Sunday, September 19, 2010

"உவமைக் கவிஞர்' சுரதா


இந்த யுகத்தின் சிறந்த கவிஞரான "சுரதா'வை அறியாதவர்கள் இருக்க முடியாது. மரபில் தோய்ந்தவர்களாக இருந்தாலும் சரி, புதுக்கவிதைப் படைப்பாளிகளாக இருந்தாலும் சரி, உவமைக் கவிஞரின் கவிதைகளில் ஒரு கவிதையையாவது ரசிக்காமல் இருந்திருக்க மாட்டார்கள்.மனதில் தனக்குச் சரியெனப்பட்டதை பளிச்சென்று வெளியிடும் துணிவு மிக்கவர். கவிஞர் சுரதா, தஞ்சை மாவட்டத்துப் பழையனூரில், திருவேங்கடம்-சண்பகம் தம்பதிக்கு 1921-ஆம் ஆண்டு நவம்பர் 23-ஆம் தேதி பிறந்தார். இயற்பெயர் இராசகோபாலன். பெரும்பாலும் கவிஞர்கள் பிறரைப் பின்பற்றி எழுதும் வழக்கமுடையவர்கள். அதை சுரதா விரும்பாதவர். ""தனக்கு அதில் உடன்பாடில்லை, "அந்த நிழல் வழி வாசலை' விட்டு நீங்கி எழுதும் கவிஞன் நான். இவரையோ, அவரையோ பின்பற்றி எழுதப் பிரியப்படாதவன்'' என்று மார்தட்டிக் கொள்வதில் தவறில்லை என்பதை நிரூபித்தவர்.ராஜகோபாலன், "சுரதா' ஆன வரலாறு சுவை மிக்கது. ராஜகோபாலன், பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது கவிதை நூல்களை விரும்பிப் படிப்பாராம். ஒருமுறை, டீக்கடைக்காரர் ஒருவர், பாரதிதாசன் கவிதைப் புத்தகம் ஒன்றைக் கொடுத்துப் படிக்கச்சொன்னார். அந்தக் கணம் முதல் பாரதிதாசனின் கவிதைகளால் ஈர்க்கப்பட்டார். புதுவைக்குச் சென்று, பாரதிதாசனைச் சந்திக்கும் துடிப்பு ஏற்பட்டது. செல்வதற்குப் பணம் வேண்டுமே...? ஒரு வீட்டுக்குச் சுண்ணாம்பு பூசும் வேலை செய்து ஆறணா கூலி பெற்று, பாரதிதாசனார் வீட்டை அடைந்தார். இளைஞர் ராஜகோபாலனின் வேட்கையை அறிந்த பாரதிதாசன், பெற்றோருக்குத் தெரிவிக்காமல் தன்னைக் காண வந்ததறிந்து, ""பெற்றோரின் அனுமதி பெற்றுப் பிறகு வா! என்னுடன் பல நாள் தங்கலாம்'' என்று வலியுறுத்தி, அவருக்குச் சிறு தொகையும் கொடுத்து அனுப்பி வைத்தார்."இவரன்றோ பண்பு மிக்க கவிஞர்' என்று முடிவு செய்து, அந்தக் கணம் முதல் பாரதிதாசனுக்கு அடிமையானார்.1941-ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி முதல் பாவேந்தரது தொடர்பு அவருக்கு ஏற்பட்டது. பாரதிதாசனாரின் இயற்பெயர் சுப்புரத்தினம். அதனால், "சுப்புரத்தினதாசன்' என்று பெயர் மாற்றம் செய்து கொண்டார். கடிதம் எழுதிக் கையெழுத்திடும்போது இட வசதிக்காக "சு ர தா' என்று இடம்விட்டு எழுதுவார். அந்த மூன்று எழுத்துகளே "சுரதா' ஆனது. சுரதாவின் முதல் கவிதை "கவி அமரன்', "பிரசண்ட விகடன்' இதழில் வெளிவந்தது. பல ஆண்டுகள், பாரதிதாசனின் வீட்டிலேயே தங்கியிருந்து அவரது எழுத்துப் பணிகளுக்கு உதவியாக இருந்தார்.  நாமக்கல் வெ.இராமலிங்கம் பிள்ளையுடன் பல மாதங்கள் தங்கியிருந்து அவரது எழுத்துப் பணிகளுக்கும் உதவியாக இருந்தார்."உவமைக் கவிஞர்' என்று மக்கள் அளித்த விருது அவரிடம் பிரிக்க முடியாமல் ஒட்டிக்கொண்டது. தன்னைப்போன்று "உவமை கொட்டி' எழுதுபவரை ஆதரித்தாரா இல்லையா என்பது தெரியாது. ஆனால், மூவாயிரத்துக்கும் மேற்பட்ட கவியரங்க நிகழ்ச்சிகளுக்குத் தலைமை ஏற்று நடத்தியிருக்கிறார். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கவிஞர்கள், இவர் தலைமையில் பாடியிருக்கிறார்கள். உலகத் தமிழ்க் கவிஞர் பேரவையைத் தொடங்கிய இவர், தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். எதிலும் புதுமை, புரட்சி செய்வதில் நாட்டம் கொண்ட சுரதா, வீட்டுக்கு வீடு கவியரங்கம், முழுநிலாக் கவியரங்கம், படகுக் கவியரங்கம், ஆற்றுக் கவியரங்கம், கப்பல் கவியரங்கம் எனப் பல்வேறு கவியரங்க நிகழ்ச்சிகளை நடத்தி, இளங்கவிஞர்களை ஊக்குவித்துள்ளார்.சுரதாவின் கொள்கைகள் வித்தியாசமானவை. ஆனால் அழுத்தமானவை. ""கணக்கைப் போன்றதே கவிதை என்பதால், கவிதை புனைந்திடக் கற்பனை வேண்டும் என்னும் கருத்தை ஏற்பதே இல்லை'' என்று அவர் தம் கவிதை ஒன்றில் கூறுவதற்கும் துணிவு வேண்டும்.புகழைத் தேடி அவர் சென்றதில்லை; அவரைத் தேடித் தேடிப் புகழ் வந்தது. அறிஞர் வ.ரா.வை முதன் முதலில் சந்தித்தபோது கவிதை ஒன்றைப் பாடுங்கள் என்று வ.ரா. சொல்ல, உவமைக் கவிஞரின் கவிதையைக் கேட்டவுடன், ""மற்றொரு பாரதி பிறந்து விட்டான்'' என்று பலர் முன்னிலையில் மனமாரப் பாராட்டியிருக்கிறார். "சிவாஜி' ஆசிரியர் திருலோக சீதாராம், தம் இதழில் உவமைக் கவிஞரின் கவிதைகளைத் தொடர்ந்து வெளியிட்டிருக்கிறார். முரசொலி நாளிதழும் சுரதாவின் கவிதைகளைத் தொடர்ந்து வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.1944-ஆம் ஆண்டு "மங்கையர்க்கரசி' என்ற திரைப்படத்துக்கு சுரதா முதன் முதலில் வசனம் எழுதிக்கொடுத்தார். மிகக் குறைந்த வயதில் திரைப்படத்துக்கு வசனம் எழுதியவர் "சுரதா' என்றே கூறலாம். சுரதாவின் வசனங்கள் மிகவும் புகழ் பெற்றவை.திரைப்படங்கள் பலவற்றில் சுரதாவின் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. ஜெனோவா, நாடோடி மன்னன், அமரகவி, தை பிறந்தால் வழி பிறக்கும், தலை கொடுத்தான் தம்பி, நீர்க்குமிழி, மறக்க முடியுமா, நேற்று இன்று நாளை முதலிய படங்களின் பாடல்கள் என்றுமே மறக்க முடியாதவை.எழுதாமல் இருப்பவர்களைப் பார்த்தாலும், எழுதிக்கொண்டிருப்பவர்களைப் பார்த்தாலும் ""எழுதுக! எழுதுக! இன்னும் எழுதுக! விழுதின் ஆலமரம்போல் விரிந்து பரவும் பான்மையில் எழுதுக'' என்று ஊக்கப்படுத்துவார்."மங்கையர்க்கரசி' வசனம் மிகவும் புகழ் பெறவே, அதை நூலாக வெளியிட்டார். திரைப்பட உரையாடல் (வசனம்) கதைப் புத்தகமாக முதன் முதலில் வெளிவந்தது கவிஞர் சுரதா எழுதியதே. 1946-இல் "சாவின் முத்தம்' என்ற நூலை எழுதினார். வி.ஆர்.எம்.செட்டியார் அதை வெளியிட்டார். 1955-இல் "பட்டத்தரசி' என்ற சிறு காவிய நூல் வெளிவந்தது.சுரதா, "உவமைக் கவிஞர்' என்ற புகழ் பெற்றவுடன், "காவியம்' என்ற பெயரில் கவிதை வார இதழ் ஒன்றைத் தொடங்கினார். முதன் முதலில் கவிதையிலேயே வார இதழ் நடத்தியவர் என்ற பெருமையும் பெற்றார். பிறகு, "இலக்கியம்', "ஊர்வலம்', "விண்மீன்' எனப் பல இலக்கிய ஏடுகளை நடத்தினார்.