Friday, September 04, 2015

மனங்கவர்ந்த செந்தமிழ் மாமணி சி.இலக்குவனார் – பட்டுக்கோட்டை குமாரவேல்



மனங்கவர்ந்த செந்தமிழ் மாமணி

பேராசிரியர் சி.இலக்குவனார்

                என் மனம் கவர்ந்த ஆன்றோர்களில் முதன்மையானவர் செந்தமிழ்மாமணி பேராசிரியர் சி.இலக்குவனார் ஆவார். அவரை நான் முதலில் சந்தித்த பொழுதே அவரது உருவம் என் உள்ளத்தில் நன்கு பதிந்து விட்டது. அவரது கருத்துகளும் செயல்களும் எனக்கு உந்து சக்தியாய் விளங்கி என் முயற்சிகளில் நான் வெற்றி பெறச் செய்து விட்டது. என் முன்னோடி அறிஞர் ஆன்றோர் முனைவர் பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களைப் பற்றிய எண்ணத்தைப் பகிர்ந்து கொள்வதில் நான் பெருமிதம் கொள்கிறேன்.
                இன்றைக்கு 35 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு நாள், நான் திருச்சி வானொலி நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த பொழுது, ஒருவர் பேராசிரியர் வானொலி நிலையத்திற்கு வந்திருக்கிறார் என்று சொன்னார். தமிழ்கூறும் நல்லுலகில் அன்றைக்குப் பேராசிரியர் என்றால் அது தமிழ்மலை செந்தமிழ்மாமணி பேராசிரியர் சி.இலக்குவனார் மட்டும்தான். “நம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்; தமிழ் உலகிற்கேச் சொந்தக்காரர் ஆனவர். தமிழ்ப்பணிக்காகப் பதவிகளையே தூக்கி எறிந்த புரட்சியாளர். தமிழ் நலன் ஒன்றையே தன் நலனாகக் கருதியவர். இத் தமிழ்ச் சான்றோரைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டுமா?” என ஏங்கியவன் நான். படிக்கும் பொழுதே படைப்பாளியாகத் திகழ்ந்த அவரைப்பற்றிய எண்ணமே பின்னர் என்னை ஆயிரக்கணக்கான படைப்புகளுக்குச் சொந்தக்காரர் ஆக்கியது எனில் மிகையாகாது. அத்தகைய பெருந்தகையாளர் வந்திருக்கிறார் என்றால் அவரை எப்படிச் சந்திக்காமல் இருக்க முடியும்?
          ஆட்சி மாற்றத்திற்கே நெம்புகோலாய்த் திகழ்ந்த புரட்சிப் பேராசிரியரைத் தயக்கத்துடனும் ஆர்வத்துடனும் சந்திக்கச் சென்றேன். ஆனால், சந்தித்த பின்பு ஏதோ மிக நெருங்கிய உறவினரைப் போன்றும் நீண்டகால நண்பரைப் போலவும் இனிமையாகப் பழகிய அவரது பண்பு என்னை இன்பத்தில் ஆழ்த்தி விட்டது.
                “உண்டாலம்ம இவ்வுலகம்” எனத் தொடங்கும் புறநானூற்றுப் பாடலுக்கு எடுத்துக் காட்டாக வாழ்ந்து தனக்கென வாழாத் தகைமையாளராகப் பிறர்க்கென வாழும் பெருந்தகையாளராகத் திகழ்ந்தவர்; எண்ணம், எழுத்து, பேச்சு, மூச்சு என யாவுமே தமிழாகக் கொண்டவர்.
                “தோன்றிற் புகழொடு தோன்றுக”என்னும் வள்ளுவர் வாய்மொழிக்கிணங்கத் தாம் தொடங்கிய செயல் யாவினும் புகழுற விளங்கியவர்.
                “சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
             தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்”
என்னும் பாரதி வாக்கைச் செயல்படுத்தி, மாணவர்களைக் கொண்டும் தமிழ் ஆர்வலர்களைக் கொண்டும் தாம் பணியாற்றிய நகர்களில் எல்லாம், ‘தமிழில் பேசுக! தமிழில் எழுதுக! தமிழில் பெயரிடுக! தமிழில் பயிலுக!’ எனத் தமிழ்முழக்க ஊர்வலங்களை நடத்தி மக்களிடையே தமிழ் ஆர்வத்தை வித்திட்டவர். பிற இயக்கங்கள் இவ்வாறு தமிழ்முழக்க ஊர்வலம் நடத்த முன்மாதிரியாகத் திகழ்ந்தவர்.
