Showing posts with label மறக்க முடியுமா?. Show all posts
Showing posts with label மறக்க முடியுமா?. Show all posts

Wednesday, September 20, 2017

மறக்க முடியுமா? – பேராசிரியர் நா.வானமாமலை : எழில்.இளங்கோவன்





மறக்க முடியுமா? – பேராசிரியர் நா.வானமாமலை

 இவர் எந்த ஒரு கல்லூரியிலோ, பல்கலைக்கழகத்திலோ பேராசிரியராகப் பணியாற்றவில்லை. தொழில் முறைப் பேராசிரியராகக் கூட இருந்ததில்லை. ஆனாலும் இன்றும் கூட அறிவுத் தளங்களில் இவர் பேராசிரியர் என்றே அழைக்கப்படுகிறார் என்பது இவரின் பெருமைக்குச் சான்று.
 திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி இவரின் சொந்த ஊர். கார்த்திகை 22, 1938 / 7-.12.-1907 அன்று இவர் பிறந்தார்.
 திருநெல்வேலி இந்துக் கல்லூரியிலும், மதுரை அமெரிக்கன் கல்லூரியிலும் பயின்ற இவர் முதுகலைப் பட்டம் பெற்று, சில காலம் ஆசிரியராகப் பணியாற்றினார்.
  பொதுவுடமைக் கொள்கையால் ஈர்க்கப்பட்ட நா.வா, இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் மாநிலக் கல்விப் பிரிவுக்குப் பொறுப்பாளர் ஆனார்.
  அதைத் தொடர்ந்து சில அடிப்படையான அறிவியல் நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தார். பல அறிவியல் கட்டுரைகளை எளிமையாக எழுதியிருக்கிறார்.
  ‘விண்வெளி இரசாயனம்’ – ‘விஞ்ஞானத் தொழில்புரட்சியும் அதன் விளைவும்’போன்ற அறிவியல் நூல்களும் இவரால் எழுதப் பெற்றுள்ளன.
  (இ)ரப்பரின் கதை, இரும்பின் கதை, காகிதத்தின் கதை ஆகிய நூல்களை இவர் சிறுவர்களின் அறிவியல் சிந்தனைக்காக எழுதி இருக்கிறார்.
  தமிழ்நாட்டில் தி.நா.சு., கி.வா.ச., பெரியசாமி தூரன், செ.அன்னகாமு போன்றவர்கள் நாட்டுப்புறப் பாடல்கள் குறித்து ஆர்வம்காட்டி வந்த காலம் அது.
 அப்பொழுது நாட்டுப்புறப் பாடல்களைச் சேகரித்து அதன் வரலாறு, பாடியவர்கள், பாடல் வழங்கிய இடங்கள், அவை சார்ந்த நிலம், சூழல், மெய்ப்பொருள், பாடல்களைச் சேகரித்தோர் என்று விளக்கங்களுடன் நாட்டுப்புறப் பாடல்களைத் தொகுத்து வெளியிட்டார் நா.வானமாமலை.
  ‘தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்’ (1960), ‘தமிழர் நாட்டுப் பாடல்கள்’ (1964) ஆகிய இரு தொகுப்புகள் அப்படி அவரால் வெளியிடப்பட்டனவாகும்.
 நாட்டுப் புறப் பாடல், மானிடவியல், அடித்தள மக்களின் ஆய்வு போன்றவை அறிமுகமாகி விவாதத்தில் இருக்கும் போது ‘நாட்டுப்புறவியல்’ என்ற கலைச் சொல் உருவானது.
 அதை நா.வானமாமலை ‘நாட்டார் வழக்காற்றியல்’ என்றார். இவ்விரு சொற் பெயர்கள் இன்றும் வழக்கில் இருந்து வருகின்றன.
  நாட்டார் கதைகளைப், பாடல்களைப் பலர் தொகுத்தார்கள், வெளியிட்டார்கள்.
  சமூகவியல், மானிடவியலில் அந்நாட்டார் வழக்காற்றியல் எப்படி மையம் பெறுகிறது என்பதைச் சுட்டிக் காட்டினார். இவற்றை ஆய்வுகளுக்கும் உள்ளாக்கினார் நா.வானமாமலை.
  அதே சமயம் கதைப் பாடல்களுக்கும் முன்னுரிமை கொடுத்து, அவற்றை வெளிக் கொண்டுவந்த பெருமை இவரையே சாரும்.
  பேராசிரியர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் மதுரைப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக இருந்த போது, அவரின் துணையுடன் ஆறு கதைப் பாட்டிலக்கியங்களைப் பதிப்பாசிரியராக வெளியிட்டார் நா.வா. வெளியிட்டது மதுரைப் பல்கலைக்கழகம்.
அவை,
  1. கட்டபொம்மன் கதைப்பாடல்
  2. கட்டபொம்மன் கூத்து
 இவை இரண்டும் கட்டபொம்மன் குறித்த வரலாற்றை மக்களின் நாட்டுப்புறப் பார்வையில் சொல்கிறது.

