(உ.வே.சா. வின் என் சரித்திரம் 50: கலைமகள் திருக்கோயில் – தொடர்ச்சி)

என் சரித்திரம்
அத்தியாயம்-50
மகா வைத்தியநாதையர்

ஒவ்வொரு நாளும் பிள்ளையவர்களிடம் பாடம் கேட்கும் நேரம் போக
மற்ற நேரங்களிற் பழைய பாடங்களைச் சிந்தித்து வருவது மாணாக்கர்கள்
வழக்கம். சில சமயம் நான் ஆசிரியர் சொல்லும் புதிய பாடல்களையும்
கடிதங்களையும் எழுதுவேன்.

தேசிகர் பாடம் சொல்லுதல்

அவகாசம் ஏற்படும்பொழுது சுப்பிரமணிய தேசிகர் தாமே சிலருக்குப்
பாடம் சொல்லுவார். திருக்குறள் பரிமேலழகருரையில் அவருக்கு மிக்க
விருப்பம் உண்டு. அதனையும், திருக்கோவையார் இலக்கண விளக்கம் என்னும்
நூல்களையும் யாருக்கேனும் பாடம் சொல்லுவார். தேசிகர் இலக்கணச்
செய்திகளை வரையறையாகச் சொல்வதும், உரிய இடங்களில் வடமொழிப்
பிரயோகங்களையும் வடநூற் செய்திகளையும் சொல்லுவதும் மிகவும்
இனிமையாக இருக்கும். சில குறிப்பிட்ட பாடங்களையே அவர் சொல்வார். ஆனால் அவற்றைத் திருத்தமாகச் சொல்வார். தமக்குப் புலப்படாத விசயம் வந்தால்,
“பிள்ளையவர்களைக் கேட்க வேண்டும்” என்று வெளிப்படையாகச் சொல்வார்.

மகா வைத்தியநாதையர் பட்டம் பெற்ற வரலாறு

சில நாட்களில் இரவில் பாடம் நடவாதபோது சுப்பிரமணிய தேசிகரிடம்
நான் போவதுண்டு. அப்பொழுது பிள்ளையவர்கள் சொல்லும் பாடங்களைப்
பற்றி விசாரிப்பார்; என்ன என்ன அரிய விசயங்கள் சொன்னார்கள்
என்பதைக் கேட்டறிந்து பாராட்டுவார். பல பழைய வரலாறுகளைச்
சொல்லுவார். நான் சங்கீதத்திற் பயிற்சியுடையவன் என்பதை அறிந்தவராதலின்
சங்கீத வித்துவான்களைப் பற்றிய பல செய்திகளைச் சொல்லுவார்.

ஒரு நாள், “மகா வைத்தியநாதரைத் தெரியுமோ?” என்று அவர்
கேட்டார்.

“அவர்களைப் பற்றி நான் கேட்டிருக்கிறேன்; நேரே பார்த்ததில்லை”
என்றேன்.

“நீர் அவசியம் பார்த்து அவருடன் பழகவேண்டும். இம்மடத்துக்கு
வேண்டியவர்களுள் அவர் முக்கியமானவர். தமிழ் விசயத்தில்
பிள்ளையவர்கள் எப்படியோ அப்படியே சங்கீதவிசயத்தில் அவரைச்
சொல்லவேண்டும். அவர் தமிழிலும் நல்ல பயிற்சியுள்ளவர். அவர் இங்கே
அடிக்கடி வந்து நம்மை மகிழ்வித்துப் போவார்.”

‘அவர்களது சங்கீதத்தை இதுவரையில் கேளாமற் போனது என்
துரதிர்ட்டமே” என்றேன்.

