Showing posts with label ஒளவையார். Show all posts
Showing posts with label ஒளவையார். Show all posts

Sunday, August 29, 2021

ஒளவையார்: 9 : ந. சஞ்சீவி

 அகரமுதல




(ஒளவையார்: 8 : ந. சஞ்சீவி தொடர்ச்சி)

சங்கக்காலச் சான்றோர்கள் – 18

2. ஒளவையார் (தொடர்ச்சி)


மூண்டெழும் போருக்கெல்லாம் அடிப்படைக் காரணம் மண் வெறியும் புகழ் நசையுமே என்பதை நன்குணர்ந்த அச்சான்றோர், அம்மண்ணாள் வேந்தர் மனம் கொளும் வகையில் தம் இதயக் கருத்தை எடுத்துரைக்கலானார் : “தேவர் உலகை ஒத்த பகுதிப்பட்ட நாடு தம்முடையது ஆயினும், அஃது எப்போதும் தம்மோடு உரிமைப்பட்டே நடவாது; ஒருவர் அந்நாட்டிற்கு உரியவர் அல்லர். ஆயினும், நற்றவம் செய்தோராயின், அஃது அவர்க்கே உரித்தாகும். ஆகையால், நீவிர் யாசிக்கும் அறவோர் ஈர்ங்கை நிறையப் பூவும் பொன்னும் புனல் படச் சொரிந்து, ஒண்டொடி மகளிர் பொலங்கலத் தேந்திய தண்கமழ் தேறல் மாந்தி மகிழ் சிறந்து, இரவலர்க்கு அருகாது ஈந்து, உங்கட்கு அறுதியிட்ட வாழ் நாள் முழுதும் வாழ்தல்வேண்டும். ஒருவர் பிறவிப் பெருங் கடலைக் கடக்கத் தாம் செய்த நற்கருமமன்றி நற்புணை பிறிதொன்றுமில்லை. அந்தணர் வேள்வியில் வளர்க்கும் முத்தீப்போலக் கண்ணுக்கினிய கவின் மிக்க காட்சியுடன் ஒருங்கிருந்த கொற்ற வெண்குடைக் கொடித்தேர் வேந்தர்களே, இவ்வாறு நீங்கள் கூடி உறைதலால் உண்டான பீடும் பயனும் நன்மையும் புகழும் யானறிந்து உரைக்கும் அளவினவோ? உங்கள் வாழ்நாள் விண் மீனினும், மழைத்துளியினும் சிறந்து பெருகுவதாக!” எனத் தமிழக வேந்தர் உணர்ந்து உய்யும் வகையில் அறிவுரை கூறி வாழ்த்தினார்.

‘முத்தீப் புரையக் காண்டக இருந்த
கொற்ற வெண்குடைக் கொடித்தேர் வேந்திர்!
யானறி அளவையோ இதுவே?’         (புறநானூறு 387)

என்னும் இவ்வருமை சான்ற அடிகளைத் தன் அகத்தே கொண்டு சங்க இலக்கியத்துள்ளேயே ஒளி மிக்க மணியாய் விளங்கும் இப்புறப்பாடலைப் படிக்குங் தோறும் ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே பல்லாற்றானும் சிறந்திருந்த இன்பத் தமிழகத்தைச் சீரழிக்கக்கூடிய கொடு நோய் எதுவென உணர்ந்து அங்நோய் தீர மருந்தும் காட்டிய அவ்வருந்தமிழ்த் தாயரை எண்ணி எண்ணி,
‘அன்னையீர், எங்கள் தலைமுறையிலேனும் ஒற்றுமையால் உய்ந்து உலகு போற்றும் ஒப்பற்ற சாதியாய் விளங்குவோம். அதுவேயன்றி, உமக்கு வேறென்ன கைம்மாறு செய்ய வல்லேம்?’ என்று நம் தமிழ் உள்ளம் உருக்கத்துடனும் உறுதியுடனும் முழங்குகின்றது அன்றோ?

இவ்வாறு தமிழகம் அன்றும் இன்றும் உய்வதற்கு உரிய ஒரு பெருநெறியினைக் காட்டி ஒற்றுமைச் சங்கொலித்த சான்றோராகிய ஒளவையாரின் பிறப்பைப் போன்றே அவர் முடிவைப் பற்றியும் நாம் ஏதும் அறிந்திலோம்.

ஒளவைப்பிராட்டியாரின் பொன்னுடலம்-அண்ணல் அதிகமான் அளித்த அருங்கனியால் நீண்ட நாள் தமிழகத்தில் வாழ்ந்து தொண்டு புரிந்த திருவுடலம்-எங்கு-எப்பொழுது-எவ்வாறு மறைந்ததோ! அந்தோ! அருந்தமிழ்ப் பெருமாட்டியாரின் பொன்னுடலம் மாய்ந்து ‘அவருடற் பூந்துகள் ஆர்ந்தது’ம் நாம் பிறந்து வாழும் இத்தமிழ் மண்ணிலேதான் என்பதை எண்ணும் போது நம் உடலெல்லாம் சிலிர்க்கிறது! அன்னையாரின் திருவுடலம் மறைந்தாலும், அவருடைய அருந்தமிழ்க் கவிதைகள் என்றும் நமக்கு வழி காட்டும் சுடர் விளக்குகளாய்த் திகழ்வது திண்ணம்.

