Sunday, December 13, 2015

மங்காத் தமிழ் வளர்க்கும் மறைமலை இலக்குவனார்!


அட்டை-மீண்டும் கவிக்கொண்டல், நவம்பர் 2011attai_meendumkavikondal_nov.2011

மங்காத் தமிழ் வளர்க்கும் மறைமலை இலக்குவனார்!

திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்
என்னும் பாரதியார் நல்லுரைக்கிணங்க அயல்நாட்டாராலும் போற்றத்தகும் புலமையும் பிறர் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து உலகம் வணங்கச் செய்யும் தமிழ் வளமையும் மிக்க அருந்தமிழ்ச் சான்றோர் பேராசிரியர் இலக்குவனார் மறைமலை அவர்கள்.
  தமிழ்நாட்டில் சென்னை மாநிலக்கல்லூரியில் 30 ஆண்டுகளும் புறநகர்க்கல்லூரிகளில் 5 ஆண்டுகளும் கல்விப்பணி ஆற்றியதுடன் ஓராண்டுக்காலம் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாப் பல்கலைக்கழகத்திலும் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றி உள்ளார். அங்குப் பணியாற்றுகையில் அப்பல்கலைக்கழகம் சார்பில் பிற அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் சென்று தமிழ் விரிவுரை ஆற்றித் தமிழ் இலக்கியச் சிறப்புகளைப் பரப்பி உள்ளார்.
  திறனாய்வு முறையாலும் சொல்லாக்க நெறியாலும் இலக்கியக் கோட்பாட்டுவகையாலும் இவரின் படைப்புகள் சிறப்புற்று இவரின் பெருமையை உணர்த்தின. இலக்கியக் கொள்கை(1977), புதுக்கவிதை-முப்பெரும் உத்திகள்(1986), இலக்கியமும் சமூகவியலும்(1992), இலக்கியமும் உளவியலும்(1992), இலக்கியமும் மார்க்சியமும்(1992) ஆகிய இவரின் நூல்கள் இலக்கியக் கொள்கைகளை எளிமைப்படுத்திப் படிப்போரை நெறிப்படுத்துவனவாய் அமைந்துள்ளன. எனவே மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் ஆய்வாளர்களுக்கும் பிறருக்கும் பெரிதும் பயனுள்ள வழிகாட்டியாய் அமைவதாய் அறிஞர்கள் இந்நூலைப் பாராட்டி உள்ளனர்.
  இலக்கியத் திறனாய்வு-ஓர் அறிமுகம்(1979), புதுக்கவிதையின் தேக்க நிலை(1986),  சமூகவியல் நோக்கில் புதுக்கவிதை(1992), பெண்ணியத்திறனாய்வு(1995), அங்கதத்திற்கொரு தமிழன்பன்(2003), திறனாய்வுச் சுடர்(2004), வைரமுத்துவின் வைகறைமேகங்கள்(2011) ஆகியன திறனாய்வுத் துறையிலும் கவிதைத் துறையிலும் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளன. கவிதைத்திறனாய்வுடன் ‘தலைகீழ்’ என்னும் கவிதை நூலைப் படைத்துத் தாமும் கவிஞராகத் திகழ்கிறார்.
  ஆட்சிச்சொல்லாக்கம் குறித்து முனைவர் பட்டம் பெற்ற இவரின் நூலான சொல்லாக்கம்(2002) குறித்துக் குறிப்பிடுகையில், முதுமுனைவர் புலவர்மணி இரா.இளங்குமரன் அவர்கள் இவரைச் சொல்லாக்கவியல் பயன்பாட்டு முன்னோடி எனப் பாராட்டி உள்ளார்.
  தந்தையார், தமிழ்க்காப்புத் தலைவர் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் வழியில் அவர் புகழ் நினைவுகளைப் போற்றும் வகையில் தமிழ்த்தாயின் முன்னேற்றம் ஒவ்வொன்றும் தன் முன்னேற்றம் எனக் கருதி அயராது உழைக்கும் பேராசிரியர் மறைமலை, தம் தந்தையார் வாழ்க்கை வரலாற்று நூலையும் எழுதி உள்ளார். சாகித்ய அகாதமியின் இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை நூலில் சி. இலக்குவனார் என்னும் பெயரில் வெளிவந்த இந்நூல் பல மறு வெளியீடுகளாக வருகின்றது.
  ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் என்னும் இலக்கிய அமைப்பின் மூலம் வாழும் கவிஞர்களைப்பற்றிய திறனாய்வு உரை அரும் பெரும் முயற்சியாக அனைத்துத் தரப்பாராலும் பாராட்டு பெற்று வருகிறது. இதுவரை 100 பாவலர்களைப் பற்றி இவர் உரை ஆற்றி உள்ளார். வாழும் கவிஞர்களைத் தமிழ் நாட்டவர் மட்டும் அறிந்தால் போதாது என வாழும் கவிஞர்களின் பெயர்களில் இவரே வலைப்பூக்கள் தொடங்கி அவர்களின் பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து இணையத்தில் அறிமுகப்டுத்தி வருகிறார். பிற பேராசிரியர்களுக்கும் வலைப்பூப் பயிற்சி அளித்து வருகிறார். அம் மொழிபெயர்ப்புப் பாடல்களின் ஒரு தொகுப்பாக A CLUSTER OF STARS(2006) என்னும் ஆங்கில நூலையும் வெளியிட்டுள்ளார்.
  மாணவப்பருவத்திலேயே இதழ் நடத்தியும் தந்தையார் நடத்திய ‘குறள்நெறி’ இதழின் பொறுப்பாசிரியராகவும் ஆசிரியராகவும் திகழ்ந்த பேராசிரியர் இப்பொழுது ‘செம்மொழிச்சுடர்’ என்னும் மின்னிதழின் ஆசிரியராகத் திகழ்கிறார். அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், சப்பான், மோரீசியசு முதலான பல நாடுகளுக்கும் சென்று இலக்கியச்சொற்பொழிவுகள் ஆற்றி வருகிறார்.
”உலகத்தமிழ்மாநாடுகள் உட்பட பல்வேறு கருத்தரங்கங்களில் கட்டுரையாளராகவும் அமர்வுத் தலைவராகவும் பங்கேற்றுத் தமிழ்நெறி சார்ந்த கருத்துகளை வலியுறுத்தி வருகிறார்.
  பேரா.மறைமலை கார்த்திகை 29, தி.பி. 1977 / 1946 ஆம் ஆண்டு திசம்பர்த் திங்கள் 14 ஆம் நாள் திருநெல்வேலி மாவட்டம் சிந்துபூந்துறையில் பிறந்தார். பேராசிரியரின் மனைவி திருவாட்டி க.சுபத்ரா பொருளியல் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஒரே மகள் முனைவர் நீலமலர் செந்தில்குமார் அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிறார். மருமகன் முனைவர் ச.செந்தில்குமாரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார்.
  தமிழன்னையைக் காக்கும் போர்வாளாகவும் கேடயமாகவும் திகழ்ந்து வாழ்க்கைப் போரில் பல விழுப்புண்களைப் பெற்ற செம்மொழிச்சுடர் பேராசிரியர் சி.இலக்குவனாரின் திரு உருவப் படத்தைத் தாங்கி நவம்பர் இதழ் வருவதுண்டு. இந் நவம்பரில் அவரது வழியில் அயராமல் அருந்தமிழ்த் தொண்டாற்றி வரும் முனைவர் மறைமலை இலக்குவனார் அவர்களின் திரு உருவம் அட்டையை அணி செய்வது மிகப் பொருத்தமே. பேராசிரியர் வழியல் பெருந்தொண்டாற்றும் வாழும் பேராசிரியர் மறைமலை இலக்குவனார் நூறாண்டுகள் வாழ்ந்து தம் தொண்டினைத் தொடருவாராக!
– இளவல்
– மீண்டும் கவிக்கொண்டல், ஐப்பசி 2042 / நவம்பர் 2011
படங்களை அழுத்திப் பெரிதாகக் காண்க!

