Showing posts with label Ilakkuvanar. Show all posts
Showing posts with label Ilakkuvanar. Show all posts

Saturday, September 16, 2017

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙே) – இலக்குவனார் திருவள்ளுவன்






தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙே)

பயிற்று‌ ‌மொழி குறித்த அரசின் வஞ்சகச் ‌செயல்பாடுபற்றிய ‌பேரா.இலக்குவனாரின் கருத்து வருமாறு:
 தமிழ்ப் பயிற்று மொழியை விரும்பாத ஒருவரைத் தலைவராகக் கொண்ட வல்லுநர்க் குழுவை நியமித்தது. அதன் பயனாகப்  பயிற்று மொழி உரிமை கொடுத்து விட்டோம் என்று கூறி விட்டது.
 எந்த நாட்டிலும் இந்த உரிமை கிடையாது. அங்கெல்லாம் இவ்வாறு வேற்று மொழியில் பயில உரிமை கேட்டால், நாட்டுப் பற்றற்ற தன்மையாகக் கருதப்பட்டு, மிகவும் வெறுக்கப்படும். இங்கு உரிமை கிடைத்து விட்டது. இன்று ஆங்கிலத்தில் பயில உரிமை கிடைத்ததைக் கருதி, நாளைக்கு இந்தியில் பயில உரிமைக் கிளர்ச்சி செவோரும் தோன்றுவர். பின்னர், தெலுங்கர், மராத்தியர், குசராத்தியர் போன்றோரும் கிளர்ச்சி தொடங்கக் கூடும்.
 கல்லூரியில் இவ்வுரிமை கிடைத்தவுடன் உயர்நிலைக் கல்விக் கூடங்களிலும் இவ் வுரிமை வேண்டும் என முழங்கத் தொடங்கி விட்டனர். உயர்நிலைக்கல்விக் கூடங்களில் தமிழ் பயிற்றுமொழி நிலை பல ஆண்டுகள் ஆகிவிட்டன. மீண்டும் அதனை விடுத்து ஆங்கிலத்தைப் பயிற்றுமொழியாகக் கொள்ள உரிமை யளித்தால், ஆங்கிலேயர் ஆட்சியையே மீண்டும் கொள்ளும் அடிமை நிலைக்கு ஒப்பாகும். உயர்நிலைப் பள்ளிகளில் ஆங்கிலம் பயிற்றுமொழியாவதற்கு ஒரு நாளும் இசைதலே கூடாது. கல்லூரிகளிலும் ஆங்கிலம் பயிற்றுமொழித் திட்டத்தை அகற்ற ஆவன செய வேண்டும். எல்லாக் கல்லூரிகளிலும் ஆங்கிலப் பயிற்றுமொழி இருக்குமேல் மாணவர்கள் இன்றுள்ள சூழ்நிலையில் அதனையே ஏற்பர்; ஏற்குமாறு தள்ளப்படுவர். தமிழ்ப் பயிற்றுமொழி வெறுக்கப்படும். ஒதுக்கப்படும்.
 மதுவிலக்குச் சட்டத்தைப் புறக்கணித்து மது அருந்த உரிமை கேட்டால், மறுக்கப்படுவதுபோல், தமிழ்ப் பயிற்றுமொழித் திட்டத்தை வெறுத்து அயல்மொழி வழியாகப் படித்தலுக்கு உரிமை கேட்பதையும் மறுக்கும் துணிவு அரசுக்கு வேண்டும். தமிழ்நாட்டில் தமிழ்தான் எல்லா நிலைகளிலும் பயிற்றுமொழி என்பதனை ஏற்றுக் கொண்ட கொள்கையை உறுதியாக்குவது தமிழக அரசின் தவிர்க்கலாகாக் கடமையாகும்.
 அரசியல் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்ட வேண்டாத கிளர்ச்சி வென்றதனால், தமிழ் உரிமை பறி போயிற்று; கல்வி நிலை யங்களில் இருந்து தமிழ் விலகும் நிலை வந்து விட்டது. தமிழ்ப் பற்றாளர்களே விழிமின்! எழுமின்! தமிழைக் காக்க விரைந்து செயல்படுமின்! ஊர்கள்தோறும் தமிழ்க்காப்புத் தொண்டர்படை அமையுமின்! உயிர் கொடுத்தேனும் உயிரனைய தமிழைக் காக்க வம்மின்!
குறள்நெறி (மலர் 4: இதழ் 3): தை 18, 2002: 31.1.71

   மதுரைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவி ஒழிவிடமாயிற்று. பேராசிரியர்தான் அடுத்த துணைவேந்தர் என அனைத்துத் தரப்பாரும் எதிர்பார்த்தனர். துணைவேந்தர் பணியமர்த்தத்திற்கான பெயர்ப்பட்டிப்பில்(panel) பேராசிரியர் சி.இலக்குவனார் பெயரும் இடம் பெற்றது. பேராசிரியர் இலக்குவனார் பெயர் துணைவேந்தராக அறிவிக்கப்பட்டதாகச் செய்தி வந்து பல தரப்புகளிலும் இருந்து வாழ்த்துகள் குவிந்தன. ஆனால், செல்வாக்கு உள்ளவர்களின் சொல்வாக்கிற்கு இரையானதால் பேராசிரியர் இலக்குவனார் துணைவேந்தராக அமர்த்தப்படவில்லை. முதல் பட்டிப்பில் அவர் பெயர் இருந்ததாகவும் இரண்டாவது பட்டிப்பில் அவர் பெயர் இல்லை என்பதால் பணியமர்த்த இயலவில்லை என்றும் மழுப்பலான கருத்து தெரிவிக்கப்பட்டது. இத்தகைய மற்றொரு பட்டிப்பு (panel) என்பது முதலும் கடைசியுமாக அப்பொழுது மட்டும்தான் இடம் பெற்றது. பாவாணர், பெருஞ்சித்திரனார் முதலான தமிழறிஞர்கள்  அரசிற்குக் கண்டனம் தெரிவித்தனர். மாணவர்கள், தமிழன்பர்கள் என அணி அணியாக வந்து பேராசிரியரைச் சந்தித்துத் தங்கள் குமுறலைக் கொட்டினர். பேராசிரியர் அமைதியாகத் தமிழ்ப்பேராசிரியரைத்தானே அரசு துணைவேந்தராக அமர்த்தி உள்ளது. மகிழ்ச்சி கொள்வோம் என அமைதிப்படுத்தினார்.
  முதலில் வந்த செய்தியால் பேராசிரியரே மதுரைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் என்னும் கருத்து பலரின் உள்ளங்களில் பதிந்து விட்டது. இன்றும் கூட அவரைப்பற்றிப் பேசுபவர்கள் மதுரைப்பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருந்தார் என்று கூறும் அளவிற்கு ஆழமான கருத்துப் பதிவாக அமைந்து விட்டது. தமிழுக்காக வாழும் போராளி, பல்வேறு போராட்டங்களுக்கிடையே தமிழ்க்கனவுகளை நிறைவேற்றும் போராளி, துணைவேந்தரானால், பயிற்சி மொழிக்கனவை நிறைவேற்றித் தமிழக மறுமலர்ச்சிக்கு வித்திட்டிருப்பார் எனக் கருத வேண்டிய அவர் மாணவரே, யார் துணைவேந்தராக இருந்தால் என்ன என்று தடுமாறியதன் விளைவே தமிழுக்குப்பின்னடைவை ஏற்படுத்தி விட்டது. எல்லாம் தமிழில், கல்வியின் உச்ச நிலை வரை தமிழில் என்றெல்லாம் நடைமுறைப்படுத்த கனவு கண்ட பேராசிரியருக்கு அதற்கான வாய்ப்பு இல்லை என்றதும் வருத்தம் வந்தது. ஆனால், பதவியை எதிர்நோக்கி வாழ்பவரல்லரே அவர். எனவே, இதனை மறந்து விட்டுத் தம் போர்ப்பணியில் மீண்டும் ஈடுபட்டு விட்டார்.
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்

Friday, April 21, 2017

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙா) – இலக்குவனார் திருவள்ளுவன்




தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙா) 

