Showing posts with label கருஞ்சட்டை. Show all posts
Showing posts with label கருஞ்சட்டை. Show all posts

Wednesday, November 16, 2016

மறக்க முடியுமா? – பேராசிரியர் சி.இலக்குவனாரை : எழில்.இளங்கோவன்




தலைப்பு-மறக்கமுடியுமா? - இலக்குவனார், எழில்.இளங்கோவன் ; thalaippu_marakkamudiyuma_ilakkuvanarezhil-elangovan

மறக்க முடியுமா? : பேராசிரியர் சி.இலக்குவனார்

 அன்றைய தஞ்சை – இன்றைய நாகை மாவட்டம் திருத்துறைப் பூண்டிக்கு அருகில் வாய்மைமேடு என்ற ஊரில் வாழ்ந்த சிங்காரவேலு – இரத்தினத்தாச்சி இணையரின் இரண்டாம் மகனாகப் பிறந்தார் இலக்குவனார்.
  இலட்சுமணன் என்ற இவரின் இயற்பெயரை, இவர் எட்டாம் வகுப்பு படிக்கும் போது, இவரின் ஆசிரியரான தமிழறிஞர் சாமி சிதம்பரனார் இலக்குவன் என்று மாற்றினார்.
  கார்த்திகை 1, 1940 / 1909ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் நாள் பிறந்த இவரின் தொடக்கக் கல்வி, கண்ணுசாமி, சுப்பையா ஆகிய ஆசிரியர்களின் திண்ணைப் பள்ளியில் இருந்து தொடங்கியது.
  பள்ளி, கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்து, ‘தமிழ் மொழியின் தோற்றமும் வளர்ச்சியும்’ (Origin and Growth of Tamil Language) என்ற ஆய்வில் கீழைமொழிகளில் முதுவர் (M.O.L) பட்டம் பெற்றார். தொல்காப்பியத்தை ‘Tholkappiyam in English with critical studies’ என்று ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து ஆய்வு செய்து முனைவர்( Ph.D.) பட்டம் பெற்றிருக்கிறார். அத்துடன் வித்துவான், புலவர் பட்டமும் பெற்றவர் இவர்.
  பேராசிரியர் சி.இலக்குவனாரின் தொல்காப்பிய ஆங்கில நூலுக்கு அணிந்துரை வழங்கியவர் அறிஞர் அண்ணா.
  அண்ணா தமிழக முதல்வரான பின் மேற்கொண்ட வெளிநாட்டுச் சுற்றுப்பயணத்தின் போது, வாட்டிகன் நகரில் போப்பாண்டவரிடமும், அமெரிக்க நூலகங்களுக்கும் இலக்குவனரின் தொல்காப்பிய ஆய்வு ஆங்கில நூல்களைப் பரிசுகளாக வழங்கியிருக்கிறார்.
  மொழியியல், இலக்கியம், தொல்காப்பிய ஆய்வு, திருக்குறள் ஆய்வு, சங்க இலக்கியங்கள் ஆய்வு எனப் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார் இலக்குவனார்.
  மாணவர் ஆற்றுப்படை, அம்மூவனார், திருக்குறள் எளிய பொழிப்புரை, தொல்காப்பிய விளக்கம், அண்ணாவிற்குப் பாவியல் வாழ்த்து, கருமவீரர் காமராசர், துரத்தப்பட்டேன், என் வாழ்க்கைப் போர், அமைச்சர் யார்? என்று இவர் எழுதிய நூல்களின் பட்டியல் நீள்கிறது.