வெள்ளையாம்பட்டு சுந்தரம், சுரதாவின் "தேன் மழை' என்ற கவிதை நூலை வெளியிட்டார். அதற்குத் தமிழக அரசு 1969-ஆம் ஆண்டு பரிசளித்தது. ஆனந்த விகடனில் வாரம்தோறும் கவிதைகள் எழுதினார். திரைப்பட நடிகைகளைப் பற்றி அவர் எழுதியது பலருக்குப் பிடிக்கவில்லை. ஆனால் அதற்கு சமாதானமான பதிலைச் சாதுர்யமாக அளித்திருக்கிறார்.1972-ஆம் ஆண்டு கலைமாமணி விருது வழங்கி தமிழக அரசின் இயல், இசை, நாடக மன்றம் பெருமை பெற்றது. 1982-இல் எம்.ஜி.ஆர்., பாவேந்தர் விருதும், பத்தாயிரம் ரூபாயும், தங்கப்பதக்கமும் வழங்கிச் சிறப்பித்தார். 1990-இல் இன்றைய தமிழக முதல்வர், பாவேந்தர் விருது வழங்கிச் சிறப்பித்தார். 1995-இல் அன்றைய தமிழக முதல்வரான ஜெயலலிதாவால், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் "இராஜராஜன்' விருது வழங்கப்பட்டது.20-க்கும் மேற்பட்ட கதை, கவிதை, கட்டுரை நூல்களும் 100-க்கும் மேற்பட்ட திரைப்பாடல்களும், நான்கு திரைப்படங்களுக்கு வசனம்மும் எழுதிப் புகழைச் சேர்த்துக்கொண்டார். சுரதா, தன் சகோதரியின் மகள் சுலோசனாவை மணந்தார். அவர்களுக்கு ஒரு மகன். பெயர் கல்லாடன். ஒழுக்க சீலரும், வாழ்க்கைநெறியைச் சற்றும் மீறாதவருமான கவிஞர் சுரதா, 2006-ஆம் ஆண்டு ஜூன் 19-ஆம் தேதி நள்ளிரவு காலமானார். மணிவிழா, பவழவிழா, முத்துவிழா கண்ட உவமைக் கவிஞர் 85 ஆண்டுகள் தன் கவிதையின் வலிமையால், நல்ல நண்பர்களின் நட்பால் உயிர் வாழ்ந்தவர். தமிழ் உள்ளவரை வாழ்வார்.""உண்மையில் அவர் மறையவில்லை; உவமைகள் உள்ளவரையில் வாழ்வார்'' என்று எழுதிய கவிஞர் சுரதாவின் கவிதையும் அழியாது.

Saturday, September 04, 2010

மணிக்கொடியை உயர்த்திய பி.எஸ்.ராமையா


த்தலகுண்டு' தமிழ்நாட்டில் உள்ள சிறு கிராமம். அந்த மண்ணுக்குத் தனி மகிமை உண்டு. படைப்பிலக்கிய எழுத்தாளர்களால்தான் இலக்கியத்தில் அந்தப் பெயர் பதிக்கப்பட்டது.வத்தலகுண்டு கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணிய ஐயர் - மீனாட்சியம்மாள்  தம்பதிக்கு கடைக்குட்டிமகனாக, 1905-ஆம் ஆண்டு மார்ச் 24-ஆம் தேதி பி.எஸ்.ராமையா பிறந்தார்.படிக்க வசதியில்லை. ஆனால், படிப்பில் ஆர்வம் கொண்ட ராமையா, வாரச் சாப்பாடு சாப்பிட்டும், உபகாரச் சம்பளம் பெற்றும் நான்காவது படிவம் வரையில் படித்தார். வேலை தேடி சென்னைக்குப் புறப்பட்டார். படித்த படிப்பு நாலாவது பாரத்துக்கு (ஒன்பதாம் வகுப்பு) மதிப்பு இருந்தாலும், அவருக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை. ஊருக்குத் திரும்பலாம் என்று நினைத்தபோது, திருச்சியில் ஒரு ஜவுளிக்கடையில் வேலை கிடைத்தது. ஆனால் அது சரிப்பட்டு வரவில்லை. பிறகு கடலூரில் சிறு சிறு பணிகள் செய்தார். அதுவும் ஒத்துவரவில்லை.மீண்டும் சென்னைக்குத் திரும்பி பற்பல இடங்களில் பணியாற்றி, ஆர்யபவன் உணவுச்சாலையில் சர்வர் வேலையில் சேர்ந்தார். 18 வயது வாலிபரான ராமையா, செய்யாத தொழிலில்லை. பார்க்காத வேலையில்லை.