Showing posts with label சிறுதொண்டுகள். Show all posts
Showing posts with label சிறுதொண்டுகள். Show all posts

Sunday, November 05, 2023

ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 22 : நாடகக் கலை … சிறுதொண்டுகள் (2)

 




(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 21 : 16. நாடகக் கலை … சிறுதொண்டுகள் (1) தொடர்ச்சி)

என் சுய சரிதை

நாடகக் கலை … சிறுதொண்டுகள் (2)

13–3–49 விக்குடோரியா பொது அரங்கில் (Public Hall) இன்று ‘தோட்டக்காரன்’ எனும் ஓர் சமூக நாடகத்தில் செட்டியாராக நடித்தேன். நடித்தது எனக்கு மன நிறைவாக இருந்தது. விக்குடோரியா பொது அரங்கில் இதற்கு முன்பாக 10 வருடங்களுக்கு முன் நடித்தது.

24-4-49, அன்று விக்குடோரியா பொது அரங்கில் சுகுண விலாச சபையார் எனது நாடகமாகிய ‘சந்திரஃகரி’யை நடத்தினார்கள். அப்பொழுது அதில் நடித்த முக்கிய நடிகர்களின் வேண்டுகோளின்படி மூன்றாவது காட்சியில் சந்திரஃகரி அரசன் அரசவையில்(தர்பாரில்) ஓர் சேவகனாக நடித்தேன்.

14-8-49-இல் சென்னை சிவனடியார் திருக்கூட்டம் முதலிய இந்துமத சம்பந்தமானவற்றிற்காக இராயபுரம் நாடக சபையார்கள் விக்குடோரியா பொது அரங்கில் ‘நந்தன் சாம்பன்’ என்னும் தமிழ் நாடகத்தை நடத்தியபோது தலைமை வகித்தேன்.

இவ்வருடம் செட்டம்பர் மாதம் சென்னை தமிழ் வளர்ச்சிக் கழகத்தார் சிறந்த நாடகங்களுக்குப் பரிசு அளிப்பதற்காக ஏற்படுத்திய நாடகப் போட்டியில் அவர்களுக்கு அனுப்பப்பட்ட 13 நாடகங்களைப் பரிசோதித்து சிறந்த நாடகத்தை தேர்ந்தெடுப்பதற்காக என்னைப் பரிசோதகனாக ஏற்படுத்திய காரியத்தைச் செட்டம்பர் 20-ஆந்தேதிக்குள் முடித்தேன்.

1949-திசம்பர் 30-ஆந்தேதி சென்னபுரி ஆந்திர மகாசபை நடத்திய ‘நாடக கலா பரிச’த்தில் இரண்டாம் நாள் விக்குடோரியா பொது அரங்கில் 9 மணிக்கு அவர்கள் கேட்டுக் கொண்ட படியால் தலைமை வகித்து ‘ஒரு நாடகத்தை எப்படி நடத்துவது’ என்றும் விசயத்தைப்பற்றிப் பேசினேன்.

1950 பிப்பிரவரி 25 சாயங்காலம் 5-30 மணிக்கு மதுரை தியாகராயர் கல்லூரியில் மாணவர் சங்கக் கூட்டத்தில் தமிழில் பிரசங்கம் செய்தேன். அங்கு நடந்த வேடப் போட்டியில் நடுவராக இருந்து பரிசு வழங்கினேன். தியாகராயர் வேண்டு கோளின்படி.

