Sunday, July 09, 2017

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீங) – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல 193, ஆனி 18, 2048 / சூலை 02, 2017

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீங)


  பேராசிரியர் திருப்பரங்குன்றம் தொகுதியில் நிற்பதாக அறிவித்ததால், வாக்குகள் பிரிந்து ஓரிடத்தை இழக்க வேண்டி வரும் எனத் தி.மு.க.தலைவர்கள் அஞ்சினர். பிற இடங்களிலும் பேராசிரியர் ஆதரவின்றி வெற்றி வாய்ப்பை இழக்க நேரிடும் என்று கவலைப்பட்டனர். எனவே, போட்டியிடும் அறிவிப்பைத் திரும்பப் பெறுமாறும் தம் பரப்புரையால் நாடு தழுவிய வெற்றியைத் தி.மு.க.விற்கு ஈட்டித் தருமாறும் வேண்டினர். பேராசிரியர் இலக்குவனார் தி.மு.க. தன்னை ஆதரிக்கட்டும் என்றார். தேர்தல் இல்லாமலேயே பேராசிரியரை நாடாளுமன்ற (மாநிலங்களவை) உறுப்பினர் ஆக்குவதாகவும் அவர் போட்டியிடக்கூடாது என்றும் வேண்டினர். “தமிழுக்குச் சமஉரிமை தராத இந்தியஅரசின் நாடாளுமன்றத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்பது தம் கொள்கை என்பதால், மாநிலங்களவை உறுப்பினராக உடன்படவில்லை” எனப் பேராசிரியர் இலக்குவனார் தெரிவித்து விட்டார். (பின்னாளில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பேரவைத்தலைவராகவும் அமைச்சராகவும் திகழ்ந்த) சேலம் க.இராசாராம் அவர்களே மூன்றுமுறையேனும் வந்து இது குறித்துப் பேசியிருப்பார். எனினும் தி.முக.தலைவர்களின் தொடர் வேண்டுகோள்களால் பேராசிரியர் சட்ட மன்றத் தேர்தலில் போட்டியிடும் திட்டத்தைக் கை விட்டார். தம் சொந்தச் செலவில் வந்து பரப்புரை மேற்கொள்வதாகப் பலர் தெரிவித்த பொழுதும் மாபெரும் வெற்றி பெறலாம் என மாணவர்கள் நம்பிக்கையுடன் வேண்டிய பொழுதும் பேராசிரியர் இலக்குவனார் தமிழ்நலன் கருதித் தேர்தலில் போட்டியிடவில்லை என உறுதியாகத் தெரிவித்தார். இது குறித்துப் பேராசிரியர்,
