Wednesday, February 01, 2017

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙி] – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல 171, தை 16, 2048 / சனவரி 29, 2017

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார்  (ஙாஙி]

3. தமிழ்நலப் போராளி  தொடர்ச்சி
 தமிழ்ப்பகைவர் என்போர் தமிழ்த்துறையுடன் தொடர்பற்றவர்கள் எனக் கருதினால் அதுவும் தவறாகும். எடுத்துக்காட்டிற்கு ஒன்று. திருநெல்வேலி ம.தி.தா.இந்துக் கல்லூரியில் பேராசிரியர் சேரும் முன்பு தமிழ் வகுப்பிலும் ஆங்கிலம்தான் தவழ்ந்தது. ஆங்கிலம் மூலம் தமிழை விளக்குவதில் பெருமை கண்டனர் தமிழ்த்துறையினர். ஆங்கிலத்தில் பேசுவதே தம் உயிர் மூச்சு எனக் கொண்டனர் அவர்கள். ஆனால் பேராசிரியர் அங்குத் தமிழ்த்துறைத் தலைவராகச் சென்ற பின்பு தமிழ்த்துறை மட்டுமல்ல கல்லூரியே தமிழ்மணத்தில் மணந்தது. “இந்துக் கல்லூரியின் கருங்கல்லும் செங்கல்லும்கூட இலக்குவனாரால் கன்னித்தமிழ் பாடுகிறது” என அவர் மாணவர் வேலுச்சாமி (பக்கம் மு8 : செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார்) கூறியது நெல்லை மக்களின் ஒருமித்த கருத்தாகும். அக்காலத் தமிழாசிரியர் நிலை குறித்தும் பேராசிரியர் தொண்டினால் பரவிய தமிழ் உணர்வு குறித்தும் ஆரியக் காதலர்கள் எதிர்ப்பு குறித்தும் பேராசிரியரே ‘என் வாழ்க்கைப் போர்’ நூலில்(கையெழுத்துப்படி) பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
 அங்குத் தமிழ்த் துறையாசிரியர்கள் தூய தமிழைப் போற்றும் கொள்கையை வெறுத்துள்ளனர். வேற்றுமொழிச் சோற்களைக் கலந்து பேசுதலே தமிழில் புதுமலர்ச்சி என்று முழங்கி வந்தனர். ஏன் தமிழ்ப் பாடங்களை – பாட்டுகளை – ஆங்கிலத்தில் விளக்குவதைப் பெருமையாகக் கருதினர். தமிழ் வகுப்பில் ஆங்கிலம் கலவாது உரையாடுதலே அவர்கட்கு இழுக்கெனக் கருதி வந்தனர். ஆங்கில ஆசிரியர்களுடன் போட்டியிடுவது போன்று ஆங்கிலத்தை அளாவிப் பேசி வந்தனர். ஆங்கிலம் அறியாத புலவர்கள் ஒன்றும் அறியாத கட்டுப் பெட்டிகள் என மாணவர்களை நம்ப வைத்தனர்.
 ஆங்கிலம் ஒன்றையே கற்று, அதற்கே ஆக்கையும் ஆவியும் விட்டு, தாங்களும் அயலவராகித் தமிழின் தொடர்பற்றுப் போகும் இழிநிலைக்கு மாணவர்களை இட்டுச் சென்றனர்.
 தேசியப் பெரும்புலவர் பாரதியார் பயின்றது இக்கல்லூரியின் தொடர்பாயுள்ள உயர்நிலைக் கல்விக் கூடத்தில்தான் என்பது அறியத்தக்கது. ஆங்கிலக் கல்வியால் வரும் தீமையை அவர் அழகுறக் கூறியிருப்பதை அறிந்திருந்தும் அறியாதவர் போன்று நடந்து கொண்டு வந்தனர்.
 யான் ஆங்கிலத்தை வெறுத்தவனல்லன். ஆங்கிலத்தால் அடைய இருக்கும் நன்மைகள் அளப்பில. அதனை இரண்டாவது கட்டாயமொழியாகப் பயில வேண்டியது தமிழர்களின் தவிர்க்கலாகாக் கடனே என்று அன்றும் கூறினேன்; இன்றும் கூறுவேன். ஆனால் அதற்கு அடிமையாகித் தமிழைப் புறக்கணிக்காலாகாது என்பது தான் எனது கொள்கை.