1950- பிப்ரவரி 25 காலை மாலை மதுரை பண்பாட்டு அவையில்(culture league) ‘தமிழ் நாடகம் முற்காலத்திலும் தற்காலத்திலும்’ என்பதைப் பற்றி 45 நிமிடம் பிரசங்கம் செய்தேன். பிறகு உடனே பொழுதுபோக்க மன்றத்திற்கு(ரெக்ரியேசன் கிளப்புக்கு)ப் போய் அவர்கள் நாடகப் பிரிவைக் குறித்து சிறு சொற்பொழிவு செய்தேன். 1950 மார்ச்சு 4ஆந் தேதி திருவிடந்தைக்கு மது விலக்கு சங்கத்தாருடன் போயிருந்த போது ‘வத்சலாஃகரம்’ ன்னும் தெருக் கூத்து நடந்தது. இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரையில் அதைப் பார்த்து சிரீமான் அப்பாதுரை பிள்ளை அவர்கள் ஏற்படுத்திய வெள்ளிக் கோப்பையை அதில் மிகவும் நன்றாய் நடித்த நடிகனுக்கு கொடுக்கும்படி கேட்டனர். அதில் இரண்டு மூன்று பெயர் நன்றாக நடித்த படியால் பொதுவில் அவர்கள் நிறுவனத்திற்கு (அச்சிறு பாக்கம் கம்பெனிக்கு) அளித்தேன். 1950 ஏப்பிரல் தொண்டை மண்டலப் பள்ளியில் காலஞ் சென்ற மனோன்மணியம் நாடக ஆசிரியராகிய திரு. சுந்தரம் பிள்ளை அவர்களுடைய உருவப் படத்தைச் சேது பிள்ளை அவர்கள் தலைமையில் திரு. சிவஞான கிராமணியார் திறந்து வைத்த போது சுந்தரம் பிள்ளை அவர்களைப் பற்றி ஒரு சிற்சொற்பொழிவு செய்தேன். 11-7-1958 சென்னை தமிழ் நாடகக் கழகத்தினர் சார்பாக சட்டசபை பிரதம மந்திரியாகிய கனம் குமாரசாமி இராசா அவர்களிடம் நாடகங்களுக்கு வினோத வரியை (Entertainment tax) எடுத்து விடவேண்டு மென்று ஒரு தூதுக் குழு சென்ற போது நாம் அவர்களுள் ஒருவனாக சென்று கோட்டையில் அமைச்சரைக் கண்டு அரைமணி சாவகாசம் அதைப் பற்றிய காரணங்களையும் நியாயங்களையும் எடுத்துப் பேசினேன்.

31-12-1950 இல் மேற்கண்ட சங்கத்தார் திரைப்படக் குழுவில் சென்னைக்கு வந்து திருமதி சாந்தா ஆப்தே அவர்களுக்குக் கொடுத்த தேநீர் விருந்தில் நாடகக் கலையானது இந்தியத் தேசம் முழுவதையும் ஒன்று படுத்தக் கூடிய காரணங்களில் ஒரு முக்கியமானது என்பதைப் பற்றி பேசினேன். 1950 அட்டோபர் 18ஆந் தேதி சுகுண விலாச சபையின் தசரா கொண்டாட்டத்தில் ‘சபாபதி நான்காம் பாகம்’ போட்டபோது வேலைக்கார சபாபதியாக நடித்தேன். மேற்படி வருடம் 20, 30 தேதிகளில் நந்த விசயம் எனும் சிறுமிகள் பள்ளியின் இரண்டாம் வருடக் கொண்டாட்டத்தில் தலைவனாக இருந்து சில வார்த்தைகள் பேசினேன்.

1950 நவம்பர் 10 நாடகக் கழகத்தார் காலஞ்சென்ற சியார்சு பெர்னாட்சா அவர்கள் மரணத்திற்காக அனுதாபக் கூட்டம் கூடிய போது நான் அவரைப் பற்றிப் பேசினேன்.

1950 நவம்பர் 22 இந்து மதுவிலக்கு சங்கத்தில் இன்று நடிப்புக்கலை போட்டி நடந்த போது அதில் நான் பங்கெடுத்துக் கொண்டு ‘அமலாதித்யனும் அபலையும்’ என்னும் காட்சியில் நடித்து ஈசன் கருணையினால் பரிசு பெற்றேன்.