“தேர்தலில் தி.மு.க.வை எதிர்த்து நிற்க விரும்பவில்லை. அவ்வாறு நிற்பதற்குப் பலர் தூண்டியதுண்டு. தி.மு.க.வின்பால் கொண்டிருந்த ஆழ்ந்த பற்று அதனை வெறுக்க இடம் கொடுத்திலது. தி.மு.க.வின் வெற்றிதான் தமிழின் வெற்றி என்று கருதிப் பல  தொகுதிகட்குச் சென்று தி.மு.க.வுக்கும் கூட்டணிக்கும் சார்பாகச் சொற்பொழிவாற்றினேன்.”
எனக் குறிப்பிட்டுள்ளார்.
  தி.மு.க.தலைவர்களுக்கு எதிர்பாராப் பரிசாக ஆனால், உணர்வாளர்களும் மாணவர்களும் எதிர்பார்த்தபடியும் பேராசிரியர் இலக்குவனார் அடுத்து ஆட்சி அமைக்கப்போகும் தி.மு.க. என்று அடிக்கடி குறித்தவாறும் தி.மு.க. ஆட்சியைப் பிடித்தது. ‘ஆட்சியை மாற்றுவோம் வாரீர்’  என அழைத்துப் பாட்டரங்கம் வெளிவந்து கொண்டிருந்ததற்கு ஏற்ப, தமிழ்ப் பகையாட்சி மாற்றப்பட்டுத் தமிழ்க்  காப்பு ஆட்சி அமைந்து விட்டது. (குறள்நெறியும் ஓவு பெற்றது.)  ஆனால், அவர் உழைப்பால் அறுவடை செய்த ஆட்சிப் பரிசைப் பெற்றிருந்தும் அவருக்கு உயர்வான பதவிகள் தரவேண்டும் என்ற எண்ணம் தி.மு.க.வினருக்கு எழவில்லை; பதவி பறிக்கப்பட்ட பேராசிரியருக்கு மீண்டும் பதவி வழங்கப்பட வேண்டும் என மாணவர்கள்     வேண்டினர்; தமிழ்நாட்டின் வெவ்வேறு கல்வி நிலையங்களில் மாணவர்கள் கூட்டம் கூட்டிப் பேராசிரியருக்கு உடனே பதவி தரவேண்டும் எனத் தீர்மானம்  இயற்றி அரசிற்குத் தெரிவித்தனர். முந்தைய பதவியைத் தருவதே சிறப்பு என எண்ணிய மூத்த தலைவர்கள் மீண்டும் தியாகராசர் கல்லூரியிலேயே அவரைப் பணிமர்த்தம் செய்ய வேண்டும் எனக் கூறினர்.  பேரறிஞர் அண்ணா, அரசிடம் பல பதவிகள்  இருக்கும் பொழுது தனியாரை ஏன் நாட வேண்டும் என்றார்.  துணைவேந்தராகவேனும் அவரை அமர்த்தி யிருந்தால் தமிழ்வழிக் கல்வியை எப் பொழுதோ நடைமுறைப் படுத்தி இருப்பார்; தமிழன்னை அகம் குளிர்ந்திருப்பாள். ஆனால்,  ஆட்சிக்குப் புதுமுகங்கள் என்பதால் எதை எவ்வாறு செய்ய வேண்டும் என்ற பட்டறிவின்மையால், தக்கன செய்யத் தடுமாறினர்.
(தொடரும்)
– இலக்குவனார் திருவள்ளுவன்