 அன்று தமிழ் தவிர்த்து அனைத்துப் பாடங்களும் ஆங்கிலத்தில்தான் கற்பிக்கப்பட்டன. தமிழையும் ஆங்கிலத்தில் கற்பித்தால் தமிழ்ச் சொற்களைச் செவி குளிர மாணவர்கள் எங்குச் சென்று கேட்பர். ‘சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே’என்பதனை மாணவர்கள் எப்படி அறிவர்?
 தமிழ் ஆசிரியர்கள் தங்கள் ஆங்கிலப் புலமையை வெளிப்படுத்தி மாணவர்களின் பாராட்டுதலைப் பெறவிரும்பினர். ஆனால் மாணவர்களில் பலர் இதனை உள்ளூர வெறுத்துக் கொண்டிருந்தனர். “ஆங்கிலத்தைக் கேட்பதற்கு ஆங்கில வகுப்புகள் உள்ளனவே. தமிழ் வகுப்புகளில் ஆங்கிலம் எற்றுக்கு? அன்றியும் ஆங்கில ஆசிரியர்களைவிடத் தமிழாசிரியர்கள் ஆங்கிலத்தை அழகுறு நடையில் பொழிய இயலுமா?” எனத் தமக்குள்ளே கூறிப் புழுங்கினர். ‘தமிழ்நாட்டில் எல்லாம் தமிழில்; எங்கும் தமிழ்’ என்ற நிலை ஏற்பட வேண்டும் என்ற கொள்கையை யான் வெளிப்படுத்தியவுடன் மாணவர்கட்கு ஊக்கம்   உண்டாகி விட்டது. தமிழைப் போற்றத் தொடங்கி விட்டனர். வகுப்பில் வருகைப் பதிவுக்குத் தமிழில் விடையளித்தனர். ‘உளேன் ஐயா’ என உள்ளன்புடன் உரைத்தனர். விளையாடுமிடங்களில் வியன் தமிழ் புகுந்தது. ‘Love all’ என்பதனை விடுத்து ‘அன்பே கடவுள்’ என ஆர்வமுடன் மொழிந்தனர். மாணவரிடையே தமிழ்ப் புரட்சி மலர்ந்து விட்டது.
விளையாட்டுத்துறை ஆசிரியர் “உங்கள் தமிழைத் தமிழ் வகுப்புகளில் மட்டும் வைத்துக் கொள்ளச் சொல்லுங்கள்; வேறு வகுப்புகளில் புகுத்தவேண்டா” என்று வேண்டினார். தமிழ்த் துறை ஆசிரியர் ஒருவர் தம் வகுப்பில் மாணவர்கள் நோக்கி ஆங்கிலத்தை வெறுத்தல் கூடாது; ‘Touch me not; See me not’ என்ற கொள்கை இக்காலத்துக்கு ஏலாது. ஆங்கிலம்தான் வாழ்வளிக்கும் என்று கூறியதாக அறிந்தேன்.
  யான் அவ்வகுப்புச் சென்றபோது “ஆங்கிலத்தை வெறுத்தல் வேண்டா. ஆனால் தமிழைப் புறக்கணித்தல் தவறு (‘Drive me not; Kill me not’) என்று தமிழன்னை கூறுகின்றார். தமிழ்ச் சொல் இருக்கும் போது ஆங்கிலச் சொல்லைப் பயன்படுத்துவது தமிழைக் கொல்லுவதற்கு ஒப்பாகும்” என்று கூறத் தொடங்கினேன். மாணவர்களிடையே தமிழ்க்கனல் கொழுந்து விட்டெரியத் தொடங்கி விட்டது. ஆங்கிலத்துக்கு அடிமையாய் இருந்த தமிழ் ஆசிரியர் தம் அழுகைக் கண்ணீரால் தமிழ்க் கனலை அகற்ற முயன்றார். வருகைப் பதிவின் போது மாணவர்கள் தமிழில் கூறத் தொடங்கியவுடன், கண்ணீர் வடித்த வண்ணம் “நான் இன்னும் சில நாட்கள் தான் இங்குப் பணிபுரிவேன்; ஆகவே தமிழில் கூறும் மாறுதலை நிறுத்துங்கள். என்பால் அன்பே காட்டுங்கள்” என்று வேண்டினராம். மாணவர்கள் இரக்கம் காட்டவில்லை. பின்னர் முதல்வரிடம் சென்று முறையிட்டனராம். முதல்வர், “மாணவர்கள் விருப்பப்படிச் செல்லுதலே மேல்” என்று கூறிவிட்டனராம்.
  தூய தமிழ்ப் பற்று வளரத் தொடங்கியதும் பிராமண மாணவர்கள் – வடமொழி பயின்றவர்கள் – என்னை வடமொழி வெறுப்பாளன் என்று கருதி விட்டனர்.