அட்டைப்படங்கள் : விக்கிபீடியா



Saturday, December 12, 2015

மனத்தில் பதிந்த மறைமலை இலக்குவனார் – ஏர்வாடி இராதாகிருட்டிணன்


அட்டை-கவிதைஉறவு, மறைமலைattai-kavithaiuravu-maraimalai

பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார்

– ஏர்வாடி இராதாகிருட்டிணன்


  பாவேந்தருடன் பழகுதற்கியலாத வாய்ப்பை உடன்பிறப்பு மன்னர்மன்னனுடனும் எழுத்தாளர் தமிழ்வாணனுடன் கிடைக்காத தொடர்பைச் உடன்பிறப்புகள் லேனா, இரவி தமிழ்வாணன் ஆகியோரிடமும், இசைமேதை சீர்காழியுடன் பெறாத தோழமைப் பேற்றினைத் தம்பி மரு.சிவசிதம்பரத்திடமும் பெற்றதைப் போல மூத்த தமிழறிஞர் மறைந்த பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் அவர்களுடன் பழகக் கிடைக்காத குறையை இறைவன் எனக்குப் பேராசிரியர் மறைமலையுடனான நட்பில் அருளியிருக்கிறான் என்கிற நிறைவு என் நெஞ்சில் நிரம்பவுண்டு.
  பேராசிரியர் மறைமலை அவர்களைப்ப்றறி நான் எழுதுகிற தருணம்கூடப் பேராசிரியர் இலக்குவனார் நூற்றாண்டைத் தமிழகம் கொண்டாடுகிறபோது அமைவது இன்னும் சிறப்பானது. ஐயா மறைமலை அவர்களும் நானும் சென்னைத் தமிழில் சொல்வதானால் ஒரே பேட்டைக்காரர்கள். சென்னை அண்ணாநகர் வாசிகள். சென்னையில் நடக்கும் எந்த இலக்கிய விழாக்களிலும் எங்கள் இருவரையும் இணைந்தே காணலாம். சேர்ந்து வருவதும் சேர்ந்து போவதும் மட்டுமன்றிப் பல செய்திகளில் சேர்ந்தும் சிந்திக்கிற ஒத்த உணர்வுடையவர்கள் நாங்கள்.
  அவரிடம் எனக்குப் பிடித்த பண்புகளில் தலையாயவை அவருடைய எளிமையும் இனிமையும்தான். இப்பண்புகள் அவரை என் இதய இமயத்தில் வைத்துள்ளன. ஆற்றல்களெல்லாம் அதற்குப் பிறகுதான். அன்பு உடன்பிறப்பு பேராசிரியர் மறைமலை அவர்கள் மாற்றாரிடம் காணும் மிளகளவுத் திறனைக்கூட மலையளவு பாராட்டி மகிழும் மாண்புடையவர். இப்பண்பு இன்னும் அதிகமாய் இவரிடம் எனக்கு ஈர்ப்பினை ஏற்படுத்தியதாகும். இந்தப் பண்பின் பெருவிளைவுதான் இன்றளவு ஏறத்தாழ 108 வாழும் கவிஞர்களை வரலாற்றில் வரவு வைக்கும் வளர்தமிழ்ப்பணியான அவர்தம் கவிதைகளின் திறனாய்வு. என்னுடைய கவிதைகளும் ஒருமுறை இவரது மதிப்பீட்டில் வருகிற மாண்பினை இந்நிகழ்ச்சியால் பெற்றன.
  1995 ஆகத்துத்திங்களில் இவர் வழங்கும் வாழும் கவிஞர் திறனாய்வு தொடங்கிற்று. பேராசிரியர் முனைவர் சாலை இளந்திரையன் கவிதைகள் அந்த முதற்பேற்றினைப் பெற்றன. மகிழ்ந்து நெகிழ்ந்த சாலையார் ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றத்திற்கு எழுதிய மடல் மறைமலை அவர்களின் தமிழ்த்தொண்டினை உற்சாகப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது; இன்றுவரை தொடர்வது தமிழ் ஏற்றம் பெறுதற்குரிய இவர்தம் பங்களிப்பாய்த் திகழ்கிறது.
  மறைமலை அவர்களின் மனம் விசாலமானது என்பதுபோல அவரது மதிப்பீடுகளில் வெளிப்படுத்தும் அவர்தம் புலமையும் விரிந்தது, பரந்தது. படித்தவற்றை மதிப்பிடுவது மட்டுமல்ல, முனனேர தாம்படித்து வைத்துள்ள செய்திகளைத் தொடர்புபடுத்திச் சீர்தூக்குவது சிறப்பான பொழிவு துய்ப்பறிவாக அவருக்கும் கேட்டுப் பயனுறும் சுவையான விருந்தாக நமக்கும் மதிப்பு பெருகிற வாய்ப்பாகக் கவிஞர்களுக்கும் அமைவது குறிப்பிடத்தக்கது.
