Showing posts with label மறைமலையடிகள். Show all posts
Showing posts with label மறைமலையடிகள். Show all posts

Friday, December 01, 2017

மறைமலையடிகள் 5/5 – கி.ஆ.பெ

     12 நவம்பர் 2017      கருத்திற்காக..


(மறைமலையடிகள் 4/5 – கி.ஆ.பெ . : தொடர்ச்சி)

 

மறைமலையடிகள் 5/5 

நூறாண்டு வாழ்வது எப்படி?’ என்று ஒரு நூலை எழுதி வெளியிட்ட அடிகளார் அவர்கள் 75 ஆண்டுகளில் இயற்கை எய்தினார்கள். அவர்களது உடலை எரியூட்ட ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. அவரது உடலை எரியூட்டாமல் அடக்கம் செய்து ஒரு நினைவுச் சின்னத்தை அங்கு எழுப்ப வேண்டும் என்று அவருடைய மக்கள் மாணிக்கவாசகத்திடமும், திருநாவுக்கரசிடமும் தெரிவித்தேன். அதைக் கேட்டு அவர்கள் வருந்தி
“‘அடிகளாரே தமது உடலைப் புதைக்காமல் எரியூட்ட வேண்டுமென்று கட்டளையிட்டிருக் கிறார்கள் அண்ணா” என்று கதறி அழுதார்கள். நானும் கண்ணிர் சிந்தி சென்னையிலிருந்து அங்கு வந்த முனைவர்(டாக்டர்) மு.வ. உட்பட ஆயிரக்கணக்கான தமிழறிஞர்கள் கண்ணிர் சிந்திக்கதறி அழ, அழ, அவரது உடலுக்கு எரியூட்டப்பட்டது. நானும் கீழ்க்காணுமாறு அழுதேன்:
என்று காண்போம்?
அன்பிற்கோர் நிலைக்களமே! ஆர்வலர்க்கோர்
ஆரமுதே! அடைந்தார் தம்மைத்
தன்பிறவி பெற்ற பயன் தம்மனோர் பெற
என்றும் தகவு கூறி
அன்புருவாய்த் திகழ்ந்துவந்த ஆன்ற பெரும்
மறைமலையே! மணியே! நின்றன்
இன்புருவத் திருபுருவைத் தமிழன்பை
இன் குரலை என்று காண்போம்?
பிறகு என்னுடைய தமிழர்நாடு இதழில் கீழ்க்காணும் பாடல்களைப் பாடி வெளியிட்டேன்.
மலையே! மறையே! மறைமலையே! சாய்ந்தனையோ!
கலையே! அறிவே! கடலே மறைந்தனையோ!
தலையே! தமிழே! தவமே அழிந்தனையோ!
இலையே! என நாங்கள் ஏங்கியழிப் போயினையோ!

