Showing posts with label தொகுப்புரை. Show all posts
Showing posts with label தொகுப்புரை. Show all posts

Saturday, January 14, 2017

பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – தொகுப்புரை 6/7: இலக்குவனார் திருவள்ளுவன்




வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம்,
தமிழ்த்துறை, ம.தி.தா.இந்துக்கல்லூரி
திருநெல்வேலி
பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் -பன்னாட்டுக் கருத்தரங்கம்
கட்டுரைத் தொகுப்பு நூல்
தொகுப்புரை 6/7

  “பேராசிரியர் இலக்குவனாரின் தமிழ்ப்பணி” குறித்து முனைவர் சி.சுந்தரேசன் போற்றியுள்ளார்; பேராசிரியராக, நூலாசிரியராக, இதழாசிரியராக, மரபுக்கவிஞராக, களப்போராளியாக எனப் பலவகையிலும் செம்மாந்து வாழ்ந்து தொண்டாற்றியமையைச் சான்றுகளுடன் விரிவாக விளக்கியுள்ளார்; கவிதைகளில் சமூக அங்கதம் காணப்படுவது, மணமானவர்தான் குடும்ப விளக்கு பாடம் நடத்த வேண்டும் என்ற பாவேந்தர் பாரதிதாசனை உடன் மறுத்த துணிவு, சங்க இலக்கியத்தை சமூகவியல் நோக்கில் முதன்முறை ஆராய்ந்து எழுதிய நுண்மாண்நுழைபுலம், சங்க இலக்கியப் பரப்புரையில் ஈடுபட்ட காரணம், தொல்காப்பியத்திற்கு விளக்கம்  தரும்  ஆழ்ந்த புலமை, அறிஞர்களின் பாராட்டுகளுக்குரிய சீர்மை எனப் பலவகைகளிலும் இலக்குவனாரை நமக்குக் காட்சிப்படுத்தியுள்ளார்.
  “சி.இலக்குவனாரின் சமூகப் பார்வை” திறனாய்வு வரலாற்றில் பதியப்பட வேண்டிய ஒன்று என அவரது படைப்புகள் வழி ஆய்ந்து தெரிவிக்கிறார் முனைவர் இள.தேன்மொழி, ஆரியத்தின் தீமைகளை உணர்த்தினாலும் பிராமண மாணவர்கள் கல்வி கற்பதற்கு உதவி செய்த பேருள்ளம், அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு ஆகியவற்றிற்குப்  பெண்களை உயர்வுபடுத்தி விளக்கம் தரும் நடுவுநிலைமை, முதலானவற்றையும் விளக்கியுள்ளார்
  பேராசிரியரால் ஆய்ந்து தெளிவிக்கப்பட்டுள்ள “தொல்காப்பியர் காலத்தமிழர் மணமுறை – களவு”  குறித்து எடுத்துரைக்கிறார் ஆய்வாளர் அ.உரோகிணி; தமிழ்க் களவு, காதல் மணமுறை  ஆரியத்தின் காந்தருவ முறையைவிட உயர்ந்தது,  தொல்காப்பியர் காலத் தமிழர் நாகரிகத்தில் சிறந்திருந்தனர், காதல் மணம் தமிழரின் தனித்த அடையாளம் என  இலக்குவனார் விளக்குவதையும் விவரிக்கிறார்.
  “சி.இலக்குவனார் தொல்காப்பிய ஆராய்ச்சியில் கற்புநெறி” திறம்பட விளக்கப்பட்டுள்ளமையைச் சீரியமுறையில் தருகிறார் முனைவர் எசு.பாத்திமா; கற்புநெறியை ஆண், பெண் இருவருக்கும் பொதுவானதாகவும் உரையாசிரியர்கள் கருத்து தவறானவை என விளக்கமாகவும் தமிழப் பெரியவர்களை ஐயர் என அழைப்பதைப் பார்த்த பிராமணர் தங்களை ஐயர் என அழைத்துக் கொண்டனர் என்பதையும் பொது, சிறப்பு, ஆராய்ச்சி என மூவகைக் கல்வி நிலைகள் இருந்தன என்பதையும் தமிழ்நெறிப்பட இலக்குவனார் ஆராய்ந்தளிக்கிறார் என்கிறார்.
 சங்கக்காலத்தமிழ்மக்கள் பொழுதுபோக்கு முறையிலும் மிக உயர்ந்த நிலையில் இருந்தனர் எனப் பேராசிரியர் ஆய்ந்து  தருவனவற்றை, ஆய்வாளர் கு. மேனகா “சங்கக்காலத்தமிழரின் பொழுதுபோக்குகள்” தலைப்பில் நமக்குத் தருகின்றார்சங்கக்காலத்தில் இருந்த அலவனாட்டு, நீர் விளையாட்டு, வண்டலயர்தல், பாவை விளையாட்டு,  ஆடவருடன் துணங்கைக் கூத்தாடல், கழங்காடுதல்,ஊசலாடுதல் முதலான மகளிர் விளையாட்டுகள் பொழுதுபோக்குகளையும் கானைக்கன்றுடன் ஆடல்,  தேர் விளையாடல், கிலுகிலு விளையாடல் முதலான சிறுவர் பொழுதுபோக்குகளையும் மற்போர் முதலான ஆடவர் பொழுதுபோக்குகளையும் ஆய்வாளர் நமக்குத் தெரிவிக்கிறார்.