  1. முத்துப்பட்டன் கதை
 இந்நூல் அருந்ததியர் சமூகம் குறித்த, குற்றால மலைப்பகுதியின் கதையாகச் சொல்லப்பட்டுள்ளது. செக்கோசுலோவேக்கிய மொழியில், மொழிபெயர்க்கப்பட்ட முதல் தமிழ்க் கதைப் பாட்டிலக்கியம் இது.
  1. கான்சாகிபு சண்டை
மருதநாயகம் என்று அழைக்கப்பட்ட கான்சாகிபு நடத்திய சண்டை பற்றிய நூல் இது.
  1. காத்தவராயன் கதைப் பாடல்
ஒடுக்கப்பட்ட பறையர் சமூகத்தளத்தில் இக்கதைப் பாட்டிலக்கியம் அமைகிறது.
  1. ஐவர் இராசாக்கள் கதை
– நாயக்க மன்னரின் மேலாதிக்க ஆட்சியை ஏற்க மறுத்த ஐந்து பாண்டிய வம்சத்தைச் சேர்ந்தவர்களின் கதை இது.
  இந்தக் கதைப் பாட்டிலக்கியப் பதிப்பின் வரலாற்றுக் குறிப்புகள், வழக்குச் சொற்கள், நிகழ்வின் குறிப்புகள், சொல் விளக்கம் ஆகிய சிறப்புகள் உடையன. இவற்றுடன் நா.வானமாமலையின் ஆய்வு முன்னுரைகள் மிக முதன்மைத்துவம் பெற்றதாக அமைந்திருக்கின்றன.
 1975ஆம் ஆண்டு தார்வார் திராவிட மொழியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றினார்.
 அப்பொழுது International of Tamil Folk Creations என்று இவரால் எழுதப்பட்ட நாட்டுப்புற இலக்கிய ஆய்வு நூல் மிகச் சிறப்பாகப் பேசப்பட்டது.
 இந்நூலும், இவரின் பல ஆங்கிலக் கட்டுரைகளும் இன்னமும் தமிழில் மொழிபெயர்க்கப் படவில்லை.
 தமிழின் ஆய்வுத் தளத்தை விரிவுபடுத்தும் நோக்கில் ‘ஆராய்ச்சி’ என்ற ஆய்விதழை 1969ஆம் ஆண்டு தொடங்கினார் இவர்.
 இதில் இவரின் ஆய்வுகள் மட்டுமின்றி, பல்வேறு  துறை சார்ந்த ஆய்வறிஞர்களின் ஆய்வுக்கட்டுரைகளையும் வெளியிட்டு வந்தார்.
 பெரும் பொருளாதார நெருக்கடிகளுக்குள்ளும், தன் இறுதிகாலம் வரை இவ்விதழை இவர் நடத்தி வந்தது குறிக்கத்தக்கது.
  1. இந்திய நாத்திகமும் மார்க்சியமும்;
  2. இலக்கியத்தின் உள்ளடக்கமும் உருவமும்;
  3. உயிரின் தோற்றம்;
  4. உரைநடை வளர்ச்சி;
  5. கட்டபொம்மன் கதைப்பாடல்;
  6. கட்டபொம்மன் கூத்து;
  7. கான்சாகிபு சண்டை;
  8. முத்துப்பட்டன் கதை;
  9. காத்தவராயன் பாடல்;
  10. ஐவர் இராசாக்கள் கதை;
  11. தமிழ்நாட்டில் சாதி சமத்துவப் போராட்டம்;
  12. தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்;
  13. தமிழ் நாட்டுப் பாடல்கள்;
  14. தமிழர் பண்பாடும் தத்துவமும்;
  15. தமிழர் வரலாறும் பண்பாடும்;
  16. பழங்கதைகளும் பழமொழிகளும்;
  17. புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்;
  18. மக்களும் மரபுகளும்;
  19. மார்க்சிய அழகியல்;
  20. மார்க்கிய சமூக இயல் கொள்கை;
  21. வ.உ.சி முற்போக்கு இயக்கங்களிள் முன்னோடி;
  22. Studies in Tamil Folk Literature
ஆகிய இவரின் 22 நூல்களும் அரசுடைமையாக்கப்பட்டுள்ளன.
  இவரின் இளமைக் காலத்தில், நாங்குநேரி வட்டார விவசாய இயக்கத்திலும், நெல்லை மாவட்டத் தொழிலாளர் இயக்கத்திலும் செயல்பட்டார்.
  புகழ்பெற்ற திருநெல்வேலி சதிவழக்கு விசாரணைக் கைதிகளுள் இவரும் ஒருவர்.
  கோயில் நுழைவு, சாதி ஆதிக்கத்திற்கு எதிராக, நில மீட்புப் போராட்டங்கள் எனப் பல்வேறு போராட்டங்களில் இவர் பங்கு கொண்டுள்ளார்.
 நகராட்சி உறுப்பினராகவும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலத்தலைவராகவும் இவர் ஆற்றிய குமுகாயப் பணிகளும் மறக்கக் கூடியவை இல்லை.
 இப்படிப்பட்ட பெரும் சிறப்புக்கு உரிய பேராசிரியர் நா.வானமாமலை அவர்கள் தன் 73ஆம் அகவையில் 1980ஆம் ஆண்டு காலமானார்.
எழில்.இளங்கோவன்
கருஞ்சட்டைத் தமிழர் – 17, செட்டம்பர் 2017