முன்பே நெஞ்சில் கனலை வளர்த்துக்கொண்டிருந்த தேசிய இயக்கம், ராமையாவைச் சிலிர்த்து எழச் செய்தது. காந்தி தொடங்கிய உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தில் கலந்துகொண்டதால், கைது செய்யப்பட்டு சிறைத் தண்டனை பெற்றார். அப்போதுதான் அவரது வாழ்க்கையில் திருப்பம் ஏற்பட்டது.சிறையில், வ.ரா., ஏ.என்.சிவராமன், சங்கு சுப்பிரமணியம் முதலியவர்களின் அறிமுகமும், நட்பும் கிடைத்தது. சிறைத் தண்டனை முடிந்தவுடன் கதர் விற்பனை நிலையத்தில் வேலை கிடைத்தது. கதர் ஆடைகளைத் தோளில் சுமந்தபடி விற்பனை செய்தார். மனதில் புதுத் தெம்பு ஏற்பட்டது.காந்திஜியின் நிர்மாணத் திட்டங்களில் ஈடுபாடு ஏற்பட்டது. தொண்டர் படை முகாமிலிருந்து தொண்டாற்றினார். ஓரணா விலையுள்ள சுதந்திர இயக்கப் புத்தகங்களை விற்பனை செய்தார். தூத்துக்குடி, ராஜபாளையம், திருநெல்வேலி, மதுரை, ஈரோடு முதலிய ஊர்களுக்குச் சென்று தொண்டர் படை முகாம்கள் அமைத்தார்.1932-இல் மீண்டும் சென்னைக்கு வந்த ராமையாவுக்கு அடுத்து என்ன செய்வதென்ற  குழப்பம் ஏற்பட்டது. காங்கிரஸ் இயக்கத்து ஈடுபாட்டைக் குறைத்துக்கொண்டார்.முன்பே ஜே.ஆர்.ரங்கராஜு நாவல்கள், ராஜம் ஐயர், கமலாம்பாள் சரித்திரம் முதலியவற்றைப் படித்திருந்ததால், படைப்பிலக்கிய ஆர்வமும் சேர்ந்திருந்தது."ஆனந்த விகடன்' சிறுகதைப் போட்டி அறிவிப்பைப் பார்த்தார். அதற்குக் கதை எழுதத் தூண்டியவர் சங்கு சுப்பிரமணியம்தான். அவர் தீவிர தேசிய இயக்கக் கொள்கை உடையவர். பாரதி பக்தர். ஆனந்த விகடன் சிறுகதைப் போட்டிக்குக் கதை அனுப்பினார் ராமையா. முதலிடம் பெற்ற கதைக்கு நூறு ரூபாய் பரிசு கிடைத்தது. ராமையா எழுதிய "மலரும் மணமும்' கதைக்கு ஆனந்த விகடனின் ஊக்கப்பரிசாக பத்து ரூபாய் சன்மானம் கிடைத்தது.கதையை அனுப்பிய அவசரத்தில் எழுதியவர் பெயரை எழுத மறந்துவிட்டார் ராமையா. கதையை வெளியிட்டு, எழுதியவர் பெயரைத் தெரிவிக்கவும் என்று பத்திரிகையில் எழுதிய பிறகே, எழுதியது தான்தான் என்று தெரிவித்து அந்தப் பத்து ரூபாயைப் பெற்றார்.அதன்பிறகு, பத்திரிகை உலகப் பணி அவரைக் கவர்ந்தது. "ஜயபாரதி' இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். எழுத்தாளர்களின் லட்சியத்தை வெளியிடும் ஜயபாரதி, சுதந்திரச் சங்கு, காந்தி ஆகிய இதழ்களைப் பற்றி இந்தத் தலைமுறையினர் அவசியம் அறிந்து கொள்ளவேண்டும். 1933-ஆம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கப்பட்டதுதான் மணிக்கொடி. ஸ்டாலின் சீனிவாசனின் ஆர்வமும், லட்சியமும்தான் மணிக்கொடி பிறக்கக் காரணம். "மணிக்கொடி' இதழ் பி.எஸ்.ராமையாவை மிகவும் கவர்ந்தது. "மணிக்கொடி'க்குத் தொடர்ந்து எழுதினார். மணிக்கொடிக்கு விளம்பரம் சேகரித்துக் கொடுக்கும் பணியிலும் இறங்கினார்.""மணிக்கொடி காலத்துக்குப் பின் தமிழ்நடையில் படிப்பவர், கேட்பவர் உள்ளங்களில் கனல் மூட்டும் விசையும் வேகமும் திராவிட முன்னேற்றக் கழக எழுத்தாளர் சிலரிடம் இருக்கின்றன. இந்த வகையில், அறிஞர் அண்ணாதுரை மற்றவர்களுக்கு ஒருபடி மேலே நிற்கிறார். ப.