      “தொல்காப்பிய ஆராய்ச்சியில் அகத்திணையியல் செய்திகள்”  மூலம் தொல்காப்பியர் கூறும் அகத்திணை இலக்கணத்தையும் பாகுபாட்டையும்   பேரா.இலக்குவனார் ஆராய்ந்து அளிப்பதை முனைவர் சே.சாந்தி நமக்களிக்கிறார்; தமிழரின் கடவுட்கொள்கை தமிழர்க்கே உரியது’ வடமொழியாளர்களிடமிருந்து தமிழர்க்கு வந்தது என உரையாசிரியர்கள் தரும்  பொருள் தவறானது’ வடமொழிப்புராணக் கதைகள் அடிப்படையில் விளக்கியதால் வந்த வினை எனச் சிறப்பாகத் தொல்காப்பிய அறிஞர் இலக்குவனார் விளக்குவதை எடுத்துரைக்கிறார். 
     மொழியின் தோற்றம், பயன், தமிழ் இந்நாட்டு மொழியே, தமிழ் மொழியின் சிறப்பு, எழுத்தின் தோற்றம், தமிழ்வரிவடிவம் பிற மொழிகளின் வரிவங்களின் தாய், மொழிக்குடும்பம் அமையும் முறை, தமிழ்மொழிக்குடும்பம் ஆகியவனவற்றைப் பேரா.இலக்குவனார் ஆய்ந்து தந்துள்ளார்;  இவற்றை முனைவர் இ.மா.இராமச்சந்திரன், “மொழியின் சிறப்பு” என்ற தலைப்பில் நமக்குத் தருகிறார்; தமிழர்கள் மொழிக்குமட்டும் இலக்கணம் படைக்கவில்லை வாழ்க்கைக்கும் இலக்கணம் படைத்தவர்கள். ஆரியர்கள் வரும் முன்னர் இந்தியா முழவதும் வழங்கிய மொழி தமிழே. இந்திய மொழிகளின் தாயும் தமிழே. உலக வழக்கு நூல் வழக்கைத் தழுவியே இருந்தால்தான் மொழி நிலைக்கும் முதலான இலக்குவனாரின் முடிபுகளையும்  எடுத்தாண்டு விளக்குகிறார்.
  “பேரா.சி.இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ நூலில் ஆய்வுமுறை உத்திகள்”  குறித்துக் கிளாக்குளம் முக்கனி மு.பழநியப்பன் உரைக்கிறார்; அரிய பெரிய ஆய்வுச்செய்திகளைப் புதையலாக அள்ளி அள்ளிக் கொடையாக இலக்குவனார் அளித்துள்ளார் என்பதை நமக்கு எடுத்துக்காட்டுகிறார்பிற மொழிகளின் இலக்கியத் தொன்மையை அடுக்கடுக்காக எடுத்தியம்பி அவற்றினும் தமிழ்இலக்கியம் தொன்மை வாய்ந்தது எனவும் சிந்துவெளிச் சொற்கள் தமிழ்ச் சொற்களே எனவும் பேராசிரியர் இலக்குவனார் நிறுவுவதைப் பாராட்டுகிறார்.
   பரதகண்டம்  முழுவதும் பேசப்பட்டுவந்த மொழி தமிழ்;   ‘தமிழ்நாட்டில் எல்லாம் தமிழ்’ என்னும் நிலையை எய்தவேண்டும்; தமிழ்மொழியை ஒவ்வொரு தமிழனும் ஒல்லும்வகை வளர்க்க வேண்டும்;    எனப் ‘பழந்தமிழ்’ நூல் வழி ஆராய்ந்து அளிக்கப்படுவனபற்றி முனைவர் அருள்நிதி பி.கா.வீரவராசா, “சி.இலக்குவனாரின் தமிழ் மறுமலர்ச்சி”  மூலம்  தெளிவுபடுத்துகிறார். ஆங்கில நாட்டில் பிரெஞ்சும் இலத்தீனும் ஆட்சி  செய்ததையும் ஆங்கிலேயர் அதனை அகற்றி ஆங்கில மொழியை வாழ வைத்துள்ளதையும் அவர்களைப் போன்ற மொழிப்பற்று இருந்தால்தான் தமிழ் வாழும் என்றும்  இலக்குவனார் விளக்கியுள்ளார். தமிழைப் பயன்படு மொழியாக்கித் திருத்தமாகப் பேசவும் எழுதவும்  வேண்டும் என்றும் அவர் வலியுறுத்துகிறார் எனவும் ஆய்வாளர் விவரிக்கின்றார்.