1951 பிப்பிரவரி மாதம் ஒரு நாள் புதிதாய் தாபிக்கப்பட்ட ஓர் தமிழ் பொழுதுபோக்கு (amateur) நாடக சபையின் முதல் நாடகத்திற்கு என்னைத் தலைமை வகிக்கும்படி கேட்டார்கள். அவர்கள் வேண்டுகோளை மறுக்க மனமில்லாதவனாய் ஒப்புக்கொண்டு நாடகத்தைப் பார்க்கப் போயிருந்தேன். நடிகர்கள் என்னவோ சுமாராக நன்றாய் நடித்தனர் என்றேதான் கூற வேண்டும். ஆயினும் நாடகம் எழுதப்பட்டது மாத்திரம் என் மனதிற்கு அதிருப்தியைத் தந்தது. ஒரு உதாரணத்தை இங்கு எழுது கிறேன். ஒரு முக்கிய நாடகப் பாத்திரம் தன் சகோதரர் மரித்ததாக செய்தி வருகிறது. அதைக் கேட்டவுடன் அந்த நடிகர் உடனே ‘கொலு கோவில் ‘ சங்கீதம் அப்பியசிக்கிறார்! இதில் விந்தை என்னவென்றால் இவர்தான் அன்று நடந்த நாடகத்தை எழுதினவராம். இதைக் கேட்டவுடன் கொஞ்சம் நேரம் இருந்து விட்டு ஏதோ ஒரு சாக்கைச் சொல்லிவிட்டு வீட்டிற்குத் திரும்பி விட்டேன். இந்த நாடகத்திலிருந்து போய் இக்காலங்களில் எழுதப்படும் நாடகங்களின் சில காட்சிகள் நான்கு ஐந்து வரி சம்பாசணைகளையுடையனவாயிருக்கின்றன. இதற்கு முக்கிய காரணம் திரைப்படங்களில் நடிக்கப்படும் நாடகங்கள் போலும், நாடக மேடை நாடகங்கள் விருத்தியடைய வேண்டுமென்றால் இம்முறையானது முற்றிலும் மாற்றப்பட வேண்டுமென்பது என் அபிப்ராயம்.

1957 மார்ச்சு 15 சென்னை நாடகக் கழகத்தார் வினோத வரியை (Entertainment tax) இரண்டு வருடங்கள் நாடக சபைகளுக்கு நீக்கிய கனம் கோபால் ரெட்டி அவர்களுக்கு தேநீர் விருந்து ஒன்று மெய்யப்பச் செட்டியார் செய்து அதில் என்னைத் தலைமை வகிக்கும்படி கேட்க, ஒப்புக் கொண்டு அக் கூட்டத்தில் கனம் கோபால் ரெட்டியாருக்கு வந்தனம் அளித்த போது தமிழ் நாடகத்திற்கு அவர் செய்த இந்த உபகாரத்திற்காக வந்தனம் தெரிவித்தேன்.

இவ்வருடம் ஏப்பிரல் மாதம் 15ஆந் தேதி வினோதமாக நாடகம் ஆடும் ஒரு சபையின் வருடாந்திர கொண்டாட்டத்தில் ஆடிய ‘அந்தமான் கைதி’ என்னும் நாடகத்திற்கு தலைமை வகிக்க இசைந்து சாயங்காலம் 6 மணிக்குப் போனேன். 9 மணி வரையில் சிறு நாடக சாலையில் கடினத்துடன் 3 மணி சாவகாசம் இருந்து நாடகத்தைக் கண்ணுற்றேன். நாடகம் மிகவும் நன்றாய் ஆடப்பட்டது. நாடகத்தின் முடிவில் நடிகர்களைப் புகழ்ந்து பேசி அவர்களை உற்சாகப்படுத்தினேன். இவ்வருடம் ஏப்பிரல் மாதம் 29ஆந் தேதி அருங்காட்சியக(மியூசியம்) நாடக சாலையில் ‘இசுடான்டர்டு ஆயில் கம்பெனி ரெக்ரியேசன் கிளப்பார்’ இராணி என்னும் ஓர் சமூக நாடகத்தை நடத்தினார்கள். அதன் அரங்கேற்றுதலுக்கு என்னைத் தலைமை வகிக்கும்படி கேட்க, நான் இசைந்து முதலிருந்து கடைசிவரை இருந்து நாடகத்தைப் பார்த்து சந்தோசப்பட்டேன். கதையை ஆங்கிலத்தில் எழுதியவர் ஒருவர். அதற்குத் தமிழில் தக்கபடி வசனங்கள் அமைத்தவர் மற்றொருவர். பாட்டுக்களை எழுதியவர் ஒருவர். இச்சமூக நாடகம் மிகவும் நன்றாயிருந்தது. நாடக முடிவில் பல வார்த்தைகள் பேசினேன். நாடகக் கலைக்கு ஊழியம் செய்யப் பல புதிய இளைஞர்கள் முன் வந்திருக்கிறார்கள் என்று அவ்வளவு உறுதியாக நம்பும்படியாகச் சிறந்த முறையில் நாடகத்தை நடத்தினார்கள்.

