பேராசிரியர் முனைவர் ப. மருதநாயகம், தமிழ் ஆய்வின் விடிவெள்ளி எனப் போற்றப்படுபவர். இவரது ஒரு நூலைப் படித்தாலும் இவரது ஒப்பிலா ஆய்வுச்சிறப்பைப் புரிந்து கொள்ள இயலும்.
இவரது வற்றாப் புலமை வளம் நூல்களின் வாயிலாகவும் கட்டுரைகளின் வாயிலாகவும் வெளிப்பட்டுத் தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவ வழிவகுக்கின்றது.
ஆங்கில இலக்கியங்களைப் பயின்றவர், அவற்றிலும் சிறப்பான தொன்மை வாய்ந்த தமிழ் இலக்கியங்கள் உலக அறிஞர்களின் கருத்தினை ஈர்க்கவில்லையே என வருந்தினார். எனவே, தமிழ் இலக்கியங்களின் பெருமையை உலக இலக்கியங்களுடன் ஒப்பியல் நோக்கில் ஆய்ந்து வெளிப்படுத்தி வருகிறார். சிறப்பு மிகுந்த இவரது நூல்கள்பற்றிப் பார்ப்போம்.
கிழக்கும் மேற்கும்(1991)
இவரின் முதல் நூலான ‘கிழக்கும் மேற்கும்’ என்பதன் மூலம் மேற்கத்திய ஆங்கில இலக்கியங்களுடன் தமிழ் இலக்கியங்களை ஒப்பிட்டுத் தமிழ் இலக்கியச் சிறப்பை உலகறிய உணர்த்தினார். இந் நூலில் தொல்காப்பியர், பாரதியார், பாரதிதாசன், அரவிந்தர், டி.எசு. எலியட்டு ஆகியவர்களின் படைப்புகளை ஒப்பியல் நோக்கில் ஆராய்ந்துள்ளார். சங்க இலக்கியம் முதலான தமிழ் இலக்கியங்கள் மேலைநாட்டவர்க்கு அறிமுகமாகி இருந்தால் உலகெங்கும் அவை பரவியிருக்கும் என்பதால் தமிழ் இலக்கியச் சிறப்பையும் தமிழ்ப்புலவர்கள் ஆற்றலையும் உலகிற்கு ஒப்பியல் நோக்கில் வெளிப்படுத்தினார். அயல்நாட்டவரை மட்டுமல்ல தமிழின் பெருமையை அறியாத் தமிழர்களின் கண்களையும் இந்நூல் திறந்தது. ஆங்கிலம் தன் தாய்ப்பகுதியாகிய இங்கிலாந்துத் தீவில் செல்வாக்கு குறைந்தும் ஐரோப்பாவில் மிகக் குறைவாகப் பேசப்பட்டும் வந்த மொழி 1914 இல் வெளிவந்த நான்கு முதன்மை ஐரோப்பிய மொழிகளின் அகராதிகளில் ஆங்கிலம் இடம் பெறவில்லை. ஆனால் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உலகப் பொதுமொழியாகப் பரவும் பேறு பெற்றது என்கிறார். அப்படியானால் நாம் முயன்றால் தமிழை உலகப்பொதுமொழியாக வளர்க்கலாம் அல்லவா?
‘தமிழில் இலக்கிய மொழி பெயர்ப்புப் பணி’ என்னும் கட்டுரை இந்தியச் சூழலில் மொழிபெயர்ப்பின் தேவைபற்றியும் இதுவரை வெளிவந்துள்ளஆங்கில மொழி பெயர்ப்புகளின் நிறை குறைகள் குறித்தும் பிற மொழிகளில் மொழி பெயர்க்கவேண்டிய தமிழ் நூல்கள் குறித்தும் மொழிபெயர்ப்பு எவ்வாறு அமையவேண்டும் என்பது குறித்தும் சுருக்கமாகச் சொல்கிறது. மொழிபெயர்ப்புப் பணியில் சங்க இலக்கியங்களுக்கு முதன்மை அளிக்க வலியுறுத்துகிறார்.
இத் தொகுதியில் இடம் பெற்ற கட்டுரைகள் யாவும், இருபது நூற்றாண்டுகளுக்கு மேலான கால எல்லையைக் கொண்ட தமிழ் இலக்கியப்பரப்பை நமக்கு உணர்த்துவன. மேலும், பின்னர்ப் பேரா.ப.மருதநாயகம் எழுதிய நூல்கள் இவற்றை அடித்தளமாகக் கொண்ட விரிவாக்கங்களே.
(போற்றுதல்களும் தூற்றுதல்களும் : திறனாய்வுக் கட்டுரைகள்) Celebrations and Detractions : Essays in Criticism (Reliance Publishing House, New Delhi, 1993)
இந்நூலில் பின்வரும் பதினைந்து ஆங்கிலத் திறனாய்வுக் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன:
1) இலக்கியமும் தத்துவமும், 2)ஆதாரன் (Hawthorne) என்னும் அமெரிக்கரின் (The Scarlet Letter), 3) The House of the Seven Gables என்னும் புதினத்தில் சேக்குசுபியரின் செல்வாக்கு, 4) புனைவியலும் வரலாறும், 5) மேத்தியூ அருனாலுடும் புனைவியல் கவிதையும், 6) உரைகல் அணுகுமுறை எனும் இலக்கியத் திறனாய்வு, 7) புனைவியல் காலத்தில் சேக்குசுபியர் நாடகங்கள்பற்றிய திறனாய்வு, 8) உரைகல் திறனாய்வும் மேத்தியூ அருனாலுடும், 9)எசுரா பவுண்டின் கவிதைகளில் வட்டிக்குக் கடன் தரல் எனும் பாடுபொருள், 10) எசுரா பவுண்டின் காட்சியுருக் கோட்பாடுகள், 11)ஏட்சு(W.B.Yeats)பற்றிய ஆங்கிலக் கவிதைகள்,12), டி.எசு.எலியட்டு எழுதிய The Cocktail Party எனும் நாடகம், 13) டி.எசு.எலியட்டின் கவிதையும் நாடகங்களும், 14)இலெசிலி ஃபீடுலரின் இலக்கியக்கோட்பாடு, 15)சவகர்லால் நேருவி்ன் மாந்தநேயம்.