 யான் அங்குப் பணியேற்ற செய்தி பரவியவுடன் அவ்வூர் வழக்கறிஞர்கள் கூட்டத்தில் பிராமணர்கள் என் பெயரை அறிந்தவுடன் “இவர் ஒரு வடமொழி வெறுப்பாளர்; பெயரே அறிவிக்கின்றது” என்றனராம். யாம் மாலையில் நெல்லைப் பெரு வழியில் தனியாக உலாவச் செல்வதுண்டு. பெருவழியை ஒட்டி, கைப்பந்து மட்டைப் பந்து விளையாடுமிடங்கள் இருந்தன. அவை, பிராமணர்கள் மிகுதியாய் உறைந்த தெருக்களை ஒட்டியிருந்தன. பிராமண மாணவர்களே தாமே அமைத்துக் கொண்ட விளையாடுமிடங்கள். அங்கு விளையாடுகின்ற அவர்கள் என்னைக் கண்டதும் ‘Sanskrit Zindabad’ என்று முழங்கத் தொடங்கினர். சில நாட்கள் பொறுத்தேன். ஒருநாள் அவர்கள் முழங்கத் தொடங்கியதும், அவர்களை நோக்கி நடந்தேன். மட்டைகளைப் போட்டு விட்டு ஓடிவிட்டார்கள். பிறகு அம் மாணவர்களில் சிலரையழைத்து அவ்வாறு முழங்குவது நன்றன்று என்று அறிவுரை கூறியவுடன் அதனை நிறுத்திக் கொண்டு விட்டனர்.
 பேராசிரியர் இலக்குவனார், கல்லூரி நிலத்தில் தமிழ் உணர்வு விதையைத் தூவினாலும், பயன் தமிழ் மண் எங்கும் விளைந்தது. மன்பதை நிலையைப் புரட்டிப் போடுபவன்தானே போராளியாக இருக்க முடியும். தாம் வாழ்ந்த காலத்தில் தமிழுக்கு எதிராக இருந்த மன்பதைச் சூழலைத் தம் நெறியுரையால், வாதுரையால், தொண்டினால், புரட்டிப் போட்ட போராளி பேராசிரியர் இலக்குவனார்போல் வேறு ஒருவரைக் கூற இயலுமோ?
 தருமையருள் பெறு நெல்லை அருணகிரி இசைக்கழகம் ஒன்று நெல்லையில் அமைக்கப்பட்டது; ஞாயிறுதோறும் சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட்டன. இதன் வாயிலாகப் பேராசிரியர் ஆற்றிய தமிழ்ப்பணி நெல்லைக்குப் புகழ் சேர்த்தது. இவ்வமைப்புடன் இணைந்து பேராசிரியர் ஆற்றிய பணிகளை அவரே பின்வருமாறு குறித்துள்ளார்:
  என் ஆய்வுரையை-அறிவுரையைக் கேட்டு நிகழ்ச்சிகளை அமைப்பது வழக்கம். யானும் அவ்வப் போது பல தலைப்புகளில் சொற்பொழி வாற்றுவதுண்டு. சிறப்பு நிகழ்ச்சிகளின் போது முன்னுரையும் நன்றியுரையும் கூறுவதுண்டு. தூயத் தமிழ்க் கொள்கையைப் பரப்புவதற்கு இக் கழக மேடை நன்கு பயன்பட்டது. எனது தொடர்பு இக்கழகத்திற்கு இருந்ததனால் இதனைக் கருஞ்சட்டைக் கழகம் என அழைத்தனர் தமிழ்ப் பகைவர்கள். அவ்வாறே கருதித் தருமபுர மடாதிபதிக்கும் கடிதம் எழுதினர். கழக நிகழ்ச்சி நடை பெற்ற இடம் தருமபுர மடத்துக்கு உரிமையான இடம். மடாதிபதி அவர்களும் தமக்குரியோர் மூலம் உண்மையறிய முயன்றனர். வறிதே மூடப்பட்டிருந்த மடம், இவ்வாறு தமிழும் சைவமும் வளரப் பயன்படுவது கண்டு பேருவகை கொண்டனர். தமிழ்ப் பகைவர் தம் எண்ணம் ஈடேறாது வருந்தினர்.
