Saturday, June 11, 2016

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 28: ம. இராமச்சந்திரன்


அகரமுதல 137, வைகாசி 23, 2047 /சூன் 05,2016

தலைப்பு-இலக்குவனார்கவிதைகள் : ilakkuvanar kavithaikal_or_aayvu_thalaippu

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 28

 1.3 பொங்கல் வாழ்த்து
  பொங்கல் வாழ்த்துக் கவிதைகள் மூலம் பாடியுள்ளார். ‘மங்கலம் விளங்கும் பொங்கல் வாழ்த்து’ என்னும் கவிதை முப்பது அடிகளைத் கொண்டது. 1964 ஆம் ஆண்டு பாடிய பொங்கல் வாழ்த்து என்னும் கவிதை பதினோரு அடிகளையும், 1965 ஆம் ஆண்டு பாடிய பொங்கல் வாழ்த்துக் கவிதை ஏழு அடிகளையும் கொண்டுள்ளது.
‘மங்கலம் விளங்கும் பொங்கல் வாழ்த்து’ புலப்படுத்தும் கருத்துகள் போற்றத்தக்கன.
உழவையும் தொழிலையும் உயர்வாக மதிக்கும் தமிழ் மக்கள் ‘தை’ முதல் நாளில் பொங்கல் விழா கொண்டாடினர். பலநாள் உழைத்த உழைப்பின் பயன் விளங்கும் நாளாகக் கொண்டவர். ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்’ எனப் பாராட்டினர். உணவைத் தரும் மாடுகளுக்கு நன்றி செலுத்தினர். அறுசுவை உண்டி சமைத்து உண்க என ஊட்டும் நாள் ஆக்கினர்.
 பிறப்பில் உயர்வு தாழ்வு பேசும் மடமை ஒழிதல் வேண்டும். உழைக்கும் மாட்டையும் உயர்வாகக் கருதிய தமிழ்நாட்டில் மக்களைக் கீழ்மைப்படுத்தும் நிலை ஒழியட்டும்.
 பிறப்பால் இழிவெனும் பேதமை ஒழிக
 உழைக்கும் மாட்டையும் உயர்வென மதித்த
 தண்டமிழ் நாட்டில் ஒண்டிறல் மக்களை
 மாட்டினும் கீழாய் மதிக்குநாள் ஒழிக
 பொங்கலோ என்ற மங்கல முழக்கம்
 எங்கும் முழங்குக எரிபரி தணிக
 அமைதி நிலவுக அடிமை அகல்க
 நால்வகை உரிமை யாவரும் பெறுக71
என வாழ்த்துகிறார். மேலும் ‘விடுகளில் நெல்மிக நிறையட்டும். பல்வகை வளங்கும் பெருகட்டும். கடல் சூழ்ந்த இவ்வுலகில் உள்ள தமிழர் அனைவரும் வாழ்க’ என வாழ்த்துகிறார் கவிஞர்.
  நால்வகை உரிமை 72 யாவது சமத்துவ உரிமை, சுதந்திர வாழ்வு பெறும் உரிமை, விரும்பிய சமயத்தைப் பின்பற்றும் உரிமை, பண்பாடு மற்றும் கல்வி கற்பதில் உரிமை என நான்காம்.
  1964 ஆம் ஆண்டு பொங்கல் வாழ்த்து, ‘தமிழ்மொழி வாழ்க;  குறள்நெறி வாழ்க; இப்பொங்கல் திருநாளில் ‘தமிழ்மொழியைக் காப்போம்’ என உறுதி கொள்வோம். வளம் பல பெருகட்டும். பசியும் பிணியும் பகையும் நீங்கி, மழையும் வளமும் பெருகி, வள்ளுவர் நெறி போற்றி இவ்வுலகம் வாழட்டும். மக்களாட்சி முறை சிறக்கத் தொண்டு செய்வோம். இறையைப் போற்றுவோம்’ என வாழ்த்துகிறார்.
   1965 ஆம் ஆண்டு பொங்கல் வாழ்த்தில், ‘குறற்நெறி நாடெங்கும் பரவட்டும். குடியரசு தழைக்கட்டும். நாட்டு மக்களின் பசியும் பிணியும் நீங்கட்டும். பகை ஒழியட்டும். வளம் சுரக்கட்டும். வையகம் வாழட்டும்; வான்தமிழ் வெல்லட்டும். உழைப்பை உயிரென மதிக்கட்டும். எங்கும் இன்பம் நிறைக என வாழ்த்துகிறார்.
 குறள்நெறி ஓங்கி, குடியர சுயர்ந்து
 பசியும் பிணியும் பகையும் நீங்கி
 வசியும் வளனும் சுரந்து வாழியர்
 வையகம் வாழ்க; வான்தமிழ் வெல்க
குறிப்பு:
  1. சி. இலக்குவனார், சங்க இலக்கியம் பொங்கல் மலர் மங்கலம் விளங்கும் பொங்கல் வாழ்த்து, அ-ள் 19-26.

