Showing posts with label பெருங்கவிக்கோ. Show all posts
Showing posts with label பெருங்கவிக்கோ. Show all posts

Friday, December 08, 2017

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 31 – வல்லிக்கண்ணன்

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 31 

அஞ்சி அஞ்சி அயர்ந்து நெகிழ்ந்து
பஞ்சைபோல் வாழும் பண்பு வேந்தர்கள்
என்றும் சொல்லி, இவர் பெரும் அறிவை இந்நாடு இயக்கினால், ‘தவம் வென்றது போல்தான் வரும் நலமே’ என்று கருத்துத் தெரிவிக்கிறார்.
  பொதுவாக, மேடை மீது நின்று நீட்டி முழக்கிப் பெரும் பேச்சுகள் பேசிக் களிப்பவர்கள்தாம் மிகுதியாக இருக்கிறார்கள். அந்தப் பேச்சைக் கேட்பவர்களோ கை தட்டி மகிழ்கிறார்கள். அந்தக் கரவொலி பேச்சாளர்களைக் கிறக்கத்தில் ஆழ்த்துகிறது. அவர்கள் செயல்திறன் காட்டுவதில்லை. இந்த நிலையைப் பெருங்கவிக்கோவின் பாட்டு சூடாகச் சுட்டுகிறது.
நின்று தலைநிமிர்த்தி நெடும் பேச்சுப் பேசிவிட்டுக்
கூட்டத்தின் கரவோசைச் குளிர்ச்சியிலே – மெய்மறந்து
நீட்டிப் படுத்தலன்றி நேர்மையாய் யான் என்று
திறமை காட்டிச் செயலாக்கம் செய்தவர் யார்?
“சிறுமைத்தனத்தில் திறமை கொன்று சீரழிந் தேகுவதோ! வறுமை வாழ்வைப் பெரிதாய்க் கண்டு மனம் இழப்பதுவோ?” என்று கேட்கும் கவிஞர், மனிதனாக நடப்பது எவ்விதம் என்று கூறுவது சிந்திக்கத் தூண்டுவதாகும்.
மனிதன் என்பது பொதுச் சொல் எனினும்
மலரும் முகங்கள் பலவிதம் – இந்த
தனித்தனி மனிதர் நடக்கும் வழிகளும்
தனித் தனியாகப் பலவிதம்!
போனவன் போக்கில் போவேன் என்பது
புரியாத் தனத்தின் வித்தாகும் – நெஞ்ச
மானத் தன்மை வகுக்கும் வழிமுறை
மதித்து நடப்பதே சொத்தாகும்
அறிஞரைப் போற்றி, அவர்களை வழிகாட்டியாக ஏற்று, அவர்கள் காட்டிய பாதையில் நடக்க வேண்டும் என்று பொதுவாகச் சொல்லப்படுவது உண்டு. பெருங்கவிக்கோவின் புதிய பார்வை அதை ஏற்றுக் கொள்ளச் சித்தமாக இல்லை. அதற்கான காரணத்தை அவர் தெளிவாகச் சொல்லுகிறார்.
முன்னே தோன்றிய அறிஞனைப் போற்றினும்
முழு அடிமை நீ ஆகாதே – அடடே
பின்னே அவனை நீ வெல்வது உண்மை
பேரறிவாளன் நீ மறவாதே
நெஞ்சம் இருப்பதோ கையளவில் தான்
நினைவோ உலகை வெல்லும் – எந்த
வஞ்சம் வரினும் வாழ்வோ தாழ்வோ
வாகை உறுதி கொள்ளும்
மற்றவர் தீய குற்றம் தனை மிதி! மனிதத் தன்மை ஊட்டு! இவ்வாறு மனத்தை வீறு கொள்ளும்படி தூண்டும் கவிஞர்,
ஊட்டி வளர்த்தவர் காட்டிக் கொடுப்பாரேல்
உந்திப் பழித் தொதுக்கு! – மனமே
நாட்டில் பிழைக்கத் தெரிந்த மனிதரவர்
நம்பிப்பின் செல்லாதே!
என்று விழிப்புணர்வு ஊட்டுகிறார். சோர்வு அடையாதபடி ஊக்கத்தோடு உழைக்க வேண்டும் என்றும் அவர் ஊக்கப்படுத்துகிறார்.
ஏற்ற அறக்கொள்கை எவரும் மதிக்காமல்
இன்னல் தருவதாயிருந்தால் – மனமே
போற்றலிலாத தென்றெண்ணிச் சோராதே நீ
பொங்கி நல முடிப்பாய்!
மான வாழ்வி லொரு மாசு புகுந்திடில்
வாய்மை நெருப்பாலே – மனமே
ஆனமுறையில் பொசுக்கி முன்னேறு நீ
ஆக்கம் தனைத் தேடு!
என்றும் நல்வழி புகட்டுகிறார்.
(தொடரும்)
படைப்பு: வல்லிக்கண்ணன்
தரவு: இ.பு.ஞானப்பிரகாசன்

