Wednesday, September 02, 2015

நோபல் பரிசுத் தகுதியாளர் சி.இலக்குவனார்

Ilakkuvanar+03

தமிழைக் காத்தவரை நாம் மறக்கலாமா?

நோபல் பரிசுத் தகுதியாளர்

புரட்சித்தமிழறிஞர் பேராசிரியர் சி.இலக்குவனார்

  விருந்தோம்பல், நன்றிமறவாமை முதலிய பண்புகள் தமிழ்மக்கள் கடைப்பிடித்து வருவனவாக இருப்பினும் மறதியும் நம்மைக் காத்தாரைப் போற்றாமையும் இன்றைய தமிழ் மக்களின் அரும் பண்புகளாகத் திகழ்ந்து நம்மைத் தலைகுனியச் செய்கின்றன. எனவேதான் தனக்கென வாழாமல் தமிழ்க்கென வாழ்ந்து மறைந்த தவப்புதல்வர் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனாரைத் தமிழுலகும் மறந்து விட்டது; நம் சமுதாய மக்களும் மறந்து விட்டனர். சங்கத்தமிழை மீட்டுப் பரப்பிய அவர் புலமையும் தொண்டும் குறள் நெறியைப் பரப்பிய அவரின் சீரும் சிறப்பும் தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் ஆக்கி அகிலமெங்கும் பரப்பிய அரிய முயற்சியும் நோபல் பரிசுக் குழுவினருக்குத் தெரிவிக்கப்பட்டிருப்பின் நோபல் பரிசினைத் தவறாமல் பேராசிரிய மணியாம் இலக்குவனார்ப் பெருந்தகைக்கே அளித்திருப்பர். ஆனால் தமிழ்நலம் கருதித் தன் வாழ்வை அமைத்துக் கொண்ட அவர் பெயரில் மணிமண்டபமோ பல்கலைக் கழகமோ ஆட்சி வளாகமோ சிலையோ இன்றைக்கு அமைக்கப்பட வில்லை.
  பேராசிரியரின் மாணவர்கள் துறைத்தலைவர்களாய், துணைவேந்தர்களாய், உயர் அதிகாரிகளாய், நீதிபதிகளாய், தூதர்களாய், அமைச்சர்களாய், பேரவைத் தலைவர்களாய்த் திகழ்ந்திருப்பினும் அவர் புகழ் நினைவு போற்றப்படுவதில்லை என்பது நமக்குத் தலைகுனிவான செயல் ஆகும். தமிழாய்ந்த தலைமகனாய் ஐந்தாம் முறை ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ள மாண்புமிகு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும் பேராசிரியர் இலக்குவனார் அவர்களின் மாணவர்தாம். அவர்மீது பெருமதிப்பும் பேரன்பும் கொண்ட கலைஞர் அவர்கள், பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களைத் தமிழ்த்தாய் எனவே உருவகப் படுத்தியவர். உலகிலேயே மொழிக்கென சிறைசென்ற முதல் பேராசிரியர் அவர்களுக்குத் தனியாக நினைவு மண்டபம் அமைத்திருக்க வேண்டும். ஆனால் மொழிப்போர் தியாகிகள் மண்டபத்தில் நூற்றோடு நூற்றுஒன்றாகப் பேராசிரியர் படம் உள்ளது. இதனை உள்ளத்தில் இருத்திப், பேராசிரியர் நினைவாக ஏதும் நினைவகம் அமைக்க முத்தமிழறிஞரை வேண்டுகிறோம்.