(தொன்மத் தேடல்: இலெசுலி ஃபீடுலரின் திறனாய்வுக் கோட்பாடும் செயலாக்கமும்) Quest for Myth: Leslie Fielder’s Critical Theory and Practice (1994)
அமெரிக்கத் திறனாய்வாளர், புதின ஆசிரியர், கவிஞர் இலெசுலி ஃபீடுலரின் திறனாய்வு நூல்களை இந்நூலில் ஆராய்ந்துள்ளார். இவர் நியூயார்க்கு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர். உலக நாடுகள் பலவற்றிற்கும் சென்று ஆய்வுக் கட்டுரைகள் வழங்கியவர். இவரது அமெரிக்கப் புதினங்களில் காதலும் இறப்பும் (Love and Death in the American Novel) என்னும் நூல் உலகப்புகழ் பெற்றது.பேரா.மருதநாயகம் அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்றில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பயின்றபொழுது, புதினத்தின் தன்மை என்னும் தலைப்பில் இவர் நடத்திய பாடத்தை மாணாக்கராக இருந்து கேட்கும் வாய்ப்பைப் பெற்றார். தம்முடைய ஆசிரியருக்கு மிக விருப்பமான தொன்மத்திறனாய்வு(Myth Criticism) குறித்தும் அவருடைய பெருஞ்சிறப்புக்குரிய திறனாய்வு நூல்கள் குறித்தும் ஆறு உட்தலைப்புகளில் இந்நூலில் ஆய்வு நிகழ்த்தியுள்ளார்.
திறனாய்வு, கலை, இலக்கியம், பண்பாடு, அழகியல், வரலாறு, தமிழ் அறம், தமிழ்த்தேசியம், மார்சியம், பெரியாரியம், சூழலியம், மெய்யியல், ஈழ ஆதரவு, ஒடுக்கியம்(தலித்தியம்), பெண்ணியம், இதழியல் முதலிய தளங்களில் கால்பதித்து, 50 ஆண்டுகளாக இடையறாது இயங்கி வந்த அறிஞர் கோவை ஞானி இன்று(ஆடி 14, 2051 / 22.07.2020) காலமானார்.
முற்றிய நீரிழிவு நோயால் பார்வையை இழந்தும்(1988) தளராமல் முன்னிலும் மிகுதியாகப் படைப்புகளில் ஈடுபட்ட செயற்பாட்டாளரின் செயலுக்கு இயற்கை ஓய்வு கொடுத்து விட்டது.
கோவை என்றால் நினைவிற்கு வருபவர்களில் முதலாமவர் அறிவியலறிஞர் கோ.துரைசாமி(நாயுடு) என்னும் (ஞ்)சி.டி.நாயுடு. இரண்டாமவர் கோவை ஞானி என அடையாளம் காணப்பட்டவர், அடையாளத்தை நிலைக்கச் செய்து விட்டு மறைந்து விட்டார்.
கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் கருமாத்தாம்பட்டி பேரூராட்சியைச் சேர்ந்த சோமனூர் இவரின் பிறந்த ஊர். கிருட்டிணசாமி, மாரியம்மாள் ஆகிய பெற்றோரின் எண்மக்களுள் ஒருவர். ஆனி 17, 1966 / 1-7-1935 இல் பிறந்த இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் பழனிச்சாமி.
கி.பழனிச்சாமி நண்பரால் ஞானியானார். இவரின் இளமைக்கால நண்பர் துரைசாமி ஞானி என்னும் பெயரில் எழுதிக் கொண்டிருந்தாராம். அவர் ஒருநாள், “இந்தப் பெயரை நான் விட்டுவிடுகிறேன். நீ எடுத்துக்கொள்” என்றாராம். தத்துவத் துறையில் ஈடுபாடு கொண்டிருந்த இவரும் அன்று ஞானி எனப் புனைபெயரைச் சூட்டிக் கொண்டார். ஊரிலும் கோவையிலும் கல்விகற்ற பின்னர், அண்ணாமலைப்பல்கைலக்கழகத்தில் தமிழ் இலக்கியம் பயின்றார். தன் பார்வை இழப்புவரை தமிழாசிரியராகப் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றார். அது முதல் இவரின் காதல் மனைவியான, உடற்கல்வி ஆசிரியர் மு.இந்திராணி இவரின் ஒரு கண்ணாக விளங்கினார். அக்கண் பார்வையும் ஆவணி 20, 2043 / 5.09.2012 அன்று புற்றுநோயால் அவர் மறைந்த பின்னர் பறிபோனது. உதவியாளரைக் கொண்டே படிக்கச் சொல்லிக் கேட்டும் எழுதச் சொல்லிப் படைத்தும் வந்தார். உதவியாளர் துணையுடன் இலக்கியக் கூட்டங்களில் பங்கேற்றார். பாரிவள்ளல், மாதவன் என மக்கள் இருவரும் உசா, கவிதா என மருமக்கள் இருவரும் பேரன்மார்கள் விவேகானந்தன், சித்தார்த்தன் எனப் பேரன்மார் இருவரும் உள்ளனர்.
பொதுவுடைமைவாதிகள் பலர், தமிழின் சிறப்பைப் புறந்தள்ளுபவர்களாகவும் தமிழின்காலத்தை ஏற்காதவர்களாகவும் உள்ளனர். ஆனால், உண்மையான பொதுவுடைமைவாதியான அறிஞர் கோவை ஞானி, மார்சியத்தை ஏற்றாலும் தமிழ்த்தேசியத்தை மூச்சாகக் கொண்டார். தமிழையும் தமிழுக்கு மிகவும் பிந்தைய சமற்கிருதம் பற்றியும் கொண்டிருந்த அவரது பார்வைகளில் ஒன்று வருமாறு:
“இந்திய நாகரிகத்தின் மேலடுக்கு ஆரிய நாகரிகம் என்று அறிஞர் பெருமக்கள் உரிமை கொண்டாடினாலும், இந்திய நாகரிகம் என்பதன் அடிப்படைகள் அனைத்திற்கும் ஊடகமாக இருப்பது திராவிட/தமிழ் நாகரிகம்தான். இந்தியாவின் வேளாண்மை, அறிவியல், வணிகம், கட்டடம், சிற்பம், கணிதம், ஏரணம்(தருக்கம்), மெய்யியல், இசை, மருத்துவம் முதலிய அனைத்தின் வளர்ச்சிக்கும் ஆதாரமாக இருந்தது தமிழ் நாகரிகம்.