    இவ்விசைக் கழகச் சார்பாகத் தமிழ்த் திருநாள் பொங்கல் விழா  நடாத்தினோம். ஒரு நாழிகைச் சொற்பொழிவும், சிவப்பு விளக்கால் சொற்பொழிவைக் கட்டுப்படுத்தும் முறையும் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டன. தெருவெல்லாம் செந்தமிழ் முழக்கம்   செழிக்கச் செயப்பட்டது. தனித் தமிழ் வெற்றி கொண்டு விட்டது. தமிழ் அன்னை வீறுடன் வீற்றிருந்தாள்.
  எதிலும் புதுமை காணும் பேராசிரியர், மேடைப்பேச்சில் காலவரையறையை நடைமுறைப்படுத்திய புதுப்பாங்கு, இன்றைய பட்டிமன்ற உரைகளில் மணி அடித்து உரையை முடிக்கச் செய்யும் பழக்கத்திற்கு அடிகோலியது.
 (தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்

Tuesday, January 24, 2017

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙாஙா] – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல 170, தை 09, 2048 / சனவரி 22, 2017

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙாஙா] –

 3. தமிழ்நலப் போராளி – தொடர்ச்சி

 பாவேந்தர் பாரதிதாசன் அவர்களும் பேராசிரியர் இலக்குவனாரும் தமிழ் காக்கும் எண்ணங்களில் ஒன்றுபட்டவர்கள். பாவேந்தரின் தமிழியக்க எண்ணங்களுக்கு வடிவம் தந்தவர் பேராசிரியர்; பாவேந்தர் வகுத்த தமிழ்ப்போராளி இலக்கணத்திற்கு இலக்கியமாகத் திகழ்ந்தவர் பேராசிரியர் எனத் தமிழ் உணர்வாளர்கள் உரைப்பர். அதே நேரம் மூத்த தலைமுறையினர் பேராசிரியரின் வாழ்வுப்பாதையைக் குறியீடாகக் கொண்டு தமிழ்உணர்வுப் பாடல்களைப் படைத்தவர் பாவேந்தர் என்பர். இரண்டிலும் உண்மைகள் உள எனவும் ஆன்றோர் எண்ணத்தால் ஒருவரே எனவும் கொள்ளலாம். இதற்குச் சான்றாகப் பேராசிரியரின் தமிழ் வருகைப் பதிவு குறித்த பாவேந்தரின் பதிவு குறித்துக் காண்போம். நெல்லையில் பேராசிரியரிடம் அப்பொழுது பயின்ற எளிமை ஏந்தல் தோழர் நல்லக்கண்ணு அவர்கள், பேராசிரியர் வருகைப்பதிவின் பொழுது ‘உள்ளேன் ஐயா’ என்று சொல்ல அறிவுறுத்தியது ஓர் இயக்கமாகத் தமிழ்நாடெங்கணும் பரவியது என்கிறார். இதற்குச் சில ஆசிரியர்களிடம் இருந்து எதிர்ப்புகளும் வந்தன. ‘உள்ளேன் ஐயா’ என்று சொல்வதை மறுக்கும் ஆசிரியர்களை மாணவர்கள் எதிர்த்ததுண்டா என்று கேட்டுப் பாவேந்தர் பாரதிதாசன்,
ஆரிய ஆசான் பேரைச் சொல்லி
 அழைக்க அதற்குத் தமிழ்மா ணாக்கன்
 ‘உள்ளேன் ஐயா’ என்றே உரைத்தான்
  ‘அப்படிச் சொல்லல் தப்படா’ என்ற இழிஞனை
எதிர்த்த துண்டா மாணவன்?”
 எனப் பாடிப் பேராசிரியரின் தொண்டினை ஆவணமாக்கி உள்ளார்.