                “தமிழ்நாட்டின் தமிழ்த் தெருவில்தமிழ்தான் இல்லை” என வருந்திக்
              “கெடல் எங்கே தமிழின் நலம் அங்கெல்லாம்
                  தலையிட்டுக் கிளர்ச்சி செய்க”
என்னும் பாரதிதாசனின் தமிழியக்கக் கனவுகளைச் செயற்படுத்தும் தலைவராகத் தமிழ்க் காப்புக்கழகம் நிறுவியவர் பேராசிரியர். அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் செய்ய முடியாததைச் செய்து காட்டிய செம்மல் பேராசிரியர் சி.இலக்குவனார்.
          தொல்காப்பியர், திருவள்ளுவர், இளங்கோ அடிகள், ஒளவையார் முதலிய தமிழ்ப் பெரும்புலவர்கள் பெயரால் மக்கள் விழாக்களை நடத்தித் தமிழ் எழுச்சியை ஏற்படுத்தியவர். ஆசிரியப்பணி என்பது கல்விக்கூடங்களில் மட்டும் அல்லாமல் மக்களிடையேயும் ஆற்றுவது என்பதை எடுத்துக்காட்டிய ஏந்தலே பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள்.
            பிற ஆசிரியர்களுக்குக் கீழாக நடத்தப்பட்ட தமிழாசிரியர்களுக்குத் தம் வாதத் திறமையாலும் போராட்டச் செயல்களாலும், பிற ஆசிரியர்களுக்கு இணையான உரிமைகளைப் பெற்றுத் தந்த போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள்.
          மாணவர்கள் தங்கள் வருகையைப் பதிவு செய்ய “உள்ளேன் ஐயா” எனத் தமிழ் மணக்கக் கூறச்செய்தவர்; மாணவர்களிடம் தமிழ்ப்பற்றை ஊட்டிய முதல் போராட்ட அறிஞராகத் திகழ்ந்தவர் பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள் மட்டுமே. எனவேதான் இந்தி எதிர்ப்பு உணர்வு மாணவர்களிடையே பற்றி எரிந்தத் 1965இல் இந்தி எதிர்ப்புப் பேராட்டமாக வெடித்தத் காங்கிரசு ஆட்சி அகன்றது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை நிறுத்த மாணவர்களுக்கு வேண்டுகோள் விடுக்க வேண்டும் என்று அன்றைய காவல்துறையினர் அறிஞர் அண்ணா அவர்களிடம் வேண்டியபொழுது, “இதற்கான விசை மதுரையில் உள்ளது. மாணவர்கள் பேராசிரியர் இலக்குவனார் கட்டுப்பாட்டில் உள்ளனர்” எனக் கூறிப் பேராசிரியரின் தமிழ்க்காப்புப் புரட்சியை வெளிப்படச் செய்தார்.
                கலைஞர் முதலானோர் இன்று சங்கத் தமிழைப் பரப்புவதற்கு முன்னோடி வழிகாட்டியாக அன்று சங்கத் தமிழை மக்கள் தமிழாக மலரச் செய்தவர் பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள். கம்பரின் புகழைப்பாடிக் கன்னித் தமிழை வளர்ப்பவர்களாகக் காட்டிக் கொண்டு சங்கத் தமிழை அழிக்க எண்ணியவர்களுக்கு எரிமலையாகக் காட்சியளித்து அன்றைக்குப் பேராசிரியர் கிளர்ந்தெழுந்து போராடி இராவிட்டால், உ.வே.சா. போன்ற அறிஞர்கள் ஓலைச் சுவடியிலிருந்து அச்சுக்குக் கொணர்ந்து உயிர்ப்பித்த சங்கத் தமிழ் மறைந்தே போயிருந்திருக்கும்.
       வையாபுரிக் கூட்டங்கள், தமிழ் இலக்கியங்களின் தொன்மையை மறைத்து ஆரியத்திற்குப் பூசை செய்த பொழுது வரலாற்று நோக்கிலும் அறிவியல் பூர்வமாகவும் தமிழ் இலக்கியங்களின் தொன்மையை உணரச் செய்தவர்களில் முதன்மையானவரும் பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களே ஆவார்.
