Showing posts with label எழில்.இளங்கோவன். Show all posts
Showing posts with label எழில்.இளங்கோவன். Show all posts

Friday, December 29, 2017

மறக்க முடியுமா? பேராசிரியர் வ.சுப.மாணிக்கனார் – எழில்.இளங்கோவன்

பேராசிரியர் வ.சுப.மாணிக்கனார்

‘‘மாணிக்கச் சிந்தனைகள், எளிய வாழ்வு, அளவான பேச்சு, எந்நிலையிலும் எதிர்கால நம்பிக்கை, பதவிகளைத் தொண்டாக மதித்தல், தன்னைப் பற்றிய திருத்தமான சிந்தனைகள், வாழ்க்தைத் திட்டங்கள், பெரியவர்களின் வரலாறுகளைப் படித்தல், சோர்வுக்கு இடம் கொடாத ஊக்கங்கள், பகட்டின்றித் தூய எண்ணத்தால் இறைவனை வழிபடுதல்’’ ஆகிய பண்புகளுக்குச் சொந்தக்காரர், பேரறிஞர் பெருந்தகை, பேராசிரியர் வ.சுப.மாணிக்கனார் என்று நினைவு கூர்கிறார் அவரின் மாணவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன்.
தேர்ந்த சிந்தனையாளர், தெளிந்த உரையாசிரியர், திறன்மிகு உரைநடையாளர். ஆய்வாளர், பேராசிரியர், கவிஞர், பழைமை&- புதுமை இரண்டையும் ஒருமித்துப் போற்றியவர் வ.சுப.மாணிக்கனார் அவர்கள்.
இவர் தி.பி. 1948 சித்திரை 05 – 1917ஆம் ஆண்டு ஏப்பிரல் திங்கள் 17ஆம் நாள் புதுக்கோட்டை மாவட்டம் மேலைச்சிவபுரியில் பிறந்தார்.
தெய்வானை ஆச்சி, வ.சுப்பிரமணியன் இணையரின் ஐந்தாம் மகனாகப் பிறந்தார். இவரின் இயற்பெயர் அண்ணாமலை என்றாலும் மாணிக்கம் என்ற பெயரே நிலைபெற்று விட்டது.
தன் ஏழாம்  அகவை வரை நடேச(ஐய)ரிடம், குருகுலப் பாடம் படித்த இவர், ஏழாம் வயதில் புதுக்கோட்டை உயர்நிலைப்பள்ளியில் தன் படிப்பைத் தொடர்ந்தார்.
இவரின் 18ஆம் அகவையில் பருமாவுக்கு வேலைக்காகச் சென்றார். அங்கு வட்டிக்கடை ஒன்றில் வேலை செய்தாலும், தொடர்ந்து அங்கு நீடிக்காமல் தாயகம் திரும்பிவிட்டார்.
தமிழகம் திரும்பிய வ.சுப.மாணிக்கனாருக்கு, அறிஞர் பெருந்தகை பண்டிதமணி கதிரேசனார் அவர்களுடன் தொடர்பு ஏற்பட்டது.
அதன் விழைவாய்த் தமிழ்மொழியின் மீது பெருநாட்டம் கொண்ட மாணிக்கனார். பண்டிதமணியின் ஊக்குவித்தலினால் சிதம்பரம் அண்ணாமலைப்பல்கலைக் கழகத்தில் வித்வான் தேர்வில் தேர்ச்சி அடைந்தார்.
இப்பல்கலைக் கழகத்தில் இராகவையங்கார், ந.மு.வேங்கடசாமி நாட்டார்அ.சிதம்பரநாதன் ஆகியோர் மாணிக்கனாரின் ஆசிரியர்களாக விளங்கினர்.
1945ஆம் ஆண்டு கீழ்த்திசைமொழி இளங்கலைப் பட்டமும் (பி.ஒ.எல்), 1951 ஆம் ஆண்டு முதுகலை(எம்.ஏ.) பட்டமும் பெற்றார்.