“அவரை முதலில் நாம் கல்லிடைக் குறிச்சியில் சின்னப்பட்டத்தில்
இருந்தபோது பார்த்தோம். அப்பொழுது அவர் மிகவும் பால்யமாக இருந்தார்.
அப்போதே அவரிடத்தில் சங்கீதத் திறமை மிகுதியாக விளங்கியது. பெரிய
வைத்தியநாதையர், சின்ன வைத்தியநாதையர் என்ற இரண்டு வித்துவான்களும்
வேறு பலரும் வந்திருந்தனர். இவ்விடம் போலவே கல்லிடைக் குறிச்சியிலும்
அடிக்கடி பல வித்துவான்கள் வந்து போவார்கள். ஒரு நாள் ஒரு மகாசபை
கூட்டி இந்த மூன்று வைத்தியநாதையர்களையும் பாடச் சொன்னோம்.
மற்றவர்களைவிட மகா வைத்தியநாதையருடைய சக்திதான் சிறந்ததாக
இருந்தது. இவ்விசயத்தை அவரோடு போட்டியிட்ட வித்துவான்களே
ஒப்புக்கொண்டனர். அந்த மகா சபையில் எல்லாவித்துவான்களுடைய சம்மதத்தின் மேல் அவருக்கு ‘மஃகா’ என்ற பட்டம் அளிக்கப்பெற்றது. அதற்கு முன் வெறும் வைத்தியநாதையராக இருந்த அவரை அன்று முதல்தான் யாவரும் மகா வைத்தியநாதையரென்று அழைத்து வரலாயினர்.”

சுப்பிரமணிய தேசிகர் பின்னும் அச்சங்கீத வித்துவானுடைய
பெருமைகளை எடுத்துக் கூறிவிட்டு, “மகா வைத்தியநாதையருடைய
தமையனாராகிய இராமசுவாமி ஐயரென்பவர் தமிழிலே நல்ல அறிவுடையவர்.
செய்யுட்களும் கீர்த்தனங்களும் இயற்றுவார். பெரிய புராணம் முழுவதையும்
கீர்த்தனங்களாகச் செய்திருக்கிறார். மகா வைத்தியநாதையருடைய தமிழறிவு
விருத்தியாவதற்கு அவர் முக்கியமான காரணம்” என்றார்.

மகா வைத்தியநாதையரது பெருமையையும் அவரிடம் ஆதீனத்
தலைவருக்கு இருந்த அன்பையும் நன்றாகத் தெரிந்து கொண்டது முதல்
அப்பெரியாரைத் தரிசிக்க வேண்டுமென்ற விருப்பம் எனக்கு உண்டாயிற்று.
அவர் தமிழிலும் நல்ல அறிவுள்ளவரென்று தெரிந்தபோது என் விருப்பம்
அதிகமாயிற்று. அது நிறைவேறும் காலம் வந்தது. ஒரு நாள் கோடக நல்லூர்
சிரீ சுந்தர சுவாமிகள்
 என்னும் பெரியாருடன் அவர் மடத்திற்கு வந்தார்.

சுந்தர சுவாமிகள்

சுந்தர சுவாமிகள் என்பவர் அதி வருணாசிரமம் பூண்ட ஒரு துறவி.
வேதாந்த கிரந்தங்களிலும், சிவ புராணங்களிலும் தேர்ந்த அறிவுள்ளவர்.
சூதசம்ஃகிதையை அங்கங்கே விரிவாகப் பிரசங்கம் செய்து பலருடைய
உள்ளத்தில் சிவ பக்தியை விதைத்த பெரியார் அவர். திருவையாற்றோடு
சார்ந்த சப்த தான தலங்கள் ஏழிலும் திருமழபாடியிலும் பல
செல்வர்களைக் கொண்டு திருப் பணிகள் செய்வித்து அந்த எட்டு
தலங்களுக்கும் ஒரே நாளில் கும்பாபிசேகம் நடத்த எண்ணிய அப்பெரியார்
அதன் பொருட்டுத் தமிழ் நாட்டிலுள்ள சிவநேசச் செல்வர்களிடம் பொருளுதவி
பெற்று வந்தனர்.

அவருடைய சிசுயர்கள் பலர். எல்லா வகுப்பினரிலும் அவருக்குச்
சிசுயர்கள் உண்டு. மகா வைத்தியநாதையர் அவரிடம் மந்திரோபதேசம்
பெற்றுச் சில வேதாந்த நூல்களையும் பாடம் கேட்டனர். திருநெல்வேலியில்
ஐயாசாமிபிள்ளை என்னும் அன்பர் அவருடைய உபதேசம் பெற்று ஒரு மடம்
கட்டிக் கொண்டு தத்துவ விசாரமும் ஞானசாதனமும் செய்து வாழ்ந்து வந்தார்.
தத்துவராயர் இயற்றிய பாடுதுறை முதலிய நூல்களில் ஆழ்ந்த பயிற்சியுள்ளவர்
அவர்.

