(உ.வே.சா.வின் என் சரித்திரம் 35 தொடர்ச்சி)

அத்தியாயம் 20 தொடர்ச்சி


களத்தூரின் அமைப்பு


களத்தூர் சீவநதியாகிய வடவெள்ளாற்றின் கரையிலுள்ளது. பலவகை சாதியினரும் நிரம்பப் பெற்றது. முகம்மதியர்கள் கொடிக்கால் வைத்துக்கொண்டு சுகமாக வாழ்ந்து வந்தனர். அவர்களிற் சிலர் தமிழ்நூற் பயிற்சியுடையவர்களாக இருந்தனர். அவ்வூரில் ஓர் அக்கிரகாரம் உண்டு. அதில் சிரீ வைணவர்கள், மாத்துவர்கள், தெலுங்கர்கள், மார்த்தர்கள் என்னும் வகையினர் வாழ்ந்து வந்தனர். சிவ விட்ணு ஆலயங்களில் விட்ணு ஆலயம் பிரபலமானது. துருக்கை முதலிய தெய்வங்களின் ஆலயங்களும் உண்டு. பல இடங்களில் நந்தவனங்களும் தோட்டங்களும் இருந்தன.

களத்தூரைச் சார்ந்து இரஞ்சனகடி துருக்கமென்ற மலையரணும் ஊரும் உண்டு. அங்கே ஒரு நவாபு இருந்து வந்ததாகச் சொல்லுவார்கள். அவருக்குச் சொந்தமான நிலங்களும் மிகப்பெரிதான தோட்டமும் களத்தூரில் இருந்தன. அத்தோட்டத்தில் பல பழ விருட்சங்களும் புட்பச்செடிகளும் நிரம்பியிருக்கும். களத்தூரும் அதனைச் சார்ந்த துருக்கமும் நல்ல காட்சிகளையுடையன. எனக்கு அவை அதுகாறும் அடையாத ஆனந்தத்தை உண்டாக்கின. இரஞ்சனகடி துருக்கத்திற்குச் சென்று அத்துருக்கத்தின் அமைப்பையும் களத்தூரிலுள்ள தோட்டத்தின் அழகையும் கண்டு மனமகிழ்வேன். அப்பக்கங்களிலுள்ள முகம்மதியர்களில் தமிழறிவு நன்கு வாய்ந்தவர்களைச் சந்தித்து அவர்களோடு சம்பாசித்து அவர்கள் கூறும் செய்யுட்களைக் கேட்டு இன்புறுவேன். அவர்கள் வேறு மதத்தினராக இருந்தாலும் தமிழின் நயத்தில் ஈடுபட்டுத் தமிழ்ச் செய்யுட்களைப் பாடம் பண்ணுவதும், அவற்றின் சுவையை அனுபவித்துப் பிறருக்கும் எடுத்துக் கூறி அவர்களையும் அனுபவிக்கச் செய்வதுமாகிய காரியங்களைச் செய்து வந்தனர்.

துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் சஞ்சரித்த இடங்களாதலின் அப்பிரதேசங்களில் அவரைப் பற்றிய செய்திகள் மிகுதியாக வழங்கி வரலாயின. அவருடைய நூல்களிலே மதிப்பு வைத்து யாவரும் படித்து வந்தனர். அவர் வீர சைவராக இருப்பினும் முன்னே கூறிய முகம்மதியர்கள் அவருடைய வாக்குக்குரிய மதிப்பை அளித்தலில் தவறவில்லை. அவர்கள் மசுதான் சாகிபு பாடல், சீறாப்புராணம் என்பவற்றில் அன்பு வைத்துப் படித்து வந்தார்கள்; அவற்றைப் போலவே கம்பராமாயணம், திருவிளையாடல், பிரபுலிங்கலீலை முதலியவற்றிலும் மதிப்புடையவர்களாகிக் கற்று வந்தனர். ஆதலின் அவர்களிடத்தே எனக்கு ஈடுபாடுஉண்டாயிற்று.

இராமாயணப் பிரசங்கம்

நாங்கள் களத்தூரில் எல்லாவிதமான அனுகூலங்களையும் பெற்றோம். அங்கே சென்று சில தினங்கள் ஆனவுடன் இராமையங்கார் முதலியோருடைய விருப்பத்தின்படி ஒரு நல்ல நாளில் என் தந்தையார் இராமாயண கதாப்பிரசங்கத்தைத் தொடங்கினர். நாள்தோறும் இரவு எட்டு மணி யளவுக்கு ஆரம்பிக்கப் பெற்ற பிரசங்கம் பதினொரு மணி வரையில் நடைபெறும். பலர் வந்து உத்சாகத்துடன் கேட்டுச் செல்வர்.