தமிழகம் கால வெள்ளத்தில் நீர்க்குமிழிபோல அழிந்தொழியாமல்-உலக இருள் போக்கும் ஒப்பற்ற கலங்கரை விளக்காய்த் திகழ வேண்டுமாயின், ஒற்றுமை யொன்றே அதற்குரிய வழி என்பதை இன்றும் நாம் உணருமாறு இருபது நூற்றாண்டுகட்கு முன்பே உணர்த்திய ஒளவைப் பெருமாட்டியாரின் அரியதொரு பாடல் தமிழகத்திற்கு மட்டுமன்றிக் கடல் குழ்ந்த காசினிக்கெல்லாம் அறிவுச்சுடர் கொளுத்தும் அணையா விளக்காய் ஒளிர்கிறது.

தம் வாழ்வில் எத்தனையோ மன்னர்களையும் வள்ளல்களையும் பார்த்தவர் ஒளவையார்; அவர்கள் ஆண்ட மண்ணையும் கடலையும், மலைகளையும் காடுகளையும் கண்டவர். அருமைத் தமிழகத்தின் ஐவகை நிலங்களின் அழகும் அவர் கண்ணாரக் கண்டு களித்ததே ஆகும். சோறு படைக்கும் சோழ நாடும், முத்தளிக்கும் பாண்டி நாடும், வேழம் மிகவுடைய சேரநாடும், சான்றோர் பலருடைத் தொண்டை நாடும் அவர் கண்டு பழகிய பகுதிகளே ஆகும். அத்தகையோர் தம் பரந்த அனுபவத்தில் கனிந்த உண்மை ஒன்றை உலகிற்குத் தம் வாழ்வின் காணிக்கையாக அளித்துள்ளார். “நிலனே, நீ ஒன்றில் நாடேயாக, ஒன்றில் காடேயாக! ஒன்றில் பள்ளமேயாக, ஒன்றில் மேடேயாக! எவ்வாறாயினும், எவ்விடத்து ஆடவர் நல்லரோ, அவ்விடத்து நீயும் நல்லையல்லது, நினக்கென ஒரு நலமுடையையல்லை. வாழிய நிலனே!” என்னுங் கருத்தமைய

நாடா கொன்றோ, காடா கொன்றோ
அவலா கொன்றோ, மீசையா கொன்றோ!
எவ்வழி நல்லவர் ஆடவர்,
அவ்வழி நல்லை வாழிய நிலனே!’         (புறநானூறு, 187)

என அமைந்ததே அச்செய்யுள்.

இவ்வாறு தம்மையும், நம்மையும் ஈன்றெடுத்த மண் மகளை வாழ்த்தும் அருமையான பாடல், நாமும் வையகமும் உணர்ந்து உய்ய ஒளவையார் அளித்த சாவா மருந்தாகும்.

இருபது நூற்றாண்டுகட்கு முன்பு தாய்க்குலத்தின் பெருமையாய் வெற்றியாய்த் தமிழகத்தில் தோன்றிய ஒளவையார்- நல்லிசைப் புலமை சான்ற பெண்மணிகளுக்கெல்லாம் தலை மணியாய் விளங்கிய தமிழ்ச்சான்றோர்-உலகப் பெருமாதருள் ஒருவரென்பது தமிழகம் உலக அரங்கில் மேலும் மேலும் உயர்ந்து ஒப்பற்ற சமுதாயமாய் விளங்கும் பொன்னாளில் வையகம் முழுதும் ஏற்றுப் போற்ற இருக்கும் பேருண்மையாகும். அத்தகு பெருந் தாயரின் சான்றாண்மை மிக்க நெஞ்சின் உள்ளொளியாய் விளங்கும் அருந்தமிழ்ப் பாடல்கள் என்றென்றும் நம் வாழ்விற்கு இருள் நீக்கி ஒளி காட்டி-சிறுமை நீக்கிச் செம்மை கூட்டி-இறப்பு நீக்கி வாழ்வு ஊட்டி-வளம் புரிவதாக!

(தொடரும்)

முனைவர் . சஞ்சீவி

சங்கக்காலச் சான்றோர்கள்

Tuesday, August 24, 2021

ஒளவையார்: 8 : ந. சஞ்சீவி



(ஒளவையார்: 7 : ந. சஞ்சீவி தொடர்ச்சி)

சங்கக்காலச் சான்றோர்கள் – 17

2. ஒளவையார் (தொடர்ச்சி)

 

