Showing posts with label akaramuthala. Show all posts
Showing posts with label akaramuthala. Show all posts

Tuesday, April 27, 2021

மருதநாயகம் பார்வையில் திறனாய்வாளர்களாக உரையாசிரியர்கள்

 அகரமுதல


(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 28/ 69  இன் தொடர்ச்சி)



தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

29/ 69

 ‘திறனாய்வாளராக உரையாசிரியர்கள்’(2020):

இலக்கிய இலக்கணப் புலவர்கள் மட்டுமல்லர். இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர், சேனாவரையர் முதலானவர்களும் தமிழ்மொழி, இலக்கண, இலக்கிய, பண்பாட்டு வரலாற்றில் சிறப்பிடம் பெறத்தக்கவர்கள் என்பதை இந்நூலில் விளக்கியுள்ளார்.

            “அன்னார் இலக்கியக் கல்வி மட்டுமின்றிப் பிற பலதுறையறிவும் பெற்று, உலகச்செவ்விலக்கிய அரங்கில் இடம்பெறும் தகுதி உடைய பழந்தமிழ் நூல்களையெல்லாம் ஆழ்ந்து பயின்று, அவற்றை அகவயமுறையில் (intrinsic approach) அணுகி, மாணாக்கர்க்கும் ஆய்வறிஞர்களுக்கும் பயன்படும் முறையில் நுட்பமும் செறிவும் கொண்ட விளக்கம் அளித்த அரிய திறனாய்வாளர் ஆவார். … … … மேலைத்திறனாய்வுத் துறையில் நிகழ்ந்து வரும் மாற்றங்களைக் கணக்கிலெடுத்துக் கொண்டு பார்ப்போமானால், நம்முடைய உரையாசிரியர்கள் செய்துள்ள திறனாய்வுப் பங்களிப்பின் உயர்வை உணரமுடியும். இதனையே இந்நூல் செய்ய முயல்கிறது.”  என பேரா.மருதநாயகமே குறிப்பிடுகிறார்.

இந்நூலில் பின் வரும் தலைப்புகளில் ஆய்வுரைகள் அளித்துள்ளார்.

  1. இடைக்கால உரையாசிரியர்கள், 2.) உரையியல் : மேலைமரபு(Hermeneutics), 3.) திறனாய்வின் வளர்புள்ளிகள், 4.) உரையியல் : தமிழ் மரபு, 5.) அகவய அணுகுமுறை, 6.) இளம்பூரணர் : தொல்காப்பியம், 7.) பெருந்தேவனார் : வீர சோழியம்,8.) அடியார்க்கு நல்லார் : சிலப்பதிகாரம், 9.) பரிமேலழகர் : வள்ளுவர் நெறி, 10.) பரிமேலழகர் : திருக்குறள், 11.) பேராசிரியர் : பொருளதிகாரம், 12.) பேராசிரியர் : சங்கப்பாடல்கள், 13.) நச்சினார்க்கினியர்: தொல்காப்பியம், 14.) நச்சினார்க்கினியர் : குறிஞ்சிப்பாட்டு, 15.) நச்சினார்க்கினியர் : முல்லைப்பாட்டு, 16.) நச்சினார்க்கினியர் :சீவகசிந்தாமணி, 17.) சேனாவரையர் : சொல்லதிகாரம்.

முதல் ஆய்வுரையில் தமிழிலுள்ள உரைகளை ஒரு தனி இலக்கிய வகையாகவே கருதலாம் எனப்பிரான்சுவா குரோ கூறியுள்ளதைத் தெரிவிக்கிறார். தமிழில் இலக்கிய இலக்கண நூல்களுக்குஉரையெழுதும் மரபு தொன்மையானது:  கி.பி.எட்டாம் நூற்றாண்டிலிருந்து கி.பி.பதினைந்தாம் நூற்றாண்டு வரையிலும் நீடித்த வரலாற்றுச் சிறப்புடையது எனக்கூறும் பேரா.ப.ம.நா., இக்காலத்தில் எழுந்த உரைநூல்கள், உரையாசிரியர்கள் பட்டியலை அறிஞர் மு.அருணாசலம் தமிழ் இலக்கிய வரலாற்று நூலில் தந்துள்ளவாறு அளிக்கிறார்.

வில் எலம் தில்தி(Wilhelm Dilthey), ஐடெக்கர்(Heidegger), காடமர்(Gadamer). எமிலியோ பெட்டி (Emilio Betti), செனோபென்(Xenophane), ஃபிரீடெரிக்கு (Friedrich) முதலிய மேலை அறிஞர்களின் உரையியல் குறித்த கருத்துகைள இரண்டாம் ஆய்வுரையில் தெரிவிக்கிறார். இவற்றுள் குறிப்பிடத்தக்கது பகுத்தறிவு ஏற்காத தொன்மக் கதைப் பாத்திரங்களுக்குக் குறியீட்டுப் பொருள் தருவதாகும்.

திறனாய்வின் வளர்புள்ளிகள் என்னும் மூன்றாவது ஆய்வுரையில் காலந்தோறும் திறனாய்வு முறைகள் மாறியும் வளர்ந்தும் வந்துள்ளதைக் குறிப்பிடுகிறார். திறனாய்வாளன் மிகுந்த உழைப்பை மேற்கொள்ளக் கூடியவனாகவும் உண்மையைக் கடைப் பிடிப்பவனாகவும் காய்தல் உவத்தல் அகற்றி நீதி வழிப்படும் செந்நெறியாளனாகவும் அறிவு மேம்பட்டவனாகவும் விளக்கம் கூறல், மதிப்பிடல் ஆகிய இரண்டு பணிகைளச் செய்பவனாகவும் இருக்க வேண்டும் என்னும் அறிஞர் இயான்சன்(Johnson)  கருத்தையும் பிற அறிஞர் கருத்துகளையும் அளிக்கிறார். இதுபோல் அறிஞர்கள் தரும் உரையாசிரியர்களுக்கான இலக்கணங்களுக்குத் தமிழ் உரையாசிரியர்கள் முற்றிலும் பொருந்தி வருவது கண்கூடு. சூசன் சோண்தாகு(Susan Sontag) முதலான அறிஞர்கள் சிலர், திறனாய்வு தேவையில்லை எனக் குரல் எழுப்பியுள்ளனர். இவற்றைக் குறிப்பிடும் பேரா.ப.ம.நா., இத்தகைய வாதங்கள் தேவையற்றன என விளக்கியுள்ளார்.

உரையியல் குறித்த தமிழ் மரபை நான்காம் ஆய்வுரை சிறப்பாக விளக்குகிறது. பழந்தமிழ் நூல்களுக்கு உரைவரையும் மரபு தமிழகத்தில் மிகத் தொன்மையானதாகும். உரைக்கும் பழந்தமிழ் இலக்கியங்களுக்குத் தரும் மதிப்பை அளித்து அஃது எவ்வாறெல்லாம் அமையவேண்டும் என்பதைத் தொல்காப்பியர் காலத்திற்கு முன்பிருந்தே சிந்தித்துள்ளனர் என்பது வியப்புக்குரியதாகும் எனத் தொடக்கத்திலேயே பேரா.ப.ம.நா. குறித்துவிடுகிறார். தொல்காப்பிய மரபியலில் உரை பற்றிய நூற்பாக்களை அவற்றின் பொருள்விளக்கத்துடன் இவ்வாய்வுரை விளக்குகிறது. தொல்காப்பியர், பாடலனார்,நன்னூலார் குறிப்பிடும் உத்திகளையும் வேறுசில உத்திகளையும் தமிழ்உரைகளில் காண்பதையும் எடுத்துரைக்கிறார்.

மேலைத்திறனாய்வுமுறையைப் பின்பற்றித் தமிழ் இலக்கியம் குறித்து மதிப்பிட்டவர்கள்,பழந்தமிழ் இலக்கியங்களிலும் உரைகளிலும் ஆழ்ந்த பயிற்சி பெறாதவர்கள். எனவே, மேலைத் திறனாய்வைப்போன்ற முயற்சி தமிழில் இல்லை என்ற தவறான கருத்திற்கு வந்து அதனையே பரப்பியும் விட்டனர். இதைத் தமிழறிஞர்களும் உண்மையாக இருக்கும் என நம்பி விட்டனர். இதற்கு அடுத்த நிலையில் கைலாசபதி, சிவத்தம்பி, தொ.மு.சி.இரகுநாதன் போன்றவர்களின் தாக்கத்தால் மன்பதை அணுகுமுறை அல்லது மார்க்குசிய அணுகுமுறை மட்டுமே திறனாய்வு என்ற தவறான வாதமும் இடம் பெற்றுவிட்டது என்கிறார்.

தொல்காப்பிய சங்க இலக்கியக் கோட்பாடுகளை உள்வாங்கிக் கொண்டு, சான்றோர் செய்த செய்யுட்களுக்கும் திருக்குறள், சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி போன்ற அறநூலகளுக்கும் காப்பியங்களுக்கும் உரை எழுதிய நம் உரையாசிரியர்கள் இன்றைய மேலை அணுகுமுறைகள் குறிப்பிடும் உத்திகள் சிலவற்றை அன்றே பயன்படுத்தி யுள்ளனர் என்னும் விந்தைச் செய்தியை நமக்கு எடுத்துரைக்கிறார்.