 இக்காலத் தலைமுறையினர் சிலருக்கு ஐயம் வரலாம். பேராசிரியர் சி.இலக்குவனார் கல்வியாளராகத் தம் கடமையை ஆற்றினார்; மாணவர்களை நன்னிலை அடைய உருவாக்கினார்; சில புதிய திட்டங்களை அறிமுகப்படுத்திச் செயல்படுத்தி இருக்கிறார்; இவற்றில் என்ன பெரிய சிறப்பு உள்ளது என்றுகூட அறியாமையால் எண்ணலாம். பேராசிரியர் சி.இலக்குவனார் தம் பணிகளை எளிதில் ஆற்றும் வாய்ப்பான சூழல் இல்லாதபோதும் தன்னலம் நாடாமல் தமிழ்நலம் நாடி ஓயாது அருந்தொண்டுகள் ஆற்றினார் என்பதும்  ஒவ்வொன்றையும் போராடியே செய்து முடித்தார் என்பதும்தான் அவரது போராண்மைக்குச் சான்றாகும். பள்ளியில் தமிழாசிரியராகச் சேர்ந்தது முதலே மாணவர்களுக்குப் பாடம் நடத்தும் பொழுது பாடத்தோடு தொடர்புடைய வேர்ச்சொல் விளக்கங்களை அளித்துத் தமிழின் தூய்மையை விளக்குதல்; பாடங்கள் அடிப்படையில் சீர்திருத்தக் கருத்துகளை உள்ளத்தில் பதிய வைத்தல்; தமிழ்க்காப்பு உணர்வினை விதைத்தல் என அரும்பணியாற்றினார். எனவே, தமிழ்ப்பகைவர்கள் இவருக்கு எதிராகத் தொடக்கம் முதலே செயல்பட்டு வந்துள்ளனர். பணி விலக்கலையும் காவல்துறை நடவடிக்கையையும் வலியுறுத்தி முதலில் குறிப்பிட்டவாறான தொல்லைகள் மூலம், மன உளைச்சலிலாவது தள்ளி அவரின் தமிழ்ப்பணிக்கு முற்றுப்புள்ளி இட வைக்க முயன்றனர். போராளிகளுக்கு எதிர்ப்புகள்தாமே ஊட்டமாக அமையும். எது கண்டும் அஞ்சாமல் பேராசிரியர் தம்  பணியை முன்னிலும் விரைவு படுத்தினார்; தமிழ் உரிமை உணர்வை மாணவர்களிடம் மட்டுமல்லாமல் பொது மக்களிடமும் உண்டாக்கிய போராளியாகத் திகழ்ந்தார்.
 தமிழில் பேசுவதாலும் பிறரைத் தமிழில் பேச ஆற்றுப்படுத்துவதாலும் தம் வருவாயைத் தமிழ்ப்பணிக்கென செலவிடுவதாலும் தமிழாசிரியர் கூட்டமே அவரைப் பிழைக்கத் தெரியாத அப்பாவி என்று கூறி வந்தது. இது குறித்துப் பேராசிரியரே பின்வருமாறு எழுதி உள்ளார்:
  “தமிழரை ஒழிந்த ஏனையோர் எல்லாரும் தம் மொழியாளரைக் காணுங்கால் தம் மொழியிலேயே உரையாடுகின்றனர்.  தமிழர் மட்டும்தான் தம் மொழியை மறந்து ஆங்கிலத்தில் உரையாடுகின்றனர் என்று கூறும் பழிச்சோல் நீங்கிலது. தமிழால் வாழுகின்ற-தமிழைக் காக்க வேண்டிய தமிழாசிரியர்களை  இன்னும் இந்நோய் விட்டபாடில்லை.  ஆங்கிலேயர் ஆட்சியகன்றும் ஆங்கில மொழிச் செல்வாக்கு தமிழாசிரியர்களையும் ஆட்டிப் படைப்பது விந்தையினும் விந்தை. ஆகவே, தமிழ்ப் பேராசிரியனாகிய யான் தமிழுரிமை நாடித் தொண்டாற்ற முற்படுகின்றபோது, அவர் ஓர் அப்பாவி!  பிழைக்கத் தெரியாதவர் என்று பிறர் கூறும் எள்ளல் உரைக்கு இலக்காக நேரிடுகின்றது.
  தமிழாசிரியர் நிலை குறித்துப் பேராசிரியர் தெரிவித்த கருத்தின் மூலம், எத்தகைய சூழலில் அவர் தமிழாசிரியர்களையும் எதிர்த்தே அவர்களின் நலனுக்காகவும் தமிழக நலனுக்காகவும் போராடி வந்துள்ளார் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்

Saturday, January 21, 2017

பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – தொகுப்புரை 7/7: இலக்குவனார் திருவள்ளுவன்

வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம்,
தமிழ்த்துறை, ம.தி.தா.இந்துக்கல்லூரி,
திருநெல்வேலி
பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – பன்னாட்டுக் கருத்தரங்கம்
கட்டுரைத் தொகுப்பு நூல்

தொகுப்புரை 7/7


  “தொல்காப்பிய ஆராய்ச்சியில் இலக்குவனாரின் உட்பொருள் விளக்கம்” குறித்து, முனைவர் உ.அலிபாவா உவகையுடன் உரைக்கிறார்; தமிழின்மீது, தமிழ்மக்கள்மீது, தமிழ் நாகரிகத்தின்மீது உயரிய மதிப்பினை ஏற்படுத்தும் வண்ணம் இலக்குவனாரின் ஆய்வுரைகள் அமைந்துள்ளன என்கிறார்; தொல்காப்பியத்தைத் தமிழ்மரபு நெறியில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்; தொல்காப்பியம் மூலம் அறியலாகும் பல்துறை அறிவைப் புலப்படுத்தியவர்; மனித வாழ்விற்கான இலக்கணம் தமிழில்மட்டும்தான் உள்ளது; கற்புநெறிப்படி ஆடவரும் வாழவேண்டும்; தமிழ்நெறியைத் தமிழருக்காக, தமிழ் முன்னோர்கள் மரபுவழிமட்டும் நின்று உரைப்பதே தொல்காப்பியம் என இலக்குவனார் விளக்கும் பல கருத்துகளையும் ஆய்வாளர் நமக்கு அளிக்கிறார்.
