Friday, December 18, 2015

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 10: ம. இராமச்சந்திரன்

(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 09:   தொடர்ச்சி)
தலைப்பு-இலக்குவனார்கவிதைகள் : ilakkuvanar kavithaikal_or_aayvu_thalaippu

இயல் – 4

இலக்குவனார் கவிதைகள் – பகுப்பாய்வு

  இலக்குவனார், ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய நால்வகைப் பாக்களையும் பாடியுள்ளார்.
‘ஆசிரியம் வஞ்சி வெண்பாக் கலியென
   நாலியற் றென்ப பாவகை விரியே’         (தொல்-செய்)
என்று பாவகை நான்கென்பர் தொல்காப்பியர். இவை தவிர விருத்தம், கண்ணி, கீர்த்தனை முதலிய பா இனங்களையும் இலக்குவனார் பாடியுள்ளார். கவிஞர் பாடியுள்ள கவிதைகளைக் கீழ்வருமாறு பகுக்கலாம்.
  1. நெடுங் கவிதைகள்
  2. வாழ்த்துக் கவிதைகள்
  3. கையறுநிலைக் கவிதைகள்
  4. அங்கதக் கவிதைகள்
  5. இசைப் பாடல்கள்
  6. கதைப் பாடல்கள்
என ஆறு பிரிவாகப் பகுத்துப் பொருள் நலம் காணலாம்.
  1. நெடுங் கவிதைகள்
  நெடுங் கவிதைகள் என்ற பிரிவில் மூன்று கவிதைகள் இடம் பெறுகின்றன. அவை துரத்தப்பட்டேன், மாணவர் ஆற்றுப்படை, அறிஞர் அண்ணாவிற்குப் பாவியல் வாழ்த்து என்ற மூன்று கவிதைகளாகும். இம் மூன்று கவிதைகளும் ஆசிரியப்பா வகையைச் சார்ந்தவை. இவற்றுள் ‘துரத்தப்பட்டேன்’ என்ற கவிதை ஆசிரியரின் வரலாற்றைக் கூறும் கவிதையாகும். இதனை ஒரு புதுக்கவிதை என்று இயம்பலாம். காரணம் சில இடங்களில் யாப்பு விதிகட்குப் புறம்பாக அமைந்துள்ளன. தன் வரலாற்றுக் கவிதைகள், தமிழ் மொழியில் அரிதாகவே காணப்படுகின்றன.
  “தமிழுக்கு ஒரு சிறப்பு மூல இலக்கியங்கள் பல உடைமை. எனினும் அவற்றைத் தந்துதவிய புலவர்களின் வரலாறு நமக்குக் கிடையாது. இது தமிழ் இலக்கிய ஆராய்ச்சிக்கு நீங்காக் குறையாகும்.”1  என்று கூறுவர் முனைவர் வ.சுப. மாணிக்கம்.
  தமிழ்ப் புலவர்கள் வரலாறு அறியப்படாத காரணத்தால் நம்முடைய மொழியின் தொன்மை மறைக்கப்பட்டன. சில வேளைகளில் மறக்கப்பட்டன. எனவே புலவர், கவிஞர் அனைவரும் தத்தம் வரலாற்றை எழுதி வைக்க வேண்டும். கவிதையாயினும் உரைநடையினும் எவ்வடிவமானாலும் எழுதி வைப்பது நல்லது. பேசும் சொற்கள் மறைந்து விடுகின்றன. ஆனால் நாம் எழுதும் எழுத்துகள் நிலைத்து நிற்கின்றன. பல்லவ மன்னர் கல்வெட்டுகளும், பிற்காலச் சோழர் கல்வெட்டுகளும் அவர்தம் வரலாற்றை இன்றும் சிறப்புடன் அறிவித்துக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் இலக்குவனாரின் ‘துரத்தப்பட்டேன்’ என்னும் கவிதை உன்னத இடத்தைப் பெற்ற விளங்குகிறது எனலாம். பகுத்தறிவுக் கொள்கையைப் பின்பற்றியதாலும் தந்தைப் பெரியாரிடம் பற்றுக் கொண்டமையாலும், தமிழ் மொழியைக் காக்க வேண்டும் என்னும் நினைப்பால் தன்மதிப்பு இயக்க மாநாடுகளில் பேசியதாலும் இலக்குவனார் அடைந்த இன்னல்கள் மிகுதி.