  இலக்குவனார் அவர்கள் பணியாற்றும் கல்லூரிகளில் எல்லாம் தமிழ் மன்றங்களை நிறுவி வருவார். மாணவர்கள் மத்தியில் இவருக்கிருந்த செல்வாக்கு, அன்று வேறுயாருக்கும் இருக்கவில்லை.
  1965ஆம் ஆண்டில் இந்தி ஆட்சிமொழி என்று மத்திய அரசு அறிவித்ததைத் தொடர்ந்து, மாணவர்கள் பேரெழுச்சி பெற்று, வீதிகளில் இறங்கிப் போர்க்கோலம் பூண்டதில் பேராசிரியர் இலக்குவனாரின் பணி அளப்பரியது.
  அந்த ஆண்டில் கோவை நஞ்சுண்டாபுரம் நாடார் உயர்நிலைப் பள்ளி மாணவன் நானும், என் வகுப்புத் தோழர்கள் மூவரும், மதுரை தியாகராயர் கல்லூரிக்குச் சென்று ஐயாவைப் பார்த்தோம்.
  படிப்பை முதன்மையாகக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்திய அவர், ஆதிக்க இந்தியை அகற்ற மாணவச் சமூகம் ஒன்றாக நின்று போராட வேண்டும் என்றும் சொன்னார். அவர் கொடுத்த ‘குறள்நெறி’ இதழ்களுடன் கோவை திரும்பிய நாங்கள், போத்தனூர் தொடரி(இரயில்) நிலையத்தில் இந்தியை அழிக்க கரிநெய்(தார்)ச் சட்டி எடுத்துச் சென்றபோது கைது செய்யப்பட்டோம், மாணவர்களாக.
  மறக்கவா முடியும் அந்த நிகழ்வை, ஐயா இலக்குவனாரை!
  பேராசிரியர் இலக்குவனார் தை 19, 1996, 1996 / 01.02.1965இல் கைது செய்யப்பட்டார். அமைச்சரைக் கொல்ல முயற்சி செய்தார் என்றும், மேலும் 14 குற்றச்சாட்டுகளிலும் கைது செய்யப்பட்டு ஒருமாதம் சிறையில் தள்ளப்பட்ட அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
  பின்னர், உயர்நிலைப் பள்ளிகளைப்போல கல்லூரிகளிலும், எல்லாத் துறைகளிலும் ஒரே நேரத்தில் தமிழைப் பயிற்று மொழி ஆக்க வேண்டும் என்று கன்னியாகுமரியில் இருந்து சித்திரை 23, 1996 / 05.05.1965 ஆம் நாள் சென்னை நோக்கி நடைப்பயணம் மேற்கொள்ளத்  திட்டமிட்டிருந்தார்.
  ஆனால் அவரை சித்திரை 01, 1996 / 01.05.1965 அன்றே தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் காங்கிரசு அரசு கைது செய்து சிறையில் தள்ளியது.
  இதனால் மதுரை, தியாகராயர் கல்லூரியில் பேராசிரியர் பணியை இழந்தார்.
  1967ஆம் ஆண்டு தி.மு.கழகம் ஆட்சி அமைத்து முதல்வராகப் பொறுப்பேற்றவுடன், இலக்குவனாரை, சென்னை மாநிலக் கல்லூரியின் தலைமைத் தமிழ்ப் பேராசிரியராக நியமித்தார் அறிஞர் அண்ணா.
  பேராசிரியர் பல்வேறு இதழ்களையும் நடத்தியிருக்கிறார்.
