Tuesday, December 04, 2018

மன்பதை நூல் மருத்துவர் க.ப.அறவாணன் – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல

மன்பதை நூல் மருத்துவர் க.ப.அறவாணன்

தமிழர்க்கு எழுச்சி ஊட்டும் வகையில் பேசியும் எழுதியும் வந்தாலும் மன்பதை நோக்கில் தான் காணும் குறைகளையும் வெளிப்படுத்தி வருபவரே மனோமணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் அறிஞர் க.ப.அறவாணன். நூலாசிரியர், இதழாசிரியர், கதை எழுத்தாளர், பதிப்பாசிரியர் என்ற முறையில் தமிழுக்கு அணிசெய்யும் வகையில் தொண்டாற்றி வருபவர்.
திருவாரூர் (தஞ்சாவூர்) மாவட்டம் கடலங்குடியில் ஆவணி 24, 1972 / 8.9.1941 அன்று பழனியப்ப(பிள்ளை)-தங்கபாப்பு இணையரின் திருமகனாகப் பிறந்தார். இவர் மனைவி தமிழறிஞர் முனைவர் தாயம்மாள் அறவாணன் தமிழ்நூல் படைப்பாளர். மகன் அறிவாளன், மருமகள் வாணி அறிவாளன்.
கல்வி
தஞ்சாவூர் விட்டுணுபுரம் சியார்சு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி இறுதி வகுப்பை முடித்தவர்(1959), அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்று (1959-63) புலவர் பட்டம் பெற்றார். அங்கேயே கீழ்த்திசை மொழி இளங்கலை (பி.ஓ.எல்.) பட்ட வகுப்பில்(1963-65) சேர்ந்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். உடன் பேச்சு  ஆங்கிலம், மொழியியல் ஆகியவற்றில் சான்றிதழ்த் தேர்ச்சியும் பெற்றார். தமிழ் முதுகலையைத் திருனந்தபுரத்தில் உள்ள கேரளப் பல்கலைக் கழகத்தில் பெற்றார்(1967).  இதிலும் முதல் வகுப்பில் முதன்மை பெற்றார்.
 சென்னைப் பல்கலைக்கழகத்தில், மானுடஇயல்(1972), தொல்லியல்(1973) சான்றிதழ்கள், இலக்கிய இளங்கலை(பி.லிட்.)(1974), இலக்கிய முதுகலை(எம்.லிட்.)(1975) பட்டங்கள் பெற்ற பின்னர் முனைவர் பட்டம் பெற்றார்(1977). ஆய்வு அளிப்பேட்டுத் தலைப்பு: தொல்காப்பியம் – அகத்திணையியல், புறத்திணையியல் உரைவேறுபாடுகள் என்பதாகும்.
சொற்பொழிவாளர்
   சிறந்த சொற்பொழிவாளராகத் திகழும் அறவாணன் படிக்கும் பொழுதே தன் திறமையை வெளிப்படுத்தினார். மாணாக்க நிலையிலும் ஆசிரிய நிலையிலும் ஆங்கிலச்  சொற்பொழிவுப் போட்டிகள், தமிழ்ச்  சொற்பொழிவுப் போட்டிகள், பிற போட்டிகளில் பங்கேற்றுப் பரிசுகளை வாங்கிக் குவித்தார்.
அறிந்த  பிற மொழிகள்
ஆங்கிலம், ஃபிரெஞ்சு, உருசியன் முதலான பிற மொழிகளையும் அறிந்தவர். சென்னைப்பல்கலைக்கழகத்தில் உருசியன்(1971), பிரான்சில் கத்தோலிக்கக் கல்வி நிறுவனத்தில் பிரெஞ்சு மொழியில் (1978)சான்றிதழ்த் தேர்ச்சியுற்றார். தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆராய்ச்சிப் படைப்புகளை வழங்கி வருகிறார்.
பணியாற்றிய இடங்கள்
 பாளையங்கோட்டையில் உள்ள தூய சேவியர் கல்லூரியில் 1967 ஆம் ஆண்டு தமிழ் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்து தன் பணி வாழ்க்கையைத் தொடங்கினார். அடுத்த கல்வியாண்டில்(1968-69) பாபநாசம், திருவள்ளுவர் கல்லூரியில் முதல்வராகப் பணிப் பொறுப்பேற்றார். அதற்கடுத்த கல்வியாண்டில்(1969-70) முன்னர்ப் பணியாற்றிய தூய சேவியர் கல்லூரியில் மீண்டும் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார். தொடர்ந்து சென்னை பச்சையப்பன் கல்லூரியில் 1970இல் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தவர் 7 ஆண்டுகள் இங்கே பணியாற்றினார். மேற்கு ஆப்பிரிக்கா செனகாலில் தக்கார் பல்கலைக்கழகத்தில்  மானுடஇயல் ஆராய்ச்சியாளராக 1977-82 இல் பணியாற்றி அயல் மண்ணில் தமிழ்த் தொண்டாற்றினார்திராவிட-ஆப்பிரிக்கர்களின் பழக்கவழக்கப் பண்பாட்டு ஒற்றுமைகள் என்னும் தலைப்பில் ஆய்வேடு அளித்தார். இதனடிப்படையில் சில நூல்களைப் பின்னர் எழுதினார்.
  1982 இல் தாயகம் திரும்பியவர் சென்னை இலயோலா கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியில் சேர்ந்து 1987 வரை பணியாற்றினார். அதற்கடுத்த 11 ஆண்டுகள்(1987-98)  புதுவைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும் பணியாற்றினார். தொடர்ந்து வந்த 3 ஆண்டுகள் (1998-2001)மனோன்மணியம் சுந்தரனார்  பல்கலைக் கழகத்தின் (திருநெல்வேலி) துணைவேந்தராக சீர்மிகு பணிகளை யாற்றினார்.
1982இல் வேலையில் சேர்ந்த நாள் முதல் விடுப்பு எடுக்காமல் அயராது பணியாற்றியமைக்காக இலயோலா கல்லூரி  ஆட்சிக்குழு, ஆண்டுதோறும் பத்தாயிரம் உரூபாய்ப்பரிசு அளித்துச் சிறப்பித்தது.
கட்டுரையாளர் 
 மாணவ நிலையிலும் ஆசிரிய நிலையிலும் பல்வேறு ஆராய்ச்சிக் கட்டுரைகளை அளித்துப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றார். 1960 முதல் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் வெளியிட்டுள்ளார். தவத்திரு (உ)லூர்து எத்தனப்பள்ளி அடிகளார் நினைவு ஆராய்ச்சிக் கட்டுரைப் பரிசு, வயவர் ஆர்.கே.  சண்முகம்(செட்டியார்)  தமிழ்  ஆராய்ச்சி  விருது(அண்ணாமலைப்   பல்கலைக்கழகம்)(1963), இராணி சேது  பார்வதி(பாய்)  வரலாற்று  ஆராய்ச்சிப்  பரிசு (அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.)(1964) முதலியன குறிப்பிடத்தக்கன. மேலும் 1983-84இல் மிகுதியான  ஆராய்ச்சிக்கட்டுரைகளை  வெளியிட்டமைக்குச் சிறப்புப் பரிசும் பெற்றார்.