  திருக்குறளுக்குப் பரிமேலழகர் வடநூற் கருத்துகளை ஒட்டி உரை செய்தமையையும் இலக்குவனார் அதனை மறுத்துத் தமிழர் மரபுப்படி விளக்கி யுள்ளமையையும், “பரிமேலழகர் – சி.இலக்குவனார் உரை ஒப்பீடு” மூலம் ஆய்வாளர் இரா.உமாதேவி ஆராய்ந்தளிக்கிறார்; அதிகார வைப்புமுறையிலும் குறள் வரிசை முறையிலும் பரிமேலழகரிடமிருந்து இலக்குவனார் வேறுபட்டுள்ளதையும் விளக்கியுள்ளார்.
  தொல்காப்பியருக்குப் பிற்பட்டகாலத்தவர் திருவள்ளுவர் என  ஆராய்ந்து பேராசிரியர் சி.இலக்குவனார் நமக்குத்  தந்துள்ளனவற்றை      முனைவர் இரா.செகதீசன் “தொல்காப்பியரா? திருவள்ளுவரா?”   என வினா தொடுத்து விடையாக விளக்குகிறார்; தொல்காப்பியர் தொகுத்தளிக்காத  அற்று, அனைய உவம உருபுகளைத் திருவள்ளுவர் பயன்படுத்தியுள்ளார் என்பதுபோன்ற ஆதாரங்களை இலக்குவனார் தெரிவிப்பதை நமக்கு இவர் விளக்குகிறார்; காய்ப்பு உவப்பு இல்லாத ஆராய்ச்சிக்கும் சமய அரசியல் கலப்பு இல்லாத ஆராய்ச்சிக்கும் இன்றைய ஆய்வாளர்களுக்கு வழிகாட்டியாகப் பேராசிரியர் இலக்குவனார் விளங்குவதையும் ஆய்வாளர் எடுத்துரைக்கிறார்.
    “வணிகவியல் பார்வையில் இலக்குவனார் கூறும் வாணிகம்”  எனச்  சங்கக்கால வணிகவியலை  நமக்கு இலக்கியம் வாயிலாக வழங்குவதை முனைவர் கோ.வீ.பிரேமலதா வணிகவியல் துறை நோக்கில் வடித்துத் தருகிறார். உள்நாட்டு வணிகம், அயல்நாட்டு வணிகம், போக்குவரத்து முதலியவற்றைப் பேரா. இலக்குவனார் விளக்கியுள்ளார்; இதன் மூலம் வணிகம் குறித்த பின்னாளைய வரையறைகளைப் பழங்காலத்திலேயே தமிழர்கள் கொண்டிருந்தனர் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது; என வணிகவியல் அறிஞர்களின் கருத்துகளுடன் ஒப்பிட்டுக்கட்டுரை அளித்துள்ளார்.
 இலக்கிய வரலாற்றை ஆய்வுக்கண்கொண்டு அலசுகிறார்; புத்தம் புதுக் கருத்துகளை  வல்லமையுடன் எடுத்துரைக்கிறார்; இலக்கியம்பற்றியும் தமிழ்பற்றியும் மேலை நாட்டு அறிஞர்கள் கூறும் கருத்துகள்  வழி  ஆராய்கிறார்; இவ்வாறு  ‘பழந்தமிழ்’ நூல் படைத்துள்ளார்;  இவற்றைக் குறிப்பிட்டுச்,  “சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – ஓர் ஆய்வு” எனச் சிங்கப்பூர் பேராசிரியர் முனைவர்  வேல்முருகன் சிறப்பாக அளிக்கிறார்; சங்கப்புலவர்களின் படைப்புகளையும் மேனாட்டுஅறிஞர்களின் ஆய்வுகளையும்  நுணுகிக்கற்ற இலக்குவனார்,  ஆய்வுக்கண்கொண்டே எதையும் அலசுகிறார்; புதிய கருத்துகளையும் அளிக்கிறார்; யாவற்றையும் நெஞ்சம் கவரும் வண்ணம் எளிமையாக விளக்குகிறார் என்கிறார்.