           தொல்காப்பியத்தின் சிறப்பையும் அது வெளிப்படுத்தும் தமிழ் வரலாற்றுப் பண்பாட்டுச் சிறப்பையும் தான் புலவர் படிப்பு பயிலும் பொழுதே உலகிற்கு உணர்த்திய பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள் அதனை எளிமையாக மாணவர்களுக்கும் மக்களுக்கும் விளக்கிப் பெருந் தொண்டாற்றியதுடன் ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து உயர்தனிச் செம்மொழியின் பெருமையை உலகுணரச் செய்துள்ளார்.
            இலக்கிய இலக்கண வகுப்புகளைப் பொதுமக்களுக்காக நடத்தித் தமிழ் இலக்கியங்களை எளிமையாகப் புரியச் செய்ததுடன் எண்ணற்றோர் புலவர் பட்டமும் தமிழ் முதுகலைப் பட்டங்களும் பெற்று இதன் தொடர்ச்சியாகப் பல உயர் பதவிகளில் அமரக் காரணமாக இருந்த மக்கள் பேராசிரியர் தமிழ்மலை இலக்கணச் செம்மல் சி.இலக்குவனார் அவர்கள் மட்டுமே!
        மறைமலைஅடிகளின் தனித்தமிழ்ப் பணிகளை உரைநடையில் பலர் பின்பற்றிய பொழுது, படிக்கும் காலத்திலேயே ‘எழிலரசி’ என்னும் தனித்தமிழ்ப் பாவியத்தை முதலில் படைத்தவர் தமிழ்க்காப்புத் தலைவர் பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களே ஆவார். பாவேந்தர் பாரதிதாசனின் தனித்தமிழ்ப் படைப்புகளுக்கு முன்னோடியாக முதலில் தனித்தமிழ்ப் பாவியம் படைத்த சிறப்பிற்குரியவர் பேராசிரியர் சி.இலக்குவனார் என்பதைத் தமிழுலகம் இன்னும் உணரவில்லை. எழுத்துலகில் தொடர்ந்து இருந்தால் எண்ணற்ற பரிசுகள் அவரைத் தேடி வந்திருக்கும். ஆனால், மக்களுக்காக எழுதி, மக்களுக்காகப் பேசி, மக்களுக்காகத் தொண்டாற்றி மறைந்த மக்கள் அறிஞராக அவர் வாழ்ந்ததால் படைப்புலகம் அவரைப் புரிந்து கொள்ளாமல் போய்விட்டது.
         தமிழறிஞர்களின் படைப்புகள் உலக அறிஞர்களின் பார்வைக்குச் செல்லுமேல், பல தமிழறிஞர்கள் நோபள் பரிசு பெற்றிருப்பர். அத்தகைய நோபள் பரிசிற்குரிய தகுதியாளர்தாம் முத்தமிழ்க் காவலர் தமிழ்ப் படைத் தளபதி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் ஆவார்.
        பேராசிரியரின் சங்கத் தமிழ்க்காப்புப்பணிக்காக, திருக்குறள் ஆராய்ச்சிப் பணிக்காக, தொல்காப்பியப் புலமைக்காக, மொழிப்போர் பணிக்காக, இதழ்வழித் தமிழ்ப்பரப்புப் பணிக்காக என எத்தனையோ உலகப் பரிசுகள் அவரைத் தேடிவந்திருக்க வேண்டும்.
          தமிழ்க்காப்புத் தளபதியாகத் திகழ்ந்ததாலும், தமிழ் உரிமைப்பெருநடைப் பயணத்திற்கு ஆயத்தமானதாலும் வெங்கொடுமைச் சிறையில் தள்ளப்பட்டார் பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள். அப்பொழுது, ‘தமிழ்த்தாய் சிறையில்’ உள்ளதாகக் கூறித் தமிழ்  நெஞ்சங்கள் கவலைப்பட்டன.  உலகில் மொழிக்காகச்சிறை சென்ற  முதல் பேராசிரியர் பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவாக மணிமண்டபம் அமைத்தல், பல்கலைக்கழகம் ஒன்றிற்கு அவர் பெயரைச் சூட்டல், பேராசிரியர் இலக்குவனார் பெயரில் உலகளாவிய விருதுகளை வழங்குதல், நடுவணரசு சார்பில் வழங்க உள்ள தொல்காப்பிய விருதைப் பேராசிரியர் சி.இலக்குவனாருக்கு இறப்பிற்குப் பின்னதாக வழங்கி அவர் நினைவைப் போற்றுதல் முதலியனவற்றைத் தமிழக அரசும் இந்திய அரசும் ஆற்ற வேண்டும்.
– நாடகச் செம்மல் பட்டுக்கோட்டை குமாரவேல்
(2006)
pattukkottaikumaravel



