Showing posts with label மறக்க முடியுமா. Show all posts
Showing posts with label மறக்க முடியுமா. Show all posts

Friday, December 29, 2017

மறக்க முடியுமா? பேராசிரியர் வ.சுப.மாணிக்கனார் – எழில்.இளங்கோவன்

பேராசிரியர் வ.சுப.மாணிக்கனார்

‘‘மாணிக்கச் சிந்தனைகள், எளிய வாழ்வு, அளவான பேச்சு, எந்நிலையிலும் எதிர்கால நம்பிக்கை, பதவிகளைத் தொண்டாக மதித்தல், தன்னைப் பற்றிய திருத்தமான சிந்தனைகள், வாழ்க்தைத் திட்டங்கள், பெரியவர்களின் வரலாறுகளைப் படித்தல், சோர்வுக்கு இடம் கொடாத ஊக்கங்கள், பகட்டின்றித் தூய எண்ணத்தால் இறைவனை வழிபடுதல்’’ ஆகிய பண்புகளுக்குச் சொந்தக்காரர், பேரறிஞர் பெருந்தகை, பேராசிரியர் வ.சுப.மாணிக்கனார் என்று நினைவு கூர்கிறார் அவரின் மாணவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன்.
தேர்ந்த சிந்தனையாளர், தெளிந்த உரையாசிரியர், திறன்மிகு உரைநடையாளர். ஆய்வாளர், பேராசிரியர், கவிஞர், பழைமை&- புதுமை இரண்டையும் ஒருமித்துப் போற்றியவர் வ.சுப.மாணிக்கனார் அவர்கள்.
இவர் தி.பி. 1948 சித்திரை 05 – 1917ஆம் ஆண்டு ஏப்பிரல் திங்கள் 17ஆம் நாள் புதுக்கோட்டை மாவட்டம் மேலைச்சிவபுரியில் பிறந்தார்.
தெய்வானை ஆச்சி, வ.சுப்பிரமணியன் இணையரின் ஐந்தாம் மகனாகப் பிறந்தார். இவரின் இயற்பெயர் அண்ணாமலை என்றாலும் மாணிக்கம் என்ற பெயரே நிலைபெற்று விட்டது.
தன் ஏழாம்  அகவை வரை நடேச(ஐய)ரிடம், குருகுலப் பாடம் படித்த இவர், ஏழாம் வயதில் புதுக்கோட்டை உயர்நிலைப்பள்ளியில் தன் படிப்பைத் தொடர்ந்தார்.
இவரின் 18ஆம் அகவையில் பருமாவுக்கு வேலைக்காகச் சென்றார். அங்கு வட்டிக்கடை ஒன்றில் வேலை செய்தாலும், தொடர்ந்து அங்கு நீடிக்காமல் தாயகம் திரும்பிவிட்டார்.
தமிழகம் திரும்பிய வ.சுப.மாணிக்கனாருக்கு, அறிஞர் பெருந்தகை பண்டிதமணி கதிரேசனார் அவர்களுடன் தொடர்பு ஏற்பட்டது.
அதன் விழைவாய்த் தமிழ்மொழியின் மீது பெருநாட்டம் கொண்ட மாணிக்கனார். பண்டிதமணியின் ஊக்குவித்தலினால் சிதம்பரம் அண்ணாமலைப்பல்கலைக் கழகத்தில் வித்வான் தேர்வில் தேர்ச்சி அடைந்தார்.
இப்பல்கலைக் கழகத்தில் இராகவையங்கார், ந.மு.வேங்கடசாமி நாட்டார்அ.சிதம்பரநாதன் ஆகியோர் மாணிக்கனாரின் ஆசிரியர்களாக விளங்கினர்.
1945ஆம் ஆண்டு கீழ்த்திசைமொழி இளங்கலைப் பட்டமும் (பி.ஒ.எல்), 1951 ஆம் ஆண்டு முதுகலை(எம்.ஏ.) பட்டமும் பெற்றார்.