ஆனால், அந்தோ! ஒளவையாரின் கவிதையும் கண்ணீருங்கூட இனி அதிகமானை உயிர்ப்பியாவே! அதியமான் வாழ்வு அவ்வளவு கசப்பான பாடத்தைக் கடுந்துயரொடு கலந்து இவ்வுலகுக்கு உணர்த்திவிட்டது. அணுவினும் நுண்ணியதாய்-அணுவைப் பிளந்தால் தோன்றும் ஆற்றலினும் பன்னூறு மடங்கு அதிகமான பேராற்றல் படைத்ததாய் விளங்கும் இயற்கையின் ஆற்றலை-பரந்த பேரூழின் வல்லமையை-என்னென்று கூறுவது! ‘வாளெடுத்தவன் வாளால் மடிவான்,’ என்ற சான்றோரின் வாக்கு அதிகமான் வாழ்வில் எவ்வளவு துயரக் காட்சிகளோடு கலந்து மெய்யாகிவிட்டது! ‘மனிதனது ஒவ்வொரு செயலும் தன் எதிர்ச் செயலைக் கண்டே தீரும்,’ எனும் இயற்கையின் சட்டத்தை எவரே உடைக்க வல்லார்? தீயின் சுடர் வானோக்கி எரிவதும், வெள்ளம் கீழ் நோக்கி விரைவதும் போலன்றோ தவிர்க்க முடியாத தன்மையதாய் அவ்வியற்கையின் ஆற்றல் விளங்குகிறது? அதிகமான் மாண்டான். தகடூர் வீழ்ந்தது. வரலாறாகிவிட்ட இச்செய்திகளைப் பின் வரும் பதிற்றுப்பத்து அடிகள் விளங்குகின்றன:

பொய்யில் செல்வக் கடுங்கோ வுக்கு
வேளாவிக் கோமான் பதுமன் தேவி ஈன்றமகன்
கொல்லிக் கூற்றத்து நீர்கூர் மீமிசைப்
பல்வேற் றானை யதிக மானொ(டு)
இருபெரு வேந்தரையும் உடனிலை வென்று
முரசுங் குடையுங் கலனுங் கொண்(டு)
உரைசால் சிறப்பின் அடுகளம் வேட்டு‘ [1]
. . . . . . . . . . . . . . . . . . . .
‘வெல்போர் ஆடவர் மறம்புரிந்து காக்கும்
வில்பயில் இறும்பின் தகடூர் நூறி
பேஎ மன்ற பிறழ நோக்கியவர்
ஒடுறு கடுமுரண் துமியச் சென்று
வெம்முனை தபுத்த காலை ‘ [2]

———
[1]. பதிற்றுப்பத்து, 8-ஆம்,பத்து, பதிகம்
[2]. பதிற்றுப்பத்து, 8-ஆம் பத்து, 8-ஆம் பாடல்
———-


வீரமரணமடைந்த அதிகமான் பொன்னுடலம் ஈமச் சிதை ஏறியது. அதிகமானது அருமை மகன் பொகுட்டெழினி நீர் வடியும் கண்களோடும் குருதி கொதிக்கும் நெஞ்சோடும் தந்தையின் சிதைக்குத் தீயிட்டான். உற்றாரும் மற்றாரும், இரவலரும் இல்லோரும், பாணரும் பாடினியரும், கூத்தரும் விறலியரும் கோவெனக் கதறி அழுதனர். ஈமத்தீச் சுழன்று சுழன்று எழுந்தது; சுடர் விட்டு எரியலாயிற்று. ஒளவையாரின் அருள் உள்ளம் கொதித்துக் குமுறியது. அவர் பிள்ளையைப் பறிகொடுத்த பெற்றவளைப்போல, துடிதுடித்து அழுது அரற்றினர்.

“அந்தோ! ஈம வெந்தீயே! நீ எந்தை உடலை எரிக்காது போயினும், அன்றி விண்ணுற எழுந்து எரித்து நீறாக்கினும், அவனுடைய ஞாயிறு அன்ன புகழை உன்னால் ஒரு நாளும் எரிக்க முடியாது. அதிகர் கோமானே, அருங்கொடை வள்ளலே, ஆர்வலர் புன்கண் தீர்த்த அருமருந்தே, ஈரநெஞ்சத்தோடு மாரி போல வழங்கிய கருணை முகிலே, நீயின்றிக் கழிகின்ற காலையும் மாலையும் இனி என் வாழ்நாள் காணாது இருள் சூழ்ந்து ஒழியட்டும்; உனக்கு உற்றவர், நடுகல் நட்டு நாரால் அரிக்கப்பட்ட மதுவை நீ அருந்து வாயெனக் கருதிச் சிறு கலத்தினின்றும் உகுக்கின்றனர். கோடுயர் மலையுடன் நாடு முழுதும் கொடுப்பினும் கொள்ளாத பண்பினை உடைய நீயோ, இப்புல்லிய மதுத்துளிகளை நுகர்வாய்! ” என்னும் கருத்தமைந்த

எறிபுனக் குறவன் குறையல் அன்ன
கரிபுற விறகின் ஈம ஒள்ளழல்
குறுகினுங் குறுகுக; குறுகாது சென்று
விசும்புற நீளினும் நீள்க; பசுங்கதிர்த்
திங்கள் அன்ன வெண்குடை
ஒண்ஞாயி றன்னோன் புகழ்மா யலவே.’         (புறநானூறு, 231)

இல்லா கியரோ காலை மாலை
அல்லா கியர்யான் வாழும் நாளே;
நடுகற் பீலி சூட்டி நாரரி
சிறுகலத் துகுப்பவுங் கொள்வன் கொல்லோ
கோடுயர் பிறங்குமலை கெழீஇய
நாடுடன் கொடுப்பவுங் கொள்ளா தோனே!’         (புறநானூறு, 232)

என்னும் பாக்கள் ஒளவையாரின் அரற்றலை விளக்குவன.