1951 ஆகட்டு, செட்டம்பர் மாதங்களில் சென்னை தமிழ் வளர்ச்சி கழகத்தார் தாங்கள் ஏற்படுத்திய நாடகப் புத்தகப் போட்டியில் அனுப்பப்பட்ட புத்தகங்களை அனுப்பி அவற்றில் சிறந்தவற்றைப் பரிசுக்காக தேர்ந்தெடுக்க என்னை ஓர் நடுவராக இருக்கும்படி கேட்க அதற்கிணங்கி அனுப்பப்பட்ட சுமார் 29 நாடகங்களை என் துன்பத்தையும் பாராமல் பரிசோதித்துப் பார்த்து என் அபிப்பிராயத்தை அவர்களுக்கு தெரிவித்தேன்.

7-10-51-இல் இலட்சுமி நாடக சபையாரால் மைலாப்பூரில் ‘அரசிளங்குமரி’ என்னும் தமிழ் நாடகம் நடத்தப்பட்டது. அதற்கு நான் தலைமை வகிக்க முன்பே ஒப்புக்கொண்டபடியால் அன்றைத்தினம் என் தேக அசௌக்கியம் குன்றியிருந்த் போதிலும் 9 மணி வரையில் பார்த்துக் கடைசியில் அவர்களுக்கு உற்சாக மூட்ட சில வார்த்தைகள் பேசி வீட்டிற்குத் திரும்பி னேன். உடனே சுரத்தால் பீடிக்கப்பட்டு ஏறக்குறைய பத்து பதினைந்து தினங்கள் துன்பப்பட்டேன்

(தொடரும்)

பம்மல் சம்பந்தம்

என் சுயசரிதை

Sunday, October 29, 2023

ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 21 : 16. இக்காலம் நாடகக் கலைக்காக உழைத்த சிறுதொண்டுகள் (1)

 








(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 20 : 15. பேசும் படங்களில் நான் பங்கெடுத்துக் கொண்டது-தொடர்ச்சி)

இக்காலம் நாடகக் கலைக்காக உழைத்த சிறுதொண்டுகள்


1938-ஆம் வருசம் முதல் நாடகமாடுவதை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைத்துக் கொண்டே வந்தேன் என்று சொல்ல வேண்டும். இதற்கு முக்கிய காரணம் எனக்கு விருத்தாப்பியம் மேலிட்டதேயாம். ஆகவே இது முதல் நாடகக் கலைக்காக உழைத்ததைப் பற்றி எழுதுகிறேன்.

1939-ஆம் வருசம் உலக இரண்டாம் யுத்தம் ஆரம்பித்த பிறகு நாடகக்கலையே இத்தமிழ் நாட்டில் உறங்கிவிட்டது எனலாம் 1942-ஆம் வருசம் சென்னையிலிருந்து ஆயிரக் கணக்கான சனங்கள் வெளியூருக்குக் குடியேறின போது நானும் மைசூரில் போய் வசித்து வந்தேன். இக்காலத்தில் நாடகமேடை மறுபடியும் தலையெடுப்பது அசாத்தியம் என்று ஏங்கியிருந்தேன்.

இவ்வருசம் நான் மைசூரிலிருந்து திரும்பி வந்த போது கொஞ்சம் தைரியம் கொண்டேன். இவ்வாண்டில் ஆகத்து மாதம் மதுரையில் தமிழ் மகாநாடு கூடிய பொழுது என்னை மூன்றாவது தினமாகிய நாடகத் தமிழ் மகாநாட்டிற்குத் தலைவனாக இருக்க வேண்டுமென்று அழைத்தனர். அதற்கு நான் குதூகலத்துடன் உட்பட்டு மதுரைக்குப் போனேன். அன்று மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு எதிரில் உள்ள புது மண்டபத்தில் நாடகத்தமிழைப் பற்றி ஒரு சிறு சொற்பொழிவு செய்தேன். இச்சயம் பல வருடங்களாகப் பாராதிருந்த என் மதுரை நண்பர்களைக் கண்டு சந்தோசித்தேன்.