சமற்கிருதம் என்பதன் பொருள் திருந்திய / திருத்தம் செய்யப்பட்ட மொழி . இரிக்குவேதம் முதலியவை கி.பி முதல் நூற்றாண்டுக்குப் பிறகுதான் சமற்கிருதம் என்ற மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது. இந்தச் சமற்கிருதம் கிரேக்கம், பாரசீகம், தமிழ் முதலிய பல மொழிகளின் கலவை. சமற்கிருதம் என்ற மொழி இந்தியாவில் பல்வேறு வட்டாரங்களில் உள்ள அறிஞர்கள், தமக்கிடையில் உறவு கொள்வதற்காக உருவாக்கிக் கொண்ட ஒரு செயற்கை மொழி. சமற்கிருதம் என்ற மொழியை தாய்மொழியாகக் கொண்டவர் என்று இந்தியாவில் எவரும் இல்லை. சமற்கிருத மொழிக்கு என்று ஒரு மாநிலமோ, ஓர் ஊரோ கூட இல்லை. தமிழ் மொழியிலிருந்து தொன்மையான எத்தனையோ சாத்திரங்கள் சமற்கிருதத்தில் பெயர்க்கப்பட்டன. சமற்கிருத மொழியில் பல இலக்கியங்களைப் படைத்தவர்கள் தமிழர்கள். பாணினி, சாணக்கியர், பரதமுனிவர், சங்கரர், மத்துவர் முதலியவர்கள் தமிழகத்தில்தான் வாழ்ந்தனர். சமற்கிருதத்தில் எத்தனையோ நூல்கள் எழுதப்பட்ட இடம் காஞ்சிபுரம். வேதங்களின் உள்ளும் தமிழ்ச் சொற்கள், கருத்துகள் நிறைய உண்டு. சில அறிஞர்கள் கூறுவதுபோல சமற்கிருதமும் தமிழர்கள் படைத்த மொழிதான். சமற்கிருதம் புனித மொழி என்பது இட்டுக்கட்டப்பட்ட ஒரு பொய். இந்தியாவில் இந்தி முதலிய வடஇந்திய மொழிகள் அனைத்திற்கும் அடிப்படை இலக்கணம் தந்தது தமிழ்தான், சமற்கிருதம் இல்லை. அம்பேத்கர் கூறியபடி மேற்கிலிருந்து வந்த ஐரோப்பியர்தான் பிராமணர்களையும், சமற்கிருதத்தையும் மகிமைப்படுத்தினர். அவர்களே பின்னர் தங்கள் பொய்யை உணர்ந்து கொண்டனர்.” (கோவை ஞானியுடன் ஒரு நேர்காணல் , ஆனந்து, கூடு இணைய இதழ்)
தமிழின் உண்மைச்சிறப்பைக் கூறியதுடன், சமற்கிருதம்பற்றிய சிறப்பு மாயையையும் உடைக்கும் இப்போக்கால்தான் போலிப்பொதுவுடைமை வாதிகள் இவரைப் புறக்கணித்தனர்.
பெரியாரியத்தைப் பழிக்கும் மார்சியர்களிடையே, பெரியாரியத்தின் மையம் சமதருமம். இந்தப் புள்ளியில்தான் மார்சுடன் பெரியாரை இணைக்கிறேன் என்றார் இவர்.
மார்சியர்கள், இம்மண்ணில் இருந்து கொண்டு வேறுமண்தழுவிய பண்பாட்டை விதைக்கப் பார்த்தார்கள். அதனால் எடுபடாமல் போயிற்று. இதனை அறிஞர் கோவை ஞானி,
“மார்சியர்களுடைய தோல்விக்கான முதன்மைக் காரணமே, இந்த மண்ணின் தன்மையை அவர்களால் பெற முடியாததுதானே? திராவிட இயக்கத்தை எதிர்க்க வேண்டி இருந்ததாலேயே தமிழ் மரபையும் அவர்கள் ஒதுக்கினார்கள். திராவிட இயக்கத்தோடு தோழமையுடன் மார்சியர்கள் உரையாடியிருக்க வேண்டும். தமிழ் மெய்யியலை மார்சியர்கள் காண முடியாமல் போனது தற்செயலானது அல்ல. இந்தியாவில் பொதுவுடைமைக் கட்சிகளின் தலைமையைப் பிராமணத் தலைவர்கள் ஆக்கிரமித்திருந்ததன் விளைவையும், இங்கே பொதுவுடைமைக் கட்சிகளில் பிராமணியத்தின் தாக்கம் எப்படியெல்லாம் இருந்தது என்பதையும் ஆய்வுக்குள்ளாக்க வேண்டும்.” (இந்தியாவின் மகத்தான இடதுசாரிகள் காந்தி, பெரியார், அம்பேத்கர்: கோவை ஞானி பேட்டி , சமசு, தமிழ் இந்து, 20.06.2018) என விளக்குகிறார்.
“ஒட்டுமொத்த இந்திய சமூகத்தில் சாதியின், பிராமணியத்தின் ஆதிக்கத்தைப் புரிந்துகொண்டேன்” என்று கூறி அதனைக் களைய கருத்துகளைப் பொழிந்தார். பிராமணீய ஆதிக்கத்தால் தமிழுலகு ம் இந்தியத் துணைக்கண்டமும் அடைந்த தீமைகளைத்தான் இவர் விளக்கினாரே தவிர, பிராமணர்களை எதிர்த்துக் கூறுவதில்லை. தன்னுடன் பணியாற்றும் ஆகிரியர்களுள் பிராமணர்கள் மிகுதி என்றும் அவர்கள் அன்பும் பண்பும் கொண்ட நல்லோர்கள் என்றும் போற்றுகிறார்.
மார்சியத் திறனாய்வாளராகவும் மார்சியக் கோட்பாட்டாளராகவும் திகழ்ந்தார். மார்சியக் கோட்பாட்டாளர்கள் குறைவு. அவர்களிலும் தமிழ்த்தேசிய உணர்வு கொண்டோர் சிலரே ஆவர். அச்சிலருள் அறிஞர் கோவை ஞானியும் ஒருவர். அவர், இந்தியத் துணைக்கண்டம் எப்படி இருக்க வேண்டுமென்று விரும்பினார் என்பதை, “இன்று இந்தியாவை ஒரு தேசமெனக் கருதி இந்தியத் தேசமென்று சொல்வதில் உண்மையில்லை. இந்தியா என்பது பல தேசங்கள்/பலதேசிய இனங்கள் அடங்கிய ஒரு துணைக்கண்டம். இந்தியா என்ற இந்த மாபெரும் துணைக்கண்டத்தை ஒரு தேசமென படைத்துறை முதலியவற்றைக் கொண்டு ஒடுக்கி உருவாக்குவதன் மூலமாகவே மாபெரும் சிக்கல்கள் தோன்றியுள்ளன.” (கோவை ஞானியுடன் ஒரு நேர்காணல், ஆனந்து, கூடு இணைய இதழ்) என்னும் வரிகள் காட்டி விடும்.
1960 இல் ஈழத்தமிழர் இலக்கிய உறவு கிடைத்த பின்னர் ஈழத் தமிழ் இலக்கியத்தைப் பெரிதும் போற்றி வந்தார். புலம்பெயர்ந்த தமிழர்களின் இலக்கியம்தான் இன்றைக்கும் உயிருள்ள தமிழிலக்கியம் என்று கூறி வந்தார். எனவே, ஈழத்தமிழ் இலக்கியத்தைப் பரவலாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார். இவற்றின் காரணமாகத் தமிழக வாசகர்கள் ஈழ இலக்கியத்தில் ஈடுபாடு காட்ட உந்துதலாக இருந்தார்.