இவ்வாறு எழுத்தறிவார் இதயத்தையெல்லாம் பாகாய் உருக்கிக் கண்ணீர் பெருக்கெடுத்தோடச் செய்யும் கையறுநிலைப் பாடல்களைப் பாடிய ஒளவையார், அதிகமான் மறைவிற்குப் பின்னும் சிலகாலம் “இன்னும் இறப்பு வரவில்லையே! சேண் உயர் உலகிலேனும் சென்று அதிகமானைக் காணோமோ!” என்ற கலகத்துடனையே வாழ்வை நடத்தியிருக்க வேண்டுமெனத் தோன்றுகிறது.

அதிகமான் மகன் பொகுட்டெழினி மிக இளையனாயிருந்தான். அதனால், அவனுடன் ஒளவையார் சூழ்ச்சித் துணைவராய்த் தங்கி, ‘விலங்கு பகை கடிந்த கலங்காச் செங்கோலனாய்’ அவன் விளங்க, அவனுக்கு உற்ற துணைவராய் விளங்கினார். பொய்யா ஈகைப் பொகுட்டெழினியும் தன் நிழல் வாழ்வோர் துன்ப இருள் சிறிதும் காணாதவாறு ஆட்சி புரிந்தான். மேலும், ‘இசை விளங்கு கவிதை நெடியோனா’ய் விளங்கிய அவன், தன் அருமைத் தந்தையைப் போன்றே விருந்திறை நல்கும் வள்ளியோனாயும் திகழ்ந்தான். அத்தகையோன் வீரம், கருணை, காதல் முதலிய புண்புகளையெல்லாம் போற்றியவாறு ஒளவையார் ஓரளவு தம் வாழ்வில் வீழ்ந்த பேரிடியால் விளைந்த பெருந்துயரை மறந்திருந்தார், பின்னர் அவர் ‘தமிழ் கூறும் நல்லுலக’த்தின் பல்வேறு பகுதிகளையும் காண விழைந்தார். அது காரணமாகத் தகடூரினின்றும் வெளிப்போந்தவர், வள்ளுவர் குடியில் தோன்றியவனும், நாஞ்சில் மலைக்கு உரியவனுமாகிய நாஞ்சில் வள்ளுவனைக் கண்டு, அவன் செம்மைசால் பண்பினன் என்பதை அறிந்து, அவன்பால் சென்று, பொன்னே துகிலோ ஏதும்பெற எண்ணாதவராய், உணவுக்குச் சிறிது அரிசியே வேண்டினார். அவனோ, அருந்தமிழ்ப் புலவர் வரிசை அறிந்து வழங்குபவன் ஆகலின், ஒளவையாரின் பெருமை யெல்லாம் உணர்ந்தவனாய் யானைப் பரிசில் அளித்தான். அது கண்டு ஒளவையார் அவன் கொடையை வியந்து, “செந்நாப் புலவீர், நாஞ்சில் மலை வேந்தன் மெல்லிய அறிவினனே, இஃது உறுதி. யாம் இலைக்கறிமேல் தூவச் சிறிது அரிசி வேண்டினேமாக, அவன் பரிசிலர்க்குதவும் வரிசை அறிதலால், எம் வறுமையைப் பார்த்தலே அன்றித் தன் மேம்பாட்டையும் சீர்தூக்கிப் பார்த்துப் பெரிய மலை போல்வதொரு யானையை அளித்தான். ஆதலால், ஒருவர்க்கு ஒன்றனைக் கொடுக்குமிடத்து அப்பெற்றிப் பட்டதொரு தெளியாக்கொடையும் உளதோதான்! பெரியோர் தாங்கள் செய்யக்கடவ முறைமையைத் தெரிந்து பாதுகாத்துச் செய்யார்கொல்!” எனக் குறிப்பாகவும், வெளிப்படையாகவும் அவனைப் புகழ்ந்தார்.

பின்னர் ஒளவையார் உறையூரின் கண் சோழ அரசன் இராயசூய வேள்வி இயற்றுகின்றான் என்பது அறிந்து ஆங்குச் சென்றார். அவன் சேரமான் மாரி வெண்கோவும் பாண்டியன் உக்கிரப் பெருவழுதியும் சோழ வேந்தனோடு ஒருங் கிருக்கக் கண்டார். வாழ்நாளெல்லாம் தமிழ் வேந்தரும் தமிழ் வள்ளல்களும் தங்களுள் மாறுபாடு கொண்டு போரிட்டு மடிவதையே கண்டு மனம்வெந்திருந்த ஒளவையாருக்குத் தமிழகத்து முடியுடை மூவேந்தரும் ஒருங்கிருந்த காட்சி எல்லையில்லா இன்பத்தை அளித்தது. அவர் அவ்வின்ப உணர்வின் எல்லையில்நின்று அம் மூவேந்தரையும் அருந்தமிழ்க் கவிதையால் போற்றினார்.