சுவெலபில், சுல்மன், துபையான்சுகி போன்ற மேலைத் திறனாய்வாளர்கள், தமிழ்ச்சான்றோர் படைப்புகளை முருகியல் அணுகுமுறையில் பார்க்காமல் புறவய அணுகுமுறையில் பார்ப்பதாகப் பேரா.ப.ம.நா. கூறுகிறார். அவர்கள், சங்க இலக்கியங்களைப் பழம் உரைகள்வழியே அகவய அணுகுமுறையில் நோக்கினால் சங்க இலக்கியங்களின் புதிய படிநிலைகளை அடையாளம் காண்பதோடு உரையாசிரியர்களின் திறனாய்வுத் திறன்களையும் அறிந்து கொள்ள இயலும் என்கிறார்.

   ஆறாவதாக, இளம்பூரணரின் தொல்காப்பிய உரை குறித்து ஆய்வுரை வழங்கியுள்ளார். தொல்காப்பியத்திற்கு முழுமையான முதல் உரை வழங்கியவர் என்ற வகையில் இளம்பூரணரைப் பெரிதும் போற்றுகிறார். சிவஞான முனிவர். இளம்பூரணர் வடநூற் பயிற்சியற்றவர் என்னும் தவறான எண்ணத்தை விதைக்கிறார் என்கிறார். இளம்பூரணர் கையாளும் மேற்கோள்கள் அடிப்படையில் அவர் வடநூற்பயிற்சி மிக்கவர் என்றும் தமது வடநூல் அறிவைத் தேவையின்றிக் காட்டிக் கொள்ளவில்லை என்றும் தமிழ் மரபையே பெரிதும் போற்றினார் என்றும் பேரா.ப.ம.நா. விளக்கியுள்ளார்.

பிற உரையாசிரியர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் நடை எளியது, இனியது, சுருங்கச்சொல்லி விளங்க வைப்பது, பிறர் உரைகளையும் ஏற்கத்தக்கதாகக் கூறுதல், முன்னையோர் உரைகளை வன்மையாகக் கண்டிக்காமை முதலியவற்றை இளம்பூரணரின் அரும்பண்புகளாகக் குறிப்பிட்டுள்ளார்.

“நும் நாடு எது என்றால் தமிழ்நாடு என்றல்” என்பதுபோன்ற எடுத்துக்காட்டுகளாலும், தமிழ் மரபிற்கேற்பவே உரை எழுதியமையாலும் இளம்பூரண அடிகளார் தமிழ் மொழி, இனம், இலக்கியம், பண்பாடு ஆகியவற்றில் தனிப்பற்றுடையவர்; பண்டைய இலக்கியங்களிலிருந்து தம் கால இலக்கியங்கள் வரை நன்கு ஆழ்ந்து கற்றவர் என நாம் அவர் உரை மூலம் உணரலாம்; இளம்பூரணர் உரையானது பின்வந்த உரையாசிரியர்களுக் கெல்லாம் முன்மாதிரியாக அமையும் வரலாற்றுச் சிறப்பு மிக்கது; மூலநூலை ஐயந்திரிபற விளக்கம் செய்தலே திறனாய்வாளனின் தலையாய கடமை என்ற எலியட்டின்(T.S.Eliot) கூற்றினை நிறைவு செய்வதன் மூலம் தொல்காப்பியத்தின் முதல் திறனாய்வு நூலாகவும் போற்றற்குரியது.

ஏழாவதாக, வீரசோழியம், அதற்கான பெருந்தேவனார் உரைபற்றியது. வீரசோழியப் பாயிரத்தின் மூன்றாவது பாடல் நூல் நோக்கத்தைக் கூறுகிறது. அதில் பின்பற்றப்போவதாகக் கூறுவது தொல்காப்பிய மரபேயன்றி வடமொழிப் பாணினீய மரபன்று; ‘வடநூல் மரபும் புகன்று கொண்டே’ என்று சொல்லும்போது, தமிழிலக்கணத்தை விளக்கும்போது ஆங்காங்கே வடமொழி இலக்கண மரபையும் சுட்டிக்காட்டுவதாகக்குறிப்பிடுகிறாரே தவிர, தமிழ் இலக்கணம் வடமொழி இலக்கணத்தைத் தழுவியது என்றோ தமிழ் இலக்கணக் கலைச்சொற்களைவிட வடமொழி இலக்கணக் கலைச்சொற்கள் சிறந்தன வென்றோ சொல்லவில்லை. நூலெங்கிலும் அத்தகைய முயற்சிகளை மேற்கொள்ளவில்லை; என வீரசோழியத்தின் அடிப்படைநோக்கம்தொல்காப்பிய மரபுதான் என்பதைப் பேரா.ப.ம.நா. விளக்குகிறார்.

உரையாசிரியரும் நூற்பாக்கள் கூறும் இலக்கணதிற்குச் சான்றாகப் பழந்தமிழ்ப்பாடல்களைத்தான் தருகிறார். அவற்றையும் உதாரணக் கவிதைகள் என்றோ உதாரணம் என்றோ சொல்லாது வரலாறு என்றே சொல்கிறார்.எனினும் உரையாசிரியர் தமிழ்மொழியில் எவ்வாறு தாதுவைப்படைத்துக்கொள்வது என விளக்கும்’மன்னிய சீர் வடநூலின்’ எனத் தொடங்கும் நூற்பா விளக்கத்தில், ‘தமிழ்ச்சொல்லிற்கெல்லாம் வடநூலே தாயாகி நிகழ்கின்றமையின்’ அங்குள்ள வழக்கெல்லாம் தமிழுக்கும் பெறும் என்று குறிப்பிடுகிறார். ஆனால் அவ்வாறு மூலநூலில் இல்லை என்பதைப் பேரா.ப.ம.நா. குறிப்பிடுகிறார்.மேலும் சொல் என்பது சொல்லிலக்கணத்தைக் குறிப்பதாக அறிஞர் சி.வை.தாமோதரம்(பிள்ளை) கூறுவதையும் தெரிவிக்கிறார்.

உரையாசிரியர் தாதுப்படலத்தை மட்டும் கருத்தில் கொண்டு இவ்வாறு எழுதியிருக்கலாம் ஆனால், இதைத் தவறாகப் புரிந்து கொண்ட மேலைக்கல்வியாளரான ஆன் மோனியசு(Anne E. Monius), எல்லாத் தமிழ்ச்சொற்களுக்கும் தாய் சமற்கிருதம் (Sanskrit is the mother of all Tamil words) என்னும் தலைப்பிலேயே கட்டுரை அளித்துள்ளார். பாணினீயம் தவறாகப் பெரிதும் கொண்டாடப்பட்ட காலத்தில் இவ்வெண்ணம் எழுந்திருக்கலாம். ஆனால், பேச்சுவழக்கொழிந்த வடமொழிக்கு இலக்கணம் செய்த பாணினி  வேர்ச்சொல்லாய்வு என்ற பெயரில் அறுபது விழுக்காட்டிற்கு மேலான சொற்களுக்கு முற்றும் கற்பனையான, முற்றிலும் முழுப்பொய்யான வேர்களைக் கூறியுள்ளார் என்றும் அவ்வாறான சொற்கள் வடமொழி இலக்கியங்களில் எங்கும் காணப்படவில்லை யென்றும் வடமொழி விற்பன்னர்களே கூறியுள்ளதையும் எடுத்துரைக்கிறார். ஆதலின் உரையாசிரியர் தவறான கருத்தையே சொல்லியுள்ளார் எனலாம்.

இருப்பினும் ஆன்மோனியசு ‘வீர சோழியம்’ என்னும் மற்றொரு கட்டுரையில் வீரசோழியம் தொல்காப்பியம் காட்டும் இலக்கிய மரபிற்குக் கடன்பட்டது என்பதைத் தெளிவுபட விளக்குகிறார்.”எல்லா உலகும் மேவிய வெண்குடைச் செம்பியன் வீரராசேந்திரன் தன் நாவுஇயல் செந்தமிழ்” என்பதன் மூலம் இலக்கணத்திலும் கவிதையியலிலும் வடநூல்மரபைத் தழுவியிருப்பினும் வீரசோழியம் தமிழையே தலைசிறந்த மொழியாகக் கருதுகிறது என அம்மேலை அறிஞர் குறிப்பிடுகிறார்.

வீரசோழியம் வடமொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்குத் தமிழ்மொழி இலக்கணம் கற்பிப்பதற்காக எழுதப்பெற்ற நூல் என்று சிலரால் சொல்லப்படுகிறது. இதனைப் பேரா.ப.ம.நா.பின்வரும் வகையில் மறுக்கிறார்.வடமொழியைத் தாய்மொழியாகக் கொண்ட யாரும் எக்காலத்தும் எவ்விடத்தும் இருந்ததில்லை என்பது மேலை மொழியியல் அறிஞர்கள் எடுத்துக் காட்டியுள்ள வரலாற்று உண்மையாகும். ஓங்கு அடிகளார்(Rev. Walter J. Ong) என்பார் தமது ‘உலகின் இடைமுகங்கள்’(Interfaces of the World) என்னும் ஆய்வு நூலில் பழம் கிரேக்கம், இலத்தீன், பழம் சீனம், சமற்கிருதம் போன்ற செம்மொழிகளெல்லாம் எங்கும் என்றும் யாருக்கும் தாய்மொழிகளாக இருந்தவை அல்லவென்றும் பள்ளிகளில் ஆண்களுக்கு ஆண் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்ட மொழிகளாகவே இருந்தவை யென்றும் அவை என்றும் பேச்சுவழக்கில் இருந்தவை அல்லவென்றும் சில துறைகளில் நூல்கள் எழுதப்பயன்பட்டவை என்றும் கூறியுள்ளதை எடுத்தாள்கிறார்.