தமிழும் அலறியழ! தமிழ்த்தாயும் குமுறி அழ!
தமிழிளைஞர் விழ்ந்து அழ தமிழ்ப்புலவர் புலமைஅழ
தமிழ்நாடு இழந்துஅழ தமிழ் நூல்கள் தனித்து அழ
தமிழ்த்தலைவா போயினையே! தமிழ்ளங்கு போய்ச் சேரும்?
நீசாய்ந்தாய் என்றாலும் நினதுநெறி சாயவிலை
நீமறைந்தாய் என்றாலும் நின்தொண்டு மறையவிலை
நீ அழிந்தாய் என்றாலும் நின் நூல்கள் அழியவிலை
நீஒழிந்தாய் என்றாலும் நின்நாடு ஒழியவிலை!
அன்பும் அறமும் அறிவும் அருந்தமிழும்
என்பும் உருகும் இன்குரலும் நற்பண்பும்
இன்சொல்லும் ஏற்காது இழிந்த தமிழ்நாட்டில்
இன்றுவரை வாழ்ந்துவந்த தெண்ணுங்கால்வியப் பன்றோ?
பெரியாரைப் போற்றும் பெருங்குணத்தை இழந்துவிட்டு
சிறியாரைப் போற்றிச் சீரழியும் தமிழ்மண்ணில்
உரியார் புதைப்பர் என ஒர்ந்தும் அதற்கொப்பாமல்
எரிக்க உடலை, எலும்பெறிவிர் கடலினுக்கு என்றாய் அந்தோ!
தமிழ்ப்பகையை ஒழிக்காமல் தமிழ் அன்பையே ஒழித்தோம்
தமிழ்க்குறையை அழிக்காமல் தமிழ் நிறைவைத்தான் அழித்தோம்
தமிழ்மொழியை தமிழ் அறிவை தமிழ்க்கடலை வாழவைத்துத்
தமிழ் வாழ்வு வாழாமல் தமிழ் எரித்து வாழ்கின்றோம்!
  பல்லாவரத்திலுள்ள அவரது நூல் நிலையத்தை நான் பல முறை பார்த்திருக்கிறேன். நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் அவரது குறிப்புகள் இருக்கும். இதனால் அவர் அத்தனை நூல்களையும் படித்து நன்கு ஆராய்ந்திருக்கிறார் என்ப்து தெரியவரும். அவருக்குப்பின் அது ஒரு பெரிய நூல் நிலையமாக அமையவேண்டுமென்று விரும்பியவர்களில் நானும் ஒருவன். அஃது இப்போது நிறைவேறி இருக்கிறது. சென்னை இலிங்கிச் செட்டித்தெரு 105 ஆவது எண் உள்ள கட்டடத்தில் மறைமலையடிகளின் நூல்நிலையம்* நன்கு அமைக்கப் பெற்றிருக்கிறது. வெளியூரிலிருந்து சென்னைக்குச் செல்லும் ஒவ்வொருவரும் கட்டாயம் கண்டு களிக்கக் கடடியதாக மிகப்பெரிய கட்டடத்தில் மிகப்பெரிய அளவில் அமைந்துள்ளது. இதற்காகப் பெரு முயற்சி எடுத்துக் கொண்ட திரு. வ. சுப்பையா( பிள்ளை) அவர்களைப் பெரிதும் பாராட்டுகிறேன். அடிகளாரின் பிறந்த ஊராகிய நாகப்பட்டினத்தில் மறைமலையடிகளின் உருவச் சிலையொன்று புலவர் கோவை இளஞ்சேரன் முயற்சியால் நல்லதோர் இடத்தில் அமைக்கப் பெற்றிருக்கிறது. இச் சிலைத் திறப்புவிழாவில் தமிழக முதல்வர் முனைவர்(டாக்டர்) கலைஞர் மு. கருணாநிதி தலைமை வகித்தார். நான் சொற்பொழிவு நிகழ்த்தி மகிழ்ந்தேன். தமிழக அரசு சென்னையில் கட்டியுள்ள ஒரு பெரிய பாலத்திற்கு மறைமலையடிகள் பாலம் என்று: பெயரிட்டிருப்பது பாராட்டுதற்குரியது. திருச்சிராப்பள்ளிப் பெரிய கடைவீதியில் வரதராசப் பெருமாள் கோவில் தெருவில் தமிழகப் புலவர் குழு தனக்கென ஒரு பெருங்கட்டடத்தை வாங்கி, அக்கட்டடத்தின் மன்றத்திற்கு மறைமலையடிகள் மன்றம் எனப் பெயரிட்டிருப்பது மகிழ்ச்சிக்குரியது.
 இவை போதா. நாடு முழுவதும் அவரது பெயரால் மன்றங்களை நிறுவியும், நகரம் முழுவதும் அவரது சிலைகளை எழுப்பி வைத்தும் வணக்கம் செலுத்தியாக வேண்டும். வாழட்டும் அவரது புகழ்! வளரட்டும் அவரது தொண்டு!
முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்
எனது நண்பர்கள்

Friday, November 24, 2017

மறைமலையடிகளின் நாட்குறிப்பு விளக்கம் – “வாயுள நாவுள’’ – மறை. திருநாவுக்கரசு


     19 நவம்பர் 2017      கருத்திற்காக..

மறைமலையடிகளின் நாட்குறிப்பு விளக்கம் “வாயுள நாவுள’’