(தொடரும்)

முனைவர் . சஞ்சீவி

சங்கக்காலச் சான்றோர்கள்

 

Friday, August 20, 2021

ஒளவையார்: 7 : ந. சஞ்சீவி

 அகரமுதல




(ஒளவையார்: 6 : ந. சஞ்சீவி தொடர்ச்சி)

சங்கக்காலச் சான்றோர்கள் – 16

2. ஒளவையார் (தொடர்ச்சி)

அதிகமானோ, அவர்மேல் சென்று தன் அருமந்த நாட்டைக் காக்கும் வழி கருதி ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியவனாய் வாளாவிருந்தான். அதிகர் கோமான் வாளாவிருத்தல் கண்டு, ஒளவையார் அவன் நெஞ்சில் கனன்றெரியும் ஆண்மைத் தீப்பொங்கி எரியும் வண்ணம் வீர மொழிகள் பல புகன்றார் : “வெண்காந்தள் பூவும் காட்டு மல்லிகையும் மணம் பரப்பும் மலைச்சாரலில் வாழும் மறப்புலி சீறினால் அதை எதிர்க்கும் மான் கூட்டமும் உளதோ? காய்கதிர்ச் செல்வன் கதிரொளி பரப்பக் கண்டால், கனையிருளும் எதிர் நிற்குமோ? பாரமிகுதியால் வண்டியின் பார் அச்சொடு பொருந்தி நிலத்தின்கண் சகடம் பதியினும், மணல் பரக்கவும் கற்பிளக்கவும் இழுத்துச் செல்லும் பெருமிதப் பகட்டிற்குத் துறையுமுண்டோ? கணைய மரமொத்த முழந்தாளளவு தோயும் கைகளை யுடையவனே, மழவர் பெரும, நீ போர்க்களம் புகுந்தால் உன் மண்ணகத்தைக் கைக் கொண்டு ஆர்க்கும் வீரர்களும் உண்டோ?’ [1] என்று வீரமுழக்கம் செய்தார்.
——–
[1]. புறம். 90.
——–


ஒளவையாரின் வீரமுழக்கம் கேட்ட அதிகமான் கோபத்தீ இரு கண்களிலும் பொறி பறக்க அரிமா எனப் பாய்ந்தான். அவனுடன் இருபெரு வேந்தரும் தம் நால் வகைப் படையுடன் கலந்துகொண்டனர். இருபுற வீரரும் ஒருவரை ஒருவர் சாடினர். நானிலமே நடுங்கப் பெரும்போர் மூண்டது. மலையன் அவனை எதிர்த்து நின்ற அதிகன் ஆகிய இருபெரு வேந்தர் படையும் கடலை எதிர்க்கும் கடலென நின்று ஆரவாரித்தன. இரு புற மன்னரும் வீரப்போர் நிகழ்த்தினர். யானைகளும், குதிரைகளும் மலை மலையாய் வெட்டுண்டு வீழ்ந்தன. வாள் வீரரும் வேல் வீரரும் விழுப்புண் தாங்கிச் சாய்ந்தனர். களிறுகளின் பிளிறலும், பரிகளின் சாவொலியும், வீரர்களின் அரற்றலும் கடலொலியையும் மீக்கூர்வவாயின. வையகம் காணாக் கடும்போர் நடந்தது.

தன்னை ஒத்த ஓரியைக் கொன்ற மலையமான் பால் கொண்ட வஞ்சம் தீர்க்கத் துணையாகப் படை திரட்டி வந்த சேரன் கொடுமதியை-இறுமாப்பை-நினைந்தான் அதியன்; எரிமலை போலக் கொதித்தான். கண்களில் சினத்தீக்கனன்றது. நெடுநாள் பசித்திருந்த வாள் வரி வேங்கையென நேரார் படை கிழித்து அவர் நெஞ்சைப் பிளக்கப் பாய்ந்தான்; எதிர்த்து வந்த மள்ளரையும் களிறுகளையும் இரு கூறாக்கினான். அதியனது ஆற்றொணாச் சினத்தீக் கண்ட மழவர் கூட்டம், விண்ணதிர முழங்கி, அடுபோர் உடற்றியது; காற்றென வந்த அம்புகளை எல்லாம் தடுத்து நிறுத்தி மழையெனக் கணைகளைப் பொழிந்தது. இரு திறத்திலும் பேயும் அஞ்சப் பெரும் போர் நிகழ்ந்தது. மாவும் களிறும் குருதி வெள்ளத்தில் மிதந்தன. வைத்த கண் வாங்காது வாள் வீரரும் வேல் வீரரும் அருஞ்சமர் புரிந்தனர். அதியமானும் அம்பொடு வேல் நுழை வழியெல்லாம் நின்று பெரும்போர் புரிந்தான். அவன் உடல் முழுதும் மாற்றாரின் கணைகளால் துளைபட்டது. அத்துளைகளினின்றும் செந்நீர் அருவி போலப் பெருக்கெடுத்தது. அது கண்ட ஒளவையாரின் அன்புள்ளம் கொதித்தது. அவர், “பெருந்தகாய், பெருஞ்சமர் புரிந்து நீ விழுப்புண் தாங்கியமையால், உன்னோடு மாறு கொண்ட மன்னர், களத்தில் சாவாமையால் உளதாகும் குற்றம் ஒழியும்படியும் பிற்காலத்தில் நோயால் இறந்த தம் உடம்பைத் தருப்பையில் கிடத்தி வாளால் பிளந்து அடக்கம் செய்தலினின்று தப்பியும் உய்ந்தனர். இப்போது உன் வாட்போரில் பலர் மாண்ட னர். இனி நீ வருந்திப் போர் செய்து வெல்ல வேண்டுவது யாதுளது?” என மேலும் அவனை ஊக்கினார். அதிகமானும் ‘உடலெனக்கு ஒரு சுமை,’ எனக் கருதிய வனாய்த் தன் ஆற்றலெல்லாம் காட்டிச் சமர் புரிந்தான். அந்நிலையில் கூர்வேலொன்று கடுகி வந்து அவன் பேரிதயத்தைப் பிளந்தது. அதிகமான் வாழ்வு வீரச் சாவைப் புன்முறுவலோடு ஏற்றது. ஆனால், அவன் சாவை வையகம் பொறுக்குமோ? பருவகால மழையெனக் கண்கள் நீர் பொழிய, அவன் மக்கள் உள்ளம் குமுறி அழு தார்கள். ஒளவையார் அடைந்த துயரைச் சொல்லவும் இயலுமோ! அவர், தன்னினும் தண்ணார் தமிழையே பெரிதாகப் போற்றி ய அப்பெருந்தகையின் மீளாப் பிரிவை எண்ணி எண்ணி இதயம் துடித்தார்; உள்ளம் குமுறிக் குமுறி ஓவென அழுதார்.