 பெயர்-ம.இராமச்சந்திரன் _peyar_ma.ramachnathiran

Monday, May 30, 2016

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 27: ம. இராமச்சந்திரன்

தலைப்பு-இலக்குவனார்கவிதைகள் : ilakkuvanar kavithaikal_or_aayvu_thalaippu

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 27

1.2 புலவர் வாழ்த்து
  தெய்வப் புலவர் திருவள்ளுவரின் இரண்டாயிரம் ஆண்டுவிழாச்சிறப்பாகப் பாடிய கவிதை ‘வள்ளுவரின் வான்புகழ்’ என்ற கவிதையாகும். அறுபத்து மூன்று அடிகளையுடையது. நிலைமண்டில ஆசிரியப் பாவால் அமைந்தது.
  திருவள்ளுவர், ஏசுகிறித்து இவ்வுலகில் பிறப்பதற்கு முன் தோன்றியவர். தமிழ்த்தாயின் இனிய புதல்வர். அவர் பிறப்பு வளர்ப்புப்பற்றி கூறப்படுவன எல்லாம் வெறும் கட்டுக் கதைகளே. நாயனார், தேவர் முதலாகப் பல பெயர் அவருக்கு வழங்கப்படுகின்றன. இவ்வுலகில், மக்கள் வாழ்வதற்கு ஏற்ற அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றும் உரைத்துள்ளார். அது திருக்குறள் என்னும் பெயர்கொண்டு விளங்குகிறது. அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டினாற் போன்று பொருட்செறிவு பெற்று உள்ளது திருக்குறள். மக்களின் மனவிருள் அகற்றும் ஒளிவிளக்கு அது.
  மக்கள் துயர் தீர்க்க வந்த இயேசு தோன்றுவதற்கு முப்பத்தொரு ஆண்டுகள் முன் தோன்றியவர் திருவள்ளுவர். இரண்டாயிரம் ஆண்டுள் ஓடிவிட்டன. முடியுடை வேந்தர் ஆண்ட நாட்டில் மக்களாட்சி முறைக்கும் நெறி வகுத்து உரைத்துள்ளார். உலக நாடுகள் அனைத்தையும் ஒன்றாகக் கருதினார் திருவள்ளுவர்.
 குலமும் ஒன்றே குடியும் ஒன்றே
 எல்லா மக்களும்இந்நாட் டரசரே
 சமத்துவம் போக்கும் சாதியும் மதமும்
 வேண்டாம் நமக்கென விதித்தனர் அறநெறி’ 68