ஈழ விடுதலைப் போராட்டம் தமிழக மக்களின் இரண்டகத்தால் சிதைந்ததாகப் பெரிதும் வருத்தப்பட்டார். 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகச் சூழலில் ‘சுகமாக’ நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பெயரளவிற்குப் போராட்டங்கள் நடத்துகிறோம். துப்பாக்கிச்சூடு நமக்குத் தெரியாது. மிதப்பில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஈழத்தமிழ் விடுதலை, உலகில் தமிழர் என்ற முறையில் நமக்கும் பெரும் மரியாதையைத் தந்திருக்கும். இத்தகைய மரியாதையை நாம் இழந்துவிட்டோம். (கோவை ஞானியுடன் ஒரு நேர்காணல் , ஆனந்து, கூடு இணைய இதழ்) என்கிறார் அவர். உண்மைதான் நாம் உறுதியாகவும் மனித நேயத்துடனும் நடந்து கொண்டிருந்தால் தமிழ் ஈழம் என்றோ மலர்ந்திருக்கும்.
தமிழ்த்தேசியம் குறித்த அவரது கருத்து வருமாறு:
“என்னுடைய தமிழ்த் தேசியமானது, தமிழ் மொழியின் தொன்மை வழியே எனக்குள் இறங்குகிறது. வள்ளுவரை நான் எனக்குள் காண்கிறேன்.. கணியன் பூங்குன்றன் எனக்குள் தங்கி வளம் சேர்க்கிறார். ஆழ்வார்களோடும் நாயன்மார்களோடும் நானும் கலந்திருக்கிறேன். ஆண்டாளோடு சேர்ந்து நானும் கண்ணனைத் தேடுகிறேன். நான் குறிப்பிடும் தமிழ்த் தேசியத்தின் ஆட்சி என்பது தமிழ் நாகரிகத்தின் ஆட்சி. செழுமையான தமிழ்க் கல்வி, சூழலை நசுக்காத தமிழ் வாழ்க்கை, எல்லாரையும் அரவணைக்கும் தமிழ்ப் பண்பாட்டைக் கொண்டது என்னுடைய தமிழ் தேசியம். சங்க இலக்கியம் தொடங்கித் தமிழ் நிலம் முன்வைக்கும் அறம்தான் அதன் மையம். ஏகாதிபத்திய எதிர்ப்பில் தொடங்கி வேளாண்மை, கல்வி, மருத்துவம், வரலாறு, பண்பாடு, அரசியல் என்று பல தளங்களிலும் இன்று நாம் முன்வைக்கும் திறனாய்வுகளுக்கு மாற்றை முன்வைக்கக் கூடியது அது. சங்க இலக்கியத்திலிருந்து இதற்கான மூலப்பொருளை நான் பெறுகிறேன். எனக்கு தேசப் பேதம் இல்லை; மொழிப் பேதம் இல்லை; சாதி – மதப் பேதம் இல்லை என்ற பேருணர்வைக் கொண்டது என்னுடைய தமிழ்த் தேசியம். பெரியாரிடத்திலிருந்து பெறும் தொலைநோக்கின் தொடர்ச்சி அது.” (சமசு, தமிழ் இந்து, 20.06.2018)
தமிழ்ச் சிற்றிதழ் இயக்கத்தோடு நெருக்கமான தொடர்பு கொண்டு இதழாளராகவும் விளங்கினார்.
புதிய தலைமுறை (1968-70), பரிமாணம் (1979-83), நிகழ் (1988-96), தமிழ்நேயம் (67 இதழ்கள் வெளிவந்தன;1998-2012) ஆகிய சிற்றிதழ்களை நண்பர்கள் ஒத்துழைப்போடு இவர் வெளியிட்டார்.
இவை தொடர்பில் எனக்கும் அவருக்கும் உள்ள தொடர்பு குறித்த தகவலைக் கூற விரும்புகிறேன்.
அறிஞர் கோவை ஞானி அவர்களைச் சில முறை சந்தித்து உரையாடியுள்ளேன். சில முறை தொலைபேசி வழி தொடர்பு கொண்டு அளவளாவியுள்ளேன். அவர் 2011 நவம்பரில் என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். தமிழ்நேயம் சார்பில் மாதந்தோறும் ‘நானும் என் தமிழும்’ என்னும் தலைப்பில் அறிஞர்களின் தமிழ்ப்பணி வரலாற்றை நூலாகக் கொண்டு வருவதாகவும் ஆட்சித்துறையில் நான் மேற்கொண்ட அளவிடற்கரிய பணிகளைத் தமிழுலகம் முழுமையாக அறிந்து கொள்ள 100 பக்கங்களில் நூலாக எழுதித் தரவேண்டும் என்றும் கூறினார். மேலும் தந்தையார் தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி. இலக்குவனார் வாழ்க்கைப் பதிவுகளையும் சரியாக 100 பக்கங்களில் நூலாக வெளியிட எழுதித் தருமாறும் வேண்டினார். அவரவர் பணிகளைத்தான் அவரவர் எழுத வேண்டும். எனினும் பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழுக்கான போராட்ட வாழ்க்கையைச் சிறப்பிக்கும் வகையில் உங்களை எழுதச்சொல்கிறேன். தன் வரலாறாக இல்லாமல் தந்தையார் வரலாற்றை எழுதுவது, இரு நூல் எழுதுவது என உங்களுக்கு மட்டும்தான் இந்த விதி விலக்கான வாய்ப்பைத் தருகிறேன். மறுக்காமல் உதவவேண்டும் என்றார். நான் என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துவிட்டு என்னைப்பற்றிய நூலைப் பிறிதொருமுறை எழுதித் தருவதாகவும் தந்தையார்பற்றி எழுதித் தருவதாகவும் கூறி ஒரு வேண்டுகோளும் விடுத்தேன். அவர் 2012 புத்தாண்டு(சனவரி) வெளியீடாக இந்நூலை வெளியிட வேண்டும் என்றார். நான், 2012 பிப்பிரவரியில் மகள் பொறி தி.ஈழமலர்-பொறி வா.பாலாசி திருமணம் நடக்க உள்ளதாகவும் அதை முன்னிட்டு வருகையாளருக்குத் திருமண அன்பளிப்பாக வழங்க 1000 நூற்படிகள் கூடுதலாக வேண்டும் என்றும் கேட்டேன். உறுப்பினர்களுக்கு மட்டும்தான் வழங்கும் வகையில் அச்சிடுவதாகவும் எனினும் ஆவன செய்வதாகவும் கூறி நான் எழுதிய ‘தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார்’ நூலைத் தமிழ் நேயத்தின் 49 ஆவது இதழாக அச்சிட்டு வெளியிட்டுத் தந்தார். அவர் பேசும்பொழுது, தமிழ்த்தேசியத்திற்கு உண்மையான வழிகாட்டி பேராசிரியர் சி.இலக்குவனார் என்றும் அவர் கூறிய மொழிவழித் தேசியக் கூட்டமைப்பை காலப்போக்கில் இந்தியா ஏற்கும் என்றும் தாம் அதைத்தான் இப்பொழுது பரப்பி வருவதாகவும் குறிப்பிட்டார். அவர் தந்தையார் தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார் மீது கொண்டிருந்த உண்மையான மதிப்பையும் என் மீது கொண்டிருந்த அன்பையும் வெளிப்படுத்தினார்.இவற்றை மறக்க இயலுமோ?