பின்னர் ‘தமிழில் வினைச் சொற்கள்’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து கீழ்த்திசைமொழி  முதுகலைப்பட்டம் (எம்.ஓ.எல்.)பெற்ற இவர், ‘தமிழில் அகத்திணைக் கொள்கை’ என்ற தலைப்பை ஆய்வுக்கு எடுத்து அதில் முனைவர் பட்டம் பெற்றார்.
1941 தொடக்கம் 1948 வரை மாணிக்கனார் தாம் பயின்ற அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் 7 ஆண்டுகள் விரிவுரையாளராகப் பணியற்றினார். அப்பொழுது விரிவுரை பயின்ற குறிப்பிடத்தக்க இரு மாணவர்களில் ஒருவர் நாவலர் நெடுஞ்செழியன், மற்றொருவர் பேராசிரியர் க.அன்பழகன்.
1948 முதல் 1964 வரை 16 ஆண்டுகள் காரைக்குடி அழகப்பா கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருந்தார்.
1964-1970 ஆகிய 6 ஆண்டுகள் அழகப்பா கல்லூரியின் முதல்வராகப் பொறுப்பேற்றிருந்தார் மாணிக்கனார். அப்பொழுது அக்கல்லூரியின் மாணவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன்.
பின்னர் 1970 தொடங்கி 1977 வரை 7 ஆண்டுகள் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய போது, இந்திய மொழிப்புல முதன்மையாளர் பொறுப்பில் இருந்து பணியாற்றி இருக்கிறார்.
1979 முதல் 1982 வரை மூன்று ஆண்டுகள் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகச் பொறுப்பேற்றுத் திறம்படப் பணியாற்றினார்.
இங்கு தமிழ்மொழியின் வளர்ச்சி, அறிவியல் துறை வளர்ச்சிக்கான இவரின் பணியை அப்போதைய தமிழக அரசு பெரிதும் பாராட்டியுள்ளது.
பல்கலைக் கழகத் துணைவேந்தர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்ற வ.சுப.மாணிக்கனார், கேரள மாநிலம் திருவனந்தபுரம் கல்லூரியில் திராவிட மொழியியல் கழகத்தின் முதுபேராய்வாளராக இருந்து சிறப்பு வாய்ந்த இருநூல்களை ஆங்கிலத்தில் எழுதினார்.
 அவ்விரு நூல்களுள் ஒன்று ‘தமிழ் யாப்பில் வரலாறும் வளர்ச்சியும். மற்றொன்று “தொல்காப்பிய ஆய்வு!’
பேராசிரியர் வ.சுப.மாணிக்கனார் அவர்கள் பல்வேறு நூல்கள் எழுதி இருக்கிறார். அவற்றுள் குறிப்பிடத்தக்க சில நூல்கள் வருமாறு:
எழுத்துச் சீர்திருத்தம் எங்கே போகிறது, – தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நூன்மரபும்,- மொழி மரபும், – தொல்காப்பியப் புதுமை,  தொல்காப்பியத் திறன், – தொல்காப்பியக் கடல், வள்ளுவம், ஒப்பியல் நோக்கு,- திருக்குறள் சுடர், – திருக்குறள் தெளிவுரை  (மாணிக்கவுரை).
இம்மட்டுமன்று  The Tamil Concept of Love, A Study of Tamil Verbs, Collected Papers, Tamilology ஆகிய ஆங்கில, நூல்களும் இவரால் எழுதப் பெற்றுள்ளமை குறிப்பிடத் தக்கது.