தண்டலம் முதலியாரிடம் ‘கற்றுக் கொள்வன வாயுள நாவுள’’
விளக்கம்
 தண்டலம் முதலியார் என்றது தண்டலம் பாலசுந்தரம் முதலியாரை ஆம். அடிகள் கிறித்துவக் கல்லூரியில் தமிழாசிரியர் பணி ஏற்றுத் தம் குடும்பத்தாருடன், சென்னையிற் குடியேறினார். அடிகளார்க்குச் சென்னை வாழ்க்கை. இனிது இயங்கியதற்குப் பேருதவி புரிந்தவர் இம்முதலியாரேயாவர். இவர் அரசாங்க மொழி பெயர்ப்பாளராய்ப் பணிபுரிந்தவர். சிறந்த குடியில் தோன்றியவர். புலமையறிந்து போற்றும் புலமையர். அடிகளைத் தன் மகனெனக் கொண்டு அவரையும் அவர் குடும்பத்தையும் தம்மில்லத்தே வைத்துச் சில காலம் பாதுகாத்தவர் ‘கண்ணை இமை காப்பதுபோல அடிகள் குடும்பத்திற்குத் தேவையான உதவிகளைச் செய்து வந்தார்.அடிகள் தம் குடும்ப நகைகளை முதலியாரிடம் அடைக்கலமாக வைத்திருந்தார். முதலியாரின் குடும்பத்தாரும் அவரைப் போலவே அடிகள் குடும்பத்தாருக்குப் பேரன்புடன் உதவிகள் செய்த வண்ணமாயிருந்தனர். அடிகள் தம் நாட்குறிப்புகளில் முதலியார்தம் அன்பு, வன்மை, உதவி முதலியவற்றை அவ்வப்போது குறித்துள்ளனர். இம்முதலியாரின் பேரர்தாம், சென்னை மாநகராட்சித் தலைவராய் விளங்கிப் புகழுடன் திகழும் த.(டி.)செங்கல்வராயன் ஆவர்
  அப்பர் தேவாரப் பாட்டொன்றின் முதலடி என்பதற்குப் பஞ்சாட்சரத்தை வாயினாலும், நாவினாலும் கூறுகின்றோர் என்றேன். முதலியாரின் வினா ”‘வாயுள’ என்றாற்போதுமே! ‘நாவுள’ என்று கூற வேண்டியதேன்” என்பதாம்.
மறை. திருநாவுக்கரசு

Friday, November 10, 2017

மறைமலையடிகள் 4/5 – கி.ஆ.பெ.

(மறைமலையடிகள் 3/5 – கி.ஆ.பெ . : தொடர்ச்சி)