  பேரா. இலக்குவனார் புதுக்கோட்டையில் இருந்த பொழுது ‘குறள்நெறி’ என்னும் இதழை நடத்தினார் அல்லவா? இங்கு அதே பெயரில் தமிழ்த்திங்களிருமுறை இதழைத் தொடங்கினார். இது குறித்து,
இக்காலத்தில் பத்திரிகை நடத்தி வெற்றி பெறுவது கலிங்கப் போரில் ஈடுபட்டு வெற்றி காண்பதை ஒத்ததாகும். இத்தகைய துயரை அறிந்தும்கூட திரு இலக்குவனார் தமிழின்மீதுள்ள பற்றினால் குறள்நெறியை வெளியிடும் பணியில் இறங்கியுள்ளார்கள்
என்றார் முத்தமிழ்க்காலர் கி..பெ.விசுவநாதம் அவர்கள்(பக்கம் 4: குறள்நெறி : 1.2.64) இவ்விதழ் தொடங்குவதற்கான காரணங்களைப் பின்வருமாறு வெளியீட்டு விழாவில் பேராசிரியரும் தெரிவித்துள்ளார்.
இன்று வெளிவரும் பெரும்பாலான இதழ்களின் நிலை என்ன? மக்களிடம் பொறிநுகர் உணர்ச்சிகளைக் கிளர்ந் தெழும்படிச் செய்வதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகின்றன. நல்லறிவு கொடுத்து மக்களைத் திருத்தி நல்வழிப்படுத்த வேண்டிய கடமை இதழ்களுக்குண்டு. அக்கடமையைப் பலவும் மறந்து விடுகின்றன. நாட்டில் பெரும்பாலான மக்கள் வளர்ச்சியற்ற நிலையிலேயேயிருந்து வருகிறார்கள். ஆகவே, அவர்களின் நிலைக்கு இறங்கிச் சென்று  தங்களின் அறிவை விற்றால்தான் பணம் சேர்க்க முடியும் என்று கருதி அவ்விதமே செகிறார்கள். நான் அவர்களைக் குறை கூற வேண்டுமென்பதற்காக இவற்றைக் கூறவில்லை.
 செய்தியிதழ்களில் புலவர்களுக்குப் போதிய விளம்பரம் கொடுப்பது கிடையாது. அரசியல் தலைவர்களின் பேச்சுக்கும் திரைப்பட அரசிகளின் படத்துக்கும்தான் அவை பெருமதிப்பு அளிக்கின்றன. திரைப்பட அரசிகளில் பலருக்கு எழுதப் படிக்கத் தெரியாமல் இருக்கும். ஆனால், மக்களுடைய வினாக்களுக்கு அவர்கள்தான் விடை எழுதுவார்கள். மக்களிடையே இதற்கான ஆர்வம் வாழ்நாள் முழுதும் நிலைத்து நிற்காது.
[குறள்நெறி வெளியீட்டு விழாவில் பேராசிரியர் சி.இலக்குவனார் உரை:
குறள்நெறி (மலர்1: இதழ் 12): தை19, 1995: 1.2.64]
  இந்தி முதன்மையை எதிர்ப்பதைத் தலையாய கடமையாகக் கொண்டு குறள்நெறி வெளிவருவது குறித்துப் பேராசிரியர் பின்வருமாறு இதழிலும் தெரிவித்தார்:
இந்தி முதன்மையைத் தடுப்பதும் தமிழைத் தூய நிலையில் வளம்படுத்துவதும் குறள்நெறியில் மக்கள் வாழ்வதற்கு ஒல்லும் வகையால் உழைப்பதும் மக்களாட்சி முறை மாண்புற வழிகாட்டுவதுமே நம் இதழின் குறிக்கோளாகும்.
 குறள்நெறியைப் பரப்பி மக்களைக் குறள்நெறியில் வாழச் செவதுதான் தலையாய நோக்கம். அந்நோக்க அடிப்படையில் கட்சிச் சார்பற்ற அரசியல் இலக்கியப் பண்பாட்டுத் தமிழியக்க வெளியீடாகப் பணிபுரிந்துவருகின்றது என்பதனை அறிந்து, இதழைப் போற்றி ஒல்லும் வகையால் உதவுமாறு அன்போடு வேண்டுகின்றோம்.
 குறள்நெறி ஓங்குக! தமிழ் வெல்க. மக்களாட்சி மாண்புறுக!
(குறள்நெறி (மலர் 1: இதழ் 12): ஆனி 18,1995; 1.07.1964)
  அவர் காலத்தில் இவ்விரண்டிலும் வெற்றி கண்டார் எனலாம். தமிழ் மக்களிடையே இந்தி எதிர்ப்பு உணர்வை உருவாக்கவும் பரப்பவும் குறள்நெறி ஆற்றிய தொண்டு அளப்பரியது. தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல், கருநாடகம், கேரளம், ஆந்திரா, மகாராட்டிரம், முதலான மாநிலங்களிலும் தில்லியிலும் குறள்நெறி அன்பர்கள்  உருவாயினர்.
 தமிழர்களில் கற்றவர்கள் எனப்படுகின்றவர்கள் தமிழினுயர்வை நிலைநாட்ட முயலாது தம்முயர்வை நிலைநாட்டுவதிலேயே காலங்கழித்துவருகின்றனர்.
 தென்மொழி, தேன்மொழியாகவும்  இந்தியத் தேய மொழி யாகவும் ஆவதற்குரிய செயல்முறைகளைச் செய்திட  வேண்டும்.
 தமிழ்நாட்டில் தமிழுக்கே தலைமை வேண்டும். தமிழ் தலைமை பெறும் வரை தமிழர் தலைமை பெறுதல் இல்லை. பழைய வடமொழிக்கடிபணியாது வாழ்ந்த தென்மொழி புதியதொரு இந்தியெனும வட மொழிக்குத் தலை குனிந்து வாழ்ந்திடுமோ? ஒரு நாளும் இல்லை.
(குறள்நெறி (மலர்3: இதழ்10):  வைகாசி19, 1997: 1.6.1966)
(தொடரும்)
– இலக்குவனார் திருவள்ளுவன்