இவரின் நூல்கள் 2006 ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.
பேராசிரியர் மாணிக்கனார் அவர்கள் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத் தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.
தமிழகப் புலவர்குழுத் தலைவராக இருந்துள்ளார்.
தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வடிவமைப்புக் குழுத்  தலைவராகவும் இருந்து இவைகளின் மூலம் தமிழுக்குப் பெரும் தொண்டு ஆற்றியிருக்கின்றார்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இவரின் தமிழ்ப்பணிக்காக இவருக்குச் சிறப்பு முனைவர் (டி.லிட்.) பட்டம் வழங்கி உள்ளது.
முதுபெரும் புலவர் எனற விருதை குன்றக்குடி அடிகளார் வழங்கி இருக்கிறார்.
இவரின் சொந்த ஊரான மேலைச்சிவபுரியில் இயங்கி வந்த சன்மார்க்க சபை இவருக்குத் ‘தமிழச் செம்மல்’ என்ற சிறப்பு விருதை வழங்கி இருக்கிறது.
தமிழ்நாடு அரசு பேராசிரியர் வ.சுப.மாணிக்கனார் மறைவிற்குப் பின்னர், இவரைப் போற்றும் விதமாக இவருக்குத் ‘திருவள்ளுவர்’ விருதை வழங்கி சிறப்பித்து இருக்கிறது.
இவரின் மறைவுக்குப் பின்னர், இவர் எழுதிவைத்த இறுதிமுறியின்(உயிலின்)படி, சொந்த ஊரான மேலைச் சிவபுரி அறக்கட்டளைக்கு ஒருகுறிப்பிட்ட தொகை இவரின் சொந்தப்பணத்தில் இருந்து கொடுக்கப்பட்டு உள்ளது.
அதுபோல மேலைச்சிவபுரியில் சாதி மதவேறுபாடு இன்றி எல்லாக் குழந்தைகளின் உடல்நலம் பேண மருத்துவ உதவிக்காகவும் இவரின் பணத்தில் ஒரு தொகை வழங்கப்பட்டு உள்ளது.
இதே வழியில் சாதி மத வேறுபாடு இன்றி குழந்தைகளின் கல்விக்காக உதவும் பொருட்டும் கணிசமான தொகை ஒதுக்கித் தரப்பட்டுள்ளது.
இவரால் சேர்ந்து வைக்கப்பட்டிருந்த 4500 நூல்களைத் தான் பணியாற்றிய காரைக்குடி அழகப்பா கல்லூரிக்கு அன்பளிப்பாக வழங்கிவிட்டார்.
 தன் ஆசிரியர் பண்டிதமணி கதிரேசனாரின் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக ஆக்கியவர். மேலைச்சிவபுரி சன்மார்க்க சபையின் மூலம் பண்டிதமணியின் நூல்களைப் பதிப்பித்தவர். பண்டித மணியின் சொந்த ஊரான மதிபாலன் பட்டியில் அவருக்குச் சிலை அமைத்த அவரின் மாணவர் – தமிழுலகப் பேரறிஞர் பேராசிரியர் வ.சுப.மாணிக்கனார் தி.பிப. 2020 சித்திரை 13 ஆம் நாள் – 1989ஆம் ஆண்டு ஏப்பிரல் 25ஆம் நாள்,புதுவையில் இரவு 11 மணிக்கு மாரடைப்பால் காலமானார்.
எழில்.இளங்கோவன்