மறைமலையடிகள் 4/5 

 45 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை இராயப்பேட்டை பாலசுப்பிரமணிய பக்த சன சபையில் மறைமலையடிகளார்பேசுகின்றபொழுது “கடவுள் நம்பிக்கை வர வரக் குறைந்து வருகிறது. கடவுள் இல்லை என்பவரும் உயிரோடுதான் இருந்து கொண்டிருக்கிறார்கள். நீங்களும் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்” என்று கூறினார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த சிதம்பரம் என். தண்டபாணி(ப் பிள்ளை)யும், ச.ச.(J.S.) கண்ணப்பரும் “பெரியாரைக் கொலை செய்யச் சொல்லி மறைமலையடிகள் மக்களைத் தூண்டுகிறார்” என நீதிமன்றத்தில் ஒரு வழக்கைப் போட்டுவிட்டார்கள்.
 நான் அதுசமயம் பெரியாரோடு சேர்ந்து இருந்து, சீர்திருத்த இயக்கப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததனால், அடிக்கடி ஈரோடு செல்ல நேரிடுவதுண்டு. அப்பொழுது இந்தப் பேச்சைப்பற்றியும், மறைமலையடிகளின் சொந்த வாழ்க்கையைப்பற்றியும் தாக்கி இரண்டு கட்டுரைகள் பெரியாரால் எழுதப்பெற்று அச்சும் கோர்த்துப் பிழை திருத்தத்திற்காக என்னிடம் வந்தன. செய்திகள் என் உள்ளத்தை வருத்தின. “அந்தக் கட்டுரைகளை இப் பொழுது வெளியிட வேண்டாம். அடுத்த வாரம் வெளியிடலாம். அதற்குள் நான் சென்னை போய் வந்துவிடுகிறேன்” என்று பெரியார் அவர்களிடம் தெரிவித்துக் கொண்டேன். அவர்களும் ஒப்புக்கொண்டார்கள்.
  நான் சென்னைக்குச் சென்றதும் திரு. வி. க. அவர்களின் இல்லத்திற்குச் சென்றேன். அவர் என்னைக் கண்டதும் “இப்பொழுதுதான் உங்களைப்பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன். உங்களுக்கு வயது நூறு, விடுதலை திராவிடர்கள் பத்திரிகையில் செய்திகளைப் பார்த்திர்களா? நீங்கள் மறைமலையடிகள் கட்சியா? பெரியார் கட்சியா? இருவரையும் மோதவிட்டு வேடிக்கை பார்க்கப் போகிறீர்களா? அல்லது நீங்கள் தலையிட்டுச் சமரசப்படுத்தப் போகிறீர்களா?” என்று கேட்டார். “உங்களைப் பல்லாவரத்திற்கு(அடிகளாரிடம்) அழைத்துப் போகவந்தேன்” என்றேன். இதைக் கேட்டதும், திரு.வி.க. அவர்கள், “இதைவிட எனக்கு மகிழ்ச்சி தரும் வேலை வேறு இல்லை’’ என்று புறப்பட்டார்கள். இருவரும் பல்லாவரத்திற்குச் சென்று மறைமலையடிகளைக் கண்டோம்.
  எங்களைக் கண்டதும் அடிகளார் ஏதோ துன்பத்திலிருந்து மீண்டவர்போலத் துள்ளி எழுந்து வந்து வரவேற்றார்கள். “அன்று பேசியது என்ன?” என்று வினவினேன். அவர் விளக்கிக் கூறி, “அதற்கு இப்படியொரு பொருளைக் கற்பித்து என்மீது வழக்குத் தொடர்ந்திருக்கிறார்களே” என்று வருந்தினார்கள். உடனே திரு.வி.க. அதற்காகவே என்னை கி.ஆ.பெ இங்கு அழைத்து வந்திருக்கிறார்’’ என்றார். அடிகளார் “நான் என்ன செய்ய வேண்டு’’மென்றார் “இந்தப் பொருள்படும்படி நான் பேசவில்லை என்பதை ஒரு தாளில் எழுதுங்கள்” என்றேன். அடிகளார் என்னையே எழுதச் சொன்னார். நான் திரு.வி.க. அவர்களை எழுதச் சொன்னேன். அவர் அதை மறுத்து அடிகளாரையே எழுதச் சொன்னார்கள். “பெரியாரைக் கொலை செய்யத் தூண்டுவது என்ற பொருளில் நான் அன்று பேசவில்லை’ என்று எழுதினார்கள். அதை நான் பெற்றுக்கொண்டு, அவர்களுக்கு ஆறுதல் கூறி வெளியேறினேன். திரு.வி.க. அப்பொழுதே, “நீங்கள் தமிழிற்கு நல்ல வேலை செய்தீர்கள்” எனப் பாராட்டினார்கள்.
 அக்கடிதத்தைச் ச.ச.(J.S.)கண்ணப்பரிடத்தும், எம். தண்டபாணி(ப் பிள்ளை)யிடத்தும் சென்னையிற் காண்பித்து இந்த வழக்கு இதோடு முடிவடைய வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டேன். அவர்கள் வழக்கைத் திரும்பப் பெற்றுக் கொண்டதுடன், விடுதலைப் பத்திரிகையின் அன்றைய தலையங்கத்தில் ‘மறைமலையடிகளாரின் மன்னிப்பு’ என்ற ஒரு துணைத் தலையங்கம் எழுதி, இச்செய்தியை வெளியிட்டுவிட்டார்கள். இதைக் கண்டதும் பெரியார் ஈ.வே.ரா. அவர்கள் குடியரசுப் பத்திரிகையின் வெளியிட அச்சுக் கோத்து வைத்திருந்த செய்திகளையெல்லாம் போடாமற் கலைத்துவிடச் செய்துவிட்டார்கள். அதுமட்டுமல்ல ச.ச.(J.S.) கண்ணப்பர் ‘மறைமலையடிகளாரின் மன்னிப்பு’ என்று விடுதலையில் தலையங்கமிட்டு எழுதியது தவறு என்றும், அவ்வாறு வெளியிட்டிருக்கக் கூடாது என்றும், அத் தவறுக்காக அடிகளாரிடம் நான் மன்னிப்புக் கேட்கிறேன் என்றும் ஒரு செய்தியை எழுதி குடியரசுப் பத்திரிகையில் வெளியிட்டார்கள். பெரியார் அவர்களின் இந்தப் பெருந்தன்மையைப் பாராட்டி மறைமலையடிகளார் எழுதிய கடிதம் இன்னும் என்னிடத்தில் இருக்கிறது. இந்நிகழ்ச்சிகளையெல்லாங் கண்டு அதிகமாக மகிழ்ந்தவர் திரு.வி.க. அவர்களே.
(தொடரும்)
கி.ஆ.பெ.விசுவநாதம்
எனது நண்பர்கள்

Friday, November 03, 2017

மறைமலையடிகள் 3/5 – கி.ஆ.பெ.

