Wednesday, May 12, 2021

அசுவகோசரின் புத்தசரிதம் பேரிலக்கியமன்று! – ப. மருதநாயகம்

 அகரமுதல


(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 43/69  இன் தொடர்ச்சி)



தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

44/69

 

வடமொழி ஒரு செம்மொழியா?(2020) (தொடர்ச்சி)

ஆறாவது கட்டுரை அசுவகோசரின் புத்தசரிதம் குறித்தது.

அசுவகோசர் சமற்கிருதத்தில் எழுதிய 28 காண்டங்கள் கொண்ட புத்த சரிதத்தில் இப்பொழுது 14 காண்டங்கள்தாம் கிடைக்கின்றன. எஞ்சிய பதினான்கும் சீன, திபேத்திய மொழிகளில் மட்டும் கிடைப்பதால் அவை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இந்நூலில் புத்த சமயம் புறக்கணித்த மகாபாரத, இராமாயணக்கதைகள் பெரிதும் சுட்டப்படுகின்றன. ஒழுக்கத்திற்குத் தலையாய இடம் தரவேண்டுமென்ற புத்தரின் வரலாற்றில் பல இழிகாம(ஆபாச)க்கதைகள் புகுத்தப்பட்டிருக்கின்றன. கண்டிக்கப்பட வேண்டிய, பிறன்மனை நயந்த கயவர்களெல்லாம் பெரியோர்களாகப் பேசப்படும் கதைகள்  பின்பற்றப்படவேண்டிய சான்றுகளாகக் காட்டப்படுகின்றன. புத்தர் காலத்திற்குப் பிற்பட்டது இராமனின் காலம் எனஅயோத்திதாசர் முதலானவர்கள் நிறுவியுள்ளனர். ஆனால், இராமாயணப்பாத்திரங்களும் நிகழ்ச்சிகளும் புத்த சரிதத்தில் இடம் பெறுகின்றன.

அமரபாலி என்னும் பரத்தைக்குக் கெளதமர்  அறிவுரை கூறும் காண்டத்தில் புத்தத்திற்கு எதிராகப் பெண்களை இழித்துப் பேசும் கருத்துகள் உள்ளன. பெண் அனித்தியமானவள்,பாம்பைப் போன்று துன்பம் தருபவள், தன்னுணர்வு அற்றவள், தூய்மை கெட்டவள், இளம்பெண் அறநெறி யற்றவள், என்பனபோன்ற பல கருத்துகள் சொல்லப்படுகின்றன. மனுநீதி முதலான பின்வந்த சமற்கிருத நூல்களில் உள்ளவை எல்லாம் இதில் காணப்படுகின்றன. புத்தரைப் பிராமண மதகுருபோல் பல இடங்களில் காட்டுகிறார். இவ்வாறாகப் பலவற்றையும் எடுத்துக் கூறுகிறார் பேரா.ப.ம.நா. வேசப்பிராமணர்கள் எழுதியவற்றைப் பொய்வரலாறு என நீக்க வேண்டும் என அயோத்திதாசரின் ‘ஆதிவேதம்’ கூறுவதுபோல்   அசுவகோசரின் புத்தசரிதமும் நீக்கப்படவேண்டியதே என்கிறார்.

‘புத்தசமய வடமொழி நூல்கள்’ என்பது ஏழாம் கட்டுரையின் தலைப்பு.

சாதகமாலா, சுபசிதா, பாரமிதாசமாசா, மகா வத்து, இலலித வித்தரா, நிதானகதா, புத்தானுசுமிருதி, தேததானுசுமிருதி, உலோகானந்தா, நாகானந்தா, சிசுயலேக தருமகாவியா முதலான நூல்களைப்பற்றி இக்கட்டுரையில் காணலாம். பல நூல்கள் புத்தசமயக் கலப்பு சமற்கிருத(Buddhist Hybrid Sanskrit) மொழியில் எழுதப்பட்டவை. எல்லாம் இடைச்செருகல்கள் கொண்டவை; புத்த நெறிக்கு மாறான கருத்துகளைக் கூறுபவை. புத்த சமய இலக்கியங்களில் வடமொழியில் உள்ளவையும் வடமொழிக்கலப்பு மொழிகளில் உள்ளவையும் பலவாயினும் அவற்றில் ஒன்றும் மணிமேகலைக்கு ஈடாகாது என்கிறார் பேரா.ப.ம.நா. மேலும், புத்தசமய இலக்கியங்கள் அக்காலக் குமுகாய வாழ்க்கையைப் படம்பிடித்துக் காட்டுவதில் பெறும் வெற்றியைப் பிராமண இல்க்கியங்கள் பெறவில்லை. அறத்தையோ மெய்ப்பொருளையோ கவிதை ஆக்கும் கலையைச் சமற்கிருத நூலார் அறிந்திலர் என்பதற்கு எல்லா நூல்களுமே சான்றாகின்றன.

எட்டாம் கட்டுரை அவதான சகம் குறித்தது. இந்நூல் கி.பி.இரண்டாம் நூற்றாண்டில் கலப்பு சமற்கிருத மொழியில் எழுதப்பட்டது. இதில் பத்துப்பத்துக் கதைப்பிரிவுகளைக் கொண்ட நூறு கதைகள் உள்ளன. ஒவ்வொன்றின் தொடக்கம், முடிவுகளில் ஒரேமாதிரியான தொடர்கள் பயன்படுத்தப்படுகின்றன.உரையாடல்கள் சுருக்கமாகவும் தெளிவாகவும் பொருத்தமாகவும் அமைந்துள்ளன. எனினும் இலக்கியத்தரமற்றவையாக உள்ளன. இக்கதைகளுள் பல சிற்சில வேறுபாடுகளுடன் பாலி மொழியில் உள்ளன.

கவிதையிலும் உரைநடையிலும் சொல்லப்படும் அவதானங்களை அடக்கிய பகுதிகள் பல இருப்பினும் அவை யாவும், குறிப்பிடத்தக்க சிறப்பு எதுவும் பெறவில்லை. எனவே, சமற்கிருத இலக்கிய வரலாற்றாசிரியர்கள் இவற்றைப் பட்டியலிடுவதில்லை. ஆகவே, இந்நூலும் செவ்வியல் இலக்கியத்தரமற்றது எனத் தனியே கூறவேண்டிய தேவை இல்லை அல்லவா?