  பார்ப்பனர் காங்கிரசு இயக்கத்தில் பெரிய செல்வாக்கு பெற்று விளங்கினார்கள். தமிழ் நாட்டில் பார்ப்பனர் ஆதிக்கத்தைக் குறைக்கவே நீதிக்கட்சி தோன்றிற்று. எனவே பார்ப்பனர் செல்வாக்கைக் குறைக்கத் தோன்றிய நீதிக்கட்சியின் கொள்கையில் விருப்புக் கொண்டனர் இலக்குவனார்.
  1952-இல் பொதுத் தேர்தல் நடைபெற்றது. அப்போது திருவில்லிபுத்தூர் பாராளுமன்றத் தேர்தலில் நீதிக் கட்சியைச் சேர்ந்த  கோவை அறிஞர் கோ.து.நாயுடு நின்றார். காங்கிரசுக் கட்சியைச் சார்ந்த காமராசர், நாயுடுவை எதிர்த்து நின்றார். பெரியாரின் பகுத்தறிவுப் பாசறையைச் சார்ந்த இலக்குவனார் கோ.து. நாயுடுவை ஆதரித்தும் காங்கிரசுக் கட்சியைச் சார்ந்த காமராசரை எதிர்த்தும் தேர்தல் பணி செய்தார்.
  காமராசர் நாடார் குலத்தவர். காங்கிரசுக் கட்சிக்குப் பணியாற்றிய நாடார்கள் எல்லாம் ஒன்று கூடினர். நாடார் குலத்தின் தலைவரை எதிர்த்துத் தேர்தல் வேலை செய்த ஒருவரை நாடார் கல்லூரியில் பேராசிரியராக வைத்திருப்பதா? கூடாது என்று மொழிந்தனர். இலக்குவனாரை நாடார் கல்லூரியினின்று நீக்க முயன்று, இறுதியில் வெளியேற்றி விட்டனர். இலக்குவனார் துரத்தப்பட்டதன் சமூகப் பின்புலம் இதுதான்.
  இலக்குவனார் பாடிய நெடும் பாடல்களுள் ‘துரத்தப்பட்டேன்’ என்னும் தலைப்பில் பாடிய கவிதையே நீண்ட கவிதையாகும். இஃது அறுநூற்று ஐம்பத்தேழு அடிகளை உடையது. மனத்தில் தோன்றிய எண்ணங்களை(உள்ளக் குமுறலை) அகவற்பா அமைப்பில் எளியநடையில் வெளிப்படுத்தியுள்ளார், கவிஞர். புலமை பெற்றோர் மட்டுமின்றி எல்லாருக்கும் எளிதில் விளங்க வேண்டும் என்ற எண்ணத்தில் யாப்பிலக்கண விதிகளைச் சிறிது புறத்தே நிறுத்திவிட்டுச் சொற்களைப் பிரித்தே எழுதியுள்ளார்.
  இக்கவிதை மூலம் கவிஞரின் வாழ்க்கை வரலாற்றின் ஒரு பகுதி நமக்குத் தெற்றென விளங்குகிறது. தன் வாழ்க்கை வரலாறு மேல்நாட்டு இலக்கியங்களில் சிறப்பாக இடத்தைப் பெற்றுள்ளன. தன் வாழ்க்கை வரலாறு தமிழ் இலக்கியத்தில் இன்னும் உயர்ந்த இடத்தைப் பெறவில்லை.2
குறிப்புகள்:
  1. முனைவர் வ.சுப. மாணிக்கம், இரட்டைக் காப்பியங்கள், சிலப்பதிகாரத்தின், செல்விப் பதிப்பகம், காரைக்குடி, 1960, ப-35.
  2. சி. இலக்குவனார், என் வாழ்க்கைப் போர், முன்னுரை, குறள்நெறி வெளியீடு, மதுரை, 1971, ப-6.
(தொடரும்)
(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 11)