“எனது எழுத்துகளில், என் வாழ்வும், பட்டறிவும் அடங்கியிருக்கின்றன” என்னும் இவர் கூற்று இவர் படைப்புகளுக்கான அறிமுகம் ஆகும். அந்த வகையில் இவரின் 48 படைப்புகள் விவரம் வருமாறு:
திறனாய்வு நூல்கள்
மார்சியமும் தமிழ் இலக்கியமும் – 1988
தமிழகத்தில் பண்பாட்டு நெருக்கடிகள் – 1994
எண்பதுகளில் தமிழ் நாவல்கள் – 1994
படைப்பியல் நோக்கில் தமிழிலக்கியம் –
தமிழில் நவீனத்துவம் பின்நவீனத்துவம் – 1997
நானும் என் தமிழும் – 1999
தமிழன் வாழ்வும் வரலாறும் – 1999
தமிழில் படைப்பியக்கம் – 1999
மறுவாசிப்பில் தமிழ் இலக்கியம் – 2001
எதிர் எதிர் கோணங்களில் – 2002
மார்க்சிய அழகியல் – 2002
கவிதையிலிருந்து மெய்யியலுக்கு – 2002
தமிழ் தமிழர் தமிழ் இயக்கம் – 2003
தமிழ் நாவல்களில் தேடலும் திரட்டலும் – 2004
வரலாற்றில் தமிழர் தமிழ் இலக்கியம் – 2004
தமிழ் வாழ்வியல் தடமும் திசையும் – 2005
தமிழன்பன் படைப்பும் பார்வையும் – 2005
வள்ளுவரின் அறவியலும் அழகியலும் – 2007
தமிழ் மெய்யியல் அன்றும் இன்றும் – 2008
நெஞ்சில் தமிழும் நினைவில் தேசமும் – 2009
செவ்வியல் நோக்கில் சங்க இலக்கியம் – 2010
தமிழிலக்கியம் இன்றும் இனியும் – 2010
வானம்பாடிகளின் கவிதை இயக்கம் – 2011
ஏன் வேண்டும் தமிழ்த் தேசியம் – 2012
அகமும் புறமும் புதுப்புனல் – 2012
அகமும் புறமும் தமிழ்நேயம் – 2012
ஞானியின் எழுத்துலகம் – 2005
ஞானியோடு நேர்காணல் – 2012
மெய்யியல்
மார்சியத்திற்கு அழிவில்லை – 2001
மார்சியமும் மனித விடுதலையும் – 2012
இந்திய வாழ்க்கையும் மார்சியமும் – 1975
மணல் மேட்டில் ஓர் அழகிய வீடு – 1976
கடவுள் ஏன் இன்னும் சாகவில்லை – 1996
நானும் கடவுளும் நாற்பது ஆண்டுகளும் – 2006
கவிதை நூல்கள்
கல்லிகை – 1995
தொலைவிலிருந்து – 1989
கல்லும் முள்ளும் கவிதைகளும் – 2012
தொகுப்பு நூல்கள்
புதிய தரிசனங்கள் – கலையும் அரசியலும் – 1997
தமிழ்த் தேசியம் : பேருரைகள் – 1997
அறிவியல் அதிகாரம் ஆன்மீகம் – 1997
மார்சியத்தின் எதிர்காலம் – 1998
படைப்பிலக்கியம் சில சிகரங்களும் வழித்தடங்களும் – 1999
மார்சியத்தின் புதிய பரிமாணங்கள் – 1999
விடுதலை இறையியல் – 1999
இந்தியாவில் தத்துவம் கலாச்சாரம் – 2000
மார்சியம் தேடலும் திறனாய்வும் – 2000
நிகழ் நூல் திறனாய்வுகள் 100 – 2001
பெண்கள் வாழ்வியலும் படைப்பும் – 2003
இவற்றுள் புதிய தரிசனங்கள் – கலையும் அரசியலும் – 1997 என்பது 1900 பக்க அளவில் 3 தொகுதிகளாக வெளிவந்துள்ள பொன்னீலனின் புதினம்.இதில் இப்புதினம் குறித்த மதிப்புரைகள், வாசகர் மடல்கள் முதலியவற்றையும் தொகுத்துத் தந்துள்ளார். பொன்னீலனின் படைப்பு என்றாலும் இவரது தொகுப்புப்பணியின் காரணமாக இதில் சேர்க்கப்பட்டுள்ளது.
‘கல்லிகை’ என்னும் நெடுங்கவிதை/குறுங்காவியம், எழுபதுகளின் தொடக்கத்தில் கோவையில் தோன்றி வளர்ந்த வானம்பாடி இயக்கத்தின் தூண்டுதலால் உருவானது. கல்லான அகலிகையின் கதையைப் புதுக்கவிதை பாணியில் செய்திருக்கிறார். புதுமைப்பித்தன் முதலான சிலர் இக்கால நோக்கில் அகலிகை பற்றிக் கதைகள் எழுதியிருப்பினும் கவிதையில் சிற்பாக வந்த படைப்பாக இது போற்றப்படுகிறது.இக்கவிதை நூலில், எனக்குள் ஒரு வானம்’ என்ற இன்னொரு கதைக் கவிதையும் அடங்கியுள்ளது.
புதுமைப்பித்தன் ‘விளக்கு விருது’ (1998), கனடா – தமிழிலக்கியத் தோட்ட ‘இயல்’ விருது (2010), தி.இரா.நி,(எசு.ஆர். எம். ) பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராயம் வழங்கிய ‘பரிதிமாற் கலைஞர்’ விருது (2013) முதலிய பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.
13-06-2013 அன்று கோயம்புத்தூரில் அறிஞர் கோவைஞானியின் அன்பர்கள் ஒன்று கூடி அவரது அனைத்துப்பதிப்புகளையும் இணைய வழியாகக் கட்டணமின்றித் தருதல், கோவை அறிஞர்களின் நூல்களைத் திரட்டுதல் முதலான பணிகளுக்காகத் தமிழ் நேயம் அறக்கட்டளையை உருவாக்கியதாக எழுத்தாளர் செயமோகன் வலைப்பூவில் ‘கோவையில் உருவாகும் தமிழ் நேயம் அறக்கட்டளை – நண்பர்களுக்கு வேண்டுகோள்’ என்னும் தலைப்பில் ஓர் அறிவிப்புச் செய்தி வந்திருந்தது. முனைவர் கு.முத்துக்குமார் அறிிவித்திருந்தார். இதன் இப்போதைய நிலை தெரியவில்லை. அறிஞர் கோவை ஞானியின் நினைவாகஇதனைச் சிறப்பாகச்செயல்படத்த வேண்டுகிறோம்.