இதழாளர் இலக்குவனார் வலியுறுத்தியவை


kuralneri_muthirai_small01 

இதழாளர் இலக்குவனார் தாம் நடத்திய

இதழ்கள் வாயிலாக வலியுறுத்தியவை

1.    இனிய எளிய தமிழ் நடை.
2.    அயல்மொழிக் கலப்பால் தமிழ் நாட்டின் எல்லை சுருங்கியதை உணர்ந்து பிறமொழிக் கலப்பு இன்றியே எழுத வேண்டும்.
3.  இந்தி முதன்மை தமிழுக்கே அழிவு. எப்பாடுபட்டேனும்இந்தி முதன்மையைத் தடுத்தல் வேண்டும்.
4.   ஒவ்வொரு மொழிக்கும் அதனதன் எழுத்தே உடலாகும். உடலாம் எழுத்தை அழித்த பின் உயிராம் மொழி வாழ்வது எங்ஙனம்? எனவே இந்திய மொழிகள் அனைத்தும் இந்திமொழியாம் தேவநாகரியில் எழுதப்பட வேண்டும் என விதிக்கும்நடுவணரசின் முயற்சியை எப்பாடுபட்டேனும் தடுக்க வேண்டும்.
5.    மக்களாட்சியில் கிளர்ச்சி என்பது நோய்க்கு மருந்து போன்றதாகும். ஆட்சியாளரின் பொறுப்பை உணர்வதற்குக் கிளர்ச்சிகள்தாம் கை கண்ட மருந்தாய் உலகம் முழுவதும் காணப் பெறுகின்றன. எனவே, கிளர்ச்சிகளுக்கு எதிராக அரசு அடக்கு முறையைப் பயன்படுத்தக் கூடாது. கிளர்ச்சிகளுக்குக் காரணமானவற்றை நீக்க வேண்டும். அவ்வாறு நீக்க முன்வந்தால் கிளர்ச்சியாளர்கள் அரசின் உறுதி மொழிகளை ஏற்றுப் போராட்டங்களைக் கைவிட வேண்டும்.
6.  வாழ்வியல் நூலாம் தொல்காப்பியத்தையும், வாழ்க்கை நெறி நூலாம் திருக்குறளையும் கண்களாகக் கொண்டு போற்றி முழுமையாய்ப் படித்துப் பின்பற்றி வாழவேண்டும்.
7.  சங்க இலக்கியக் காலம் நம் பொற்காலம். சங்க இலக்கியங்களை மக்களிடையே பரப்ப வேண்டும்.
8.    பயிற்று மொழியைத் தேர்ந்தெடுக்கும் உரிமை கூடாது. அனைத்துத் துறைகளிலும் அனைத்து நிலைகளிலும் தமிழே பயிற்று மொழியாக இருக்க வேண்டும்.
9.    தமிழ்ப் பெயரே சூட்ட வேண்டும். தமிழிலேயே எழுத வேண்டும். தமிழிலேயே பேச வேண்டும்.
10.  ஆசியக் கூட்டரசு, உலகக் கூட்டரசு என்ற படிநிலைகள் வரவேண்டும். எனவே, இந்தியா, இந்தியக் கூட்டரசாகத் திகழ வேண்டும். தன்னுரிமையுடைய மாநிலங்களின் கூட்டாக ‘இந்தியக் கூட்டரசு நாடுகள்” என்ற வகையில் திகழ வேண்டும்.
11.    நீதிமன்ற மொழியாகவும் அலுவல் மொழியாகவும் ஆட்சி மொழியாகவும் அனைத்துநிலை மொழியாகவும் தமிழ் இருத்தல் வேண்டும்.
12.    மூட நம்பிக்கைகளை ஒழித்துப் பகுத்தறிவோடு வாழ வேண்டும்.
13.    வண்டமிழை வட்டார மொழி என்று கூறற்க.
14.    தமிழர்க்குத் தேசிய மொழி தமிழேயாகும்.
15.  நடுவணரசுடன் தமிழ் மக்கள் தமிழ்மொழியிலேயே தொடர்பு கொள்ள ஆவன செய்ய வேண்டும்.
16.   வேண்டிய மொழிகளை விரும்பிக் கற்கலாம். ஆனால், இந்திதான் தேவை என்ற சூழலை உருவாக்கிவிட்டு, இந்தியைப் பெரும்பான்மையோர் விரும்பிக் கற்கிறார்கள் என்ற போர்வையில் இந்தியை இங்கே பயிற்றுவிக்கக் கூடாது.
17.    செய்தியிதழ்கள் செந்நெறி போற்ற வேண்டும்.
18.    தமிழை அழிவிலிருந்து மீட்க இதழ்கள் அயல்மொழிக் கலப்பின்றியே எழுத வேண்டும்.ளு
19.    செந்தமிழைக் காப்போர்க்கே தேர்தலில் வாக்களிக்க வேண்டும்.
20.    ஒரே மொழி, ஒரே சமயம், ஒரே நாடு என்பன நம்மை அழிப்பன.