திருவாவடுதுறைக்குச் சுந்தர சுவாமிகள் வந்தது கும்பாபிசேகத்திற்குப்
பொருளுதவி பெறும் பொருட்டே. அவருடன் மகா வைத்தியநாதையர்,
திருநெல்வேலி ஐயாசாமி பிள்ளை முதலிய பலர் வந்தனர்.

பிள்ளையவர்களுக்கும் சுந்தர சுவாமிகளுக்கும் முன்பே பழக்கம் உண்டு.
பிள்ளையவர்கள் தமிழில் சூதசம்ஃகிதையை மொழிபெயர்த்து இயற்றியிருப்பது
தெரிந்து அதிலுள்ள செய்யுட்களை மகா வைத்தியநாதையர் மூலமாகக் கேட்டு
அதன் சுவையில் ஈடுபட்டுச் சுந்தர சுவாமிகள் பாராட்டுவார். வடமொழிச்
சூதசம்கிதையில் நிரம்பிய ஞானமுள்ள அவருக்குத் தமிழ் நூலின் பெருமை
நன்றாக வெளிப்பட்டது. அவர் தம்முடைய பிரசங்கங்களில் இடையிடையே
தமிழ்ச் சூதசம்ஃகிதையிலிருந்தும் சில செய்யுட்களைச் சொல்வதுண்டாம்.

சுவாமிகள் தம் பரிவாரத்துடன் ஓரிடத்தில் தங்கிச் சுப்பிரமணிய
தேசிகரை எப்பொழுது பார்க்கலாம் என்று விசாரித்து வர ஒருவரை
அனுப்பினார். அதற்குள் அவருடைய வரவை அறிந்த எங்கள் ஆசிரியர் அவர்
இருந்த இடத்திற்கு வந்து அவரை வந்தனம் செய்தார்.

சுவாமிகளும் தேசிகரும்

அப்பால் இருவரும் சைவ சம்பந்தமான அரிய விசயங்களைப் பற்றி
ஒருவரோடொருவர் சில நேரம் மிக அழகாகப் பேசிக்கொண்டார்கள்.
எங்களுக்கு அச்சம்பாசணையால் பல நூதன விசயங்கள் தெரியலாயின.

சுப்பிரமணிய தேசிகர் தம் வரவை எதிர்பார்த்திருக்கிறார் என்றறிந்து
சுவாமிகளும் பிறரும் எழுந்து சென்றார்கள். தேசிகர் ஒடுக்கத்தின் வாயிலுக்கு
வந்து சுவாமிகளை வரலேற்று அழைத்துச் சென்று அவரை இருக்கச் செய்து
தாமும் ஆசனத்தில் அமர்ந்தார். அவர் உத்தரவுப்படியே யாவரும் அருகில்
இருந்தனர். அக் கூட்டத்தில் இருந்த நான் மகா வைத்தியநாதையர்
முகத்தையும் சுந்தர சுவாமிகள் முகத்தையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டே
இருந்தேன்.

தேசிகரும் சுவாமிகளும் முதலில் முகமன் கூறிக் கொண்டு அப்பால் பல
விசயங்களைப் பற்றிப் பேசினர். தாம் வந்தகாரியத்தைச் சுவாமிகள் தெரிவித்தார். தேசிகர் உசிதமான பொருளுதவி செய்வதாக வாக்களித்தார்.

