(உ.வே.சா.வின் என் சரித்திரம் 22 தொடர்ச்சி)

என் சரித்திரம்

அத்தியாயம் 14
சடகோபையங்காரிடம் கற்றது

சடகோபையங்கார் மாநிறமுடையவர். குட்டையாகவும் பருமனாகவும் இருப்பார் பலசாலி. அவர் பேசும்போது அவரது குரல் சிறிது கம்மலாக இருக்கும்; ஆனால் பாடும்போது அது மறைந்து விடும். தமிழில் சுவை தெரிந்து படித்தவர் அவர். அவரை ஆவண்ணாவென்று யாவரும் அழைப்பர்.

அவருக்குச் சங்கீதமும் தமிழும் ஒரு தரத்திலே இருந்தன. சங்கீதப் பயிற்சி யுடையவர் தாமும் இன்புற்று மற்றவர்களையும் இன்புறுத்துவ ரென்பார்கள். சடகோபையங்காரிடமிருந்த தமிழானது சங்கீதம் போலவே அவரை முதலில் இன்புறச் செய்து பின்பு மற்றவர்களையும் இன்புறுத்தும்; சில சமயங்களில் கேட்பவர்களுக்கு இன்புறும் தகுதியில்லாமற் போனாலும் அவர் அடையும் இன்பத்திலே சிறிதும் குறைவு வராது.

பாடம் சொல்லுதல்

பாடம் சொல்வதில் அவருக்கு விருப்பம் அதிகம். காலையில் ஐந்து மணிக்கே எழுந்துவிடுவார். நித்திய கர்மானுட்டானங்களை ஒழுங்காகச் செய்வார். பின்பு புத்தகங்களை எடுத்துக்கொண்டு தம் வீட்டு வெளித்திண்ணையின் மேலைக்கோடியில் உட்கார்ந்து கொள்வார். எந்த நூலையாவது படித்து இன்புற்றுக்கொண்டே இருப்பார். அந்த வழியே போவோர் அவரைக் கண்டு வணங்குவார்கள். சிலர் திண்ணையில் வந்து மரியாதையோடு அமர்வார்கள். உடனே சடகோபையங்கார் ஏதாவது தமிழ்ப் பாடல் சொல்ல ஆரம்பித்து விடுவார்; நயமாகப் பொருள் சொல்வார். வந்தவர்கள் கேட்டு மகிழ்வார்கள். அவர் இருக்குமிடம் தேடி வந்து அவருடைய இனிய தமிழ்ப் பிரசங்கத்தைக் கேட்டுப் போவார் பலர். செவ்வைச் சூடுவார் பாகவதத்திலும் அத்வைத சாத்திரத்திலும் அவருக்கு ஆராய்ச்சி அதிகம். கம்பராமாயணத்திலும் நல்ல பழக்கம் இருந்தது. அந்த நூற் செய்யுட்களைச் சொல்லி மணிக்கணக்காகப் பொருள் கூறிக் கொண்டிருப்பார் கேட்பவர்களுக்கு நேரம் போவதே தெரியாது. ஏதோ இனிய சங்கீதக் கச்சேரியைக் கேட்பது போலவே இருக்கும்.

அவரிடம் சிலர் முறையாகப் பாடங் கேட்டு வந்தார்கள். நாள் தவறாமல் திண்ணையில் உட்கார்ந்து வந்தவர்களுக்குப் பாடஞ் சொல்வதில் அவருக்குச் சலிப்பே உண்டாவதில்லை. “கம்பத்தை வைத்துக் கொண்டாவது பாடஞ் சொல்ல வேண்டும். கேட்பவனை மாத்திரம் உத்தேசித்துச் சொல்லக்கூடாது. பாடஞ் சொல்வதனால் உண்டாகும் முதல் இலாபம் நம்முடையது. பாடம் சொல்லச் சொல்ல நம் அறிவு உரம்பெறும்” என்பார். “என் தமையனராகிய நரசிம்மையங்கார் தஞ்சாவூர் சமத்தான வித்துவான்களிடம் கற்றுக் கொண்டார். அவர் தமிழிலும் சங்கீதத்திலும் சிறந்த அறிவு வாய்ந்தவர். கல்வியில் அவர் என்னை மிஞ்சிவிட்டார். இதற்கு என் காரணமென்று கவனித்தேன். அவர் பல சிசுயர்களுக்குப் பாடஞ் சொன்னார். அவர்களைக் கேள்வி கேட்டுக் கேட்டு அவர்களுடைய அறிவை விருத்தி பண்ணியதோடு தம்முடைய கல்வியையும் பலப்படுத்திக் கொண்டார். இந்த நுட்பத்தை நானும் தெரிந்து கொண்டேன். மாணாக்கர்களைக் கசக்கத் தொடங்கினேன். இதனால் என் தமையனாரைவிட நான் சிறிதளவு உயர்ந்துவிட்டேனென்று கூடத்தோற்றியது” என்று ஒருமுறை அவர் சொன்னதுண்டு.