  தினமணி, தினமலர், குமுதம், கல்கி, சுதேசமித்திரன், தமிழ்நாடு, செந்தமிழ்ச்செல்வி, மறவன் மடல், முத்தாரம், மக்கள் செங்கோல், தாமரை, ஆராய்ச்சி, இளந்தமிழன், தமிழ்க்கலை, தென்மொழி, கொங்கு, கலைமகள், தமிழ்மாருதம், மலேசிய நண்பன், தமிழ்முரசு, அறிக அறிவியல் முதலான பல்வேறு இதழ்களில் இவரது கட்டுரைகள் இடம் பெற்றுப் பொது மக்களனின் பாராட்டுகளைப் பெற்றுவருகின்றன.
கல்விப்பணியும் தமிழ்ப்பணியும் ஆற்றியமைக்கு வகித்த பொறுப்புகள்
 திராவிட ஆராய்ச்சி மையம்,     இந்திய  நடுவண்மொழி நிறுவனச் செம்மொழித் திட்டம்(மைசூர்), தமிழ் சாகித்ய அகதமி(தமிழக அரசு), தமிழாராய்ச்சி நிறுவனம், தென்னகப் பண்பாட்டு மையம், தமிழ்வளர்ச்சிக்  குழு(தமிழக அரசு), இந்திய,  மாநில, அயல்நாடுகளில் தமிழ்வளர்ச்சிக்குழு(தமிழக அரசு),   தமிழ்ப்பல்கலைக்கழக ஆட்சி மன்றம், புதுவை  மொழியியல் பண்பாட்டு  நிறுவன ஆட்சிக்குழு, புதுவை  மொழியியல் பண்பாட்டு நிறுவன மொழிபெயர்ப்புக்குழு (பாரதிதாசன் கவிதைகள்), மதுரை தோக்கு பெருமாட்டி(Lady Doak) கல்லூரியின் கல்விக்குழு, பாரதிதாசன் பல்கலைக்கழகத் தெரிவுக்குழு ஆகியவற்றில் உறுப்பினராக இருந்து தொண்டாற்றியுள்ளார்.
 உயர்கல்வியின் தமிழ்ப்பகுதிக் குழு(தமிழக அரசு) (1995), உலகத்தமிழ் ஆராய்ச்சி  நிறுவனத்தின் சிறப்புக்குழு (1997), சிறந்த புத்தக வெளியீட்டுத்தேர்வுக்குழு(தமிழ்வளர்ச்சித் துறை, தமிழக அரசு) (1997), ஆகியவற்றில் தலைவர் பொறுப்பேற்று வழி நடத்தியுள்ளார்.
 அனைத்திந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத்தின் செயலர், பொருளாளர் முதலான பொறுப்புகளை 1991-2000ஆண்டுகளில் ஏற்றுத் திறம்பட நடத்திச் சென்றுள்ளார்.
  உலகச் சைவ மன்றத்தின்(இலண்டன்) துணைத்தலைவர், சிகாகோ உலகத் தமிழ் மொழிக் கூட்டமைப்பின் இந்திய ஒருங்கிணைப்பாளர், உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் (கோலாலம்பூர், மலேசியா) அறக்கட்டளை உறுப்பினர், புது செர்சி தமிழ்ச்சங்கத்தின் நேற்று, இன்று, நாளை செயல்பாட்டின் ஒருங்கிணைப்பாளர், கணக்கெடுப்பு 2000 சிந்தனை வட்டம், புது செர்சி அமைப்பின் தமிழ்நாட்டு ஒருங்கிணைப்பாளர் எனப் பிற பொறுப்புகளையும் ஏற்றுத் திறம்படச் செயலாற்றியுள்ளார்.
நூல்கள்
 பண்பாட்டுப் பழக்க வழக்கங்களின் குறைகளைச் சுட்டிக் காட்டும்  இவரது கருத்துகள் ஒரு சாராரால் எதிர்ப்பிற்கும் மறு சாராரால் அறுவை மருத்துவம் எனப் பாராட்டிற்கும் உள்ளாகின்றன.
தமிழர் குமுகவியல், பண்பாடு, வாழ்க்கை முன்னேற்ற  நூல்கள், மொழி பெயர்ப்பு  நூல்கள், வரலாறு, தன் வரலாறு, கல்வி, பயண  நூல், திறனாய்வு, இலக்கணம், சிறுகதைத் தொகுப்புகள், புதினம், அறிவியல், அற இயல், பொது எனப் பல துறைகளிலும் எழுபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
 அவருடைய ஆய்வுகள்(His studies), மானிடவியல் ஆய்வுகள்(Anthropological studies), பாம்பு வழிபாடு(The serpent cult), திராவிடர்கள் (பதிப்பு நூல்)(Dravidians), தமிழியல் ஆராய்ச்சிக் கட்டுரைகள்(Research papers on Tamilology) ஆகிய ஆங்கில நூல்களையும் எழுதியுள்ளார்.
  சிலர் எண்ணுவதுபோல் இவர் குறைகளைமட்டும் கூறுபவர் அல்லர். தமிழ்ச் சமுதாயம் நோயும்  மருந்தும், தமிழ்ச்சமூகம்  அவலங்களும்  தீர்வுகளும், தமிழர் வருந்தவும்  திருந்தவும், தமிழர் உணரவும் உயரவும் முதலான நூல் தலைப்புகள் இதனை உணர்த்தும். எனவே, பேராசிரியர் முனைவர் க.ப.அறவாணன், மன்பதை நூல் மருத்துவர் என அழைக்கப்பெறலாம்.
 தமிழர்  களைகளும்  கவலைகளும், தமிழர்  +  தன்னம்பிக்கை =  தற்கொலை, தமிழரின்  எழுச்சியும்  வீழ்ச்சியும், தமிழர் தடங்கள் தடுமாற்றங்கள், தமிழா எழுந்து வா, இலஞ்சம் எனும் நஞ்சு, நீயே  வெல்வாய், உயருங்கள், பொறு புறக்கணி புறப்படு, புரட்சிப் பொறிகள், தமிழர் சிந்தனை  புதிது, தமிழரால் முடிந்தால்  தமிழால் முடியும், தமிழா!  தலைமை  தாங்க வா முதலான நூல்கள் இவர் எப்பொழுதும் தமிழரிடையே உள்ள அவலங்களையும் அவற்றைப் போக்குவத ற்குரிய வழிமுறைகளையுமே சிந்தித்து வந்துள்ளார் என்பதை உணர்த்தும்.