பின்னர் ‘தமிழில் வினைச் சொற்கள்’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து கீழ்த்திசைமொழி  முதுகலைப்பட்டம் (எம்.ஓ.எல்.)பெற்ற இவர், ‘தமிழில் அகத்திணைக் கொள்கை’ என்ற தலைப்பை ஆய்வுக்கு எடுத்து அதில் முனைவர் பட்டம் பெற்றார்.
1941 தொடக்கம் 1948 வரை மாணிக்கனார் தாம் பயின்ற அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் 7 ஆண்டுகள் விரிவுரையாளராகப் பணியற்றினார். அப்பொழுது விரிவுரை பயின்ற குறிப்பிடத்தக்க இரு மாணவர்களில் ஒருவர் நாவலர் நெடுஞ்செழியன், மற்றொருவர் பேராசிரியர் க.அன்பழகன்.
1948 முதல் 1964 வரை 16 ஆண்டுகள் காரைக்குடி அழகப்பா கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருந்தார்.
1964-1970 ஆகிய 6 ஆண்டுகள் அழகப்பா கல்லூரியின் முதல்வராகப் பொறுப்பேற்றிருந்தார் மாணிக்கனார். அப்பொழுது அக்கல்லூரியின் மாணவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன்.
பின்னர் 1970 தொடங்கி 1977 வரை 7 ஆண்டுகள் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய போது, இந்திய மொழிப்புல முதன்மையாளர் பொறுப்பில் இருந்து பணியாற்றி இருக்கிறார்.
1979 முதல் 1982 வரை மூன்று ஆண்டுகள் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகச் பொறுப்பேற்றுத் திறம்படப் பணியாற்றினார்.
இங்கு தமிழ்மொழியின் வளர்ச்சி, அறிவியல் துறை வளர்ச்சிக்கான இவரின் பணியை அப்போதைய தமிழக அரசு பெரிதும் பாராட்டியுள்ளது.
பல்கலைக் கழகத் துணைவேந்தர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்ற வ.சுப.மாணிக்கனார், கேரள மாநிலம் திருவனந்தபுரம் கல்லூரியில் திராவிட மொழியியல் கழகத்தின் முதுபேராய்வாளராக இருந்து சிறப்பு வாய்ந்த இருநூல்களை ஆங்கிலத்தில் எழுதினார்.
 அவ்விரு நூல்களுள் ஒன்று ‘தமிழ் யாப்பில் வரலாறும் வளர்ச்சியும். மற்றொன்று “தொல்காப்பிய ஆய்வு!’
பேராசிரியர் வ.சுப.மாணிக்கனார் அவர்கள் பல்வேறு நூல்கள் எழுதி இருக்கிறார். அவற்றுள் குறிப்பிடத்தக்க சில நூல்கள் வருமாறு:
எழுத்துச் சீர்திருத்தம் எங்கே போகிறது, – தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நூன்மரபும்,- மொழி மரபும், – தொல்காப்பியப் புதுமை,  தொல்காப்பியத் திறன், – தொல்காப்பியக் கடல், வள்ளுவம், ஒப்பியல் நோக்கு,- திருக்குறள் சுடர், – திருக்குறள் தெளிவுரை  (மாணிக்கவுரை).
இம்மட்டுமன்று  The Tamil Concept of Love, A Study of Tamil Verbs, Collected Papers, Tamilology ஆகிய ஆங்கில, நூல்களும் இவரால் எழுதப் பெற்றுள்ளமை குறிப்பிடத் தக்கது.