Sunday, July 23, 2017

மறக்க முடியுமா? – ஔவை துரைசாமி – எழில்.இளங்கோவன்



அகரமுதல 196,  ஆடி07, 2048 / சூலை 23, 2017

மறக்க முடியுமா? – உரைவேந்தர் ஔவை சு.துரைசாமி


கல்வெட்டுகளைப் படியெடுத்தல், ஏடுபார்த்து எழுதுதல், செப்பேடுகளைத் தேடி ஆய்வு செய்தல் ஆகியனவற்றில் தேர்ந்த இலக்கிய – இலக்கண ஆய்வறிஞர், உரைவேந்தர், நாவலர், பேரவைத் தமிழ்ச்செம்மல், சித்தாந்த கலாநிதி என்று தமிழ் உலகத்தால் போற்றப்பட்டவர் ஔவை சு.துரைசாமி(பிள்ளை) அவர்கள்.
கவிஞர் சுந்தரம்(பிள்ளை), சந்திரமதி அம்மையாரின் ஐந்தாம் மகனாகப் பிறந்தவர் இவர்.
பிறந்த ஆண்டு  : ஆவணி 21, 1933 / 1902 செட்டம்பர் 5.
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவரின் சொந்த ஊர் ஔவையார் குப்பம் என்பதனால், இவர் ஔவை துரைசாமி என்று அழைக்கப்பட்டார்.
இவரின் தொடக்கக் கல்வி உள்ளூரில். அதில் திண்ணைக்கல்வியும் அடங்கும்.
திண்டிவனத்தில் அமெரிக்கன் ஆர்க்காடு நற்பணி உயர்நிலைப் பள்ளியில் இறுதி வகுப்பு வரை பயின்றார். ஊரிசு கல்லூரியில் அவரின் கல்வி தொடர்ந்தது.
குடும்பத்தில் பொருளாதார நெருக்கடி. அதனால் கல்லூரி இடை நிறுத்தமாகி, ‘உடல் நலத் தூய்மை’ மேற்பார்வையாளராகப் பணியாற்றினார்.
அக்காலத்தில் ‘துப்புரவு’ பணித்துறை இது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பணியில் 6 மாதங்கள் பணியாற்றிப் பின் அதிலிருந்து விலகினார், காரணம் அவரின் ஆழ்ந்த தமிழ்க் காதல்தான்.
பாவரசு வேங்கடாசலம் அவர்களிடம் ஔவை துரைசாமி தமிழ் இலக்கிய, இலக்கணங்களைப் பயின்றார். நாவலர் ந.மு.வேங்கடசாமி(நாட்டார்) அவர்களிடமும் தம் தமிழ் அறிவை வளர்த்துக்கொண்டார்.
சைவ சமயம் குறித்த கல்வியைக் கந்தசாமித் தேசிகர், தவத்திரு வாலையானந்தா அடிகள் ஆகியோரிடம் பயின்றார்.
அன்றைய வட ஆர்க்காடு மாவட்டத்தில் சில பள்ளிகளில் தமிழாசிரியர் பணி;
இராணிப்பேட்டை காரைத் தொடக்கப்பள்ளியில் தமிழ் ஆசிரியர்;
1929 தொடக்கம் சில ஆண்டுகள் செங்கம், போளூர், காவிரிப்பாக்கம், செய்யாறு ஆகிய இடங்களில் பள்ளித் தலைமையாசிரியர் பணி.