தமிழிலும் இந்தோ ஆரிய மொழிகளிலும் குறிப்பு எனும் உத்தி எவ்வாறு கையாளப்பட்டுள்ளது என்பதை ஒன்பதாம் கட்டுரை விளக்குகிறது.

சங்கப்பாடல்கள் ஈராயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரும் நிலைத்திருக்கக் காரணம் அவை கையாளும் உத்திகளே. அவற்றில் ஒன்று மேலையோரால் குறிப்பு(Suggestion) என்று அழைக்கப் பெறுவதும் ஒன்று. சமற்கிருத நூல்களுடனும் பிற மொழி நூல்களுடனும் தமிழ்ச்சங்கப்பாடல்களை ஒப்பிட்டு, குறிப்பால் பொருள் உணர்த்துவதில் சங்கப்புலவர்களுக்கு ஈடானவர் உலகில் வேறு எம்மொழியிலும் இல்லை என்று பன்மொழி யறிஞர் சியார்சு ஆர்த்து கூறியுள்ளதைப் பேரா.ப.ம.நா. சில பாடல்களை எடுத்துக்காட்டாகக் கூறி இக்கட்டுரையில் விளக்கியுள்ளார். இத்தகைய குறிப்பு உத்தியைத்தான் தொனி என ஆனந்தவருத்தனர் தமது ‘தொனிலோகம்’ என்னும் நூலில் குறிப்பிடுகிறார்.அதற்குச் சமற்கிருதப் பாடல்களையும் சான்றாகத் தருகிறார். ஆனால், அவை யாவற்றையும் விடச் சங்கப்பாடல்களே  தொனிக்கு எடுத்துக் காட்டாகும் என்று மேலை அநிஞர் நிறுவக் காணலாம்.

சமற்கிருத இலக்கியம் அறிந்தோர், அவற்றில் குறிப்பும் படிமமும்(suggestion and symbolism) கவிதை யுத்திகளாகச் சிறப்பாகக் கையாளப்படவில்லை யென்பதை அறிவர் என்று சியார்சு ஆர்த்து கூறுவதை எடுத்துக்காட்டாகத் தருகிறார். சமற்கிருத, பிராகிருத இலக்கியங்களில் இடம்பெறுவதற்கு முன்னரே தமிழில் இடம் பெற்றுள்ளமையால் தமிழ் இலக்கியங்களில் இருந்தே வடமொழி இலக்கியங்களுக்கு இவை சென்றன என்பதே வரலாற்று உண்மை.

தமிழின் உட்பகைவர்கள் ஏற்கெனவே இவ்வுத்தி வடநூல்களில் கையாளப்பட்டுள்ளது என்று அறியாமை காரணமாகவும் கவிதையுணர்வு இல்லாமையாலும் கூறுவதற்கு விடையாக அமையும் வண்ணம் தக்க எடுத்துக்காட்டுப் பாடல்கள் மகாபாரதம், இராமாயணம், புத்த சரிதம் ஆகியவற்றிலிருந்து தரப்படுகின்றன.

சங்கப்பாடல்களில் இறைச்சி, உள்ளுறை மூலம் காட்டப்படும் பொருள்கள் பலவாய் இன்பம் தரக்கூடிய அளவில் உள்ளன. வடமொழி நூல்களில் அத்தகைய பாடல்களைக் காண முடியாது. அவற்றில் காணப்பெறும் வருணனைகளின் செயற்கைகத்தன்மையும் வலிந்து பொருள் கொள்ள வேண்டிய நிலைமையும் நகைப்பிற்குரியன, நயம் பாராட்டத்தக்கன அல்ல என்றும் அந்தப் பன்மொழி அறிஞர் நன்கு விளக்கியுள்ளார்.

தமிழ் அகக்கவிதை மரபுகளும் அணிகளும் இந்தோ ஆரிய மொழிகளில் முதன்முதலாகத் தோற்றம் தருவது சத்தசாயி நூலில்; இது எழுதப்பட்ட மகாராட்டிர மொழி தெற்கத்திய பிராகிருதம் எனப்படும்; இவ்வாறு ஆர்த்து தெரிவிப்பதன் அடிப்படையில், தமிழ்க்கவிதை மரபு மகாராட்டரி பிராகிருதம் மூலமாகக் காளிதாசனுக்கும் பிற வடமொழிக் கவிஞர்களுக்கும் சென்றிருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது.

சத்தசாயி மூலம் வடமொழியில் நுழைந்த தமிழ்க்கவிதை மரபைக் காளிதாசன் முழுக்க முழுக்கப்பயன்படுத்திக்கொள்கிறான் என்பதற்கு ஆர்த்து பல சான்றுகளை அளித்துள்ளார். சத்தசாயியில் இடம் பெறும் வருணனைகளில்கூடக், குறிப்பு, தமிழ் அகஇலக்கியங்களைப் போன்று அவ்வளவு நுட்பமாகக் கையாள்படவில்லை என்பதையும் அவர் தெரிவிக்கிறார். காளிதாசன் தமிழ் அகமரபின் தாக்கத்தைப் பெற்றதற்கும் சான்றுகள் தரப்படுகின்றன.

சமற்கிருத அறிஞரான ஆர்த்து, கிரேக்கம், இலத்தீன் போன்ற செவ்வியல் இலக்கியங்களையும கற்றவர்; சங்கப்பாடல்களுடன் ஒப்பிட்டு, இன்றைய மொழிகளிலும் பிற செவ்வியல் மொழிகளிலும் உள்ள பாடல்களெல்லாம் எவ்வாறு தரத்தால் தாழ்ந்தவை என மெய்ப்பித்துள்ளார். இதனை நமக்குத் தெரியச் செய்வதன்மூலம் பேரா.ப.ம.நா., தரந்தாழ்ந்த இலக்கியங்கள் உள்ள சமற்கிருத மொழியை எவ்வாறு செம்மொழியாகச் சொல்ல இயலும் எனச் சொல்லாமல் சொல்கிறார்.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 45/69) 



Tuesday, May 11, 2021

வால்மீகி இராமாயணம் செவ்விலக்கியம் அல்ல! – ப. மருதநாயகம்

அகரமுதல

      12 May 2021      No Comment

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 42/69  இன் தொடர்ச்சி)



தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

43/69

 வடமொழி ஒரு செம்மொழியா?(2020) (தொடர்ச்சி)

நான்காம் கட்டுரை வால்மீகியின் இராமாயணம்பற்றியது.