  1944 முதல் 1947 வரை ‘சங்க இலக்கியம்’ என்ற வார இதழை நடத்தியிருக்கிறார். அவ்விதழ்களில் புலவர்களும், பேராசிரியர்களும் பேசுகின்ற நடையை விடுத்து, மாணவர்களும் அறிய எளிமைப்படுத்தி இலக்கியத்தை, இதழ்களில் கொண்டு வந்தார்.
விருதுநகரில் பணியாற்றும் போது ‘இலக்கியம்’
தஞ்சையில் பணியாற்றும் போது ‘திராவிடக்கூட்டரசு’
மதுரையில் பணியாற்றும் போது ‘குறள் நெறி’
ஆகிய இதழ்களை மாணவர்கள் மத்தியில் வெளியிட்டு வந்தார்.
1965 இந்தி எதிர்ப்புப் போரின் போது இரண்டாம் முறையாகக் கைது செய்யப்பட்ட பின்பும் தொய்வுற்றார் இல்லை இலக்குவனார். பணிநீக்கம் வேறு. பொருளாதார நெருக்கடி இருந்த போதும், இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை ஆதரித்து 1965 மே மாதம் முதல் திசம்பர் வரை குறள்நெறி இதழை நாளிதழாக வெளியிட்டார். பின் நிறுத்தம் ஆனது.
பேராசிரியர் இலக்குவனார் அவர்கள் தமிழில் மட்டும் இதழ்கள் நடத்தினார் என்று எண்ணிவிடக் கூடாது.
“Dravidian Federation, Kuralneri’ என்று இரண்டு ஆங்கில இதழ்களையும் செப்பமுடன் மாணவர்கள் மத்தியில் வெளியிட்டுத் திராவிட இன உணர்வை ஊட்டிய பெருமகனார் அவர்.
பேராசிரியர் இலக்குவனரின் மாணவர்கள் பலர். அவர்களுள் குறிப்பிடத்தக்க சிலரில் கலைஞர், புதுவைப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் வேங்கட சுப்பிரமணியம், முனைவர் க.காளிமுத்து, கவிஞர் நா.காமராசன், கவிஞர் இன்குலாப், ஆர்.நல்லகண்ணு, பா.செயப்பிரகாசம், சேடப்பட்டி முத்தையா ஆகியோர் அடங்குவர்.
  கலைஞர் திருவாரூரில் பள்ளி இறுதி வகுப்பில் படிக்கும்போது, அவரின் ஆசிரியர் இலக்குவனார், அவருக்குத் தமிழ் உணர்வுடன், தன்மதிப்பு(சுயமரியாதை)ப் பண்புகளையும் ஊட்டினார் என்று நெஞ்சுக்கு நீதியில்கலைஞர் நினைவு கூர்கிறார்.
சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறையினரால், ஔவை நடராசன் தலைமையில், அன்றைய நிதி அமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் அவர்களால் சிறப்பு செய்யப்பட்ட 02.11.2009 ஆம் நாள் நூற்றாண்டு விழா நாயகர் –
பேராசிரியர் டாக்டர் சி.இலக்குவனார் அவர்கள், தன் 63ஆம் அகவையில் ஆவணி 18, 2004 / 03.09.1973 அன்று காலமானார்.
மறக்கமுடியுமா?
இவரை நாம்    
மறக்கமுடியுமா?
மூத்த இதழாளர் எழில்.இளங்கோவன்
கருஞ்சட்டைத் தமிழர் : அட்டோபர் 01-15
karunchattai-thamizhar01