இவ்வாய்வு மூலம், பொதுவாக வீரசோழியம் குறித்துத் தமிழன்பர்களிடையே இருந்த பிம்பத்தை உடைக்கும் வகையில் இதன் அடிப்படை முகத்தை நமக்குப் பேரா.ப.ம.நா. படம் பிடித்துக் காட்டியுள்ளார்.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 30/ 69  )



Thursday, May 07, 2020

திருக்குறள் தொண்டர் பூவை.பி. தயாபரனார் 1/3 – முனைவர் கி.சிவா


திருக்குறள் தொண்டர்

பூவை.பிதயாபரனாரின் வாழ்வும் அறப்பணிகளும்

1/3

தமிழால் தமிழுக்காகவும் திருக்குறளால் திருக்குறளுக்காகவும் வாழ்ந்து அறப்பணிகள் ஆற்றிவரும் பெருமகனார்தான், திருச்சி மாவட்டம், திருத்தவத்துறை என்னும் இலால்குடியை அடுத்த பூவாளூர் என்னும் ஊரில் பிறந்து தற்போது புள்ளம்பாடியில் வாழ்ந்து வருகின்ற தயாபரனார் அவர்கள்.
ஆளாளுக்கு ஓர் ஆசை உண்டு. இவருக்கும் இவர்தம் குடும்பத்தார்க்கும் திருக்குறளைப் பரப்புவதில் மிகுந்த ஆசை. அத்தோடு அறப்பணிகள் செய்வதில் இவருக்கு மிகுந்த ஆசை.
இளமையிலேயே உள்ளத்தில் ஊறிய தமிழ்   
இவருடைய இளமைக் காலத்தில் பூவாளூரில் இவர் தந்தை முதலானவர்களால் முன்னெடுக்கப்பட்ட சைவ சித்தாந்த சங்கத்திற்கு வருகை தந்த ஏராளமான தமிழ்ச் சான்றோர்களுக்குத் தொண்டாற்றியுள்ளார்.
வீரபாண்டிய கட்டபொம்மன் பரம்பரையைச் சேர்ந்த பெரும்புலவர் செகவீர பாண்டியனார், பெரும்புலவர் வச்சிரவேலு (முதலியார்), “சைவசித்தாந்த சரபம்” அருணை வடிவேல் (முதலியார்), பெரும்புலவர் நடேச (முதலியார்), தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலையடிகளின் மகன் மறை.திருநாவுக்கரசு, தொல்காப்பியச் செம்மல் பேரா.கு.சுந்தரமூர்த்தி, தமிழ்ப் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை. ப.சுந்தரேசனார் முதலான பற்பலருக்கு ஊழியம் செய்துள்ளார். அவர்களின் வாய்ச்சொற்களைச் செவிமடுத்துள்ளார். பெரியவர்களின் அணுக்கம், தமிழார்வத்தை இளமையிலேயே இவர் நெஞ்சில் ஊறச் செய்துள்ளது.
இந்தத் தமிழார்வம், தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதையரின் ஆசிரியர் தியாகராச செட்டியாரின் பெயரில் தமிழ்ப்பேரவை ஒன்றை நிறுவ இவருக்கு உதவியது. பூவாளூரில் உள்ள இளைஞர்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட இந்த அமைப்பின்வழி 13 ஆண்டுகள் அறிஞர்களை அழைத்துவந்து சங்க இலக்கியங்கள் குறித்துச் சொற்பொழிவாற்றச் செய்துள்ளார். குமரிமுதல் புதுதில்லிவரை பூவாளூரின் பெயரைக் கொண்டுசேர்த்த பெருமை இவரைச் சாரும்.
இலவசமாய்த் தமிழ் வகுப்புகள்
பூவாளூரில் தமது 20ஆம் அகவையில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தமிழ் இலக்கண வகுப்புகளை இலவசமாய் நடத்தத் தொடங்கினார். பின்னர் திருக்குறளையும் ஏழிளந்தமிழ் எனப்படும் ஆத்திசூடி முதலான நீதி நூல்களையும் 48 ஆண்டுகளாகத் தொடர்ந்து கற்பித்து வருகிறார். இதற்காக ஏறக்குறைய 9500 மணி நேரத்தைச் செலவிட்டுள்ளார். கூடுதலாக 20 மணித்துளிகள் ஓகமும்(யோகாவும்) கற்றுத் தருகிறார்.
பெற்ற பிள்ளைகளைப் போல் மற்ற பிள்ளைகளும்
இவருடைய மகன் திருமூலநாதன் நான்கு அகவையிலேயே திருக்குறள் முழுமையும் கற்று உலகச்சாதனை படைத்தார்மேலும் 22 தமிழ் இலக்கிய நூல்களிலிருந்து ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடினார். இந்தியாவிலும் கடல்கடந்து சென்றும் ஏராளமான மேடைகளில் பாடியும் பேசியும் கவனகங்களைச் செய்தும் பல பதக்கங்களையும் எண்ணற்ற பரிசுகளையும் பெற்றுள்ளார். இவருக்கு நான்கு அகவையிலேயே மதிப்புறு முனைவர் பட்டத்தைக் கலிபோர்னியாவிலுள்ள World Academy of Arts and Culture என்ற அமைப்பு வழங்கியுள்ளது.
இவருடைய மகள் காந்திமதி ஏழு அகவையில் திருக்குறள் முதலாகப் பல இலக்கியங்களிலிருந்து பல நூறு பாடல்களைத் தம்பியுடன் சேர்ந்து கூறும் ஆற்றல் பெற்றிருந்தார்.
தன்னுடைய பிள்ளைகளைப் போல அறிவார்ந்த பிற பிள்ளைகளும் இருக்கக்கூடுமே என்று நினைத்த இவர், தென்காசியை அடுத்த ஆய்குடியில், தன் மகன் பெயரில் ‘திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளை’ என்ற ஓர் அறக்கட்டளையை 1997இல் தொடங்கி, 1330 குறள்களையும் கூறும் சிறுவர்களுக்கு உரூபா.1330-உம் திருக்குறள் செல்வன் / செல்வி விருதும் வழங்க ஏற்பாடு செய்தார். கடந்த 22 ஆண்டுகளில் தமிழகம், புதுவை ஆகிய மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் பணமுடிப்பும் விருதும் பெற்றுள்ளனர்
கடந்த சில ஆண்டுகளாகப் பரிசுத்தொகை 2000 உரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு ஆகும் செலவுகளுக்காக இதுவரை யாரிடமும் எந்த நன்கொடையும் இவர் பெற்றதில்லை.
கலைவல்ல துணைவியார்
இவருடைய துணைவியார் திருமதி  நாகவல்லி அம்மையார் பன்மொழி அறிவுடையவர்1330 அருங்குறளும் மனப்பாடம் செய்தவர். இந்தியிலும் சமற்கிருதத்திலும் பட்டங்கள் பெற்றவர். முதல் 15 ஆண்டுகள் திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளையின் தலைவராக இருந்தார். இவரிடம் 13ஆண்டுகள் இந்தி படித்த மாணவர்கள் அனைவரும் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளனர். பல சிறுகதைகளை இந்தியிலிருந்து தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.   
(தொடரும்)

-முனைவர் கி.சிவா,

உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை,
காந்திகிராம ஊரக நிகர்நிலைப் பல்கலைக்கழகம், திண்டுக்கல் – 624 302, பேசி: 97517 79791