Friday, November 24, 2017

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 29 – வல்லிக்கண்ணன்

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 29
பகைமை வளர்த்து நாட்டு வளர்ச்சியைக் கெடுக்கிறார்கள். அரசியல்வாதிகளை நோக்கிப் பெருங்கவிக்கோ கடுமையாகக் கண்டனக்குரல் கொடுக்கிறார்.
பொய்கை போன்ற பொற்றிரு நாட்டில்
பொய்நீர்ச் சாக்கடை புகுந்திடச் செய்தீர்!
கால மெல்லாம் கட்சிகள் வளர்த்து
ஞாலம் இன்று ஏல மிடுகிறீர்!
மனச்சாட்சி கொன்று மறுபடி மறுபடி
தினச்சாட்சி பொய்மை திளைத்து மகிழ்கிறீர்!
தன்னலம் இன்றி இந்நாடு உயர
என்ன செய்தீர்? எல்லாம் சுயநல
வேட்டைக் காடாய் வேடிக்கை செய்தீர்!
ஆட்டுக்(கு) ஓநாய் காவலா? தீய
பேயை மணந்த பெரும்பிழை யாளரே,
நாயின் வால்நீர், நன்கு நிமிர்த்திட
யாரால் முடியும்?
என்று பாடுகிறார்.
  மக்களின் நிலைமையும் அவருக்கு மனக்கசப்பு அளிக்கிறது. விளக்கின் ஒளியை விரும்பிச் சுற்றும் விட்டில் பூச்சிகள் அவர்கள். அப்போதைக்கப்போது யார் சுவை தரினும் மயங்கிச் சுகிக்கும்  மூங்கை உயிர்கள்.
பெரும்பணி கொண்டலை பேதைகள், என்றும்
திருந்தா மல்வாழ் செயல்மறை கதவுகள்
வருந்தி உழையாதே வளங்கள் தேடிடும்
பொருந்தா வாழ்க்கைப் போலிகள் எவரும்
தடிஎடுத் திட்டால் சத்தமில் லாத
படிவாழத் தெரிந்த பதடிகள்!’ 
(தொடரும்)
வல்லிக்கண்ணன்:
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்

Monday, October 09, 2017

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (22) – வல்லிக்கண்ணன்


ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (22)
மதங்கள் சாதி மடமை இன்றி
மார்க்கம் கண்ட தமிழர்கள்-பின்னே
விதந்து பிறரின் மதத்தில் சென்ற,
வினைகள் மாற்றப் புறப்பட்டேன்
என நாவலிக்கிறார் பெருங்கவிக்கோ.
  அறமும் மறமும் ஆன்ற ஒழுக்கமும், உண்மை ஆக்க நெறியும், ஆண் பெண் சமமும், திறமுடன் சங்கக் காலத்தின் முன்பே தமிழர் தேர்ந்த வாழ்க்கை முறையாகும். என்று கவிஞர் அறிவுறுத்துகிறார்.
இம்மதம் அம்மதம் எம்மதம் சேரினும்-நம்மின்
இனம்தமிழ் மொழி தமிழ் என்றே பாடு:
தம்மதம் பெரிதெனச் சாற்றிப் பிரியாதே-தமிழா
தமிழால் ஒன்றுசேர் தமிழினம் கூடு
என்றும் பெருங்கவிக்கோ கூறுகிறார்.
  மனித நேயக் கருத்தையும் எடுத்துக்கூற அவர் தவறவில்லை. நடமாடும் மனிதர்களே நம் கோயில் என்று: சொன்ன சித்தர்களின் சிந்தனை வீச்சு பெருங்கவிக்கேன் கவிதைகளிலும் பொறி தெறிக்கிறது. –
மதமென்ன சாதியென்ன இந்த நாட்டில்
மார்க்கங்கள் தான் என்ன? உலகில் உள்ள
அதர்மங்கள் தானொழிய வேண்டுமென்றால்
அறமொன்றால் தானியலும் இதனை விட்டு
விதவிதமாய்ப் பூசனைகள் செய்வோரெல்லாம்
வீட்டுக்கு விளக்கேற்ற மறந்தார் நல்ல
பதமெல்லாம் பார்க்கின்ற மோட்ச மெல்லாம்
பக்தர்களே பசித்தோரின் வயிறொன் றேதான்!