  சங்கத் தமிழை வங்கக் கடலில் தூக்கி எறிய வேண்டும் என வாய்க் கொழுத்த சிலர் பேசியபொழுது கிளர்ந்தெழுந்து மக்களைத் திரட்டிச் சங்கத் தமிழ்ச் சிறப்பைப் பேராசிரியர் விளக்கியதுடன், ‘சங்க இலக்கியம்’ என்னும் இதழ் நடத்தியும் நாடெங்கும் சங்கஇலக்கியங்களைப் பரப்பியவர். புலவர்கள் சிலரிடம் மட்டும் இருந்த சங்க இலக்கியம் பாமரரும் அறியும் சிறப்பைப் பெற்றது. இத் தொண்டு பெற்ற பயனின் உச்ச அளவே இன்று கலைஞரின் சங்கத்தமிழ் உலகெங்கும் சிறப்பைப் பெற்றுள்ள நிலை.
  வகுப்பறைகளில் ஆங்கிலத்தில் குரல் கொடுத்த நிலையை மாற்றி,  ‘உள்ளேன் ஐயா’ எனக் குரல் கொடுக்கச் செய்தவர் – பிழையற்ற தமிழில் பேசவும் எழுதவும் பொதுமக்களை ஆயப்படுத்தியவர் – தனித்தமிழில் இதழ்கள் நடத்திப் புரட்சி செய்தவர் – தமிழ்வழிக்கல்வியை வலியுறுத்திப் பேராடியவர் – தமிழ்ப்பணிகள் காரணமாகப் பதவிகளை இழந்தவர் – பாரதிதாசனின் தமிழ் இயக்கப் பாடல்களுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் – செம்மொழி காக்கச் சிறை சென்ற செம்மல்- ஆராய்ச்சி அறிஞர் – வறுமையில் வாடிய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவியவர் – தவறு செய்பவர் யாராயினும் இருபதாம் நூற்றாண்டு நக்கீரர் ஆகத் திகழ்ந்து கண்டித்தவர் – தமிழ் நலம் கெடும் இடங்களிலெல்லாம் தலையிட்டுப் புரட்சி செய்தவர்.
  இத்தகைய பேரறிஞர் வேறு சமுதாயத்தில் தோன்றியிருந்தார் என்றால் அளவிடற்கரிய சிறப்புகளைப் பெற்றிருப்பார். ஆனால், நம் சமுதாயத்தில் தோன்றிய தவக் குறைவால் உரிய போற்றுதலைப் பெறாமல் உள்ளார். மாண்புமிகு முதலமைச்சர், மாண்புமிகு நிதியமைச்சர் முதலான மூத்த தலைவர்கள்தாம் அவரின் தூய வாழ்வையும் இழப்புகளையும் நன்கு உணர்ந்தவர்கள். நல்லாட்சி நடத்தும் தமிழக அரசு செந்தமிழ்மாமணி பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களுக்கு இறப்பிற்குப் பின் வழங்கும் விருதுகளை வழங்கியும் பேராசிரியர் நூல்களை நாட்டுடைமை ஆக்கியும் பேராசிரியர் சி.இலக்குவனார் பெயரில் படைப்பாளர்களுக்கும் இதழாளர்களுக்கும் விருதுகள் வழங்கியும் தமிழ்ப்பல்கலைக்கழகத்திற்குப் பேராசிரியர் சி.இலக்குவனார் பெயரைச் சூட்டியும் தமிழ்ப்பணியாற்றிட வேண்டுகிறோம்.
தரவு: கூடல்மலர்
(2006-2007ஆண்டு அறிவிப்பின்படி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் அவர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டன.)