Tuesday, December 15, 2015

தன்மானத்தலைவர் நாவலர் சோமசுந்தர பாரதியார் – கதிர்நிலவன்

naavalar_somasundara_bharathiyaar01kathirnilavan01

நாவலர் சோமசுந்தர பாரதியார் நினைவு நாள்

கார்த்திகை 29, 1990 / திசம்பர் 14, 1959

ஆரிய எதிர்ப்பும் திராவிட மறுப்பும்
  1937ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போரில்தான் மொழிவழி அடிப்படையில் தமிழ்த்தேசிய இனம் தன்னைத்தானே அடையாளங் கண்டது. அப்போராட்டத்தின் மூலமாக உருவான மொழிவழி மாகாணக் கோரிக்கையும், ‘தமிழ்நாடு தமிழருக்கே’ முழக்கமும் அப் போராட்டத்தில் ஈடுபட்ட திராவிட இயக்கத் தலைவர்களால் திராவிடன், திராவிட நாடு என்று மடைமாற்றம் செய்யப்பட்டது.
  முதல் இந்தி எதிர்ப்புப் போரில் உருவான தமிழின அடையாளத்தை இழக்க சோமசுந்தர பாரதியாருக்கு மனம் வரவில்லை. பெரியார் உருவாக்கிய ஆரியத்திற்கு எதிர்வகை குறியீட்டுச் சொல்லாகிய திராவிடத்தை சோமசுந்தர பாரதியார் ஒப்புக் கொள்ள மறுத்தார். ஆரியர் x தமிழர் என்பதே அவரது கொள்கை நிலைப்பாடாகும்.
  1937ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போரில் “தமிழர் கழகம்” எனும் அமைப்பை நிறுவினார். தமிழ்மொழி ஆக்கத்திற்கும், இந்தி எதிர்ப்புக்கும், தமிழர் முன்னேற்றத்திற்கும் வெவ்வேறு பெயர்களில் அமைக்கப் பெற்ற இயக்கத்தினர்களெல்லாம் தமிழர் கழகக் கிளைகளை ஆங்காங்கே அமைக்க வேண்டுமென்று பாரதியார் பேரழைப்புக் கொடுத்தார். பிறகு ‘தமிழர் கழகம்’ எனும் இதே பெயரில் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் அமைப்பைக் கட்டிய போதும் அதன் தலைவராக பாரதியார் பொறுப்பு வகித்தார்.
  1942 இல் பெரியாரின் திசை மாறிப்போன ‘திராவிடநாடு திராவிடர்க்கே’ முழக்கம் காதைப் பிளந்து வந்த நிலையில், சி.பா.ஆதித்தனார் ‘தமிழ் இராச்சியக் கட்சி’யை உருவாக்கினார். அப்போது அதனை மனமுவந்து தொடங்கி வைத்தவரும் பாரதியார் என்பது நினைவு கூரத்தக்கது.
  நீதிக்கட்சியில் பெரியார், அண்ணா இருந்த போதும், தி.மு.க.வை அண்ணா உருவாக்கிய போதும் திராவிடம் குறித்தத் தமது மறுப்புக் கருத்தை பாரதியார் வெளிப்படுத்திய தருணங்கள் பல உண்டு.
  14.3.1943இல் சேலத்தில் நடந்த ‘கம்பராமாயண எரிப்புப் போர்’ உரையாடலின் இறுதிப் பகுதியில் பாரதியார் கூறுகிறார்: “தமிழன் தன்னைத் தமிழெனன்று கூறிக் கொள்ள வெட்கப்பட்டுத் திராவிடன், திராவிடன் என்று தோள் குலுக்குவதா? திராவிடன் என்ற பெயர் சங்க நூலிலே ஏது? சுயமரியாதை, சுயமரியாதை என்று ஆரியமொழி பேசினார்கள். நான் சொல்லிச் சொல்லி இப்போதுதான் தன்மானம் என்று தமிழாகப் பேசுகிறார்கள்” என்று இடித்துரைத்தார்.
  1950ஆம் ஆண்டு மே மாதம் 27, 28 நாட்களில் கோவையில் தி.மு.க. சார்பில் ‘முத்தமிழ் மாநாடு’ நடைபெற்றது. அதில் மாநாட்டுத் திறப்பாளராக கலந்து கொண்ட பாரதியார் அவர்கள் மீண்டுமொரு முறை திராவிடத்தின் மீது குட்டு வைத்துப் பேசினார். அது வருமாறு: “இந்நாளில் பலர் திராவிடர், திராவிடர் என்றே சொல்லி வருகிறார்கள். தமிழ், தமிழர் என்று சொல்ல வெட்கப்படுகிறவன் தமிழனாயிருக்க முடியுமா? அவன் இரத்தத்திலே எப்படி தமிழ் இரத்தம் ஓடும்? இனியாவது தமிழ் தமிழர் என்று சொல்லுங்கள். தமிழருக்குத் தமிழரே பகைவர்” என்றார்.