வீணாக அலைகின்றார் துறவி என்றே
வீம்புக்கே நடக்கின்றார் அந்தோ வெட்கம்!!
சாணாக ஒடுங்கிவிட நினைத்தே அன்புச்
சம்சாரம் வெறுக்கின்றர் இவைஎல்லாம்.
பூணாத சடங்கன்றோ ஆசை தன்னைப்
பூட்டுகின்ற திறவுகோல் நீர் தவறவிட்டு
ஏனிங்கே மயங்குகிறீர் இனியே னும் நீர்
ஏழையர்க்குத் தொண்டுசெய முன்வாருங்கள்
என்ற நல்ல கருத்தை வலியுறுத்துகிறார்.
மனிதர்கள் நல்வாழ்வு பெறுவதற்கு வகை செய்யக் கூடிய உயர் எண்ணங்களைச் சொன்ன வள்ளலாரின் கருத்துகள் பெருங்கவிக்கோவை ஈர்த்துள்ளது. அவற்றை அவர் பரிந்துரை செய்யும் தன்மை போற்றுதலுக்கு உரியது.
(தொடரும்)
வல்லிக்கண்ணன்: 
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்

Saturday, June 10, 2017

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (5.) – வல்லிக்கண்ணன்




ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (5.)

 2.தமிழ் முழக்கம் (தொடர்ச்சி)

வஞ்சருக்கும் பொய்யருக்கும் பணிந்து நாமும்
வாழ்கின்றோம்! அரைவயிற்றுக் கஞ்சிக்காக
 வஞ்சகத்தை வால்பிடித்துச் செல்கின்றோம் வீண்
வாயடியும் கையடியும் கொண்ட பேரை
மஞ்சத்தில் ஏற்றிவைத்து மலரும் சூட்டி
மரியாதை செய்கின்றோம்! அவரிடம் போய்க்
கொஞ்சியும் குலவியுமே வாழ்கின்றோம் நாம்
கொடுமைக்கும் மடமைக்கும் தாழ்கின்றோம் நாம்!

 பஞ்சமா பாவியர்கள் இவர்கள் தம்மின்
 பண்புக்குத் தீவைப்போம்! வஞ்சகத்தை
 அஞ்சாமல் எதிர்த்திடுவோம்! தமிழ்த்தாய் வாழ
அரும்புமீசை முறுக்கிடுவோம்! கொடுமை எனறால்
எஞ்சாமல் எரியிடுவோம்! தமிழே ஆளும்
எழில்நாட்டை ஆக்கிடுவோம்! வேற்றுமைதான்
கிஞ்சிற்றும் இல்லாமல் செய்ய இன்றே
கிளர்ந்தெழுங்கள் இளைஞர்களே அஞ்ச வேண்டாம்.
 என்ன நாம் செய்துள்ளோம்; முறையாக இவ்வுலகு, நம்மையும் நம் மொழியையும் அறிவதற்காக நாம் என் செய்தோம் என்று சிந்திக்கச் சொல்கிறார் கவிஞர்.
முப்பது நாட்டின்மேல் முன்சென்று நம் தமிழர்
செப்பரும் வாழ்முறை சேர்ந்துள்ளார்-இப்படியாய்ச்
 சேர்ந்தாரைச் சேர்த்துத் திசைத்தமிழர் ஒன்றாக்கி
தேர்ந்த ஒற்றுமை செய்தோமா?
 என்ற கேள்வியை முன் வைத்து அவரே விடையும் உரைக்கின்றார்.
அங்கங்கே சென்றே அவரவர் பாடாக்கி
தங்கள் சுயநலமே தான்முனைந்தார்-எங்கணுமே
வைய மெலாம் வாழ்ந்தும் வகைமோசந் தன்னலத்தால்
நையச்செய்தாரே நலம்.
  ஆகவே, உலகெங்கும் உள்ள தமிழர்களை ஒருங்கி ணைப்பது முதன்மைக் கடமையாகும் என்று உணர்ந்த கவிஞர், பெரிதும் முயன்று, 1977-ஆம் ஆண்டில் ‘பன்னாட்டுத் தமிழுறவு மன்றம்’ அமைத்தார். உலகின் பல நாடுகளிலும் இம்மன்றத்தின் கிளைகள் அமைத்து நன்கு செயல் படச் செய்தார். கவிஞரின் உலகளாவிய தமிழ்ப் பணி இதுவாகும்.
பன்னாட்டுத் தேர்தமிழர் பாங்குறவை நாம்  வளர்க்க
இந்நாளில் மன்றம் எடுத்தேனே-தன்னலம்
கிஞ்சிற்றும் இல்லை கிழமை தவறவில்லை
வஞ்சக மில்லை மனம்
என்று இப்பணி பற்றி அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.
  ‘உலகத் தமிழர் உணர்வுகொள்!” என்று முழக்கம் செய்யும் கவிஞர், இழநத புகழைத் தமிழினம் மீட்டு வளமான, கீர்த்தி மிக்க, வருங்காலத்துக்கு வழி அமைக்க வேண்டும் என்று ஊக்குவித்து, உற்சாகப் படுத்துகிறார். அதற்குத் தேவையான ஆலோசனைகளையும் அவர் வழங்கியுள்ளார்.
(தொடரும்)
வல்லிக்கண்ணன்:
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்