தமிழ்நாட்டில் இடைக்காலத்தே தமிழ் ஆட்சி மறைந்த காரணத்தால் வள்ளுவர் குறளை மறந்து கெட்டோம். இப்பொழுது தமிழ்த்தாய் மீண்டும் அரியணையில் அமர்ந்துள்ளாள். வள்ளுவர் வழியில் இவ்வுலகம் நடைபெற தமிழ்நாட்டில் அண்ணா அவர்களின் ஆட்சி இயங்குகிறது. திருக்குறட்பாக்கள் பேருந்து வண்டிகள் தோறும் எழுதப்பட்டுள்ளன. புத்தருக்கு அசோகமன்னன் அமைந்து (புத்தர் நெறி) பரப்பியது போல வள்ளுவர்க்கு அண்ணாவும் கருணாநிதியும் விளங்குகிறார்கள்.
  குறள்நெறியில் வாழ்வு நடத்த உறுதி கொள்வோம். கசடறக் கற்போம்; கற்றபடி நடப்போம்; வள்ளுவரின் வான்புகழ் வளர்ப்போம் செந்தமிழைத் திசையெல்லாம் பரப்புவோம்’69 என்கிறார் கவிஞர்.
கார்மேகக்கோனார்
  மதுரை நகரில் தமிழ்த் தொண்டு புரிந்தவர் புலவர் கார்மேகக் கோனார் அவர்கள். தமிழ் இலக்கிய இலக்கணங்களைப் பழுதறக் கற்ற சான்றோர். தாம் கற்ற செய்திகளை, எல்லார்க்கும் எடுத்துச் சொன்ன பெரியவர். இத்தகைய தமிழ்த்தொண்டருக்கு மதுரைத் திருவள்ளுவர் கழகம் பொன்னாடை போர்த்திச் சிறப்பித்தது. அது போழ்து பாடிய கவிதை இது. எட்டு அடிகளைக் கொண்டது. நேரிசை ஆசிரியப்பாவால் இயற்றப்பட்ட கவிதை.
 செய்யுள் இயற்றும் திறனும் உரைநடைத்திறனும் பெற்ற புலவர் கார்மேகக்கோனார் நரைதிரை இன்றி பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகிறார் இலக்குவனார்.
 தமிழ்ப் பணி புரியும் தக்கோன், சான்றோன்
 கார்மே கக்கோன் கனிவுரை யாளன்
 உரையும் பாட்டும் உடையோன்
 நரைதிரை யின்றி நாளும் வாழ்கவே ! 70
குறிப்புகள்:
  1. சி. இலக்குவனார், முரசொலி சிறப்பிதழ் ‘வள்ளுவரின் வான்புகழ்’ (1969) அ-ள் 44-47.
  2. சி. இலக்குவனார், முரசொலி சிறப்பிதழ் ‘வள்ளுவரின் வான்புகழ்’ அ-ள் 58-63.
  3. சி. இலக்குவனார், கார்மேகக் கோனார் விழா மலர் திருவள்ளுவர் கழகம், மதுரை (1955) அ-ள் 5-8.