 மாதந்தோறும் சென்னை எசுபிளனேடு ஒய்.எம்.சி.ஏ. அரங்கில் ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றச் செயலாளர் திரு கே.பக்தவத்சலம் ஏற்பாட்டில் தவறாமல் நிகழ்ந்து வரும் இக்கவிதைத் திறனாய்வில் என்னுடைய கவிதை நண்பர்கள் பலரது கவிதை நூல்களையும் திறனாய்வு செய்து இந்தவரலாற்றுச் சிறப்பு மிக்கப் பணியில் பதிந்துள்ளார். மறைமலை அவர்கள். இவரது ‘வாழும் தமிழ்க்கவிஞர்கள் தொடர் சொற்பொழிவு’ கவிஞர்களுக்கு மணிமகுடம் சூட்டி மேருவில் அமர்த்தும் முயற்சியாகும்.
  பேராசிரியர் மறைமலை அவர்கள் மற்றுமொரு சிறந்த பண்பினை மனமுவந்து செய்து வருகிறார். புகழ்வாய்ந்த கவிஞர்கள் சிலருக்குக் கணிணியில் வலைப்பூக்கள் வடிவமைத்து அவர்களது வாழ்க்கை வரலாறு, அவர்தம் சிறந்த கவிதைகள், படைப்புகள் ஆகியவற்றை உலகப் படிப்பில் விரித்துப் பலருக்குப் பயன் விளைவிப்பது போற்றுதலுக்குரிய பணியாகும். ஆங்கிலத்திலும் தமிழிலுமாக இந்த வலைப்பூக்களில் கவிதைகள் வலம் வருகின்றன.
  உலக மொழிகளில் தமிழில்தான் அதிகமான வலைகளும் வலைப்பூக்களும் கணிணிப்பயன்பாடும் உள்ளதாக அறிவதில் மகிழ்ச்சியும் பெருமையும் நமக்கு மிகுதியாகிறது. கவிக்கோ அப்துல்இரகுமான், கவிஞர்கள் தமிழன்பன், வைரமுத்து, அமுதபாரதி, அறிவுமதி, வா.மு.சே., வேழவேந்தன்,   என வளரும் பட்டியலில் எனக்கும் ஒரு வைலப்பூ முடித்துச் சிற்பித்திருக்கிறார் மறைமலை அவர்கள். இதுவரை இவர் தொகுத்த வலைப்பூக்களின் எண்ணிக்கை 33. இன்னும் வளர நாம் வாழ்த்த வேண்டும். இந்த வலைப்பூக்களில் கவிஞர்கள் தாங்களே தங்கள் கவிதைகளை மேலும்மேலும்சேர்த்துக் கொள்ளலாம். எப்படியென்று சொல்லித்தர பேராசிரியர் மனம் சலித்துக் கொள்வதில்லை. தொலைபேசினால்கூடப் போதும்.
  பேராசிரியர் மறைமலை அவர்கள் சென்னை மாநிலக்கல்லூரியில் 29 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். குடியாத்தம், திருவண்ணாமலை, கோவை, கிருட்டிணகிரி, சேலம், சென்னை-நந்தனம் ஆகிய நகரங்களில் உள்ள அரசு கலைக்கல்லூரிகளிலும் பணியாற்றியவர். வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் பலவற்றில் வருகை தரும் பேராசிரியராகவும் பணியாற்றுகிறார். அவற்றுள் கலிபோர்னியா பல்கலைக்கழகம், சிங்கப்பூர் சிம் பல்கலைக்கழகம், மலேசியப் பல்கலைக்கழகம் ஆகியன குறிப்பிடத்தக்கன.
  பணியில் அமர்ந்து பணியாற்றிய நிறுவனங்களைப் போலவே பேராசிரியர் மறைமலை பதவியில் அமர்ந்து பெருமை சேர்த்த அமைப்புகளும் பல உள்ளன. மாநிலக்கல்லூரி ஆய்வுக்கருத்தரங்கு அமைப்பாளராக முதுநிலைப் பாடங்களுக்குப் பணியாற்றியுள்ளார். பாடத்திட்டக்குழு உறுப்பினராகப் பங்கேற்றுள்ளார். மருத்துவச் சொல்லகராதி தயாரிப்பு வல்லுநர் குழு உறுப்பினர், புதுவைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை மேம்பாட்டுத் திட்ட அறிவுரைக்குழு உறுப்பினர் போன்ற பதவிகளுக்கும் பெருமை சேர்த்துள்ளார். குறள்நெறி இதழின் ஆசிரியர் – வெளியீட்டாளர் என்ற நிலையிலும் தமிழ்த்தொண்டு புரிந்திருக்கிறார். அலுவலர் – மாணவர் கூட்டுறவுச் சங்கச் செயலராகவும் பணியாற்றியுள்ளார்.