”குளிர்ந்த நீருடைய துறையின் கண் தேன் நிறைந்த பகன்றை மாமலர் பிறரால் சூடலின்றி வாடி ஒழிவதைப் போன்று, தம்மிடமுள்ள பொருளைப் பிறர்க்கு ஈயாமல் இறந்தொழியும் மாந்தர் பலரையுடையது இம்மண்ணுலகம். இத்தகைய உலகில் அதியன் வாழ்வு எத்துணைப் பயன் நிறைந்து விளங்கியது! சிறிது மதுவைப் பெற்றாலும் அதை எமக்குத் தருவான். பெரிய அளவில் கிடைத்தாலோ, அம்மதுவை யாமுண்டு பாட எஞ்சியதை அவன் நுகர்வான். அந்தோ! அந்த வாழ்வு கழிந்ததே! சோறு அனைவர்க்கும் பொதுவாகலான், அப்பெருந்தகை அது சிறிய அளவில் கிடைப்பினும் பெரிய அளவில் கிடைப்பினும் பலரோடு சேர்ந்து உண்பான். அந்த வாழ்வு கழிந்துவிட்டதே! என்பொடு ஊன் உளதாகிய இடமெல்லாம் எமக்கீந்து, அம்புடன் வேல் நுழை வழியெல்லாம் தான் நிற்பான். நரந்தம் நாறும் தன் கரத்தால் புலவு நாறும் என் தலையை அருளுடன் தைவந்திடுவான். அந்த வாழ்வும் தொலைந்ததே! அவன் மார்பில் பாய்ந்த வேல் அவனை மட்டுமா கொன்றது? இல்லை! அது பெரும்பாணரின் அகல் மண்டையைத் துளைத்து, ஊடுருவிச் சென்று, இரப்போரின் ஏந்திய கையையும் பிளந்து, சுற்றத்தார் புன்கண் பாவையின் ஒளியையும் மழுங்கச் செய்து, அழகிய நுண் சொல் தேர்ச்சிப் புலவர் நாவிலே சென்று அன்றோ விழுந்தது! எமக்குப் பற்றாகிய எம் இறைவன் யாண்டுளனோ! இனி, பாடுவாரும் இல்லை; பாடுவார்க்கு ஒன்று ஈவாருமில்லை’, என்னுங் கருத்தமைய

‘சிறியகள் பெறினே எமக்கீயும் மன்னே!
பெரியகள் பெறினே
யாம்பாடத் தான்மகிழ்ந்து உண்ணும் மன்னே!
சிறுசோற் றானும் நனிபல கலத்தன் மன்னே!
பெருஞ்சோற் றானும் நனிபல கலத்தன் மன்னே!
என்பொடு தடிபடு வழியெல்லாம் எமக்கீயும் மன்னே!
அம்பொடு வேல்நுழை வழியெல்லாம் தான்நிற்கும் மன்னே!
நரந்தம் நாறுந் தன்கையாற்
புலவு நாறும் என்தலை தைவரும் மன்னே!
அருந்தலை யிரும்பாணர் அகல்மண்டைத் துளை உரீஇ
இரப்போர் கையுளும் போகிப்
புரப்போர் புன்கண் பாவை சோர
அஞ்சொல் நுண்தேர்ச்சிப் புலவர் நாவிற்
சென்றுவீழ்ந் தன்(று) அவன்
அருநிறத்(து) இயங்கிய வேலே!
ஆசா(கு) எந்தை யாண்டுளன் கொல்லோ!
இனிப்பாடுநரும் இல்லை; பாடுநர்க்(கு)ஒன்று ஈகுநருமில்லை;
பணித்துறைப் பகன்றை நறைக்கொள் மாமலர்
சூடாது வைகி யாங்குப் பிறர்க்(கு)ஒன்று
ஈயாது வீயும் உயிர்தவப் பலவே!’         (புறம், 235)

என விண்ணும் மண்ணும் கண்ணீர் வடிக்கத் தம் உள்ளத்தில் பீரிட்டு எழுந்த துயரவெள்ளத்தைச் செய்யுள் வடிவாக்கினார்.