  ஐந்திணை மக்களின் வாழ்வியல் முறைகளை, ஆய்வாளர் செ.ஆமினா பானு, “தொல்காப்பியம் காட்டும் சமூகப் பின்புலம்: இலக்குவனாரின் நூல்வழிப் புரிதல்”   மூலம் வகைபட விளக்குகிறார்; மடலேறுதல் ஆண்களுக்கே உரியது எனத் தொல்காப்பியர் கூறுவதற்கான காரணத்தை இலக்குவனார் ஆராய்ந்து உரைப்பது ஏற்கத் தக்கதாக உள்ளது என்றும் தெரிவிக்கிறார்
   “உழைப்பால் உயர்ந்தவர் சி.இலக்குவனார்” என அவரின்  வாழ்வுக் களங்களை விளக்கி முனவைர் ப.செந்தில்நாயகம் சுருக்கித் தருகிறார்; அவரின் படைப்புப்பணி, ஆசிரியப்பணி, இதழ்ப்பணி, நிறுவனப் பணி, பரப்புரைப்பணி எனப் பலவற்றையும் விளக்கியுள்ளார். தமிழ் வாழ்வே தமிழர் வாழ்வு முதலான பேராசிரியர்  வேண்டுகோளை நிறைவாகக்கூறி, நாம் அவற்றைப் பின்பற்ற வேண்டும் எனக் கட்டுரையை முடித்துள்ளார்.
  மொழிப்போர் மூலம் “முத்திரை பதித்த முதல்வர் இலக்குவனார்”   குறித்துப் பேரா.சிவ.சத்தியமூர்த்தி நமக்குப் பேருவகையுடன் அளிக்கிறார். நாகர்கோயில் தெ.தி.இந்துக்கல்லூரியில் 1970 சூன் திங்கள் ஆசிரியர்க்கு ஊதியம் வரக்காலத் தாழ்வாயிற்று; முதல்வராக இருந்த  இலக்குவனார்  தொலைபேசியில் கல்லூரித்தலைவரை அழைத்து நாளை கண்டிப்பாக ஊதியம் வழங்கப்பட்டாக வேண்டும் எனக் கண்டிப்பாகக் கூறினார் ; மறுமுனை கருத்திற்குக் காத்திராமல் தொலைபேசியை வைத்து விட்டார். என  இலக்குவனாரின் நேர்மைக்கும் துணிவிற்கும் நெஞ்சுரத்திற்கும் சான்றான ஒரு நிகழ்வைச் சுட்டிக்காட்டியுள்ளார். மாணவர்களைத் தம் பிள்ளைகளாகக் கருதியவர் முனிவுற்றுத் தண்டிக்கும் நிலையிலும் எதிர்கால நலன் கருதி மன்னிக்கும் சால்பினர் என அவரின் பண்புநலன்களையும் சிறப்பாக எடுத்துரைக்கிறார்.
 ‘‘தொல்காப்பிய வேற்றுமையியலில் இலக்குவனாரின் பன்முக உத்திகள்” குறித்துக்  கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் கோ.சங்கர வீரபத்திரன் செறிவாக வடித்தமைத்துள்ளார். தான்போற்றும் அறிஞர் கால்டுவெல் அவர்களின் கருத்தையும் அறிஞர் சுப்பிரமணிய சாத்திரியின் கருத்தையும் மறுத்தும் தெய்வச்சிலையார் கருத்தை ஒத்தும் பேராசிரியர்  வேற்றுமையியலை விளக்கியுள்ளார் என்கிறார்; ஒப்பீட்டு உத்தி, வழக்கு உத்தி, காரண – காரிய உத்தி முதலான உத்திகள் மூலம் பிற உரையாசிரியர்களின் கருத்துகளைச் சுட்டிக்காட்டிச் சிறப்பான முறையில்  இலக்குவனார் விளக்குகிறார் என்றும் சான்றுடன் நமக்கு அளித்துள்ளார்; நாஞ்சில் நாட்டு வழக்கத்தையும் எடுத்துக் காட்டிப் பேரா.இலக்குவனார் விளக்குவதால் எக்காலத்திற்கும் ஏற்ற விளக்கமாகப்  பேரா. இலக்குவனார் ஆய்வுரை அமைவதை நமக்கு உணர்த்தியுள்ளார்.
  “குறள்நெறிக் காவலர், கொள்கைக்குரிசில் இலக்குவனார்”  என அவரின் இதழ்ப்பணி மூலம் ஆய்வாளர் இராசாமுகம்மது இயம்புகிறார். 1969  ஆண்டு முழுமையும் திருவள்ளுவர் ஈராயிரமாண்டைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் எனப் பேராசிரியர் இலக்குவனார் 12 வேண்டுகோள்கள் விடுத்தமை குறள்நெறி இதழில் வெளிவந்துள்ளது.  இதனைச் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார் ஆய்வாளர்.