  கல்வி அறிவுரைஞராகவும் உலகச் சொல்லகராதி மற்றும் இலக்கணச் சங்கம், இந்தியத் திராவிட மொழியியல் சங்கம் ஆகியவற்றில் உறுப்பினராகவும் உலகளாவிய தமிழ்த்தகவல் தொழில்நுட்பக் கழகம், உலக அறிவியல் இதழ் அறிவுரைஞர் குழு ஆகியவற்றில் செயற்குழு உறுப்பினராகவும் பணியாற்றுகிறார்.
  தமிழில் சிறந்த நூல்கள் சிலவற்றை எழுதியுள்ளார். அவற்றுள் இலக்கியக் கோலங்கள், புதுக்கவிதையின் தேக்கநிலை, இலக்கியத்திறனாய்வு – ஓர் அறிமுகம், சொல்லாக்கம் ஆகியன குறிப்பிடத்தக்கவை. தன் தந்தையின் வாழ்க்கை வரலாற்றைத் தந்துள்ளார். இந்நூல் சாகித்திய அகதமியால் வெளியிடப்பட்டுள்ளது. இவர் தமிழில் சிறந்த கவிதைகளைத் தேர்ந்து மொழிபெயர்த்துத் தாமே வெளியிட்டுத் தமிழ்க்கவிதைகளுக்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைக்க உதவியது குறிப்பிடத்தக்கது. சொல்லாக்கம் குறித்த இவரது நூல் புகழ் வாய்ந்தது. மிகச்சிறந்த இந்த ஆய்வுநூல் தமிழில் சொல்லாக்கம் குறித்த முயற்சிகளுக்கும் பணிகளுக்கும் வெளிச்சம் பாய்ச்சியுள்ளது. பல்வேறு நூல்கள், ஆவணங்கள், கட்டுரைகள் போன்றவற்றைக் கற்றாய்ந்து தந்துள்ள கடின உழைப்பிது. மறைமலை அவர்களின் திறனுக்கும் தளர்வறியா உழைப்புக்குமான சான்று இந்நூல். பல்கலைக்கழக ஆய்வு மாணவர்கள் பலருக்கு ஆய்வு மேற்பார்வையாளராகப் பணியாற்றி உதவியிருக்கிறார்.
  பேராசிரியர் மறைமலை அவர்கள் சிறந்த இலக்கியப் பொழிவாளர். நல்லதை நன்றாகப் பேசக்கூடிய நல்ல பேச்சாளர். ‘வாழுந்தமிழ்க்கவிஞர்கள்’ தொடரைப்போலவே ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றத்தில் இராவண காவியச் சொற்பொழிவை 23 நாள்கள் தொடராக நிகழ்த்திய பெருமைக்குரியவர். வாழும்போதே கவிஞர்களை வாழ்த்திப் பெருமைப்படுத்த வேண்டமென்கிற இலக்குடைய பேராசிரியர் மறைமலை அவர்கள் தம்முடைய பொழிவுகளில் வாழும் கவிஞர்தம் வரிகளை அவர்தம் பெயர்கூறி மேற்கோள் காட்டுகிற பரந்த மனமும் புலமையும் போற்றுதற்குரியன.
  கணிணிப்பயன்பாட்டில் பெரிதும் ஈடுபாடு காட்டுகிற தமிழறிஞர்களில் முதலிடம் வகிக்கிறார் என்றுகூட மறைமலை அவர்களை மனம் திறந்து பாராட்டலாம். மறைமலை அவர்கள் எண்மக் காணொளி(digital video) உருவாக்கத்திலும் பட்டயம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. என்னுடைய தமிழாசான் என்பதுபோலவே என்னுடைய கணிணி ஆசானும் இவர்தான். எனக்கு மின்னஞ்சல் அறிவூட்டுவதுமட்டுமின்றிக் கணிணிப்பயன்பாட்டையும் கற்றத்தருகிறார். எந்த இரவிலும் அழைத்து ஐயம் அகற்றிக் கொள்ளும் இசைவை நானே இவரிடம் வலியுறுத்திப் பெற்றுக்கொண்டிருக்கிறேன். அதிகமான ஐயங்கள் என்றால் ஐயா மறைமலை அரைக்கல் தொலைவு நடந்துஎன் இல்லத்துக்கே வந்து கற்றுத்தருவார். அவருக்கு இதுவொரு நடைப்பயிற்சி என்பதுபோல எனக்கு அவரில்லத்திற்கு நடந்து போகும்போது நடைப்பயிற்சி மட்டுமல்ல நல்ல தமிழ்ப்பயிற்சியும் கிடைக்கும்.