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (9) – வல்லிக்கண்ணன்



அகரமுதல 193, ஆனி 18, 2048 / சூலை 02, 2017


ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (9)

2.தமிழ் முழக்கம் (தொடர்ச்சி)

 ‘தமிழ் நடைப் பாவை’யின் எளிமைக்கும் இனிமைக்கும், கருத்து நயத்துக்கும் சொல்லோட்டத்துக்கும் இவை நல்ல எடுத்துக்காட்டுக்கள் ஆகும். பாவை முழுவதுமே படித்துச் சுவைத்து இன்புறத்தக்க இலக்கிய விருந்தாக அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் தமிழ் நடைப் பயணம் மேற்கொண்ட பெருங்கவிக்கோ தேமதுரத் தமிழின் பெருமையை உலகமெலாம் பரப்புவதற்காக உலகநாடுகளில் சுற்றித் திரிகின்றார். உலகக் கவிஞர் மன்றங்களிலும் மாநாடுகளிலும் தமிழ் முழக்கம் செய்கின்றார். இது குறித்து அவர் பாடியிருப்பது நினைவுகூரத் தக்கது.
வண்டமிழ் விதைக்கின்றேன்-பொல்லார்
வசைகள் பொறுத்தே மலரும் எண்ணம்
வளர்த்துக் களிக்கிறேன்.
ஏக்கப் பெருமூச்சேற்றே தோளில்
என்பணி தொடர்கின்றேன்-மேன்மை
ஆக்கம் விளைக்கும் அறநெறிப் பாதை
ஆர்த்தே நடக்கின்றேன்.
என்மொழி என்னினப் பெருமை காட்ட
எங்கும் செல்கின்றேன்-ஈனர்
புன்மொழி பொறுத்தே புனர்வாழ்வமைக்க
புகுவழி வெல்கின்றேன்”
“என் பயணங்கள் ஏதோ உல்லாசமாக நாடு பார்க்க வேண்டும் என்று செல்லும் உல்லாசப் பயணமல்ல இலக்குகளையும் நம் மொழி இனமேம்பாட்டையும் உலக அரங்கில் உயர்த்திக் காட்டும் ஒப்பற்ற நோக்கங்களுக்காகச் செல்லும் இலட்சியப் பயணமாகும் என்றும் கவிஞர் அறிவுறுத்துகிறார்
. “நுகத்தடியைக் கழுத்தினிலே மாட்டிக் கொண்டு
      நோய் தரும் பேர் துன்பத்தைத் தாங்கி நின்று
அகத்திலெழும் உணர்ச்சி யெனும் கலப்பை கொண்டு
     அறிவென்னும் உழவனாகித் தமிழ்நிலத்தை.
மகத்துவத்தின் பிறப்பிடமாய் ஆக்க ஓடும்”
பெருங்கவிக்கோவின் இலட்சியப் பணிகளை தமிழ் நாடும் தமிழ் இனமும் உணர்ந்து போற்றும் நன்னாள் எந்நாளோ?
  அதுபற்றி எல்லாம் எண்ணிப் பார்க்க நேரம் இல்லாது, கருமமே கண்ணாகத் தமிழ்ப் பணி புரிந்து கொண்டிருக்கும் கவிஞர் சேதுராமனின் மனம் அபூர்வ மாக எப்போதாவது பெருமிப் பெருமூச் செறிவதும் இயல்பாக இருக்கிறது. அவரும் மனிதர் தானே? “அல்லும் பகலும் அடித்துப் புரண்டு தமிழ்ப் பணி செய்தாலும் அறிந்து கொள்பவர்கள் மிகமிகக் குறைவு. செல்வாக்குள்ள இதழ்கள், எத்தனை முறை நாம் உலகம் சுற்றினாலும் ஏறெடுத்துப் பார்க்கவும் அறிந்து கொள்ளவும் எண்ணமிலாத இருண்ட மனமுடையனவாக உள்ளன. நல்ல தகுதியை, வெல்லும் முயற்சியோடு உருவாக்கிக் கொண்டாலும், தமிழ் மண் ஊமையாகவே பார்த்துக் கொண்டிருக்கிறது. உயரிய செயலாற்றல் மிக்கவர்களை இனங் கண்டு ஊக்குவிக்கும் பொறுப்பு. அரசுக்கும், சமுதாயத்துக்கும் உண்டு. இதனை இவ்விரு தரப்பினரும் சரியாக நிறைவு செய்யாத நிலை. இத்தகைய மனப்புழுக்கங்களில் துடித்துக் கொண்டிருப்பவர்களில் நானும் ஒருவன்’ என்று “அவர் தனது உள்ளத்தின் உணர்வை ‘கெய்ரோவில் பெருங்கவிக்கோ’ என்ற நூலில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
  “எழுதும் கவிஞர் மட்டுமல்ல பெருங்கவிக்கோ எழுதிய எழுத்துகளுக்குச் செயல் வடிவம் தரும் தமிழ்’ மறவராகவும் திகழும் வா.மு.சே.வை வையகத் தமிழர்கள் உணர்ந்து, ஒல்லும் வகையில் உதவுவது தமிழுக்கும் தமிழர்க்கும் பெரும் நன்மையை விளைக்கும்” என்று அறிஞர் சிலம்பொலி செல்லப்பன் அவர்கள் (‘தமிழ் நடைப் பாவை அணிந்துரையில்) கூறியிருப்பது உண்மையே உயர்வு நவிற்சியன்று. .
(தொடரும்)
வல்லிக்கண்ணன்:
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்

Saturday, July 01, 2017

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙௌ) – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல 192, ஆனி 11, 2048 / சூன் 25, 2017

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙௌ)