Monday, March 23, 2020

நானிலம் புகழும் நாவரசர் ஒளவை நடராசன் – இலக்குவனார் திருவள்ளுவன்

நானிலம் புகழும்

நாவரசர் ஒளவை நடராசன்

தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் பேச்சாற்றலும் எழுத்தாற்றலும் மிக்க சிலருள் ஒருவர் அறிஞர் முதுமுனைவர் ஒளவை து.நடராசன்; எந்தத் தலைப்பாக இருந்தாலும் கையில் எந்தக் குறிப்புமின்றிச் சிறப்பாகப் பேசும் சீரிய சிந்தனையாளர்; பட்டிமன்றங்கள், பொது நிகழ்ச்சிகள் வாயிலாக நாடறிந்த நல்லறிஞராகத் திகழ்பவர். நகைச்சுவையாகப் பேசும் பலரும் அந்தந்த நேரத்திற்கான ஆரவாரத் துணுக்குகளை உதிர்ப்பவர்களாக உள்ளனர். அவ்வாறில்லாமல், நகைச்சுவையாக, அதே நேரம் அறிவார்ந்த கருத்துகளைப் பேசும் நாவரசர்.  இவரது உரை வளமும் குரல் வளமும் கேட்டவர்களை இவர் பக்கம் பிணைத்துப் புகழ் ஏணியில் இவரை ஏற்றுகின்றன. உரைவேந்தர் ஒளவை சு.துரைசாமி அவர்களின் உரை வளம் இவரின் சொல்வளமாக மாறித் தமிழ் உலகை மகிழ்விக்கிறது.
குடும்பம்:   
 தமிழறிஞர் உரைவேந்தர் ஒளவை துரைசாமி – உலோகாம்பாள் இணையரின் திருமகனாக சித்திரை 32. 1967 / 24.04.1936 இல் இன்றைய  திருவண்ணாமலை (அன்றைய வடஆர்க்காடு) மாவட்டத்திலுள்ள செய்யாறு என்னும் ஊரில் பிறந்தார். தமக்கை, மூன்று தங்கையர், நான்கு தம்பியர் உடையவர். மனைவி குழந்தை நல மருத்துவர் தாரா நடராசன் அரசின் மருத்துவக் கல்லூரித் தலைமையாளராக( Dean)ப் பணி நிறைவு பெற்றவர். மரு. கண்ணன் நடராசன், முனைவர் அருள் நடராசன், மருத்துவர் பரதன் நடராசன்  என்னும் நன்மக்கள் மூவர் இவ்விணையருக்கு உள்ளனர்.
கல்வி
தமிழில் முதுகலைப் பட்டம்(மதுரை தியாகராசர் கல்லூரி), இளமுனைவர் பட்டம்(சென்னை பச்சையப்பன் கல்லூரி)முனைவர் பட்டம் பெற்றவர். இவர் அளித்துள்ள ‘சங்க இலக்கியத்தில் பெயரிடு மரபு’ என்னும் தலைப்பில் இள முனைவர் பட்டத்திற்கான ஆய்வேடும்(1958) ‘சங்க காலப் புலமைச் செவ்வியர்’ என்னும் தலைப்பில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வேடும் இவரின் சங்க இலக்கிய ஈடுபாட்டையும் ஆய்வுப் புலமையையும் உணர்த்துவன.
நாநலம்
நாநலம் என்னும் நலனுடைமை இவருக்கு மாணவப்பருவத்திலேயே வாய்த்தது. அதனால் பேச்சுப் போட்டிகளில் பங்கேற்கும் வகையில்  பல்வேறு கல்லூரிகளுக்கும் செல்லும் வாய்ப்பைப் பெற்றார். இளைஞர் கூட்டம் இவரால் ஈர்க்கப்பட்டு இவரை மொய்த்தன. படித்தபின்பு பணியாற்றும் பொழுதும் இவரைச் சுற்றி இளைஞர் கூட்டம் இருந்தது. அல்லது இளைஞர்கள் இருந்த இடத்தில் இவர் இருந்தார். அந்தப் பேச்சுத்திறமைதான் இவரைக் கலைஞர் கருணாநிதி, புரட்சித்தலைவர் எம்ஞ்சிராமச்சந்திரன் முதலானவர்களின் அன்பிற்கு ஆட்படுத்த வைத்தது. இதுவே உரிய காலத்தில் மும்முதல்வர்களால் சிறப்பு மிக்கப் பணிப்பொறுப்பு ஏற்கும் வாய்ப்புகளை நல்கியது.
பணி
மதுரையில் உள்ள தியாகராசர் கல்லூரியில் தமிழ்ப்பயிற்றுநராக இவரது பணி வாழ்க்கை தொடங்கியது. பின் தஞ்சாவூரிலுள்ள மன்னர் சரபோசி கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றினார். ஆசிரியர்கள் வகுப்பு எடுக்கும் பொழுது மாணாக்கர்கள்பலர் வெளியே செல்வது வழக்கமாக உள்ளது. ஆனால், இவர் வகுப்பு எடுக்கும் பொழுது பிற வகுப்புகளில் பயிலும் மாணாக்கர்களும் இவர் பாட உரையைக் கேட்க வந்து நெருக்கியடித்து உட்கார்ந்து கொள்வார்களாம். அவ்வாறு பாடங்களையும் நகைச்சுவையாகவும் பிறரை ஈர்க்கும் வகையிலும் விளக்கியுள்ளார்.
அடுத்துப் புதுதில்லியில் அனைத்து இந்திய வானொலியில் செய்தி வாசிப்பாளர், அறிவிப்பாளர் எனப் பணியாற்றி வானலை வழியும் புகழ் பெற்றார். அங்கிருந்து விலகிய பின்னர், காந்தி-இராமலிங்கர் பணி மன்றச் செயலாளராகப் பணியாற்றி அருட்பணிகளையும் தமிழ்ச்சிறப்புகளையும் பரப்புவதில் ஈடுபட்டார். இப்பணி அவருக்கு எண்ணற்ற ஆன்றோர்கள் அறிஞர்களின் தொடர்பை ஏற்படுத்தித் தந்தது.
மக்களைக் கவரும் பேச்சாற்றல் மிக்க இவர் தமிழகஅரசில் பணியாற்ற வேண்டும் என விரும்பினார். அதே எண்ணங் கொண்டிருந்த அப்போதைய முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி இவரைச் செய்தி மக்கள் தொடர்புத் துறையில் துணை இயக்குநராகப் பணியமர்த்தினார். பின்னர் மொழிபெயர்ப்புத் துறை இயக்குநரானார்(1975-84). இந்திய ஆட்சிப்பணித் துறையைச் சேர்ந்தவர்கள் மட்டும் பணியாற்றும் அரசு செயலர் பணியிடத்தில் அப்போதைய முதல்வர்  புரட்சித்தலைவர் எம்ஞ்சிஇராமச்சந்திரன் இவரை அமர்த்தி,  தமிழ் வளர்ச்சி- பண்பாட்டுத்துறைச் செயலாளராகப் பணியாற்றச் செய்தார்(1984-92). இவருக்கு முன்னரும் பின்னரும் இ.ஆ.ப. அல்லாத எவரும் அரசு செயலராகப் பணியாற்றியதில்லை என்னும் சிறப்பு இவருக்குரியது. அதிகாரப் பகட்டு இல்லாமல் எளிமையாய் யாவருடனும் பழகும் நேர்த்தியும் அடுத்தவர் கருத்துகளுக்குச் செவிமடுத்து அவர்களை மதிக்கும் பண்பும் எந்நாளும் எப்பொழுதும் இவர் அறையில் பலரும் வந்து செல்லும் நிலையை ஏற்படுத்தியது.