கரந்தைத் தமிழவேள் உமா மகேசுவரனார் அவர்களால் கரந்தைத் தமிழ்ச் சங்கப் பள்ளியில் ஆசிரியராக நியமிக்கப் பெற்ற ஔவை துரைசாமி, அப்பணியில் இருந்துகொண்டே சென்னைப் பல்கலைக்கழகத்தில் ‘வித்துவான்’ படிப்பில் தேர்ச்சி பெற்றார்.
1942ஆம் ஆண்டு திருப்பதி திருவேங்கடவன் கீழ்திசைக் கல்லூரியில் பேராசிரியர் ஆனார்.
1943 தொடக்கம் 8 ஆண்டுகள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஆய்வுத்துறை விரிவுரையாளராக இருந்தபோது இவர் எழுதிய சைவ சமய இலக்கிய வரலாறு என்ற நூல் அப்பல்கலைக் கழகத்தால் வெளியிடப்பெற்றது.
1951ஆம் ஆண்டில் இவர் மதுரை, தியாகராயர் கல்லூரியில் பேராசிரியர் ஆனார்.
தொடர்ந்து மதுரைப் பல்கலைக்கழக ஆய்வுப் பேராசிரியராக இருந்தபொழுது இவரால் எழுதப் பெற்ற ‘ஊர்ப் பெயர் வரலாற்று ஆராய்ச்சி’ என்ற நூல் இறுதிவரை அச்சாகாமலே போய் விட்டது.
புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து ஆகிய சங்க இலக்கியங்களுக்கு மிகச் சிறந்த உரை எழுதியிருக்கிறார்.
திருவருட்பா 9 தொகுதிகளுக்கும், ஞானாமிர்தம், சிவஞானபோதம் ஆகியவற்றுக்கும் இவரின் உரை குறிப்பிடத்தக்கது.
யசோத காவியம்’ என்ற சமண இலக்கிய நூலை ஒலைச்சுவடியில் இருந்து ஆய்ந்து உரை எழுதியவர் ஔவை துரைசாமி.
வடமொழியில் பல்லவ மகேந்திரன் இயற்றிய ‘மத்த விலாசம்’ என்ற நாடக இலக்கியத்தைத் தமிழில் மொழியாக்கம் செய்தவர் இவர்.
சிலப்பதிகாரச் சுருக்கம் – மணிமேகலைச் சுருக்கம் – சீவகசிந்தாமணிச் சுருக்கம் – சூளாமணிச் சுருக்கம் – சிலப்பதிகார ஆராய்ச்சி – மணிமேகலை ஆராய்ச்சி – சீவகசிந்தாமணி ஆராய்ச்சி – திருவோத்தூர் தேவாரத் திருப்பதிக உலா – சைவ இலக்கிய வரலாறு – பண்டைய சேர மன்னர் வரலாறு என 34 நூல்கள் இவரால் எழுதப்பெற்றுள்ளன.
இவை தவிர ஊர்ப் பெயர் வரலாற்றாராய்ச்சி – தமிழ்த்தாமரை – மருள்நீக்கியார் நாடகம் – ஊழ்வினை என இவர் எழுதிய 7 நூல்கள் அச்சாகாமலே போய்விட்டன.
ஔவை துரைசாமி அவர்கள் தான் எழுதிய நூல்களுக்கான உரைகள் அனைத்தையும் முழுமையாக எழுதியிருந்தாலும், மணிமேகலைக்குக் கடைசி 4 காதைகளுக்கு மட்டுமே உரை எழுதினார்.