   இவை மட்டுமல்ல, அனைத்து இதழ்களும் ஊடகங்களும் நல்ல தமிழே மக்களுக்கானது என்பதை உணர்ந்து தங்களைத் திருத்திக்கொள்ள வேண்டும். இதற்கான பணிகளைத் தமிழ் அமைப்புகள் மேலும் முனைப்பாக ஆற்றி வெற்றி பெற வேண்டும். அன்று பேராசிரியர் இலக்குவனார் விதைத்த தமிழ்உணர்வு இன்றும் மங்காமல் தமிழ் ஆர்வலர்களிடம் உள்ளது. அவர்கள் இப்பணியில் வெற்றி பெறுவதே நாம்  பேராசிரியருக்குப் படைக்கும் காணிக்கையாகும் என்பதை உணரவேண்டும்.
  குறள்நெறி ஆங்கில இதழுக்கு இருந்த வரவேற்பாலும் தமிழ்நாட்டில் இருந்துவெளிவரும் ஆங்கில நாளிதழ்கள்கூடத் தமிழுக்கும் தமிழர்க்கும் முதன்மை அளிக்காததாலும், பின்னர்க் ‘குறள்நெறி’/‘Kuralneri’ ஆங்கில நாளிதழ் நடத்த முடிவெடுத்தார். சில முன்முறை இதழ்களையும் வெளியிட்டார். ஆனால், எண்ணம் ஈடேறவில்லை.
 1967 பொதுத்தேர்தல் வந்தது. பேராசிரியர் இலக்குவனாரின் தமிழன்பர்கள், மாணாக்கர்கள் விருப்பத்திற்கிணங்கவும் தமிழ்ப்புலவர்கள் அரசியலில் ஈடுபட்டு மொழி இனக் காப்பில் அரசைச் செலுத்த வேண்டும் என்ற தம் விழைவிற்கேற்பவும், தேர்தலில் போட்டியிட விரும்பினார். கட்சிப்பின்னணியே வெற்றியை எளிதாக்கும் என்பதால் தி.மு.க.சார்பில் போட்டியிடலாம் எனக் கருதினார். பேராசிரியர் தி.மு.க.வில்  சேர்ந்தால் தி.மு.க. முத்திரையால் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்காது என்றும் அதே நேரம் அவர் இப்பொழுதுபோல் கட்சி சார்பற்று இருந்தால் அவரது இயக்கப் பணிகளால் நடுநிலை  வாக்காளர்கள் ஆதரவும் தமிழன்பர்கள் ஆதரவும் பேராயக்கட்சிக்கு (காங்கிரசிற்கு) எதிர்ப்பாகச் செயல்பட்டுத் தங்களுக்கு நன்மை பயக்கும் என்றும் தி.மு.க. தலைவர்கள் நம்பினர். பேராசிரியர் இலக்குவனார் தி.மு.க.வில் சேர்ந்தால் அவர் வெற்றி உறுதியானாலும் பிற தொகுதிகளில் பிறரின் வெற்றி இல்லாமல் போகும்; பொதுவான நிலையில் இருந்து பேராசிரியர் இலக்குவனார் பரப்புரை மேற்கொண்டால் தி.மு.க.வின் வெற்றி எளிதாகும் என்று கணித்தனர். இது குறித்துப் பேராசிரியர் இலக்குவனார் பின்வருமாறு குறள்நெறியில் எழுதினார்:
தேர்தலில் நிற்கவில்லையா?
உள்ளூரிலும் வெளியூரிலும் உள்ள நண்பர்கள் நேரிலும் கடித வாயிலாகவும் “வரும் 67ஆம் ஆண்டுத் தேர்தலில் நிற்கவில்லையா? தவறாது நின்று வெற்றி பெறவேண்டும். அதற்குரிய செயல்முறைகளில் இன்னும் ஈடுபடக்காணோமே!” என உசாவிய வண்ணம் உள்ளனர்.