தொல்தமிழர் காலம், தொல்வழிபாட்டுக் காலம், அயலவர் காலம், நாயக்கர் காலம், இசுலாமியர் காலம், பாண்டியர் காலம், சோழப் பேரரசின் காலம் எனக் காலமுறையிலே தமிழர் வரலாற்று நூல்களை அளித்துள்ளமை சிறப்பிற்குரியதாகும். இவரின் தமிழர்மேல்  நிகழ்ந்த  பண்பாட்டுப் படையெடுப்புகள் என்னும் நூலை விழிப்புணர்வு பெற வேண்டிய ஒவ்வொருவரும் படிக்க வேண்டும். வரலாற்று நூல்களில் ‘ஈழம்: தமிழரின் தாயகம்’ என்பது குறிப்பிடத்தக்க படைப்பாகும்.
சிறந்த புத்தகங்களுக்கான பரிசுகளும் விருதுகளும்
 பேரா.க.ப.அறவாணன், ‘சைனரின் தமிழிலக்கண நன்கொடை’ (1978), ‘தமிழர் பிறந்தகம்’(1986), ‘தமிழர்தம் மறுபக்கம்’(1990), ‘படைப்பாளி+சமுதாயம்= இலக்கியம்’ (1997), என்னும் நூல்களுக்காகத் தமிழக அரசின் விருதுகளைப் பெற்றுள்ளார்.
  ‘கவிதையின் உயிர், உள்ளம், உடல்’ நூலுக்குத் திருப்பூர்த் தமிழ்ச்சங்கம்(1994), ‘தமிழ்ச் சமுதாய வரலாறு’ நூலுக்குச் சென்னைத் தமிழ்ச்சங்கம் (1996),  ‘இலஞ்சம் எனும் நஞ்சு’          நூலுக்குப் பல்மருத்துவர் தெய்வசிகாமணி அறக்கட்டளை (திருச்சி)(2011),  ‘தமிழ் மக்கள் வரலாறு (நாயக்கர் காலம்)’ நூலுக்கு உலகத் தமிழ்ப் பண்பாட்டு பேரவை(நாகர்கோயில்)(2013) எனத் தமிழமைப்புகளும் இவரது நூற்சிறப்பை உணர்ந்து விருதுகள் வழங்கியுள்ளன.
தமிழர் அடிமையானது  ஏன்?  எவ்வாறு? என்னும் நூல், தினத்தந்தியின் நூறாயிரம் உரூபாய்ப் பரிசினைப் பெற்றது.
 சிறந்த சிறுகதைக்கான விருதுகளைத் திண்டுக்கல் மொழியியல் நிறுவனமும் திருவாரூர் இயற்றமிழ் அகமும் வழங்கியுள்ளன. சிறந்த கட்டுரைக்கான விருதினைத் திண்டுக்கல் திருவள்ளுவர் மன்றம் வழங்கியுள்ளது.
விருதுகள்
அமெரிக்கன் தன் வரலாற்றாளர் நிறுவனம்(American Biographical Institute) 1997 ஆம் ஆண்டிற்கான சிறந்த மனிதர் விருது அளித்தது.
1986 இல் அனைத்திந்தியக்  கிறித்தவ அமைப்பின் கல்வி நிறுவனம்(புதுதில்லி), சிறந்த பேராசிரியர் விருது அளித்தது.
    குன்றக்குடி ஆதினம் வழங்கிய கபிலர் விருது, திருவள்ளுவர் மன்றம்(கோவில்பட்டி) வழங்கிய திருவள்ளுவர் விருது, திருக்குறள் பேரவை(திருச்சி) வழங்கிய தமிழ் ஞாயிறு விருது, முருகாலயம்(சென்னை) வழங்கிய மாவீரன் பூலித்தேவன் விருது, பண்ணைத் தமிழ்ச்சங்கம்(சென்னை) வழங்கிய தமிழறிஞர் விருது,  கேம்பிரிட்சு  வரலாற்று மையம்(இங்கிலாந்து) வழங்கிய 1998 ஆம் ஆண்டிற்கான சிறந்த மனிதர் விருது முதலியன இவரது சிறப்பைத் தமிழன்பர்கள்போற்றியதற்கு எடுத்துக்காட்டுகளாகும்.
தமிழக அரசின்  திருவள்ளுவர்  விருது  நூறாயிரம் உரூபாய், இராசா வயவர் முத்தையா(செட்டியார்)  விருது நூறாயிரம் உரூபாய், திரு. சி.பா. ஆதித்தனார்  விருது நூறாயிரம் உரூபாய் முதலியன  இவர் பெற்ற சிறப்பான விருதுகளாகும்.
பயணம் மேற்கொண்ட நாடுகள்
ஆத்திரேலியா(1992), ஆத்திரியா(1984), கனடா(1994,1996,1999,2000), செக்கோசுலோவிக்கியா(1977), தென்மார்க்கு (1984), ஃபிரான்சு(1977, 1978, 1980, 1994, 2000), காம்பியா(1978), செருமனி(1980, 1981, 1984,1993,1994,1996,1999), ஆங்காங்கு(1979),  இத்தாலி(1978,1979), சப்பான்(1979), மலேசியா(1979,1994,1996,1997,1998,1999), மொரிசியசு(1996), நைசீரியா(1997), செனகால்(1997-1981), சிங்கப்பூர்(1979,1981,1992,1994,1996,1997,1998,1999,2000), தென் ஆப்பிரிக்கா(1996), இலங்கை(1975,1995), சுவிட்சர்லாந்து(1993), இங்கிலாந்து (1997,1978,1979,1980, 2000), அமெரிக்கா(1979, 1994, 1996, 2000) முதலான 20 நாடுகளுக்கும் மேற்பட்ட அயல்நாடுகளுக்குத் தமிழ்ப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
     மன்பதை நூல் மருத்துவர் பேராசிரியர் முனைவர் க.ப.அறவாணன் வழியில் தமிழரிடையே ஏற்பட்டுள்ள அயல் தாக்க நோய்களை அறிந்து தமிழ்ப்பண்பாட்டை மீட்டெடுத்துத் தமிழராய்த் தலை நிமிர்ந்து வாழ்வோம்!
     இலக்குவனார் திருவள்ளுவன்

Sunday, November 18, 2018

புத்தகக் கொடையாளர் கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன் – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல

புத்தகக் கொடையாளர்

கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன்

இன்றைக்கு நாம் ‘வேட்பாளர்’ போன்ற நல்ல தமிழ்ச்சொற்களைத் தேர்தல் களத்தில் பயன்படுத்துகிறோம். இவற்றை அறிமுகப்படுத்தி இதழ் வழி பரப்பியவர் கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன். மேடைகளில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா முதலான தலைவர்கள் ஆற்றிய உரைகளைச் சுருக்கெழுத்து அறியாமலேயே சொல் பிறழாமல் எழுதி அச்சில் கொண்டு வந்தவர் கவிக்கொண்டல்.  மூத்த எழுத்தாளர், மூத்த இதழாளர், மூத்த கவிஞர், மூத்த நூலாசிரியர், மூத்த பதிப்பாளர், மூத்த தமிழறிஞர், புத்தகக் கொடையாளர் எனப் பல்வகைப் பெருமைகளுக்கும் உரியவர்.