 தொல்காப்பியத்திற்கு உரை எழுதியோர், அவரவர் காலத்தில் வழங்கிய ஆரியப்புராணக் கதைகளை உள்ளத்தில் கொண்டு உரை எழுதியுள்ளனர் என இலக்குவனார்  மெய்ப்பித்துள்ளார்; தமிழின் தொன்மைச்சான்றுகளைத் தருக்க முறையிலான ஆதாரங்கள் மூலம் நிறுவியுள்ளார்; தொல்காப்பிய ஆராய்ச்சிகளில் வடமொழிச்சார்பு கருத்துகள் திணிக்கப்பட்டமையைக் களைந்து தமிழ்மரபு வழி ஆராய்ந்து கூர்நோக்குடன் அளித்துள்ளார். இவ்வாறு, முனைவர் ஆ.செல்லப்பா, “தொல்காப்பிய ஆராய்ச்சிகளில் வடமொழித் தாக்கமும் தமிழ் அகமரபுச் சிந்தனைகளும்” என்னும் தலைப்பில் எடுத்தோதியுள்ளார்.
  “முனைவர் சி.இலக்குவனார் கூறும் தொல்காப்பிய உவமயியல்” குறித்து முனைவர் இரா.இந்துபாலா விளக்கியுரைக்கிறார்; வினை உவம உருபுகள், பயன் உவம உருபுகள், மெய்யுவம உருபுகள், உரு உவம உருபுகள் ஆகியவற்றை இலக்குவனார் விளக்கும் முறையையும் குறிப்பிட்டுள்ளார்.
  “சி.இலக்குவனாரின் எடுத்துக்காட்டுகளும் உவமைகளும்” நாட்டு நடைமுறைக்கேற்ப மன்பதை நோக்கில் அமைந்துள்ளமையை ‘அமைச்சர் யார்?’  நூலின் மூலம் ஆய்வாளர் செ.தங்கராசு அழகுபட விளக்கியுள்ளார்; உலகியல் அறிவும் தமிழ்ப்புலமையும் மிக்கவர் என்பதை உணர்த்தும் வகையில்  இலக்குவனாரின் எடுத்துக்காட்டுகள்  பொருத்தமாக இருக்கின்றன என்கிறார்.
இலக்குவனார்திருவள்ளுவன்

Saturday, November 26, 2016

பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – தொகுப்புரை 2/7 : இலக்குவனார் திருவள்ளுவன்




தலைப்பு-இலக்குவனாரின்தமிழ்ப்பணிகள், கருத்தரங்கம், தொகுப்புரை, இலக்குவனார் திருவள்ளுவன் ; thalaippu_ilakkuvanarin_thamizhpanigal_thokuppurai_ilakkuvanar-thiruvalluvan
வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம்,
தமிழ்த்துறை, ம.தி.தா.இந்துக்கல்லூரி
திருநெல்வேலி
பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் -பன்னாட்டுக் கருத்தரங்கம்
கட்டுரைத் தொகுப்பு நூல்

தொகுப்புரை 2/7


இலக்குவனாரின் படைப்புகள் பற்றிய கட்டுரையாளர்கள் கருத்துகள் குறித்த சுருக்கப் பார்வை வருமாறு:
  பேராசிரியர் சி.இலக்குவனார் தேவையான இடங்களில் பரிமேலழகர் உரையை மறுத்துத் தமிழ் மரபை முன்னிறுத்தி உரை கூறுகிறார் என முனைவர் பி.தட்சிணாமூர்த்தி ‘மூன்றும் ஐந்தும்’ என்னும் கட்டுரை மூலம் விளக்குகிறார்.
  “பேரா.இலக்குவனார் ‘பழந்தமிழ்‘ நூலில் மொழி மாற்றங்கள்” என்னும் தலைப்பின் கீழ் மூவகை மொழி மாற்றங்களைச் சிறப்பாக விளக்குகிறார்; பிற மொழிகளிலிருந்து சொற்களைக் கடன் பெறுதலையும் சுட்டிக்காட்டியுள்ளார்; பழஞ்சொற்களைப் போற்ற வேண்டும் என்னும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார் என்பனவற்றை முனைவர் நெல்லை ந. சொக்கலிங்கம் சிறப்பாக விளக்கியுள்ளார்.
  “சி.இலக்குவனாரின் சங்க இலக்கியப் பாடல்களின் உரைத்திறன்” மூலம் முனைவர் நா.உசாதேவி, மாமூலனார் பாடல்களுக்குப் பேராசிரியர் தரும் சிறப்பான உரைவளத்தை விளக்கியுள்ளார். 1945-47 ஆம் ஆண்டுகளில் பேரா.சி.இலக்குவனார் நடத்திய ‘சங்க இலக்கியம்’ இதழ்களில் வெளிவந்து, பின்னர் ‘சங்க இலக்கியச்  சொல்லோவியங்கள்’ என்னும் நூல் வடிவம் பெற்றவை மாமூலனார் பாடல்கள். உரை அமைப்பு முறை, சொல்லாராய்ச்சி, இலக்குவனாரின் வரலாற்று அறிவு, உவமைச்சிறப்பு, நாடகவிளக்க மாண்பு எனத் தனித்தனியே ஆராய்ந்து சிறப்பாகப் படைத்துள்ளார்.