பாகனேரி மு.காசி விசுவநாதம் அவர்கள் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்களைக் கொண்டு சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதச் செய்தது போல மணிமேகலைக்கும் அவரைக் கொண்டே உரை எழுதச் செய்தார்.
30 காதைகள் கொண்ட மணிமேகலையின் 26 காதைகளுக்கு மட்டுமே உரை எழுதிய நாட்டார் அவர்கள், உடல்நிலை தொய்வு காரணமாகத் தொடர்ந்து உரை எழுத இயலாநிலை ஏற்பட்டது.
இதனால் பாகனேரி காசி. விசுவனாதருடன், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சியாளராக இருந்த வ.சுப்பையா அவர்களும் இணைந்து அப்போது அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆராய்ச்சிப் பேரறிஞராக இருந்த ஔவை துரைசாமி அவர்களை வேண்டி, இறுதி நான்கு காதைகளுக்கு உரை எழுதச் செய்தனர்.
  1. சமயக் கணக்கர் தந்திரம் கேட்டகாதை
  2. கச்சிமாநகர் புக்க காதை
  3. தவத்திறம் பூண்டு தருமம் கேட்டகாதை
  4. பவத்திறமறுகெனப் பாவை நோற்ற காதை.
இந்நான்கு காதைகளில் கச்சிமாநகர் புக்க காதையைத் தவிர்த்து ஏனைய 3 காதைகளுக்கும் அவ்வளவு எளிதில் உரை எழுதிவிடமுடியாது.
சைவவாதி, பிரம்மவாதி, வைணவவாதி, வேதவாதி, ஆசீவகவாதி, நிகண்டவாதி, சாங்கியவாதி, வைசேடிகவாதி, பூதவாதி எனப் பல்வெறு சமயக் குரவர்களின் தத்துவ விளக்கங்கள் –
பௌத்தத்தின் 12 நிதானங்கள், அவற்றின் மண்டில, கண்ட, சந்தி, தோற்ற, கால வகைகள் – நால்வகை வாய்மை, ஐவகை கந்தம், அறுவகை வழக்கு போன்ற தத்துவ விளக்கங்களை, வட மொழி பௌத்த நூல்களின் நுண்மான் நுழைபுலத்துடன் உரைவேந்தர் எழுதிய உரையினைப் படித்துப் படித்து மகிழ்ந்து போற்றலாம்.
இப்படிப்பட்ட பேரறிஞருக்கு 1960 ஆம் ஆண்டு மதுரை, திருவள்ளுவர் கழகம் ‘பல்துறை முற்றிய புலவர்’ பட்டத்தையும்
1980ஆம் ஆண்டு தமிழக ஆளுநர் பிரபுதாசு பட்டுவாரி ‘பேரவைத் தமிழ்ச் செம்மல்’ பட்டத்தையும்
தமிழ் எழுத்தாளர் சங்கம் ‘தமிழ்த் தொண்டு செய்த பெரியார்’ பட்டத்தையும் வழங்கியிருக்கிறார்கள்.
ஔவை துரைசாமி அவர்களின் மாணவர் இராதா. தியாகராசன் ‘உரைவேந்தர்’ என்ற பட்டத்தையும், தங்கப் பதக்கத்தையும் வழங்கிப் பெருமை சேர்த்துள்ளார்.
உரைவேந்தர் ஔவை துரைசாமி அவர்கள் பங்குனி 21, 2014 / 1981ஆம் ஆண்டு ஏப்பிரல் 3ஆம் நாள் காலமானார்.
எழில்.இளங்கோவன்