இலக்குவனார் திருவள்ளுவன்

 

Thursday, September 03, 2015

பைந்தமிழ்க் காவலர் பேராசிரியர் சி.இலக்குவனார் – புகழ்ச்செல்வி

s.ilakkuvanar

பகைக்கு எரிமலை! பைந்தமிழுக்குப் பனிமலை!
பைந்தமிழ்க் காவலர் பேராசிரியர் சி.இலக்குவனார்

மொழி என்பது ஆறறிவு கொண்ட மாந்தனுக்கு மட்டும் கிடைக்கப்பெற்ற மிகப் பெரிய ஆற்றலாகும். கொப்பூழ்க் கொடி அறுத்த நாள்முதல் காலில்லா தொட்டிலில் படுக்கும்வரையில் மாந்தனுக்கு மாந்தன் உறவாடிக் கொள்ளத் தேவையான முதன்மையான வழி மொழியாகும். அத்தகைய சிறப்பு வாய்ந்த மொழியை – அதன் வாழ்வை – சிறப்பை  – பெருமையை, மேலும் அதை எவ்வாறு வளர்ப்பது என்று ஒவ்வொரு மொழி இனத்தாரும் எண்ணிச் செயல்படுகின்ற வேளையில் உலக மொழிக்கெல்லாம் மூத்ததாய்   இளமை மாறாததாய் உலகமெங்கும் பரந்து விரிந்ததாய் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரே மொழி   ஒப்பில்லா திருமொழி எதுவென்றால். அது தமிழ் மொழியைத் தவிர வேறேதும் இல்லை. இதைத் தமிழனாக இருக்கக்கூடிய நான் சொல்லவில்லை. கால்டுவெல் முதல் வீரமாமுனிவர் வரை பன்னாட்டு அறிஞர்களின் கூற்றாகப் பதிவு செய்துள்ளனர். ஆனால்   சிறப்பு வாய்ந்த தமிழ் மொழி  ஆரிய இனத்தாரின் சூழ்ச்சிகளால் ஆரியச் சொற்கள் ஊடுருவப்பட்டும்   பல்வேறு ஓலைச் சுவடிகள் நீரிலும்   நெருப்பிலும் அழிக்கப்பட்டும் தமிழின் சிறப்பு மறைக்கப்பட்டும் சிதைக்கப்பட்டு வந்தது.
ஆக இப்படி சிதைக்கப்பட்ட மொழியானது சென்ற நூற்றாண்டில்தான் விழிப்புணர்வு கொள்ளக் காலம் கனிந்தது. பரிதிமாற்கலைஞன். மறைமலையடிகள்   தேவநேயப் பாவாணர்   பாவேந்தன் என்ற தமிழக்காப்புப் படையினரில், முதல் களப் போராளியாகத் தமிழறிஞர் இலக்குவனார் அவர்கள் வருகிறார்கள்.
    தி.பி. 1940(கி.பி.1909) நளித் திங்களில் திருமிகு மு. சிங்காரவேலர் அவர்களுக்கும் திருவாட்டி அ. இரத்தினம் அம்மையார் அவர்களுக்கும் மூன்றாவது திருமகனாகப் பிறந்தவர்தான் பேராசிரியர் சி. இலக்குவனார் அவர்கள். இளமையில் கல்வி பயின்ற காலத்தில் அவருக்கு ஆசிரியராக வாய்த்த அறிஞர் சாமி சிதம்பரனார் அவர்கள்   பெற்றோர்கள் இட்ட பெயரான (இ)லட்சுமணன் என்பதை மாற்றி இலக்குவன்  என்று மாற்றினார்.  