ஒரு நாள் அவர் தம் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து யாருக்கோ நெடுநேரம் பாடஞ் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது நாங்கள் குடியிருந்தது எதிர் வீடு. வழக்கமான குரலில் அவர் பாடஞ் சொல்லாமல் சற்று இரைந்து சொல்லிக்கொண்டிருந்தார். இடையே சிறிதும் தடையில்லாமல் அவர் சொல்லி வந்தபோது எங்கள் வீட்டுக்குள் இருந்த எனக்கு ஒரு சந்தேகம் உண்டாயிற்று; “இவர் யாருக்குப் பாடஞ் சொல்லுகிறார்? கேட்பவர் நடுவில் சந்தேகம் ஒன்றும் கேட்க மாட்டாரா?” என்று எண்ணி எட்டிப் பார்த்தேன். எனக்குப் பெரிய ஆச்சரியம் உண்டாயிற்று. கோபாலசாமி ஐயங்காரென்ற ஒருவர் சடகோபையங்காருக்கு முன் உட்கார்ந்திருந்தார். உட்கார்ந்திருந்தாரென்று மட்டும் சொல்லலாமேயன்றிப் பாடங் கேட்டாரென்று சொல்ல இயலாது அவர் முழுச் செவிடர். சடகோபையங்காருக்கும் அந்த விசயம் தெரியும். அப்போது, ‘கம்பத்தை வைத்துக்கொண்டாவது பாடஞ் சொல்ல வேண்டும்’ என்று அவர் சொன்னது எனக்கு ஞாபகம் வந்தது. கம்பமாயிருந்தாலென்ன? செவிடராயிருந்தாலென்ன?

செய்யுட்களும் கீர்த்தனங்களும்

ஐயங்கார் பல செய்யுள் நூல்களையும் தனிப்பாடல்களையும் கீர்த்தனங்களையும் இயற்றியிருக்கின்றார். சிரீவைணவராயினும் அவருக்கு அத்வைதக் கொள்கையிற் பற்று அதிகம். தெய்வ வழிபாட்டில் அவர் சமரசமான நோக்கமுடையவர். விநாயகர், சிவபெருமான், அம்பிகை முதலிய தெய்வங்களின் விசயமாக அவர் பல செய்யுட்களையும் கீர்த்தனங்களையும் இயற்றியிருக்கிறார். இராமாயண வண்ணம், இராமாயணச் சிந்து, சீவப்பிரம்ம ஐக்கிய சரித்திரம் முதலிய நூல்களை அவர் பாடினர். ஐந்து கன ராகங்களில் பஞ்சரத்தினக் கீர்த்தனங்களை அவர் இயற்றியிருக்கின்றார். 

அக்காலத்தே கோயில்களை நிருவாகம் செய்வதற்கு நூதனமாகத் தருமகருத்தர் நியமிக்கப்பட்டனர். ஒரு கோயிலை நிருவாகம் செய்துவந்த தருமகருத்தர் ஒழுங்காக அதனைக் கவனிக்கவில்லை. அதை உணர்ந்த சடகோபையங்கார் அத்தகையவர்களைப் பரிகசித்து ‘பஞ்சாயத்து மாலை’ என்ற ஒரு செய்யுள் நூல் இயற்றினார். அதில் தருமகருத்தர்களுடைய ஒழுங்கீனமான செயல்களைப் புலப்படுத்தினார். தருமகருத்தர்களைப் பஞ்சாயத்தா ரென்றும் சொல்வ துண்டு.

கல்வி இன்பமும் வறுமை நிலையும்

கல்வியின்ப மொன்றையே பெரிதாகக் கருதி வாழ்ந்த அவர் வறுமைநிலையில்தான் இருந்தார். அதனால் அவர் மனம் சலிக்கவில்லை. அரியிலூர் சமத்தானத்தில் நிலை வர வர சீணமடைந்தமையால் அவருக்கு அதன் ஆதரவு குறைந்து போயிற்று தம் சிசுயர்களது உதவியைக்கொண்டே அவர் சீவனம் செய்து வந்தார்.

குளிருக்குப் போர்த்திக்கொள்ளத் துப்பட்டி இல்லை. அதற்காக மல்லூர்ச் சொக்கலிங்கம் பிள்ளை என்பவருக்கு ஒரு பாட்டு எழுதி அனுப்பினார்.

“துப்பட்டி வாங்கித் தரவேண்டும் இலிங்க துரைசிங்கமே”

என்பது அதன் இறுதி அடி. அந்தக் கனவான் ஒன்றுக்கு இரண்டு துப்பட்டிகளை வாங்கி அனுப்பினார்.

(தொடரும்)

என் சரித்திரம்.வே.சா.