8. புதுவை தந்த புரட்சிக் கவிஞர் 1/3


கவிஞன் தான் பிறந்த காலத்தின் கருவாகவும் பின்னர்க் கருத்தாவாகவும் துலங்கக் காணலாம். தன்னைக் சுற்றிலுமுள்ள சூழலை, சமுதாயத்தை அப்படியே படம் பிடித்துக் காட்டுவது என்பது ஒருமுறை: அச்சமுதாயத்தை விவரிக்கவும் செய்து தன்னுடைய கருத்துகளைப் பரப்பி ஒரு புதிய மறுமலர்ச்சிக்குச் சமுதாயத்தினைப் படைக்க வேண்டும் என்ற பேரார்வத்தில் பிறங்கிடுவது பிறிதொரு வகை. முன்னவர் உள்ளதை உள்ளவாறே கூறுபவராகவும். பின்னவர் உள்ளதை உணர்ந்தவாறு கூறுபவராகவும் அமைவர்.

உள்ளதை உள்ளவாறு உணர்த்துபவர், உருவத்தைப் பிரதிபலித்து நிற்கும் கண்ணாடி போல்பவராவர். கவிஞன் காலத்தின் கண்ணாடியாக மட்டும், இருந்தால் போதாது. காலத்தின் கருத்தாவாகவும் அவன் துலங்குதல் வேண்டும். அப்போதுதான் அவன் படைக்கும் இலக்கியம் பூந்தோட்டமாக மட்டும் அமையாமல் காய்கறித் தோட்டமாகவும் அமைந்து பலன்தர முடியும்.

“மக்கள் ஆக்கா மனுவேந்தர்கள் கவிஞர்கள்” (Poets are the unacknowledged legislators of the world) என்று கவிஞர் செல்லி குறிப்பிட்டார். பொதுமக்களின் வாக்குரிமை பெற்றுச் சட்டமன்றத்தில் அமர்ந்து நாட்டு மக்களுக்கு நலம் பயக்கும் திட்டத்தினைக் தீட்டிச் செயலாற்றும் வாய்ப்பு அரசியல்வாதிகளுக்கு உண்டு. ஆனால் கவிஞர்களோ-வெனில் கற்பனையில் சில காட்சிகளைக் கண்டு, அக்கற்பனைக்காட்சிகள் நடைமுறை வாழ்வில் நனவுகளாகி மக்களுக்குப் பயன் நல்க வேண்டும் என்ற விழுமிய நோக்கம் உடையவர்களாகத் துலங்குவர். அமெரிக்கர்கள் நிலவுப் பயணத்தை மேற்கொள்வதற்குப் பல்லாண்டுகளுக்கு முன்பே தமிழ் நாட்டுக் கவிஞர் பாரதியார் “சந்திர மண்டலத்தில் கண்டு தெளிவோம்” என்று பாடிவிட்டார். சுதந்திரம் பெறுவதற்கு முன்பே ஆடுவோமே பள்ளுப் பாடுவோமேஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று” சுதந்தரப் பள்ளுப் பாடினார். சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம் என்றும் பாரதியார் பாடியுள்ளமை அவர்தம் எதிர்கால நோக்கினைப் புலப் படுத்தும். கங்கையில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்” என்று என்றோ பாடிவிட்டுப் போனார். இன்று கங்கையையும் காவிரியையும் இணைக்க முடியுமா? என்று உலக நிபுணர் குழு ஆராய்வதனைக் காண்கின்றோம்.


நாட்டின் விடுதலைக்கு-நாட்டு மக்களின் நல் வாழ்விற்குச் சில பல கருத்துக்களைப் பாரதியார் எண்ணியுரைத்தமை போன்றே. அவர் பால் கொண்ட ஈடுபாட்டால் தம் இயற்பெயரான கனகசுப்புரத்தினத்தைப் பாரதிதாசன் என்று மாற்றியமைத்துக் கொண்ட புதுவைக் கவிஞர்புதுமைக் கவிஞர்தம்-புரட்சிக் கருத்துகளை இனிக் காண்போம்.

காலத்திற்கேற்பக் கவிஞர் தோன்றுவர் என்பது பொது நியதியாகும். பாண்டிச்சேரியில் பாரதியார் வாழ்ந்திருந்த பொழுது அவரோடு தொடர்பு கொண்டார் நம் கவிஞர் பாரதிதாசன். ஒரு விருந்தில் சந்தித்தனர் இருவரும். பாரதியார் பாரதிதாசனைப் பாடுமாறு பணிக்க, எங்கெங்குக் காணினும் சக்தியடா!—தம்பி ஏழு கடல் அவள் வண்ணமடா!” என்ற பாடலைப் பாரதிதாசன் பாடியதாக அறிகிறோம். இந்தப் பாடலை முழுதும் நாம் படித்துப் பார்த்தால் புரட்சிக் கவிஞர் எனக் கொண்டாடப்படுவதற் கேற்பப் புரட்சி வித்துகள் இம்முதற் பாடலிலேயே தென்படக் காணலாம்.