இவரின் நூல்கள் 2006 ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.
பேராசிரியர் மாணிக்கனார் அவர்கள் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத் தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.
தமிழகப் புலவர்குழுத் தலைவராக இருந்துள்ளார்.
தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வடிவமைப்புக் குழுத்  தலைவராகவும் இருந்து இவைகளின் மூலம் தமிழுக்குப் பெரும் தொண்டு ஆற்றியிருக்கின்றார்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இவரின் தமிழ்ப்பணிக்காக இவருக்குச் சிறப்பு முனைவர் (டி.லிட்.) பட்டம் வழங்கி உள்ளது.
முதுபெரும் புலவர் எனற விருதை குன்றக்குடி அடிகளார் வழங்கி இருக்கிறார்.
இவரின் சொந்த ஊரான மேலைச்சிவபுரியில் இயங்கி வந்த சன்மார்க்க சபை இவருக்குத் ‘தமிழச் செம்மல்’ என்ற சிறப்பு விருதை வழங்கி இருக்கிறது.
தமிழ்நாடு அரசு பேராசிரியர் வ.சுப.மாணிக்கனார் மறைவிற்குப் பின்னர், இவரைப் போற்றும் விதமாக இவருக்குத் ‘திருவள்ளுவர்’ விருதை வழங்கி சிறப்பித்து இருக்கிறது.
இவரின் மறைவுக்குப் பின்னர், இவர் எழுதிவைத்த இறுதிமுறியின்(உயிலின்)படி, சொந்த ஊரான மேலைச் சிவபுரி அறக்கட்டளைக்கு ஒருகுறிப்பிட்ட தொகை இவரின் சொந்தப்பணத்தில் இருந்து கொடுக்கப்பட்டு உள்ளது.
அதுபோல மேலைச்சிவபுரியில் சாதி மதவேறுபாடு இன்றி எல்லாக் குழந்தைகளின் உடல்நலம் பேண மருத்துவ உதவிக்காகவும் இவரின் பணத்தில் ஒரு தொகை வழங்கப்பட்டு உள்ளது.
இதே வழியில் சாதி மத வேறுபாடு இன்றி குழந்தைகளின் கல்விக்காக உதவும் பொருட்டும் கணிசமான தொகை ஒதுக்கித் தரப்பட்டுள்ளது.
இவரால் சேர்ந்து வைக்கப்பட்டிருந்த 4500 நூல்களைத் தான் பணியாற்றிய காரைக்குடி அழகப்பா கல்லூரிக்கு அன்பளிப்பாக வழங்கிவிட்டார்.
 தன் ஆசிரியர் பண்டிதமணி கதிரேசனாரின் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக ஆக்கியவர். மேலைச்சிவபுரி சன்மார்க்க சபையின் மூலம் பண்டிதமணியின் நூல்களைப் பதிப்பித்தவர். பண்டித மணியின் சொந்த ஊரான மதிபாலன் பட்டியில் அவருக்குச் சிலை அமைத்த அவரின் மாணவர் – தமிழுலகப் பேரறிஞர் பேராசிரியர் வ.சுப.மாணிக்கனார் தி.பிப. 2020 சித்திரை 13 ஆம் நாள் – 1989ஆம் ஆண்டு ஏப்பிரல் 25ஆம் நாள்,புதுவையில் இரவு 11 மணிக்கு மாரடைப்பால் காலமானார்.
எழில்.இளங்கோவன்