(மறைமலையடிகள் 2/5 – கி.ஆ.பெ . : தொடர்ச்சி)

மறைமலையடிகள் 3/5 

 குறித்த நாளில் திருச்சி மலைக்கோட்டை நூற்றுக் கால் மண்டபத்தில் சைவ சித்தாந்த சபையின் ஆண்டு விழா தொடங்குகின்ற நேரம். எல்லோரும் வந்துவிட்டார்கள். 9.15 ஆகியும் தலைவர் வரவில்லை. கூட்டத்தில் ஒரு பெரிய சலசலப்பு. எல்லோர் கையிலும் துண்டு அறிக்கைகள். அதில் ‘மறைமலையடிகள் ஒரு சைவரா?’ என்ற தலைப்பில் சில கேள்விகள் அச்சிடப் பெற்றிருந்தன. இது வந்திருந்தோர் உள்ளத்தில் ஒரு குழப்பத்தையும், தலைவர் உள்ளத்தில் ஒரு வருத்தத்தையும் உண்டாக்கிவிட்டது. தலைவர் வராமைக்குக் காரணம் அது தான் என அறிந்தேன். துண்டு அறிக்கையை வழங்கியவர் உறையூர் புலவர் பெரியசாமி(ப்பிள்ளை) எனத் தெரிய வந்தது. அவருக்கு உறந்தைப் பெருந்தேவனார் என்ற பெயரும் உண்டு. சைவ மடங்கள் பலவற்றில் அவருக்குச் செல்வாக்குண்டு. உடனே தலைவரிடஞ் சென்று கூட்டத்திற்கு வந்து தலைமை வகித்து விழாவை நடத்திக் கொடுக்க வேண்டுமென்று அழைத்தேன். அவர் உறந்தைப் பெருந் தேவனாரை உங்களுக்குத் தெரியுமா? அவர் இங்கு வந்து துண்டறிக்கையை வெளியிட்டுக் குழப்பத்தை விளைவிக். கிறாரே? இது நல்லதா?’ எனக் கேட்டார். கூட்டத்தில் எதுவும் நடவாது. நீங்கள் தாராளமாக வந்து பேசலாமென வாக்குறுதி அளித்தேன். அடிகளாரும் வநதார்கள். கூட்டம் தொடங்குமுன், ‘இந்த அறிக்கை என்னுடைய அனுமதியின்றி இங்கு வழங்கப் பெற்றிருக்கிறது. இதை வழங்கியவர் யாராயிருந்தாலும் மண்டபத்தை விட்டு வெளியேறி விட வேண்டும்’ எனக் கடுமையான கட்டளையிட்டேன். அவரும் தன் தவற்றை உணர்ந்து அமைதியாக இருந்துவிட்டார். இரண்டு நாட்களும் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
  நான் சைவ சித்தாந்த சபையில் துணையமைச்சராய் இருக்குங் காலத்தில் சமயக் கூட்டம் நடத்தினால், என்னையும் தலைவரையும் தவிர ஏழெட்டுப்பேர் வந்திருப்பார்கள். நாட்டாரய்யா தலைமை வகிக்கும் கடட்டங்களில் இருபது பேருக்குள் வருவார்கள்; சுண்டல் கடலை வழங்கும் கூட்டமாய் இருந்தால்தான் முப்பது, முப்பத்தைந்து பேர் வருவார்கள். அப்படியிருக்க மறைமலையடிகள் தலைமை வகித்த இந்த ஆண்டு விழாவிற்கு நானூறுக்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்தது கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது. அடிகளார் தம் இனிய குரலில் தூய தமிழில் நிகழ்த்திய அந்தத் தலைமைச் சொற்பொழிவு அனைவர் உள்ளத்தையும் மகிழ்வித்தது. இத்தகைய சொற்பொழிவை எவரும் நிகழ்த்த முடியாது என்று அங்கு கூடியிருந்த சைவப்பற்றும் தமிழ்ப்பற்றும் கொண்ட நல்லறிஞர்கள் பலர் சொல்லியது என் காதில் விழுந்தது. மகிழ்ந்தேன்.
  அடிகளார் தம் முடிவுரையில் ” ‘நான் சைவ சமயியா?’ என்று சைவ சமயிகளே ஐயப்படுவது என் மனத்தைப் புண்படுத்துகிறது. பார்வதி குளிக்கச் செல்லும் பொழுது தன் அழுக்கைத் திரட்டி ஒரு பிள்ளையாரைப் பிடித்து வைத்து, யாரையும் உள்ளேவிட வேண்டாமென்று குளிக்கச் சென்றார். பரமசிவம் வந்தார். அவரை உள்ளே போகவேண்டாமென்று பிள்ளையார் தடுத்தார். அவர் மீறி அவர் தலையைக் கொய்துவிட்டு உள்ளே சென்றார். பார்வதி தேவி ‘நான் குளிக்கும் செய்தியைப் பிள்ளையார் சொல்லவில்லையா?’ என்று பரமசிவத்திடம் கேட்டார். பரமசிவம் நடந்ததைச் சொல்லி ‘நம்முடைய பிள்ளையா அது?’ என்று கேட்டார். பார்வதி கலங்கி அழுதார். பரமசிவம் வெளியே சென்று ஒர் இறந்துகிடந்த யானையின் தலையைக் கொண்டு வந்து பிள்ளையார் உடம்போடு இணைத்து உயிர்ப்பித்தார்’ என்று பிள்ளையார் பிறந்த வரலாறு சிவபுராணத்தில் ஒரு வகையாகவும், கந்தபுராணத்தில் ஒரு வகையாகவும், விநாயகர் புராணத்தில் ஒரு வகையாகவும் கூறப்பெற்றிருக்கிறது. இதுபற்றி நான் ஆராயத் தொடங்கினேன். பார்வதி அழுக்கைத் திரட்டிப் பிள்ளையார் பிடித்துவைத்த கதையை என்னால் நம்ப முடியவில்லை. ‘பார்வதியின் உடம்பில் அழுக்கு இருக்குமா? இருந்தாலும் ஒரு பிள்ளையார் பிடிக்கும்.அளவுக்கு இருக்குமா? இதைச் சிந்திக்க வேண்டாமா? இதை நம்பித்தான் ஆக வேண்டுமா? நம்பினால்தான் சைவனா?’ என வினாக்களை அடுக்கிக் கொண்டே வந்து, ‘என் தாய் அழுக்கற்றவள். என் தாய் அழுக்கற்றவள்’ ’’ என இருமுறை கூறினார். அப்பொழுதுதான் எனக்குத் துண்டறிக்கையில் வந்த கேள்விக்குப் பொருள் விளங்கிற்று. இதிலிருந்து அடிகளார் சைவ சமயத்திலும் ஒரு சீர்திருத்தக் கொள்கை உடையவர் என்பதையும். தன் உள்ளத்திற் பட்டதை ஒளிக்காது கூறுகிறவர் என்பதை யும் நன்கறியலாம்.
(தொடரும்)
கி.ஆ.பெ.விசுவநாதம்
எனது நண்பர்கள்