பிறப்பு
திருத்தங்கூர் மாணிக்கனார்-விருத்தாம்பாள் இணையராக வைகாசி 26, 1959 / 8.6.1928 அன்று இப்போதைய திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசலில் பிறந்து சிறந்தவர்.
பள்ளி இறுதி வகுப்பு முடித்ததும் பெரும்புலவர் இராமநாதம்(பிள்ளை) என்பாரிடம் இலக்கிய இலக்கணப்பாடங்கேட்டுத் தமிழ்ப்புலமை மிக்கவர் ஆனார்.

இதழ்ப்பணி
1949 முதல் பல்வேறு இதழ்களில் துணையாசிரியர், பொறுப்பாசிரியர், ஆசிரியர் எனப் பல பொறுப்புகள் வகித்து இதழ்ப் பணியாற்றி வருகிறார்.
விடுலை, மாலைமணி, நம் நாடு, நவமணி, மன்றம், தனியரசு, தமிழினஓசை(மும்பை) குடும்பநல எழுச்சிக் கதிர், காவியம்,  முதலான இதழ்களில் பணியாற்றித் திராவிட இயக்கக் கருத்துகள் பரவுவதற்கு உறுதுணையாக இருந்தார். இவரே எழுச்சி என்னும் இதழை நடத்தி வந்தார்.
1955இல் உவமைக் கவிஞர் சுரதாவுடன் இணைந்து ‘காவியம்’ என்னும் கவி இதழை நடத்தினார். மரபுக் கவிதைகள் நிலைப்பதற்கு 1979இல் ‘கவிக்கொண்டல்’ என்னும் இதழை நடத்தினார். 5 ஆண்டுகளில் இவ்விதழை நிறுத்தும் சூழ்நிலை ஏற்பட்டது. இருப்பினும் 1991இல் மீண்டும் கவிக்கொண்டல் இதழைத் தொடங்கித் தொடர்ந்து நடத்தி வருகிறார்.
1983 இல் மும்பையில் தங்கியிருந்து ‘தமிழின ஓசை’ என்னும் திங்களிருமுறை இதழின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றினார்.
தம்  இதழ் மூலம் இளம் கவிஞர்களையும் இளம் எழுத்தாளர்களையும் ஊக்குவித்து வருகிறார்.
கவிதைக் காவலர்
 இதுவரை ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட கவிஞர்களை உருவாக்கியுள்ளார். புதுக்கவிதை என்ற பெயரில் எழுத்துப் பிழைகளுடனும் அயற்சொற்கள் கலந்தும் எழுதும் இளைஞர்கள் நல்ல தமிழில் மரபுக் கவிதைகள் எழுதக் கற்பிக்கின்றார்.
புதுதில்லித் தமிழ்ச்சங்கம், பெங்களூர்த் தமிழ்ச்சங்கம், அந்தமானில் வி.சி.பி.தமிழ்ச்சங்கமாநாடு, எனத் தமிழகத்திற்கு வெளியேயும் கவியரங்கங்களில் பங்கேற்றுள்ளார். கப்பல் கவியரங்கம், வானூர்திக் கவியரங்கம், ஆமதாபாத்து, ஆக்கிரா, அரித்துவார், இரிசிகேசு ஆகிய நகர்களுக்கான இலக்கியப் பயணம், கோவா இதழாளர் பயணம் ஆகியவை மூலம் கவிதைப் பணியாற்றியுள்ளார்.
உலக மாநாடுகளில் பங்கேற்பு
சென்னையில் 1968இல் நடந்த இரண்டாவது உலகத்தமிழ்மாநாடு, கோலாலம்பூரில் 1987இல் நடந்த ஆறாவது உலகத்தமிழ் மாநாடு ஆகியவற்றில் கவியரங்கங்களில் பங்கேற்றார். 1989இல் அண்ணாமலைப்பல்கலைக்கழக வைரவிழாக் கவியரங்கிலும் பங்கேற்றுள்ளார்.
வெளிநாட்டுப்பயணங்கள்
மலேசியா(நான்கு முறை), இலங்கை(இரு முறை), சிங்கப்பூர், செருமனி, பிரான்சு, நெதர்லாந்து, தென்மார்க்கு, பெல்சியம் ஆகிய நாடுகளுககுப் பயணம் மேற்கொண்டு அங்கெல்லாம் இலக்கியச்சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார்.
செருமனி நூலகத்திற்கு உதவி
செருமனி வாழ் தமிழர்கள் தமிழ்நூல்களுக்காக ஏங்கி இருந்தனர். அவர்களின் குறைகளை யறிந்து தோர்ட்டுமண்டு (Dortmund )நகரில் நூலகம் அமைப்பதற்கு 10,000 நூல்களைத் திரட்டிக் கப்பல மூலம் அனுப்பி வைத்தார். கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன் உதவியுடன் நிறுவப்பட்ட நூலகம் என அந்நூலகத்தில் குறித்துள்ளது. இந்த அருவினை அவருக்குப் புகழ் மகுடம் சூட்டியுள்ளது.
புத்தகக் கொடையாளர்
இவரது நூலக அமைப்புப் பணியால் பலரும் இவரும் உதவியை நாடி வந்தனர். சென்னையில் வி.சி.பி.நிறுவன நூலகம்,கமலஃகாசன் இரசிகர் மன்ற நூலகம், புதுவை மொழியியல் பண்பாட்டு நிறுவன நூலகம், அண்ணா அறிவாலயத்தில் அமைந்துள்ள பேராசிரியர் ஆய்வு நூலகம், சென்னை வடபழனியில் உள்ள அண்ணா பொதுநல மன்ற நூலகம், மும்பை திராவிட முன்னேற்றக் கழக நூலகம், எனப் பல நூலகங்களுக்கும் பல நூறு நூல்களைத் திரட்டி அளித்துள்ளார்.
இதனால், புத்தக வள்ளல் என்றும் புத்தகக் கொடையாளர் என்றும் அழைக்க்ப பெறுகிறார்.
ஊடகவழிப் பரப்பலும் பிறவும்
வானொலி, தொலைக்காட்சிகளிலும் நூற்றுக்கு மேற்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று ஊடக வழியான தம் தமிழ்ப்பணியை ஆற்றிவருகிறார். சிங்கப்பூர் வானொலியிலும் 4 சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளதுடன் இவரது செவ்வி(பேட்டி)யும் ஒலிபரப்பாகியது.