Thursday, October 26, 2017

தமிழை உயர்தனிச் செம்மொழி என்று பறைசாற்றிய கால்டுவெல் – எழில்.இளங்கோவன்

இராபர்ட்டு கால்டுவெல் 

முனைவர் இராபர்ட்டு கால்டுவெல் (Robert Caldwell) அவர்களின் தாயகம்,  காட்டுலாந்து(Scotland).
ஜரோப்பாவின் மிகப்பெருந் தீவான அயர்லாந்தில் அவர் பிறந்தார். அந்நாட்டின் கிளாடி(Clady) ஆற்றங்கரையில் அமைந்த பெல்பாட்டு என்ற சிற்றூர் அவரின் சொந்த ஊர்.
 சித்திரை 26,  1845 / 1814 ஆம் ஆண்டு மேத் திங்கள் 7 ஆம் நாள் அவர் பிறந்தார். தொடக்கக் கல்வியை அயர்லாந்தில் பயின்ற அவர் தன் பத்தாம் அகவையில்  பெற்றோருடன் காட்டுலாந்துக்குப் போய்விட்டார்.
பதினோறாம் அகவையில் ஆங்கில இலக்கிய இலக்கணங்களைத் தெளிவுறப் பயின்ற கால்டுவெல், தன் தந்தையின் விருப்பப்படி ஓவியத்துறையிலும் பயின்றார்.
தபுளின்(Dublin) ஓவியக் கல்லூரியில் பயின்ற அவர், சிறந்த ஓவியருக்கான உயர்ந்த பரிசுகளைப் பெற்றிருக்கிறார். ஆனாலும் அவரின் சிந்தனையும் நாட்டமும் இறைப் பணியாற்றும் சமயத் துறையையே நாடியது.
அவரின் இருபதாம் அகவையில், இலண்டன் மாநகரக் கிருத்துவச் சமயத் தொண்டர் சங்கத்தில்  உறுப்பினராகச் சேர்ந்தார்.
இச்சங்கத்தின் சார்பில் கிளாசுகோ பல்கலைக் கழகத்தில்(University of Glasgow) சேர்ந்து, ஜரோப்பிய மொழிகளில் அமைந்த சமய நூல்களையும், நீதி நூல்களையும், படித்த கால்டுவெல், அப்பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் வயவர்(சர்). தானியல் கெய்த்தே சேண்டுபோர்டு (Daniel Keyte Sandford) என்பவரின் பாடப் பயிற்சியால் ஈர்க்கப்பட்டார்.
பேராசிரியர் தானியல், கிரேக்க மொழியின் சிறப்புகள், அதன் அருமை பெருமைகளைப் பிற மொழிகளுடன் ஒப்புமைப்படுத்திக் காட்டி விளக்கிய திறமையைக் கண்டு வியப்பில் ஆழ்ந்தார் கால்டுவெல்.
இந்த நிகழ்வே பின்னர்த் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எழுத அவருக்கு அடிப்படையாக அமைந்தது.
தென்னிந்திய திருச்சபை வேண்டுகோளை ஏற்று இலண்டன் திருச்சபை(London Missionary Society), சமய பரப்புரைக்காகக் கால்டுவெலைச் சென்னைக்கு அனுப்பியது. 1838 ஆம் ஆண்டு இளைஞரான கால்டுவெல், கப்பல் மூலம் சென்னை வந்து இறங்கினார்.
இங்கே துரூ, வின்சுலோ, பவர், ஆண்டர்சன் ஆகிய தமிழறிஞர்களாகிய  ஆங்கிலேயர்களின் நட்பு,  இவரின் தமிழார்வத்தை உந்தித் தள்ளியது. கால்டுவெல்லின் மனைவி, நாகர்கோயில் கிருத்துவச் சமயப் பணியாளரான மால்து (Mault) என்பவரின் மகள் எலிசா தமிழ்மொழியிலும், ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார் என்பது இவருக்கு கூடுதல் பலமாக அமைந்தது.
சங்க இலக்கிய- இலக்கணங்களையும், பழந்தமிழ் ஏடுகளையும் தேடித் தேடிப் படித்தார். அகழ்வாய்வுகளில் ஈடுபட்டார்.
இவரின் அகழ்வாய்வில் பண்டைய தமிழர்களின் ஈமத்தாழிகளைக் கண்டறிந்து கூறினார்.
பாண்டிய நாட்டின் மீன் சின்னம் பொறித்த தங்கக் காசுகளைக் கண்டறிந்தார்.