  இல்லறம் இவர்க்கு இனியது. அன்பே உருவாக அம்மையார் திருமதி சுபத்திரா மறைமலை இவர்தம் வாழ்க்கைத் துணைவியார். இவர் சென்னை காயிதே மில்லத்து கல்லூரியில் பொருளியல்துறைப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்களின் அன்புப் புதல்வி முனைவர் திருமதி நீலமலர்; அண்ணா பல்கலைக்கழகத்தில் இதழியல் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். நீலமலரின் திருவாளர் முனைவர் வே.செந்தில்குமார் அவர்களும் அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறிநுட்பவியல் பேராசிரியராகத் திகழ்கிறார். பேரன் குருபரன், பேத்தி உதயமலர், மறைமலை அவர்களின் அதிகப்டச நேரத்தை ஆனந்தமயமாக்குவது இம் மழலைப் பூக்கள்தான்.
  புலவர்களோடு பார்க்கலாம் அல்லது பேரக்குழந்தைகளோடு பார்க்கலாம் எனுமாறு சீர்மிகுந்த தமிழறிஞராகவும், சிறந்த தாத்தாவாகவும் திகழ்கிறார் பேராசிரியர் மறைமலை அவர்கள். இவர்தம் அன்பு இளவல் திருவள்ளுவர். தமிழ்நாடு அரசு தமிழ்ப்பண்பாட்டுத்துறையில் துணை இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். நாள்தோறும் இவர் நண்பர்களுக்கு இலக்கியக் காட்சிகளையும் திருக்குறள்கோட்பாடுகளையும் குறுஞ்செய்தியாக (SMS) அனுப்பித் தமிழ்ப்பணி செய்து வருகிறார். பேராசிரியர் இலக்குவனார் எனும் தமிழ்த்தரு கிளைவிட்டுச் செழித்துத் தமிழ்நிலத்தின் நிழலாகத் துலங்குதல் பார்த்து நெஞ்சம் நிறைகிறது தமிழகமும் தமிழ்ச்சமூகமும். தமிழின் வளத்தினும் மேலாய்த் தமிழின் நலம் பாடிய நற்றமிழவர் இவர்.
  தேமதுரத் தமிழோசை தேசமெங்கும் பரவும் வகை செய்கிற மறைமலை இலக்குவனார் மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற நாடுகள் பலவற்றிற்குச் சென்று சிறப்பித்துத் திரும்பியிருக்கிறார். மொழியியல் ஆய்வில் முனைவர் பட்டம் பெற்ற மறைமலை அவர்களுக்குச் சமற்கிருத ஞானமும் உண்டு; சென்னைப்பல்கலைக்கழகத்தின் பட்டயத் தேர்வு பெற்றுள்ளார். ஆங்கிலப்புலமையும் இவரிடத்தில் அற்புதமாய் அமைந்துள்ளது.
  பன்முக ஆற்றலும் பண்புகளின் செறிவும் இந்தப் பைந்தமிழளாரின் பெருமைக்குப் பெருமை சேர்க்கின்றன. பழகுதற்கினிய பேராசிரியர் மறைமலை அவர்களின் நட்பு கிடைத்ததில் நெஞ்சம் நிறைகிறவன் நான். எளிமையாகவும் இதமாகவும் எவரும் அணுகும் வண்ணம் இனியைமாகவும் பேசுகிற பழகுகிற இவரை நீங்கள் சந்திக்க நேர்ந்தால் உங்கள மனத்திலும் பதித்துக் கொள்வீர்கள்.
  பேராசிரியர் இலக்குவனார் தமிழகத்திற்குத் தந்த இலக்கியச் செல்வங்களைப்போலவே தமிழகம் அவரிடமிருந்து பெற்றுள்ள மறைமலை, திருவள்ளுவர் ஆகிய இலக்கியச் செல்வங்களும் நிறைந்த புகழைப் பெற்றவர்கள். இவர்போல யாரென்றால் இவர்மட்டுமே எனுமளவு வாழும் இந்த வரலாற்றின் வயது அறுபத்து மூன்றுதான் (14.12.2009). இது இன்னும் நூறாகப் பெருகி நலமாக வாழ வாழ்த்துகிறேன்.
– ஏர்வாடி இராதாகிருட்டிணன்
கவிதை உறவு, மார்கழி 2040 / திசம்பர் 2009 பக்கங்கள் 15-18
ervadi rathakrittinan01