இலக்கிய ஓவியரான கவிக்கொண்டல் செங்குட்டுவன் சித்திர ஓவியரும்கூட. சென்னையில் உள்ள வாகினிப் படநிலையத்தில் ஓராண்டு ஓவியராகப் பணியாற்றியுள்ளார்.
தமிழக அரசின் பொது நூலகத் துறையில் நூல் தேர்வுக்குழு உறுப்பினராகப் பத்தாண்டுகள்பணியாற்றியுள்ளார்.
தமிழ் எழுத்தாளர் கழகத்தின் தலைவராக இருந்து அதன் வழித் தமிழ்ப்பணியாற்றி வருகிறார்.
விருதுகள்
தமிழக அரசின் பாவேந்தர் விருது(1990), 1997 இல் சென்னைக் கலாச்சாரக் கழகத்தின் சார்பில் தமிழன்னை விருது, தமிழக அரசின் கலைமாமணி விருது(2008), கலைஞர் விருது, பேராசிரியர் விருது(2018), ஆகியன இவருக்கு வழங்கப் பெற்றுள்ளன. கலைஞர் மு.கருணாநிதி அவர்களால் கவிக்கொண்டல் என்னும் பட்டம், மலேசியாவில் செந்தமிழ்க் கலா நிலையத் தலைவர் தமிழ்மாமுனிவர் சுவாமி இராமதாசர் என்பரால் இயற்றமிழ்ப் புலவர் என்னும் பட்டம், சென்னைத் தமிழ் முன்னேற்றக் கழகம் செந்தமிழ்க் கொண்டல் என்னும் பட்டம், தமிழ்நாடு நல்வழி நிலையத்தின் சார்பில் செந்தமிழ் மாமணி என்னும் பட்டம், வி.சி.பி. அன்னை சந்தானம்மாள் இலக்கியப் பேரவை சார்பில் நற்றமிழ் நக்கீரர் பட்டம் எனப் பல்வேறு பட்டங்கள் இவரின் தொண்டுகளையும் சிறப்புகளையும் பாராட்டி வழங்கப் பெற்றுள்ளன. உலகக் கவிஞர் மன்றத்தின் சார்பில் அமெரிக்காவில் உள்ள தான்சிக்கு(Dancic) பல்கலைக்கழகம் கவிப்பணிகளுக்காக முனைவர் பட்டம்(D.Litt.) வழங்கியுள்ளது. மேலும் திருவையாறு தமிழிசை மன்றம், சென்னை ழகரப் பணிமன்றம், பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் ஆகியவற்றின் சிறப்பு விருதுகள் முதலான நாற்பதுக்கும் மேற்பட்ட விருதுகளும் சிறப்புப் பட்டங்களும் பெற்றுள்ளார்.
நூல்கள்
முதன் முதலில், கழகக்கதிர்மணிகள், கவிக்கொண்டல் கவிதைகள், தமிழ்ச்சொல் கேளீர், கோட்டமும்  குமரியும், இலக்கிய முழக்கம், மலைநாட்டில் ஓர் இலக்கிய உலா, கலைஞர் கண்ட வள்ளுவர் கோட்டம், மலேசியாவில் அண்ணா, அண்ணா என்னும் அண்ணல், நெஞ்சம் மறவா நிகழ்ச்சிகள், கழகம் பிறந்தது ஏன்?, புகழ்பூத்த பொன்மலர்கள், சாதிகள் இல்லையடி பாப்பா, பாவேந்தர் வழி வந்த பாவலர்கள் (200 கவிஞர்கள் பற்றிய 2 தொகுப்பு), ஓர் அரிமா நோக்கு எனப் பல நூல்களை எழுதியுள்ளார்.
இவரது நூல்களையும் இதழ்களையும் ஆராய்ந்து இளமுனைவர் பட்டமும் முனைவர் பட்டமும் இருவர் பெற்றுள்ளனர்.
தாமரைச் செல்வி பதிப்பகம் எனப் பதிப்பகம் நடத்திப் பல நூல்களை வெளியிட்டு வருகிறார்.
கோலாலம்பூரில் நடந்த ஆறாவது உலகத்தமிழ் மாநாட்டு மலர் உருவாக்கத்திலும் இவருக்குப்பெரும்பங்கு உண்டு.
குடும்பம்
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகில் உள்ள திருவேதிகுடியில் சீனிவாசன்-விருத்தாம்பாள் இணையரின் மகள் அரவிந்த நாயகி. இவரின் வகுப்புத் தோழர் திருவேதிக்குடி தியாகராசன் தங்கையே இவர்.  நண்பர் சீர்திருத்தத்திருமணத்திற்கு ஒப்புக் கொண்டமையால் தாமரைச்செல்வி எனப் பெயரை மாற்றி 31.08.1959 அன்று பேரா.க.அன்பழகன் தலைமையில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்னர் தி.மு.க. மகளிரணியில் சேர்ந்து வெற்றிச்செல்வன் அன்பழகன், அலமேலு அப்பாத்துரை, சற்குண பாண்டியன் ஆகியோருடன் இணைந்து தொட்டாற்றினார். மனையரசியாய்ச் சிறந்து விளங்கிய இவர், புரட்டாசி 31, 2049 / 17.10.2018 அன்று புகழுடல் எய்தினார்.
 இவர்களுக்கு மணிமொழி, அன்பரசு, மதிவாணன், புகழேந்தி, முத்துச் செல்வன் ஆகிய மக்கள். இவர்களுள் மணிமொழி இரண்டரை அகவையில் இறந்தான். மகன் புகழேந்தியைச் செங்குட்டுவனார் தம் தங்கை மங்கையர்க்கரசிக்குத் தத்து கொடுத்து விட்டார்.
செம்பியன் அன்பரசு, அமிர்தகணேசன் புகழேந்தி, கபிலன் முத்துச்செல்வன் எனப்  பெயரர்களும் செந்தமிழ் அன்பரசு, ஆர்த்தி புகழேந்தி, ஓவியா மதிவாணன், எனப் பெயர்த்திகளும் உள்ளனர்.
திராவிடஇயக்கத்தின் வேராகவும் திராவிட முன்னேற்றக்கழகத்தின் அரணாகவும் திகழும் சிலருள் ஒருவரே கவிக்கொண்டல் மா. செங்குட்டுவன். இதழ்ப்பணியிலும் இலக்கியப்பணியிலும் முத்திரை பதித்து வரும் மூதறிஞர்! தனது உழைப்பிற்கும் தகுதிக்கும் ஏற்ற மதிப்பு கிட்டாதபொழுதும் தடுமாறாமல் தடம் புரளாமல் வாழும் கொள்கைக் குன்று!
வளர் தமிழுக்குப் பெருமை சேர்க்கும்
மூத்த இதழாளர் கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன்
பன்னூறு ஆண்டுகள் வாழிய!