மறு வருடமாகிய 1943-ஆம் ஆண்டில் ஈரோட்டில் நாடகத் தமிழ் மகாநாடு கூடியபோது அதற்கு நாடகத்தமிழ் கொடியை ஏற்றி வைக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.
அம் மகா நாட்டில் கனம் சண்முகம் செட்டியார் அவர்கள் அக்கிராசனம் வகித்தார். அன்றியும் இம் மகாநாட்டில் எனக்கு ‘நாடகப் பேராசிரியர்’ என்னும் பட்டம் அளிக்கப் பட்டது தெய்வத்தின் கருணையால், அன்றியும் ஈரோடு நகரசபையார் எனக்கு ஒரு வந்தனோபசாரப் பத்திரமும் அளித்தனர். இச்சபையில் பேச வேண்டி வந்த போது “எனக்கு அரசினர் அளித்த இரண்டு பட்டங்களை விட நாடக அபிமானிகள் எனக்களித்த பட்டத்தையே நான் மேலாகக் கருதுகிறேன்” என்று சொன்னேன். இச்சமயம் ஈரோட்டுக்கருகிலுள்ள பவானி என்னும் சேத்திரத்திற்கு என்னை என் புதிய நண்பர்கள் அழைத்துச் சென்றனர். அங்குள்ள நாடக சபையின் வருடாந்திரக் கொண்டாட்டத்திற்கு என்னைத் தலைமை வகிக்கச் செய்தனர். அச்சமயம் நாடகக் கலையின் உயர்வைப்பற்றிப் பேசினேன்.

1944-ஆம் ஆண்டு பிப்பிரவரி மாதம் தொண்டை மண்டலம் துளுவ வேளாளர் பள்ளிக் கூட நிதிக்காக ‘சபாபதி’ என்னும் நாடகத்தை ஆடினபோது நானும் அதில் ஒரு வேடம் தரிக்க வேண்டுமென்று எனது நண்பர்கள் கேட்க, அதற்கிசைந்து ஒரு காட்சியில் சபாபதி முதலியாராக நடித்தேன். அப் பொழுது எனக்கு வயது 71. இதைக் குறித்து அப்பள்ளியின் அறக்கட்டளையர்(டிரசுட்டிகள்) கூட்டத்தில் எனக்கும் எனது நண்பர் மருத்துவர் குருசாமி முதலியாருக்கும் நடந்த வேடிக்கையான சம்பாசணையை இங்கு எழுத விரும்புகிறேன். இயக்குநர்கள், நானும் இந்நாடகத்தில் நடித்தால் அதன் மூலமாக பொருள் அதிகமாகக் கிடைக்கும் என்று என்னை வற்புறுத்தியபோது “சபாபதி முதலியார் என்னும் நாடகப் பாத்திரம் சுமார் 17 வயது பிள்ளை யாச்சுதே, எனக்கு 71 வயதாகிறதே அதை நான் எப்படி நடிப்பது?” என்று ஆட்சேபிக்க, மருத்துவர் குருசாமி முதலியார் “அதில் தவறொன்றும். இல்லை, 71 என்னும் எண்ணை திருப்பினால் 17 ஆகிறது” என்று வேடிக்கையாய் பதில் உரைத்தார்! ஆயினும் அவ்வயதில் நான் சபாபதி முதலியாராக நடித்தது எனக்குத் திருப்தியாய் இல்லை. ஆயினும் நாடகத்திற்கு வசூல் மாத்திரம் 2000 உரூபாய்க்கு மேல் வந்தது. இது தான் சந்தோசம்.

1941-ஆம் வருசம் அண்ணாமலை சருவகலாசாலையார் என்னை நாடகக் கலையைப்பற்றி மூன்று சொற்பொழிவுகள் செய்யும்படிக் கேட்டனர் அதற்கிணங்கி இவ்வருசம் ஆகத்து மாதம் அண்ணாமலை நகருக்குப் போய் நாடகக் கலையைப்பற்றி சொற்பொழிவுகள் செய்தேன்.