Friday, October 27, 2017

மறைமலையடிகள் 2/5 – கி.ஆ.பெ.

மறைமலையடிகள் 2/5 

  அவரது நூல்களிற் பல தமிழ்ப்பற்றையும் சமயப் பற்றையும் வளர்க்கக் கூடியவை. சில ஆராய்ச்சி அறிவை வளர்க்கக் கூடியவை. அவரது ஆழ்ந்த, அகன்ற நுண்ணறிவைப் பல நூல்களிலும் கண்டு மகிழலாம்.அவற்றுள் சில அவரது அச்சகத்திலேயே அச்சிடப் பெற்றவை. சிலரது நூல்களிற் காணப்படுவதுபோன்ற அச்சுப்பிழைகள் எதையும் அவரது நூல்களிற் காணமுடியாது. அவர் தலைமை வகிக்காத, சொற்பொழிவு நிகழ்த்தாத, தமிழ்க் கழகங்களோ, சைவ சபைகளோ தமிழகத்தில் ஒன்றுகூட இல்லை.
  1914-இல் வடநாடுகளுக்கும், 1915-இல் இலங்கைக்கும் சென்று சமயச் சொற்பொழிவுகளும் தமிழ்ச் சொற்பொழிவுகளும் நிகழ்த்தி வந்தார். அவரது பேச்சும் எழுத்தும் இந்தியாவிலும் இலங்கை யிலும் பல புலவர்களை உண்டு பண்ணியிருக்கின்றன. இதனால், அவர் புலவர்க்குப் புலவராக விளங்கி வந்திருக்கிறார். அறுபது ஆண்டுகளுக்கு முன்பு, வடமொழியும் தமிழும் கலந்து பேசுகிற, எழுதுகிற மணிப்பிரவாள நடையே இருந்து வந்தது. அதை மாற்ற, தூய்மைப் படுத்த, அவர் எடுத்துக் கொண்ட முயற்சி, உழைத்த, உழைப்பு முதலியவை எவராலும் செய்ய முடியாதவை. தமிழ் மொழியில் ஒரு தனித் தமிழ் நடையைப் புகுத்தித், தன் காலத்திலேயே வெற்றி கண்ட ஒரு பேரறிஞர். இதனாலேயே தமிழ் அறிஞர்கள் பலர் அவரைத் ‘தனித். தமிழின் தந்தை‘ எனக் கூறுவதுண்டு. எனக்கு அவரது நட்பு ஐம்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பே கிடைத்தது. அஃதாவது 1921இலேயே கிடைத்தது. திரிசிரபுரம் சைவ சிந்தாந்த சபையின் துணையமைச்சராய் நான் பணி புரிந்தபோது நெருங்கிப் பழகும் வாய்ப்பும் கிடைத்தது. அவரோடு சில மணித் துளிகள் பேசிவரும் பொழுதெல்லாம் ஒரு பெரிய நூலைப் படித்து முடித்த அளவுக்கு மகிழ்ச்சி உண்டாகும்.
  திரிசிரபுரம் சைவ சித்தாந்த சபையில் ஆண்டு விழா வொன்றை மலைக்கோட்டை நூற்றுக்கால் மண்டபத்தில் நடத்தினேன். அதற்கு அவரைத் தலைமை வகிக்க அழைக்கப் பல்லாவரத்திற்குச் சென்றிருந்தேன். அவர், அச்சடித்து வைத்திருந்த பட்டியலொன்றை என்முன் நீட்டினார். அதைக் கண்டு பயந்து போனேன். அதில், அவர் தங்குமிடம் எப்படியிருக்க வேண்டும் என்பதும், படுக்கும் அறையில் இருக்க