– இலக்குவனார் திருவள்ளுவன்

Friday, November 16, 2018

மலர்மாமணி, புலவரேறு பெ.அ. இளஞ்செழியன் – இலக்குவனார் திருவள்ளுவன்

மலர்மாமணிபுலவரேறு பெ.இளஞ்செழியன்

 எட்டாம் வகுப்பு படிக்கும் பொழுது தால்மியாபுரம் பெயர் மாற்ற எதிர்ப்பான கல்லக்குடி போராட்டத்தில் பங்கேற்றுத் தண்டவாளத்தில் அமர்ந்தவர்; கோடை விடுமுறைகளில் கலைஞர் கருணாநிதியின் நச்சுக் கோப்பை, தூக்கு மேடை போன்ற சீர்திருத்த நாடகங்களை இயக்கியும், கதைத்தலைவன் வேடங்களில் நடித்தும், விழிப்புணர்வுப் பரப்புரையில் ஈடுபட்டவர்; பள்ளி இறுதி வகுப்பு பயிலும் பொழுது தேவிகுளம், பீர்மேடு கேரளத்தோடு இணைக்கப்பட்டதை எதிர்த்துத் தமிழகத்தில்  நடந்த வேலை நிறுத்தத்தில் பள்ளி மாணாக்கர்களையும் பங்கேற்கச் செய்தவர்; மாணவப் பருவத்திலேயே தமிழ்க்காப்புப் பாதையில் நடைபோட்ட அவர்தாம் புலவர் இளஞ்செழியன்.
இளைமையில் முளைத்த தமிழார்வம்
 இளமையில் ‘நாம் தமிழர்’ உணர்வூட்டும் தினத்தந்தி,  திராவிட நாடு, திராவிடன், மன்றம், முரசொலி, விடுதலை, முதலான திராவிட இயக்க இதழ்கள், தமிழரசுக் கழக இதழ் செங்கோல்  முதலானவற்றைப் படித்த ஆர்வம், இவரைத் தமிழுணர்வு கொள்ளச் செய்தது; பின்னாளில் இவர் இதழாசிரியராக விளங்க அடிப்படையாய் அமைந்தது. இலால்குடி பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டங்களுக்குச் சென்று, சொற்பொழிவுகளைக் கேட்கும் ஆர்வம் இவரின் பேச்சத் திறமையையும் எழுத்துத்திறமையையும் வளர்த்தது.
திருச்சிராப்பள்ளியில் தமிழ்ப்பணி
1960 முதல் 1970 வரை திருச்சிராப்பள்ளியில் இருந்தார். இக்காலக்கட்டத்தில் இம்மாவட்டத்தில் நடைபெற்ற திருமணங்கள், ஆசிரியர் சங்கக் கூட்டங்கள், இலக்கிய நிகழ்ச்சிகள், அரசியல் மேடைகள், கவியரங்கங்கள், கருத்தரங்கங்கள், பட்டிமன்றங்கள் எனப் பலப்பல நிகழ்ச்சிகளில் கலந்து உரையாற்றியுள்ளார். பல திருமணங்களுக்குத் தலைமை தாங்கியும், திருமணங்களை நடத்தி வைத்தும் தமிழ் மரபு திருமணமுறையைப் பரப்பினார்.
1963இல் திருச்சியில் மதுரம் திடலில் திராவிட மாணவர் முன்னேற்றக் கழக ஏற்பாட்டில், இந்தி எதிர்ப்பு மாநாடு நடந்தது. இம் மாநாட்டின் நான்கு செயலாளர்களுள் ஒருவராக இருந்து மாநாட்டைச் சிறப்பாக நடத்தினார். மாநாட்டின் இரண்டாவது நாளில், “போர் மறவனே, புறப்படு” என்ற தலைப்பில் வீர முழக்க உரையாற்றினார். பேச்சின் இடையே “அண்ணாவுக்கு நரைத்துவிட்டது மீசை, அவருடைய கையிலே திராவிடத்தை வாங்கி நாம் ஒப்படைக்க வேண்டும். இது நமது இதய ஆசை” என்று முழங்கினார்.  முன்னிலை வகித்திருந்த பேரறிஞர் அண்ணா மீசையில் கை வைத்து, “அப்படியா” என்று உரத்த குரலிலே சொல்ல, மதுரம் திடல்  அதிர்ந்ததைப் பசுமையாக நினைவாகக் கொண்டுள்ளார்.
தமிழாசிரியப் பணி
  1966  முதல் 1973 வரை சமயபுரம் அ/மி மாரியம்மன் உயர்நிலைப் பள்ளி, திருச்சி புனித சூசையப்பர் கல்லூரி உயர்நிலைப் பள்ளி, திருச்சி  ஃகீபர் பாதிரியார் உயர்நிலைப் பள்ளி, சென்னை எட்டியப்பர் உயர்நிலைப் பள்ளி ஆகியவற்றில் தமிழாசிரியராகப் பணியாற்றி, மாணாக்கர்களுக்குத் தமிழார்வத்தை ஊட்டினார்.
 இதழார்வம்
இவரின் எழுத்தார்வம், கரந்தைப் புலவர் கல்லூரியில் பயின்று 1960இல் புலவர் பட்டம் பெற்றாலும் தமிழாசிரியப் பணிக்குச் செல்லாமல் தடுத்தது. இதழியல் துறையில் ஈடுபடச் செய்தது. எனவே, திருச்சிராப்பள்ளியில் ‘போர்க்குரல்’ என்னும் வார ஏட்டை 1960 முதல் 1967 வரை நடத்தினார். 1968இல் ‘முகில்’ என்கிற இலக்கிய மாத இதழை நடத்தினார். இதன் தொடக்கவிதழைப் பேராசிரியர் க. அன்பழகன்  வெளியிட்டார்.சென்னையிலிருந்து முகில் இதழை1974 முதல் 1987 வரை நடத்தினார். சாந்தா பதிப்பக வெளியீடான ’கண்டுபிடி’ கல்வி மாத இதழின் சிறப்பு ஆசிரியர் பொறுப்பில் 10 ஆண்டுகள் செயல்பட்டார். உலகத் தமிழர் மாமன்ற வெளியீடான ‘உலகத் தமிழர் குரல்’ இதழை ஆசிரியர் பொறுப்பு ஏற்று நடத்தினார்2000 ஆம் ஆண்டில் ( எதுவரை?)“விண்முகில்” பல்சுவை காலாண்டு இதழை ஆசிரியராக இருந்து வெளியிட்டார்.