  பாரதியாருக்கும் ஒரு படி மேலே சென்று அம்மாநாட்டிலே தூய தமிழ்க் காவலர் கு.மு.அண்ணல் தங்கோ ‘திராவிடம்’ என்ற சொல்லைக் கேட்டாலே காதில் நாராசம் பாய்ச்சியது போல இருக்கிறது என்று சொன்னாரே பார்க்கலாம். அண்ணாவோ பதைபதைத்துப் போனார். முத்தமிழ் மாநாடு திராவிடத்திற்கு விளக்கம் சொல்லும் மாநாடாக மாறிப் போனது.
  1953ஆம் ஆண்டு அண்ணல் தங்கோ தமிழக எல்லைத் தற்காப்பு மாநாட்டை நடத்தினார். கருணாநிதி, கி.ஆ.பெ.விசுவநாதம், பாரதிதாசன், கா.அப்பாத்துரையார், தார்பிடோ சனார்த்தனம், திருக்குறள் முனுசாமி ஆகியோர் பங்கு கொண்ட மாநாட்டில் அதன் தலைவராகிய பாரதியார் “நாம் தமிழர்! நமது இனம் தமிழினம்! நமது நாடு தமிழ்நாடு! தமிழ்நாடு தான் நமது குறிக்கோள்! மொழிவழியாகப் பிரிந்து விட்ட போது திராவிடம் என்பதில் பொருள் இல்லை, திராவிடம் என்பது தமிழ்ச் சொல்லே அன்று” என்று பேசிய போது கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அதற்குக் காரணம் கூட்டத்திலே பங்கு பெற்றவர்கள் கி.ஆ.பெ.விசுவநாதம் தவிர, மற்ற ஏனையோர் திராவிடச் சார்பாளர்கள் என்பதே உண்மையாகும்.
  திராவிட இயக்கத்தவரின் ஆரிய எதிர்ப்பில் உடன்பாடு கொண்டவராக இருந்த போதிலும், அந்த ஆரிய எதிர்ப்பையும் கூடத் தாம் தன்மதிப்பு இயக்கத்தால் கற்றுக் கொள்ள வில்லை என்பதை தெளிவுபடுத்திக் கூறவும் பாரதியார் துணிந்தார். அது வருமாறு:
  “ஆரியருக்கு அடிமைப்படாத எண்ணம் எனக்கு 40 ஆண்டுகளுக்கு முன்பே ஏற்பட்டது. தன்மதிப்பு இயக்கம் தோன்றுவதற்கு முன்பே இருந்தது. என்னுடைய 14 வயதில் திருமணம் நடைபெற்றது. என்னுடைய சிவநெறி வேறு. இன்று சைவப்பண்டிதர் கூறும் சைவமல்ல, உண்மையே எனக்குச் சிவம். எனக்குத் திருமணம் பார்ப்பனரை வைத்து செய்வதாகக் கூறினார்கள். சைவ ஆகமங்களின் படி பார்ப்பனர்கள் சண்டாளர்கள் என்று கூறப்பட்டிருக்கிறது. கோயில்களிலே அவர்கள் கொடி மரத்துக்கு அப்புறம் நுழையக் கூடாது. வந்தால் தீட்டாகி விடும் என்று ஆகமம் கூறுவதால் அப்படிப்பட்ட சண்டாளர்களைக் கொண்டு திருமணம் செய்யாமல் சைவ குருக்களை வைத்துத் திருமணம் செய்தேன். எனது சிறிய வயதிலேயே எனக்கு அந்த நோக்கம் இருந்தது. தன்மதிப்பு இயக்கத்தாலோ, அண்ணாதுரையாலோ அந்த நோக்கம் எனக்கும் வரவில்லை. அது முதற்கொண்டு இதுவரை நான் தமிழருக்கு தன்மானம் வரவேண்டுமென்று உழைத்து வந்திருக்கின்றேன்.”
  பாரதியார் தமிழ் நூல்களிலே உள்ள ஆரியத்திற்கு வலுசேர்க்கும் கருத்துகளை புறந்தள்ள வேண்டுமென்று வற்புறுத்தும் அதே வேளையில் நல்ல கருத்துகள் இருக்கும்நேர்வில் போற்றிடவும் தயங்கக் கூடாது என்பார்.
  அண்ணா கம்ப இராமாயணத்தை எரிக்கும் முயற்சியில் ஈடுபட்ட போது அதை வன்மையாகக் கண்டித்ததோடு ஒரு சிறந்த காவியத்தை எரிப்பது நல்லதன்று. அது தமிழ் நெறியன்று. ஆபாசக்கருத்துகளை எரிக்கச் செய்யப்படும் முயற்சிக்கு வேண்டுமானால் நான் துணை நிற்பேன். அருந்தமிழ் நூலை எரிப்பதால் ஆபாசக் கருத்தை எப்படி அழிக்க முடியும்? கம்பனைப் போல் சிறந்த கவியை கண்டதில்லை என்று கம்பனைப் போற்றினார். பாரதியார் முன்னெடுத்த ஆரிய எதிர்ப்பும், திராவிட மறுப்பும் இன்றைக்கு வளர்ந்து வருவது கண்கூடான உண்மையாகும்.



