நன்றாக அறியும்.
அவர்களுக்கு அவ்வளவு தெரியாதல்லவா?

“உன் தம்பியைப் பார்த்தாயா?” என்று கேட்டுக்கொண்டே குழந்தையாக
இருந்த என் தம்பியை என்னிடம் அன்னையார் அளித்தார். நான்
சந்தோசமாக வாங்கி அணைத்துக் கொண்டேன்.என் அன்னையார் சமைத்துத் தந்தையார் பூசையில் நிவேதனம் செய்யப் பெற்ற உணவை நான் உண்டு பல நாளாயின. அன்று அவ்வுணவை உண்டு மகிழ்ந்தேன். நான் நல்ல இடத்தில் இருக்கிறேன் என்ற திருப்தியால் அவர்களும் மகிழ்ந்தார்கள்.

இராக மாலிகை

அன்றைத் தினம் ஏதோ ஒரு காரணத்தால் காலையில் நடக்க வேண்டிய
பாடம் பிற்பகல் மூன்று மணி முதல் ஏழு மணி வரையில் மடத்திலுள்ள
பன்னீர்க்கட்டில் நடந்தது. சில நாட்களில் அவ்வாறு நடப்பதுண்டு. பாடம்
நடக்கையில் சுப்பிரமணிய தேசிகர் அங்கே வந்து அமர்ந்திருந்தார்.
குமாரசாமித் தம்பிரானும் நானும் பாடங்கேட்டு வந்தோம். பிள்ளையவர்கள்
சொன்னபடி நான் திருநாகைக்காரோணப் புராணத்தைப் படித்தேன். என்
பெற்றோர்களைக் கண்ட சந்தோசமும் என் அன்னையார் இட்ட உணவை
உண்ட உரமும் சேர்ந்து எனக்கு ஒரு புதிய ஊக்கத்தை உண்டாக்கின.
அதனால் அன்று நான் படித்தபோது ஒவ்வொரு செய்யுளையும் ஒவ்வொரு
இராகத்தில் மாற்றி மாற்றி வாசித்தேன்
சங்கீதப் பிரியராகிய தேசிகர்
இராகங்களைக் கவனித்து வந்தார். இடையிலே பிள்ளையவர்களைப் பார்த்து,
“உங்கள் சிசுயயர் இராகமாலிகையில் படிப்பது திருப்திகரமாக இருக்கிறது”
என்றார்.

இவ்வாறு பாடம் நடக்கையில் வடக்குப் புறத்தேயுள்ள ஓரிடத்தில் சிறிது
தூரத்தே சிலர் மறைவாக இருந்து கவனிப்பது வழக்கம். அன்றும் அப்படியே
சிலர் இருந்தனர். என் தந்தையார் மாலை அனுசுட்டானங்களை
முடித்துக்கொண்டு அப்பக்கமாக வந்தவர் பாடம் நடப்பதையும் சிலர்
தூரத்திலே இருந்து கவனிப்பதையும் கண்டு தாமும் அவர்களோடு ஒருவராக
அங்கே இருந்து நான் படிப்பதையும் பிள்ளையவர்கள் பொருள் சொல்வதையும்
கேட்டு வந்தார். அவர் வந்துகேட்டது எனக்குத் தெரியாது.

நான் இராகத்தோடு வாசிப்பதைக் கேட்டு அவரும் மகிழ்வுற்றார். நான்
படிப்பதைப் பற்றிச் சுப்பிரமணிய தேசிகர் பாராட்டிப் பேசிய வார்த்தைகள்
அவர் காதில் விழுந்தன. அப்போது அவருக்கு உண்டான சந்தோசத்துக்கும்
திருப்திக்கும் அளவு கூற முடியுமோ! இந்நிகழ்ச்சி முன்னேற்பாட்டோடு
நடந்ததுபோல் இருந்தது. தற்செயலாக என் தந்தையார் அங்கே வந்ததும், நான்
இராக மாலிகையில் படித்ததும், தேசிகர் பாராட்டித் தம் அன்பை
வெளிப்படுத்தியதும் என் தந்தையார் மனத்தில் இருந்த கவலையைப் போக்கவும் ‘இவனுக்கு ஒரு குறைவும் இல்லை’ என்ற தைரியத்தை
உண்டாக்கவும் காரணமாயின. பாடம் முடிந்தவுடன் எல்லோரும் எழுந்து
வந்தோம்.