பேராசிரியர் யாகோபி(Jacobi) வால்மீகி இராமாயணம் ஐந்து காண்டங்கள் உடையது. முதல் காண்டமும் ஏழாவது காண்டமும் பின்னர்ச் சேர்க்கப்பட்டவை எனத் தம் ஆய்வுரையில் தெரிவிக்கிறார். முதல் காண்டத்திலுள்ள் கூற்றுகள், பின்வரு்ம் காண்டங்ளோடு உள்ள செய்திகளுடன் முரண்படுதல்போன்ற காரணங்களைக் குறிப்பிட்டுப் பேரா.ப.ம.நா. இதனை ஏற்றுக் கொள்கிறார்.

வால்மீகி இராமாயணத்தில் இராமனை ஒருபுறம் முன்மாதிரியாகத் திகழும் சான்றோருள் சான்றோனாகக் காட்ட முனைகிறார்கள். மறுபுறம் சில சூழல்களில் தரக்குறைவான எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் இடம் கொடுப்பவனாகவும் நல்லவன்போல் நடிக்கும் வேடதாரியாகவும் இராமன் காட்சி தருகிறான்.  இவற்றை எல்லாம் எழுதியவர் வால்மீகியா பின்வந்த வேறொருவரா எனத் தெரியவில்லை.

இராமன் கைகேயியிடம், “பரதனுக்கு நாட்டையும் சீதையையும் கொடுக்கத் தயங்க மாட்டேன்” என்கிறான்.

கைகேயி முன்னால் அவளை உயர்வாகப்பேசும் இராமன் அவள் இல்லாத இடத்தில் வஞ்சகமாகப் பேசுகிறான். “எனது மாற்றாந் தாயாகிய கைகேயி கொடிய இயல்பும் கடின உள்ளமும் கொண்ட பெண்ணாவாள்.“ “கைகேயி ஒரு மிகக் கொடிய பெண்.எதற்கும் துணிந்தவள். கெட்ட செயல் எதையும் செய்வாள். உனது தாய்க்கும் எனது தாய்க்கும் நஞ்சைக் கொடுத்துக் கொல்லவும் செய்வாள். “2.53.18

இராமன் உத்தம உள்ளம் படைத்தவன் அல்லன் எனபதற்கு வாலியை மறைந்திருந்து கொன்றதும் அதற்காகச் சொல்லப்படும் மழுப்பல்களும் சான்றாகும்.

பரத்துவாசர், சபரி ஆகிய இருவர் விருந்தையும் ஏற்றுக் கொள்ளும் இராமன்  குகன் அளிப்பதை ஏற்றுக் கொள்ளவில்லை.

“இராமனுடைய  பாத்திரப்படைப்பில் உள்ள முரண்பாடுகள் தெளிவாகத் தெரிகின்றன. இராமனைக் கள்ளம் கபடமற்ற நல்லோருள் நல்லவனாகக் காட்டும் பாடல்களும் கீழ்த்தரமான எண்ணங்களும் உணர்வுகளும் கொண்ட கீழான மனிதனாகக் காட்டும் பாடல்களும் உள்ளன.”

சீதையை மீட்ட இராமன் அவளை முறையற்ற சுடுசொற்களால் துன்புறுத்துவது இராமனின் பெருமைக்கு ஊறு செய்வதே. சீதையிடம் இராமன்,  “ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு இராவணனின் மடியில் இருந்த உன்னை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்? உனது நடத்தை கறை படிந்தது.. . . . நீ (இலக்குவன், பரதன், சுக்கிரீவன், வீடணன் ஆகிய) நால்வரில் யாரை வேண்டுமானாலும். . . . தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஓராண்டுக் காலம் அவனால் கற்பழிக்கப்படாமல் நீ எவ்வாறு அவனது வீட்டில் இருந்திருக்க முடியும்?” என்றெல்லாம் கொடுஞ்சொற்களைக் கொட்டுவதன் காரணம் இராமனின் உள்ளம் கொடிய எண்ணங்களால் நிறைந்திருந்ததே!

சீனிவாச சாத்திரியார் தமது உரைகளில் எழுப்பும் ஐயங்களைக் குறிப்பிட்டு வால்மீகி இராமாயணத்தில் முரண்பட்ட தகவல்களும்  முன்னுக்குப்பின் மாறுபட்ட கருத்துகளும் இருப்பதைப் பேரா.ப.ம.நா.சுட்டிக் காட்டுகிறார்.

வால்மீகி இராமாயணத்தில் உள்ள பற்பல முரண்பாடுகளை எடுத்துக் கூறும் பேரா.ப.ம.நா. அவற்றைச் சரி எனக் காட்டமுயலும் உரையாசிரியர்களின் தெளிவற்ற விளக்கங்கள் நகைப்பிற்கிடமாக உள்ளதையும் பல இடங்களில் எடுத்துரைக்கிறார்.

நூறாயிரம் பசுக்களைப் பிராமணர்களுக்குக் கொடுப்பது, ஆயிரம் பசுக்களையும் நூறு மதுக்குடங்களையும் பிராமணர்களுக்கு அளித்தல்  எனப் பிராமணர்களுக்கு மட்டுமே கொடையளிக்கும் இராமனின் ஒரு சாதிச்சார்பான செயல்கள் பல இடங்களில் கூறப்படுகின்றன. எனவே, இராமாயணம் பொதுவான மக்கள் நலன் சார்ந்ததாக இல்லாமல் பிராமண நலனை மட்டுமே முன்னிறுத்துவதாக உள்ளது.

    பெண்களை மிகவும் தரக்குறைவாகப் பேசும் பகுதிகள் மனுநீதி, தரும சூத்திரங்கள், அருத்த சாத்திரம், காமசூத்திரம், பகவத்துகீதை போன்ற எல்லாச் சமற்கிருத நூல்களிலும்  உள்ளன. பெண்களுக்கு நல்லுலகு(மோட்சம்) கிடையா தென்றும், அவர்கள் சமற்கிருதம் கற்கக்கூடா தென்றும் வேதப்பயிற்சிக்குத் தகுதி அற்றவர்கள் என்றும் பெண்கள் ஒழுக்கமற்ற செயல்களுக்கு அஞ்ச மாட்டார்கள் என்றும் இந்நூல்கள் இரக்கமின்றியும் அறஉணர்வின்றியும் பேசுகின்றன. வால்மீகி இராமாயணத்திலும் இத்தகைய பெண்களுக்கு எதிரான செய்திகளைப் பலவிடங்களில் காணலாம்.