  “இலக்குவனார் திருக்குறள் உரைத்திறம்” குறித்து ‘வள்ளுவர் வகுத்த அரசியல்’நூலை அடிப்படையாகக் கொண்டு முனைவர் க.தமிழமல்லன், விரிவாக ஆராய்ந்து அளித்துள்ளார்; பேராசிரியர் இலக்குவனார்  சில குறட்பாக்களை முறை மாற்றி அளித்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.  பேரா.சி.இலக்குவனார், ‘திருக்குறள் – எளிய பொழிப்புரை’ வழங்கும் பொழுது குறட்பாக்களை  நடைமுறை வைப்பின்படியே அளித்துள்ளார். எனினும் குறிப்பிட்ட தலைப்புகளின்கீழ்த் திருக்குறள் கருத்துகளை ஆராயும் பொழுது, அத்தலைப்பிற்கேற்ப முறை மாற்றி அளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இலக்கணத்தின் துணைக்கொண்டு இலக்குவனார் திருக்குறளின் பல இடங்களை அழகாக விளக்குகிறார்; மறுக்க  வேண்டிய இடங்களில் பரிமேலழகரின் கருத்துகளை மறுக்கிறார்; ஆரியச் சார்பிலான கொடிய கருத்துகளைத் தெளிவாக மறுக்கிறார்; தனித்தமிழில் படைக்கிறார்;பல்துறைப் புலமை கொண்டு திருக்குறளுக்குச் சிறப்பான உரை யளித்துள்ளார் என்று பல்வகைக் கண்ணோட்டத்தில் ஆய்வாளர் அளிக்கிறார்.
  பேராசிரியர் சி.இலக்குவனார் பல்வேறுநிலைகளிலும் பல்வேறு துறைகளிலும் முன்னெடுத்துக்காட்டான அரும் பணிகளை ஆற்றியுள்ளார். அவற்றில், கல்விப்பணி, சொற்பொழிவுப்பணி, படைப்புப்பணி, தொல்காப்பியப் பரப்புரைப்பணி, காலஆய்வுப்பணி, சொல்லாய்வுப்பணி, சங்க இலக்கியப் பரப்புரைப்பணி,  குறள்நெறிப் பரப்புரைப்பணி, இதழ்ப்பணி,  ஆற்றுப்படுத்தும் பணி, தமிழ்க்காப்புப்பணி, ஆகிய  சிலவற்றைத் தொகுத்துக் கருத்தரங்கத்தின் மையத் தலைப்புரையாக “இலக்குவனாரின் முன்னோடித் தமிழ்ப்பணிகள்”  கட்டுரை அமைந்துள்ளது.
  கட்டுரையாளர்கள் பலரும் குறிப்பிட்டுள்ளவாறு,   பேராசிரியரின் படைப்புகள் மேலும் விரிந்த ஆய்விற்குரியனவே!  பேராசிரியரின் ‘வள்ளுவர் வகுத்த அரசியல்’, எக்காலத்திற்கும்  ஏற்ற திருக்குறளுக்கு எக்காலத்திற்கும் ஏற்ற அறிவியல் அணுகுமுறையான விளக்கங்கள் கொண்டது. இது குறித்த  கட்டுரையை முனைவர் க.தமிழமல்லன் மட்டும் விரிவாக அளித்துள்ளார். இந்நூற்சிறப்பை ஆய்வாளர்கள் உணர்ந்து மாணாக்கர்க்குத் தெரிவிக்க வேண்டும்.
