Showing posts with label பிராமணர்கள். Show all posts
Showing posts with label பிராமணர்கள். Show all posts

Monday, May 31, 2021

ஆதித்த காிகாலனைப் பிராமணர்களே கொன்றனர்!

 அகரமுதல


(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 60 / 69  இன் தொடர்ச்சி)





தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

61 / 69

கவிதைத் திறவுகோல்

The Treasure–Trove of Time and the Verse–Key: An English Translation of Kalaignar Karunanidhi’s காலப் பேழையும் கவிதைச் சாவியும்(2009)

புது வரலாற்றியம்(New Historicism) என்பது கடந்த இருபது முப்பது ஆண்டுகளாக மேனாட்டாரால் கையாளப்பெறும் வரவேற்பிற்குரிய திறனாய்வு முறையாகும். இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறும் வகையில் ‘கலைஞரின் காலப்பேழையும் கவிதைச்சாவியும்’ என்னும் கவிதைத் தொகுதி உள்ளது என்கிறார்.  இந்நூலை ஆங்கிலத்தில் கவிதை விளக்கங்களுடனும் சிறப்புகளுடனும் திறனாய்வு நோக்கில் நமக்குப் பேரா.ப.ம.நா. தந்துள்ளார்.

கவிதைத் திறவுகோல் கொண்டு காலப் பேழையினைக் கவனமாகத் திறந்து தமிழக வரலாற்றை நோக்க வேண்டியதன் இன்றியமையாமையை ஆங்காங்கே கலைஞர் அழுத்தமாகச் சொல்வதாகப் பேரா.ப.மருதநாயகம் குறிப்பிடுகிறார். வரலாற்றை வாளும் கேடயமுமாகக் குறிப்பிட்டு வரலாறு தெரிந்தால்தான் பகைப்புலத்தைச் சந்திக்க இயலும் எனக் கலைஞர் கூறுகிறார். அவர் கூறும் வரலாற்று உண்மைகளில் குறிப்பிடத்தகுந்தது ஆதித்த கரிகாலன் கொலை செய்யப்பட்டதாகும். கொலைகாரர்கள் பழியிலிருந்து தப்பிப்பதற்காக அவரது குடும்பத்தினரே கொன்றதாகக் கதை கட்டி விட்டனர். அதனால் உண்மை மறைக்கப்பட்டுள்ளது. காட்டுமன்னார்குடிக் கல்வெட்டுச் செய்தி மூலம் பிராமணர்களே அவரைக் கொன்றனர் என்ற உண்மையைப் பதிவு செய்துள்ளார். இத்தகைய வரலாறு கூறும் கவிதையை மூல நயம் சிதையாமல் மொழிபெயர்த்துள்ளார்.

 கலைஞர் கருணாநிதி – கலை நாயகன் (Kalaignar Karunanidhi : Hero as Artist (Seethai pathippagam, 2013) எனும் ஆங்கில நூல் கலைஞரின் படைப்புகளை ஆராய்கிறது. இந்நூலின் உட்தலைப்புகள் 1) கவிதைகள் : இனப் பெருமிதவுணர்வுபற்றியவை, 2) கவிதைகள் : மாந்த வாழ்வின் தன்மையும் நோக்கும்பற்றியவை, 3) பழந்தமிழ்ச் செவ்விலக்கியங்களின் மீட்டுருவாக்கங்கள், 4) வரலாற்றுப்புதினங்கள், 5) சிறுகதைகள், 6) நாடகங்களும் திரைப்படங்களும், 7) கட்டுரைகளும் சொற்பொழிவுகளும், 8) கடிதங்கள், 9) தன்வரலாறுகள் ஆகியன.

பேராசிரியர் நன்னன்  – ஆளுமை, புலமை, தொண்டு(2013)

பெரியாரியல் படைப்பாளர், தொலைக்காட்சி வாயிலாகத் தமிழைத்தவறின்றி எழுத வழிகாட்டிய தமிழறிஞர் முனைவர் மா.நன்னன் அவர்களின் தமிழ் ஆளுமை, தொண்டு முதலியவை இந்நூலில் சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

  1. நன்னன் என்னும் ஆளுமை, 2. புலவர் போற்றும் பேராசிரியர், 3.பகுத்தறிவுப் பாதையில் திருக்குறள், 4. அறிஞர் சுட்டும் தமிழ் நெஞ்சம், 5. பெரியாரைப் பேணி ஒழுகல், 6. எழுத்து அறிவித்த இறைவன் ஆகிய தலைப்புகளில் அறிஞர் நன்னனின் உரைநடைச்சிறப்பு, உரைச்சிறப்பு, தமிழில் கலந்து விட்ட மாசுகளை அகற்ற மேற்கொண்ட முயற்சி முதலியவற்றைத் திறம்படவிளக்கியுள்ளார். முடிவுரையில், இராபருட்டு பிரெளனிங்கு(Robert Browning) என்பார் எழுதிய இலக்கண வல்லுநர் ஒருவர் குறித்த பாடல் அறிஞர் நன்னனுக்கு அப்படியே பொருந்தவதைச் சுட்டிக் காட்டியிருப்பார். அப்பாடலின் தொடக்க வரிகளும் இறுதி வரிகளும் வருமாறு:

மரணம் அவர் கழுத்தை நெருக்கிப் பிடித்தபிடி

இறுகும்போதும் அவர் இலக்கணத்தை விடவில்லை.