புனைந்துரையும் புகழுரையும் கொண்ட கம்பனின் பாத்திரப் படைப்புகளைப் படித்தவர்களுக்கு வால்மீகி காட்டும் உண்மை முகம் ஏற்கத்தக்கதாக இருக்காது. ஆனால், இதுதான் உண்மை.

நான்காம் கட்டுரை வியாசரின் மகாபாரதம்பற்றியது. மகாபாரதத்தில், பல இடங்களில், பிராமணரைப் பெருமைப்படுத்திச் சொல்லப்படுகிறது. அதன் முதல் பகுதி 8800 சுலோகங்களைக் கொண்டிருந்தது என்றும் மூன்றுமுறை இடைச்செருகல்கள் நிகழ்ந்து 100,000 சுலோகங்களாகப் பெருக்கப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது.அறவுணர்வும் நற்பண்பும் கொண்ட குருபரம்பரையினரைப்பற்றிய சிறு காப்பியம் ஒன்றில் பாண்டுவின் பரம்பரையினர் கிருட்டிணனின் தலைமையில் பல மோசடிகளைச் செய்து அவர்களை அழித்தார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

இதைத்தலைகீழாக மாற்றிப் பின்வந்த மகாபாரதம் எழுதப்பட்டதாக அறிஞர்கள் கூறுகின்றனர். எனவேதான், மக்குடானெல், பழைய காப்பிய மரபை எவ்வாறு பிராமணச் சாதியின் கோட்பாடுகளைப் புகுத்தி மன்னரையும் மக்களையும் கவரும் இதிகாசமாக மாற்றுவதென்பதைப் பிராமணர்கள் நன்கு அறிந்திருந்தார்கள் எனக் குறிப்பிடுகிறார். பேராசிரியர் ஓல்சுமண்(Prof.Holtzmann) மகாபாரதம் கி.பி.900 ஆண்டுக்குப் பிறகு பிராமணரகளால் தரும சாத்திரமாக மாற்றப்பட்டது என்றும் அதில் பல முழுநூல்கள் நுழைக்கப்பட்டதென்றும் ஆராய்ச்சி முடிவாகத் தெரிவிக்கிறார். ஆதிசங்கரர் தம் விளக்கவுரையில் வேதங்களையும் வேதாந்தத்தையும் கற்கக்கூடாதென்று தடைசெய்யப்பட்ட சாதியினர் படிப்பதற்காக மகாபாரதம் எழுதப்பட்டது என்கிறார். கிரேக்க வல்லுநர் தியோ கிறிசோதமசு(Dio Chrysostomos) கிரேக்கக் காப்பியமான இலியத்தின் சமற்கிருத மொழிபெயர்ப்பே மகாபாரதம் என்கிறார்.

கிரேக்கத் தொன்மங்களின் தாக்கம் நிறைந்தது என்று மகாபாரதம்பற்றி இசுபானிய நூலொன்று குறிக்கிறது. மகாபாரதம் மட்டுமல்லாமல், சமற்கிருத நூல்கள் பலவற்றிலும் கிரேக்க, உரோமானியச் செல்வாக்கு இருப்பதாக அறிஞர்கள் பலர் எழுதியுள்ளனர்.

இவ்வாறு தொடக்கத்தில் மகாபாரதம்பற்றிய செய்திகளைப் பேரா.ப.ம.நா. அளித்துள்ளார்.

மேலும் தொடர்ச்சியாக மகாபாரதக்கதை நிகழ்வுகளைக் குறிப்பிட்டு அவை அடைந்துள்ள கிரேக்க, உரோமானியத் தாக்கங்களையும் கதைப்பாத்திரங்களின் முறையற்ற செயல்களையும தெரிவிக்கிறார். அறிஞர் ஃபெருனாண்டோ உலுஃபு அலான்சோ(Fernando Wulff Alonso)தமது ‘மகாபாரதமும் கிரேக்கத் தொன்மங்களும்’ (The Mahabharata and Greek Mythology) என்னும் நூலில் நிறைவாகத் தாம் கண்டறிந்த உண்மைகளைக் குறிப்பிடுகிறார். அவை மகாபாரதம் பற்றிய அரிய உண்மைச்செய்திகளாக உள்ளன.

ஓமரின் காப்பியங்கள் இரண்டையும் பல கிரேக்கத் தொன்மங்களையும் மூலத்தில் படித்து அவற்றை அருகில் வைத்துக்கொண்டு அவற்றைத் தழுவி, சமற்கிருதமும் கிரேக்கமும் அறிந்த அறிஞர்களால் மகாபாரதம் எழுதப்பட்டிருக்க வேண்டும் என அலான்சோவின் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

மகாபாரதம் வட இந்தியாவிலோ வடமேற்கு இந்தியாவிலோதான் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பதற்குப் போதுமான ஆதாரங்கள் இல்லை. வியாச பாரதம் கூறுவது உண்மையான வரலாற்று நிகழ்ச்சி என்றும் அது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாய்மொழிக் காப்பியமாகத் தோன்றிய இதிகாசமென்றும் அது பேரளவு கொண்ட மூல நூலென்றும் சமற்கிருதச் சார்புடையார் சொல்லி வருவன வெல்லாம் பெரும் பொய்கள் என்பதை இந்த ஆழமான தெளிவான மறுக்க முடியாத ஆய்வு வெளிப்படுத்துகிறது. ஆபாசமான கிரேக்கத் தொன்மங்களிலிருந்து அவற்றை விட இழிகாமமான கதைகளைக் கற்பனை செய்து மகாபாரதம் உருவாக்கப்பட்டிருக்கிறது  என்னும் உண்மையையும் பேரா.ப.ம.நா. தெளிவுபடுத்துகிறார். இத்தகைய, தழுவலான, பொய்யுரையான, இழிகாமமான, நடுநிலையற்ற காப்பியத்தைத் தரமான இலக்கியமாக ஏற்றுக் கொள்ள முடியாதென்பதே சமற்கிருத இலக்கிய வரலாற்றாசிரியரின் முடிவு.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 44/69) 