சங்கக்கால இலக்கியங்களையும் இக்கால இலக்கியங்களையும் இணைக்கும் பாலமாக விளங்கிய அறிஞர் கோவை ஞானிக்கு நாம் செலுத்தும் உண்மையான நிலையான அஞ்சலியாக இதுவே இருக்கும்.
இலக்குவனார் திருவள்ளுவன்
காண்க:
சுப்பிரபாரதிமணியனின் உரை, வ.ந.கிரிதரனின் பதிவுகள் தளம்
ஞானியின் உலகம்: என் நண்பர்கள்,என் எழுத்தும் எண்ணமும் தமிழ் இந்து, 15.04.2017
கோவை ஞானியுடன் ஒரு நேர்காணல், ஆனந்து, கூடு இணைய இதழ்
இந்தியாவின் மகத்தான இடதுசாரிகள் காந்தி, பெரியார், அம்பேத்கர்: கோவை ஞானி பேட்டி, சமசு, தமிழ் இந்து, 20.06.2018
கோவை ஞானியுடன் வீதியுலா, முருகபூபதி, பயணிகள் பார்வையில்–03,நோயெல்நடேசன் வலைப்பூ
முரண்பட்ட சிந்தனையாளர்களை ஒன்றிணைத்தவர் ஞானி!,செல்வ புவியரசன், தமிழ் இந்து 05.07.2020
கோவை ஞானி வலைப்பூ
கோவை ஞானி இணையத்தளம்
கோவை ஞானி, விக்கிபீடியா
ஞானி பேசுகிறார், தமிழ் இந்து
தமிழ் இந்து இதழில் ஞானியார் குறித்துமேலும் சில கட்டுரைகள் உள்ளன. கண்டறிக.
இனித் தொல்காப்பியம் முதற்சங்கக் காலத்து ஆக்கப்பெற்று இடைச்சங்கத்தாருக்கு இலக்கணமாயிற் றென்பது தமிழரெல்லார்க்கும் ஒப்ப முடிந்ததொன்று. கடைச் சங்கக் காலத்தினும் தொல்காப்பியம் ஆட்சியிலிருந்ததாயினும் அதன் விதிகளுக்கு மாறுபட்ட வழக்குகள் அச்சங்க நூல்களிற் பயிலக் காண்கின்றோம். உதாரணமாக: மொழிக்கு முதலாகாதென்று தொல்காப்பியம் விதந்து விலக்கிய சகரத்தை முதலாகக்கொண்ட தமிழ்மொழிகள் பல கடைச்சங்க இலக்கியங்களிற் பயிலக் காண்கின்றோம். வள்ளுவர் நூலில் வடசொல்லாய்வந்து வழங்கும் சமன், சலம் என்ற இரண்டொன்று தவிரத் தனித்தமிழ்ச் சகர முதன்மொழிகள் காணல் அரிது. இதனால், தொல்காப்பிய விதிகள் சில வழக்கிழந்த கடைச்சங்கக் காலத்துக்கு முன்னரே அவ்விதிகள் பிறழாமற் பேணப்பெற்ற இடைச் சங்கப் பழங்காலத்தையடுத்தே வள்ளுவரின் குறள் எழுந்திருக்கவேண்டுமென்று ஊகிப்பதும் இழுக்காது.
சாணக்கியம் முதலிய ஆரியநீதிநூல்களினின்று அறங்களைத் திரட்டி வள்ளுவர் நூல் செய்திருக்க வேண்டுமென்றும், ஆதலால், சாணக்கியர் முதலியோருக்கு வள்ளுவர் பிற்காலத்தவரா யிருக்க வேண்டுமென்றும் சிலர் கூறுகின்றனர். இதற்குப் பரிமேலழகர் 662-ஆம் குறளின் விசேடக் குறிப்பில் “வியாழ வெள்ளிகளது துணிபுதொகுத்துப் பின் நீதிநூலுடையார் கூறியவாறு கூறுகின்றமையின்” என்று எழுதியுள்ள வாக்கியத்தை ஆதாரமாக்கி, அவ்வாக்கியத்திற் கண்ட ‘பின் நீதிநூலுடையார்’ என்ற சொற்றொடர் சாணக்கியர் முதலாயினாரைச் சுட்டுவதாகக் கொள்கின்றனர். இதுவே பரிமேலழகர் கருத்தாயின் அவர் விசதமாக்கியிருப்பர். அன்றியும், பின் னீதிநூலுடையார் யாரேயாயினும் அவர் தம் வழி நூல்களுக்குக் குறள் சார்புநூலாகும் என்னுங் கருத்தைப் பரிமேலழகர் இவ்வாக்கியத்தாற் குறித்ததாக ஏற்படுமாறில்லை. ஆழச்சிந்தித்தால் வியாழ வெள்ளிகளின் நீதி நூல்களுங்கூடக் குறளுக்கு முதனூலெனப் பரிமேலழகர் இவ்வாக்கியத்திற் சுட்டிலரென்பது தெற்றென விளங்கும். வியாழ வெள்ளிகளின் துணிபுகளைத் தொகுத்த ஆரியநீதி வழி நூலுடையார் முறைக்கும் குறளாசிரியர் அறம்வகுத்த முறைக்கும் எடுத்துக்கொண்ட குறட் பொருள்பற்றியுள்ள ஒப்புமையை இவ்வாக்கியத்தாற் கூறியதன்றி, ஈண்டுப் பரிமேலழகர் காலமுறையால் முதல் வழி சார்புநூல்களாமாறு வகுத்துக்கூற வந்தாரில்லை. இவ்வாறே பிற இடங்களிலும் குறட்கருத்துக் களோடு வடநூலுடையார் கொள்கைகளின் ஒப்பும் மாறுபாடும் பரிமேலழகர் எடுத்துக்காட்டிச் செல்லுதலும் கவனிக்கத்தக்கது.
சங்கத்தார் பாடியதாகக் கொள்ளப்படும் திருவள்ளுவ மாலைச் செய்யுட்கள்பல குறளை ஆரியமறைகளுக்கு ஒப்பதும் மிக்கதுமாமென்று விசதமாகப் பாராட்டுகின்றன். வேதங்களுக்கு மிகப்பிந்திய மனுவாதி வடமொழி நூலொன்றுமே குறளுக்கு முதனூலாகாதென்னுங் குறிப்பும் திருவள்ளுவமாலைச் செய்யுட்களிற் காணலாம். இவ்வாறு மனுவாதி வடமொழி அறநூலுடையாரே வள்ளுவருக்கு முதனூலுடையராகாத போது, அவரைப் பின்பற்றிய மிகப் பிற்பட்ட கேவலம் நீதிநூலுடைய சாணக்கியராதியர் வள்ளுவருக்கு வழிகாட்டிகளாவது எப்படியோ?