.. ..  .. எம் கடன் என்றும்

மூச்சுள்ளவரை மொழிப்பணிசெய்துகிடப்பதே!

தமிழைத் தமிழாகவே வளர்க்கப்பாடுபட்ட அறிஞர் நன்னனின்  அருமை பெருமைகளை அருமையாக உரைக்கும் நூல் இது.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 62/69)


Monday, May 10, 2021

பிராமணர்கள் அறவுணர்வற்ற பண்பாட்டை உருவாக்கிப் பரப்பினார்கள்! - ப.மருதநாயகம்

அகரமுதல

      11 May 2021      No Comment

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 41/69  இன் தொடர்ச்சி)



தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

  42/69

வடமொழி ஒரு செம்மொழியா?(2020) (தொடர்ச்சி)

மந்திரங்களின் பல்வேறு அறிஞர்கள் மொழிபெயர்ப்புகளையும் அரவிந்தர், சருமா முதலான பலரின் ஆய்வுரைகளையும் எடுத்துக் கூறி வேதங்களில் உள்ள முரண்பாடுகளையும் தெளிவின்மையையும் மனிதநேயமற்ற கூறுகளையும் பேரா.ப.ம.நா.விளக்கியுள்ளார். மனிதநேயமற்றதை எவ்வாறு இலக்கியமாகக் கருத இயலும்? இலக்கிய வகைப்பாட்டிற்கே வராத ஒன்றை எவ்வாறு செவ்வியல் இலக்கியமாகக் கூற முடியும்?

பகுதி இரண்டின் இரண்டாம் கட்டுரை, இலக்கிய நோக்கில் வேத உபநிடதங்களை ஆராய்கிறது.

சமற்கிருத இலக்கிய வரலாற்றை  1899இல் எழுதியவர் ஆர்தர் மக்குடானல்(Arthur A. Macdonell)என்னும் ஆங்கிலேய அறிஞர். அவர் நூலின் முன்னுரையில் வடஇந்தியர்களுக்கு வரலாற்று உணர்வு இன்மையால் அம்மொழி இலக்கியங்களின் காலத்தைச்சரியாக அறியமுடியவில்லை எனக் குறிப்பிட்டிருப்பார். ஆனால், உண்மையில் அவர்கள் சமற்கிருத இலக்கிய்ங்களைப் பிற மொழி இலக்கியக் காலங்களுக்கு மூத்ததாகவும் முதன்மையானதாகவும் காட்ட முயன்ற மோசடிகளால்தான் காலக் குழப்பம் ஏற்பட்டுள்ளது. எனினும் ஆய்வறிஞர்கள் பலரும் சமற்கிருத வாணர்களின் திருட்டுத்தனத்தையும் பொய்யாகக் கற்பிக்கப்படும் போலிச்சிறப்புகளையும் வெளிப்படுத்தி வருகின்றனர். இவற்றால் சமற்கிருத இலக்கியங்கள் அவற்றிற்குக் கொடுக்கப்பட்ட உயர்நிலையை இழந்துவருகின்றன. இதனை இக்கட்டுரை மூலம் நாம் புரிந்து கொள்ளலாம்.

இருக்குவேதம் குறிப்பிடும் தெய்வங்களுள் சில அறவுணர்வு அற்றவை. வெள்ளை யசுர் வேதம், பிராமணர்கள் தெய்வங்களைத் தம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவர் என்கிறது. பிராமணங்கள், “மாந்தர்களில் பிராமணர்களே தெய்வங்கள் என்று வணங்கப்படவேண்டியவர்கள்” என்கிறது. பெண் தெய்வங்கள் யாவும் ஆண்தெய்வங்களுக்குக் கீழான நிலையிலேயே வைக்கப்படுகின்றன. இருக்கு வேதத்தின் பத்தாம் பகுதியில் யமி தன் உடன்பிறந்தவனான யமனை  உடலுறவுக்கு அழைக்கிறாள் என்று குறிக்கப்பெற்றுள்ளது. தரக்குறைவான உயர்வு நவிற்சிப்பாடல்கள் பல இருக்கு வேதத்தில் முதல் பகுதியிலும் எட்டாம் பகுதி இறுதியிலும் பத்தாம் பகுதியிலும் புகுத்தப்பட்டுள்ளன.

பெண்களை இழிவுபடுத்தும் பாடல்கள் பல இருக்கு வேதத்தில் உள்ளன. ஒரு பாடலில் இந்திரன் சொன்னதாகப் பெண்களுக்கு அறிவு குறைவு எனக் கூறப்பட்டுள்ளது. ஒரு பாடலில், “பெண்களோடு நட்பு என்பதே கூடாது. அவர்களுடைய இதயங்கள் ஓநாய்களின் இதயங்களை ஒத்தவை” எனக் கூறப்பட்டுள்ளது.

