Showing posts with label வாழ்க்கை வரலாறு. Show all posts
Showing posts with label வாழ்க்கை வரலாறு. Show all posts

Saturday, July 29, 2017

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙீ) – இலக்குவனார் திருவள்ளுவன்



அகரமுதல 196,  ஆடி07, 2048 / சூலை 23, 2017


தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙீ)

பேராசிரியர் இலக்குவனாரின் உழைப்பால் மக்களிடையே ஏற்பட்ட தமிழுணர்வை அறுவடை செய்து ஆட்சிக்கட்டிலில் ஏறிய தி.மு.க. ஆட்சியிலும் இதே அவலம்தான் தொடர்ந்தது. 1968இல் சென்னையில் நடைபெற்ற உலகத்தமிழர் மாநாட்டிலும்,
தமிழ்மொழிப்பற்றும் தாங்கிய புலமையும்
 இல்லோரெல்லாம் இனிதிடம் பெற்றனர்
எம்போன்றோரை எள்ளியே தள்ளினர்
எனப் பேராசிரியர் இலக்குவனார் வருந்தும் அளவிற்குத் தமிழ்ப்பகைவர்க்கு முதன்மை அளிக்கப்பட்டது. பகைவரையும் நட்பாக்க வேண்டும் என உணர்ந்தவர்கள் அன்பர்களின் சிறப்பைப் புறக்கணிக்கும் போக்கு இருந்தது. இருப்பினும் கட்டணம் செலுத்திப் பேராளராகப் பங்கேற்றுத் தமிழுக்கு எதிரான கருத்துகளைத் தமிழ்ப்பகைவர்கள் ஒலிக்கும் பொழுதெல்லாம் எதிர்த்து முழங்கிய அரிமாவாகப் பேராசிரியர் இலக்குவனார் திகழ்ந்தார். குறிப்பாகப் பிரான்சு நாட்டின் பேராசிரியர் ழீன் பிலியோசா இந்தியா முழுவதும் ஆரியம் பொதுமொழியாக இருந்ததாகத் தவறான கருத்து தெரிவித்தபொழுதும் ஐராவதம் மகாதேவன் கி.மு. முதல் நூற்றாண்டில்தான் தமிழ் எழுத்து வடிவம் கண்டது என வடிகட்டிய பொய்யை உதிர்த்த பொழுதும் பேராசிரியரின் கருத்துச் சம்மட்டிகள் அவற்றைத் தவிடுபொடியாக்கின எனலாம். தமிழ் மாநாடுகளின் நிலை குறித்த பேராசிரியரின் படப்பிடிப்பு வருமாறு:

 இன்தமிழ் பற்றி எவரும் எதனையும்
 துணிந்து கூறுவர்; பணிந்து கேட்டிடத்
 தமிழரும் உண்டு, தமிழறி வின்மையால்.
 தமிழ் பழித்தோனைத் தாய் தடுத்தாலும்
 விடேன் எனும் வீறுவிட்டே வாழ்வோர்.
 உண்மை வரலாறு ஓர்ந்து அறியாப்
 புல்லறி வுடையோர், புதிய கருத்தென
 இன்றமிழ் நூல்கள் எழுந்த காலத்தைப்
 பின்னே தள்ளிப் பெருமை அடைவர்!
 பட்டமும் பதவியும் பாரில் பெறுவர்!
 சான்றுகள் காட்டி ஆன்ற உண்மையைச்
 சாற்றும் புலவரைத் தூற்றி ஒதுக்குவர்!