Wednesday, October 26, 2016

மறக்க முடியுமா? – தமிழவேள் உமாமகேசுவரனார் : எழில்.இளங்கோவன்




தலைப்பு-மறக்கமுடியுமா, உமாமகேசுவரனார், எழில் இளங்கோவன் : thalaippu_marakkamudiymaa_umaamdakeswaranar_ezhilelangovan

மறக்க முடியுமா?

கரந்தைத் தமிழவேள் உமாமகேசுவரனார்

 காலங்களில் முரண்பாடுகள், தமிழ்ச் சங்கங்கள் இருந்தனவா இல்லையா என்பதில் முரண்பாடுகள், அப்படியே இருந்தாலும் எத்தனைச் சங்கங்கள் அல்லது சங்கம் இருந்தது என்பதிலும் கருத்து மாறுபாடுகள் இருந்தன, -இருக்கின்றன அறிஞர்களிடையே
ஆனாலும், முதல்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என மூன்று சங்கங்களை வைத்துத் தமிழ் வளர்த்தார்கள் பாண்டியர்கள் என்பது வரலாறு.
நான்காவது ‘தமிழ்ச்சங்கத்தை’ மதுரையில் நிறுவினார் பாண்டித்துரையார்.
உ.வே.சாமிநாதரின் தமிழ் ஆய்வும், தமிழின் முதல் கலைக்களஞ்சியமான ஆ.சிங்காரவேலு அவர்களின் ‘அபிதான சிந்தாமணி’ அச்சாகி வெளிவரவும் காரணமாக இருந்தது மதுரைத் தமிழ்ச்சங்கம்.
தமிழுலகின் இறுதித் தமிழ்ச்சங்கமாகவும், ஐந்தாவது தமிழ்ச்சங்கமாகவும் உருவானதுதான் ‘கரந்தைத் தமிழ்ச்சங்கம்‘.
இச்சங்கம் உருவாகக் காரணமாக இருந்த முதன்மையான இருவருள் ஒருவர் வே.உமாமகேசுவரனார்; மற்றொருவர் துங்கன் இராதாகிருட்டிணன்.
உமாமகேசுவரனாரின் தாயார் காமாட்சி அம்மையார்,  தந்தை வேப்பம்பிள்ளை.
தஞ்சை மாவட்டம் கரந்தட்டான்குடி இவருடைய சொந்த ஊர்.  சித்திரை 26, 1914 / 1883 ஆம் ஆண்டு மேத் திங்கள் 7ஆம் நாள் இவர் பிறந்தார்.
வல்லம், கும்பகோணத்தில் இவரின் பள்ளிப்படிப்பு முடிந்து, இவர் தஞ்சைக் கல்லூரியில் இளங்கலைப்பட்டம் பெற்றார். பின் சென்னை சட்டக்கல்லூரி பயின்று, தஞ்சை சீனி(ப்பிள்ளை)யிடம் வழக்கறிஞர் பயிற்சியைப் பெற்றார்.
  இவரின் வழக்காடும் திறமையால், இவர் அரசுக் கூடுதல் வழக்கறிஞராகவும் நியமிக்கப்பட்டார். ஆனாலும் இத்தொழிலில் இவர் நாட்டம் கொள்ளவில்லை. மாறாகத் தமிழ்ச் சிந்தனையே இவரிடம் மேலோங்கி நின்றது.
உமாமகேசுவரனார் துங்கன். இராதாகிருட்டிணன், கவிஞர் அரங்க.வேங்கடாசலம் ஆகியோருடன் இணைந்து வைகாசி 01, 1942 / 1911 மேத் திங்கள் 14ஆம் நாள், தஞ்சை வடவாறு, வடகரையில் உள்ள கரந்தையில் ‘கரந்தைத் தமிழ்ச் சங்க’த்தை நிறுவினார்.
“கரந்தை என்ற சொல்லுக்கு (ஆநிரை) மீட்டல் என்ற ஒரு பொருளுண்டு. தமிழ் மொழியின் இந்தப் பெருமைகளை மீட்கத் தோன்றிய அமைப்பு – கரந்தைத் தமிழ்ச்சங்கம்” என்கிறார் கரந்தை செயக்குமார்.
 இச்சங்கத்தின் முதல் செயலாளர் கவிஞர் வேங்கடாசலம். முதல் தலைவராக உமாமகேசுவரனார் பொறுப்பேற்றார்.
  கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் புரட்டாசி 21, 1947 / 06.10.1916 ‘செந்தமிழ் கைத் தொழில் கல்லூரி’ ஒன்று தொடங்கப் பெற்றது. இக்கல்லூரியின் தலைமையாசிரியர் கவிஞர் வேங்கடாசலம்.
  1929 ஆம் ஆண்டு இச்சங்கத்தின் சார்பில் இலவச மருத்துவமனை தொடங்கப் பெற்றது.
தொடர்ந்து ‘தமிழ்ப் பொழில்’ என்று இதழும் தொடங்கப்பெற்று, அவ்விதழ் தொடர்ந்து வெளிவந்தது. இவற்றைச் செய்தவர் உமாமகேசுவரனார்.
நீராரும் கடலுடுத்த” என்ற மனோன்மணீயம் பாடல் வரிகளைத் தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிமுகம் செய்தார்.