பின்னர் அப்போதைய முதல்வர் புரட்சித்தலைவி செ.செயலலிதாவினால் தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பொறுப்பினை (1992 திசம்பர் 16ஆம் நாள் முதல் 1995 திசம்பர் 15ஆம் நாள் வரை) வகித்தார். 2014 ஆம் ஆண்டில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் துணைத்தலைவராக  இருந்தார். 2015 ஆம் ஆண்டு முதல் சென்னையிலுள்ள பாரத்து பல்கலைக்கழகத்தின் வேந்தராக இருந்து வருகிறார்.
வழிகாட்டி
பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆய்வு வழிகாட்டியாகச் செயல்பட்டிருக்கிறார். உலகின் பல்கலைக்கழகங்கள் பலவற்றில் நடைபெற்ற மாநாடுகளில் பங்கேற்றுச் சிறப்பித்திருக்கிறார். 1982-இல் சான்பிரான்சிசுகோவில் நடைபெற்ற அனைத்து நாடுகளின் கவிஞர்கள் மாநாட்டில் தமிழகச் சார்பாளராகப் பங்கேற்றுச் சிறப்பித்திருக்கிறார். மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டின் செயலாளராகச் சிறப்பாகப் பணியாற்றியுள்ளார். தென்கிழக்கு ஆசிய மாநாட்டில் மருத்துவத் தொழில்நுட்ப சொல்லாக்கக் குழுத் துணைத்தலைவராகப் பங்கேற்று சிறப்பித்திருக்கிறார். இவ்வாறு பல்வேறு பொறுப்புகள் மூலம் திறம்படப் பணியாற்றித் தமிழ்த்தொண்டாற்றி உள்ளார். இவர் பொறுப்பிலிருந்தும் வாளாவிருக்க வேண்டிய சூழல் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத்தலைவராக  இருந்த பொழுது ஏற்பட்டது. ஆனால், பிற எல்லா நிலைகளிலும் இவரது சுறுசுறுப்பும் விரிந்து பரந்த அறிவும் தமிழுலகு தழைக்கவும் தமிழன்பர்கள் உயரவும் உதவின என்பதில் ஐயமில்லை.
விருதுகள்
அரசுகளாலும் அமைப்புகளாலும் இவருக்குப் பல்வேறு விருதுகள் வழங்கப்பெற்றுள்ளன.  அவற்றுள் குறிப்பிடத்தக்கவை வருமாறு
  1. தமிழக அரசின் ‘கலைமாமணி’ விருது
  2. இந்திய ஒன்றிய அரசின் ‘தாமரைத்திரு’(பத்மசிறீ) விருது(2011)
  3. இலங்கை, கம்பர் கழகத்தின் ‘“தன்னேரில்லாத தமிழ் மகன்’ விருது
  4. தமிழக அரசின் 2009ஆம் ஆண்டிற்கான ‘அறிஞர் அண்ணா ‘விருது
  5. கொழும்புக் கம்பன் கழகத்தின் ‘கம்பன் புகழ்’ விருது (2012)
  6. தினத்தந்தி நாளிதழின் ‘சி. பா. ஆதித்தனார் மூத்த தமிழறிஞர்’ விருது. (2014)
நூல்கள்
நூற்றுக்கணக்கான மாநாடுகளிலும் கருத்தரங்கங்களிலும் இவர் ஆற்றியுள்ள தொடக்கவுரைகள், மையக் கருத்துரைகள், சிறப்புரைகள் முதலியன இலக்கியச் சிறப்பு மிக்கன. ஆங்கிலத்திலும், தமிழிலும்  ஆய்வுக் கட்டுரைகளை  எழுதியுள்ளார். ஒளவை நடராசனார்க்கு இருக்கும் அறிவு வளத்திற்கு எண்ணற்ற நூல்களை எழுதியிருக்கலாம். இருந்தாலும் இவரது  பணிச்சூழலும் இலக்கியச் சூழலும் அதற்கான வாய்ப்புகளை வழங்கவில்லை. எனினும் இவரது சொற்பொழிவுகள் சில நூல்வடிவம் பெற்றுள்ளன. அவை வருமாறு:
  1. வாழ்விக்க வந்த வள்ளலார்
  2. பேரறிஞர் அண்ணா
  3. கம்பர் காட்சி
  4. கம்பர் விருந்து
  5. திருப்பாவை விளக்கம்
  6. திருவெம்பாவை விளக்கம்
  7. சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்கள்
  8. அருளுக்கு ஔவை சொன்னது
  9. Self Confidence
  10. Saying of Stalwart
  11. Art Panaroma of Tamils
  12. Thirukkovaiyar
மொழிபெயர்ப்புத் திறன்    .
மொழிபெயர்ப்பிலும் சொல்லாக்கங்களிலும் இவரது பணி சிறப்பானதாகும். அரசின் ஆணைய அறிக்கைகள் முதலானவற்றில் மொழிபெயர்ப்பு என்ற பெயரில் நீண்ட தொடர்களைப் பயன்படுத்திப் படிப்போரை மிரளச் செய்து கொண்டிருந்தனர். அப்போக்கை முற்றிலும் மாற்றியமைத்து, எளிய சிறிய சொற்கள் மூலம் மொழிபெயர்ப்புகளை வழங்கித் தமிழின் சிறப்பைப் புரியச் செய்தார். 
பணிப்பாங்கும் பழகும் பண்பும் 
            இவரது செயல் திறனும் சொற்றிறனும்  புரட்சித்தலைவர் எம்ஞ்சிஇராமச்சந்திரன், முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி, புரட்சித் தலைவி செ.செயலலிதா ஆகிய  மூன்று முதல்வர்களின் அன்பிற்கு இவரை ஆட்படச் செய்தன.
இவர் உயர்பணிகளில் இருந்த பொழுதிலும் இவரை நாடி இருபால் இளைஞர்களும் குழுமி இவரின் வழிகாட்டுதல்களைப் பெற்றனர். அதனால் இளம் பேச்சாளர்கள் பலரை உருவாக்கினார். அத்தகையோர்தான் பிற்காலத்தில் – அஃதாவது இக்காலத்தில் – மேடைப் பேச்சாளர்களாகவும் பட்டிமன்றப் பேச்சாளர்களாகவும் விளங்குகின்றனர்.  இன்றைக்கு மேடையில் முழங்கும் பலரும் இவரது வழிகாட்டுதலால் உருவானவர்களே!
   எந்தப் பணியில் இருந்தாலும் கூட்டங்களுக்கான அழைப்பை ஏற்றுச் சொற்பொழிவாற்றச் செல்லத் தவறுவதில்லை. நகைச்சுவையுடனும் புதிய புதிய தகவல்களுடனும்  இலக்கியச் சுவையுடனும் ஆற்றும் இவரது உரைகள் சிறியோர் முதல் பெரியோர் வரை அனைத்துத் தரப்பாரையும் மகிழ்விக்கின்றன. பட்டிமன்றங்களில் இவர் பாங்குடன் ஆற்றும் உரைகள் துணுக்குத் தோரணங்களாக அமையாமல் இலக்கியத்தரம் வாய்ந்தனவாய் அமைந்தன. எனவே, பொதுமக்களிடையே இவருக்கென ஓர் அன்பர் கூட்டம் இன்றும் இருக்கிறது.
வாழ்க வாழ்கவே
தமிழுண்டு தமிழ் மக்களுண்டு — இன்பத்
தமிழுக்கு நாளும் செய்வோம் நல்ல தொண்டு
என்னும் பாவேந்தர் பாரதிதாசனின் முழக்கத்தையே வாழ்நாள் இலக்காகக் கொண்டு செயல்படும்,  
தந்தையார் உரைவேந்தர் வழியில் உரையாளராக உலகத்தமிழர்கள் போற்ற வாழும், 
நாவரசர் ஒளவை நடரசானார்  நானிறலம் சிறக்க நூறாண்டுகள் கடந்தும் நற்றமிழ்த் தொண்டாற்றி வாழ்வாராக!
இலக்குவனார் திருவள்ளுவன்