Monday, May 10, 2021

பிராமணர்கள் அறவுணர்வற்ற பண்பாட்டை உருவாக்கிப் பரப்பினார்கள்! - ப.மருதநாயகம்

அகரமுதல

      11 May 2021      No Comment

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 41/69  இன் தொடர்ச்சி)



தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

  42/69

வடமொழி ஒரு செம்மொழியா?(2020) (தொடர்ச்சி)

மந்திரங்களின் பல்வேறு அறிஞர்கள் மொழிபெயர்ப்புகளையும் அரவிந்தர், சருமா முதலான பலரின் ஆய்வுரைகளையும் எடுத்துக் கூறி வேதங்களில் உள்ள முரண்பாடுகளையும் தெளிவின்மையையும் மனிதநேயமற்ற கூறுகளையும் பேரா.ப.ம.நா.விளக்கியுள்ளார். மனிதநேயமற்றதை எவ்வாறு இலக்கியமாகக் கருத இயலும்? இலக்கிய வகைப்பாட்டிற்கே வராத ஒன்றை எவ்வாறு செவ்வியல் இலக்கியமாகக் கூற முடியும்?

பகுதி இரண்டின் இரண்டாம் கட்டுரை, இலக்கிய நோக்கில் வேத உபநிடதங்களை ஆராய்கிறது.

சமற்கிருத இலக்கிய வரலாற்றை  1899இல் எழுதியவர் ஆர்தர் மக்குடானல்(Arthur A. Macdonell)என்னும் ஆங்கிலேய அறிஞர். அவர் நூலின் முன்னுரையில் வடஇந்தியர்களுக்கு வரலாற்று உணர்வு இன்மையால் அம்மொழி இலக்கியங்களின் காலத்தைச்சரியாக அறியமுடியவில்லை எனக் குறிப்பிட்டிருப்பார். ஆனால், உண்மையில் அவர்கள் சமற்கிருத இலக்கிய்ங்களைப் பிற மொழி இலக்கியக் காலங்களுக்கு மூத்ததாகவும் முதன்மையானதாகவும் காட்ட முயன்ற மோசடிகளால்தான் காலக் குழப்பம் ஏற்பட்டுள்ளது. எனினும் ஆய்வறிஞர்கள் பலரும் சமற்கிருத வாணர்களின் திருட்டுத்தனத்தையும் பொய்யாகக் கற்பிக்கப்படும் போலிச்சிறப்புகளையும் வெளிப்படுத்தி வருகின்றனர். இவற்றால் சமற்கிருத இலக்கியங்கள் அவற்றிற்குக் கொடுக்கப்பட்ட உயர்நிலையை இழந்துவருகின்றன. இதனை இக்கட்டுரை மூலம் நாம் புரிந்து கொள்ளலாம்.

இருக்குவேதம் குறிப்பிடும் தெய்வங்களுள் சில அறவுணர்வு அற்றவை. வெள்ளை யசுர் வேதம், பிராமணர்கள் தெய்வங்களைத் தம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவர் என்கிறது. பிராமணங்கள், “மாந்தர்களில் பிராமணர்களே தெய்வங்கள் என்று வணங்கப்படவேண்டியவர்கள்” என்கிறது. பெண் தெய்வங்கள் யாவும் ஆண்தெய்வங்களுக்குக் கீழான நிலையிலேயே வைக்கப்படுகின்றன. இருக்கு வேதத்தின் பத்தாம் பகுதியில் யமி தன் உடன்பிறந்தவனான யமனை  உடலுறவுக்கு அழைக்கிறாள் என்று குறிக்கப்பெற்றுள்ளது. தரக்குறைவான உயர்வு நவிற்சிப்பாடல்கள் பல இருக்கு வேதத்தில் முதல் பகுதியிலும் எட்டாம் பகுதி இறுதியிலும் பத்தாம் பகுதியிலும் புகுத்தப்பட்டுள்ளன.

பெண்களை இழிவுபடுத்தும் பாடல்கள் பல இருக்கு வேதத்தில் உள்ளன. ஒரு பாடலில் இந்திரன் சொன்னதாகப் பெண்களுக்கு அறிவு குறைவு எனக் கூறப்பட்டுள்ளது. ஒரு பாடலில், “பெண்களோடு நட்பு என்பதே கூடாது. அவர்களுடைய இதயங்கள் ஓநாய்களின் இதயங்களை ஒத்தவை” எனக் கூறப்பட்டுள்ளது.

இருக்குவேதப் பாடல்கள் உலகத்தோற்றம் குறித்து முரண்பாடான குழப்பமான கருத்துகளையே தெரிவிக்கின்றன. அதில் நான்கு வருணங்களைக் குறிப்பிடும் பாடல் உள்ளது. தெய்வங்களைத் தமது கட்டுக்குள் வைத்திருப்பதாக ஏமாற்றிப் பிற வருணத்தாரை அச்சுறுத்தித், தங்கள் வாழ்க்கையைப் பிராமணர்கள் வளப்படுத்திக் கொண்டனர் என்பது நான்கு வேதங்கள் மூலம் தெளிவாகத் தெரிகிறது. வேதங்களைப் பிற வருணத்தார் படிக்கக்கூடாது எனச் சங்கரரும் இராமானுசரும்கூடத் தெரிவித்துள்ளனர்.  அவர்கள் வேதங்களைப் படிக்க வேண்டுமானால், மகாபாரதத்தைப் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றனர்.

இருக்கு வேதம் திருமண விருந்துகளில் பசுக்கள் கொல்லப்பட்டு அவற்றின் ஊன் பிராமணர்களால் உண்ணப்பட்டதைப் பாடுகிறது. இந்திரனுக்கு வேள்விகளில் காளைகள் கொல்லப்பட்டு விருந்தளிக்கப்பட்டதும் சொல்லப்படுகிறது. ஆனால், பிற வருணத்தார் பசுக்கொலை புரிந்தால்  மரணத்தண்டனை விதிக்கப்படும் என வெள்ளை யசுர் வேதம் கூறுகிறது.