Tuesday, December 08, 2015

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 09: ம. இராமச்சந்திரன்


இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 09: ம. இராமச்சந்திரன்


தலைப்பு-இலக்குவனார்கவிதைகள் : ilakkuvanar kavithaikal_or_aayvu_thalaippu

09
 இலக்குவனார் ஆசிரியராகப் பணியாற்றிய தொடக்கக் காலத்தில் குறுங்காவியம் ஒன்று பாடியுள்ளார். (குறிப்பு : ஆய்வாளர் கவனக்குறைவால் இவ்வாறு தெரிவித்துள்ளார். இவர் குறிப்பிடும் குறுங்காவியம் இலக்குவனார் புலவர் மாணாக்கராக இருந்த பொழுது எழுதப்பெற்றது.) இக்கதைப் பாடல் முழுவதும் அகவற் பாவால் எழுதப் பெற்று பதிப்பும் செய்து வெளியிட்டிருக்கிறார்கள். ஆயின் அக்கவிதை ஆய்வாளர் கைக்குக் கிட்டவில்லை.
 தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை வெளியிட்டுள்ள ‘தமிழ் நூல் விவர அட்டவணையில் மேற்படி கதைப்பாடல் பற்றிய தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் திரு. சு. செல்லப்பன் அவர்களைப் பொதுப் பதிப்பாசிரியராகக் கொண்டு 1983இல் வெளியிடப்பட்டுள்ளது. எழிலரசி அல்லது காதலின் வெற்றி14 என்பது கதைப்பாடலின் பெயர்.
 ஆங்கிலக் கவிஞர் கீட்சு எழுதிய இசபெல்லா நூலைத் தழுவி எழுதப்பட்ட கதைப்பாடல் ‘எழிலசி’. 1954இல் கவிஞர், நாம் பதிப்பித்து வெளியிட்டுள்ள ‘துரத்தப்பட்டேன்’15 என்ற கவிதை நூலின் பின் அட்டையில் கவிஞர் வெளியிட்டுள்ள கவிதை நூல் வரிசையில் எழிலரசி முதலாகக் குறிக்கப்பட்டுள்ளது.
  விருதுநகர் செந்திற்குமார நாடார் கல்லூரிப்பணியினின்றும் நீக்கப்பட்ட நிகழ்ச்சியை, தன் உள்ளக் குமுறலை ‘துரத்தப்பட்டேன்’ என்ற தலைப்பில் அகவல் பாடியுள்ளார். ஆற்றுப்படைக் கவிதை ஒன்றும் பாடியுள்ளார். இதுவும் அகவற்பாவால் ஆகியது. 1959 ஆம் ஆண்டில் புதுக்கோட்டை வள்ளல் பு.அ. சுப்பிரமணியரை பாட்டுடைத் தலைவராகக் கொண்டு ‘மாணவர் ஆற்றுப்படை’ பாடப் பெற்றுள்ளது.
  1967ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் பெரும்பான்மையான இடங்களைப் பெற்றது. தமிழ்நாட்டின் ஆட்சித் தலைவராக -முதல்வராக- அறிஞர் அண்ணாதுரை அவர்கள் பொறுப்பேற்றார்கள். காட்சிக் கெளியராய் கடுஞ்சொல் அற்றவராய்ப் பலரும் பாராட்டும் வண்ணம் ஆட்சி நடத்தினார். மகிழ்ச்சிக்குப் பின் துன்பம் என்பதைப் போல 1968ஆம் ஆண்டில் கொடிய நோயான புற்றுநோய் அவரை ஆட்கொண்டிருந்த செய்தி கிடைத்து, நாடே துன்புற்றது. அறிவியல் உலகின் முன்னோடி நாடான அமெரிக்காவுக்குச் சிகிச்சை பெறச் சென்றார் அண்ணா. மணிவிழாக்கொண்டாட இன்னும் ஓராண்டே இருக்கும்போது இத்தகைய சொல்லொண்ணாத் துன்பத்திற்கு ஆளானார். அத்துயரினின்று மீண்டு நலம் பெற்று தமிழகம் திரும்ப வேண்டும். இன்னும் பல நல்ல திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று இலக்குவனார் விரும்பினார். அந்த எண்ணத்தின் விளைவே ‘அறிஞர் அண்ணாவிற்குப் பாவியல் வாழ்த்து’16 என்னும் கவிதையாகும். இருமொழித் திட்டம் கொணர்ந்தமையையும், தன்மதிப்பு மணச்சட்டம் இயற்றியமையையும், தமிழ் மக்கள் வாழும் நிலத்திற்குத் ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டியமையையும் பாராட்டிப் பாடியுள்ளார்.