வேண்டிய பொருள்களும், காண வருவாரிடத்து இருக்க வேண்டிய பொருள்களும், இறை வழிபாட்டு அறையில் இருக்க வேண்டிய பொருள்களும், சமையலறையில் இருக்க வேண்டிய பொருள் களும் குறிக்கப் பெற்றிருந்தன. அவற்றுள்ளும் தண்ணீர் கலவாத ஆவின்பால் காலையில் காற்படி, மாலையில் அரைப்படி. நாலரை அங்குல சுற்றளவுள்ள எலுமிச்சம் பழம் நாள்தோறும் ஏழு. இரண்டடி நீளத்திற்கு மேற்படாத காய்ந்த வேம்பின் விறகு பன்னிரண்டு. முனை முறியாத பச்சரிசி, புளிப்பில்லாத தயிர், பச்சை மங்காத காய், அப்பொழுதே பிடுங்கிய கீரை என இவ்வாறு எழுதப்பெற்றிருந்ததோடு, இருக்கும் பலகையின் நீளமும், அகலமும், உயரமும், பூசைப் பொருள்களின் எண்ணிக்கையும், அவற்றின் அளவுகளும், கீழே விரிக்கும் விரிப்புகளின் எண்ணிக்கையும், அகலமும், நீளமும் குறிக்கப்பெற்றிருந்தன. இளமை முறுக்கினால் எதையும் செய்து முடித்துப் பழகிய பழக்கத்தினால் இவையனைத்தையும் தவறாது வழங்குவதாக வாக்களித்துவிட்டு, ‘வழிச் செலவுகளுக்கும் சேர்த்து இருநூறு வெண்பொற்காசுகள் கேட்கிறீர்களே? இவ்விதமானால் தங்களை அழைத்துத் தமிழ்த் தொண்டும் சைவத்தொண்டும் செய்ய என்னைப் போன்று எத்தனை பேர் முன் வருவார்கள்?’ என்று வருந்திக் கேட்டேன். அதற்கு அவர் ” ‘தா,தை’ என்று கூத்தாடுகிறவர்களிடம் இக்கேள்வியைக் கேட்பதில்லை. நான்கைந்து பாடல்களைப் பாடம் பண்ணி வைத்துப் பாடுகிறவர்களிடம் இக்கேள்வியைக் கேட்பதில்லை. அவர்களுக்கெல்லாம் ஆயிரக்கணக்கில் அள்ளிக் கொடுக்கின்ற தமிழகம், தமிழ்ப் புலவர்களிடத்தில் மட்டுமே இக்கேள்வியைக் கேட்கிறதே. இஃது ஏன் தமிழைப் படித்தீர்கள்? என்று கேட்பதுபோல் இருக்கிறது” என்றார். அதையும் வழங்குவதாக ஒப்புக்கொண்டு வந்து, அவர் குறித்த அத்தனை பொருள்களையும், அகலம், நீளம், உயரம், அளவு, எண்ணிக்கை, எடை தவறாமல் வாங்கி வைத்து விட்டேன். இதற்கு எனக்கு ஆறு நாட்கள் பிடித்தன. அவர் இரண்டு நாள் தங்குவதற்காகக் கேட்டிருந்த அமைப்பில் திருச்சிராப்பள்ளியிலேயே வீடுகள் இல்லை. இருந்த இரண்டொரு வீடுகளும் காலியாக இல்லை. அளவு கடந்த முயற்சி எடுத்து அதையும் கண்டு பிடித்து வழங்கி, ஒரு பெரிய போரில் வெற்றி பெற்றதைப் போன்று மகிழ்ந்தேன்.
(தொடரும்)
கி.ஆ.பெ.விசுவநாதம்
எனது நண்பர்கள்