சென்னையில் இருந்து திருநெல்வேலி சென்ற இவர் தரங்கம்பாடி, தஞ்சாவூர், நீலகிரி, கோயம்புத்தூர், மதுரை வழியகச் செல்லும் போது அந்தந்தப் பகுதி மக்களின் வட்டாரத் தமிழ், பேச்சு மொழி, பண்பாடுகள் குறித்து அறிந்து கொண்டு வந்தார். அத்துடன் இவரின் தமிழ்க்கல்வி, வரலாற்றுக் கல்வி, அகழ்வாய்வும் சேர்ந்தன.
‘திருநெல்வேலி மாவட்டத்தின் அரசியல் மற்றும் பொது வரலாறு’ (A Political and General History of the District of Tirunelveli) என்ற புகழ் பெற்ற நூலை எழுதினார்.
இந்நூலை 1881 ஆம் ஆண்டு அன்றைய மதராசு அரசு வெளியிட்டுள்ளது.
1856 ஆம் ஆண்டு Comparative Grammar of the Dravidian of South Indian Family Language என்ற ஆங்கில நூலை எழுதினார்.
இந்நூல் உலக அளவில் கால்டுவெல்லுக்குப் புகழைக் கொடுத்தது மட்டுமல்லாமல், உலக அளவில் மொழியியல் ஆய்வுக்குப் பெரிதும் துணை செய்யும் நூலாகவும் அமைந்து விட்டது.
இந்நூலுக்காக அவர் படித்த கிளாசுகோ பல்கலைக் கழகம் அவருக்கு முனைவர்(டாக்டர்) பட்டம் வழங்கி உள்ளது.
தமிழில் ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்‘ என்று அழைக்கப்படும் இந்நூலின் தமிழ் வடிவப் பெயர் ‘திராவிட அல்லது தென்னிந்திய மொழிக் குடும்பங்களின் ஒப்பிலக்கணம்’.
இந்நூலில் குசராத்தி, மராத்தி, ஒரிசா, தக்காணப்பகுதி, நீங்கலாகப் பலுசித்தானம், வங்காளத்தின், இராசுமகால் மலைகள் தொட்டு, கன்னியாகுமரி வரையும் திராவிட மொழிக் குடும்ப மொழிகளே ஆளப்பெற்றிருந்தது. என்கிறார் கால்டுவெல்.
‘‘இந்திய நாட்டின் வடபகுதியிலோதென் பகுதியிலோ சமற்கிருதம் என்று அழைக்கப்படும் வடமொழிஉள்நாட்டு மொழியாகஇருந்ததில்லைஅப்படி நம்பவும் வழியில்லை” –என்றும்
‘‘உள்நாட்டுச் சிற்றூர் மக்கள், நாட்டுப் புறங்களிலும் வாழ்ந்து வரும் தாழ்த்தப்பட்ட மக்கள், வட மொழிச் சொற்களைப் பேச்சு வழக்கில் கையாளாமல், ஒதுக்கித் தள்ளும் தூய பழக்கம் காணப்படுகிறது. ஒரு மொழியின் தொன்மைச் சிறப்புகளை, அம்மொழியிலும், செய்யுள்களிலும், தாழ்த்தப்பட்ட குடி மக்களின் பேச்சுகளில் இருந்தே ஆய்ந்து காணமுடியும் என்பது உண்மை’’ என்றும்
‘‘தமிழ் என்னும் சொல்லுக்கு நேர் வடமொழிச் சொல் திரவிடம் என்பதாகும். இச்சொல் தமிழர் அல்லது திராவிடர் வாழ்ந்த நாட்டையும், அவர்கள் பேசும் மொழியையும் ஒன்றெனக் குறிப்பதாகும். தமிழ் என்ற சொல்லின் ஒலி வடிவிற்கும், திராவிடம் என்ற சொல்லின் ஒலி வடிவிற்க்கும் இடையே எத்துனையோ  வேறுபாடு காணப்பட்டாலும், இரண்டும் ஒரே வேரில் இருந்தே பிறந்ததாகக் கொள்வதற்கு இடம் உள்ளது. தமிழ் என்ற சொல்லே பின்னர் திரவிடம் எனத் திரிபுற்றது என்று  சொல்வதைக் காட்டிலும், திராவிடம் என்ற சொல்தான் தமிழ் என்று திரிபுற்றது என்று கூறுவது சரியானதாகும்” என்றும்
திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண நூலில் வரிசையாகச் சொல்லிக்கொண்டு போகிறார் கால்டுவெல்.
தமிழர் – திராவிடர் இவ்விரு சொற்களும் தமிழரையே குறிக்கும் ஒரு பொருள் இரு சொற்கள் என்று முனைவர் அம்பேத்கர் சொல்வது இங்கு கருதத்தக்கது.