  “செவ்விலக்கிய ஆய்வில் சி.இலக்குவனார்” கொண்டுள்ள நுண்மாண் நுழைபுலம் குறித்து முனைவர் யாழ் க.சந்திரா விளக்கியுள்ளார்.  பேராசிரியரின்  தொல்காப்பிய மொழிபெயர்ப்பு  – திறனாய்வு நூல் மூலமும் சங்க இலக்கியப் படைப்புகள் முதலான பிற மூலமும் இவற்றை அழகுபடத் தெரிவித்துள்ளார். பேரா.இலக்குவனாரின் ‘தொல்காப்பிய ஆங்கில மொழிபெயர்ப்பும் ஆராய்ச்சியுரையும்‘ நம் நாட்டிலும் பிற நாடுகளிலும் ஆய்வேடுகளுக்கு முன்னோடியாகத் திகழ்கிறது; அவரது ‘இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் – சங்க காலம்’, சமூகவியல்  நோக்கில் இக்களத்தில் எழுந்த முதனூல்; அவரது இந்நூலும் ‘சங்க இலக்கியச் சொல்லோவியங்களும்’ சங்க இலக்கிய ஆராய்ச்சியில் முன்னோடி நூல்கள்; சங்க இலக்கியக் கால வரையறை சிறப்பு மிக்கது; வேற்றுமை பற்றிய ஆராய்ச்சியும் கால்டுவெலின் கொள்ளத்தக்கக் கருத்துகளை ஏற்றும் தள்ளத்தக்கனவற்றை ஆய்ந்தும் தெரிவிக்கும் திறனாய்வு முறையும்  மிகச் சிறப்பானவை; அவரது ‘மாணவர் ஆற்றுப்படை’ சங்க இலக்கிய வகைப்பாட்டினது; அவரது குறள்வழிப் படைப்புகளும் ‘குறள்நெறி; இதழ்களும் அரிய குறள்நெறிப்பணிகளாகும்; என ஆராய்ந்து எழுதிப்  பேராசிரியர் சி.இலக்குவனாரின் செவ்வியல் புலமையை எடுத்துரைக்கிறார்.
  “பேராசிரியர் சி.இலக்குவனாரின் திருக்குறள் உரைச்சிறப்பு” தலைப்பில் முனைவர் கே.இரவிசங்கர் எடுத்துரைக்கிறார்; இன்றைய நிலையிலும் திருக்குறள் நிலைத்து நிற்பதற்குக் காரணம், அவரின் திருக்குறள் உரை எனப் பிற உரையாசிரியர்கள் கருத்துகளுடன் ஒப்பிட்டு நயம்பட எடுத்துரைக்கிறார். எளிய மக்களுக்கும் புரிய வேண்டும் என்பதற்காகச் சுருக்கமாகவும் அதே நேரம் தெளிவாகவும் உரை வழங்கியுள்ளார்;  நடைமுறை வாழ்க்கையைப் பொருத்திக் காண்பதில்  பிறருக்கு எடுத்துக்காட்டாக உள்ளார்; எண்ணும் எழுத்தும் என்பதை முதன்முறையாக அறிவியலாகவும் கலையியலாகவும் பேராசிரியர் விளக்கியுள்ளார்; எளிமையாகவும் ஆராய்ச்சிப் போக்குடனும் எழுதிக் காலம் கடந்தும் தம் உரையை நிலைக்கச் செய்துள்ளார்; என்றும் ஆராய்ந்து எழுதியுள்ளார்.
  முனைவர் க.அ.கருணாநிதி, சங்க இலக்கியங்களை மக்கள் இலக்கியங்களாக மாற்றப் பேராசிரியர் மேற்கொண்ட முயற்சிகள்;  தொல்காப்பியத்தை உலகம் அறியும் வகையில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ள அருமை; அந்நூலைத் தமிழாராய்ச்சி உலகிற்குக் கலங்கரை விளக்கமாகப் படைத்த புலமை; ஆரியத்தைத் தழுவித் திருக்குறளைத் திருவள்ளுவர்  படைத்தார் என்னும் பொய்யாபுரியார்களின் கருத்துகளுக்கு  நுண்மாண்நுழைபுல ஆய்வறிவுடன் மறுப்பு;   மொழியியல் நூல்கள் மூலம் தமிழின் செம்மொழித்தன்மையை அனைவரும் அறியச் செய்த வகைமை; சொல்லாலும் செயலாலும் யாரேனும் தமிழுக்குக்கேடு புரியும் பொழுது எதிர்க்கும் துணிவு ஆகியன குறித்தும் “பேராசிரியர் சி. இலக்குவனாரின் தமிழின் வெற்றி” என்பதன் மூலம் எடுத்தியம்புகிறார்.