 அகவற்பா தவிர வெண்பாவும் கலிப்பாவும் வஞ்சிப்பாவும் பாடியுள்ளார் இலக்குவனார். தமிழர் தலைவர்களான தந்தை பெரியர் ஈ.வே.இராமசாமி, உமா மகேசுவரம் பிள்ளை, மறைமலையடிகளார், திரு.வி. கல்யாண சுந்தரர் ஆகியோர் பற்றிப் பாடியுள்ளார். நாவலர் சோமசுந்தரப் பாரதியார் மறைவு குறித்த இரங்கல் வெண்பா ஒன்றும் பாடியுள்ளார். அழக்பபச் செட்டியர் நினைவு குறித்து வெண்பாப் பாடியுள்ளார். இந்தியாவின் முன்னாள் தலைமையமைச்சர் நேரு, அண்ணா ஆகியவர்கள் மறைவு குறித்து நீண்ட இரங்கல் அகவல் பாடியுள்ளார்.
  முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம், அறிஞர் கோ.து.நாயுடு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் காமராசர், கருணாநிதி ஆகியோர்க்குப் பிறந்தநாள் வாழ்த்துக் கவிதைகள் பாடியுள்ளார். தைத்திங்கள் தோறும் பொங்கல் வாழ்த்துக் கவிதைகள் பாடியுள்ளார். தன்னுடன் பயின்ற ஒரு சாலை மாணவர் திரு. அ. கிருட்டிணமூர்த்தி மற்றும் சிலர்க்கு திருமண வாழ்த்துக் கவிதைகள் இயற்றியுள்ளார். தன்னுடைய வாழ்க்கைப் பாதையில் உற்றுழியும் உதவியவர்களுக்குப் படையல் கவிதைகள் யாத்துள்ளார்.
  இந்தி மொழித்திணிப்பை எதிர்த்துச் சிறை சென்ற நாவலர் இரா. நெடுஞ்செழியன், இந்தி வல்லாண்மையில் கொடுமையை எண்ணித் தம்மையே தீக்கிரையாக்கிக் கொண்டே செந்தமிழ் மறவன் சின்னச்சாமி ஆகியோரையும் பாடியுள்ளார்.
  தமிழ் நலம் காத்து ‘தமிழ்நாடு’ இதழ் நடத்திய கருமுத்து தியாகராசச் செட்டியார், பைந்தமிழ்க் கவிபாடிய அ.கி. பரந்தாமனார்பற்றியும் பாடியுள்ளார். கல்வியின் சிறப்பு குறித்து கீர்த்தனைப் பாடல் ஒன்றும் பாடியுள்ளார்.
  இலக்குவனார் கவிதைகள் உயிரோட்டம் உள்ளவை. உயர்ந்த நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டவை. உணர்ச்சி மிக்கவை. தமிழ்ச் சமுதாயத்தின் நலனுக்காகத் தோன்றியவை. தமிழ்ச் சமுதாயத்தினின்று இலக்குவனாரைப் பிரித்து அறிய முடியாது. தமிழ்க் கவிதை வரலாற்றில் இலக்குவனாருக்குச் சிறப்பான ஓர் இடம் உண்டு. மலரும்மணமும்போலக் கவிதையும் இலக்குவனாரும் இயைபு கொண்டவர்கள். இயல்பாகவே பாடும் ஆற்றல் பெற்றவர் இலக்குவனார். காலமும் இடமும் சூழலும் கவிஞன் பாடுவதற்குத் தூண்டுகோல் ஆகின்றது.
  ‘எழுத்து என்பது இலக்குவனாரைப் பொருத்த அளவில் கவிதையாகும். எந்த ஒரு செய்தியையும் கேள்விப் பட்ட மாத்திரத்தில் அகவல் நடையில் எழுதிவிடுவார்.17
 இலக்குவனார் உரைநடை  செய்யுள் நடை போல திட்ப நுட்பம் செறிந்து விளங்குகிறது. ஓசை நயம் பொருந்திப் படிப்போர்க்குத் கழிபேருவகை ஊட்டும் தன்மை உடையதாய் விளங்குகிறது. ‘கரும வீரர் காமராசர்’ என்னும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள உரைநடை நூல் வரலாற்றுக் குறிப்புகள் நிறைந்து காணப்படுகிறது. அகவல் ஓசை பொருந்தி அமைந்துள்ளது. செய்யுள் நூல்போலச் செவிக்கு இன்பம் பயக்கின்றது.