திராவிடம் என்பதைக் குறியீட்டுச் சொல் என்கிறார் கால்டுவெல்.
“தமிழ்மொழி உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் பலவற்றையும் குறிப்பதற்கு குறியீடொன்று தேவைப்படுகிறது. திராவிடம் என்று அதனை வகுத்துக் கொண்டால், எடுத்துக் கொண்ட ஒப்பிலக்கண முறைக்கு அது மிகவும் பயனுடையதாக அமையும்” என்றும் விளக்குகிறார்.
திராவிட மொழிக்குடும்பம், ஆரிய மொழிக் குடும்பம் எனும் இரு குடும்ப மொழிகளைத் திருந்திய மற்றும் -திருந்தாத மொழிகளாகப் பகுத்துத் தன் ஒப்பிலக்கணத்தை விரிவுபடுத்தித் தமிழுக்குப் பெரும் தொண்டாற்றியிருக்கிறார் கால்டுவெல்.
முதன் முதலில் தமிழை உயர்தனிச் செம்மொழி என்று உலகுக்குப் பறைசாற்றி, 1941 முதல் நெல்லை மாவட்ட இடையன் குடியில் 50 ஆண்டுகள் வாழ்ந்து அரும் பணியாற்றித் தமிழுக்குப் பெருமை சேர்த்தார் இராபர்ட்டு கால்டுவெல் அவர்கள்.
தன் 77ஆம் அகவையில், தி.பி.  1924 /1891 ஆம் ஆண்டு ஆகத்து 28 ஆம் நாள், கொடைக்கானலில் இயற்கை எய்தித் தன் பணிகளை முடித்துக்கொண்டார்.