ஜீவானந்தத்துக்கு எழுத்திலும் பேச்சிலும் விசையும் வேகமும் கொண்ட தமிழ்நடை கூடியிருக்கிறது; கனல் இருக்கிறது'' என்ற தம் தூய கணிப்பை தாம் எழுதிய "மணிக்கொடி காலம்' என்ற தொடரில் எழுதி, தமிழுக்குப் பெரும் தொண்டு செய்திருக்கிறார் பி.எஸ்.ராமையா. "மலரும் மணமும்' வெளிவந்தபோது அவருக்குச் சிறுகதை எழுதும் நுணுக்கங்கள் தெரியாது. "மலரும் மணமும்' பிரசுரமான பிறகு அவருக்குப் புதிய உற்சாகம் ஏற்பட்டது. "மணிக்கொடி'யின் வளர்ச்சியில் நகமும் சதையுமாக இருந்த ராமையா, பல சிறுகதைகள் எழுதிக் குவித்தார்.ராஜாஜியிடமிருந்து கட்டுரை வாங்கி "மணிக்கொடி'யில் வெளியிட்டார் ராமையா. பலருக்கு அதில் அதிருப்தி. "கல்கி'யைத் தவிர வேறு இதழ்களில் தொடர்ந்து எழுதாத ராஜாஜி, "மணிக்கொடி'யில் தொடர்ந்து எழுதுவதாக வாக்களித்தார். ஆனால், அதை வெளியிடும் பேறு "மணிக்கொடி'க்கு இல்லை.சிறுகதை இலக்கியத்தைப் பற்றி பி.எஸ்.ராமையா அழுத்தமான கொள்கை உடையவர். "இலக்கியம் என்ற ஆலமரத்தின் ஒரு கிளையாக சிறுகதையைச் சொல்லலாம்' என்றார்.சி.சு.செல்லப்பா, பி.எஸ்.ராமையாவின் பண்பு, எழுத்து, வாழ்க்கை மூன்றையும் அறிந்தவர். தன் புதினம் வெளிவருவதற்கு முன்பே தன் சொந்தச் செலவில், "ராமையாவின் சிறுகதைப் பாணி' என்ற நூலை வெளியிட்டார். சிறுகதை இலக்கியத்தைப் பெரிதும் விரும்புபவர்கள் அந்த நூலைக் கட்டாயம் படிக்க வேண்டும். ராமையாவின் வாழ்க்கைச் சரிதத்தை விவரமாக அறிய, சாகித்ய அகாதெமி பரிசு பெற்ற "மணிக்கொடி காலம்' என்ற நூலைப் படிக்க வேண்டும்.அவர் வளர்த்த, தியாகம் செய்த, சிறிது காலத்துக்குக் (மணி) கொடியைத் தாங்கிப்பிடித்த "மணிக்கொடி' என்று வாசகர்களும் எழுத்தாளர்களும் விமர்சகர்களும் மார்தட்டிக் கொள்பவர்களும் பேசும்படியாகச் செய்த "மணிக்கொடி'யிலிருந்து அவர் நீக்கப்பட்டார். பின்னர், ராமையா தன் புது வாழ்க்கையை முடிவு செய்துவிட்டார். திரைப்படத் துறையில் கவனம் செலுத்தினார்; நாடகம் எழுதினார்; திரைப்படத் தயாரிப்புக்கு உதவினார். ஆனால், அவர் வாழ்க்கையை நடத்தியது, சிறுகதைக் கலைக்குத் தொண்டு செய்வதன் மூலமாக ஆனந்த விகடன், தினமணி கதிர் (முதல் ஜன்மம்), குமுதம் பத்திரிகைகளில் வாராவாரம் கதைகள் எழுதி, சன்மானத் தொகையைப் பெற்றார். சி.சு.செல்லப்பாவின் பட்டியல்படி அவர் 304 சிறுகதைகள், மூன்று நாவல்கள், ஆறு நாடகங்கள் எழுதியுள்ளார்.1957-இல் "பிரசிடென்ட் பஞ்சாட்சரம்' என்ற நாடகம் எழுதியுள்ளார். அந்த நாடகம், திரைப்படமாகவும் எடுக்கப்பட்டு பெரும் வெற்றிகண்டது. "போலீஸ்காரன் மகள்' என்ற நாடகம், மேடையில் வெகுவாகப் பாராட்டப்பட்டது. இந்த நாடகமும் திரைப்படமாக எடுக்கப்பட்டது.பி.எஸ். ராமையா, வெற்றிலை, சீவலுடன் புகையிலை போடும் பழக்கத்தால், அவரது தொண்டையில் புற்றுநோய் ஏற்பட்டு, உடல்நலம் பாதிக்கப்பட்டது.பி.எஸ்.ராமையா, 1983-ஆம் ஆண்டு மே 18-ஆம் தேதி (78வது வயதில்) காலமானார் என்ற செய்தியைக் கேட்டு எழுத்துலகமும், வாசகர் உலகமும் கண்ணீர் விட்டது.சிறுகதை இலக்கிய வளர்ச்சிக்குப் பாடுபட்டதையும் மணிக்கொடிக்காக அவர் செய்த தியாகத்தையும் எழுத்தில் அடக்கிவிட முடியாது.