Friday, October 21, 2016

மறக்க முடியுமா? – கவிஞர் குயிலன் : எழில்.இளங்கோவன்

தலைப்பு-மறக்கமுடியுமா, குயிலன், எழில்.இளங்கோவன் ; thalaippu_markkamudiyuma_kuyilanezhililangovan

மறக்க முடியுமா? – கவிஞர் குயிலன்


அறிஞர்களுள் பன்மொழிப் புலவர்கள் இருந்திருக்கிறார்கள். கவிஞர்களுள் அப்படி இருந்திருக்கிறார்களா?
கவிஞர் குயிலனைத் தவிர, வேறுயாரும் பன்மொழிப் புலமைக் கவிஞர்களாக இருந்திருக்கிறார்களா என்பது தெரியவில்லை.
தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சமற்கிருதம் ஆகிய மொழிகளில் புலமை பெற்ற கவிஞர் குயிலன் படித்தது, ஆறாம் வகுப்பு மட்டுமே.
இராமநாதபுரம் மாவட்டம் பூசேரி என்ற சிற்றூரில் குருமூர்த்தி (பிள்ளை)-வெயில் உவந்தம்மாள் இணையரின் மகனாகப் பிறந்த கு.இராமலிங்கம்தான் பின்னாளில் கவிஞர் குயிலனாக மாறுகிறார்.
1939இல் பருமாவில் பணியாற்றிக் கொண்டு இருக்கும் போதே எழுத்தில் நாட்டம் கொண்டிருந்தார் குயிலன்.
அவரின் தமிழக வருகைக்குப்பின் வ.ராவின் ‘பாரத தேவி’ இதழில் ‘காக்கை மனிதனைப்பார்த்து கேலி செய்யும்’ என்று ஒரு கவிதை எழுதினார். இதுவே இவரின் முதல் கவிதை.
 1947இல் ‘செங்குமுதம்’ எனும் இவரின் குறுங்காப்பியம் இவரைக் குயிலனாக அறிமுகம் செய்தது.
எமிலி  சோலோ எழுதிய ‘தெரசா’, பி.எசு.பெக்சன் எழுதிய ‘தி பேன்ட் மைன்ட்’ ஆகிய ஆங்கில நூல்களைத் தமிழில் மொழி பெயர்த்தார் குயிலன். சமற்கிருதத்தில் எழுதப் பெற்றிருந்த ‘விவேக சூடாமணி’ என்ற நூலைத் தமிழில் கவிதை நூலாக மொழிபெயர்த்தார்.
தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இவரின் எழுத்தாக்கங்களும், மொழி பெயர்ப்பும், குறிப்பிடத்தக்கன. குறிப்பாக இம்மொழித் திரைப்படங்களின் உரை யாடல்களைத் தமிழ் மொழி மாற்றாகப் பல படங்களுக்கு இவர் எழுதியிருக்கிறார். 17 படங்களில் 52 பாடல்களை எழுதியுள்ளார்.
56 உரைநடை நூல்கள், 9 புதினங்கள், 7 கவிதை நூல்கள், 2 நாடகங்கள், 2 சிறுகதைத் தொகுப்புகள், “தமிழும் மலையாளமும்”, “தமிழும் கன்னடமும்” ஆகிய இரு நூல்கள் என இவர் எழுதிய நூல்கள் 116. இதில் மொழிபெயர்ப்புகளும் அடங்கும்.
 தொடக்கத்தில் இவர் பேராயக்கட்சி(காங்கிரசு)க்காரர். பிறகு பொதுவுடைமையாளராக மாறித், தன்னைக் கட்சிப்பணியில் இணைத்துக் கொண்டார்.
தொடக்கத்தில் நாமக்கல் கவிஞர் வே.இராமலிங்கம் பரிந்துரையின் அடிப்படையில், பேராயக்கட்சி (காங்கிரசு)க்காரரான சின்ன அண்ணாமலையின் தமிழ்ப் பண்ணையில், அதன் வெளியீடாக வெளி வந்த ‘மாலதி’ என்ற வார இதழின் ஆசிரியர் ஆனார்.
இவர் பொதுவுடைமைக் கட்சியில் இணைந்த பின், 1948இல் ‘தென்றல்’ என்ற இதழைப் பொதுவுடைமைக் கொள்கை தாங்கிய இதழாகத் தொடங்கினார்.
அந்தக் காலக்கட்டத்தில் பொதுவுடைமைக் கட்சிக்கு அரசு தடைவிதித்து,  சனசக்தி அலுவலகம் மூடிமுத்திரையிடப்பட்டது.