1945-ஆம் வருசம் சென்னையில் தாபிக்கப்பட்ட இந்து மது விலக்கு சங்கத்தின் பொன் விழாவில் வினோத வேசப் போட்டியில் வேடம் தரித்து வெள்ளிப் பதக்கம் பரிசு பெற்றேன். அன்றியும் இவ்வருசம் மார்ச்சு மாதத்தில் 31-ஆந் தேதியிலும் ஏப்பிரல் 1-ஆந்தேதியிலும் தஞ்சை மா நகரில் நடந்த இரண்டாவது நாடகத் தமிழ் மகாநாட்டில் தலைமை வகித்து தலைவர் உரையாகத் தமிழ் நாடகத்தைப்பற்றிச் சொற்பொழிவு செய்தேன். இவ்வருசம் தென்இந்திய உடற்பயிற்சி ஆட்டக்காரர் சங்கத்தின் (சவுத் இண்டியன் ஆத்லெடிக் அசோசியேசன்) கொண்டாட்டத்தில் வினோத வேடம் போட்டியில் வேடம் தரித்துப் பரிசு பெற்றேன். இவ்வருடம் சுகுண விலாச சபையின் தசரா கொண்டாட்டத்தில் ‘மருமகன்’ என்னும் தமிழ் பிரஃகசனத்தில் மருமகனுடைய குமாசுத்தா வேடம் தரித்தேன். மேலும் இச்சமயம் நடந்த இந்தி நாடகத்தில் பெய்லிப் (Bailiff) ஆகவும் காவல் ஆய்வாளராகவும் வேடம் பூண்டேன். மேற்கண்ட பல சிறு வேடங்கள் தரித்து நான் நடித்தது, அவற்றில் பெயர் எடுக்கவேண்டுமென்றல்ல. நாடகக் கலையின் சம்பந்தத்தை முதிர் வயதிலும் விட்டுப் பிரிய மனமில்லாமையே ஆகும்,

இவ்வருடம் வானொலி நாடகங்களில் நான்கு முறை பாகம் எடுத்துக்கொண்டேன். அந்நான்கு நாடகங்களும் நான் எழுதிய “சங்கீதப் பயித்தியம், இரசபுத்திர வீரன், மாண்டவர் மீண்டது, இடைச்சுவர் இருபுறமும்” என்பவையாம். இவற்றில் நான் நடித்தது எனக்கு ஒரு கடினமும் தரவில்லை. வேசம் போடாமலே பேசவேண்டிவந்தமையால், ஆயினும் மற்ற நடிகர்களுக்கெல்லாம் ஒத்திகை செய்யவேண்டியவனாய் இருந்தேன். இவ்வருசத்திற்கு முன்பாக ஊர்வசியின் சாபம், லீலாவதி சுலோசனா, சபாபதி முதலிய வானொலி நாடகங்களில் நடித்தேன். இவ்வருசத்திலும் இதற்கு முன்பாகவும் நாடக விசயங்களைப்பற்றி பன்முறை வானொலி மூலமாகப் பேசி யிருக்கிறேன்.

இவ் வருசம் சென்னையிலுள்ள சுழற்சங்கத்தார்(ரோடெரி கிளப்பார்) இந்திய ‘நாடக மேடை’என்னும் விசயத்தைப்பற்றிப் பேசும் படிக் கேட்க, அதற்கிசைந்து அவர்கள் பெரும்பாலோர் ஆங்கிலமே தெரிந்திருந்தபடியால் ஆங்கிலத்தில் சொற்பொழிவு செய்யும்படி நேர்ந்தது. இவ்வருசம் திசம்பர் மாதம் நான் இரண்டு முறை திரைப்படத் தணிக்கைச் சங்கத்தில் ஒருவனாக அரசாரால் நியமிக்கப்பட்டேன்.

1946 –ஆம் வருசம் சனவரி பிப்பிரவரி மாதங்களில் “மனைவியால் மீண்டவன், சிக்ஃக நாதன்” எனும் நாடகங்களில் முறையே பாகம் எடுத்துக் கொண்டேன். இவ்வருசம் ஏப்பிரல் மாதம் சென்னையில் ஒற்றவாடை நாடகசாலையில் நடந்த தமிழ் எழுத்தாளர் மகா நாட்டில் தமிழ்ப் பத்திரிகைக் காட்சியைத் திறந்துவைத்தேன். அன்றியும் இவ்வருசம் சுகுண விலாச சபையார் தசரா கொண்டாட்டத்தில் கபிர்தாசு என்னும் நாடகத்தில் இராம்சிங்கு வேசம் தரித்தேன்.