ம. இராமச்சந்திரன்

Saturday, May 28, 2016

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 26: ம. இராமச்சந்திரன்




தலைப்பு-இலக்குவனார்கவிதைகள் : ilakkuvanar kavithaikal_or_aayvu_thalaippu

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 26

3.1 திருமண வாழ்த்து
 ஆய்வாளர்க்குக் கிடைத்துள்ள கவிதைகளுள் காலத்தால் முற்பட்டது. திரு. அ. கிருட்டிணமூர்த்தி திருமண வாழ்த்துக் கவிதையாகும்.62 தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப் பள்ளியில் நடைபெற்ற தருமணத்தின்போது பாடியது. பாடிய ஆண்டு ஒன்று ஒன்பது ஆயிரத்துக்தொள்ளாயிரத் முப்பத்தைந்து. இக்கவிதை நேரிசை ஆசிரியப்பா வகையைச் சார்ந்தது. முப்பத்திரண்டு அடிகளையுடைது. இக்கவிதை.
திரு. அ. கிருட்டிணமுர்த்தி தஞ்சை மாவட்டம் ஐயம்பேட்டை என்னும் ஊரைச் சார்ந்தவர். அருணாசலம் என்பவருக்கு மகனாகத் தோன்றினார். இளவயது முதலே தமிழை நன்கு கற்றவர். பிறமொழிகள், தோன்றிய சில ஆண்டுகளில் மடியக் கூடியது. தமிழ்மொழியோ நீண்ட நெடுங்காலமாகச் சிறந்து விளங்குகிறது. பெற்ற தாயைப் பாதுகாக்காது ஒதுக்கும் மகனைப்போல நம் தமிழ்மொழியைப் பேணாமல் தமிழ்மக்கள் ஒதுங்கியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட மக்களைத் தட்டியெழுப்பி மொழி உணர்ச்சி ஊட்டியவர் அ. கிருட்டிணமூர்த்தி.
‘           பெற்ற தாயைப் பேணா கிழிக்கும்
            மைந்தரைப் போன்றுச் சிந்தையிற் கொள்ளாத்
            தண்டமிழ் மக்களைத் தட்டி யெழுப்பி’  63
என்று கூறுகிறார் கவிஞர்.
  வேற்றவர் மொழி எனப்படும் களையை அகற்றினார்; சாதி சமயப் பூசல்களை நீக்கினார்; ‘ஒன்றே குலம்’ என்னும் உயர்ந்த கொள்கையை உடைய தமிழ் மொழியின் பெருமையை உலகுக்கு உணர்த்தினார்; செந்தமிழ் பயின்று அதன் சிறப்பை வெளிப்படுத்துவதே தம் கடமை என எண்ணித் தொண்டாற்றினார். அவர், குற்றமற்ற சிறப்புடையதிருக்காட்டுப்பள்ளியில்  தோன்றினார்.. கிருட்டிணசாமி கடமைகள் வழுவாது உற்றோரையும் உறவினரையும் நண்பரையும் இன்னும் மற்றவரையும் அன்புள்ளத்துடன் பேணி, உருசிய நாட்டில் பொதுவுடைமைக் கொள்கையைச் சிறப்புறச் செயல்படுத்திய இலெனின் என்னும் தலைவரைப் போலவும் நன்மக்ளை ஈன்று நின்று நிறைந்த புகழுடன் வாழ்க! நீண்ட கருங்கூந்தலையுடைய இனிய துணைவியுடன் ஊழிக்காலம் வரையும் வாழ்க! என்கிறார்.
  இக்கவிதையில், வேற்று நாட்டவர் வரவால் தமிழ் மக்கள் தம் தாய்மொழியாம் தமிழ்மொழியை மறந்து திரிந்த நிலையைச் சுட்டிக் காட்டுகிறார். ஐயம்பேட்டை கிருட்டிணமூர்த்தி போன்ற தொண்டர்கள் பெரியார், ஈ.வே.ராமசாமியை பின்பற்றித் தமிழ் உணர்வை ஊட்டினர்! என்கிறார்.
 செயல்திறன் மிக்க உருசிய நாட்டின் தலைவர் இலெனின் அவர்களைப் போலவும், அறிவு நலஞ்சான்ற  பெரியோர் புகழும் திருவள்ளுவரைப் போலவும் நன்மக்களைப் பெறவேண்டும் என்பது கவிஞரின் உள்ளக் கிடக்கையாகும்.