மேலும், நீதி அறத்தில் அரசனால் வற்புறுத்தப்படும் ஒரு கூறேயாமாகலின், அறநூல்களினின்று நீதிநூல்களைப் பிரித்துத் தொகுக்க லாவதன்றிக் கேவலம் நீதிநூல்களினின்று அறநூல்க ளியற்றப்படுமாறில்லை. பரிமேலழகரே பலவிடத்தும் நீதிநூலின் வேறாய அறநூல்களுண்மையைச் சுட்டியுள்ளார். திருக்குறள் அறநூலாகவே, அறத்தின் ஒரு பகுதியான நீதிகளை மட்டுங்கூறும் வடமொழி நூல்களின் வழிநூலாக வள்ளுவர் குறளை இயற்றினார் என்பது பொருந்தாக்கூற்றாம்.
இன்னும், ஆரிய தருமசாத்திரமுறை வேறு, தமிழற நூன்மரபு வேறாகும். இருமுறைகளையும் ஒத்துணர்ந்த வள்ளுவர் திருக்குறள், தமிழ் மரபுவழுவாது பொருளின் பகுதிகளான அகப்புறத் துறையறங்களை மக்கள் வாழ்க்கை முறைக்காமாறு ஆராய்ந்து அறுதியிட்டு வடித்தெடுத்து விளக்கும் தமிழ்நூல். தமிழ்மரபும் ஆரியர் சம்பிரதாயமும் அறிந்த பரிமேலழகர் தம் குறளுரையில் ஆங்காங்கே இவ்விருபெருவழக்குக்களின் இயையும் முரணும் எடுத்துக் காட்டிச் சொல்லுமழகு பாராட்டத்தக்கது. இதை விட்டுத் திருக்குறள், சாணக்கியராதி வடமொழி நீதி வழி நூல்களுக்குப்பின் அவறறின் சார்புநூலாக எழுந்ததென்பர் தமது ஆரியமதிப்பும் காதலும் வெளிப்படுத்துவதன்றிச் சரிதவுண்மை துலக்குபவராகார். தமிழிற் பெருமையுடைய அனைத்தும் ஆரிய நூல்களினின்று திரட்டப்பட்டிருப்பதாகக் காட்டி மகிழ்வார் சிலர்க்கன்றி, நடுநிலையாளருக்கு வள்ளுவர் குறள் தமிழில் தனி முதலற நூலேயாகுமென்பது வெள்ளிடைமலையாம்.
செந்தமிழ்ப் பெரியார் திரு.வி.க. முத்தமிழ் வித்தகராய், தமிழ் உரை நடைத் தந்தையாய், சொற்பொழிவுக் கொண்டலாய், செய்தி இதழ் ஆசிரியராய், தொழிலாளர்களின் தோழராய், அரசியல் அறிஞராய், மார்க்சியம் போற்றுபவராய், பெண்மை போற்றும் பெருந்தகையாய், மாணவர் நண்பராய், சமரச சன்மார்க்க அருங்குணக்குன்றாய், அடக்கத்தின் எடுத்துக்காட்டாய் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றி இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் செப்டம்பர்த் திங்களில் (17.9.53) செந்தமிழ் நாட்டைவிட்டு மறைந்து விட்டார்.
தமிழை வளர்க்கும் தலையாய பணியில் ஈடுபட்டு அருந்தொண்டாற்றிய பெருமை அவர்க்கு நிறைய உண்டு. அவர்தம் தொண்டால் இன்று நாடு முழுவதும் அரசியல் மேடைகளில் தமிழ் மணம் வீசுகின்றது. எங்கும் தமிழ்ப் பேச்சுக் கேட்கின்றது. தமிழ்! தமிழ்! என்னும் முழக்கம் யாண்டும் வானைப் பிளந்து எழுகின்றது.
திரு.வி.க.வினுடைய எழுத்துகளில் அழகு ததும்பும். இனிமை சொரியும். இசை நடனமிடும் அவர் எழுத்தோவியங்கள் உயர்தனிச் செம்மொழிக்கு எடுத்துக்காட்டாய் இலங்குவன. அவர் இயற்றியுள்ள ஒவ்வொரு நூலும் ஒவ்வோர் இலக்கியமாகத் தோன்றும். ஒவ்வொரு குறிக்கோளை விளங்கி நிற்கும். அவர் யாத்த நூல்களுள் ‘பெண்ணின் பெருமை’, மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் என்னும் பாரதி கருத்துக்கு ஏற்புடையது. ‘சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து’. கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப் போக என்னும் இராமலிங்க அடிகளாரின் அடியொற்றியது. ‘கடுவன் காட்சியும் தாயுமானாரும்’, அறிவே தெய்வம் என்று கூறிய தாயுமானாரின் பொன்மொழியை விளக்கும் பான்மையது. ‘கிருத்துவின் அருள்வேட்டல்’, அன்பே கடவுள் எனும் இயேசுநாதரின் கட்டளைக்குரியது. இங்ஙனம் பல உயர் குறிக்கோள்களை விளக்குவதற்கு எழுந்த நூல்கள் யாவும் இலக்கியம் என்னும் பெயருக்கேற்ப அமைந்தனவாம். இலக்கியம் என்றால் குறிக்கோளை இயம்புதல் என்று தானே பொருள்.
அவர் வழிநின்று நற்றமிழ்த் தொண்டாற்றுதல் நம்மனோர் கடனாகும். புலவரைப் போற்றும் நாடே பொன்னாடாகும். செந்தமிழ்ப் புலவராம் திரு.வி.க.வைப் போற்றுவோம். நம் செந்தமிழ் காப்போம் என உறுதி பூண்போம். வாழ்க திரு.வி.க.வின் புகழ்! வளர்கதமிழ்!
தமிழ்ப்போராளி பேரா.முனைவர் சி. இலக்குவனார்
000
திரு.வி.க.வின்கருத்துத்துளிகள்
தாய்மை மலர்ந்தால் இறைமை கனியும்
பெண்மணியின் வாழ்விலே மூன்று நிலைகள் முறை முறையே அரும்பி மலர்ந்து கனிதல் வேண்டும். அவை பெண்மை, தாய்மை, இறைமை என்பன. இம்மூன்றினுள் மிகச் சிறந்தது தாய்மை. பெண்மை, தாய்மை மலர்ச்சிக்கென ஏற்பட்டது. தாய்மை மலர்ந்தால் இறைமை தானே கனியும். இறைமை கனிவுக்குத் தாய்மை இன்றியமையாதது. தாய்மை மலராவிடத்தில் இறைமை கனியாது. தாய்மை மலராத பெண்மையும் சிறப்புடையதன்று. ஆதலின் தாய்மை சிறந்ததென்க. தாய்மையாவது அன்பின் நிறைவு! அன்பின் விளைவு! அன்பின் வண்ணம்!