தத்துவ மேதை டி.கே.சீனிவாசன்


1951-52-ஆம் ஆண்டுகளில் தமிழ் இலக்கிய உலகில் புதிய மறுமலர்ச்சி ஏற்பட்டது. பாரத நாட்டில் விடுதலைக்காக அந்நியரை எதிர்த்துப் போராடும் இயக்கங்களின் லட்சியம் ஒன்றானாலும், பல்வேறு பாதைகளில் அவை இயங்கிக் கொண்டிருந்தன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, அந்நியர் ஆதிக்க எதிர்ப்பைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் - நம்மிடையே உள்ள பிற்போக்குக் கொள்கைகளை, மூடப் பழக்க வழக்கங்களை, சாதி ஏற்றத் தாழ்வுகளை, வர்ணாசிரமக் கொள்கையை ஒழிக்கப் போராடுவது முதல் கடமை என்று வீறு கொண்டெழுந்து அதற்காகப் புது இயக்கத்தைத் தொடங்கினர்.மேடைப்பேச்சு மட்டும் போதாது; படித்த வகுப்பாரிடையே - சிந்திக்கும் சக்தி உடையவரிடையே திராவிடக் கழகத்தின் கொள்கையைப் பரப்ப, பத்திரிகைகள் வேண்டும்; பத்திரிகைகளில் எழுதப் பல படைப்பிலக்கிய எழுத்தாளர்கள் தோன்ற வேண்டும் என்ற அறிஞர் அண்ணாவின் திட்டப்படி பல கொள்கை ஏடுகள் தோன்றின. அவை பல எழுத்தாளர்களை உருவாக்கின.அறிஞர் அண்ணாவின் பேச்சால், எழுத்தால் ஈர்க்கப்பட்டு சிறந்த பேச்சாற்றலால் மேடையில் கனல் கக்கிய இளைஞர்களுள் டி.கே.சீனிவாசனும் ஒருவர்.1952-ஆம் ஆண்டு வழக்கமான எழுத்தாளர்களுக்கு ஒரு சவால்போல் "பஞ்சும் பருத்தியும்' எழுதிய தொ.மு.சி.ரகுநாதனும் "ஆடும் மாடும்' எழுதிய தி.கோ.சீனிவாசனும் புத்திலக்கியத்தால் பிரபலமானவர்கள்.தி.கோ.சீனிவாசன், திருச்சியில், 1922-ஆம் ஆண்டு நவம்பர் 14-ஆம் தேதி பிறந்தார். தந்தையார் பெயர் கோதண்டபாணி. தாயார் பெயர் ஆனந்தவல்லி. ஊர்ப்பெயரின் முதல் எழுத்தையும், தந்தை பெயரின் முதல் எழுத்தையும் இணைத்து தி.கோ.சீனிவாசன் என்று அழைக்கப்பட்டார். ஆனால், தி.கோ.சீனிவாசன் என்பதைவிட டி.கே.சீனிவாசன் என்று சொன்னால்தான் பலருக்குப் புரியும்.டி.கே.சீனிவாசன் என்ற பெயரைக் குறிப்பிட்டவுடனே, ""ஓ! ஆடும் மாடும் எழுதிப் புகழ் பெற்றவரா?'' என்று மாற்றுக் கொள்கை உடையவர்களும் பெருமையுடன் கேட்கும் அளவுக்கு எழுத்தால் புகழ்பெற்றவர் அவர். தொடக்கக் கல்வியைத் திருச்சி மற்றும் பசுமலையிலும் கற்ற அவர், ராமநாதபுரத்தில் பள்ளி இறுதிப் படிப்பைத் தொடர்ந்தார். அதை முடிக்கும் முன்பே 1941-இல் அவருக்கு ரயில்வே துறையில் வேலை கிடைத்தது. 17 ஆண்டுகள் ரயில்வே பணியில் தொடர்ந்தார். இளைஞராக இருந்தபோதே எழுத்துப் பணியில் ஈடுபாடும், அரசியலில் ஆர்வமும் ஏற்பட்டன. தன் வயதொத்த இளைஞர்களை ஒன்றுசேர்த்து படிப்பகம், கழகங்கள் அமைத்தார். புதிய கட்சி தொடங்க வேண்டும் என்ற ஆர்வமும் எழுந்தது. ரயில்வே துறையில் எழுத்தாளராக இருந்த அவருக்கு அந்தப் பணி நிறைவைத் தரவில்லை. எழுத்தரைவிட எழுத்தாளராக இருப்பதே அவர் விருப்பம்.1944-இல் சரசுவதி என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். அவரது பெயரால்தான் புத்தகங்கள் வெளிவந்தன. தத்துவமேதை டி.கே.சீனிவாசன் என்றே நூலில் பெயர் அச்சிடப்பட்டிருக்கும்.