  முனைவர் சா.நடராசவேலு, வடிவ வழி எதிர்மறைக்குப் பேராசிரியர் வழிகோலியுள்ளார் என்று ”சி.இலக்குவனாரின் ‘பழந்தமிழில்’ எதிர்மறைகள்” என்னும் கட்டுரை மூலம் இனிதே விளக்கியுள்ளார்; சொல்லின் அகத்தே இடம் பெறும்எதிர்மறைகள், சொல்லின் புறத்தே இடம் பெறும் எதிர்மறைகள், வடிவவழி எதிர்மறையின் வகைகள், எதிர்மறை உணர்த்தும் கிளவிகள், ஆகியன பற்றிய பேரா.இலக்குவனாரின் விளக்கங்களைத் தருகின்றார்;  பேராசிரியர் பழந்தமிழ் நூலில் கையாண்டுள்ள எதிர்மறைத்தொடர்களையும் எடுத்தாண்டு விளக்குகிறார்.
  பழந்தமிழின் தொன்மையும் மேன்மையும்  குறித்துப் பேராசிரியர் சி.இலக்குவனார், பழந்தமிழ் நூல் மூலம் பதிய வைத்துள்ளதை முனைவர் கு.நீதா முறையாக விளக்கியுள்ளார்; தமிழின் தொன்மையை உணர்த்தல், காலத்தை ஆறுநிலைகளில் பிரித்தல், தமிழின் மேன்மையை நிலைநாட்டல், திராவிட முதல்மொழி என்பது பழந்தமிழே என நிறுவல், சிந்துவெளிப் பழந்தமிழும் இன்று வழங்கும்  தமிழும் ஒன்றே என ஆய்ந்துரைத்தல், அறிஞர் கால்டுவெல்லின் கருத்தை மறுக்கும்  வையாபுரியின் கருத்தை மறுத்தல்,  அறிஞர் கால்டுவெல், அறிஞர் ஈராசு முதலான அறிஞர்களின் கருத்துகளை நடுநிலையோடு அணுகல் எனப் பேராசிரியரின் ஆய்வு முறைகளையும் அளித்துள்ளார்.
 “பேராசிரியர் சி.இலக்குவனாரின் உரையில் நடைநயம்”  குறித்து முனைவர் இர.கற்பகம் கவினுற விளக்கியுள்ளார். இதில், பண்பாட்டுச் செய்திகள் கூறல், நாடகமுறை வழக்கை விளக்குதல், அந்தாதி நடை,  கூட்டுறவு சொல்லாட்சி, திருக்குறளில் உகரச்சுட்டு வருதல்,  இலக்கணம், சொல் வருவித்தல், சொற்பொருள் வருவித்தல், சொற்பொருள் விரித்தல், சொற்களை முறைமாற்றி அமைத்துப் பொருள் கூறல் போன்றவற்றைக் கையாண்டுள்ள சிறப்பைக் கூறியுள்ளார்.
   “குறள்நெறி பரப்பிய  பேராசிரியர் சி.இலக்குவனார்” குறித்துப் பெருமைபட விளக்கியுள்ளார் முனைவர் வ.அரிகரன். திருக்குறள் தொடர்பான தம்முடைய ஆறுநூல்கள் மூலமும் குறள்நெறி இதழ்கள் மூலமும் அமைப்புகள் நிறுவனங்கள் மூலமும் மேற்கொண்ட குறள்நெறிப் பரப்புரையைத் தருகிறார். மாணவநிலையில் குறள்பரப்பும் பணியைத் தொடங்கினார்; ஆசிரியராகவும் பேராசிரியராகவும் இருந்து மாணாக்கர்களிடையே குறள்நெறிப் பணியை விரிவாக்கினார்; பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாளராக இருந்து பொதுமக்களிடையே குறள்நெறி விழிப்புணர்வை உண்டாக்கினார்; நூல்கள் வாயிலாகவும்  இதழ்கள் வாயிலாகவும் நிறுவனங்கள் வாயிலாகவும் குறள்நெறியை நிலைக்கச் செய்தார்; குறள்நெறிக்காவலராகத் திகழ்ந்தார் என்று பேரா.சி.இலக்குவனார் மேற்கொண்ட குறள்நெறிப் பரப்புரையை அழகுபட நமக்குத் தெரிவித்துள்ளார்.
   “சங்க இலக்கியச் சொல்லோவியங்கள் வழிப் புலனாகும் பேராசிரியர் இலக்குவனாரின் வரலாற்று அறிவை”  முனைவர் தி.முத்துலெட்சுமி திறம்பட விளக்கியுள்ளார். இதில் உரைத்திறன், மொழித்திறன்,  வரலாற்று அறிவு, ஆராய்ச்சித்திறன், தமிழ்ப்பற்று, பொதுமக்களுக்கு உரியதாகச் சங்க இலக்கியத்தை  முதன் முதலாக வழங்கிய சிறப்புடைமை, ஊரும் பேரும் பற்றி ஆராய்ந்து அளித்தல், தமிழர்க்கு உரிமைநாடாக இருந்த வேங்கடமலை இன்று நம்மிடையே இல்லை என்பதுபோன்று இக்காலத்தோடு ஒப்பிட்டு உரிமை உணர்வைத் தூண்டுதல்,   பழந்தமிழ் நாகரிகம், பண்பாடு, வாழ்வியல், சிறப்புற்ற நாடுகள், நாடாண்ட மன்னர்கள் எனப் பல்வேறு அறியப்படாத செய்திகளை வழங்குதல் முதலானவற்றைப் பேராசிரியர் இலக்குவனார் வெளிப்படுத்தியுள்ளதை நமக்குக் காட்சிப்படுத்தியுள்ளார்.