எழில்.இளங்கோவன்
கருஞ்சட்டைத் தமிழர்
14 ட்டோபர் 2017

Wednesday, September 20, 2017

மறக்க முடியுமா? – பேராசிரியர் நா.வானமாமலை : எழில்.இளங்கோவன்





மறக்க முடியுமா? – பேராசிரியர் நா.வானமாமலை

 இவர் எந்த ஒரு கல்லூரியிலோ, பல்கலைக்கழகத்திலோ பேராசிரியராகப் பணியாற்றவில்லை. தொழில் முறைப் பேராசிரியராகக் கூட இருந்ததில்லை. ஆனாலும் இன்றும் கூட அறிவுத் தளங்களில் இவர் பேராசிரியர் என்றே அழைக்கப்படுகிறார் என்பது இவரின் பெருமைக்குச் சான்று.
 திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி இவரின் சொந்த ஊர். கார்த்திகை 22, 1938 / 7-.12.-1907 அன்று இவர் பிறந்தார்.
 திருநெல்வேலி இந்துக் கல்லூரியிலும், மதுரை அமெரிக்கன் கல்லூரியிலும் பயின்ற இவர் முதுகலைப் பட்டம் பெற்று, சில காலம் ஆசிரியராகப் பணியாற்றினார்.
  பொதுவுடமைக் கொள்கையால் ஈர்க்கப்பட்ட நா.வா, இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் மாநிலக் கல்விப் பிரிவுக்குப் பொறுப்பாளர் ஆனார்.
  அதைத் தொடர்ந்து சில அடிப்படையான அறிவியல் நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தார். பல அறிவியல் கட்டுரைகளை எளிமையாக எழுதியிருக்கிறார்.
  ‘விண்வெளி இரசாயனம்’ – ‘விஞ்ஞானத் தொழில்புரட்சியும் அதன் விளைவும்’போன்ற அறிவியல் நூல்களும் இவரால் எழுதப் பெற்றுள்ளன.
  (இ)ரப்பரின் கதை, இரும்பின் கதை, காகிதத்தின் கதை ஆகிய நூல்களை இவர் சிறுவர்களின் அறிவியல் சிந்தனைக்காக எழுதி இருக்கிறார்.
  தமிழ்நாட்டில் தி.நா.சு., கி.வா.ச., பெரியசாமி தூரன், செ.அன்னகாமு போன்றவர்கள் நாட்டுப்புறப் பாடல்கள் குறித்து ஆர்வம்காட்டி வந்த காலம் அது.
 அப்பொழுது நாட்டுப்புறப் பாடல்களைச் சேகரித்து அதன் வரலாறு, பாடியவர்கள், பாடல் வழங்கிய இடங்கள், அவை சார்ந்த நிலம், சூழல், மெய்ப்பொருள், பாடல்களைச் சேகரித்தோர் என்று விளக்கங்களுடன் நாட்டுப்புறப் பாடல்களைத் தொகுத்து வெளியிட்டார் நா.வானமாமலை.
  ‘தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்’ (1960), ‘தமிழர் நாட்டுப் பாடல்கள்’ (1964) ஆகிய இரு தொகுப்புகள் அப்படி அவரால் வெளியிடப்பட்டனவாகும்.
 நாட்டுப் புறப் பாடல், மானிடவியல், அடித்தள மக்களின் ஆய்வு போன்றவை அறிமுகமாகி விவாதத்தில் இருக்கும் போது ‘நாட்டுப்புறவியல்’ என்ற கலைச் சொல் உருவானது.
 அதை நா.வானமாமலை ‘நாட்டார் வழக்காற்றியல்’ என்றார். இவ்விரு சொற் பெயர்கள் இன்றும் வழக்கில் இருந்து வருகின்றன.
  நாட்டார் கதைகளைப், பாடல்களைப் பலர் தொகுத்தார்கள், வெளியிட்டார்கள்.
  சமூகவியல், மானிடவியலில் அந்நாட்டார் வழக்காற்றியல் எப்படி மையம் பெறுகிறது என்பதைச் சுட்டிக் காட்டினார். இவற்றை ஆய்வுகளுக்கும் உள்ளாக்கினார் நா.வானமாமலை.
  அதே சமயம் கதைப் பாடல்களுக்கும் முன்னுரிமை கொடுத்து, அவற்றை வெளிக் கொண்டுவந்த பெருமை இவரையே சாரும்.
  பேராசிரியர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் மதுரைப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக இருந்த போது, அவரின் துணையுடன் ஆறு கதைப் பாட்டிலக்கியங்களைப் பதிப்பாசிரியராக வெளியிட்டார் நா.வா. வெளியிட்டது மதுரைப் பல்கலைக்கழகம்.
அவை,
  1. கட்டபொம்மன் கதைப்பாடல்
  2. கட்டபொம்மன் கூத்து
 இவை இரண்டும் கட்டபொம்மன் குறித்த வரலாற்றை மக்களின் நாட்டுப்புறப் பார்வையில் சொல்கிறது.