Friday, April 05, 2019

சிலம்பு ஒலிப்பு நின்றது! சிலம்பொலி செல்லப்பன் இயற்கை எய்தினார்!


மூத்த தமிழறிஞர், சிலம்பொலி செல்லப்பன், இவர் உடல்நலக் குறைவு காரணமாக வீட்டில் மருததுவம் பெற்று வந்தார். இன்று (பங்குனி 23, 2050 சனி ஏப்பிரல் 06.2019) காலை 6.30 மணிக்குச் சென்னையில் காலமானார். இவரது உடல்  பதப்படுத்தப்பட்டு நண்பகல் கொணரப்படும். நாளை காலை வரை இல்லத்தில் அஞ்சலிக்கு வைக்கப்பெறும்.நாளை மறுநாள் நாமக்கல் சிவியாம்பாளையத்தில் இறுதி நிகழ்வு நடைபெறும்.
சிலப்பதிகாரம் என்றதும் நினைவிற்கு வரும் சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானம் போன்ற மற்றோர் அறிஞர் சிலம்பொலி செல்லப்பன். 60 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிலப்பதிகாரத்தைப் பாரெங்கும் பரப்பிய இலக்கியச் சொற்பொழிவாளர். சிலம்பொலி, சிலப்பதிகாரம்- தெளிவுரை , சிலப்பதிகாரச் சிந்தனைகள் ஆகிய  நூல்கள் மூலமும் சிலப்பதிகாரத்தை மக்கள் மனங்களில் பதியவைத்துள்ளவர்.
நாமக்கல்  மாவட்டத்தில் உள்ள சிவியாம்பாளையத்தில் சுப்பராயன் – பழனியம்மாள் இணையரின் மகனாக  புரட்டாசி 09, 1959 / 24.09.1928 இல் பிறந்தார். (திசம்பர் 22 1929 இல் பிறந்ததாகச் செய்தித்தாள்களில் குறிப்பு உள்ளது.) மனைவி செல்லம்மாள். ஆண் மக்கள் தொல்காப்பியன், கொங்குவேள் பெண் மக்கள் மணிமேகலை , கெளதமி, நகைமுத்து.
கல்விப்பட்டம்:  கணக்கில் இளமறிவியல் பட்டம். தமிழ் முதுகலை, ஆசிரியப் பட்டம், முனைவர் பட்டம் பெற்றவர். திருப்பதி வேங்கடவன் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற இவரின் ஆய்வுத் தலைப்பு ‘இக்காலக் கவிதை உத்திகள்’ என்பதாகும். செம்மொழி நூல்களோடு ஒப்பிட்டு இன்றைய கவிதை உத்திகள் பற்றி வெளியிடப்பட்ட இவருடைய ஆய்வுகள் மிகச் சிறப்பாக உள்ளன.
கணக்கு ஆசிரியராகத் தன் பணி வாழ்க்கையைத் தொடங்கினார். இவரது தமிழார்வம் இவரைத் தமிழ்ப்பணியின் பக்கம் ஈர்த்து விட்டது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையில் இயக்குநர், தஞ்சைத் தமிழ்பல்கலைக் கழகத்தின் பதிப்புத் துறை இயக்குநர், பதிவாளர் , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் போன்ற பணிகளில் பணியாற்றித் தமிழ் வளர்ச்சிக்கு வெகுவாகப் பாடுபட்டவர்.
1954 ஆம் ஆண்டு சொல்லின் செல்வர் இரா.பி. சேது(ப்பிள்ளை) இவருக்கு வழங்கிய ‘சிலம்பொலி’ பட்டமே இவரின் அடையாளமாக நிலைத்து விட்டது. தமிழ்நாடு அரசு வழங்கிய கலைமாமணி விருது(1997), பாவேந்தர் விருது(1999) உட்பட 46 விருதுகள் பெற்ற விருதாளர்.
செம்மொழித் தமிழோடு தொடர்புடைய முயற்சிகளிலும் பழந்தமிழர் மரபினையும் இன்றைய வளர்ச்சிகளையும் இணைக்கும் வகையில் சிலம்பொலி செல்லப்பன் அவர்கள் பல அருவினைகள் நிகழ்த்தியுள்ளார்.
முதல் அருவினை இவர் எழுதியுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆய்வு அணிந்துரைகள். தமிழகத்தில் இவரிடம் அணிந்துரை வாங்காத நூலாசிரியர்கள் மிகவும் குறைவு. அவரை அணிந்துரை நாயகர் என்றே அழைத்துப் பெருமை செய்வதைக் காண்கிறோம். பழைய இலக்கிய மரபில் சொல்வதென்றால், தமிழில் ஆயிரம் அணிந்துரைகள் எழுதியவர் என்று இவருக்கு ஒரு பரணி பாடலாம்.
இரண்டாவது அருவினை இவருடைய தொடர் சொற்பொழிவுகள். இவருடைய தொடர் சொற்பொழிவுகள் பழந்தமிழ் மரபினையும், இன்றைய வளர்ச்சிகளையும் எடுத்துக் காட்டும். வகையில் அமைந்திருக்கும். சங்க இலக்கியங்களிலிருந்து இன்று வருகின்ற புதிய இலக்கியங்கள் வரை அனைத்தையும் நன்கு ஆய்ந்து திறம்பட எடுத்துக் கூறுவதில் பெரும் வல்லமை பெற்றவராவார்.
பொதுவாக இராமாயணம், மகாபாரதம் போன்றவையே தொடர் சொற்பொழிவுகளாகச் செய்யப்பட்டன. ஆனால் இவரோ மற்றவர்கள் பெரும்பாலும் சொல்லாத இலக்கியங்களை எடுத்துத் தொடர் சொற்பொழிவுகளாகச் செய்திருக்கிறார். மணிமேகலை, சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, இராவண காவியம் , பெருங்கதை, சிற்றிலக்கியங்கள், சங்க இலக்கியங்கள், சீறாப் புராணம், தேம்பாவணி போன்ற இவருடைய தொடர் சொற்பொழிவுகள் இலக்கிய ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.
இவர் நிகழ்த்தியுள்ள இலக்கியச் சொற்பொழிவுகளின் எண்ணிக்கை 150 ஐத் தாண்டும். இந்த அளவு பல்வேறு இலக்கியங்களை ஆண்டுக்கணக்கில் தொடர் சொற்பொழிவாகச் செய்தவர்கள் இல்லையென்றே சொல்லலாம். தன்னுடைய 22 ஆவது அகவையிலிருந்து இன்று வரை ஏறத்தாழ 62 வருடங்களாகச், சிறிதும் ஓய்வு ஒழிச்சலின்றி, தமிழே மூச்சாக, தமிழே பேச்சாக, இலக்கிய பணியாற்றிக் கொண்டிருக்கும் சிலம்பொலி செல்லப்பனார், தமிழ் கூறும் நல்லுலகில் இதுவரை யாரும் நிகழ்த்தாத அருவினையாக, மிக அதிக எண்ணிக்கையில் இலக்கியச் சொற்பொழிவாற்றியுள்ளார்.
சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை, சிற்றிலக்கியங்கள்,  சீவக சிந்தாமணி, இராவண காவியம், பாரதிதாசன் கவிதைகள், சீறாப் புராணம், இராசநாயகம், தேம்பாவணி, பேரறிஞர் அண்ணாவின் சிறப்புகள் ஆகியவை தொடர்பான தொடர் சொற்பொழிவுகள் நிகழ்த்தி இலக்கியங்களை மக்கள் மனத்தில் பதித்தவர் எனலாம்.
குறிப்பாக, மணிமேகலை(18 பொழிவுகள்), சிலப்பதிகாரம்(10 பொழிவுகள்), சங்க இலக்கியம்(18 பொழிவுகள்), சீவக சிந்தாமணி குறித்த தொடர் சொற்பொழிவு-15 பொழிவுகள், பெருங்கதை(25 பொழிவுகள்), பிரபந்த இலக்கியங்கள்(12 பொழிவுகள்), சீறாப் புராணம் (20 பொழிவுகள்), முதலாகப் பல்வேறு இலக்கியங்கள் குறித்து இவர் தொடர்சொற்பொழிவுகள் ஆற்றி மக்கள் மனத்தில் இலக்கிய ஆர்வத்தை விதைத்தார். இராவண காவியம் குறித்து மட்டும், பெரியார் நூலக வாசகர் வட்டத்தில் 22 பொழிவுகள்,  நாமக்கல்பாவேந்தர் இலக்கிய பேரவையில் 12 பொழிவுகள், சென்னை சிந்தனையாளர் மன்றத்தில் 12 பொழிவுகள் எனத் தொடர் சொற்பொழிவுகள் ஆற்றித் தமிழ் இனமான உணர்வை மக்களுக்கு ஊட்டினார்.
இவை தவிர நூற்றுக்கணக்கான மாநாடுகளிலும், கருத்தரங்குகளிலும் கலந்து கொண்டு பேருரையாற்றியுள்ளார். இவர் கலந்து கொள்ளாத தமிழ் மாநாடோ, முதன்மைக் கருத்தரங்குகளோ இல்லையென்று கூறினால் அது மிகையாகாது. இவர் கலந்து கொள்ளாத, சொற்பொழிவாற்றாத தமிழ்மேடை எதுவும் இருக்குமா என்பது ஐயமே.
செம்மொழித் தமிழோடு தொடர்புடைய பழந்தமிழரின் இன்றைய வளர்ச்சிகளையும் இணைக்கும் வகையில் இலக்கிய நூல்கள் எழுதி வெளியிட்டமை, ஆய்வு அணிந்துரைகள் வழங்கியமை, செம்மொழி நூல்கள்- காப்பியத் தலைப்புகளில் ஆயிரக்கணக்கில் சொற்பொழிவுகள்-தொடர் சொற்பொழிவுகள், திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, நாலடியார், பெருங்கதை ஆகியவற்றை ஆய்ந்து தெளிவுரை எழுதியமை, எண்ணற்ற இலக்கியக் கட்டுரைகள் , மூன்று உலகத் தமிழ் மாநாட்டு மலர்கள் ஆகியன இவர் தமிழன்னைக்குச் சூட்டிய அழகு அணிகலன்களாகும்
ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆய்வு அணிந்துரைகளை எழுதி மிகப்பெரும் அருவினை ஆற்றியவர்; சிலம்பொலியார் அணிந்துரைகள் (6 தொகுதிகள்) என்னும் நூல் தமிழக அரசின் சிறந்த அணிந்துரை இலக்கிய நூலாகத் தேர்வு செய்யப்பட்டுப் பரிசு பெற்றது. இவருடைய அணிந்துரைகள் செய்திக் கருவூலமாக, கருத்துக் களஞ்சியமாக, தமிழியல் வரலாற்று ஊற்றுக்கண்ணாக இன்றியமையாச் சிறப்பினவாக விளங்குகின்றன.
மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, மொரீசியசு, ஐக்கிய அரபு நாடுகள் , அமெரிக்கா, இங்கிலாந்து, ஆத்திரேலியா ஆகிய நாடுகளுக்கு அங்குள்ள தமிழ் அமைப்புகளின் அழைப்பையேற்றுச் சென்று, திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, பத்துப்பாட்டு, எட்டுத்தொகை போன்ற செம்மொழி நூல்கள்பற்றித் தேன்மழை பொழிந்தது போன்ற அருமையான சொற்பொழிவுகளை நிகழ்த்திச் செம்மொழி ஆர்வத்தை வளர்க்கவும், பரப்பிடவும் வழி செய்தார். கடல்மடை திறந்தது போல் தடையின்றிப் பேசும் பேச்சாலும், கேட்கக் கேட்கத் திகட்டாத தேன் சுவைக்கு ஒப்பான சொற்பொழிவுகளாலும் செம்மொழித் தமிழ் இலக்கிய ஆர்வத்தை வளர்த்தார்.
சிலப்பதிகாரத்தை உலகெல்லாம் பரப்பும் நோக்கத்துடன் சிலம்பொலி சு.செல்லப்பனார், ‘சிலப்பதிகார அறக்கட்டளை’ என்னும் அமைப்பை 2014-ஆம் ஆண்டு நிறுவினார். சிலப்பதிகாரத்தைப் பரப்புதற்கு மாநாடுகள், கருத்தரங்குகள், கூட்டங்கள் நடத்திடுதலும் சிலப்பதிகாரத்திற்குத் தொண்டாற்றியவர்களுக்கு ஆண்டு தோறும் ‘இளங்கோ விருது’வழங்குதலும் இந்த அறக்கட்டளையின் செயல்முறைகளுள் அடங்கும்.
http://silambolichellappan.com/  தளத்தில் சிலம்பொலியார் பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.
தொடர்பிற்கு திரு இராகுல் காந்தி – 8695410179

Tuesday, December 04, 2018

மன்பதை நூல் மருத்துவர் க.ப.அறவாணன் – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல

மன்பதை நூல் மருத்துவர் க.ப.அறவாணன்

தமிழர்க்கு எழுச்சி ஊட்டும் வகையில் பேசியும் எழுதியும் வந்தாலும் மன்பதை நோக்கில் தான் காணும் குறைகளையும் வெளிப்படுத்தி வருபவரே மனோமணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் அறிஞர் க.ப.அறவாணன். நூலாசிரியர், இதழாசிரியர், கதை எழுத்தாளர், பதிப்பாசிரியர் என்ற முறையில் தமிழுக்கு அணிசெய்யும் வகையில் தொண்டாற்றி வருபவர்.
திருவாரூர் (தஞ்சாவூர்) மாவட்டம் கடலங்குடியில் ஆவணி 24, 1972 / 8.9.1941 அன்று பழனியப்ப(பிள்ளை)-தங்கபாப்பு இணையரின் திருமகனாகப் பிறந்தார். இவர் மனைவி தமிழறிஞர் முனைவர் தாயம்மாள் அறவாணன் தமிழ்நூல் படைப்பாளர். மகன் அறிவாளன், மருமகள் வாணி அறிவாளன்.
கல்வி
தஞ்சாவூர் விட்டுணுபுரம் சியார்சு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி இறுதி வகுப்பை முடித்தவர்(1959), அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்று (1959-63) புலவர் பட்டம் பெற்றார். அங்கேயே கீழ்த்திசை மொழி இளங்கலை (பி.ஓ.எல்.) பட்ட வகுப்பில்(1963-65) சேர்ந்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். உடன் பேச்சு  ஆங்கிலம், மொழியியல் ஆகியவற்றில் சான்றிதழ்த் தேர்ச்சியும் பெற்றார். தமிழ் முதுகலையைத் திருனந்தபுரத்தில் உள்ள கேரளப் பல்கலைக் கழகத்தில் பெற்றார்(1967).  இதிலும் முதல் வகுப்பில் முதன்மை பெற்றார்.
 சென்னைப் பல்கலைக்கழகத்தில், மானுடஇயல்(1972), தொல்லியல்(1973) சான்றிதழ்கள், இலக்கிய இளங்கலை(பி.லிட்.)(1974), இலக்கிய முதுகலை(எம்.லிட்.)(1975) பட்டங்கள் பெற்ற பின்னர் முனைவர் பட்டம் பெற்றார்(1977). ஆய்வு அளிப்பேட்டுத் தலைப்பு: தொல்காப்பியம் – அகத்திணையியல், புறத்திணையியல் உரைவேறுபாடுகள் என்பதாகும்.
சொற்பொழிவாளர்
   சிறந்த சொற்பொழிவாளராகத் திகழும் அறவாணன் படிக்கும் பொழுதே தன் திறமையை வெளிப்படுத்தினார். மாணாக்க நிலையிலும் ஆசிரிய நிலையிலும் ஆங்கிலச்  சொற்பொழிவுப் போட்டிகள், தமிழ்ச்  சொற்பொழிவுப் போட்டிகள், பிற போட்டிகளில் பங்கேற்றுப் பரிசுகளை வாங்கிக் குவித்தார்.
அறிந்த  பிற மொழிகள்
ஆங்கிலம், ஃபிரெஞ்சு, உருசியன் முதலான பிற மொழிகளையும் அறிந்தவர். சென்னைப்பல்கலைக்கழகத்தில் உருசியன்(1971), பிரான்சில் கத்தோலிக்கக் கல்வி நிறுவனத்தில் பிரெஞ்சு மொழியில் (1978)சான்றிதழ்த் தேர்ச்சியுற்றார். தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆராய்ச்சிப் படைப்புகளை வழங்கி வருகிறார்.
பணியாற்றிய இடங்கள்
 பாளையங்கோட்டையில் உள்ள தூய சேவியர் கல்லூரியில் 1967 ஆம் ஆண்டு தமிழ் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்து தன் பணி வாழ்க்கையைத் தொடங்கினார். அடுத்த கல்வியாண்டில்(1968-69) பாபநாசம், திருவள்ளுவர் கல்லூரியில் முதல்வராகப் பணிப் பொறுப்பேற்றார். அதற்கடுத்த கல்வியாண்டில்(1969-70) முன்னர்ப் பணியாற்றிய தூய சேவியர் கல்லூரியில் மீண்டும் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார். தொடர்ந்து சென்னை பச்சையப்பன் கல்லூரியில் 1970இல் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தவர் 7 ஆண்டுகள் இங்கே பணியாற்றினார். மேற்கு ஆப்பிரிக்கா செனகாலில் தக்கார் பல்கலைக்கழகத்தில்  மானுடஇயல் ஆராய்ச்சியாளராக 1977-82 இல் பணியாற்றி அயல் மண்ணில் தமிழ்த் தொண்டாற்றினார்திராவிட-ஆப்பிரிக்கர்களின் பழக்கவழக்கப் பண்பாட்டு ஒற்றுமைகள் என்னும் தலைப்பில் ஆய்வேடு அளித்தார். இதனடிப்படையில் சில நூல்களைப் பின்னர் எழுதினார்.
  1982 இல் தாயகம் திரும்பியவர் சென்னை இலயோலா கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியில் சேர்ந்து 1987 வரை பணியாற்றினார். அதற்கடுத்த 11 ஆண்டுகள்(1987-98)  புதுவைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும் பணியாற்றினார். தொடர்ந்து வந்த 3 ஆண்டுகள் (1998-2001)மனோன்மணியம் சுந்தரனார்  பல்கலைக் கழகத்தின் (திருநெல்வேலி) துணைவேந்தராக சீர்மிகு பணிகளை யாற்றினார்.
1982இல் வேலையில் சேர்ந்த நாள் முதல் விடுப்பு எடுக்காமல் அயராது பணியாற்றியமைக்காக இலயோலா கல்லூரி  ஆட்சிக்குழு, ஆண்டுதோறும் பத்தாயிரம் உரூபாய்ப்பரிசு அளித்துச் சிறப்பித்தது.
கட்டுரையாளர் 
 மாணவ நிலையிலும் ஆசிரிய நிலையிலும் பல்வேறு ஆராய்ச்சிக் கட்டுரைகளை அளித்துப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றார். 1960 முதல் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் வெளியிட்டுள்ளார். தவத்திரு (உ)லூர்து எத்தனப்பள்ளி அடிகளார் நினைவு ஆராய்ச்சிக் கட்டுரைப் பரிசு, வயவர் ஆர்.கே.  சண்முகம்(செட்டியார்)  தமிழ்  ஆராய்ச்சி  விருது(அண்ணாமலைப்   பல்கலைக்கழகம்)(1963), இராணி சேது  பார்வதி(பாய்)  வரலாற்று  ஆராய்ச்சிப்  பரிசு (அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.)(1964) முதலியன குறிப்பிடத்தக்கன. மேலும் 1983-84இல் மிகுதியான  ஆராய்ச்சிக்கட்டுரைகளை  வெளியிட்டமைக்குச் சிறப்புப் பரிசும் பெற்றார்.
  தினமணி, தினமலர், குமுதம், கல்கி, சுதேசமித்திரன், தமிழ்நாடு, செந்தமிழ்ச்செல்வி, மறவன் மடல், முத்தாரம், மக்கள் செங்கோல், தாமரை, ஆராய்ச்சி, இளந்தமிழன், தமிழ்க்கலை, தென்மொழி, கொங்கு, கலைமகள், தமிழ்மாருதம், மலேசிய நண்பன், தமிழ்முரசு, அறிக அறிவியல் முதலான பல்வேறு இதழ்களில் இவரது கட்டுரைகள் இடம் பெற்றுப் பொது மக்களனின் பாராட்டுகளைப் பெற்றுவருகின்றன.
கல்விப்பணியும் தமிழ்ப்பணியும் ஆற்றியமைக்கு வகித்த பொறுப்புகள்
 திராவிட ஆராய்ச்சி மையம்,     இந்திய  நடுவண்மொழி நிறுவனச் செம்மொழித் திட்டம்(மைசூர்), தமிழ் சாகித்ய அகதமி(தமிழக அரசு), தமிழாராய்ச்சி நிறுவனம், தென்னகப் பண்பாட்டு மையம், தமிழ்வளர்ச்சிக்  குழு(தமிழக அரசு), இந்திய,  மாநில, அயல்நாடுகளில் தமிழ்வளர்ச்சிக்குழு(தமிழக அரசு),   தமிழ்ப்பல்கலைக்கழக ஆட்சி மன்றம், புதுவை  மொழியியல் பண்பாட்டு  நிறுவன ஆட்சிக்குழு, புதுவை  மொழியியல் பண்பாட்டு நிறுவன மொழிபெயர்ப்புக்குழு (பாரதிதாசன் கவிதைகள்), மதுரை தோக்கு பெருமாட்டி(Lady Doak) கல்லூரியின் கல்விக்குழு, பாரதிதாசன் பல்கலைக்கழகத் தெரிவுக்குழு ஆகியவற்றில் உறுப்பினராக இருந்து தொண்டாற்றியுள்ளார்.
 உயர்கல்வியின் தமிழ்ப்பகுதிக் குழு(தமிழக அரசு) (1995), உலகத்தமிழ் ஆராய்ச்சி  நிறுவனத்தின் சிறப்புக்குழு (1997), சிறந்த புத்தக வெளியீட்டுத்தேர்வுக்குழு(தமிழ்வளர்ச்சித் துறை, தமிழக அரசு) (1997), ஆகியவற்றில் தலைவர் பொறுப்பேற்று வழி நடத்தியுள்ளார்.
 அனைத்திந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத்தின் செயலர், பொருளாளர் முதலான பொறுப்புகளை 1991-2000ஆண்டுகளில் ஏற்றுத் திறம்பட நடத்திச் சென்றுள்ளார்.
  உலகச் சைவ மன்றத்தின்(இலண்டன்) துணைத்தலைவர், சிகாகோ உலகத் தமிழ் மொழிக் கூட்டமைப்பின் இந்திய ஒருங்கிணைப்பாளர், உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் (கோலாலம்பூர், மலேசியா) அறக்கட்டளை உறுப்பினர், புது செர்சி தமிழ்ச்சங்கத்தின் நேற்று, இன்று, நாளை செயல்பாட்டின் ஒருங்கிணைப்பாளர், கணக்கெடுப்பு 2000 சிந்தனை வட்டம், புது செர்சி அமைப்பின் தமிழ்நாட்டு ஒருங்கிணைப்பாளர் எனப் பிற பொறுப்புகளையும் ஏற்றுத் திறம்படச் செயலாற்றியுள்ளார்.
நூல்கள்
 பண்பாட்டுப் பழக்க வழக்கங்களின் குறைகளைச் சுட்டிக் காட்டும்  இவரது கருத்துகள் ஒரு சாராரால் எதிர்ப்பிற்கும் மறு சாராரால் அறுவை மருத்துவம் எனப் பாராட்டிற்கும் உள்ளாகின்றன.
தமிழர் குமுகவியல், பண்பாடு, வாழ்க்கை முன்னேற்ற  நூல்கள், மொழி பெயர்ப்பு  நூல்கள், வரலாறு, தன் வரலாறு, கல்வி, பயண  நூல், திறனாய்வு, இலக்கணம், சிறுகதைத் தொகுப்புகள், புதினம், அறிவியல், அற இயல், பொது எனப் பல துறைகளிலும் எழுபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
 அவருடைய ஆய்வுகள்(His studies), மானிடவியல் ஆய்வுகள்(Anthropological studies), பாம்பு வழிபாடு(The serpent cult), திராவிடர்கள் (பதிப்பு நூல்)(Dravidians), தமிழியல் ஆராய்ச்சிக் கட்டுரைகள்(Research papers on Tamilology) ஆகிய ஆங்கில நூல்களையும் எழுதியுள்ளார்.
  சிலர் எண்ணுவதுபோல் இவர் குறைகளைமட்டும் கூறுபவர் அல்லர். தமிழ்ச் சமுதாயம் நோயும்  மருந்தும், தமிழ்ச்சமூகம்  அவலங்களும்  தீர்வுகளும், தமிழர் வருந்தவும்  திருந்தவும், தமிழர் உணரவும் உயரவும் முதலான நூல் தலைப்புகள் இதனை உணர்த்தும். எனவே, பேராசிரியர் முனைவர் க.ப.அறவாணன், மன்பதை நூல் மருத்துவர் என அழைக்கப்பெறலாம்.
 தமிழர்  களைகளும்  கவலைகளும், தமிழர்  +  தன்னம்பிக்கை =  தற்கொலை, தமிழரின்  எழுச்சியும்  வீழ்ச்சியும், தமிழர் தடங்கள் தடுமாற்றங்கள், தமிழா எழுந்து வா, இலஞ்சம் எனும் நஞ்சு, நீயே  வெல்வாய், உயருங்கள், பொறு புறக்கணி புறப்படு, புரட்சிப் பொறிகள், தமிழர் சிந்தனை  புதிது, தமிழரால் முடிந்தால்  தமிழால் முடியும், தமிழா!  தலைமை  தாங்க வா முதலான நூல்கள் இவர் எப்பொழுதும் தமிழரிடையே உள்ள அவலங்களையும் அவற்றைப் போக்குவத ற்குரிய வழிமுறைகளையுமே சிந்தித்து வந்துள்ளார் என்பதை உணர்த்தும்.
தொல்தமிழர் காலம், தொல்வழிபாட்டுக் காலம், அயலவர் காலம், நாயக்கர் காலம், இசுலாமியர் காலம், பாண்டியர் காலம், சோழப் பேரரசின் காலம் எனக் காலமுறையிலே தமிழர் வரலாற்று நூல்களை அளித்துள்ளமை சிறப்பிற்குரியதாகும். இவரின் தமிழர்மேல்  நிகழ்ந்த  பண்பாட்டுப் படையெடுப்புகள் என்னும் நூலை விழிப்புணர்வு பெற வேண்டிய ஒவ்வொருவரும் படிக்க வேண்டும். வரலாற்று நூல்களில் ‘ஈழம்: தமிழரின் தாயகம்’ என்பது குறிப்பிடத்தக்க படைப்பாகும்.
சிறந்த புத்தகங்களுக்கான பரிசுகளும் விருதுகளும்
 பேரா.க.ப.அறவாணன், ‘சைனரின் தமிழிலக்கண நன்கொடை’ (1978), ‘தமிழர் பிறந்தகம்’(1986), ‘தமிழர்தம் மறுபக்கம்’(1990), ‘படைப்பாளி+சமுதாயம்= இலக்கியம்’ (1997), என்னும் நூல்களுக்காகத் தமிழக அரசின் விருதுகளைப் பெற்றுள்ளார்.
  ‘கவிதையின் உயிர், உள்ளம், உடல்’ நூலுக்குத் திருப்பூர்த் தமிழ்ச்சங்கம்(1994), ‘தமிழ்ச் சமுதாய வரலாறு’ நூலுக்குச் சென்னைத் தமிழ்ச்சங்கம் (1996),  ‘இலஞ்சம் எனும் நஞ்சு’          நூலுக்குப் பல்மருத்துவர் தெய்வசிகாமணி அறக்கட்டளை (திருச்சி)(2011),  ‘தமிழ் மக்கள் வரலாறு (நாயக்கர் காலம்)’ நூலுக்கு உலகத் தமிழ்ப் பண்பாட்டு பேரவை(நாகர்கோயில்)(2013) எனத் தமிழமைப்புகளும் இவரது நூற்சிறப்பை உணர்ந்து விருதுகள் வழங்கியுள்ளன.
தமிழர் அடிமையானது  ஏன்?  எவ்வாறு? என்னும் நூல், தினத்தந்தியின் நூறாயிரம் உரூபாய்ப் பரிசினைப் பெற்றது.
 சிறந்த சிறுகதைக்கான விருதுகளைத் திண்டுக்கல் மொழியியல் நிறுவனமும் திருவாரூர் இயற்றமிழ் அகமும் வழங்கியுள்ளன. சிறந்த கட்டுரைக்கான விருதினைத் திண்டுக்கல் திருவள்ளுவர் மன்றம் வழங்கியுள்ளது.
விருதுகள்
அமெரிக்கன் தன் வரலாற்றாளர் நிறுவனம்(American Biographical Institute) 1997 ஆம் ஆண்டிற்கான சிறந்த மனிதர் விருது அளித்தது.
1986 இல் அனைத்திந்தியக்  கிறித்தவ அமைப்பின் கல்வி நிறுவனம்(புதுதில்லி), சிறந்த பேராசிரியர் விருது அளித்தது.
    குன்றக்குடி ஆதினம் வழங்கிய கபிலர் விருது, திருவள்ளுவர் மன்றம்(கோவில்பட்டி) வழங்கிய திருவள்ளுவர் விருது, திருக்குறள் பேரவை(திருச்சி) வழங்கிய தமிழ் ஞாயிறு விருது, முருகாலயம்(சென்னை) வழங்கிய மாவீரன் பூலித்தேவன் விருது, பண்ணைத் தமிழ்ச்சங்கம்(சென்னை) வழங்கிய தமிழறிஞர் விருது,  கேம்பிரிட்சு  வரலாற்று மையம்(இங்கிலாந்து) வழங்கிய 1998 ஆம் ஆண்டிற்கான சிறந்த மனிதர் விருது முதலியன இவரது சிறப்பைத் தமிழன்பர்கள்போற்றியதற்கு எடுத்துக்காட்டுகளாகும்.
தமிழக அரசின்  திருவள்ளுவர்  விருது  நூறாயிரம் உரூபாய், இராசா வயவர் முத்தையா(செட்டியார்)  விருது நூறாயிரம் உரூபாய், திரு. சி.பா. ஆதித்தனார்  விருது நூறாயிரம் உரூபாய் முதலியன  இவர் பெற்ற சிறப்பான விருதுகளாகும்.
பயணம் மேற்கொண்ட நாடுகள்
ஆத்திரேலியா(1992), ஆத்திரியா(1984), கனடா(1994,1996,1999,2000), செக்கோசுலோவிக்கியா(1977), தென்மார்க்கு (1984), ஃபிரான்சு(1977, 1978, 1980, 1994, 2000), காம்பியா(1978), செருமனி(1980, 1981, 1984,1993,1994,1996,1999), ஆங்காங்கு(1979),  இத்தாலி(1978,1979), சப்பான்(1979), மலேசியா(1979,1994,1996,1997,1998,1999), மொரிசியசு(1996), நைசீரியா(1997), செனகால்(1997-1981), சிங்கப்பூர்(1979,1981,1992,1994,1996,1997,1998,1999,2000), தென் ஆப்பிரிக்கா(1996), இலங்கை(1975,1995), சுவிட்சர்லாந்து(1993), இங்கிலாந்து (1997,1978,1979,1980, 2000), அமெரிக்கா(1979, 1994, 1996, 2000) முதலான 20 நாடுகளுக்கும் மேற்பட்ட அயல்நாடுகளுக்குத் தமிழ்ப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
     மன்பதை நூல் மருத்துவர் பேராசிரியர் முனைவர் க.ப.அறவாணன் வழியில் தமிழரிடையே ஏற்பட்டுள்ள அயல் தாக்க நோய்களை அறிந்து தமிழ்ப்பண்பாட்டை மீட்டெடுத்துத் தமிழராய்த் தலை நிமிர்ந்து வாழ்வோம்!
     இலக்குவனார் திருவள்ளுவன்