  “தொல்காப்பிய ஆராய்ச்சியில் காதல் இயல்”  மூலம் பேராசிரியர் இலக்குவனார் உணர்ச்சி வழிச் செயல்பாடுகளையும் அவை அறிவுவழிச் செயல்பாடுகளாக மாறி விடுவதையும் சுட்டிக்காட்டியுள்ளார்; கற்புநெறி போற்றும் காதல் வாழ்க்கையைக் கூறியுள்ளார்;  தொல்காப்பியரின் கூற்றை வழுவாத காதலாக, அறமுடைய காதலாக, கற்புடைய காதலாக விளக்கியுள்ளார்; இவை எக்காலத்திற்கும் பொருத்தமாக உள்ளது என ஏற்றமுடன் முனைவர் செ.சிவகாமசுந்தரி செப்பியுள்ளார். மேலும், தொல்காப்பியம் இலக்கணமாக இலங்குவதுடன் மொழிநூலாகவும் இலக்கிய ஆராய்ச்சிக்கருவி நூலாகவும் விளங்குவதைப் பேரா.இலக்குவனார் நமக்கு எடுத்துரைப்பதை விளக்குகிறார்.
சி.இலக்குவனார் அகத்திணையியல் முப்பொருள் சிந்தனை”கள் குறித்துச் சீர்மையுடன் விளக்கியுள்ளார்  இள முனைவர் சு.இரம்யா. இதில், முதல், கரு, உரிப் பொருள்பற்றியும் இவற்றின் அடிப்படையில் நிலம், பொழுது குறித்தும் கடவுள் தன்மை சிறப்பு குறித்தும் நிலத்திற்குரிய கடவுள்கள் குறித்தும் தொல்காப்பியர் குறிப்பிடுவனவற்றைச் சிறப்பாக இலக்குவனார் விளக்கியுள்ளார் என்கிறார்.
இலக்குவனார் திருவள்ளுவன்
தலைப்பு-தொடரும் : thalaippu_thodarum

Monday, November 14, 2016

பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – தொகுப்புரை 1/7 : இலக்குவனார்திருவள்ளுவன்


வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம்,
தமிழ்த்துறை, ம.தி.தா.இந்துக்கல்லூரி
திருநெல்வேலி
பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – பன்னாட்டுக் கருத்தரங்கம்
கட்டுரைத் தொகுப்பு நூல்

தொகுப்புரை  1/7


   செந்தமிழ்மாமணி, செம்மொழிச்சுடர் தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் அவர்களின் பிறந்தநாள் பெருமங்கல நூறாம் ஆண்டுத் தொடக்கத்திலிருந்து (2009) விழாக்கள் நடத்தப் பெறுகின்றன. பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், தமிழ் அமைப்புகள், அ.இ.வானொலி நிலையம்,  சாகித்திய அகாதமி எனப்  பல்வகைத் தரப்பினராலும் தமிழ்நாட்டில் நூற்றாண்டு விழா, கவியரங்கம், கருத்தரங்கம், உரையரங்கம் முதலானவற்றில் தமிழறிஞர்கள் பங்கேற்றுச் சிறப்பித்துள்ளனர். தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், மலேசியா, சிங்கப்பூர், குவைத்து, துபாய், அமெரிக்கா, முதலான வெளிநாடுகள் பலவற்றிலும் இலக்குவனார் நூற்றாண்டு விழாக்கள் கொண்டாடப்பட்டன. நூற்றாண்டு முடிந்த பின்னரும் பேராசிரியர் சி.இலக்குவனார் பெயரில் விழா எடுப்பதன் மூலம் தமிழன்பர்கள் இன்றும் உள்ளனர்! எங்கும் உள்ளனர் என அறியலாம்.  அந்த வகையில் திருநெல்வேலியில் இவ்வாண்டு மாசித்திங்கள் (மாசி 12,13,14 தி.பி 2045/ பிப் 24,25,26.2014 ஆகிய  3 நாளும்), பேராசிரியர் இலக்குவனார் தமிழ்ப்பணிகள் குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது.