  1. முத்துப்பட்டன் கதை
 இந்நூல் அருந்ததியர் சமூகம் குறித்த, குற்றால மலைப்பகுதியின் கதையாகச் சொல்லப்பட்டுள்ளது. செக்கோசுலோவேக்கிய மொழியில், மொழிபெயர்க்கப்பட்ட முதல் தமிழ்க் கதைப் பாட்டிலக்கியம் இது.
  1. கான்சாகிபு சண்டை
மருதநாயகம் என்று அழைக்கப்பட்ட கான்சாகிபு நடத்திய சண்டை பற்றிய நூல் இது.
  1. காத்தவராயன் கதைப் பாடல்
ஒடுக்கப்பட்ட பறையர் சமூகத்தளத்தில் இக்கதைப் பாட்டிலக்கியம் அமைகிறது.
  1. ஐவர் இராசாக்கள் கதை
– நாயக்க மன்னரின் மேலாதிக்க ஆட்சியை ஏற்க மறுத்த ஐந்து பாண்டிய வம்சத்தைச் சேர்ந்தவர்களின் கதை இது.
  இந்தக் கதைப் பாட்டிலக்கியப் பதிப்பின் வரலாற்றுக் குறிப்புகள், வழக்குச் சொற்கள், நிகழ்வின் குறிப்புகள், சொல் விளக்கம் ஆகிய சிறப்புகள் உடையன. இவற்றுடன் நா.வானமாமலையின் ஆய்வு முன்னுரைகள் மிக முதன்மைத்துவம் பெற்றதாக அமைந்திருக்கின்றன.
 1975ஆம் ஆண்டு தார்வார் திராவிட மொழியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றினார்.
 அப்பொழுது International of Tamil Folk Creations என்று இவரால் எழுதப்பட்ட நாட்டுப்புற இலக்கிய ஆய்வு நூல் மிகச் சிறப்பாகப் பேசப்பட்டது.
 இந்நூலும், இவரின் பல ஆங்கிலக் கட்டுரைகளும் இன்னமும் தமிழில் மொழிபெயர்க்கப் படவில்லை.
 தமிழின் ஆய்வுத் தளத்தை விரிவுபடுத்தும் நோக்கில் ‘ஆராய்ச்சி’ என்ற ஆய்விதழை 1969ஆம் ஆண்டு தொடங்கினார் இவர்.
 இதில் இவரின் ஆய்வுகள் மட்டுமின்றி, பல்வேறு  துறை சார்ந்த ஆய்வறிஞர்களின் ஆய்வுக்கட்டுரைகளையும் வெளியிட்டு வந்தார்.
 பெரும் பொருளாதார நெருக்கடிகளுக்குள்ளும், தன் இறுதிகாலம் வரை இவ்விதழை இவர் நடத்தி வந்தது குறிக்கத்தக்கது.
  1. இந்திய நாத்திகமும் மார்க்சியமும்;
  2. இலக்கியத்தின் உள்ளடக்கமும் உருவமும்;
  3. உயிரின் தோற்றம்;
  4. உரைநடை வளர்ச்சி;
  5. கட்டபொம்மன் கதைப்பாடல்;
  6. கட்டபொம்மன் கூத்து;
  7. கான்சாகிபு சண்டை;
  8. முத்துப்பட்டன் கதை;
  9. காத்தவராயன் பாடல்;
  10. ஐவர் இராசாக்கள் கதை;
  11. தமிழ்நாட்டில் சாதி சமத்துவப் போராட்டம்;
  12. தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்;
  13. தமிழ் நாட்டுப் பாடல்கள்;
  14. தமிழர் பண்பாடும் தத்துவமும்;
  15. தமிழர் வரலாறும் பண்பாடும்;
  16. பழங்கதைகளும் பழமொழிகளும்;
  17. புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்;
  18. மக்களும் மரபுகளும்;
  19. மார்க்சிய அழகியல்;
  20. மார்க்கிய சமூக இயல் கொள்கை;
  21. வ.உ.சி முற்போக்கு இயக்கங்களிள் முன்னோடி;
  22. Studies in Tamil Folk Literature
ஆகிய இவரின் 22 நூல்களும் அரசுடைமையாக்கப்பட்டுள்ளன.
  இவரின் இளமைக் காலத்தில், நாங்குநேரி வட்டார விவசாய இயக்கத்திலும், நெல்லை மாவட்டத் தொழிலாளர் இயக்கத்திலும் செயல்பட்டார்.
  புகழ்பெற்ற திருநெல்வேலி சதிவழக்கு விசாரணைக் கைதிகளுள் இவரும் ஒருவர்.
  கோயில் நுழைவு, சாதி ஆதிக்கத்திற்கு எதிராக, நில மீட்புப் போராட்டங்கள் எனப் பல்வேறு போராட்டங்களில் இவர் பங்கு கொண்டுள்ளார்.
 நகராட்சி உறுப்பினராகவும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலத்தலைவராகவும் இவர் ஆற்றிய குமுகாயப் பணிகளும் மறக்கக் கூடியவை இல்லை.
 இப்படிப்பட்ட பெரும் சிறப்புக்கு உரிய பேராசிரியர் நா.வானமாமலை அவர்கள் தன் 73ஆம் அகவையில் 1980ஆம் ஆண்டு காலமானார்.
எழில்.இளங்கோவன்
கருஞ்சட்டைத் தமிழர் – 17, செட்டம்பர் 2017