இன்றைக்கும் இந்த நிலையே மேலோங்கி உள்ளமையால்தான் தமிழுக்காகக் குரல் கொடுப்போர் யாருமிலர் என்னும் அவலமும் மேலோங்குகிறது.
இதற்கிடையில் கல்வியமைச்சராக இருந்த நாவலர் நெடுஞ்செழியன் தமிழ்ப்பயிற்று மொழிக்கு எதிராகப் பேசியதால், “அவர் தமிழ் நாவலரா அல்லது  ஆங்கிலக்காவலரா” எனப் பேராசிரியர் இலக்குவனார் கேட்டது அவரிடம் நடுநிலை பிறழும் உணர்வை ஏற்படுத்தியது.  நாவலர் உரைகளை ஆங்கில இதழிலும் வெளியிட்டு அவர் கருத்தைப் பரப்பிய பேராசிரியர் இலக்குவனார் தமிழ்நலம் சார்ந்து கூறிய கருத்தைத்  தனக்கு எதிரானதாக எண்ணி அவருக்கு இடையூறு தந்தார். பேராசிரியர் இலக்குவனார் மதுரைத்தியாகராசர் கல்லூரியில் பணியாற்றிய பொழுது அங்குள்ள மாணவர்கள் நாவலரை விழா ஒன்றிற்கு அழைக்க இருந்தனர். கல்லூரி முதல்வர் இசைவு தராமல் தடுத்து விட்டார். பேராசிரியர் இலக்குவனார்,  மாணவர்கள் கருத்தைக் கேட்கும் உரிமையைப் பறிக்கக் கூடாது என்றும் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்பதால் எல்லா வகைச் செய்திகளையும் கேட்கும் வாய்ப்பை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் நல்ல பேச்சாளர்கள் அரசியல்வாதிகளாக உள்ளமையால் அவர்களைப் புறக்கணிக்க இயலாது என்றும் கூறி நாவலரைக் கல்லூரிக்கு அழைக்கச் செய்தார். யார் வருகைக்கான தடையை நீக்கப் பேராசிரியர் முனைந்து வெற்றி கண்டு வரச் செய்தாரோ, அந்த நாவலர்தாம் பேராசிரியர் இலக்குவனார் தமிழகக் கல்லூரிகளில் பணியாற்றுவதை விரும்பவில்லை. அவர் எண்ணியிருந்தால் ஒருநாளிலேயே பேராசிரியர் இலக்குவனாரின் பணிச்சிக்கல் தீர்ந்திருக்கும்.
  தமிழன்பர்கள் சிலர், மொழிபெயர்ப்பு நூல்களுக்குப் பரிசளிக்கும் திட்டம் அல்லது நிதிஉதவித்திட்டம் மூலம் ஐந்தாயிரம் உரூபாய் நிதி உதவி கிடைக்கும் என்று பேராசிரியரிடம் கூறி விண்ணப்பிக்க வேண்டினர்.  பேராசிரியர், தாம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த தொல்காப்பிய நூலுக்கான நிதி உதவி  வேண்டினார். உரிய பரிந்துரையுடன் கல்வியமைச்சருக்குக் கோப்பு சென்றது. “நிதி உதவி கிடைக்கும். நூல்வெளியீட்டுக் கடனை அடைக்கலாம்” என எண்ணினார் பேராசிரியர். விதி வகை இல்லாவிட்டாலும்கூட இத்தகைய மொழிபெயர்ப்பை ஊக்கப்படுத்தித் தமிழின் பெருமையை அயல் மொழிகளில் எடுத்துரைக்கப் புலவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் அரசு. ஆனால், கல்வியமைச்சரோ, “நம்மைக்கேட்டா எழுதினார்? அவரே நூலகங்களில் வைத்திட முயலட்டும். அவர்க்கு உதவி தேவை  யில்லை” எனப் பரிந்துரையை ஏற்காமல் மறுத்து எழுதியதால் அத்தொகை கிடைக்கவில்லை.
 பேராசிரியரின் தொல்காப்பிய ஆங்கில மொழி பெயர்ப்புத் திறனாய்வு நூலுக்குப் பேரறிஞர்தான் அணிந்துரை வழங்கியிருந்தார். சென்னையில் உலகத்தமிழ்மாநாடு நடைபெற்ற பொழுது இதற்கெனத் தனி அமர்வை ஒதுக்கினார். (ஆனால் இந்நிகழ்ச்சியுடன் தமிழகப்புலவர்குழு வரவேற்பையும் இணைத்ததால் நிகழ்ச்சி திட்டமிட்டவாறு அமையாமல் திசை திரும்பியது.) ஒருபுறம் முதல்வர் இந்நூலைச் சிறப்பிக்கும் வகையில் தாம்போகும் வெளிநாடுகளில் இதனை வழங்குகின்றார். மறு புறம் அனைத்துக் கல்வி நிலையங்களையும் நூல்நிலையங்களையும்  வாங்குமாறு ஆணையிடும் அதிகாரத்தில் உள்ள அமைச்சரோ மொழி பெயர்ப்பு நூல்களுக்கு உள்ள நிதிஉதவியைக்கூடத் தர மறுக்கிறார். இவ்வாறு, தமிழின் பேரைச் சொல்லித் தகுதிகள் பெற்றவர்கள் தமிழ்நலம் நாடாமலும் நன்றி கொன்றும் நடக்கும் போக்கால் வருந்திய பேராசிரியர் இந்நிகழ்வு குறித்துப் பின்வருமாறு நாட்குறிப்பில் குறித்துள்ளார்:

(தொடரும்)
– இலக்குவனார் திருவள்ளுவன்

Saturday, March 18, 2017

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙை) – இலக்குவனார் திருவள்ளுவன்




[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙே) – தொடர்ச்சி]

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙை)

இதழாயுதம் ஏந்திய போராளி – தொடர்ச்சி
  “பேராசிரியர் இலக்குவனார் இலங்கைத் தமிழர் நலன் குறித்து அப்பொழுதே பேசினார். வரைபடம் ஒன்றில் இலங்கையில்  தமிழர்பகுதியைத் தனியாகக் காட்டிப்  புத்தகம் ஒன்றில் வெளியிட்டார். திருச்சி வானொலி உரை ஒன்றில், இலங்கையில் உள்ள தமிழர்கள் தன்னுரிமையுடன் வாழ்ந்தால்தான் அவர்கள் அங்கே உரிமையுடன் நிலைத்து வாழ முடியும் என்றார். அக்காலக்கட்டத்தில் இலங்கைக்குச் செல்ல அழைப்பு வந்தபொழுது இவர் வந்தால் இலங்கை இரண்டாகும் என்று காரணம் சொல்லி இலங்கை நுழைவுரிமையை மறுத்து விட்டது”
என்றார். ஓர் உண்மையான தலைமைப் போராளியால்தானே  விடுதலை வேட்கையைத் தொலைநோக்குக் கண்ணோட்டத்துடன் கணிக்க இயலும். இந்திய அரசு தன் நாட்டு நலனுக்காக இலங்கைத் தமிழர்களைப் பலி கொடுக்கும் என்று எழுதியும் பேசியும் வந்தவரல்லவா? அவரது முன் விழிப்புணர்வை நாம் சரியாகப் பயன்படுத்தாததால்தானே ஈழத்தில் இன்றைய  இனப்படுகொலைகள் பெருமளவு பெருகி நம் ஆருயிர் தமிழர்களை இழந்து வருகிறோம்.
  பணி இல்லாத பொழுதும் மனச்சான்றுக்கு ஏற்ப நேர்மையாய் வாழ்ந்த பேராசிரியரின் சால்பிற்குச் சான்றாகவும் ஒரு நிகழ்ச்சியைத் திரு முருகு பாண்டியன் தெரிவித்தார்.
 “ஐந்தாம் படிவம்(பத்தாம் வகுப்பு)வரைதான் பள்ளியில் நடத்தப்பட்டது. பேராசிரியர் இலக்குவனார் வந்த பின்புதான் பள்ளி இறுதி வகுப்பு எனப்படும் (ஆறாம்படிவ)பதினொன்றாம் வகுப்பிற்கான  இசைவைப் பெற்றார். இதுவும் மக்கள் நலனையே நாடும் அவரது உயரிய பண்பைக் காட்டும். அப்பொழுது பள்ளிக் கல்வி இயக்குநராக இருந்த தம் நண்பர் திரு நெ.து.சுந்தரவடிவேலு அவர்களைச் சந்தித்துப் பள்ளிக்கு ஆறாம் படிவத்தின் (பதினொன்றாம் வகுப்பின்) தேவையை வலியுறுத்தினார். பேராசிரியர் இலக்குவனார் கல்லூரியில் பணியாற்றுவதற்குரிய முழுத் தகுதி உடையவராக இருப்பினும் பட்டதாரி ஆசிரியர் பயிற்சி பெற்றவர்தான் தலைமை ஆசிரியராக முடியும். பதினொன்றாம் வகுப்பிற்கு இசைவு தந்தால் வேறு ஒருவரைத் தலைமை ஆசிரியராக ஆக்க வேண்டும். பேராசிரியர் இலக்குவனார் இயக்குநர் என்ற முறையில் செயல்பட வேண்டும் என்று இயக்குநர் தெரிவித்தார். விதிக்குக் குறுக்கே தான் நிற்கவில்லை என்றும் பகுதி மக்களின் வளர்ச்சிக்காகக் கட்டாயமாகப் பதினொன்றாம் வகுப்பு தேவை என்றும் சொல்லி இசைவாணை பெற்று வந்தார். வந்த பின்பு பள்ளியை நடத்துவோருக்குப் பெரும் அதிர்ச்சி. பதினென்றாம் வகுப்பு இப்போதைக்குத் தேவையில்லை என்றும் பேராசிரியர் இலக்குவனாரே தொடர வேண்டும் என்றும் வலியுறுத்தினர். பேராசிரியர் இலக்குவனாரோ, இச்செயல் மாணவர் நலனுக்கு எதிரானது எனக் கூறி இதனை ஏற்கவில்லை. பள்ளிக்கல்வி இயக்குநர் கூறியவாறு பள்ளி இயக்குநராகவாவது தொடர வேண்டும் என வேண்டினர். “பள்ளியின் பொருளியல் நிலைக்கு அது வீண் செலவாகும். எனவே, பள்ளி நலனுக்கு எதிராக இச்செயல் அமையும்” என்று பேராசிரியர் இலக்குவனார் மறுத்து விட்டார். தனக்கு வேண்டியவாறு விதிகளை உருவாக்கிப் பதவிகளை அடைவோர் நடுவே நடைமுறை விதிகளுக்கு இணங்கப் பதவியைத் துறந்த பேராசிரியர்போல் ஒரு மாமணியை எங்கும் பார்க்க இயலாது.”
    திருவெறும்பூரில் பணியைத் துறந்த பின் முன்பு விருதுநகரில் தம்மிடம் பயின்ற மாணவர் அழைப்பிற்கிணங்கப் புதுக்கோட்டை சென்றார். அங்குத் தனிப்பயிற்சிக் கல்லூரி எதுவும் இல்லை யாதலின் பேராசிரியர் இலக்குவனார் அதனைத் தொடங்க வேண்டும் என்றே அவர் அழைத்திருந்தார். அப்பணியுடன் வழக்கமான தமிழ்த் தொண்டுகளை ஆற்றவும் பேராசிரியர் இலக்குவனார் தவறவில்லை.
(தொடரும்)
 – இலக்குவனார் திருவள்ளுவன்