ரயில்வே பணியில் ஈடுபட்டிருந்தபோதே, நீதிக்கட்சி, சுய மரியாதை இயக்கம், திராவிடக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் என்று அவர் அந்த நாளிலேயே சீர்திருத்த மனப்பான்மையில் பேசியும் எழுதியும் வந்தார். வாழ்க்கை அவருக்குப் போராட்டமானதால் அரசியல் இயக்கமா, ரயில்வே பணியா என்ற மனப் போராட்டம் ஏற்பட்டபோது முழுநேர அரசியல் அவரை ஆட்கொண்டது. ஆனால், குடும்ப வாழ்க்கையையும் நடத்த வேண்டுமே! எனவே, ரயில்வே பணியைத் துறந்தார். எழுத்தை நம்பி, தன் பேச்சுத் திறமையை நம்பி சென்னைக்குக் குடியேறினார்.1.11.1951-இல் "ஞாயிறு' என்ற இதழில் அவரது சிறுகதை "பதிவு செய்யப்படாதவள்' வெளிவந்தது. பிறகு, தஞ்சையிலிருந்து ஏ.கே.வேலன் நடத்தி வந்த "ஞாயிறு' என்ற இதழின் உதவி ஆசிரியராகப் பொறுப்பேற்றார்.அவருடைய சிறுகதைகளின் முக்கிய கருவே விதவை மறுமணம். விதவைக்கு மறுவாழ்வு என்ற கொள்கையை அவர் பல கதைகளில் வற்புறுத்தியிருக்கிறார். பலத்த எதிர்ப்பு அந்தக் கதைகளுக்கு இருந்தது. மிகத் துணிவுடன் கதையின் கருவை மிக அழுத்தமாக வெளியிட்ட கொள்கை வீரர் அவர். "மஞ்சளோடு மங்களமும் மறைய வேண்டும்' என்று விதண்டாவாதம் பேசிய பழைமைவாதிகளுக்குப் பதில் கூறுவதுபோல், "மலரும் பூவின் மணத்தைத் தடுக்க எந்த வேலியும் பயன்படாது' என்று எழுதினார்.""கண்டதும் தோன்றுவதற்குப் பெயர் காதலன்று; உடற்கவர்ச்சி. யாராவது ஒருவருடைய ஏதாவது சில நடவடிக்கைகள் நமக்குப் பிடித்துப் போகின்றன. அப்போது பிறக்கிறது அன்பு. அதே நடவடிக்கைகள் தொடர்ந்து நம் வாழ்க்கையில் குறுக்கிடும்போது நட்பு உருவாகிறது. அந்த நடவடிக்கைக்குரியவரைச் சந்திக்காவிட்டால் என்னவோபோலத் தோன்றும் போதுதான், அது காதல் என்ற பெயரை அடைகிறது'' என்று காதல் தத்துவத்தை டி.கே.சீனிவாசனைப்போல் எளிமையாக விளக்கியவர் யாருமில்லை.1960-ஆம் ஆண்டு சென்னைக்கு வந்தது முதல் கழகத்தில் செயற்குழு உறுப்பினராக இருந்தார். தி.மு.க. நடத்திய போராட்டங்களில் அவர் பங்கு குறிப்பிடத்தக்கது. தொழிலாளர் உரிமைக்காகப் பல போராட்டங்கள் நடத்தினார். திராவிட முன்னேற்றக் கழகம் அகவிலை உயர்வை எதிர்த்து நடத்திய போராட்டத்துக்குத் தலைமை வகித்தார். மூன்று மாதங்கள் சிறைத் தண்டனையும் பெற்றார்.பேச்சுக் கலையில் வல்லவரான அவர், பல நாடுகளுக்கும் சுற்றுப்பயணம் சென்றிருக்கிறார்.திருச்சியில் நடைபெற்ற தி.மு.க. இரண்டாவது மாநில மாநாட்டில், "தத்துவ வரலாறு' என்ற தலைப்பில் உரையாற்றினார். மேலைநாட்டுத் தத்துவங்களைக் கீழை நாட்டுத் தத்துவங்களோடு ஒப்பிட்டுப் பேசினார். அதுமுதல் அவரை "தத்துவ மேதை' என்றே அழைத்தனர்.அறிஞர் அண்ணாவின் மீது பெருமதிப்பு உடையவர். அண்ணாவின் பேச்சையும் கருத்துகளைக் கூறும் திறனையும் கணித்தறிந்து அவரைப்போலவே பேசும் திறன் பெற்றவர். தொலைவிலிருந்து அவரது பேச்சைக் கேட்போர் அண்ணாதான் பேசுகிறாரோ என்று ஐயப்படும் அளவுக்கு அவரது பேச்சிலும் ஒற்றுமை இருந்தது. ஒரு முறை இவரது பேச்சை வீட்டிலிருந்தபடி கேட்ட அண்ணாவின் துணைவியாரே அண்ணாதான் பேசுகிறாரோ என்று நம்பும்படியானதாம்.கொள்கை விளக்க மேடைப் பேச்சுகள் மூலமாக மட்டுமல்லாமல் இவரது இலக்கியப் படைப்புகள், கழகத்தின் பிற்காலப் படைப்பாளிகளுக்கு மிக உதவியாக இருந்தன. டி.