பெண்குழந்தைகளுக்கு எதிராகவே வேதங்கள் பேசுகின்றன. பெண்குழந்தை பிறப்பை அதருவவேதம் இழிவாகக் கூறுகிறது. பெண்குழந்தைகள் பிறந்தால் அக்குழந்தைகளை இறக்கும்படிச்செய்வதாக யசுர் வேதம் கூறுகிறது. அயித்தரேய பிராமணம், பெண்குழந்தை பெறுவது பெருந்துன்பத்திற்கு ஆளாவது என அறிவிக்கிறது. (ஐங்குறுநூற்றுப்பாடலில் தெய்வத்திடம் பெண் குழந்தை வேண்டும் பெற்றோரைக்காணலாம்.)

கொடிய எண்ணங்களைச் சொல்லும் அதருவ வேதம், பிராமணர்கள் தங்கள் பகைவர்களுக்கு எதிராகப் பயன்படுத்த வேண்டிய ஆயுதம் என்று மனுநூல் கூறுகிறது. சாமவிதானபிரமாணம் பலவிதமான மூடநம்பிக்கைகளைப் போற்றுகிறது. மைத்திராயணி உபநிடதம், பிராமணிய விதிகளைக் கடைப்பிடித்து, வருணாசிரம தருமத்தையும்  சாதிக்கட்டுப்பாடுகளையும் ஏற்றுக் கொண்டவர்களே, -பிராமணப் புரோகிதர்களே, முத்தி நிலையடைய முடியும் என்கிறது.

தரும சூத்திரங்கள் பலவிதமான சடங்குகள் எவ்வாறு செய்யப்பட வேண்டுமென்று விளக்குகின்றன. இவைகுறித்து மக்குடனால், சூத்திரங்கள் கூறும் எண்ணற்ற சடங்குகளை எண்ணிப் பார்க்கும்போது சோம்பேறிகளான புரோகிதப் பிராமணர்கள் இந்துக்களின் அறிவை முடக்கி அவர்களை என்றென்றும் தங்களுக்கு ஆன்மிக அடிமைகளாக வைத்துக்கொள்வதற்காகக் கடைப்பிடித்தவையே அவையென்று முடிவுகட்ட நேரும் என்கிறார்.

பகுதி இரண்டின் மூன்றாம் கட்டுரை வேதகாலப் பண்பாடு குறித்துக் கூறுகிறது. தருமானந்த கோசம்பியின் ‘பகவான் புத்தர்’ முதலான நூல்களில் நேர்மையான ஆய்வு முடிவுகளைக் காணலாம். நாடோடிகளாக வாழ்ந்த ஓரினம் மூடநம்பிக்கைகள் நிறைந்த தொன்மங்கள் மூலமும் குதிரைகள், மனிதர்கள், பசுக்கள் ஆகியவற்றை யெல்லாம் பலியிடும் அசுவமேதம், நரமேதம்,வாசபேயம், கோமேதயாகம் போன்றவற்றைக் கொண்டு மன்னர்களை அடிமையாக்கியதன் மூலமும் அறவுணர்வற்ற ஒரு பண்பாட்டை உருவாக்கி அதை நாடு முழுவதும் பரப்பியிருக்கிறார்கள் என்னும் வரலாற்று உண்மையை இவ்வாய்வு உணர்த்துகிறது.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 43/69  )

 



Sunday, May 09, 2021

சமற்கிருதப் பேராசிரியையின் ஆய்வு முடிவு: சமற்கிருதம் செம்மொழியல்ல!

 அகரமுதல


(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 40/69  இன் தொடர்ச்சி)



தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

41 / 69

வடமொழி ஒரு செம்மொழியா?(2020) (தொடர்ச்சி)

இரண்டாவது கட்டுரை 95 பக்கங்கள் கொண்டது. சமற்கிருதப் பேராசிரியர் சுகுமாரி(பாட்டார்சார்)எழுதிய சமற்கிருதச் செவ்விலக்கிய வரலாறு(History of Classical Sanskrit Literature. 1993) என்னும் நூற் கருத்தை விளக்குவது.

அந்நூல் முன்னுரை, முடிவுரை நீங்கலாக ஐந்து பகுதிகளை உடையது. சமற்கிருத இலக்கிய வரலாறு கி.பி.மூன்றாம் நூற்றாண்டில் தொடங்கிக் கி.பி.பதினாறாம் நூற்றாண்டில முடிவிற்கு வந்ததைக் கூறுகிறது. அஃதாவது இக்காலத்திற்கு முன்னும் பின்னும் உள்ள நூல்களைச் சமற்கிருத இலக்கியங்களாகக் கருத முடியாது;சமற்கிருத நாடகங்களின் தோற்றமும் மூலமும் கிரேக்க நாடகங்களே என்கிறார்.

பேராசிரியை சுகுமாரி, நூற்றாண்டுதோறும் உள்ள சமற்கிருத இலக்கியங்களின் மூலங்களைக் குறிப்பிடுவதன் மூலம் நாம் உணர்வன என்ன? சமற்கிருத இலக்கியங்கள் பேரளவினவை என்பதைக் காட்டுவதற்காகப் பாலிமொழி நூல்களையும் பிராகிருத மொழி நூல்களையும் மொழிபெயர்த்துக் கொண்டு அல்லது அவற்றின் அப்பட்டமான தழுவல்களை எழுதிவைத்துக் கொண்டு மூலங்களை அழித்துவிட்டு அவையெல்லாம் சமற்கிருத நூல்கள் என்று பொய்யான வரலாற்றை உருவாக்கியுள்ளனர் என நாம் அறிகிறோம். நாம் இதுவரை தமிழ் இலக்கியங்களைச் சமற்கிருதத்தில் மொழிபெயர்த்துக்கொண்டு மூலநூல்களாக அவற்றைப் புனைந்துரைத்தனர் என எண்ணி வந்துள்ளோம். பேரா.ப.ம.நா. இவற்றை நன்கு புரியவைத்துள்ளார்.  

மயூர சதகத்தில் கவர்ச்சியை வெளிப்படுத்தும் அளவிற்குக் கவிதையைக்காண இயலவில்லை.

நூறு நீதிகளைச் சொல்லும் நீதி சதகத்தில் கவிதைக்கு வழியில்லை. திருக்குறள், நாலடியார் போன்ற தமிழ் அற இலக்கிய்ங்கள் அளவிற்கு நல்லறம் சொல்லவில்லை.

வைராக்கிய சதகத்தில் இல்லறத்தை வெறுப்பவன் குரலையே கேட்கிறோம்.