‘           சீர்பெறு கொள்கையைச் செயலிற் கொணர்ந்த
            உருசிய நாட்டின் உயர்லெனின் அன்னவும்
            ஒள்ளியோர் புகழும் வள்ளுவர் அன்னவும்
            மக்கட் பயந்து மன்னிய சீருடன் வாழிய’ 64
இல்லறக் கடமைகளுள் ஒன்று விரும்தோம்பல். தமிழ்ப் பண்பாட்டின் ஒரு கூறு என்று சொல்லலாம்.
‘அறவோர்க் களித்தலும் அந்தணர் ஒம்பலும்
 துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
 விருந்தெதிர் கோடலும் 65
 ‘விருந்து கண்டபோது  என்னுறுமோ’66
என்று கூறும் இளங்கோவடிகள், கம்பரின் கூற்று நினைவு கூரத்தக்கது.
  முத்தையாச் செட்டியார், சென்னையில் தமிழிசைச் சங்கம் தோற்றுவித்த அண்ணாமலைச் செட்டியாரின் மகனாவர். நீதிக் கட்சியுடன் இந்தி எதிர்ப்புச் செய்தவர். கல்விக் கூடங்கள் பல நடத்திக் கல்வித் தொண்டாற்றியவர்.
  முத்தையாச் செட்டியாரின் அறுபதாவது பிறந்தநாளின்போது (மணிவிழா) நடந்த திருமணத்தை வாழ்த்தி, இலக்குவனார் கவிதை இயற்றியுள்ளார். இரண்டு கவிதைகள் பாடி செட்டி நாட்டரசரை வாழ்த்தியுள்ளார். இரண்டும் நேரிசை வெண்பாவால் ஆக்கப்பட்டுள்ளன.
 அறுபது வயதை அடைந்த அரசர் (முத்தையாச் செட்டியார்) ”எல்லாச் செல்வங்களையும் பெற்று வாழ வேண்டும். குற்றமற்ற பெருமையையுடைய துணைவியார் மெய்யம்மையுடன் இனிதே வாழ்க “என வாழ்த்தியுள்ளார்.
‘அறுபான் அகவை அடையும் அரசே
 பெறுவன எல்லாம் பெறவே – மறுவில்சீர்
 பெண்ணரசி மெய்யம்மை பேணித் துணைபுரிய
 ஒண்முகத்தே வாழ்க உவந்து’ 67
  அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தையும் பல தொழிற்கல்வி நிலையங்களையும் அல்லும் பகலும் சோர்வடையாமல் நடத்திவரும் முத்தையாச் செட்டியார் நலம்பல் பெற்ற பலவாண்டு வாழ்க! என்று வாழ்த்துகிறார்.
  ‘நீடு வாழ்க’ என்னும் திருமண வாழ்த்துக் கவிதை இரண்டு வெண்பாவால் அமைந்துள்ளது. ஒன்று இன்னிசை வெண்பா, மற்றொன்று நேரிசை வெண்பாவாகும். தமிழகத்தின் முன்னாள் முதல் அமைச்சர் கலைஞர் கருணாநிதியின் தலைமையில் நடைபெற்ற திருணத்தில் பாடப் பெற்ற கவிதைகள் இவை.
பெங்களூர் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராகப் பணியாற்றும் ச.சு. இளங்கோ, இராசாமணி என்றும் பெண்மணியைத் திருமணம் செய்து கொண்டவர். இத்திருமணம் ஒரு சீர்திருத்தத் திருமணாகும். “குறள்நெறி போற்றி குடிநலன் காத்தும் இன்பத் தமிழ்மொழியை இனிய உயிராக எண்ணிப் பாதுகாத்தும் வாழ்க”  என அவரை வாழ்த்தியுள்ளார்.
குறிப்புகள்:
  1. சி. இலக்குவனார், திருமண வாழ்த்து, 1-9-1935.
  2. சி. இலக்குவனார், திருமண வாழ்த்து, 1935,அ-ள் 9-11.
  1. சி. இலக்குவனார், திருமண வாழ்த்து 1935,அ-ள் 27-31.
  1. இளங்கோவடிகள், சிலப்பதிகாரம், கொலைக்களக் காதை அ-ள் 71-73.
  2. கம்பர், இராமாயணம், சுந்தரகாண்டம், காட்சிப் படலம், செ.எ. 14.
  3. சி. இலக்குவனார், ‘ஒண்முத்தே வாழ்க’ குறள்நெறி 1-10-1965, செ.எ.1.

  • ம. இராமச்சந்திரன்