  பேராசிரியரின் முதல் படைப்பாகிய தனித்தமிழ்க் குறும்பாவியமான ‘எழிலரசி அல்லது காதலின் வெற்றி’ ஆராய்ந்து போற்றுதற்குரியது.  தழுவல் ஆக்கத்திலும் தலை சிறந்தது.  இதில் இடம் பெற்ற கவிதைகள் குறிக்கப் பெற்றிருப்பினும் இப்பாவியம் குறித்த கட்டுரை இல்லை.  வாழ்க்கை நிகழ்வுப் பாவியமான  பேராசிரியரின் ‘துரத்தப்பட்டேன்’, ஆற்றுப்படை இலக்கணத்திற்கேற்ப எழுதப்பெற்ற பேராசிரியரின் ‘மாணவர் ஆற்றுப்படை’  முதலானவையும் விடுபட்டுள்ளன. இவை, சிறப்பான முறையில் ஆய்வு செய்திருக்க வேண்டிய நூல்களாகும். இதழியலறிஞர் பேராசிரியர் இலக்குவனார் எழுதிய தலையங்கங்கள் குறித்தும் கட்டுரைகள் இடம் பெற்றிருப்பின் மேலும் சிறப்பாக இருந்திருக்கும். பேராசிரியரின் ஆங்கில நூல்கள் குறித்த கட்டுரைகளும் இடம் பெறவில்லை. இவை போல்  இக்கருத்தரங்கத்தில் பார்க்கப்படாத நூல்கள் குறித்த ஆய்வுகள் இனி இடம் பெற வேண்டும். பேராசிரியர் நூல்களில் குறிப்பிட்ட சில பகுதிகளையே பலரும் ஆய்வுக்களன்களாக அமைத்துக் கொண்டது தற்செயல் நிகழ்வுதான். இனி, ஆய்வுத் தளங்களை வரையறுத்துக் கொண்டு  கருத்தரங்கங்கள் நடத்தப் பெற வேண்டும்.
   வாழ்க்கைக் குறிப்புகள் திரும்பத் திரும்ப வருவது தவிர்க்கப்பட்டு நீக்கலாம் எனப் பதிப்பாசிரியர் முதலில் கருதி,  அதன் பின்னர் அந்தந்தக் கட்டுரைஅளவில் முழுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக நீக்கவில்லை என அறிந்தேன். சில மேற்கோள்கள் திரும்பத் திரும்பக் கையாளப்பட்டிருப்பினும் பார்க்கும் கோணம் மாறுபடுவதால் கூறியது கூறலாக் கருத இயலவில்லை. நம் கருத்தில் ஆழப் பதிவதற்காக மீண்டும் மீண்டும்  இடம் பெற்றுள்ளன எனக் கருதலாம். எனவே, இவ்விரு இயல்பு நீங்கலாகப் பார்க்கும் பொழுது பேராசிரியரை அவரது படைப்புகள் வழியாகவும்  பணிகள் வாயிலாகவும்  நன்கு படம் பிடித்துக் காட்டியுள்ளனர் எனலாம். ஆய்வாளர்கள் சிலர் தொடக்க நிலையில் உள்ளதால் அதற்கேற்ற நிலையில் படைப்புகள் உள்ளன. என்றாலும் பேராசிரியரை அறியாதவர் அறியச் செய்ய அவை உதவுகின்றன. எனவே, இக்கருத்தரங்கக் கட்டுரைத் தொகுப்பு பாராட்டிற்குரியதாகவே உள்ளது. இதனைப் பாடமாக வைப்பதன் மூலம்  தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் வாழ்க்கையைப் பற்றி மட்டுமல்லாமல், கடந்த நூற்றாண்டின் தமிழ்ச்சூழல், தமிழ்காக்கும் போர்க்களம், தமிழின் செம்மொழித் தன்மை, தொன்மை முதலான சிறப்புகள் ஆகியவற்றையும் இக்காலத்தலைமுறையினர் அறிய இயலும். அதற்கு ம.தி.தா.இந்துக் கல்லூரித் தமிழ்த்துறையினர் முயல வேண்டும். இதுபோன்ற நிகழ்வுகளில் ஆன்றோர்கள் உரைகளையும் இடம் பெறச் செய்வது மேலும் சிறப்பாக இருக்கும்.
  பேராசிரியர் இலக்குவனாரைப்பற்றிய பார்வை பலவாக இருப்பினும் படைப்பிலும் களத்திலும் தமிழ்ப்பரப்புப் பணியிலும் தமிழ்க்காப்புப் பணியிலும் சிறந்து நின்ற செந்தமிழ் அரிமா அவர் என்பதே அனைவரும் கண்ட கவினுறு காட்சியாகும்.
  சிறப்பான முறையில் கட்டுரை அளித்துள்ள கட்டுரையாளர்களுக்கும் இதற்குக்காரணமான கல்லூரி ஆட்சிக்குழுவினர், முதல்வர், தமிழ்த்துறைத்தலைவர், கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர், தமிழ்த்துறையினர், மணிவாசகர் பதிப்பகத்தார் என அனைவருக்கும் பாராட்டுகள்!
இலக்குவனார் புகழ் பாடி  இனிய தமிழ் வளர்ப்போம்!
நற்றமிழை நானிலமெங்கும் பரப்புவோம்!

இலக்குவனார்திருவள்ளுவன்