இக்கதாப் பிரசங்கத்தில் தழும்பேறிய என் தந்தையார் தம் சங்கீதத் திறமையை மிக விரிவாகக் காட்டினார்: அதற்கு என் சிறிய தந்தையாரும் துணை செய்தனர். கீர்த்தனங்களை இராகத்தோடு பாடுவதிலே அதிக முயற்சியும் பொருள் சொல்வதில் சிறிதளவு கருத்தும் முதலில் இருந்தன. வரவரப் பொருள்கூறும் முறையும் விரிவடைந்தது. தமக்குள்ள தமிழறிவையும் சம்சுகிருத ஞானத்தையும் எந்த அளவிற்குப் பயன்படுத்திக் கொள்ளலாமோ அந்த அளவிற்கு அவற்றைப் பயன்படுத்திப் பொருள்கூறத் தொடங்கினர். இராமாயணக் கீர்த்தனத்திற்குப் பொருள் சொல்லுகையில் மேற்கோளாக வேறு கீர்த்தனங்களைச் சொல்வார்; பல தமிழ்ப் பாடல்களையும் சம்சுகிருத சுலோகங்களையும் எடுத்துக் காட்டுவார். அத்தகைய சந்தர்ப்பங்களில் உதாரணமாகச் சொல்லவேண்டிய பாடல்களுக்கு அவர் முதலெடுத்துத் தருவார்; நான் அவர் குறிப்பை அறிந்து அவற்றைப் பாடிக் காட்டுவேன். என் சாரீரமும் நான் பாடல் சொல்லும் முறையும் சபையினருக்கு மிக்க திருப்தியை அளித்தன என்பதை அவ்வப்போது சில குறிப்பால் தெரிந்துகொள்வேன். எனக்கு அப்போது உண்டாகும் உத்சாகம் அடுத்த முறை நான் பாடல் சொல்லுகையில் வெளிப்படும். பணமாகவும் பிற பொருளாகவும் பெறும் இலாபத்தைக் காட்டிலும் அபிமானத்தினால் வெளியிடப் பெறும் பாராட்டையே பெரிய ஊதியமாகக் கருதும் இயல்பு மனிதர் யாவரிடத்தும் காணப்படுகின்றது. இளமைப் பருவத்தில் அக்கருத்து என்பால் மிகுதியாக இருந்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

களத்தூரில் இராமாயண பட்டாபிசேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இராமையங்காரும் பிறரும் நூறு வராகன் (350) உரூபாய் தம்முட் சேர்த்துச் சம்மானம் செய்தார்கள். அதற்கு முன்பெல்லாம் இருபது வராகனே சம்மானமாகக் கிடைத்து வந்தது. அம்முறை என் தந்தையார், சிறிய தந்தையார், நான் ஆகிய மூவரும் சேர்ந்து வெளிப்படுத்திய சங்கீதத் திறமை முதலியவற்றாலும் என் விவாகப் பிரயத்தனத்தினாலும் அதிகமாகச் சம்மானம் கிடைத்தது. கிடைத்த 350 உரூபாயில் செலவுக்கு 150 உரூபாய் போக எஞ்சிய 200 உரூபாயை விவாக காலத்துப் பெற்றுக்கொள்வதாக இராமையங்காரிடமே தந்தையார் கொடுத்து வைத்திருந்தார்.

நந்தன் சரித்திரப் பிரசங்கம்


இராமாயணப் பிரசங்கம் நிறைவேறியவுடன் பலர் நந்தனார் சரித்திரம் சொல்லும்படி என் தந்தையாரைக் கேட்டுக்கொண்டனர். அக்காலத்தில் நந்தனார் சரித்திரம் தமிழ்நாடு முழுவதும் பரவியிருந்தது. அதன் ஆசிரியராகிய கோபாலகிருட்டிண பாரதியார் என் தந்தையாருடைய நண்பராதலின் அச்சரித்திரத்தை என் தந்தையார் நன்றாகச் சொல்வாரென்பதை யாவரும் தெரிந்துகொண்டிருந்தனர். அதிலுள்ள கீர்த்தனங்களை அதன் ஆசிரியர் அமைத்த சங்கீத அமைப்புப்படியே எந்தையார் பாடுவார்.