தமிழியக்க முன்னோடி சி.இலக்குவனார் – பா.சு. இரமணன்

S.Ilakkuvanar+10
  ‘செந்தமிழ் மாமணி’. ‘இலக்கணச் செம்மல்’. ‘முத்தமிழ்க் காவலர்’. ‘செம்மொழி ஆசான்’ ‘தமிழர் தளபதி’ என்று தமிழறிஞர் பலரால் போற்றப்படுபவர் சி. இலக்குவனார். “தமிழுக்கென தோன்றிய அரிய பிறவிகளில் இலக்குவனாரும் ஒருவர். அவர்தம் தமிழ்ப்பற்றும். தமிழ்வீரமும் தமிழ் நெஞ்சமும் நம் வணக்கத்துக்குரியவை. தமிழுக்காகத் துன்பத்தில் வளர்ந்து துன்பத்தையே தாங்கித் துன்பத்திலேயே கண்ணயர்ந்தவர்” என்கிறார் தமிழறிஞர் முனைவர் வ.சுப. மாணிக்கனார்.
  கல்வியாளர் முனைவர் கி. வேங்கட சுப்பிரமணியம், முனைவர் வேங்கடசாமி, இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளராகப் பணியாற்றிய இரா. நல்லகண்ணு போன்றோர் இலக்குவனாரிடம் அக்காலத்தில் தமிழ் பயின்ற மாணவர்களுள் குறிப்பிடத்தக்கவராவர். அன்றைய தமிழ் வகுப்புகளில் வருகைப் பதிவை ‘ஆசர்’ என்று மாணவர்கள் கூறிவந்த நிலையை மாற்றி ‘உள்ளேன் ஐயா’ எனக் கூறவைத்த பெருமைக்குரியவர் சி. இலக்குவனார் அவர்கள்தான். பிற்காலத்தில் தமிழமெங்கும் இம்மாற்றம் ஏற்படுவதற்கு முன்னோடி அவரே என்கிறார் இரா. நல்லகண்ணு.
  தனித்தமிழ், தமிழ் உணர்வு என்று இலக்குவனார் தீவிரமாக இருந்ததில் உடன் பணியாற்றிய பலருக்கு ஏற்பிருக்கவில்லை. சிலர் இலக்குவனாரைத் தமது எதிரியாகவும் கருதினர். ஆனால் இலக்குவனார் தம் கொள்கையில் உறுதியாக இருந்தார். தமக்குக் கிடைத்த ஓய்வு நேரத்தில் இலக்கிய ஆய்வுகளை மேற்கொண்டு. ‘தமிழ் மொழியின் தோற்றமும் வளர்ச்சியும்’ என்னும் தலைப்பில் தமது ஆய்வுநூலை ஆங்கிலத்தில் அளித்து எம்.ஓ.எல். பட்டம் பெற்றார். தொடர்ந்து 1947-இல் விருதுநகரில் தொடங்கப்பெற்ற வி.இ. செந்திற்குமார நாடார் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியில் சேர்ந்தார். அரசியல் காரணங்களால் அவர் அப்பணியிலிருந்து விலக்கப்பட்டார். தொடர்ந்து திருவெறும்பூர், புதுக்கோட்டை, ஈரோடு, நாகர்கோவில் என்று சில பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பணியாற்றினார். ஆனால் எதுவும் அவரது தீவிரத் தமிழ்ப்பற்று காரணமாக நிலையானதாக இருக்கவில்லை. மாணவரிடையே தமிழுணர்வை இவர் ஊட்டியது, அவர்களைப் புரட்சிக்குத் தூண்டுவதாகக் கல்லூரிப் பொறுப்பாளர்களைக் கருதச் செய்தது.
  பின்னர் மதுரை தியாகராசர் கல்லூரியில் முதுகலை தமிழ்த்துறைத் தலைவராகப் பொறுப்பேற்றார் இலக்குவனார். ஐந்தாவது தமிழ்ச் சங்கம் எனப் போற்றப்பட்ட அக்கல்லூரியில் அவர் பணிபுரிந்த காலம் அவரது வாழ்வின் பொற்காலம். தமிழறிஞர்கள் ஒளவை. சு. துரைசாமிப் பிள்ளை. அ.கி.பரந்தாமனார் போன்றோரின் நட்பு அவருக்கு ஊக்கத்தைத் தந்தது. மீ. இராசேந்திரன் (மீரா), முகமது மேத்தா (மு.மேத்தா), இன்குலாப் (சாகுல் அமீது), அப்துல் இரகுமான் போன்றோர் இப்பேராசியர்களின் அன்பிற்குகந்த மாணவர்களாக விளங்கினர். ‘தமிழ்க்காப்புக் கழகம்’ என்பதனை நிறுவித் தமிழ்மொழி வளர்ச்சிக்குப் பாடுபட்ட இலக்குவனார், விளம்பரப் பலகைகளில் தமிழே இடம் பெற வேண்டும் என வலியுறுத்தி வந்தார்.
  தியாகராசர் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது. தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, விரிவாக ஆய்வு நிகழ்த்தி, தமது முனைவர் பட்டத்திற்கான ஆய்வேட்டை அளித்தார். 1963-இல் முனைவர் பட்டம் பெற்றார். மேனாட்டவரும் போற்றும் விதத்தில் அவர் தொல்காப்பியத்தை மொழிபெயர்த்திருந்ததால, அறிஞர்கள் பலரிடமிருந்து பாராட்டுகள் குவிந்ததுடன். தமிழகம் முழுவதும் பல கல்லூரிகளுக்கும் அழைக்கப் பெற்றுப் பாராட்டப் பெற்றார்.