  ம.தி.தா.இந்துக்கல்லூரி என அழைக்கப்பெறும் மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக்கல்லூரி ஆண்டு நூற்றைம்பது கண்ட  தொன்மை வளம் சான்ற கல்லூரி. இக்கல்லூரியில் தமிழ்த்துறை சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இத்துறை சார்பில், 1983ஆம் ஆண்டிலிருந்து வெள்ளக்கால் ப.சுப்பிரமணிய(முதலியா)ர் பெயரில் வெ.ப.சு.தமிழியல்  ஆய்வு மையம் இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் பயின்றும் பயிற்றுவித்தும் சென்றிருக்கும் செந்தமிழ்ச் சான்றோர்க்கு விழாக்கள் கொண்டாடி மகிழ்வதில் இக்கல்லூரி முன்னோடியாகத் திகழ்கிறது. அவ்வகையில் இக்கல்லூரியில் பணியாற்றித் தமிழ்ச்செம்மலாகத் திகழ்ந்த பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனாரின் இன்றமிழ்ப்பணியை எடுத்துரைக்கும் வகையில் இந்த ஆண்டு பன்னாட்டுக் கருத்தரங்கம், நூல்கள் வெளியீட்டு விழா, இலக்கியப் போட்டிகள் என மூன்று நாள் விழா சீரோடும் சிறப்போடும் நடைபெற்றது.
  கல்லூரி ஆட்சிக்குழுத் தலைவர் செ.மீனாட்சிசுந்தரம், செயலர் மு.செல்லையா, பொருளாளர் தளவாய் தீ. இராமசாமி, பிற ஆட்சிக்குழு உறுப்பினர்கள், கல்லூரி முதல்வர் ப.சின்னதம்பி, தமிழ்த்துறைத் தலைவர் முதல்வர் ஆ.செல்லப்பா, ஒருங்கிணைப்பாளர் முனைவர் கோ.சங்கர வீரபத்திரன் ஆகியோர் பெரிதும் பாராட்டிற்குரியவர்கள். ஏனெனில் பிற கருத்தரங்கங்களில் சிறப்பு அழைப்பாளர்கள் உரைதான்  பெரும்பாலும் இடம் பெற்றன. இங்கு முப்பெரு விழாவாக நடத்தியதுடன், எழுபதின்மருக்கு மேற்பட்ட கட்டுரைகளை இடம் பெறச் செய்து, பேராசிரியர் இலக்குவனார் அவர்களின் படைப்புப் பணிகளையும் தமிழ்க்காப்புப் பணிகளையும் சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளனர்.
  கருத்தரங்கக் கட்டுரைகள் நூல்வடிவம் பெறும்பொழுதுதான்  கருத்தரங்கத்தின் நோக்கம் நிறை வேறுவதாக அமையும். அந்த வகையில்,  கருத்தரங்கக் கட்டுரைகளை  அச்சிட்டு வெளியிடும் மணிவாசகர் பதிப்பகமும் அதன் பொதுமேலாளர் திருவாளர் குருமூர்த்தி அவர்களும் பெரிதும் பாராட்டிற்குரியவர்கள்.
  சிறப்பான இக்கருத்தரங்கத்திற்கெனப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், முனைவர்கள், ஆய்வுநிறைஞர்கள், தமிழ்த்துறையினர், பிற துறையினர், ஆய்வு மாணாக்கர்கள், பணி நிறைவுற்ற தமிழ்ப்பேராசிரியர்கள் என்ற வகையில் பலநிலையினரும் கட்டுரைகள் அளித்துள்ளனர்.
  இக்கருத்தரங்கில், பேராசிரியரின்  ‘தொல்காப்பிய ஆராய்ச்சி’ குறித்து 15 கட்டுரையாளர்களும், ‘பழந்தமிழ்’, மொழியியல் கருத்துகள் குறித்து 14 கட்டுரையாளர்களும் ‘(சங்க) இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல்’ குறித்து 12 கட்டுரையாளர்களும் திருக்குறள் உரை வளம் குறித்து 10 கட்டுரையாளர்களும் தமிழ் வளர்ச்சிக்காகப் போராடிய வாழ்க்கைச் சிறப்பு குறித்து 5 கட்டுரையாளர்களும் இதழியல் குறித்து 1 கட்டுரையாளரும் கவிதை குறித்து 1 கட்டுரையாளரும் ‘கருமவீரர் காமராசர்’ நூல் சிறப்பு குறித்து 1 கட்டுரையாளரும் பிறர் பொதுவான  ஆய்வுத் திறன் முறையிலும் கட்டுரை அளித்துள்ளனர். திருக்குறள் உரைவளம் பற்றிக்  குறிப்பிடும் பொழுது் அவரின் ‘வள்ளுவர் கண்ட இல்லறம்’  நூற்சிறப்பு அடிப்படையில் மூவர் கட்டுரை அளித்துள்ளனர்; ‘வள்ளுவர் வகுத்த அரசியல்’ குறித்து இரு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.  சங்க இலக்கியச் சிறப்பு என்னும் பொழுது ஒருவர்  வணிகவியல் துறை நோக்கில் அளித்துள்ளது சிறப்பிற்குரியது.
தலைப்பு-தொடரும் : thalaippu_thodarum
இலக்குவனார்திருவள்ளுவன்