கருஞ்சட்டைத்தமிழர் 22.07.2017

Wednesday, March 22, 2017

மறக்க முடியுமா? – பேராசிரியர் மா.இராசமாணிக்கனார் : எழில்.இளங்கோவன்




மறக்க முடியுமா?

பேராசிரியர் மா.இராசமாணிக்கனார்

 

நில அளவையாளராக இருந்து வட்டாட்சியராகப் பதவி உயர்வு பெற்ற மாணிக்கம் & தாயாரம்மாள் இணையரின் ஏழு பிள்ளைகளுள் மா.இராசமாணிக்கனாரும் ஒருவர்.
மாசி 29, 1938 / 1907ஆம் ஆண்டு மார்ச்சு 12ஆம்  நாள் இவர் பிறந்தார்.
இராசமாணிக்கனாரின் தந்தை மாணிக்கம் வட்டாட்சியர் என்பதனால் அடிக்கடி பணி மாறுதல் பெற்றுச் சென்று கொண்டிருந்தார்.
அதனால் இராசமாணிக்கனாரின் தொடக்க நிலைப் படிப்பு தடைபட்டு, தொடர முடியாமல் இருந்தது.
இந்நிலையில் ஆந்திர மாநிலம் சித்தூரில் இவரின் தந்தை 4 ஆண்டுகள் பணிபுரிந்தார். அப்போதுதான் இராசமாணிக்கனார் நான்காம் வகுப்பு வரை தெலுங்கு மொழியில் பயின்றார்.
குறுகிய காலத்தில் தந்தை மரணம் அடைந்ததால் மாணிக்கனாரைக் கவனிக்கும் பொறுப்பு, அவரின் அண்ணன் இராமகிருட்டிணனுக்கு ஏற்பட்டது.
குடும்ப வறுமை காரணமாக நன்னிலத்தில் ஒரு தையல் கடையில், சிறுவனாக இருந்த தம்பி இராசமாணிக்கனாரை வேலைக்குச் சேர்த்து விட்டார் அண்ணன்.
ஒரு நாள் தஞ்சை புனித பீட்டர் பள்ளியின் தலைமை ஆசிரியரைச் சந்தித்துத் தான் படிக்க விரும்புவதாகச் சொல்லியிருக்கிறார் இராசமாணிக்கனார்.
தலைமை ஆசிரியரின் உதவியால் அப்பள்ளியில் பயின்று இறுதித் தேர்வில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார் இராசமாணிக்கனார்.
அப்பள்ளியில் ஆசிரியராக இருந்த கரந்தைக் கவிஞர் இரா.வெங்கடாச்சலம், இராசமாணிக்கனாரின் அறிவாற்றலைக் கண்டு வியந்து, அவரைக் கரந்தை உமாமகேசுவரனார், நா.மு.வேங்கடசாமி நாட்டார், இரா.இராகவையங்கார் ஆகிய அறிஞர் பெருமக்களிடம் அனுப்பிப் பயிலச்செய்தார்.
1928ஆம் ஆண்டு சென்னை வந்த இராசமாணிக்கனார், வண்ணாரப்பேட்டையில் இருந்த தியாகராயர் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர் பணியில் சேர்ந்தார்.
1935ஆம் ஆண்டு வித்துவான் தேர்வில் தேறினார்.
1939ஆம் ஆண்டு கீழை மொழிகளில் இளங்கலைப்பட்டம்(பி.ஓ.எல்.) பெற்றார்.