 “இலக்குவனார் தமிழார்வம் மிக்கவர்; தாய்மொழியாகிய தமிழின் வாயிலாகவே பல்கலைக்கழகக் கல்வி அமைதல் வேண்டும் என்பதில் தணியாத வேட்கை கொண்டவர்” என்கிறார் பேராசிரியர் முனைவர் மு.வ.. அதற்கேற்றவாறு, கல்வித்துறை, நீதித்துறை, ஆட்சித்துறை போன்ற அரசின் பல துறைகளில் தமிழ் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்ற நோக்கத்தில். ‘தமிழ் உரிமைப் பெருநடைத் திட்டம்’ என்ற ஒன்றை உருவாக்கினார் இலக்குவனார். அதன் காரணமாக இந்திய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ்க் கைது செய்யப்பெற்றார். பின் பணிநீக்கமும் செய்யப் பெற்றார். சிறை சென்று மீண்டு வந்த பின்னர், ஆட்சி மாறிய பின்பு சென்னை மாநிலக் கல்லூரியில் ஓராண்டுக் காலம் முதுநிலைப் பேராசிரியாராகப் பணியாற்றினார். ஆனால் அங்கும் சிக்கல் தொடர்ந்து, கல்வியமைச்சருடன் ஏற்பட்ட பிணக்கினால் அவருக்குப் பணி நீட்டிப்பு மறுக்கப்பட்டது. பின்னர் ஐதரபாத்து உசுமானியா பல்கலைக்கழகத்தில் இரண்டு ஆண்டுகள் தமிழ்ப் பேராசிரியராகப் பணி புரிந்து. பின் மீண்டும் நாகர்கோயில் தென்திருவிதாங்கூர் இந்துக்கல்லூரியில் முதல்வராகப் பணியில் சேர்ந்தார். சிறிதுகாலம் அங்குப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
  இந்தி எதிர்ப்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டவர் இலக்குவனார். மாலை நேரத்தில் மன்றங்களின் மூலம் தொல்காப்பியம், திருக்குறள், சங்க இலக்கியம் குறித்த இலவச வகுப்புகளை நடத்தினார். தாம் சென்ற இடங்களிலெல்லாம் மன்றங்கள் நிறுவியும, தம் கைக்காசைக் கொண்டு இதழ்கள் நடத்தியும் தமிழ் உணர்வு நிலைபெற உழைத்தார்.
  மொழிப்போரில் கைது செய்யப்பெற்ற ஒரே பேராசிரியர், இலக்குவனார்தான். ‘தன்மானத் தமிழ் மறவர்’ என்று இலக்குவனார் போற்றப்பட்டார். எப்பொழுதும் தமிழ் உயர்வைப் பற்றியே சிந்தித்து வாழ்ந்தார். ‘சங்க இலக்கியம்’, ‘இலக்கியம்’, ‘திராவிடக் கூட்டரசு’, ‘குறள்நெறி’ போன்ற இதழ்களின் ஆசிரியராக இருந்தார். அதே சமயம் தமிழின் தொன்மையைப், பண்பாட்டுச் சிறப்பை, அகப்பொருள் ஒழுக்கங்களை உலகுக்குப் பறைசாற்றும் முகமாக ஆங்கில இதழ்கள் இரண்டையும் வெளியிட்டார். அக்காலத்திலேயே தமிழில் ஆறு இதழ்களையும். ஆங்கிலத்தில் எட்டு இதழ்களையும் இவர் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
  திருக்குறளுக்கு எளிய பொழிப்புரை எழுதிய இலக்குவனார், தொல்காப்பிய விளக்கம், வள்ளுவர் வகுத்த அரசியல், வள்ளுவர் கண்ட இல்லறம், இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல், கருமவீரர் காமராசர், எழிலரசி, மாணவர் ஆற்றுப்படை, துரத்தப்பட்டேன், பழந்தமிழ், தமிழன்னைக் காவியம், தமிழ் இலக்கிய வரலாறு, தமிழ் கற்பிக்கும் முறை, தமிழிசைப்பாடல்கள், என் வாழ்க்கைப் போர் போன்ற பல கவிதை, கட்டுரை, ஆராய்ச்சி நூல்களைப் படைத்துள்ளார். போராட்ட வாழ்வு, ஓய்வின்மை, பணி நிமித்தமாக அடிக்கடி குடும்பத்தைப் பிரிந்து வாழ்ந்தது போன்ற காரணங்களால் அடிக்கடி இலக்குவனாருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது; நீரிழிவு நோயும் ஏற்பட்டது. மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தும் குணமாகாமல் 1973 செப்டம்பர் 3 ஆம் நாள் இலக்குவனார் காலமானார். தமிழும் தமிழரும் உயர உழைத்த முன்னோடி சி. இலக்குவனார் எனில் மிகையல்ல.
-பா.சு. இரமணன்
தென்றல் – இணைய இதழ்-தொகுதி : 10 – இதழ் 5-ஏப்ரல் 2010