அன்றையிலிருந்து அவருக்குத் தமிழ்ப்பற்றும்   இனப்பற்றும் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து சிறந்து வந்தது. பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் ஆசிரியராகப் பணி ஏற்றுக் கொண்டார். தான் பெற்ற மொழியறிவையும்   இனஉணர்வையும் தம்மிடம் படிக்கும் ஒவ்வொரு மாணாக்கருக்கும் ஊட்டி வளர்த்தார். இன்றைய ஆசிரியர் போன்று பாடநூலில் உள்ளதை அப்படியே கக்காது   தனிப் பயிற்சி வகுப்புகள் நடத்தாது உள்ளன்போடும்   உணர்வோடும் ஒவ்வொரு மாணாக்கரிடமும் தனிப்பட்ட முறையில் அக்கறை செலுத்தி சிறந்த பேராசிரியராக இருந்தார் என்றால் மிகையாகா. இலக்குவன் தான் பெற்ற புகழால் இலக்குவனார் ஆனார். பேராயக்கட்சியான காங்கிரசு அரசு இந்தி மொழியைத் தமிழர்களிடம் திணித்து வந்தது. இதை எதிர்த்துப் பலவேறு வகையில் போராட்டம் வெடித்தது. 1948-இலேயே பேராசிரியர் இலக்குவனார் தலைமையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டில் தந்தை பெரியாரும் அறிஞர் அண்ணாவும் பங்கேற்றனர். பின்னர் 1965-இல் இந்தி நம் தலை மேல் ஏறுவதைத் தடுப்பதற்காகப் பேராசிரியர் இலக்குவனார் வழிகாட்டுதலில்   அண்ணாவால் தொடங்கப்பட்ட தி.மு.க.வும்  களமிறங்கியது. ஒரு கட்டத்தில் போராட்டத்தை அடக்குவதற்காகவும்   ஒடுக்குவதற்காகவும் அண்ணாவிடம் காவல்துறையினர் முறையிட்டார்கள். ஆனால் அறிஞர் அண்ணா அவர்கள் இந்தி மொழிப் போராட்டம் என்பது என்கையில் இல்லை. இது மாணாக்கர்களின் கையில்தான் உள்ளது; மாணாக்கர்களை வழிநடத்துவது பேராசிரியர் இலக்குவனார்தான் என்றார்.
தானுண்டு   தன்பணியுண்டு   தன்பெண்டு பிள்ளையுண்டு என்று வாழ்நாளைக் கழிக்கும் பேராசிரியர்கள் நடுவே தமிழ்மொழி   தமிழினம்   தமிழ்ப்பண்பாடு என வாழ்நாளை வாழ்வித்துக் கொண்டிருந்தார். அதற்காகத் தவறு செய்திடும் அரசையும்   அமைச்சர்களையும் எதிர்த்தும் பல கூட்டங்கள் நடத்தினார். மேலும் சங்க இலக்கியம் (கிழமை இதழ்),   இலக்கியம் (திங்கள் இருமுறை இதழ்), திராவிடக் கூட்டரசு (கிழமை இதழ்),   குறள்நெறி (திங்களிதழ்), குறள்நெறி (திங்கள் இருமுறை இதழ்),   குறள்நெறி (நாளிதழ்) எனப் பல்வேறு இதழ்களை நடத்தி மக்களிடம் தமிழ்உணர்வை ஊட்டினார். பெரும் பொருள் இழப்போடு நாட்டு மக்களின் விழிப்புணர்விற்காக மட்டுமே பாடுபட்டார். இவரது பணிகளால் எழுந்த மாணவர் படையால் பேராயக்கட்சிக்கு அச்சமும்   அதிர்ச்சியும் ஏற்பட்டன. அதனால் காவலர்கள் மூலமாகக் கண்காணிக்கப்பட்டும்   பொய்யான வழக்குப் போடப்பட்டும் சிறையில் அடைத்தார்கள். இவரோ சிறைக் கோட்டத்தை அறக்கோட்டமாக மாற்றினார்.