(தொடரும்)

முனைவர் . சஞ்சீவி

சங்கக்காலச் சான்றோர்கள்

 

Sunday, August 15, 2021

ஒளவையார்:6 : ந. சஞ்சீவி

 அகரமுதல



(ஒளவையார்: 5 : ந. சஞ்சீவி தொடர்ச்சி)

சங்கக்காலச் சான்றோர்கள் – 15

2. ஒளவையார் (தொடர்ச்சி)


இத்தகைய தலை சிறந்த வள்ளியோன் வீரத்தின் பெருமையையும் நாம் நன்கு அறிவோமல்லமோ? எழுவரொடு முரணி அவன் போர் புரிந்து கண்ட வெற்றியும் கோவலூரை நூறி அவன் கொண்ட கொற்றமும் என்றென்றும் அவன் புகழ் பேசுவன அல்லவோ? அத்த கைய போர் அடு திருவினாகிய பொலந்தார் அஞ்சியின் இணையற்ற வீரத்தை எத்தனையோ அருந்தமிழ்க் கவிதையால் பெருமிதம் தோன்றப் புகழ்ந்துள்ளார் ஒளவையார். அவற்றுள் எல்லாம் தலை சிறந்தது ஒன்று. அதிகன் வாழ்வில் நடந்த உண்மை நிகழ்ச்சி ஒன்றை அதன்கண் அவர் சொல்லோவியமாக்கிக் காட்டும் திறன் என்றென்றும் நம் கருத்தை விட்டு அகலா வண்ணம் நிலை பெற்று விளங்குகிறது.

போர்க்களத்தில் கடும் போர் புரிந்துகொண்டிருந்தான் அதிகமான். அவ்வமயம் அவனுக்குத் தவமகன் பிறந்தான். வெற்றியுடன் போர் புரியும் வேளையில் இச் செய்தி அவனுக்கு எட்டியது. தன் குல விளக்காய்த் தோன்றிய தவமகன் திருமுகத்தைப் போய்க் காண அவன் கால்கள் விரைந்தன. அவன் தன் போர்க் கோலத்தையும் களைந்தானில்லை. கையிலே வேல்; காலிலே வீரக்கழல்; உடம்பிலே வியர்வை; கழுத்தில் அம்புகள் பாய்ந்த ஈரம் புலராப் பசும்புண்கள்-இத்தோற்றத்தோடு தன் தவமகனை-செல்வக் களஞ்சியத்தைப் போய்க்கண்டான். ஆனால், அந்நிலையிலும்-மாலை மதிய மனைய பால் ஒழுகும் மைந்தன் முகங்கண்ட நேரத்திலும் பனந்தோட்டையும் வெட்சி மலரையும் வேங்கைப் பூவுடனே கலந்து தொடுத்து உச்சியில் சூடி ஒன்னாரை வெகுண்டு பார்த்த கண்கள் தம் சிவப்பு மாறவில்லை. இந்நிலை கண்ட ஒளவையார், தன் அன்புச் செல்வத்தைக் கண்ட நேரத்திலும் மனம் ஆறிக் கண் குளிராத சினமுடைய அதிகமானது மனநிலையை எண்ணி எண்ணிப் பாடுகிறார் :

‘கையது வேலே , காலன புனைகழல்;
மெய்யது வியரே; மிடற்றது பசும்புண்;
வட்கர் போகிய வளரிளம் போந்தை
உச்சிக் கொண்ட ஊசிவெண் தோடு
வெட்சி மாமலர் வேங்கையொடு விரைஇச்
சுரியிரும் பித்தை பொலியச் சூடி
வரிவயம் பொருத வயக்களிறு போல
இன்னு மாறாது சினனே! அன்னோ!
உய்ந்தன ரல்லரிவன் உடற்றி யோரே!
செறுவர் நோக்கிய கண்தன்
சிறுவனை நோக்கியுஞ் சிவப்பா னாவே!’         (புறநானூறு. 100)

இவ்வாறு இரவலர்க்குக் கருணை நிலவாய் இகல் வேந்தர்க்கு வெங்கதிராய் விளங்கிய அதிகமானின் சிறப்புக்களையெல்லாம் செந்தமிழ்க் கவிதைகளால் பாடிப்பாடி மகிழ்ந்தார் ஒளவையார். அவற்றையெல்லாம் நாளும் செவிமடுத்திருந்த அதிகமானும் “காடும் மலையும் கலந் துறையும் நாட்டைப் பெற்றதினும் வயப்புலியனேய வாள் வீரம் மிக்க ஆயிரம் ஆயிரம் மழவர்களடங்கிய படையைப் பெற்றதினும், களம் பல புகுந்து வலம் பல கொண்டதினும், இணையிலா வீரன் என்று எங்கும் பரவிய இசையினும் பெரும்பேறன்றோ ஒளவைப் பிராட்டியாரின் திருவாயால் புகழ் பெறும் பெரும்பேறு?” என எண்ணி மகிழ்ந்து இன்பக் கடலில் ஆடியிருந்தான்.