தமிழ்த்தென்றல்திரு.வி.க.:
திருக்குறள்விரிவுரை: அறத்துப்பால்: பக்கம்.614
000
பிறர்க்காக வாழ்வதே வாழ்வாகும்
மனிதன் எத்தகைய வழக்க வொழுக்கமுடையனாயினும் ஆக; எத்தகையத் தொழின் முறையின் ஈடுபட்டவனாயினும் ஆக; அரசனாயிருப்பினும் இருக்க; ஆண்டியாயிருப்பினும் இருக்க; நீதிபதி தொழில் செய்யினுஞ் செய்க; வாயில்காப்பு வேலை புரியினும் புரிக; எவரெவர் எந்நிலையில் நிற்பினும் நிற்க; எக்கோலங் கொள்ளினுங் கொள்க. மெய்யறிவுஎன்னும்ஞானம்பெறஎவருங்காட்டுக்குப்போகவேண்டியதில்லை. நடு நாட்டில் மனைவி மக்கள் உற்றார் பெற்றார் உறவினர் இவரோடு வாழ்ந்தும், பலவகைத் தொழில்களைச் செய்தும் ஞானியாகவே இருக்கலாம். வேண்டு ஒன்றே; அது, நாம் பிறர்க்காக வாழ்கிறோம்’ என்று எண்ணங் கொண்டு வாழ்வதேயாகும்.
தமிழ்த்தென்றல்திரு.வி.க. :
மனிதவாழ்க்கையும்காந்தியடிகளும்: பக்கம்.23
000
திருவள்ளுவர் நூல் முப்பால் உலகுக்குப் பொது
திருவள்ளுவர் நூல் அறத்துப்பால் பொருட்பால் காமத்துப்பால் என்ற முப்பாலால் ஆக்கப்பட்டது. அறமும் பொருளும் காதலும் ஒரு வகுப்பார்க்கோ ஒரு மதத்தார்க்கோ ஒரு நிறத்தார்க்கோ ஒரு மொழியார்க்கோ ஒரு நாட்டார்க்கோ உரியன அல்ல. அவை மன்பதைக்கு – உலகுக்குப் பொது.
திருவள்ளுவர் என்னும் நினைவு தோன்றும் போதே, உலகமும் உடன் தோன்றுகிறது. இவ்வாறு தோன்றுதற்குக் காரணமென்ன? திருவள்ளுவர் உலகையே குறளாக எழுதினார். உலகின்எழுத்தோவியம்திருக்குறள் என்று கூறலாம்.
திருவள்ளுவர் உலகுக்கு என்றே பயின்றார்; உலகுக்கு என்றே வாழ்ந்தார்; அதனால் அவர்தம் உள்ளத்தில் உலகம் நின்றது. அவர் உலகம் ஆயினார்.. உலகம் அவராயிற்று. இத்தகைய ஒருவரிடமிருந்து பரிணமித்த ஒரு நூல் எந் நினைவையூட்டும்? அ·து உலக நினைவை ஊட்டுதல் இயல்பே. ஆகவே திருவள்ளுவர் நினைவு தோன்றும் போது உலகமும் உடன் தோன்றுவதில் வியப்பொன்றும் இல்லை.
திருவள்ளுவர் அருளிய திருக்குறள் என்னும் தெய்வ மறையினிடத்தில் எனக்குத் தணியாக காதல் உண்டு. காரணம் பலப்பல. சில வருமாறு: திருவள்ளுவர் முப்பால் கூறி வீட்டுப்பால் விடுத்தது. அறப்பேற்றுக்கு இல்வாழ்க்கையைக் குறித்தது. பெண்ணை வெறுத்தல முதலிய போலித் துறவுகளைக் கடிந்தது. மனமாசு அகற்றலே துறவென்று இயற்கை நுட்பத்தை விளக்கியது. இயற்கைப் பொது நெறியை அறிவுறுத்தியது. இன்ன பிற.
தமிழ்த்தென்றல்திரு.வி.கல்யாணசுந்தரனார்
000
திருக்குறளின்படிஒழுகுங்கள்!
தமிழ்நாட்டுச் செல்வர்களே! நீங்கள் பிறந்த நாடு, திருவள்ளுவர் பிறந்தநாடு. அப்பெரியார் நூல் உங்கள் கையில் விளங்குகிறது. அதுவே உங்களுக்கு உரிமை கொடுக்குங் கருவி. அதை ஓதுங்கள்; அதன்படி ஒழுகுங்கள்; ஒத்துழையாமையின் பொருளை ஓருங்கள். ஐம்பெரும் பாவத்துடன் ஒத்துழையாமை என்பதே அதன் பொருள். விரிந்து பரந்த நாடுகளை ஆளும் முறையில் ஐந்து பாவங்கள் புத்திபூர்வமாகவோ அபுத்தி பூர்வமாகவோ நிகழ்ந்துவிடும். ஆதலால், அப்பாவங்கள் நிகழாதவாறு காத்துக்கொள்ளும் கிராம ஆட்சியை -பழைய கிராமப் பஞ்சாயத்தை – தொழிலாளர் ஆட்சியை பொருளில் பிறந்து, அறத்தில் அமர்ந்து, இன்பத்தை ஈந்து, வீடுபேற்றை அளிக்கவல்ல ஞான அரசியலைப் பெற முயலுங்கள். இதன் பொருட்டு உங்கள் உடல் பொருளை ஆவி மூன்றையும் தத்தஞ் செய்யவும் சித்தமாயிருங்கள். உங்கள் முயற்சியால் எல்லா நலனும் ஆண்டவனருளால் விளையும்.
–தமிழ்த்தென்றல்திரு.வி.கல்யாணசுந்தரனார்
000
கீர்த்தனையால்விளைந்தநலன்சிறிது; தீங்கோபெரிது!
தமிழ்நாடு விருந்தோம்புவதில் பெயர் பெற்றது. எல்லாத் துறைகளிலும் அது விருந்தோம்பியுள்ளது. தமிழ்நாடு கீர்த்தனை விருந்தையும் ஓம்பியது. கீர்த்தனையால் நாட்டுக்கு விளைந்த நலன் சிறிது; தீங்கோ பெரிது.
கீர்த்தனை தமிழ்நாட்டில் கால் வைத்ததும் அதற்கு வரவேற்பு நல்கப்பட்டது. தமிழில் கீர்த்தனைகள் யாக்கப்பட்டன. அந்நாளில் பெரும்பெருஞ் சிங்க ஏறுகள் இருந்தன. முத்துத்தாண்டவர், கோபாலகிருட்டிண பாரதியார், அருணாசலக் கவிராயர் முதலியோர் பெருஞ்சிங்க ஏறுகளல்லவோ? அவர்களால் யாக்கப்பட்ட கீர்த்தனைகளில் பொருளும் இசையும் செறியலாயின… இந்நாளில் கலைஞரல்லாதாரும் கீர்த்தனைகளை எளிதில் எழுதுகின்றனர். அவை ஏழிசையால் அணி செய்யப்படுகின்றன. அவ்வணியைத் தாங்க அவற்றால் இயலவில்லை. கலையற்ற கீர்த்தனைகளின் ஒலி, காதின் தோலில் சிறிது நேரம் நின்று, அரங்கம் கலைந்ததும் சிதறி விடுகிறது. இதுவோ இசைப்பாட்டின் முடிவு?