நான் முன்னே வந்தேன். ஆசிரியர் பின்னே சிறிது தூரத்தில்
தம்பிரான்களோடு வரலாயினர். நான் வரும் வழியில் தந்தையாரைக்
கண்டபோது, “அப்பா! நீ படித்ததைக் கேட்டேன். பண்டார சந்நிதிகள்
சொன்ன வார்த்தைகளையும் கவனித்தேன். எல்லாம் ஈசுவரானுக்கிரகந்தான்”
என்று சொன்னபோது உள்ளே இருந்த உணர்ச்சி பொங்கி வந்தது. மேலே
பேசத் தெரியவில்லை. அவர் சாகைக்குச் சென்றார். பின் வருவதாகச் சொல்லி
நான் மீண்டும் ஆசிரியரோடு சேர்ந்து கொண்டேன்.

இரு முதுகுரவரும் ஆசிரியரும்

ஒவ்வொரு நாளும் மாலையில் ஆசிரியரோடு திருவாவடுதுறையிலுள்ள
கோட்டுமாங்குளம் வரைக்கும் சென்று அனுசுட்டானங்களை முடித்துவிட்டு
வருவது என் வழக்கம். இருட்டு வேளைகளில் ஆசிரியர் கையைப் பிடித்து
அழைத்து வருவேன். அன்றைத் தினமும் அவ்வாறு சென்று திரும்பும்போது,
“உம்முடைய தாயார் தகப்பனார் வந்திருப்பதாகச் சொன்னீரே; அவர்கள்
எங்கே தங்கியிருக்கிறார்கள்? இப்போது பார்த்து விட்டுப் போகிறேன்”
என்றார்.

“சிரமம் வேண்டாம். அவர்களே ஐயாவைப் பார்க்க வருவார்கள்”
என்று நான் சொல்லியும் அவர் வற்புறுத்தவே, அவரை என் பெற்றோர்களிடம்
அழைத்துச் சென்றேன்.

சத்திரத்தில் ஒரு விசிப் பலகையில் ஆசிரியர் அமர்ந்தார். தந்தையாரும்
அமர்ந்தார். தந்தையாரிடம் ஆசிரியர் யோக சேமங்களை விசாரித்துக்
கொண்டு இருந்த போது என் தாயார் வந்தார். அதற்கு முன் ஆசிரியரை
அவர் பார்த்ததே இல்லை.

“குழந்தையை நீங்களே தாயார் தகப்பனாரைப்போலக் காப்பாற்றி
வருகிறீர்கள். நாங்கள் எந்த விதத்திலும் இவனுக்குப் பிரயோசனப் படாமல்
இருக்கிறோம். உங்களுடைய ஆதரவினால்தான் இவன் முன்னுக்கு
வரவேண்டும்” என்று கண்ணில் நீர் ததும்ப அவர் சொன்னார். ஒரு
தெய்வத்தினிடத்தில் வரம் கேட்பது போல இருந்தது அந்தத் தொனி.

“நீங்கள் கொஞ்சமும் கவலைப்பட வேண்டாம். உங்கள் குமாரர் நல்ல
புத்திசாலி, நன்றாகப் படித்து வருகிறார். கடவுள்கிருபையால் நல்ல நிலைமைக்கு வருவார்” என்று ஆசிரியர் கூறிய வார்த்தைகள் என் தாயாரின் உள்ளத்தைக் குளிர்வித்தன. என்னிடம் அன்பு வைப்பவர்களுக்குள்ளே அந்த மூன்று பேர்களுக்கு இணையானவர்கள் வேறு இல்லை. அம் மூவரும் ஒருங்கே இருந்து என் நன்மையைக் குறித்துப் பேசும்போது அவர்களுடைய அன்பு வெளிப்பட்டது. அந்த மூவருடைய
அன்பிலும் மூன்று விதமான இயல்புகள் இருந்தன
. அவற்றினிடையே உயர்வு
தாழ்வு உண்டென்று சொல்ல முடியுமா? இன்ன வகையில் இன்னது சிறந்தது
என்று தான் வரையறுக்க முடியுமா? ஒரே அன்பு மயமாகத் தோற்றிய
அக்காட்சியை இப்போது நினைத்தாலும் என் உள்ளத்துள் இன்பம் ஊறுகின்றது.
அம்மூவரையும் மூன்று அன்பு மூர்த்திகளாக இன்றும் பாராட்டி வருகிறேன்.

மறு நாள் விடியற் காலையில் என் பெற்றோர்கள், “உன்னைப் பார்த்து
விட்டுப் போகத்தான் வந்தோம். பார்த்ததில் மிகவும் திருப்தியாயிற்று.
ஊருக்குப் போய் வருகிறோம். உடம்பைச் சாக்கிரதையாகப் பார்த்துக் கொள்”
என்று என்னிடம் சொல்லிவிட்டுச் சூரிய மூலைக்கு என் தம்பியுடன்
போனார்கள்.

(தொடரும்)
என் சரித்திரம், உ.வே.சா.