சான்றோர் தமிழ்

5. ஆய்வுத் தமிழ் வளர்த்த அறிஞர் மு. இராகவையங்கார் 3/4


இலக்கண ஆராய்ச்சி

பேராசிரியரின் இலக்கண ஆராய்ச்சி நூல்களுள் தலைமை இடம் பெறுவது ‘தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி’ என்ற நூலாகும். இந்நூல் 1912ஆம் ஆண்டு இலங்கைச் செல்வர் கு. பூரீகாந்தன் என்பவர் நடத்திய தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சிப் போட்டியில் முதன்மைப் பரிசு பெற்றது. தொல்காப்பியப் பொருளதிகாரத்தை எளிய முறையில் மாணவர்களுக்குப் பயன்படத்தக்க வகையில் இந் நூலை ஆசிரியர் இயற்றியுள்ளார். தொல்காப்பியத்துட் காணப்படும் அகப்புற ஒழுக்கங்களைத் தெள்ளிதின் விளக்குகிறது இந்நூல்.

1958ஆம் ஆண்டின் மு. இராகவையங்கார் அவர்களின் எண்பதாம் ஆண்டு நினைவாக வெளியிடப் பெற்றது ‘வினைத்திரிபு விளக்கம்’. இஃது ஒரு செய்யுள் இலக்கண நூல். வினை விகற்பங்களைப் பன்னிரண்டு வாய்பாடுகளில் காட்டி, அவ்வாய்பாடுகள் செயல்படும் ஆற்றினை ஐம்பது நூற்பாக்களில் விளக்குகின்றது இந்நூல். 3020 வினைப் பகுதிகள் அனைத்தும் காண்போர்க்கு எளிதில் புலப்படும் வண்ணம் தனியாக அட்டவணைப்படுத்தப்பட்டுள்ள திறம் போற்றுதற் குரியது.

சங்க, இடைக்காலத் தமிழ் ஒலிகள் பெயர் வினைகளை அடைந்த வடிவங்களைப்பற்றிய புதிய செய்திகளை மொழி வரலாற்று அடிப்படையில், 1. தொல்காப்பியத்துக் கண்ட பழைய வழக்குகள், 2. தொல்காப்பியனாரும் புள்ளி எழுத்துக்களும், 3. அருகி வழங்கிய சில வினை விகற்பங்கள், 4.ஆய்தவோசை-என்ற நான்கு கட்டுரைகளில் புலப்படுத்துகின்றார்.


அகராதி ஆராய்ச்சி

ஏறத்தாழ இருபத்தாறு ஆண்டுகள் அகராதிப்பணியில் ஈடுபட்ட மு. இராகவையங்கார் அவர்கள், ‘தமிழ்ப் பேரகராதி’ உருவாவதற்குக் காரணமாக இருந்ததோடு அமையாமல், நிகண்டகராதி, நூற்பொருட் குறிப்பகராதி இவை வெளிவருவதற்கும் காரணமாக இருந்தார். நிகண்டகராதி அச்சேறவில்லை.

திவாகரம், பிங்கலம் உரிச்சொல் நிகண்டு, சூடாமணி என்னும் நான்கு நிகண்டுகளிலும் இடம் பெற்ற சொற்களுக் குரிய பொருளைத் தந்து, அசுர நிரலில் அமைக்கப்பெற்ற நூல் நிகண்டகராதி என்பது. இது பின்னாளில் திவாகரப் பதிப்பிற்குப் பெரிதும் பயன்பட்டது.

நூற்பொருட் குறிப்பகராதி’ தேவாரம், திருக்கோவையார், நற்றிணை, குறுந்தொகை முதலிய இலக்கிய நூல்களிலும், இறையனார் களவியல் உரை, வீர சோழியம் முதலிய இலக்கண நூல்களிலும் கூறப்பட்டுள்ள பொருள்களை அகர நிரலில் அமைத்துக் கூறுவதாகும்.


பதிப்பாசிரியர் மு. இராகவையங்கார்

பதிப்பாசிரியர் மு. இராகவையங்கார் அவர்கள் பதிப்பித்த நூல்கள் பன்னிரண்டு. இந்நூல்களில் பாட பேதங்களும் ஆராய்ச்சிக் குறிப்புகளும் அமைந்து காணப்படுவதால், ஏடுகளை ஒப்புநோக்கி இந்நூல்களைப் பதிப்பித்துள்ளார் என்பது போதரும். இவர் முதன்முதலில் பதிப்பித்த நூல் ‘திருக்குறள் பரிமேலழகர் உரையுடன்’ என்பது. 1910இல் பதிப்பிக்கப்பெற்ற இந்நூல் கையடக்கப் பதிப்பாக வெளியிடப்பெற்றது.