Tuesday, January 24, 2017

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙாஙா] – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல 170, தை 09, 2048 / சனவரி 22, 2017

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙாஙா] –

 3. தமிழ்நலப் போராளி – தொடர்ச்சி

 பாவேந்தர் பாரதிதாசன் அவர்களும் பேராசிரியர் இலக்குவனாரும் தமிழ் காக்கும் எண்ணங்களில் ஒன்றுபட்டவர்கள். பாவேந்தரின் தமிழியக்க எண்ணங்களுக்கு வடிவம் தந்தவர் பேராசிரியர்; பாவேந்தர் வகுத்த தமிழ்ப்போராளி இலக்கணத்திற்கு இலக்கியமாகத் திகழ்ந்தவர் பேராசிரியர் எனத் தமிழ் உணர்வாளர்கள் உரைப்பர். அதே நேரம் மூத்த தலைமுறையினர் பேராசிரியரின் வாழ்வுப்பாதையைக் குறியீடாகக் கொண்டு தமிழ்உணர்வுப் பாடல்களைப் படைத்தவர் பாவேந்தர் என்பர். இரண்டிலும் உண்மைகள் உள எனவும் ஆன்றோர் எண்ணத்தால் ஒருவரே எனவும் கொள்ளலாம். இதற்குச் சான்றாகப் பேராசிரியரின் தமிழ் வருகைப் பதிவு குறித்த பாவேந்தரின் பதிவு குறித்துக் காண்போம். நெல்லையில் பேராசிரியரிடம் அப்பொழுது பயின்ற எளிமை ஏந்தல் தோழர் நல்லக்கண்ணு அவர்கள், பேராசிரியர் வருகைப்பதிவின் பொழுது ‘உள்ளேன் ஐயா’ என்று சொல்ல அறிவுறுத்தியது ஓர் இயக்கமாகத் தமிழ்நாடெங்கணும் பரவியது என்கிறார். இதற்குச் சில ஆசிரியர்களிடம் இருந்து எதிர்ப்புகளும் வந்தன. ‘உள்ளேன் ஐயா’ என்று சொல்வதை மறுக்கும் ஆசிரியர்களை மாணவர்கள் எதிர்த்ததுண்டா என்று கேட்டுப் பாவேந்தர் பாரதிதாசன்,
ஆரிய ஆசான் பேரைச் சொல்லி
 அழைக்க அதற்குத் தமிழ்மா ணாக்கன்
 ‘உள்ளேன் ஐயா’ என்றே உரைத்தான்
  ‘அப்படிச் சொல்லல் தப்படா’ என்ற இழிஞனை
எதிர்த்த துண்டா மாணவன்?”
 எனப் பாடிப் பேராசிரியரின் தொண்டினை ஆவணமாக்கி உள்ளார்.
 இக்காலத் தலைமுறையினர் சிலருக்கு ஐயம் வரலாம். பேராசிரியர் சி.இலக்குவனார் கல்வியாளராகத் தம் கடமையை ஆற்றினார்; மாணவர்களை நன்னிலை அடைய உருவாக்கினார்; சில புதிய திட்டங்களை அறிமுகப்படுத்திச் செயல்படுத்தி இருக்கிறார்; இவற்றில் என்ன பெரிய சிறப்பு உள்ளது என்றுகூட அறியாமையால் எண்ணலாம். பேராசிரியர் சி.