கே.சி.யின் புதினம், சிறுகதை, கட்டுரைகள் மிக்க பலமாக அமைந்தன. திராவிட இயக்கத்துக்கென்று தனி படைப்புக்கலை உருவானது. திராவிட இயக்கக் கொள்கைகளை, சிந்தனைகளை, சமூக மறுமலர்ச்சியை, தன்மான உணர்வை வளர்த்தன. அதற்குக் கதைகள், புதினங்கள் உதவின. சிறுகதை இலக்கியத்தின் மூலம் சீர்திருத்தக் கொள்கைகளை விளக்கலாம் என்று உறுதியாக நம்பி கதைகள், நாடகங்கள் எழுதிவந்த அறிஞர் அண்ணாவின் சமகாலத்தவர்கள் வரிசையில் டி.கே.சீனிவாசனின் எழுத்துப் பணியை மறக்க முடியாது. முழுக்க முழுக்க கொள்கைப் பிடிப்பாளரான அவர், எக்காலத்திலும் எதற்காகவும் முற்போக்குக் கொள்கைகளை விட்டுக் கொடுத்தாரில்லை. திராவிட இயக்கப் புதினப் படைப்பாளிகளாலும் மற்ற விமர்சனம் செய்பவர்களாலும் தத்துவ மேதை டி.கே.சீனிவாசனின் "ஆடும் மாடும்' புதினம் இன்றும் பேசப்படுகிறது. "ஆடும் மாடும்' அவருக்குப் பெருமை சேர்த்த நாவல். அவருடைய முதல் நாவல். "கதைக்காக ஒருமுறை - கருத்துக்காக ஒருமுறை - நடைக்காக ஒருமுறை என்று படித்து ரசிக்கக்கூடிய புதினம்'  என்று விமர்சகர்கள் பாராட்டியுள்ளனர். இதுவரை மூன்று சிறுகதைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன. தத்துவ மேதை தன் கதைகளிலும், புதினங்களிலும் பாரதிதாசனாரையும் திருவள்ளுவரையும் வாய்ப்பு ஏற்படும் போதெல்லாம் சாட்சியாக நிற்க வைக்கத் தவறியதில்லை.தன் பேனா நர்த்தனத்தைப் பல பத்திரிகைகளில் பணியாற்றி புலப்படுத்தியதோடு "தாய்நாடு' என்ற இதழையும் சில காலம் வெளியிட்டார். இழப்பு நேர்ந்ததால் அந்தப் பத்திரிகையை நிறுத்திவிட்டார்.பாடநூல் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராகவும், தமிழகத் திட்டக் குழுவின் தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார்.தத்துவ மேதை டி.கே.சீனிவாசன், 1989-ஆம் ஆண்டு அக்டோபர் 9-ஆம் தேதி இயற்கை எய்தினார். திருச்சி கோதண்டபாணி சீனிவாசனின் இரு புதல்வர்களான நாடாளுமன்ற உறுப்பினர் இளங்கோவனும், பேராசிரியர் வில்லாளனும் தந்தையின் புகழும் பெயரும் நிலைத்து நிற்கச் செய்கிறார்கள்.
கருத்துக்கள்

தத்துவமேதை தி.கோ.சீனிவாசன் அவர்களைப் பற்றி நன்றாக நினைவு கூர்ந்துள்ளார் கலைமாமணிவிக்கிரமன் அவர்கள்.அரசுப் பொறுப்புகளில் இருந்த போதும் நேர்மையும் துணிவும் மிக்கவராகச் செயல்பட்டவர்; அவரது தோற்றமும் எழுத்தும் அவரை இளைய அண்ணாவாகப் பலரால் கருதவைக்கப்பட்டன. அரசு நினைவுகூர வேண்டிய ஒருவரைப் படிப்போருக்கு நினைவுபடுத்திய கலைமாமணி விக்கிரமனுக்கும் தினமணிக்கும் பாராட்டுகள். தத்துவ மேதையின் நாடாளுமன்றப் பணிச் சிறப்பையும் குறிப்பிட்டிருக்கலாம். தந்தை வழியில் நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கும் திரு இளங்கோவன், கல்வித்துறையில் செயலாற்றும் பேராசிரியர் வில்லாளன் ஆகியோர் தத்துவ மேதையின் புகழைச்சிறக்கச் செய்வார்களாக! 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/5/2010 5:25:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *