Showing posts with label ம. இராமச்சந்திரன். Show all posts
Showing posts with label ம. இராமச்சந்திரன். Show all posts

Saturday, September 03, 2016

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 40: ம. இராமச்சந்திரன்




தலைப்பு-இலக்குவனார்கவிதைகள் : ilakkuvanar kavithaikal_or_aayvu_thalaippu

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 40

chinnasami03
சின்னச்சாமி
  1965 ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் இந்தி மொழித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. மாணவர்கள் முழுவேகத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களும் ஆதரவு வழங்கினர். ஒரு சிலர், இந்தி மொழித்திணிப்பால் தமிழ்நாட்டுக்கு உண்டாகக்கூடிய துன்பத்தை எண்ணித் தம்மையே மாய்த்துக் கொண்டனர். அவர்களுள் முதன்மையானவர் சின்னச்சாமி என்பவர். இவர் திருச்சி மாவட்டத்தைச் சார்ந்த தமிழ்ப்பற்று மிகுந்த அன்பர். அறிஞர் அண்ணா அவர்களின் பேரன்பிற்கு உரியவராக விளங்கினார். கவிஞர் தமிழ் மறவன் சின்னச்சாமியை நினைந்து பாடியுள்ளார். இக்கவிதை பதினைந்து அடிகளை உடைய நிலைமண்டில ஆசிரியப்பா.
 இனிய தமிழ்நாட்டில் செந்தமிழ் காப்பதற்காக
இந்தி மொழியை எதிர்த்து செந்தீயில் மூழ்கியவன் சின்னசாமி.
அவனை நாளும் போற்றுவோம்.
 தமிழ்மொழியைக் காப்பாற்றுவதற்காக தம் உயிரையும் கொடுக்கின்ற உரம் வாய்ந்த மறவர்கள் இருக்கிறார்கள். எனவே தமிழ்மொழியை அழிக்கின்ற கீழான செயலை மறந்து செய்ய வேண்டாம். தமிழ்மொழி காக்க ஏரியில் மூழ்கி உயிர் விடும் நிலையை இனியும் நீட்டிக்க வேண்டாம்.
இந்தி மொழியின் முதன்மை எம் தமிழ் மொழியை அழிக்கும் செயல் என்பதை அறியாதார் யார்? நல்லுயிர் கொடுத்து நம் தமிழ் காக்க வலிமை உடையோர் வருமுன் தமிழை மாய்க்கும் கொடிய செயலை நீக்குங்கள்.
தீந்தமிழ் மறவன் சின்னச்சாமியை நினைப்போம். அவனைப் போல தமிழ்மொழிக்குத் தொண்டு செய்ய முந்துங்கள்.
‘நல்லுயிர் கொடுத்து நற்றமிழ் காக்க
 வல்லோர் எழுமுன் வண்டமிழ் மாய்க்கும்
 ………………………………………
 ………………………………………
 ஆம்நற் றொண்டு ஆற்றுமின் தமிழ்க்கே.’123
என்று கவிஞர் போர்ப்பரணி பாடுகிறார். தமிழ் வாழ்வே தமிழர் வாழ்வு என்பதை எண்ணி மொழிநலம் காத்தல் தமிழ் மக்களின் கடமை என்கிறார்.
‘கருமவீரர் காமராசர்’ என்னும் நூல், தமிழகத்தின் முன்னாள் முதல்வராக இருந்த காமராசரைப் பற்றி எழுதப்பட்டதாகும். காமராசர் காங்கிரசு இயக்கத்தில் பெரிய தலைவராக விளங்கினார். இலக்குவனாரோ தன் மதிப்பு இயக்கத்தில் ஈடுபாடு கொண்டு பெரியாரின் அன்புக்குரியவராய் விளங்கினார். 1952 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் திருவல்லிபுத்தூர் பாராளுமன்றத் தேர்தலில் காமராசர் போட்டியிட்டார். காமராசருக்கு எதிராக அறிவியல் வல்லுநர் கோ.து.நாயுடு தன்மதிப்பு இயக்கத்தின் சார்பாகப் போட்டியிட்டார். இலக்குவனார் கோ.து. நாயுடுவை ஆதரித்துப் பணி செய்தார். தேர்தல் முடிவு வந்த பின்னர், காமராசர் நாடாருக்கு எதிராக வேலை செய்தார் என்பதற்காக காங்கிரசு நாடார்களின் தூண்டுதலால் விருதுநகர் செந்திற்குமார நாடார் கல்லூரியினின்றும் நீக்கப்பட்டார். பின் புதுக்கோட்டை, ஈரோடு முதலிய இடங்களில் பணியாற்றிய பின் நாகர்கோவில் இந்துக் கல்லூரியில் பணி செய்தார். அப்பொழு (1956) எழுதப்பட்டது. ‘கருமவீரர் காமராசர்’ என்னும் நூல். அந்நூலின் முன்னுரையில் எழுதப்பட்ட கவிதைதான் ‘சங்கநிதி பதுமநிதி’ என்னும் செய்யுளை ஒட்டிப்பாடப் பெற்றதாகும் இக்கவிதை. முதல் பன்னிரண்டு சீர் திருநாவுக்கரசருடையது. அப்படியே எடுத்தாண்டுள்ளார். பிற்பகுதி இலக்குவனாரால் பாடப்பட்டுள்ளது.
   இந்நூலின் அறிமுக உரையில் கவிஞர் இவ்வாறு கூறுகிறார்.
‘தமிழ் எமது உயிர்; தமிழின் உயர்வே தமிழ் நாட்டின் உயர்வு. தமிழ் நாட்டின் தமிழுக்குத் தான் முதன்மை உண்டு. தமிழ்நாடு ஏனைய நாடுகள் போல் உரிமையாட்சி பெற்றுத் தமிழர்களால் ஆளப்பட வேண்டும்……… யாம் ஒரு புலவர்; எழுத்தாளர். ஆகவே யாம் யாவர்க்கும் பொதுவான நிலையில் உள்ளோம். கட்சி காரணமாக விருப்போ பெறுப்போ கொள்ள வேண்டிய நிலையில் இல்லோம். ஆனால் தமிழ்ப் பகைவர் எமது பகைவராவர்; தமிழ் நண்பர் எமது நண்பராவர்.’124
மேற்குறித்த கருத்துக்களின் விளக்கமாய் அமைந்ததே ‘சங்கநிதி பதுமநிதி’ என்னும் கவிதையாகும்.
‘சங்கநிதி பதுமநிதி இரண்டும் தந்து
 தரணியொடு வானாளத் தருவ ரேனும்
 …………………………………..
 …………………………………..
 …………………………………..
 …………………………………..
 தங்குபுகழ் செந்தமிழ்க்கோர் அன்ப ராகில்
 அவர்கண்டீர் யாம்வணங்கும் கடவு ளரே’ 125
குறிப்புகள்:
  1. சி. இலக்குவனார், ‘செந்தீயில் மூழ்கிய தீந்தமிழ் மறவன்’ குறள்நெறி, மதுரை 1-10-1964.
  2. சி. இலக்குவனார், கருமவீரர் காமராசர் ‘முன்னுரை’ நாஞ்சில் புத்தகமான, நாகர்கோவில் 1956, ப-4.
  3. சி. இலக்குவனார், கருமவீரர் காமராசர், முன்னுரை, ப-4, அ-ள் 1-4.

தலைப்பு-தொடரும் : thalaippu_thodarum
பெயர்-ம.இராமச்சந்திரன் _peyar_ma.ramachnathiran

Wednesday, August 24, 2016

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 39: ம. இராமச்சந்திரன்




       21 ஆகத்து 2016      கருத்திற்காக..

தலைப்பு-இலக்குவனார்கவிதைகள் : ilakkuvanar kavithaikal_or_aayvu_thalaippu

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 39

ஏனைய பாடல்கள்
  தனித்தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபட்ட மறைமலையடிகள், திரு.வி.கலியாணசுந்தரர்,  செந்தீயில் மூழ்கிய தீந்தமிழ் மறவன் சின்னசாமி, ‘கருமவீரர் காமராசர்’ நூலில் இடம் பெற்றுள்ள ‘சங்கநிதி பதுமநிதி’, ‘கருமவீரர் காமராசர்’, வள்ளல் ‘அழகப்பச் செட்டியார்’ ‘குறள் வெண்பா’ ஆகிய ஏழு கவிதைகள் இதில் இடம் பெறுகின்றன.
  இருபதாம் நூற்றாண்டில் முதன் முதலாக, தனித்தமிழில் பேச வேண்டும். தனித்தமிழில் எழுத வேண்டும் என்ற எண்ணத்தைத் தோற்றுவித்தவர் மறைமலையடிகளார். இவரது இயற்யெர் சுவாமி வேதாசலம் என்பதாகும். தனித்தமிழ் இயக்கம் நாடெங்கும் பரவ பெரும் முயற்சி எடுத்துக் கொண்டார் தாம் நடத்தி வந்த ‘ஞான சாகரம்’ என்ற திங்கள் இதழை ‘அறிவுக் கடல்’ என்று மாற்றினார். தமிழனுக்குத் தமிழ் மொழியிலேயே பெயர் இருத்தல் வேண்டும என விரும்பினார். தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கையைப் போற்றியதுபோலக் கவிஞர், மறைமலையடிகளாரின் தனித்தமிழ்க் கொள்கையைத் தம் எழுத்திலும் பேச்சிலும் பின்பற்றினார்.
  அறுசீர் ஆசிரிய விருத்தத்தில் கவிஞர் அவர்கள் மறைமலையடிகளாரின் சிறப்பைப் பாடியுள்ளார்கள். எட்டு அடிகளையுடையது இக்கவிதை. மாணிக்கவாசக சுவாமிகள் சிவபெருமானைக் குறித்து ‘போற்றிக் திருவகவல்’ பாடியது120போல் கவிஞர் இதனைப் பாடியுள்ளார்.
‘தனித்தமிழ் இயக்கம் தோற்றுவித்த தலைவனே போற்றி, தமிழ் காக்கும் மறவர்களின் எண்ணத்தில் நிறைந்திருப்பரே போற்றி, இந்தி மொழி என்னும் இருட்படலத்தை விலக்கிய செங்கதிர் ஒளியே போற்றி, தமிழ்நலம் நாடுவார் இதயத்தாமரையில் வீற்றிருப்பாய் போற்றி போற்றி’ என்று பாடுகிறார்.
 துள்ளி வரும் பகையைப் பொடியாக்கச் செய்யும் புயலே போற்றி, வெறுக்கத்தக்க அடிமை வாழ்கை எரித்துச் சாம்பராக்கும் நெருப்பே போற்றி, புதிதாகப் புறப்பட்டுவரும் வெள்ள நீர்ப்பெருக்கைப் போல வெற்றியை உண்டாக்கும் சொல்வன்மை படைத்த மேகமே போற்றி, வள்ளுவர் ஆண்டு தோற்றுவித்த வள்ளலே போற்றி போற்றி’ 121 எனப் பாடுகிறார் கவிஞர்.
திரு.வி. கல்யாணசுந்தரர்
  தமிழுக்கும் தமிழ் இனத்திற்கும் பாடுபட்டவர். இவர்தம் பேச்சால் ‘தமிழ்த் தென்றல்’ என அழைக்கப்பட்டார். சைவம், வைணவம், சமணம், பௌத்தம், கிறித்துவம், இசுலாமியம் ஆகிய எல்லா மதத்தின் கருத்துகளிலும் ஈடுபாடு கொண்டவர்; அதனால் ‘பொதுமை வேட்டல்’ என்னும் செய்யுள் நூல் பாடியவர். தொழிற் சங்கம் தொடங்கித், தொழிலாளர் முனனேற்றத்திற்கு உழைத்தார்; பெண்கள் உரிமைக்குப் போராடினார்; நாட்டு விடுதலைக்காகப் போராடினார்; அரசியல் சமுதாய, பொருளாதார விடுதலையை விரும்பி தமிழ்ச் சமுதாயத்திற்குப் பாடுபட்டார்.
‘சேத பக்தன்’ ‘நவசக்தி’ என்னும் நாளிதழ்களை நடத்தினார். திருக்குறள் அறத்துப்பாலுக்கு உரை செய்தார்.
 பெண்ணின் பெருமை, மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், முருகன் அல்லது அழகு, உள்ளொளி போன்ற நூல்களை எழுதினார்.
சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து, என்கடன் பணிசெய்து கிடப்பதே’ என்பன போன்ற சமூகவியல் பற்றிய நூல்களையும் எழுதினார்.
மொழிக் கொள்கையில் மறைமலையடிகளைப் பின்பற்றினார்.
தீயவராயினும் அன்பராயினும் பாவம் செய்வராயினும் யாவர்க்கும் பணி செய்தவர். வழுக்கி விழுந்தவர் வாழ்க்கை செம்மைபெற தூய பல பணிகள் ஆற்றியவர். இத்தயை சிறப்புடைய அவரே அந்தணர்; அவரே முனிவர்; அவரே சித்தர்; அவரே புத்தர்; அவரே பெரியார்; அவரே தெண்டர்; அவரே இனியர்; அவரே மனிதர்க்கு வேண்டிய குணங்கள் அனைத்தும் பெற்றவர் 122 என்று கவிஞர் குறிப்பிடுகிறார்.
குறிப்புகள்:
  1. மாணிக்கவாசகர், திருவாசகம், போற்றித் திருவகவல் பன்னிருதிருமுறைப் பதிப்பு நிதி வெளியீடு,திருவைகுண்டம் 1962, ப.19-24.
  2. சி. இலக்குவனார், மறைமலையடிகள் நினைவுமலர், குறள்நெறி, மதுரை 15-7-1965, ப-1, பா.எ.2.
  3. சி. இலக்குவனார், திரு.வி.க. நினைவு மலர் ‘தலையங்கம்’ குறள்நெறி, மதுரை 1-10-1964.
பெயர்-ம.இராமச்சந்திரன் _peyar_ma.ramachnathiran

Saturday, August 13, 2016

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 37: ம. இராமச்சந்திரன்




(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 36 தொடர்ச்சி)

தலைப்பு-இலக்குவனார்கவிதைகள் : ilakkuvanar kavithaikal_or_aayvu_thalaippu

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 37

  மேலும் தமிழக மக்கள் எழுத்தறிவற்ற மூடர்களாக இருக்கின்றார்களே! புதிய சிந்தனை பெற்று வாழ்வது எங்ஙனம்? என இன்றைய குடியரசு நாடு பெற்றிருக்கும் அவலத்தை கண்டித்தும் நையாண்டி செய்தும் கூறுகிறார் கவிஞர்.
‘கட்டையை நிறுத்தினும் கழுதையைக் காட்டினும்
 அதற்கே வாக்கை அளித்தல் வேண்டும்
 என்றே கூறி நன்றுதம் கட்சிப்
 பேரெண் பெற்றிடப் பெரிதும் முயன்றனர்’
 (துரத்தப்பட்டேன்: அ-ள் 42-45)
தொண்டுள்ளம் கொண்டவருக்கு வாக்குப் போட வேண்டும் என்ற நிலை மாறி தம் சாதியைச் சார்ந்த ஒருவருக்கே வாக்களிக்க முந்துகின்றனர். தொழில் காரணமாகப் பெயர் பெற்ற மக்கள், சாதியினால் பெயர் கொண்டு வேறுபடுகின்றனர்.
‘வன்னியர் வாக்கு அன்னியர்க் கில்லை
 அன்னியர் வாக்கு வன்னியர்க் கில்லை
 …………………………………..
 …………………………………..
 தேவர் வாக்கு வேறெவர்க்கு மில்லை
 முதலியார் வாக்கு முதலியார் தமக்கே’
(துரத்தப்பட்டேன்: அ-ள் 34-39)
இங்கு சாதிகள் பேரால் போரிடுகிறார்கள் என்று கவிஞர் வசைபாடுகிறார்.
தமிழ் மக்கள் தமிழ்மொழியைக் கல்லாது ஆங்கில மோகம் கொண்டு அலைவதை நையாண்டி செய்து பாடியுள்ளார் கவிஞர். இக்கவிதை இரண்டு கண்ணிகளை உடையது.
 ‘ஆங்கிலம் ஒன்றையே கற்றார்-அதற்கே
 ஆக்கையும் ஆவியும் ஈந்தார்
 தாங்களும் வேற்றவர் ஆனார் – தமிழின்
 தொடர்பற்றுப் போனார்’ 113
ஆங்கில மொழி கற்கும் தமிழர்கள் தம்மையும் உயிரையும் விட்டு விடுகின்றனர். வேற்று இனத்தவரைப் போல மாறிவிடுகின்றனர். தமிழ் பேசுவதற்கே நாணமுறுகின்றனர். தமிழ்மொழியைக் கொத்திக் குதறிப் பேசுகின்றனர். எனவே அவர்கள் தமிழ் மொழியின் தொடர்பு முழுவதும் நீங்கப் பெற்றவர் என்று சாடுகிறார் கவிஞர்.
‘யாண்டு பலவின்றியும் நரையுள வாகுதல்’ என்ற கவிதை 1962 ஆம்  ஆண்டு இயற்றப்பட்டது. ‘பழந்தமிழ்’ என்ற மொழி ஆராய்ச்சி நூலில் இன்றைய தமிழ் மக்களின் இழிநிலையை விளக்குமுகத்தான் இக்கவிதையைப் பாடியுள்ளார். இக்கவிதையை இருபது அடிகளையுடைய நிலைமண்டி ஆசிரியப்பா. புறநானூற்றில் பிசிராந்தையார் பாடிய பாடலை மாற்றிப் பாடியுள்ளார். இதனைப் பகடியம் (Prody) என்று ஆங்கிலத்தில் கூறுவர்.
  ஆண்டு பல ஆகாமல் நரை அடைந்த காரணம் என்ன என்று என்னைக் கேட்பீர்களாயின் அதற்கு விடை சொல்கின்றேன். கேளுங்கள்.
  நாட்டை ஆட்சி செய்த நம் இனமக்கள் இன்று அடிமைகளாய் இருக்கின்றனர். இதுநாள் வரை நாம் போற்றிய பண்பு இன்று போலியாகி விட்டது. தமிழர், தமிழ் மொழியை மறந்தனர். பிற மொழிப் பற்றில் வல்லவராக இருக்கின்றனர். தமிழ்நாட்டின் தெருப்பெயர் தமிழில் இல்லை. நம்முடைய ஊரும் பெயரும் ஆங்கில மொழியில் வழங்குகின்றன. இதனைக் கவிஞர் எள்ளி நகையாடுகிறார் .
‘ஆண்டநம் மக்கள் அடிமை களாயினர்
 பூண்டநம் பண்பு போலியதாகின்று
 ………………………………….
 ………………………………….
 ………………………………….
 ஊரும் பேரும் உயர்மொழி வழக்கம்
 அயல்மொழி தன்னில் அமைந்திடக் கண்டோம்’ 114
  தமிழ் மொழியைக் கற்றோர் உயர்பதவி அடைய வாய்ப்பு இல்லையாதலால் தமிழைப் பயில தமிழரே வருவதில்லை. ‘தாய்மொழி ஆட்சி மொழி’ என்பதெல்லாம் பெறும் சொல்லளவில் மட்டும் இருக்கின்றது. தமிழ் மீது பற்றிலாமல் பிறமொழி மீது நாட்டங் கொள்வோரா ஆட்சியில் உள்ளனர். உயர்கல்வியைத் தமிழ்வழிப் பற்றுவதற்குத் தடையாய் இருப்பவர் தமிழரே. தமிழ்மொழியைப் போற்றுவோர் ஆங்கில மொழிக்கு அளிக்கும் தொகையில் பாதியைக் கூட தமிழுக்கு அளிப்பதில்லை. இன்றைய நாளில் தீயவை பெருகுகின்றன. நல்லவை மறைகின்றன. மக்கள் வாழ்வில் மகிழ்ச்சி என்பதும் இல்லாமல் போய்விட்டது. எனவே, இளம் வயதிலேயே எமக்கு நரைமுடி தோன்றிவிட்டது’ என்று கவிஞர் தமிழ் மீதுள்ள காதலில் தம் ஆற்றாமையைப் புலப்படுத்துவதோடு தமிழ்ப்பற்றில்லாமல் திரியும் தமிழ் மக்களின் மடமையைச் சுட்டிக் காட்டுகிறார். மேலும் தமிழ் மொழி வளர்ச்சியில் கருத்துச் செலுத்த வேண்டும் என்பதையும் உணர்த்துகிறார்.
 ‘உயர்கல் விக்குறு ஊடக மொழியாய்த்
 தமிழ் மொழி அமையத் தடுப்பவர் தமிழரே
 ஆங்கில மொழிக்கே அளிப்பதில் பாதியும்
 தமிழ்மொழிக் களித்திலர் தமிழைப் போற்றுவோர்;
 அல்லவை பெருகவும் நல்லவை குறையவும்
 மக்கள் வாழ்வில் மகிழ்ச்சிதான் இன்றே’ 115
இன்தமிழ் காமின்” என்னும் கவிதை பதினெட்டு அடிகளையுடையது. இதில் `செல்வம் படைத்த செல்வர் சிலர் தமிழ்மொழியைப் போற்றாது இருக்கிறார்கள். பொருளையும் பொன்னையும் மட்டுமே சேர்க்கின்றனர். புகழ் வாய்ந்த செயல்களைச் செய்யாது வாணாளை வீணாகக் கழிக்கின்றனர். எமன் வந்து பற்றுங் காலத்து நடுங்கிச் சாகப் போகிறார்கள். தமிழ் நம்மொழி; தமிழ் இனிமையுடையது என்று மகிழ்ச்சி அடையாத செல்வர் உயிருடையவராயினும் நடைப்பிணமாகவே கருதப்படுவார்’ என்று வன்மையாகக் கண்டிக்கிறார்.
‘பொன்னும் பொருளும் புவியும் புகழும்
 பன்னுறு செல்வம் அனைத்தும் பாரில்
 பெற்றுள தமிழர் சற்றும் தமிழினை
 எண்ணிப் போற்றா திருப்பரேல் எல்லாம்
 …………………………………………
 …………………………………………
 …………………………………………
 உள்ளம் மகிழார் உயிருடைய ரேனும்
 நடைப்பிண மாக நாளைக் கழிப்பரே’116
செல்வர்களே தமிழ்ப்புகழ் பரப்புங்கள். அப்பொழுது தான் நாட்டுமக்கள் உங்களை வணங்கி மதிப்பார்கள்.
  பிறரைக் கெடுக்கும் கீழ்த்தரமான செல்களை நீக்கிவிடுங்கள். வானளாவியப் பெருகிய செல்வமும் பதவியும் நிலையாதது என்பதை உணருங்கள். பிறர்க்கும் அஞ்சி வாழும் அவலத்தைப் போக்குங்கள். தம்மிடம் உள்ள செல்வம் அனைத்தும் கொடுத்து தமிழ் மொழியைக் காப்பாற்றுங்கள்’ என்று கூறுகிறார் கவிஞர்.
  செல்வம் அழியக்கூடியது. மனிதர் இறக்கக் கூடியவர் அழியாது நிலைத்திருப்பது தமிழ் மொழியே. எனவே மாள இருக்கும் செல்வர்களே! அழியும் செல்வத்தைச் சேர்க்காதீர்கள்! எமன் வருமுன் நிலைத்த புகழ் கொடுக்கும் தாய்மொழியைக் காப்பாற்ற முந்துங்கள் என்று செல்வர் இழிநிலையை, மடமையைச் சுட்டிக் காட்டுகிறார்.
குறிப்புகள்:
  1. சி. இலக்குவனார், பழந்தமிழ் நான்காம் பதிப்பு, வள்ளுவர் பதிப்பகம், புதுக்கோட்டை, 1962, ப-12, கண்ணி 1-2.
  2. சி. இலக்குவனார், பழந்தமிழ் ப-180, அ-ள் 15-20.
  3. சி. இலக்குவனார், பழந்தமிழ் ப-180, அ-ள் 15-20.
  4. சி. இலக்குவனாh, ‘இன்றமிழ் காமின்’ ‘குறள் நெறி’ மலர்-2, இதழ்-15, ஆக°ட் 1965, அ-ள் 1-9.
பெயர்-ம.இராமச்சந்திரன் _peyar_ma.ramachnathiranதலைப்பு-தொடரும் : thalaippu_thodarum