எடுத்துக்காட்டாக
மக்கள் வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் தமிழே முதன்மை பெற வேண்டும். கல்வி மொழி தமிழாக வேண்டும். அரசு செய்யும் மொழி தமிழாக வேண்டும். இன்றைய வழிபடும் மொழி இன்றமிழாக வேண்டும். வீட்டில் தமிழ், வெளியில் தமிழ், ஆட்சியில் தமிழ், தெருவெல்லாம் தமிழ் முழக்கம், தேயமெல்லாம் தமிழ் முழக்கம்’18 என்ற பகுதியில் அறிந்து மகிழலாம்.
  இலக்குவனார் பாடியுள்ள கவிதைகளில் நாற்பத்தைந்து கவிதைகளை மட்டும் ஆய்வாளர் தம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளார். கவிதையின் எண்ணிக்கை குறைவு என எண்ண வேண்டா. எண்ணிக்கையை வைத்தா நாம் கவிதைகளை மதிப்பிடுகின்றோம்? அல்லவே.
 ‘சங்கக் காலத்துப் புலவர்களின் இலக்கிய வன்மை மென்மைகளைப் பாட்டின் எண்ணிக்கையை வைத்து அளக்கலாகாது. அளக்க முடியாது. நூறு பாடியோர் பாவின் வனப்பும் ஒன்று பாடியோர் பாவின் வனப்பும் சங்கத் தன்மையனவாகவே உள’19 என்னும் முனைவர் வ.சுப. மாணிக்கம் அவர்கள் கூற்று எண்ணிப் பார்க்கும் தகுதியுடையது. எனவே, கவிதையின் சிறப்பை அளவாகக் கொண்டு மதிப்பிடுவோம்.
 ஒரே ஒரு பாடல் பாடி சிறப்பு அடைந்தவர்களும் சங்கப் புலவர் வரிசையில் இடம் பெற்றுள்ளனர். முரஞ்சியூர் முடிநாகராயர், பாண்டியன் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன், பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், சோழன் நல்லுருத்திரன், ஆதிமந்தியார், பாண்டியன் தேவி கோப்பெரும் பெண்டு, காவிரிப்பூம் பட்டினத்துப் பொன் வனிகனார் மகனார் நம்பூதனார், காரிகிழார், இரணிய முற்றத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் முதலிய புலவர்கள் ஒரே ஒரு பாடல் பாடி சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
  பாடல் அல்லது கவிதை என்று சொல்லும் போது இரண்டு அடிகளையுடைய குறட்பாவும் ஒரு கவிதைதான். அறுநூற்று ஐம்பத்தேழு அடிகளையுடைய ‘துரத்தப்பட்டேன்’ என்ற அகவலும் எண்ணிக்கையில் ஒரு கவிதை தான். நான்கு அடிகளையுடைய இரங்கற்பாவும் 20 (நாவலர் சோம சுந்தர பாரதியார் மறைவு குறித்துப் பாடியது) ஒரு கவிதை தான்.
ஆய்வில் இடம் பெறும் கவிதைகளுக்குரிய அடிகளின் எண்ணிக்கை 1745 ஆகும்.
குறிப்புகள்
  1. சி. இலக்குவனார், எழிரலசி அல்லது காதலின் வெற்றி, `தமிழ் நூல் விபர அட்டவணை’ 1931-35 ஏழாம் தொகுதி, இரண்டாம் பகுதி, சென்னை 1983, ப-573.
  2. சி. இலக்குவனார், துரத்தப்பட்டேன், இலக்கியப் பண்னை, புதுக்கோட்டை, 1954, ப-28.
  3. சி. இலக்குவனார் அறிஞர் அண்ணாவிற்குப் பாவியல் வாழ்த்து, குறள்நெறி வெளியீடு, மதுரை, செப்டம்பர், 1968.
  4. நா. காமராசன், நேர்காணல்-3, நாள்; 4.10.87
  5. சி. இலக்குவனார், கரும வீரர் காமராசர், நாஞ்சில் புத்தகமனை, நாகர்கோவில் 1956, பக். 65-66.
  6. முனைவர் வ.சுப. மாணிக்கம், தமிழ்க்காதல், பாரி நிலையம், சென்னை 1962, ப-329
  7. சி. இலக்குவனார், நாவலர் பாரதியார் நினைவு மலர்,
திருவள்ளுவர் கழக வெளியீடு, மதுரை 1960, ப-3.