Wednesday, October 18, 2017

மறைமலையடிகள் 1/5 – கி.ஆ.பெ.


 

மறைமலையடிகள் 1/5 – கி.ஆ.பெ.

மறைமலையடிகள்
சுவாமி வேதாசலம் என்கிற பல்லாவரம் உயர்திரு மறைமலையடிகள்
தமிழ்த்தாயின் தவமகன்.
பிறப்பு : 1876இல்
பிறந்த நாள் : சூலை 15
பிறந்த ஊர் :  காடம்பாடி
வட்டம் : நாகப்பட்டினம்
தந்தையார் பெயர் : சொக்கநாதப்பிள்ளை
இளமைப் பெயர் : வேதாசலம்
 படித்த கல்லூரி : நாகை வெசுலி மிசன்
 சைவ ஆசிரியர் :  சோமசுந்தர(நாயக்க)ர்
பொதுத் தொண்டு : 16ஆம் ஆண்டில்
முதல் தோற்றம் : இந்து மதாபிமான சங்கம்
திருமணம் : 17ஆம் ஆண்டில்
 படிப்பு முடிவு : 1894இல்
நட்பு : பேராசிரியர் சுந்தரம் பிள்ளை
தமிழாசிரியர் வேலை :  சென்னை கிறித்துவக் கல்லூரி
ஆசிரியராக அமர்ந்தது : 1898இல்
ஞானசாகரம் தொடங்கியது : 1902இல்
சைவ சித்தாந்த சமாசம் தொடங்கியது : 1905 இல்
கல்லூரியை விட்டது – : 1911இல்
அப்போது ஆண்மக்கள் நால்வர்; பெண் மக்கள் மூவர்
துறவு பூண்டது : 1911 ஆகத்து
பல்லாவரம் குடியேறியது : 1916இல்
பொதுநிலைக்கழகம் தோற்றியது : 1917இல்
யாழ்ப்பாணம் சென்றது : 1921இல்
திருவாசகவுரை வெளிவந்தது : 1926இல்
மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் வெளிவந்தது : 1929இல்
புலமை : ஆங்கிலம், தமிழ், வடமொழி
பயிற்சி : மூச்சுப்பயிற்சி, அறிதுயில் பயிற்சி (யோகாப்பியாசம், இப்னா டிசம்) கொள்கை : தமிழே சிவம்
தொண்டு : 60 ஆண்டுகள்
எழுதிய நூல்கள் : 50க்குமேற்பட்டன.
இவை, அவரது வரலாற்றை அறிவிக்கப் போதுமானவை,
(தொடரும்)
கி.ஆ.பெ.விசுவநாதம்
எனது நண்பர்கள்