1945ஆம் ஆண்டு ‘பெரியபுராண ஆராய்ச்சி’ என்ற ஆய்வுக்கட்டுரைக்காகக் கீழை மொழிகளில்  முதுகலைப்பட்டம்(எம்.ஓ.எல்.) பெற்றார்.
1951 ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்றார். இவரின் இளமைக் காலத்தில் சித்தர்களின் பாடல்கள், வடலூர் வள்ளலாரின் திருஅருட்பா போன்றவற்றை ஆழ்ந்து படித்தார்.
அதன் விளைவாக இவரிடம்  தன்மதிப்பு(சுயமரியாதை)ச் சிந்தனைகள் மேலோங்கி நின்றன.
சாதி ஒழிப்பு பற்றிக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.
தமிழர்களின் திருமண இல்லங்களில் சடங்குவழிவழி வழக்கங்களுடன், ஓமம் வளர்த்துச் செய்யும் சடங்குத் திருமணங்களை ஏற்க மறுத்தார்.
அதற்காகவே ‘தமிழர் திருமணம்’ என்ற முற்போக்கு நூலை எழுதித்  தன்மதிப்பு(சுயமரியாதை)த் திருமணத்தை வரவேற்றார்.
1947 தொடங்கி 1953 வரை சென்னை விவேகானந்தா கல்லூரியில் விரிவுரையாளராக இருந்தார்.
1953ஆம் ஆண்டில் மதுரை தியாகராயர் கல்லூரியில் பேராசிரியராகப் பொறுப்பேற்று தமிழ்த் துறைத் தலைவராகவும் விளங்கினார்.
1959 தொடக்கம் 1967 வரை சென்னைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியராகவும், தமிழ்த் துறைத் தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார்.
சைவச்சித்தாந்தம் குறித்த அவரின் ஆய்வுகளும், கட்டுரைகளும், நூல்களும் பெரும் வரவேற்பைப் பெற்றன.  அதனால், திருவாவடுதுறை ஆதினம் 1959ஆம் ஆண்டு இவருக்குச் ‘சைவ வரலாற்று ஆராய்ச்சிப் பேரறிஞர்’ என்ற பட்டத்தை வழங்கினார்.
மதுரை திருஞானசம்பந்த ஆதினத்திடமிருந்து 1955ஆம் ஆண்டு ‘ஆராய்ச்சிக் கலைஞர்’ என்ற பட்டம் பெற்றார்.
தருமபுரம் ஆதினம் 1963ஆம் ஆண்டு ‘சைவ இலக்கியப் பேரறிஞர்’ என்று பட்டம் வழங்கிப் பாராட்டி மகிழ்ந்தார்.
1930ஆம் ஆண்டு மா.இராசமாணிக்கனார் சென்னை வண்ணாரப்பேட்டை தியாகராயர் பள்ளியில் ஆசிரியராக இருந்த காலக் கட்டங்களில்
அருசவர்த்தனன்
முடியுடை மூவேந்தர்கள்
பொற்கால வாசகம்
முசோலினி
 ஆகிய நூல்களை எழுதினார்.
தொடர்ந்து அவர் தமிழ், வரலாறு, இலக்கியம், சைவம்  முதலான துறைகளில் பல ஆய்வு நூல்களை எழுதியிருக்கிறார்.