வடமொழி மட்டுமே கற்பிக்கப்பட்டு வந்த திருவையாறு கல்லூரியில் அதனை மாற்றித் தமிழைக் கற்பிக்கச் செய்தார்.
அக்கல்லூரியின் பெயரை அரசர் கல்லூரி எனப் பெயர் மாற்றம் செய்தார்.
1919ஆம் ஆண்டு தமிழைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்று, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் மூலம் தீர்மானம் இயற்றச் செய்தார்.
1937-ஆம் ஆண்டு இந்தியைக் கட்டாயம் ஆக்கிய போது, அதைக் கண்டித்தும், போராட்டம் நடத்தவும் தீர்மானம் நிறைவேற்றினார்.
 கரந்தைச் சங்கத்தின் மூலம் ‘யாழ்நூல்’, ‘நக்கீரர்’, ‘கபிலர்’, ‘தொல்காப்பியம்‘ போன்ற நூல்களைப் பதிப்பிக்கச் செய்தார்.
இவரின் முயற்சியால் 1938 ஆம் ஆண்டு கரந்தைப் புலவர் கல்லூரி தொடங்கப் பெற்றது. மூன்று ஆண்டுகளுக்குப் பின் 1941 இல்தான் இதற்குச் சென்னைப் பல்கலைக்கழகம் ஏற்பு வழங்கியது.
1920 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் தேர்தலில் போட்டியிட்டுத் தஞ்சை மாவட்டக் கழகத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 12 ஆண்டுகள் பணிபுரிந்தார்.
அப்போது தஞ்சையில் இருந்தது வெறும் 40 பள்ளிகளே. அவற்றின் எண்ணிக்கையை 170 ஆக உயர்த்திக் கல்விக்கு முன்னுரிமை கொடுத்தவர் உமாமகேசுவரனார்.
  இவரின் ஆற்றல் மிகு பயனுறு தமிழ்ப் பணியால், 1938 ஆம் ஆண்டு ஞானியாரடிகள் மணிவிழாவின் போது, நாவலர் சோமசுந்தர பாரதியாரின் முன்மொழிவின் பேரில், ஞானியாரடிகள் “தமிழவேள்” என்ற பட்டத்தை வழங்கினார்.
அன்று முதல் தமிழவேள் உமாமகேசுவரனார் என்று அழைக்கப்பட்டார்.
அதுமட்டுமன்று, 1935 ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசு ‘இராவ்பகதூர்’ என்ற பட்டத்தையும் இவருக்கு வழங்கியது.
  அளப்பரிய பணிகளைத் தமிழலகுக்குச் செய்த தமிழவேள் உமாமகேசுவரனார், இரவீந்தரநாத்தின் சாந்தி நிகேதனைப் பார்வையிட கல்கத்தாவுக்குச் சென்று, அப்படியே காசி இந்து பல்கலைக் கழகத்தையும் பார்வையிட்டார்.
 அப்பொழுது நோய்வாய்ப்பட்ட தமிவேள் உமாமகேசுவரனார், அயோத்திக்கு அருகில் பைசாபாத்து என்ற ஊரில் இருந்த குறவி என்ற மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
  சித்திரை 27, 1972 / 1941 மே 9 ஆம் நாள் அங்கு மரணமடைந்த தமிழ்வேள் உமாமகேசுவரனார் உடல்  தமிழகம் வரவே இல்லை. சரயு நதிக்கரையில் எரியூட்டப்பட்டுவிட்டது அவரின் உடல்.
  அப்பெருமகனாரின் உருவச்சிலையை பங்குனி 26, 2004 / 1973 ஏப்பிரல் 13-ஆம் நாள் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் திறந்து வைத்தார் கலைஞர்.

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் சொல்கிறார்:
வான வரிவைக் காணும்போ தெல்லாம் –  உமா
மகேசுரன் புகழே என் நினைவில்வரும்.

உமாமகேசுவரனார் மறைவுச் செய்தி கேள்வியுற்ற உரைவேந்தர் ,  தமிழறிஞர் ஔவை துரைசாமி இவ்வாறு தன் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் :

தாயாகி உண்பித்தான், தந்தையாய்
அறிவளித்தான், சான்றோனாகி
ஆயாத நூல்பலவும் ஆய்வித்தான்
அவ்வப்போ தயர்ந்த காலை
ஓயாமல் நலமுரைத்து ஊக்குவித்தான்
இனியாரை உறுவோம் அந்தோ!
தேயாத புகழான்தன் செயல்நினைந்து
உளம் தேய்ந்து சிதைகின்றே மால்.
 மறக்கமுடியுமா?
இவரை நாம்     
மறக்கமுடியுமா!
எழில்.இளங்கோவன்
கருஞ்சட்டைத் தமிழர்: அட்டோபர் 16-30, 2016
karunchattai-thamizhar01