1947-ஆம் வருசம் சவுத் இண்டியன் ஆத்லெடிக் அசோசியேசன் கொண்டாட்டத்தின் வேசப் போட்டியில் பரிசு பெற்றேன். இவ்வருசம் எனக்கு 75-ஆவது வருடப் பிறப்பு நாளை சுகுண விலாச சபையார் கொண்டாடி எனக்கு ஒரு வந்தனோபசார பத்திரிகை அளித்தனர். இதை எனது பால்ய நண்பராகிய வி, வி. சீனிவாச ஐயங்கார் அவர்கள் கரத்தினின்றும் பெரும் பாக்கியம் பெற்றேன் கடவுள் கிருபையால். அச்சமயம் சபையார் நடத்திய காலவரிசி என்னும் எனது நாடகத்தில் சுபத்திரையின் வேலையாளாக நடித்தேன்.

இவ்வருசம் வெலிங்குடன் திரையரங்கு சாலையில் வினோத வரியை (Entertainment tax) அரசினர் உயர்த்திய தற்காக ஆட்சேபனை செய்வதற்காக கூடிய கூட்டத்தில் தலைமை வகித்து முக்கியமாக நாடகங்களுக்கு வரியை போடலாகாது என்று பேசினேன். இவ்வருசம் ஏப்பிரல் மாதம் விக்குடோரியா பப்ளிக்கு ஃகாலில் ஆந்திரர்கள் காலஞ்சென்ற சீமான் இராகவாச்சார்லு அவர்களின் உருவப்படத்தைத்திறந்து வைத்தபோது என்னையும் அவரது நட்புத் திறமையைப்பற்றி பேசவேண்டுமென்று கேட்டபோது அவ்வாறே செய்து என் காலஞ்சென்ற நண்பருக்கு நான் செலுத்தவேண்டிய கடனைச் சிறிதளவு செய்தேன். ஏப்பிரல் மாதம் சுகுண விலாச சபையார் தெலுங்கில் நடத்திய துரௌபதி மான சம்ரட்சணம் எனும் நாடகத்தில் பிராதிகாரி என்னும் சிறு வேசம் பூண்டேன். இச்சபையின் இவ்வருசத்திய தசரா கொண்டாட்டத்தில் சகுந்தலை நாடகத்தில் கொத்தவாலாக நடித்தேன். தெலுங்கு பாசையில், இவ்வருடக் கடைசியில் எங்கள் சபையார் நடத்திய ‘நந்தனார்’ எனும் தமிழ் நாடகத்தில் என் பழைய வேடமாகிய கோமுட்டி செட்டியாராக நடித்தேன், இவ்வருசம் சவுத் இண்டியன் ஆத்லடிக் அசோசியேசன் நடத்திய வருடாந்திரக் கொண்டாட்டத்தில் சிரிப்புப் பாட்டுப் போட்டியில் ஒரு பரிசு பெற்றேன். இப்பாட்டு தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மூன்றும் கலந்ததாகும். இதே பாட்டைப் பாடி பல வருடங்களுக்குமுன் சுகுண விலாச சபையார் எற்படுத்திய வினோத வேசப் பார்ட்டியில் அமெரிக்காவிலிருந்து அதைக் காண வந்த லிவர் பிரதர்சு கொடுத்த இரண்டு பரிசுகளில் ஒன்றைப் பெற்றது எனக்கு ஞாபகமிருக்கிறது. 1949-ஆம் வருசம் பச்சையப்பன் கல்லூரியில் நூற்றாண்டு கொண்டாட்டத்தில் ஒரு நாள் நடத்திய சபாபதி நாடகத்தின் நான்காம் பாகத்தில் வேலைக்கார சபாபதியாக நடித்தேன்.

20-2—1949-இல் புரொக்ரெசிவ் யூனியன் பள்ளி மாணவர்கள் எனது மனோகரன் நாடகத்தை செயிண்மேரீசு அரங்கில் ஆடியபோது தலைமை வகித்து சிறுவர்கள் ஆடிய நாடகத்தைத் தக்கபடி புகழ்ந்துரைத்தேன்.

(தொடரும்)

பம்மல் சம்பந்தம்

என் சுயசரிதை