இருக்குவேதப் பாடல்கள் உலகத்தோற்றம் குறித்து முரண்பாடான குழப்பமான கருத்துகளையே தெரிவிக்கின்றன. அதில் நான்கு வருணங்களைக் குறிப்பிடும் பாடல் உள்ளது. தெய்வங்களைத் தமது கட்டுக்குள் வைத்திருப்பதாக ஏமாற்றிப் பிற வருணத்தாரை அச்சுறுத்தித், தங்கள் வாழ்க்கையைப் பிராமணர்கள் வளப்படுத்திக் கொண்டனர் என்பது நான்கு வேதங்கள் மூலம் தெளிவாகத் தெரிகிறது. வேதங்களைப் பிற வருணத்தார் படிக்கக்கூடாது எனச் சங்கரரும் இராமானுசரும்கூடத் தெரிவித்துள்ளனர்.  அவர்கள் வேதங்களைப் படிக்க வேண்டுமானால், மகாபாரதத்தைப் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றனர்.

இருக்கு வேதம் திருமண விருந்துகளில் பசுக்கள் கொல்லப்பட்டு அவற்றின் ஊன் பிராமணர்களால் உண்ணப்பட்டதைப் பாடுகிறது. இந்திரனுக்கு வேள்விகளில் காளைகள் கொல்லப்பட்டு விருந்தளிக்கப்பட்டதும் சொல்லப்படுகிறது. ஆனால், பிற வருணத்தார் பசுக்கொலை புரிந்தால்  மரணத்தண்டனை விதிக்கப்படும் என வெள்ளை யசுர் வேதம் கூறுகிறது.

பெண்குழந்தைகளுக்கு எதிராகவே வேதங்கள் பேசுகின்றன. பெண்குழந்தை பிறப்பை அதருவவேதம் இழிவாகக் கூறுகிறது. பெண்குழந்தைகள் பிறந்தால் அக்குழந்தைகளை இறக்கும்படிச்செய்வதாக யசுர் வேதம் கூறுகிறது. அயித்தரேய பிராமணம், பெண்குழந்தை பெறுவது பெருந்துன்பத்திற்கு ஆளாவது என அறிவிக்கிறது. (ஐங்குறுநூற்றுப்பாடலில் தெய்வத்திடம் பெண் குழந்தை வேண்டும் பெற்றோரைக்காணலாம்.)

கொடிய எண்ணங்களைச் சொல்லும் அதருவ வேதம், பிராமணர்கள் தங்கள் பகைவர்களுக்கு எதிராகப் பயன்படுத்த வேண்டிய ஆயுதம் என்று மனுநூல் கூறுகிறது. சாமவிதானபிரமாணம் பலவிதமான மூடநம்பிக்கைகளைப் போற்றுகிறது. மைத்திராயணி உபநிடதம், பிராமணிய விதிகளைக் கடைப்பிடித்து, வருணாசிரம தருமத்தையும்  சாதிக்கட்டுப்பாடுகளையும் ஏற்றுக் கொண்டவர்களே, -பிராமணப் புரோகிதர்களே, முத்தி நிலையடைய முடியும் என்கிறது.

தரும சூத்திரங்கள் பலவிதமான சடங்குகள் எவ்வாறு செய்யப்பட வேண்டுமென்று விளக்குகின்றன. இவைகுறித்து மக்குடனால், சூத்திரங்கள் கூறும் எண்ணற்ற சடங்குகளை எண்ணிப் பார்க்கும்போது சோம்பேறிகளான புரோகிதப் பிராமணர்கள் இந்துக்களின் அறிவை முடக்கி அவர்களை என்றென்றும் தங்களுக்கு ஆன்மிக அடிமைகளாக வைத்துக்கொள்வதற்காகக் கடைப்பிடித்தவையே அவையென்று முடிவுகட்ட நேரும் என்கிறார்.

பகுதி இரண்டின் மூன்றாம் கட்டுரை வேதகாலப் பண்பாடு குறித்துக் கூறுகிறது. தருமானந்த கோசம்பியின் ‘பகவான் புத்தர்’ முதலான நூல்களில் நேர்மையான ஆய்வு முடிவுகளைக் காணலாம். நாடோடிகளாக வாழ்ந்த ஓரினம் மூடநம்பிக்கைகள் நிறைந்த தொன்மங்கள் மூலமும் குதிரைகள், மனிதர்கள், பசுக்கள் ஆகியவற்றை யெல்லாம் பலியிடும் அசுவமேதம், நரமேதம்,வாசபேயம், கோமேதயாகம் போன்றவற்றைக் கொண்டு மன்னர்களை அடிமையாக்கியதன் மூலமும் அறவுணர்வற்ற ஒரு பண்பாட்டை உருவாக்கி அதை நாடு முழுவதும் பரப்பியிருக்கிறார்கள் என்னும் வரலாற்று உண்மையை இவ்வாய்வு உணர்த்துகிறது.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 43/69  )