‘செந்தமிழ்ப் பத்திரிகை’யில் வெளிவந்து தனி நூல்களாகப் பதிப்பிக்கப் பெற்றவை; 1. நரிவிருத்தம் (அரும்பத உரையுடன்) 2. சிதம்பரப் பாட்டியல் உரையுடன், 3. திருக் கலம்பகம் உரையுடன், 4. விக்கிரம சோழனுலா, 5. சந்திராலோகம், 6. கேசவப் பெருமாள் இரட்டை மணிமாலை என்பன.

சங்க நூற்றொகைகள் போலத் தனிப்பாடல்கள் பலவற்றினைப் ‘பெருந்தொகை‘ என்ற பெயரில் 1936இல் ஒரு நூலாகப் பதிப்பித்தார். 2200 பாடல்கள் கொண்ட இந் நூல், 1. கடவுள் வாழ்த்தியல், 2. அறிவியல், 3. பொருளியல் என மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது பின்னாளில் பல தமிழறிஞர்களும் எடுத்தாளத் தக்க வகையில் இந்த நூல் அமைந்துள்ளது.

1936ஆம் ஆண்டில் பெருந்தொகையைப் பதிப்பித்த அதே ஆண்டில் ‘திருவைகுந்தன் பிள்ளைத்தமிழ்’ என்ற நூல் பதிப்பிக்கப்பெற்றது.

1949ஆம் ஆண்டில் திருவிதாங்கூர்ப் பல்கலைக்கழக ஆராய்ச்சித்துறைப் பேராசிரியராக இருந்த ஞான்று ‘அரிச்சந்திர வெண்பா’ என்ற ஒரு நூலினைப் பதிப்பித். துள்ளார்.

1951ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கம்பராமாயணப் பதிப்பாசிரியர் குழுவில் ஒருவராக இருந்து கம்பராமாயணப் பகுதிகளைப் பதிப்பித்துள்ளார் என்பது முன்னரே கூறப்பட்டது.

1953ஆம் ஆண்டில் சிராமலைக் கல்வெட்டில் கண்டெடுக்கப்பட்ட அந்தாதி ஒன்று ‘திரிசிராமலை அந்தாதி’ என்ற பெயரில் பதிப்பித்து வெளியிடப்பட்டுள்ளது.

1958, 59ஆம் ஆண்டுகளில் கம்பராமாயண சுந்தர காண்டப் பகுதிகளை உரையுடன் பதிப்பித்துள்ளார். இது அண்ணாமலைப் பல்கலைக் கழக வெளியீடாக வெளி வந்துள்ளது.

மேலும் இவர் பாட அமைதிபற்றி ஆராய்ச்சி செய்தும், அவற்றின் பொருள் நயத்தை விளக்கியும் பல கட்டுரைகள் எழுதியுள்ளார். காட்டாகக் ‘கலிங்கத்துப் பரணி’ ஆழ்வார்களின் அருளிச் செயல்கள் இவற்றைக் கூறலாம்.

உரையாசிரியர் மு. இராகவையங்கார்

நூல்கள் பலவற்றை ஆய்ந்தும் பதிப்பித்தும் ஆராய்ச்சி வேந்தராகவும், பதிப்பாசிரியராகவும் திகழ்ந்த மு. இராகவை யங்கார் அவர்கள் சில நூல்களுக்கு உரையும் கண்டுள்ளார். அவற்றுள் குறிப்பிடத்தக்கன கம்பராமாயண சுந்தரகாண்டப் பகுதிகள்; திருமங்கையாழ்வார் பாடிய பாசுரத்தின் விளக்க மாக அமைந்த ‘திருவிடவெந்தை எம்பெருமான்’ என்பன.

இதழாசிரியர் மு. இராகவையங்கார்

இவர் ‘தமிழர் நேசன்’, ‘கலைமகள்’, ‘செந்தமிழ்’ என்ற இதழ்களின் ஆசிரியராகத் திகழ்ந்தவர். ‘செந்தமிழ்’ இதழில் முதலில் இரா. இராகவையங்காருக்கு உதவியாசிரியராக அமர்ந்து. பின்னர் அவரது இடத்தை அணி செய்தவர். ஏறத்தாழ எட்டு ஆண்டுகள் இவர் இவ்விதழின் ஆசிரியப் பொறுப்பில் இருந்தார். கட்டுரைத் தொகுப்பு நூல்களாக அமைந்தவற்றில் உள்ள சில கட்டுரைகள் ‘செந்தமிழ்’ இதழில் வெளிவந்தவை. பெருந்தொகை நூலில் காணப்படும் பாடல்கள் பலவும் இவ்விதழில் வெளியானவையே. நூல் வடிவம் பெறாத சில கட்டுரைகளும் இவ்விதழில் வெளிவந்துள்ளன. ஆக இதழாசிரியராக அமர்ந்து தமிழ் இலக்கியத்திற்கு இவர் ஆற்றிய தொண்டு மிகப் பெரியது.

(தொடரும்)

சான்றோர் தமிழ்

சி. பாலசுப்பிரமணியன்