பொதுவுடைமைத் தலைவர்கள் தலைமறைவனார்கள். அந்தச் சமயம் ‘முன்னணி’ என்ற அரசியல் வார இதழைத் தொடங்கினார் குயிலன்.
தலைமறைவாக இருந்த தலைவர்களுக்கு இந்த இதழ் ஒரு தொடர்பு இதழாக அமைந்தது. இந்த முன்னணி இதழில் குயிலனுடன் இணைந்து பணியாற்றியவர் கவிஞர் தமிழ்ஒளி.
ஒருமுறை தேர்தலை எதிர்த்து ஒரு தலையங்கம் எழுதினார் குயிலன். அதன் தலைப்பு, “மஞ்சள் பெட்டியில் மண்ணைப் போடுங்கள்”.
இஃது ஆட்சியாளர்களின் கோபத்தைக் கிளறியது. கைது செய்யத் தேடப்பட்டார் கவிஞர். அவரோ தலைமறைவாகிப்போனார்.
ஆனாலும் பிறகு கைது செய்யப்பட்ட அவர் மூன்று மாதங்கள் விசாரணைக் கைதியாகச் சிறையில் இருந்தார்.
அப்போது அவருக்காக வாதாடிய வழக்கறிஞர், தோழர் கிருட்டிணமூர்த்தி. இவர் ஒரு தொழிற்சங்கவாதி மட்டுமல்ல, சென்னை மாநகரத்தலைவராகவும் இருந்தவர் என்பது குறிக்கத்தக்கது.
இப்படிக் குயிலன் தலைமறைவாக இருந்த போது இவருடன் தலைமறைவாக இருந்த தலைவர்கள் கே.பாலதண்டாயுதம், எம்.கல்யாணசுந்தரம், ஐ.மாயாண்டி பாரதி ஆகியோர் என்பது குறிக்கத்தக்கது.
பின் வந்த காலங்களில் முகவை இராசமாணிக்கம், கவிஞர் தமிழ்ஒளி ஆகியோருடன் இணைந்து “தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்” அமைத்தார்.
  1946இல் ‘இலக்கியமன்றம்’ 1952 இல் ‘வாரம்’ இதழ் ஆசிரியர், 1961-இல் ‘குயிலன் பதிப்பகம்’ என்று குயிலனின் எழுத்துப்பணி தொடர்ந்தது.
தமிழகக் ‘காங்கிரசு’ அமைச்சரவையின் கல்வி அமைச்சர் பக்தவச்சலம் எதிரிலேயே ‘காங்கிரசை’ எதிர்த்து, விமரிசித்துக் கவிதை பாடியவர் குயிலன்.
அறிஞர் அண்ணாவின் ‘திராவிடநாடு’ இதழில் குயிலனின் கவிதைகள் இடம் பெற்றுள்ளன. குயிலனின் கவிதைகளைக் ‘காங்கிரசுக்கு’ எதிராக மேற்கோள் காட்டி அண்ணா பேசியிருக்கிறார்.
ஒலியும் வரியும் மொழியும்” என்ற தன் நூலைத், தந்தை பெரியாருக்குக் காணிக்கை ஆக்கிய கவிஞர் குயிலன், ஆவணி 30, 1953 / 1922 ஆம் ஆண்டு செட்டம்பர் 14 அன்று பிறந்தார். கார்த்திகை 23, 2033 / 2002ஆம் ஆண்டு திசம்பர் 8 அன்று மறைந்தார்.
புதுத்தமிழ்க் கவிமலர்கள்” என்ற நூல்தொகுப்பில் இருந்து அவரின் ஒரு கவிதை :
வீர சுதந்திர நாட்டை – -ஆளும்
வீண்வெறி கொண்ட அரக்கன்
போரிட்டு மக்கள் இரத்தம் – -மிகப்
பொங்கி வழிந்திடச் செய்து
வானமெலாம் வெறும் இரத்தம் – மலை
வாவியெலாம் வெறும் இரத்தம்
ஈன இருளிடம் தோற்று -ஒளி
எங்கு மறைந்தது காணோம்?
காரிருள் போக்கிட வேண்டி – வீதிக்
கம்பங்கள் மீதிட்ட தீபம்
பேரடி மைமிகு நாட்டில் – எழப்
பெற்றது சுயேச்சையின் எண்ணம்
அடக்கு முறையென்ற காற்று – அதை
அணைக்க முயன்றது பாவம்
நடக்கும் அதன் செயல் அப்போ – மறு
நாளில் உதித்திடும் சூரியன்
– கவிதையின் தலைப்பு ‘இருளும் ஒளியும்’.

எழில்.இளங்கோவன் ; ezhililangovan
எழில்.இளங்கோவன்
கருஞ்சட்டைத் தமிழர் – ஆகத்து 1 – 2016
karunchattai-thamizhar01