உலக அமைப்புகள் உருவாக்கம்
 உலகத் தமிழர்களுக்கோர் உறவுப்பாலங்கள் அமைக்க 1991இல், ‘இந்திய – மலேசியப் பண்பாட்டுக் கழகம்’ அமைத்தார்  1999இல் ‘உலகத் தமிழ் ஒப்புரவாளர் பேரவை’ அமைத்தார். இரண்டு அமைப்புகளையும் நாவலர் இரா. நெடுஞ்செழியன் தலைமையில் தொடங்கினார். இவற்றின் சார்பாக இவர் திறம்பட நடத்திய நிகழ்ச்சிகள் எண்ணிக்கை ஐம்பதைத் தாண்டியுள்ளன.
1993இல் இந்திய – மலேசியப் பண்பாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில், சென்னையில்  “வையத்தமிழர் வாழ்விலே” என்ற தலைப்பில் ஒருநாள் மாநாடு நடத்தினார்.  மலேசியாவில் இருந்தும் தமிழ்நாட்டிலிருந்தும் 200 பேராளர்கள் கலந்து கொண்டனர்
1996இல் மேற்கூறிய இரண்டு அமைப்புகளின் ஏற்பாட்டில், , “உலகத் தமிழ் ஒப்புரவாளர் மாநாட்டை நடத்தினார். மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, சப்பான் நாடுகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பேராளார்கள் வருகை தந்து சிறப்பித்தனர். புலவர் இளஞ்செழியன் ஆற்றியுள்ள பணிகளில் இந்த மாநாடு ஒரு மகுடமாய் அமைந்தது.
 மலர்மாமணி
1967 முதல் கருத்தரங்க மலர்கள், இலக்கிய மலர்கள், நினைவு மலர்கள் முதலானவற்றைச் சிறப்பாகத் தொகுத்து வெளியிடும் பொறுப்பில் ஈடுபட்டார். நாடகப்பேராசியர் இராம. நடராசனார் மலர்(1967), முகில் கலைஞர் மலர்(1970), முகில் அண்ணா மலர்(1974), முகில் என்.வி. நடராசன் மலர்(1974), முகில் அன்பில் தருமலிங்கம் மலர்(1975), முகில் மன்னை ப. நாராயணசாமி மலர்(1975), முகில் பேராசிரியர் க. அன்பழகன் மலர் (1975), ‘கண்டுபிடி’ கல்வி இதழ் வைரவிழா மலர் (1978),கவிஞர் சுரதா மணிவிழா மலர்(1982) என்று இதழ் மலர்களை வெளியிட்டு வந்தார். கோலாலம்பூரில் 1987இல் நடந்த ஆறாம் உலகத் தமிழ் மாநாட்டின் மலர்க்குழுத் தலைவராக இருந்தார். மாநாட்டுமலரின் ஆசிரியராக இருந்து 650 பக்கங்கள் கொண்ட மலரைச் சிறப்பாக உருவாக்கினார். இதனால், ‘மலர்மாமணி’ என்று இவர் அழைக்கப்பெற்றார்
 இந்த மலர்ச்சிறப்பைப் பார்த்தவர்கள், 1989இல் மொரீசியசுத் தீவில் நடந்த ஏழாம் உலகத் தமிழ் மாநாட்டு மலரை இவர் உருவாக்கினால் நன்றாக இருக்கும் என மொரிசியசு தமிழன்பர்கள் எண்ணினர். ஏழாம் உலகத் தமிழ் மாநாட்டு மலரைத் தன் சொந்தச் செலவில் உருவாக்கித் தந்தார். இவர் கை பட்டால் விழா மலர் மணக்கிறது என உணர்ந்தவர்கள் 1990இல் கோலாலம்பூரில் நடந்த முதல் உலகத் தமிழர் மாநாட்டு மலரையும் இவர் பொறுப்பில் விட்டனர்.
தொடர்ந்து, “மலர் வெளியீடா?-புலவர் இளஞ்செழியனை அழையுங்கள்” எனப் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டு,  மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கங்களின் பேரவை மலர்(1991), இலங்கை அமைச்சர் சௌமிய தொன்டமான் முத்துவிழா மலர்(1992), திருக்குறளார் முத்துவிழா மலர்(1992), சட்டப்பேரவை முன்னாள் தலைவர் செல்லபாண்டியன் சிலை திறப்புவிழா சிறப்பு மலர்(1995), நாவலர் பவளவிழா மலர்(1995), உலகத்தமிழ் ஒப்புரவாளர் மாநாட்டு மலர்(1996), மலர்மாமணி இளஞ்செழியன் இலக்கியப் பொன்விழா மலர்(2001), தாய்லாந்து மலேசியா சிங்கப்பூர் இலக்கியப் பன்பாட்டுச் சுற்றுலா மலர்(2005), சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக 30ஆம் ஆண்டு நிறைவு முத்துவிழா மலர்(2006), இளம்பாரி உ. கருணாகரன் மணிவிழா மலர்(2007), பகுத்தறிவுச் செம்மல் சோ. ஞானசுந்தரம் முதல் ஆண்டு நினைவு வண்ண மலர்(2008) எனப் பல மலர்களை உருவாக்கினார்.
 திருக்குறள் நெறி மாநாடு
திருக்குறளார் வி. முனிசாமி இயக்குநராக இருந்த திருக்குறள் நெறி பரப்பு மையத்தின்  சென்னை, திருச்சிராப்பள்ளி மாநாடுகளில் தொடர்பாளனாக இருந்து பலரும் பாராட்டும் வண்ணம்  நற்பணியாற்றியுள்ளார்.
நூலாக மலர்ந்த மாநாட்டுரை
மதுரையில் 1992இல் நடந்த அ.இ.அ.தி.மு.க.வின் ‘வீர வரலாறு கூறும் வெற்றி மாநாட்டில்’,  ‘வெள்ளுடை வேந்தர் முதல் வெற்றி வீராங்கனை வரை’ என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினார். இதற்கு நல்ல வரவேற்பு இருந்தமையால், இந்தத் தலைப்பையொட்டி ‘புரட்சித்தலைவி ஒரு புறநானூறு’ என்னும் நூலை எழுதி வெளியிட்டார்.
 உலகத்தமிழ் மாநாடுகளில் பங்கேற்பு
 சென்னையில் நடந்த இரண்டாம் உலகத்தமிழ் மாநாடு (1968) மதுரையில் நடந்த ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு (1982) மலேசியாவில் நடந்த ஆறாம் உலகத் தமிழ் மாநாடு (1987), மொரீசியசுத் தீவில் நடந்த ஏழாம் உலகத் தமிழ் மாநாடு (1989), தஞ்சையில் நடந்த எட்டாம் உலகத் தமிழ் மாநாடு (1995) ஆகியவற்றில் கவியரங்குகளில் பங்கேற்றுச் சிறப்பித்துள்ளார்.
 2010இல் கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில்  மனைவி திருவாட்டி விசயலட்சுமி யுடன் பேராளராகக் கலந்து கொண்டார். மாநாட்டு ஆய்வரங்கம் ஒன்றில், “ஒளவையார் முதல் அழ. வள்ளியப்பா வரை சிறுவர் இலக்கியம்” என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை வழங்கினார்.