என் ஆவல்

மகா வைத்தியநாதையரைப் பார்ப்பதே எனக்கு மிகவும் ஆனந்தமாக
இருந்தது. அவர் முகத்திலே இருந்த ஒளியும் அமைதியும் அவர் உள்ளத்தின்
இயல்பை விளக்கின. அத்தோற்றத்தினால் மட்டும் என் ஆவல்
அடங்கவில்லை. அவர் இடையிடையே பேசின மெல்லிய வார்த்தைகளிலே
இனிமை இருந்தது. அந்த இனிமையும் என் மனத்தைக் கவர்ந்தது. ஆனால்
அவ்வார்த்தைகளாலும் என் ஆவல் அடங்கவில்லை. வைத்தியநாதையராக
இருந்த அவர் எதனால் மகா வைத்தியநாதையர் ஆனாரோ அச்சங்கீதத்தைக்
கேட்க வேண்டுமென்ற ஆசை எனக்கு அதிகரித்தது. ‘இவர் வந்திருக்கிற
காரியமோ வேறு. இக்கூட்டத்தில் ஒரு சம்பந்தமும் இல்லாமல் நமது ஆவலை
நிறைவேற்றுவதற்காக இவர் பாடுவது சாத்தியமாகுமா? நமக்கு இவ்வளவு ஆசை
இருப்பது இவருக்குத் தெரிவதற்குத்தான் சந்தர்ப்பம் உண்டா?……..எப்படியாவது
ஒரு பாட்டைக் கேட்டால் போதுமே…..ஒரு பாட்டானால் என்ன? நூறு
பாட்டானால் என்ன? அதற்கு இதுவா சமயம்?’ என்று என் மனத்துக்குள்ளே
ஆட்சேப சமாதானங்கள் எழுந்தன. இந்த யோசனையிலே சுந்தர சுவாமிகளும்
தேசிகரும் என்ன பேசினார்கள் என்பதைக் கூட நான் நன்றாகக்
கவனிக்கவில்லை.

திடீரென்று எனக்கு ஆச்சரியம் உண்டாகும்படி சுப்பிரமணிய தேசிகர்
பேசத் தொடங்கினார்: “உங்களுடைய சங்கீதத்தைக் கேட்க வேண்டுமென்று
இங்கே படிக்கும் மாணாக்கர்கள் சிலர் ஆசைப்படுகிறார்கள். பிள்ளையவர்கள்
வாக்கிலிருந்து சில பாடல்களைச் சொன்னால் திருப்தியாக இருக்கும்” என்று
அவர் மகா வைத்தியநாதையரை நோக்கிக் கூறிய போது, நான் என்
காதுகளையே நம்பவில்லை. ‘நாம் கனவு காண்கிறோமோ? நம்முடைய
யோசனையினால் விளைந்த பகற் கனவா இது?’ என்று கூட நினைத்தேன்
நல்லவேளை, அது வாசுதவமாகவே இருந்தது.

தேவகானம்

“அதற்கென்ன தடை? காத்திருக்கிறேன்” என்று சொல்லி மகா
வைத்தியநாதையர் பாட ஆரம்பித்து விட்டார். தேவகானமென்று
சொல்வார்களே அச்சங்கீதம் அப்படித்தான் இருக்குமோவென்று எனக்குத்
தோற்றியது. முதலில் தமிழ்ச் சூத சங்கிதையிலிருந்து சில செய்யுட்களைச்
சொல்லத் தொடங்கினார். தமிழ்ச் செய்யுளாகஇருப்பதனாலே முதலில் அவை மனத்தைக் கவர்ந்தன. பிள்ளையவர்கள் வாக்கென்ற பெருமையும் அவைகளுக்கு இருந்தது. மகா வைத்தியநாதையருடைய இன்னிசையும் சேர்ந்து அப்பாடல்களுக்கு
என்றுமில்லாத அழகைக் கொடுத்தது. அந்த இன்னிசை முதலில் இந்த
உலகத்தை மறக்கச் செய்தது. பாவத்தோடு அவர் பாடுகையில் ஒவ்வொரு
வார்த்தையும் உள்ளத்துள்ளே படிந்து படிந்து ஒரு பெரிய காட்சியை
நிருமாணம் செய்து வந்தது.

சூதசங்கிதையில் கைலாசத்தில் சிவபெருமான் எழுந்தருளியிருக்கும்
காட்சியை வருணிக்கும் செய்யுட்கள் அவை. வெறும் பாடல்களை மாத்திரம்
படித்தபோதும் எங்களுக்கு உள்ளத்துள்ளே காட்சிகள் எழும். புறத்தே உள்ள
பார்வையும் இருக்கும். ஆனால் அப்பாடல்கள் இசையோடு கலந்து
வந்தபோதோ எல்லாம் மறந்து போயின. அப்பாட்டு எப்படிச் சுருதியிலே
லயித்து நின்றதோ அப்படி எங்கள் மனம் அப்பாட்டின் பாவத்திலே லயித்து
நின்றது. ஒரு பாடலைக் கூறி நிறுத்தும் போதுதான் அவர் பாடுகிறார், நாம்
கேட்கிறோம் என்ற வேற்றுமை உணர்ச்சி உண்டாயிற்று.