சிருங்கார சதகம் காதலைப்பற்றிப்பேசுவதாகக் கூறிவிட்டுப், பல பாடல்களில் காதலுக்கு எதிராகவே எச்சரிக்கிறது.

“ஆண்களைப் பெண்கள் மயக்குகின்றனர்; அவர்களின் அன்பு நிலையற்றது.”

பெண்களைப் பழிக்கும் சிறுபிள்ளைத்தனமான கருத்துகள் பல சொல்லப்படுகின்றன.

இவையெல்லாம் பெண்களைப் போகப்பொருள்களாகவே கா்ட்டுகின்றன.

இத்தகைய குறைபாடுகள் உடைய நூல்களை யெல்லாம் சிறந்த இலக்கியமாகவே காட்டும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே, பொய்யான அடித்தளங்கள் அடிப்படையில் செவ்வியல் கட்டுமானத்தைக் காட்டுகின்றனர். சமற்கிருத நூல்களை ஆபாசக் குப்பைகள் எனக் கூறும் சமற்கிருதப்பேராசிரியை காதல் நிலைகளை முருகியல் இன்பம் தருமாறு படைத்த சமற்கிருதக் கவிஞர்கள் யாருமிலர் என்கிறார். தமிழ் அக இலக்கியங்களுடன் ஒப்பிட்டுப்பேசுவதற்குச் சமற்கிருத நூல்களுக்குத் தகுதியே இல்லை என்பதை இந்நூல் மூலம் புரிந்து கொள்ளலாம்.

நான்காம் கட்டுரை முதல் பதினாறாம் கட்டுரை வரை சிறப்பான நூல்கள் என்று சொல்லப்படும் சமற்கிருத நூல்களின் நிறைகுறைகளைப் பேராசிரியர் சுகுமாரி நடுநிலையுடன் எடுத்துக் காட்டுகின்றார். இவை நமக்குச் சமற்கிருத நூல்கள் செவ்வியல் தன்மையற்றவை என்பதையே உணர்த்துகின்றன.

 வேதந் தொடங்கிக் காளிதாசன் வரையில் காலந்தோறும் தோன்றி வழக்கத்தில் உள்ள இலக்கியங்களின் பொருண்மை விளக்கங்களையும் தமிழ் முதலான பிற மொழி இலக்கியங்களில் இருந்து எடுததாளப்பட்ட கருத்துகளையும் இரண்டாம் பாகம் விளக்குகிறது.

இரண்டாம் பகுதியின் முதல் கட்டுரையில் வேத உபநிடதங்கள் வரலாற்று நோக்கில் பார்க்கப்படுகின்றன.

சமற்கிருத அறிஞர்கள் பார்வையிலேயே வேதங்களைப்பற்றி இக்கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது. இருக்குவேதத்தையும் மனுநீதியையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த வெண்டி தோனிகர்(Wendy Doniger) பிராமணர்கள், தங்களை மேம்படுத்திக் கொள்ளவும் தங்கள் செல்வாக்கை வளர்த்துக் கொள்ளவும் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்ளவும் சமயச்சடங்குகளில் மட்டுமல்லாமல் வாழ்க்கையின் எல்லாக் கூறுகளிலும் தங்கள் பங்கை உறுதிப்படுத்திக் கொள்ளவும் சற்றும் அடக்கவுணர்வோ கூச்சமோ தயக்கமோ மனச்சான்றின் உறுத்தலோ இல்லாமல் பேசுவதை வேதங்களில் காணலாம் என்பார். வேதங்களில் வன்முறையும் அதிகார வெறியும் போற்றப்படுவதோடல்லாமல் அவையே உலகநெறி யென்றும் உலக நோக்கமென்றும் காட்டப்படுகின்றன என்பார்.

சில்வியன் இலவி (Sylvian Levi)என்பார் வேதங்களின் அடிப்படை இலட்சியம் மிருகத்தனமானது(Brutal)என்று தமது பிராமணர்களின் ஈகைக் கோட்பாடு (La Doctrine du Sacrifice Dans Les Brahmanas) நூலில் விளக்குவதைத் தேனியல் சரி என்கிறார். சில்வியன் பிரெஞ்சு மொழியில் எழுதி 1898இல் வெளியிட்ட நூல் இது.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 42/69 )

 



Saturday, May 08, 2021

சமற்கிருதம் செம்மொழியல்ல – பேரா.மருதநாயகத்தின் சிறப்பான ஆய்வுரை

அகரமுதல

      09 May 2021      No Comment

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 39/ 69  இன் தொடர்ச்சி)



தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

40/ 69

 வடமொழி ஒரு செம்மொழியா?(2020)

ஏறத்தாழ 650 பக்கங்கள் கொண்ட மிகப்பெரும் ஆராய்ச்சி நூல். எவ்வகைக் காழ்ப்புணர்ச்சியுமின்றி பன்னாட்டு அறிஞர்களின் ஆய்வுரைகள் அடிப்படையில் நடுநிலையுடன் ஆரா்ய்ந்து சமற்கிருதம் செம்மொழியல்ல என்பதை மெய்ப்பித்துள்ளார். “தொன்மை, தாய்மை, தூய்மை பற்றிய தவறான கற்பிதங்கள் அடிப்படையில்தான் சமற்கிருதத்தைச் செம்மொழியாகக் காட்டுகின்றனர். உண்மையில் இது செம்மொழியே அல்ல” என எழுதி வரும் எனக்கு இக்கட்டுரை பெரிதும் போற்றுதலுக்குரிய வழிகாட்டி நூலாகத் திகழ்கிறது.

இந்நூலின் பதிப்புரையில் குறிப்பிட்டுள்ளதுபோல் சமற்கிருதம் என்றைக்கும் மக்கள் மொழியாகப் பேச்சு நிலையில் இருந்ததில்லை. இன்றைய நிலையில் வளர்ச்சியுற்றுள்ள அறிவியல் வளர்ச்சியினை ஈடுகட்டும் நிலையிலும் இருக்கவில்லை. ஆனால், அதனை அறிவியல் மொழிபோல் பொய்யுரையாகப் புகழ்ந்து அதை மேற்கோளாகக் காட்டிப் பரப்பி வருகின்றனர்.

இந்நூல் சமற்கிருத இலக்கிய வரலாற்று நூலாக அமைந்துள்ளதே நடுவுநிலையுடன் ஆராய்ந்து ஆசிரியர் முடிபு எடுத்துள்ளார் என்பதைத் தெள்ளிதாக விளக்குகிறது.