  இவரது செயல்களைப் புரட்சிப் பாவலர் பாவேந்தர் பாராட்டி மகிழ்ந்தார். மேலும் தமிழ் மொழியைக் காட்டுமிராண்டி மொழியெனச் சொல்லிவந்த பெரியார்க்குத் தமிழ்மொழியின் சிறப்பை எடுத்துக் கூறியதோடு மட்டுமல்லாது தமிழ்மொழியின் சிறப்பு நூலான திருக்குறளுக்கு முதல்முதலாக மாநாடு போடப் பெரிதும் துணை நின்றார் என்பது வரலாற்றுப் பதிவாகும். பேராசிரியர் அவர்கள் தமிழ்மொழியில் மட்டும் புலமை பெற்றிடாது ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார். அதற்குச் சான்றாக தமிழ்மொழியின் இலக்கண நூலான தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். இவருக்குப் பிறகு வேறு எவரும் இதுவரை சிறப்பாக மொழிபெயர்க்கவில்லை என்பதே இவரின் ஆங்கிலப் புலமைக்குச் சான்றாகும்.
   இவர் வெறும் எழுத்தை மட்டும் பதிவு செய்யாது களத்திலும் நின்றார். அதற்காகத் தமிழ்க்காப்புக் கழகம்,   திருக்குறள் பயிற்சிக் கழகம் ஆகியவற்றின் தலைவராகவும் தமிழ்நாடு பல்கலைக் கழக ஆசிரியர் பேரவையின் துணைத் தலைவராகவும்   குறள்நெறி இயக்கம்,   திருவள்ளுவர் கழகம்,   விருதைத் தமிழ்ச் சங்கம் ஆகியவற்றில் செயலராகவும் பொறுப்பேற்று திறன்பட வழி நடத்தினார். இவரது செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்ட அண்ணா அவர்களே “எங்களில் ஒருவராக வாருங்கள்’’ என்றார். ஆனால் இவர்தான் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் அன்றைக்கு ஏற்றுக் கொண்டிருந்தால் தமிழ்மொழியும்   தமிழ்மண்ணும் விடுதலையாகியிருக்கும். ஏனோ நம் கெடுநிலை இன்றைக்குத் தமிழே தெரியாதவர்கள் எல்லாம் உயர்பதவியில் அமர்ந்து கொண்டு நம்மைச் சாகடிக்கின்றனர். இவையெல்லாம் முற்றுப் பெற வேண்டுமாயின் 1965இல் ஏற்பட்ட புரட்சி வெடிக்க வேண்டும். 1965-இல் எப்படி பேராயக்கட்சி வேரோடு சாய்ந்ததோ அதுபோல் திராவிடம் எனப் பெயர்ப் பலகை தாங்கிவந்திடும் கட்சிகள் காணாமல் போக வேண்டும். அதற்குப் பேராசிரியர் இலக்குவனாரைப் போல் பொதுமக்களிடம் மொழி உணர்வையும்   இன உணர்வையும் தூண்டவேண்டும்; தமிழின் நலம் கெடும் இடங்களில் எல்லாம் அதை எதிர்த்துக் கிளர்ச்சிகள் செய்திட வேண்டும். இதைப் பேராசிரியர் இலக்குவனாரின் நூற்றாண்டு விழாவில் நாம் உறுதி ஏற்க வேண்டும் என ஒவ்வொரு தமிழனையும் கேட்டுக் கொள்கிறேன்.
வாழ்வும் வளமும் தமிழுக்கு என்றால்
            வாழ்வான் தமிழன் வையகம் எங்குமே
            தாழ்வும் தடங்கலும் தமிழ்க்கு நேர்ந்தால்
            தலைமுறை சாகுமே தழனிலே வேகுமே.
thalaippu-pughazhchelvi
பரணிப்பாவலன்
பரணிப்பாவலன்