பல்லவர் வரலாறு, பல்லவப் பேரரசர், மொகஞ்சதாரோ அல்லது சிந்துவெளி நாகரிகம், தமிழக வரலாறும் பண்பாடும், தமிழ்மொழி இலக்கிய வரலாறு, சோழர் வரலாறு, தமிழ் இனம், தமிழக ஆட்சி, தமிழ் அமுதம்,  இலக்கிய அமுதம், தமிழ்நாட்டு வடஎல்லை, தமிழகக் கலைகள், புதிய தமிழகம், சிலப்பதிகாரக் காட்சிகள், சேக்கிழார், சேக்கிழார் ஆராய்ச்சி, சைவ சமயம், சைவ சமய வளர்ச்சி, பெரியபுராண ஆராய்ச்சி, நாற்பெரும் புலவர்கள் என்று பல நூல்கள் எழுதியிருக்கிறார்.
இவரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப் பட்டுள்ளன.
இவர் எழுதிய நூல்களுள் குறிப்பிடத்தக்க ஒரு நூல் ‘பத்துப்பாட்டு ஆராய்ச்சி’.
பேராசிரியர் முனைவர் மா.இராசமாணிக்கனார், வைகாசி 12, 1998 / 1967ஆம் ஆண்டு மே 26ஆம் நாள் சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் பொறுப்பில் இருந்தபோது மாரடைப்பினால்  மரணம் அடைந்தார்.
அவர் மரணம் அடைவதற்கு முன், அவர் எழுதிய ‘பத்துப்பாட்டு ஆராய்ச்சி’ கையெழுத்துப் படிகளைப் பல்கலைக் கழகத்திடம் கொடுத்து, நூலாக வெளியிடுமாறு வேண்டியிருக்கிறார்.
ஆனால் பேராசிரியர் இராசமாணிக்கனார் மறைந்த உடன், அவர் எழுதிய பத்துப்பாட்டு ஆராய்ச்சி நூலின் கையெழுத்துப் படிகளை ஓர் அறையின் மூலையில் போட்டு மூடிவிட்டார்கள் சென்னை பல்கலைக் கழகத்தார்.
பின்னர் அதே பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராகப் பொறுப்பேற்ற நெ.து.சுந்தரவடிவேலு,  தற்செயலாக மூடிக்கிடந்த அறையைத் திறந்து பார்த்தபோது, அறையின் முலையில் பத்துப் பாட்டு ஆராய்ச்சி கையெழுத்துப் படிகள் கிடப்பதைப் பார்த்தார்.
உடனே அவர் அந்தப் படிகளை எடுத்து அதே ‘பத்துப்பாட்டு ஆராய்ச்சி’ என்ற தலைப்பில், பல்கலைக்கழக வெளியீடாக 1970ஆம் ஆண்டு வெளியிடச் செய்தார்.
நெ.து.சுந்தரவடிவேலு சொல்கிறார், ‘‘இவர் (இராசமாணிக்கனார்) எழுதிய பத்துப்பாட்டு ஆராய்ச்சியை வெளியிட வேண்டித், தான் பணியாற்றிய சென்னைப் பல்கலைக் கழகத்தாரிடம் ஒப்படைத்ததற்கு மாற்றாக அவரே வெளியிட்டு இருந்தால், பணமாவது கிடைத்து இருக்கும். சென்னைப் பல்கலைக் கழகம் பத்துப்பாட்டு நூலை, யாரும் காணாத வண்ணம் பூட்டி வைத்துவிட்டது வேதனை’’.
மறக்கமுடியுமா
இவரை நாம்
மறக்கமுடியுமா!
  • எழில்.இளங்கோவன்
  • கருஞ்சட்டைத்தமிழர்: மார்ச்சு 16-31, 2017