Sunday, December 13, 2015

மங்காத் தமிழ் வளர்க்கும் மறைமலை இலக்குவனார்!


அட்டை-மீண்டும் கவிக்கொண்டல், நவம்பர் 2011attai_meendumkavikondal_nov.2011

மங்காத் தமிழ் வளர்க்கும் மறைமலை இலக்குவனார்!

திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்
என்னும் பாரதியார் நல்லுரைக்கிணங்க அயல்நாட்டாராலும் போற்றத்தகும் புலமையும் பிறர் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து உலகம் வணங்கச் செய்யும் தமிழ் வளமையும் மிக்க அருந்தமிழ்ச் சான்றோர் பேராசிரியர் இலக்குவனார் மறைமலை அவர்கள்.
  தமிழ்நாட்டில் சென்னை மாநிலக்கல்லூரியில் 30 ஆண்டுகளும் புறநகர்க்கல்லூரிகளில் 5 ஆண்டுகளும் கல்விப்பணி ஆற்றியதுடன் ஓராண்டுக்காலம் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாப் பல்கலைக்கழகத்திலும் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றி உள்ளார். அங்குப் பணியாற்றுகையில் அப்பல்கலைக்கழகம் சார்பில் பிற அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் சென்று தமிழ் விரிவுரை ஆற்றித் தமிழ் இலக்கியச் சிறப்புகளைப் பரப்பி உள்ளார்.
  திறனாய்வு முறையாலும் சொல்லாக்க நெறியாலும் இலக்கியக் கோட்பாட்டுவகையாலும் இவரின் படைப்புகள் சிறப்புற்று இவரின் பெருமையை உணர்த்தின. இலக்கியக் கொள்கை(1977), புதுக்கவிதை-முப்பெரும் உத்திகள்(1986), இலக்கியமும் சமூகவியலும்(1992), இலக்கியமும் உளவியலும்(1992), இலக்கியமும் மார்க்சியமும்(1992) ஆகிய இவரின் நூல்கள் இலக்கியக் கொள்கைகளை எளிமைப்படுத்திப் படிப்போரை நெறிப்படுத்துவனவாய் அமைந்துள்ளன. எனவே மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் ஆய்வாளர்களுக்கும் பிறருக்கும் பெரிதும் பயனுள்ள வழிகாட்டியாய் அமைவதாய் அறிஞர்கள் இந்நூலைப் பாராட்டி உள்ளனர்.
  இலக்கியத் திறனாய்வு-ஓர் அறிமுகம்(1979), புதுக்கவிதையின் தேக்க நிலை(1986),  சமூகவியல் நோக்கில் புதுக்கவிதை(1992), பெண்ணியத்திறனாய்வு(1995), அங்கதத்திற்கொரு தமிழன்பன்(2003), திறனாய்வுச் சுடர்(2004), வைரமுத்துவின் வைகறைமேகங்கள்(2011) ஆகியன திறனாய்வுத் துறையிலும் கவிதைத் துறையிலும் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளன. கவிதைத்திறனாய்வுடன் ‘தலைகீழ்’ என்னும் கவிதை நூலைப் படைத்துத் தாமும் கவிஞராகத் திகழ்கிறார்.
  ஆட்சிச்சொல்லாக்கம் குறித்து முனைவர் பட்டம் பெற்ற இவரின் நூலான சொல்லாக்கம்(2002) குறித்துக் குறிப்பிடுகையில், முதுமுனைவர் புலவர்மணி இரா.இளங்குமரன் அவர்கள் இவரைச் சொல்லாக்கவியல் பயன்பாட்டு முன்னோடி எனப் பாராட்டி உள்ளார்.
  தந்தையார், தமிழ்க்காப்புத் தலைவர் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் வழியில் அவர் புகழ் நினைவுகளைப் போற்றும் வகையில் தமிழ்த்தாயின் முன்னேற்றம் ஒவ்வொன்றும் தன் முன்னேற்றம் எனக் கருதி அயராது உழைக்கும் பேராசிரியர் மறைமலை, தம் தந்தையார் வாழ்க்கை வரலாற்று நூலையும் எழுதி உள்ளார். சாகித்ய அகாதமியின் இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை நூலில் சி. இலக்குவனார் என்னும் பெயரில் வெளிவந்த இந்நூல் பல மறு வெளியீடுகளாக வருகின்றது.
  ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் என்னும் இலக்கிய அமைப்பின் மூலம் வாழும் கவிஞர்களைப்பற்றிய திறனாய்வு உரை அரும் பெரும் முயற்சியாக அனைத்துத் தரப்பாராலும் பாராட்டு பெற்று வருகிறது. இதுவரை 100 பாவலர்களைப் பற்றி இவர் உரை ஆற்றி உள்ளார். வாழும் கவிஞர்களைத் தமிழ் நாட்டவர் மட்டும் அறிந்தால் போதாது என வாழும் கவிஞர்களின் பெயர்களில் இவரே வலைப்பூக்கள் தொடங்கி அவர்களின் பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து இணையத்தில் அறிமுகப்டுத்தி வருகிறார். பிற பேராசிரியர்களுக்கும் வலைப்பூப் பயிற்சி அளித்து வருகிறார். அம் மொழிபெயர்ப்புப் பாடல்களின் ஒரு தொகுப்பாக A CLUSTER OF STARS(2006) என்னும் ஆங்கில நூலையும் வெளியிட்டுள்ளார்.
  மாணவப்பருவத்திலேயே இதழ் நடத்தியும் தந்தையார் நடத்திய ‘குறள்நெறி’ இதழின் பொறுப்பாசிரியராகவும் ஆசிரியராகவும் திகழ்ந்த பேராசிரியர் இப்பொழுது ‘செம்மொழிச்சுடர்’ என்னும் மின்னிதழின் ஆசிரியராகத் திகழ்கிறார். அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், சப்பான், மோரீசியசு முதலான பல நாடுகளுக்கும் சென்று இலக்கியச்சொற்பொழிவுகள் ஆற்றி வருகிறார்.
”உலகத்தமிழ்மாநாடுகள் உட்பட பல்வேறு கருத்தரங்கங்களில் கட்டுரையாளராகவும் அமர்வுத் தலைவராகவும் பங்கேற்றுத் தமிழ்நெறி சார்ந்த கருத்துகளை வலியுறுத்தி வருகிறார்.
  பேரா.மறைமலை கார்த்திகை 29, தி.பி. 1977 / 1946 ஆம் ஆண்டு திசம்பர்த் திங்கள் 14 ஆம் நாள் திருநெல்வேலி மாவட்டம் சிந்துபூந்துறையில் பிறந்தார். பேராசிரியரின் மனைவி திருவாட்டி க.சுபத்ரா பொருளியல் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஒரே மகள் முனைவர் நீலமலர் செந்தில்குமார் அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிறார். மருமகன் முனைவர் ச.செந்தில்குமாரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார்.
  தமிழன்னையைக் காக்கும் போர்வாளாகவும் கேடயமாகவும் திகழ்ந்து வாழ்க்கைப் போரில் பல விழுப்புண்களைப் பெற்ற செம்மொழிச்சுடர் பேராசிரியர் சி.இலக்குவனாரின் திரு உருவப் படத்தைத் தாங்கி நவம்பர் இதழ் வருவதுண்டு. இந் நவம்பரில் அவரது வழியில் அயராமல் அருந்தமிழ்த் தொண்டாற்றி வரும் முனைவர் மறைமலை இலக்குவனார் அவர்களின் திரு உருவம் அட்டையை அணி செய்வது மிகப் பொருத்தமே. பேராசிரியர் வழியல் பெருந்தொண்டாற்றும் வாழும் பேராசிரியர் மறைமலை இலக்குவனார் நூறாண்டுகள் வாழ்ந்து தம் தொண்டினைத் தொடருவாராக!
– இளவல்
– மீண்டும் கவிக்கொண்டல், ஐப்பசி 2042 / நவம்பர் 2011
படங்களை அழுத்திப் பெரிதாகக் காண்க!

அட்டைப்படங்கள் : விக்கிபீடியா