 தமிழ் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள யாம் சட்ட மன்றத்திற்குச் சென்றும் தமிழைக் காக்கும் ஆக்கப் பணிகளை உருவாக்கப் பெரு விருப்புடையோம். இந்தி முதன்மை இன்னும் நீங்கியபாடில்லை. இந்தி முதன்மையை அகற்றப் பெரும் அறப்போரைத் தொடங்க வேண்டியிருக்கும்போல் உள்ளது. சட்ட மன்றத்தையும் அதற்குரிய களனாகக் கொள்ள வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.
 தமிழ்க்காப்புத் தொண்டில் ஈடுபட்டுள்ள எம்மைத் தி.மு.கழகத்தைச் சார்ந்தவனென்றே கருதியுள்ளனர். தி.மு.கழகம் இந்தியை எதிர்த்துத் தமிழ்க்காப்புப் பணியில் ஈடுபட்டுள்ளமையால் அதனை வலுப்படுத்தும் முயற்சியில் உழைத்து வருவதனால், அவ்வாறு மக்களும் அரசும் கருதுவதில் வியப்பில்லை. ஆயினும் யாம் இன்னும் தி.மு.க.வில் உறுப்பினராகவில்லை. ஏனெனில் தி.மு.க. மேலிடத் தலைவர்கள் நீங்கள் தனியே இருந்து தொண்டாற்றுவதுதான் எங்கட்கு வலிவு. எம் கட்சியில் உறுப்பினராகச் சேரவேண்டியதின்று என்று கூறினர். இக் காலத்தில் எக் கட்சியையும் சாராது தனித்து நிற்பதால் அரசியல் தொண்டு ஆற்ற முடியாது என்பதை யாவரும் அறிவர். ஆகவே தமிழ்க்காப்பு இயக்கம் ஒன்றைத் தோற்றுவித்துத் தொண்டாற்றிவரும் நான், அதன் சார்பிலேயே தேர்தலுக்கு நிற்க முடிவு செய்துள்ளேன். சிலர் பாராளுமன்றத்திற்கு நிற்குமாறு அறிவுரை கூறுகின்றனர்.
 பாராளுமன்றத்தில் தமிழுக்கு உரிமையில்லை. தமிழுக்கு உரிமையில்லாவிடத்தில் தமிழர்க்கு வேலையில்லை என்பது என் கொள்கை. ஆதலின் பாராளுமன்றத் தேர்தலுக்குத் தமிழகத்தில் இருந்து யாருமே போட்டியிடுதல் கூடாது.  தமிழுக்கு அங்கு உரிமை கிடைத்த பின்னரே தமிழர்கள் செல்ல வேண்டும். தமிழர்கள் அதனைப் புறக்கணிப்பதன் வாயிலாகத் தமிழுரிமையைப் பெறுதல் வேண்டும் எனும் கடப்பாட்டை உடையோம். ஆகவே, பாராளுமன்றத் தேர்வுக்குப் போட்டியிடாது சட்டமன்றத் தேர்தலுக்குப் போட்டியிட எண்ணியுள்ளோம்.
   அதுவும் யாம் தங்கியிருந்து அலுவல் புரியும் திருப்பரங்குன்றத் தொகுதியிலிருந்தே போட்டியிட  எண்ணியுள்ளோம்.
   தேர்தல் என்பது இக்காலத்தில் நம் நாட்டில், பல ஆயிர உரூபாய்களைச் செலவழிக்க வைப்பது. பொருளில்லார்க்குத் தேர்தலில் இடமே இல்லை. ஆகவே அன்பர்கள் அவரவர்களால் இயன்ற பொருளுதவியைச் செய்து எல்லா வகையாலும் உதவுமாறு தமிழின் பேரால் வேண்டுகின்றோம்.
   தனிப்பட்ட முறையிலும் கட்சிச் சார்பிலும் தமிழுக்கு அனைத்துப் பக்கங்களிலிருந்தும் உதவி வரும் என்று எதிர்பார்க்கிறோம். தமிழ் வெல்க! வணக்கம்.
குறள்நெறி நாளிதழ் : கார்த்திகை 1, 1997: 16.11.66 புதன்
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்