பாரதியார் நந்தனார் சரித்திரத்தை இயற்றுதற்குக் காரணம் இன்னதென்பது, அதனை இயற்றிய காலத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் முதலியவற்றை அவர் அடிக்கடி எடுத்துரைப்பதும், இராமாயணப் பிரசங்கத்தின்போது அச்சரித்திரக் கீர்த்தனங்களைச் சொல்லிக்காட்டுவதும் உண்டு. பாரதியார் காரைக்காலுக்குச் சென்று அங்கிருந்த ஆட்சித்தலைவராகிய(கலெக்டராகிய) சிசே துரைக்கு முன் நந்தன் சரித்திரத்தை நடத்தினா ரென்றும், அது கேட்டு அத்துரை மயங்கி அவரைப் பாராட்டிக் கொண்டாடினாரென்றும், பின்பு அத்துரையின் முயற்சியால் அச்சரித்திரம் அச்சிற் பதிப்பிக்கப்பட்டதென்றும் சொல்லுவார்.

பாரதியார் என் தந்தையாருக்கு அச்சரித்திரத்தின் அச்சுப் பிரதி ஒன்றை அளித்திருந்தார். அதை அவர் மிகவும் சாக்கிரதையாக வைத்துப் பாதுகாத்து வந்தார். அப்பிரதி இன்னும் என்னிடத்தில் உள்ளது.

அன்பர்களது விருப்பப்படியே நந்தனார் சரித்திரம் ஆரம்பிக்கப் பெற்றது. என் தந்தையார் சிவபக்தியில் நன்கு ஊறினவராதலின் அச்சரித்திரத்திலே செறிந்து கிடக்கும் பக்திச் சுவையை நன்றாக வெளிப்படுத்தினார். இளம் பருவமுடையவர்களையும் உருக்கும் அமைப்பையுடையது அச்சரித்திரம். அதில் சனங்கள் அதிகமாக ஈடுபட்டனர். வர வரக் கூட்டம் மிகுதியாயிற்று. இப்பிரசங்கத்தைக் கேட்டவர்கள் நந்தன் சரித்திரக் கீர்த்தனங்களில் ஒன்றையேனும் பலவற்றையேனும் பாடம் பண்ணிக்கொண்டு பாடி உருகலாயினர். சங்கீதத்தின் வாசனையே அறியாதவர்களும் அவற்றை வாய்விட்டுச் சொல்வதில் ஓர் இன்பத்தை அடைந்தனர்.

நான் எங்கேயாவது போய்க்கொண்டிருப்பேன்; எங்கேயிருந்தோ, “பித்தந் தெளிய மருந்தொன்றிருக்குது” என்று ஒரு தொனி உண்டாகும். மற்றோரிடத்தில் அபசுவரத்தில் “சிவலோக நாதனைக் கண்டு” என்று ஒரு குரல் எழும்பும். கிழவர்களைக் காணும்போது சில இளைஞர்கள், “மீசை நரைத்துப் போச்சே கிழவா-ஆசை நரைக்கலாச்சோ” என்று பாடத் தொடங்கிவிடுவார்கள். சில இளம்பிள்ளைகள், “மார்கழி மாதந் திருவாதிரை நாள் வரப் போகுதையே” என்று சொல்லிக்கொண்டு ஆடுவார்கள். வேதாந்த சாத்திரப் பயிற்சியுள்ளவர்கள், “வாசியாலே மூலக் கனல் வீசியே சுழன்றுவர” என்று சொல்லிக்கொண்டிருப்பார்கள். இப்படி இளம்பிள்ளைகள், காளைப் பருவமுடையவர்கள், வயசு வந்தவர்கள், கிழவர்கள் ஆகிய எல்லாருடைய மனத்திலும் நந்தனார் சரித்திரக் கீர்த்தனங்கள் புகுந்து விளையாடின. ஒன்றும் அறியாத பெண் பிள்ளைகள், “நந்தன் சரித்திரம் நடக்குது” என்று சொல்லிக்கொண்டு வந்து கேட்பார்கள். களத்தூரைச் சுற்றியுள்ள ஊர்களிலிருந்து பலர் தினந்தோறும் வந்து கேட்டுச் செல்வார்கள்.
(தொடரும்)

என் சரித்திரம், .வே.சா.