இலக்குவனார் தம் பணிகளை எளிதில் ஆற்றும் வாய்ப்பான சூழல் இல்லாதபோதும் தன்னலம் நாடாமல் தமிழ்நலம் நாடி ஓயாது அருந்தொண்டுகள் ஆற்றினார் என்பதும்  ஒவ்வொன்றையும் போராடியே செய்து முடித்தார் என்பதும்தான் அவரது போராண்மைக்குச் சான்றாகும். பள்ளியில் தமிழாசிரியராகச் சேர்ந்தது முதலே மாணவர்களுக்குப் பாடம் நடத்தும் பொழுது பாடத்தோடு தொடர்புடைய வேர்ச்சொல் விளக்கங்களை அளித்துத் தமிழின் தூய்மையை விளக்குதல்; பாடங்கள் அடிப்படையில் சீர்திருத்தக் கருத்துகளை உள்ளத்தில் பதிய வைத்தல்; தமிழ்க்காப்பு உணர்வினை விதைத்தல் என அரும்பணியாற்றினார். எனவே, தமிழ்ப்பகைவர்கள் இவருக்கு எதிராகத் தொடக்கம் முதலே செயல்பட்டு வந்துள்ளனர். பணி விலக்கலையும் காவல்துறை நடவடிக்கையையும் வலியுறுத்தி முதலில் குறிப்பிட்டவாறான தொல்லைகள் மூலம், மன உளைச்சலிலாவது தள்ளி அவரின் தமிழ்ப்பணிக்கு முற்றுப்புள்ளி இட வைக்க முயன்றனர். போராளிகளுக்கு எதிர்ப்புகள்தாமே ஊட்டமாக அமையும். எது கண்டும் அஞ்சாமல் பேராசிரியர் தம்  பணியை முன்னிலும் விரைவு படுத்தினார்; தமிழ் உரிமை உணர்வை மாணவர்களிடம் மட்டுமல்லாமல் பொது மக்களிடமும் உண்டாக்கிய போராளியாகத் திகழ்ந்தார்.
 தமிழில் பேசுவதாலும் பிறரைத் தமிழில் பேச ஆற்றுப்படுத்துவதாலும் தம் வருவாயைத் தமிழ்ப்பணிக்கென செலவிடுவதாலும் தமிழாசிரியர் கூட்டமே அவரைப் பிழைக்கத் தெரியாத அப்பாவி என்று கூறி வந்தது. இது குறித்துப் பேராசிரியரே பின்வருமாறு எழுதி உள்ளார்:
  “தமிழரை ஒழிந்த ஏனையோர் எல்லாரும் தம் மொழியாளரைக் காணுங்கால் தம் மொழியிலேயே உரையாடுகின்றனர்.  தமிழர் மட்டும்தான் தம் மொழியை மறந்து ஆங்கிலத்தில் உரையாடுகின்றனர் என்று கூறும் பழிச்சோல் நீங்கிலது. தமிழால் வாழுகின்ற-தமிழைக் காக்க வேண்டிய தமிழாசிரியர்களை  இன்னும் இந்நோய் விட்டபாடில்லை.  ஆங்கிலேயர் ஆட்சியகன்றும் ஆங்கில மொழிச் செல்வாக்கு தமிழாசிரியர்களையும் ஆட்டிப் படைப்பது விந்தையினும் விந்தை. ஆகவே, தமிழ்ப் பேராசிரியனாகிய யான் தமிழுரிமை நாடித் தொண்டாற்ற முற்படுகின்றபோது, அவர் ஓர் அப்பாவி!  பிழைக்கத் தெரியாதவர் என்று பிறர் கூறும் எள்ளல் உரைக்கு இலக்காக நேரிடுகின்றது.
  தமிழாசிரியர் நிலை குறித்துப் பேராசிரியர் தெரிவித்த கருத்தின் மூலம், எத்தகைய சூழலில் அவர் தமிழாசிரியர்களையும் எதிர்த்தே அவர்களின் நலனுக்காகவும் தமிழக நலனுக்காகவும் போராடி வந்துள்ளார் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்