பாடல்களைக் கூறிவிட்டுப் பிறகு பொருளும் சொன்னார். பாடல்
சொல்லும்போதே பொருள் தெரிந்து விட்டது.

பாட ஆரம்பித்துவிட்டால் அதை நிறுத்திவிட மனம் வருமா?
கேட்பவர்களுக்குப் போதுமென்ற திருப்திதான் உண்டாகுமா? சூத
சங்கிதையிலிருந்து அப்பெரியாருடைய இசை வெள்ளம் வேறு மடைகளிலே
திரும்பியது. பிள்ளையவர்கள் வாக்காகவுள்ள வேறு பல பாடல்களை அவர்
இசையுடன் சொன்னார்.

பிறகு சுப்பிரமணிய தேசிகர், “உங்கள் தமையனார் வாக்காகிய பெரிய
புராணக் கீர்த்தனையிலிருந்து சில கீர்த்தனங்கள் பாட வேண்டும்” என்றார்.
வைத்திய நாதையரிடத்திலுள்ள ‘சரக்கு’ இன்னதென்று தேசிகருக்கு நன்றாகத்
தெரியும். அவர் ஒவ்வொன்றாகக் கேட்டுக் கொண்டே வர அந்தச் சங்கீத
சிகாமணி தடையின்றிப் பாடி வந்தார்.

அவர் கீர்த்தனங்களைப் பாடும்போது பிடில், மிருதங்கம் முதலிய பக்க
வாத்தியங்கள் இல்லை. அக்காரணத்தால் அவர் இசைக்குக் குறைவு இருந்ததாக
எனக்குத் தோற்றவில்லை. அவர் கையினால் மெல்லத் தாளம் போட்டுப்
பாடியபோது ஒவ்வொருவருடைய இருதயமும் அப் பாட்டோடு ஒன்றிப்
பக்கவாத்தியம் வாசித்ததென்றுதான் சொல்ல வேண்டும்
.

இணையற்ற இன்பம்

அதுவரையில் அடைந்திராத இன்பத்தை அன்று அடைந்தேன்.
‘இவர்களுடனே போய் இருந்து சங்கீத அப்பியாசம் செய்யலாமா?’ என்ற
ஆசைகூட இடையே தோற்றியது. ஒருவாறு மகா வைத்தியநாதையரது கான
மழை நின்றது. சுந்தர சுவாமிகள் விடை பெற்றுக் கொண்டனர். அவரோடு மகா
வைத்தியநாதையரும் பிறரும் விடை பெற்று எழுந்தனர். அவர்கள் யாவரும்
மடத்தில் அவரவர்களுக்குரிய இடத்தில் விருந்துண்டு பிற்பகலில்
திருவையாற்றுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

அன்று பிற்பகலில் சுப்பிரமணிய தேசிகரை நான் பார்த்த போது,
“காலையில் மகா வைத்தியநாதையர் பாட்டைக் கேட்டீரா?” என்று அவர்
கேட்டார். “இந்த மாதிரி சங்கீதத்தை இதுவரை நான் கேட்டதே இல்லை.
அவர்களுடைய சாரீரம் எல்லாருக்கும் அமையாது. வெறும்
சாதகத்தால்மட்டும் வந்ததன்று அது” என்றேன்.

“சாதகம் மாத்திரம் போதாதென்பது உண்மைதான். அவர் நல்ல
சிவபக்தர். சிவகிருபை அவருக்கு நல்ல சாரீரத்தை அளித்திருக்கிறது. அவர்
செய்துவரும் அப்பியாசம் அந்தச் சாரீரத்திற்கு வளப்பத்தைத் தருகிறது.
எல்லாவற்றிற்கும் மேலாக அவரது தூய்மையான ஒழுக்கம் அந்தத் திவ்விய
சாரீரத்தின் அழகு கெடாமல் பாதுகாக்கிறது” என்று சொல்லி விட்டு, “அவர்
தமிழறிவும் உமக்குப் புலப்பட்டிருக்குமே!” என்றார்.

“ஆம், அவர் பாடல் சொல்லும்போதே பொருள் தெளிவாகிறது”
என்றேன்.

(தொடரும்)

என் சரித்திரம், உ.வே.சா.