“இயற்கை அனைத்தும் அழகே, அந்த அழகு செந்தாமரை யென்றும், நிலவென்றும், கதிரென்றும் சிரித்தது. காணும் பொருளிலெல்லாம் அழகைக் காணவும், கண்டவாறு தாமேயாகச் செல்லோவியம் செய்யவும் திறம் பெறுதல் வேண்டும் தமிழர்கள் என்று அழகின் சிரிப்பு நூலின் முன்னுரையில் கவிஞர் குறிப்பிடுவர்.


இயற்கை வருணனையிலும் புரட்சி உள்ளம்


இயற்கைப் பொருள்களைக் கூர்ந்து நோக்கும் கவிஞர்தம் மதி வியத்தற்குரியது. கடலைகளைப் பார்க்கும் கவிஞர்க்கு இளைஞர் தம் எழுச்சியும் ஒருங்கே நினைவுக்கு வருகின்றன.

நேரிடும் அலையோ, கல்வி
நிலையத்தின் இளைஞர் போலப்
பூரிப்பால் ஏறும்; வீழும்
புரண்டிடும், பாராய் தம்பி”

– அழகின் சிரிப்பு : கடல் : 1.

அடுத்து, புறாவின் வாழ்வினை வருணிக்க வருகின்ற கவிஞர் புரட்சிக் கருத்துகளை நம் முன் படைக்கின்றார். ஓர் ஆண் புறாவிற்கு ஒரு பெண் புறா என வாழும் கற்பு நெறியின் திண்மையினை நமக்கு எடுத்துக் காட்டு கின்றார்.

“ஒருபெட்டை தன் ஆண் அன்றி
வேறொன்றுக் குடன்ப டாதாம்:
ஒரு பெட்டை மத்தாப் பைப்போல
ஒளிபுரி ந் திடநின் றாலும்
திரும்பியும் பார்ப்ப தில்லை
வேறொரு சேவல்! தம்மில்
ஒருபுறா இறந்திட் டால்தான்
ஒன்று மற் றொன்றை நாடும்,”

– அழகின் சிரிப்பு; புறாக்கள் : 5

ஆணோ பெண்ணோ ஒருவர் இறந்தபின் மற்றவர் திருமணம் செய்து கொண்டு வாழ்வதே நேரிய செயல் என்பதனையும் இறுதி அடியிற் புலப்படுத்தி விடுகின்றார்.

கிளியை வருணிக்கப் புகுகின்ற கவிஞர், நெஞ்சத்திலே ஓர் எண்ணமும், நடைமுறை வாழ்வு நலத்திற்காகப் பிறி தொரு செயலுங் கொண்டு இலங்கும் இரட்டை வேடத் தினரைச் சாடக் காணலாம்.

காட்டினில் திரியும்போது
கிரீச்சென்று கழறு கின்றாய்
கூட்டினில் நாங்கள் பெற்ற
குழந்தை போல் கொஞ்சு கின்றாய்
வீட்டிலே தூத்தம் என்பார்
வெளியிலே பிழைப்புக் காக
ஏட்டிலே தண்ணிர் என்பார்
உன்போல்தான் அவரும் கிள்ளாய்!”
– அழகின் சிரிப்பு: கிளி; 7.

நிலவைப் பாடிய கவிஞர் பலர் நிலவினைக் காதல் வாழ்வு ஏற்றம் பெற அமையும் பின்புலமாகக் கண்டுள்ளதனைப் பார்க்கலாம். நற்றிணைத் தலைவன் பொருள்வயிற் பிரிந்து, பொருள் முற்றித் தம் மனை நோக்கி மீளும்போது நிலவைக் காண்கிறான். பின் வருமாறு பாடுகிறான்.

குன்றூர் மதியம் நோக்கி நின்று நினைந்து
உள்ளினேன் அல்லனோ யானே……
………………………………………………..
எமது முண்டோர் மதிநாள் திங்கள்
– நற்றிணை : 62.

இதுபோன்றே திருவள்ளுவர் காமத்துப்பாலில், தலை மகன்-ஒருவன் நிலவை நோக்கி, நின் முகமும் என் தலைவி யின் முகமும் அழகு-அமைப்பு-கவர்ச்சி முதலியவற்றில் ஒன்றேயெனலாம், ஆயினும் இருவரிடையிலும் ஒரு வேறு பாடு உளது என் தலைவி நான் காணமட்டுமே தோன்றுவாள்; நீயோ பலரும் காண நாணமின்றி வான வீதியில் உலா வருகின்றாய்’ என்று கூறுவதாகக் குறிப்பிடுகின்றார்.

மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி
– திருக்குறள் : 1119.

(தொடரும்)

சான்றோர் தமிழ்

சி. பாலசுப்பிரமணியன்