செந்தமிழ் வளர்த்த செம்மல் சி. இலக்குவனார் -புலவர் செ. இராமலிங்கம். புதுவை

54Ilakkuvanar+11

செந்தமிழ் வளர்த்த செம்மல் சி. இலக்குவனார்

  இலக்குவனாரைப்போல் தமிழ்ப் பேராசிரியர் பணியை ஒழுக்கமுடனும். தமிழ் உணர்வுடனும் பயிற்றுவித்தவரும் மாணவர்களைப் பண்படுத்தியவரும் வேறு யாருமிலர் என்பதற்குக் கல்விச் சாலைகளின் பட்டியலே சான்றாகும்.
  சென்னை, மதுரை, அண்ணாமலை, ஐதராபாத்து உசுமானியப் பல்கலைக் கழகங்களில், பாடத்திட்டக்குழு உறுப்பினர், பேரவை உறுப்பினர், ஆட்சிக்குழு உறுப்பினர், போன்ற பொறுப்புகள் ஏற்றுத் திறமையுடன் புதுமையான பல திட்டங்கள் வகுத்தளித்துச் சிறப்புக்குரியவராய் விளங்கினார் இலக்குவனார்.
  அரசியல் காழ்ப்பு, தமிழ் உணர்வின்மை, ஆங்கில மேலாண்மை, சாதியுணர்வு இவற்றுக்கிடையே இலக்குவனாரின் தமிழ்ப் பற்றும். தன்மானக் கொள்கைப் பற்றும் கல்விப் பணியாற்றிய பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் தொடர்ந்து பணியாற்றுவதற்கு இயலாத சூழல்களை உருவாக்கின. ஆயினும் உறுதியான உள்ளத்துடன் வாழ்வில் யார்க்கும் அஞ்சாத தமிழ்மறவராய் வாழ்ந்து காட்டியவர் இலக்குவனார் ஆவார்.
  1971இல் மதுரைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பொறுப்பிற்கு இலக்குவனார் பெயர் முதலிரண்டு பரிந்துரைப் பட்டியலில் இடம் பெற்றிருந்தது. துணைவேந்தராகப் பேராசிரியர் சி.இலக்குவனார் அமர்த்தப்பட்டதாகச் செய்தி அறிந்து பலரும் வாழ்த்தினர். ஆனால், செல்வம மிக்கப் படத்துறையைச் சேர்ந்த ஒருவரால் பேராசிரியருக்கு இவ்வாய்ப்பு பறிக்கப்பட்டு வேறொருவர் பெயர் அறிவிக்கப்பட்டது. இதனை மறைப்பதற்காக வழக்கத்திற்கு மாறாக மூன்றாம் பட்டியலில் அவர் பெயர் இடம் பெறாததால் நியமிக்க வில்லை என மழுப்பப்பட்டது.
சலுகை போனால் போகட்டும் – என்
அலுவல் போனால் போகட்டும்.
தலைமுறை ஒரு கோடி கண்ட – என்
தமிழ் விடுதலை ஆகட்டும்!
என்னும் பாவேந்தரின் கொள்கை வரிகளை மனத்தில் நிறுத்தித் தமிழ் வளர்ச்சிப் பணியில் முனைப்புடன் ஈடுபடும் இலக்குவனார் இது குறித்துக் கவலைப்படவில்லை. ஆனால், உலகெங்கும் உள்ள தமிழன்பர்கள் துயரத்தில் ஆழ்ந்தனர். காலமெல்லாம் தமிழுக்கு உழைத்தவரால் ஆட்சிப் பீடம் ஏறி, அவரைப் புறக்கணிப்பது அடாத செயல் என்றனர். அவர் துணைவேந்தரானால் அவரது தமிழ்க்கனவுகள் நிறைவேறித் தமிழ் அடைந்திருக்க வேண்டிய வளர்ச்சிப் போக்கிற்குப் பின்னடைவு ஏற்பட்டது என்று தமிழன்பர்கள் வருந்தினர். பேராசிரியர் பெருந்தன்மையுடன் புதிய துணை வேந்தரை வாழ்த்தினார். வாழ்நாள் இறுதி வரை தம் தமிழ்ப்பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டுத் தமிழன்னைக்குப் பெருமை சேர்த்தார்.
  இன்றுள்ள தமிழ்ப் பேராசிரியர் பெருமக்கள் இலக்குவனாரின் வாழ்வியல் நிகழ்வுகளை அறிந்துணர்ந்து தமிழ்வளர்ச்சிப் பணிகளைத் தளராது ஆற்றினால் நம் வாழ்வும் வளமும். செம்மைத் தமிழ்போல் சிறப்புறுமன்றோ!
-புலவர் செ. இராமலிங்கம். புதுவை
‘செந்தமிழ்ச் செம்மல் பேராசிரியர் சி. இலக்குவனார்’  நூல்