இந்நூல் மூன்று பகுதிகளையும் (2+20+18)40 கட்டுரைகளையும் முடிவுரை, பிற்சேர்க்கையும் உடையது.

சமற்கிருதத்தின் செம்மொழிப் பண்பின் உண்மைநிலை குறித்து முதல் பாகம் விளக்குகிறது  

  1. உலகப் பெருமொழிகளும் செவ்வியல் தகுதியும், 2. செவ்விலக்கியங்கள்: வடமொழிப்பேராசிரியையின் பார்வையில் என இரு கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.

 தொல்காப்பியப் பொருளதிகாரத்தை ஒத்த ஓர் அறிவு சார்ந்த ஆவணத்தை மேலை அறிஞர்கள் படைக்கவில்லை யென்பதே வரலாற்று உண்மை.

மேலை உலகின் கவிதையியல் முற்றுப் பெறாததாகவே இன்றுவரை உள்ளது.

கி.மு.ஐந்தாம் ஆறாம் நூற்றாண்டைச்சேர்ந்த பிண்டார்(Pindar), சாஃபோ(Sappho) ஆகிய இருவரும் செவ்வியல் கிரேக்கத்தின் தலைசிறந்த தன்னுணர்ச்சிக் கவிஞர்கள். சிறந்த பாடல்களாகப் போற்றப்படும் பிண்டாரின் கவிதைகளில் குமுகாய உணர்வு(Social Consciousness) சிறிதும் இல்லையென்றும் இவர் மேட்டுக்குடி மக்களிடமே ஈடுபாடு கொண்டவர் என்றும் கிரேக்கக்கல்வியாளர்கள் சுட்டிக்காட்டுவதைக் குறிப்பிடுகிறார். இதுபோல் சாஃபோவின் கவிதைகளில் மிகச் சிலவே கிடைத்துள்ளன.பழம் கிரேக்கக் கவிதைகளில் குறிப்பால் பொருள் உணர்த்தல் அறவே இல்லை(“Suggestion is unknown to Greek Poetry”) என்னும் உண்மையையும் எடுத்துரைக்கிறார். செம்மொழி என்பது தனக்கே உரிய பேரிலக்கியப்பரப்பைப் பெற்றிருக்க வேண்டு்ம் என்னும் விதிக்கிணங்கப் பார்த்தால் இலத்தீன் இலக்கியம் குறைபாடுடையது என அறிஞர்கள் கூறுவதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

 பழஞ்சீன இலக்கியத்தில் இயற்கைக்கவிதைகள் இருப்பினு்ம் தமிழுக்கே உரிய மாந்தர் வாழ்வையும் இயற்கையையும் இறுகப்பிணைத்த ஐந்திணைக் கவிதை இயல்போல் அவை இல்லை என அறிஞர்கள் கூறுவதையும் நமக்குத் தெரிவிக்கிறார்.

இலத்தீன், சமற்கிருதம், சீனம்,அரேபியம், எபிரேயம் ஆகியவற்றிற்கு ஒரு பெருங்குறை உண்டு. ஏதேனும் ஓரினத்திற்கு நீ்ண்ட நெடுங்காலம் தாய்மொழியாக இருந்து பேச்சு வழக்கினாலே தொடர் வளர்ச்சிபெற்றவை அல்ல. இதனால் உயிருள்ள கவிதைக்கு வேண்டிய உயிரோட்டம் கொண்ட சொல்வளம் அவற்றிற்கு இல்லை. இம்மொழிகளில் ஆழ்ந்த பயிற்சி பெற்ற ஓங்கு அடிகளார்(Fr. Walter Ong) இது குறித்துக் கூறுவதை நம் கருத்தில் பதிய வைக்கிறார். நீண்ட நெடுங்காலம் தாய்மொழியாக விளங்கிவரும் ஒரே செம்மொழி தமிழ் மட்டுமே!.

 ஏ.கே.இராமானுசன் தேனியேல் இங்கால்சின் கூற்று ஒன்றினை எடுத்தாண்டுள்ளார். சியார்சு ஆருட்டிற்குச் சமற்கிருதம் கற்றுத்தந்த சமற்கிருதப் பேராசிரியர்தான் இங்கால்சு. அவர், சமற்கிருதம் குடும்பமொழியாக இருந்ததில்லை என்பதுடன் அதன் செயற்கைத்தன்மை, உயிருள்ள கவிதை மொழிக்குப் பயன்படாத நிலை முதலியவற்றைக் குறிப்பிட்டுள்ளார். அஃது என்றுமுளமொழி என்றும் அகில இந்திய அளவினலானது என்றும் கூறுவதன் பொய்மையையும் அறிஞர்கள் கூறியுள்ளனர். இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் சமற்கிருதத்திற்குத் தொடரந்து எதிர்ப்பு இருந்துள்ளது என்பதையும் சமற்கிருத இலக்கியங்களிலெல்லாம் பிராகிருதமே பெருமளவு கையாளப்பட்டுள்ளது என்பதையும் பிராகிருத மொழியினர் சமற்கிருதத்தை எள்ளி நகையாடி வந்துள்ளனர் என்பதையும் ஆய்வறிஞர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர்.

பிராகிருதத்தைப் பாராட்டியும் சமற்கிருதத்தைக் கடுமையாகத் தாக்கியும் பிராகிருத மொழியினர் கவிதைகள் பல எழுதியுள்ளனர். அவற்றிற்குச் சான்றாக இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ள கவிதைகளில் ஒன்று வருமாறு:

பிராகிருத காவியத்தை வணங்குவோம்; அம்மொழியில்

கவிதை யாத்தவர்களையும் வணங்குவோம்.

சமற்கிருதக் காவியத்தைக் கொளுத்துவோம்;  யார்

அம்மொழியில் காவியம் படைத்தார்களோ

அவர்களையும் கொளுத்துவோம்.

(அ.கார்த்திகேயன், பிராகிருத மொழியில் மொழி உணர்ச்சி)

இவ்வாறு முதல் கட்டுரையிலேயே சமற்கிருதத்தின் செம்மையில்லாத் தன்மையை நன்கு விளக்கியுள்ளார் பேரா.ப.ம.நா.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 41/ 69  )