இந்நிலையில் அதிகமானின் வாழ்வில் துன்ப இருள் படியலாயிற்று; போர் மேகங்கள் குமுறிக்கொண்டு சூழலாயின. தன் தலை நகரைப் பாழாக்கிய அதிகமானது நாட்டையும் வாழ்வையும் பாழாக்க, கரவுடை அரவு போல அற்றம் நோக்கியிருந்தான் மலையமான். தன் நாடும் நகரமும் அழிந்து சுடுகாடான காட்சி அவன் நெஞ்சில் நெருப்பாய்க் கனன்றுகொண்டிருந்தது. இயற்கையும் கால மெனும் கடுங்காற்றுக்கொண்டு அந்நெருப்பை ஊதித் தன் காரியத்தைச் சாதித்துக்கொண்டது.

மலையமான் எவ்வாறேனும் அதிகமானை வென்று தன் நாட்டையும் நகரையும் பெறக்கருதிச் சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறையைத் தனக்குத் துணை நிற்க வேண்டினான். அவனும் அதற்கு ஒருப்பட்டுக் கடை யெழு வள்ளல்களுள் ஒருவனாய் விளங்கிய வல்வில் ஒரியின் ‘பயங்கெழு கொல்லியினை’முதற்கண் பொருது கொள்ள எண்ணங்கொண்டான். மலையமானும் அதற்கு இசைந்து கொல்லி மலையை முற்றுகையிட்டான். அச்செய்தி யறிந்த ‘குறும்பொறை நன்னாடு கோடியர்க்’கீந்து குன்றாப் புகழ்படைத்திருந்த ‘ஓங்கிருங்கொல்லிப் பொருநன்’ தன் ஓரிக்குதிரைமீதேறிப் போர்க்களம் நோக்கிப் பாய்ந்தான். சேரன் துணைக்கொண்டு வந்த ‘ஒள்வாள் மலையன்’ படையும், வல்வில் ஒரிதன் தானையும் ஒன்றோடொன்று மோதின. குருதி வெள்ளம் ஆறாய்ப் பெருகிற்று. காரிக் குதிரைக் காரியொடு ஓரிக்குதிரை ஓரி இடியொடு இடி தாக்கினாலென மோதி மலைந்து காலனும் அஞ்சக் கடும் போர் உடற்றினான். கொல்லிக் கூற்றத்தின் தலைவன் உயிரைத் துரும்பென மதித்துத் தன் கண்ணான நாட்டைக் காக்க மாற்றார் படை கலக்கி-மனம் கலக்கிப் போர் புரிந்தான். ஆனால், அந்தோ! அவன் ஈர நெஞ்சில் கூர்வேலொன்று ஆழப் பாய்ந்து அவன் இன்னுயிர் குடித்தது. சாய்ந்தான் ஓரி. அவன் நாடும் மலையும் அவலமுற்றன; கூத்தரும் பாணரும் குமுறி அழுதனர். கொல்லிக் கூற்றம் பெருஞ்சேரல் இரும்பொறையின் சீற்றத்துக்கு இரையாயிற்று.

முள்ளூர் மன்னன் கழல்தொடிக் காரி
செல்லா நல்லிசை நிறுத்த வல்வில்
ஒரிக் கொன்று சேரலர்க் கீத்த
செவ்வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லி’         (அகநானூறு. 209)

என வரும் நெடுந்தொகை அடிகளும் பிற சங்கப்பாடல்களும்[1] இவ்வரலாற்றுச் செய்தியை வலியுறுத்தும்.

மலையமான் ஓரியைக் கொன்று அவன் ஊரைப் பாழாக்கினான். ஆயினும், அவன் உள்ளம் அமைதி அடையவில்லை. தன்னை வென்று தன் தலை நகரையும் அழித்தவனை அழிக்கவே அவன் உள்ளம் விரும்பியது. ‘ஓங்கிருங் கொல்லி’யை அதன் தலைவனைக் கொன்று பெருஞ்சேரல் இரும்பொறைக்குக் காணிக்கையாக்கி அவன் உள்ளம் உவக்கச் செய்தான் காரி. தான் பெற்ற காணிக்கையால் புகழ் வெறியும் போர் வெறியும் கொண்டான் சேரன்; தன்னை மகிழ்வித்த மலையமான் மனம் குளிரத் தகடூரை அழிக்கத் துணிந்தான். சேரனுடன் காரி வஞ்சம் தீர்க்கச் சீறி வரும் செய்தி அறிந்தான் அதிகமான்; தன் நட்பிற்குரிய இருபெருவேந்தரையும் துணைக்கு அழைத்தான்; ‘அரவக்கடல் தானை அதிகன்’ வேண்டுகோட்கிசைந்த அவர்கள் பெரும்படை திரட்டி வரும் வரையில் தன் தலை நகராம் தகடூரிலேயே அரணடைத்து உள்ளிருந்தான். அவன் மழவர் படை கடியரண்களைக் காத்து நின்றது. சேரன் படையும், மலையமான் படையும், ‘வெல்போர் ஆடவர் மறம் புரிந்து காக்கும் வில் பயில்’ தகடூரை முற்றுகையிட்டன.
———
[1]. அகம். 208, நற்றிணை. 320.
———–

(தொடரும்)

முனைவர் . சஞ்சீவி

சங்கக்காலச் சான்றோர்கள்