மலேசியா, சிங்கப்பூர், மொரீசியசு, தாய்லாந்து, அமெரிக்கா  முதலான அயல் நாடுகளுக்குச் சென்று வந்துள்ளார்.  அங்கெல்லாம் தமிழின் சிறப்பு, தமிழர் பண்பாடுகளை  இலக்கியக்கூட்டங்கள் வழிப் பரப்பினார்.
கவியரங்கங்களில் பங்கேற்பு
1990இல் கோலாலம்பூரில் உலகத் தமிழர் மாமன்றம் நடத்திய முதல் உலகத் தமிழர் மாநாட்டுக் கவியரங்கத்திற்கும், 2006இல் சிங்கப்பூரில் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் 30ஆம் ஆண்டு நிறைவு முத்தமிழ் விழாக் கவியரங்கத்திற்கும் தலைமை தாங்கியுள்ளார்.
நூல்கள்
தம் கவிதைகளைத் தொகுத்து இளஞ்செழியன் கவிதைகள் (முதல் தொகுதி)  என வெளியிட்டார். இதற்குத் தமிழக அரசின் இரண்டாம் பரிசு கிடைத்தது(1991). இதற்கு வரவேற்பு இருந்தமையால் இளஞ்செழியன் கவிதைகள் (இரண்டாம் தொகுதி)-ஐயும் வெளியிட்டார். இவரது கவியரங்க நூல், ஒரு நன்பாட்டுப் புலவனாய்க் கவியரங்கேறி….! என்பதாகும். பாவேந்தரின் சொல்லும் சுவையும் சிறார் இலக்கியத்திலும் தடம் பதித்து, மழலை மலர்கள்(குழந்தைப் பாடல்கள்), சங்கர் தமிழ் 1, 2(மழலையர் பாடநூல்கள்),சிறுவர் சிந்தனைக் கதைகள், பள்ளி மாணவர் பரிசுப் பேச்சுக்கள் (தொகுப்பு) என்னும் நூல்களை வெளியிட்டார். நாடக ஆசிரியரான இவர், சந்திப்பு என்னும் வானொலி நாடகத்தையும் நூலாக வெளியிட்டார். மூப்பனாரைப் பாடுகின்றேன், அண்ணாவின் சிந்தனைகள் (தொகுப்பு), விழித்தெழுவோம் தொகுப்பு), பாரதியார் வாழ்க்கைச் சுருக்கம், கட்டுரைகளும் கடிதங்களும், நெஞ்சை அள்ளும் சிலம்பில் நினைவை அள்ளும் மாதவி. இலக்கியத்தில் நாம், பாலும் தெளிதேனும்(அகமும் புறமும் சார்ந்த நூல்), பதிப்பகச்செம்மல் க. கணபதி (வாழ்க்கை வரலாறு) என்பன இவரின் பிற நூல்களாகும். முன்னரே குறிப்பிட்டு்ளள ‘புரட்சித் தலைவி ஒரு புறநானூறு’  நூலுக்கு 2011இல் தமிழக அரசின் முதல் பரிசு கிடைத்தது.
2018 இல் சிங்கப்பூரில் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் ‘தமிழவேள் கோ.சாரங்கபாணி பிள்ளைத் தமிழ்‘ நூலை வெளியிட்டார். இந்நூலில் காப்புப்பருவத்தில் கடவுளர்களைப் பாடாமல், தமிழ்த்தாய், திருவள்ளுவர், இளங்கோ அடிகள், கம்பர், பாரதியார், பாரதிதாசன்,கண்ணதாசன், குன்றக்குடி அடிகளார், இலீகுவான் கியூ, பெரியார், காமராசர், பேரறிஞர் அண்ணா, கலைஞர், எம்ஞ்சியார் ஆகியோரை முன்னிறுத்திப் பாடினார்.
 விருதுகள்
சாந்தா பதிப்பகத்தின் ‘மலர்மாமணி’ விருது(1987), வி.சி.பி. சந்தனம்மாள் அறக்கட்டளையின் கவிதை இலக்கிய விருது(1991), திருக்குறள் நெறிபரப்பு மையத்தின் ‘திருக்குறள் நெறித்தோன்றல்’ விருது(1992), தமிழக அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது(1993), பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் ஐந்தாம் மாநாட்டில் வழங்கிய ‘தமிழ்ப்பணிச் செம்மல்’ விருது(2002),சென்னைத் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் ‘இன எழுச்சிக் கவிஞர் விருது’(2009), சிங்கப்பூர் மாதவி இலக்கிய மன்றத்தின்  ‘மாதவி இலக்கிய விருது’(2009). 2018இல் மலேசிய பன்னாட்டுத் தமிழுறவு மன்றச் சார்பில் ‘புலவரேறு விருது’ முதலான விருதுகள் இவரை அணி செய்வன.
இவையல்லாமல், பல்வேறு அமைப்புகள் இவருக்கு இனமானச் செம்மல், இனமானப் புலவர், எழுச்சி நடைக்கவிஞர், மலர் மாமன்னன், கவிக்குன்றம், புலவர்மாமணி போன்ற விருதுகளை வழங்கியுள்ளன.
குடும்பம்
அருணாசலம் – வெள்ளையம்மாள் இணையரின் திருமகனாக வைகாசி 28, 1969 / 10.06.1938 அன்று திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டம், பெருவளப்பூரில் பிறந்தார். தந்தை  கோனேரி அருணாசலம் நெடிது உயர்ந்த தோற்றத்தால் நாடகத் துறையில் புகழ்பெற்ற நடிகராகத் திகழ்ந்தார். அருணாசலக் கவிராயரின் இராம நாடகக் கீர்த்தனை நாடகத்தில் இராமனாக நடித்துப் போற்றப்பட்டார். தமக்கை முத்துப்பேச்சி, தங்கை செல்லம்மாள்
 மனைவி விசயலட்சுமி. இவர்களது திருமணம்  சிந்தனைச் சிற்பி சி.பி. சிற்றரசு தலைமையில் 1963இல் நடந்தது. மனைமாமணி விசயலக்குமி என்று போற்ற வாழ்ந்து மறைந்தவர். மூத்த மகன் மாமுடிச்சோழனுக்கு 1996இல் நாவலர் இரா. நெடுசெழியன் தலைமையிலும், 2001இல் இளைய மகன் மணிமுடிச்சோழனுக்கு  மதிப்புமிகு எசு.டி சோமசுந்தரம் அவர்கள் தலைமையிலும் ‘சாதி மறுப்புத் திருமணங்கள்’ செய்து வைத்தார். மூத்த மருமகள் முனைவர் மணிமேகலை; பேத்தி பொறி.சோழமாதேவி’ இளையமருமகள் தீபா’ பேரன் கவின், பேத்தி காவியா.
எனக்கு நான் வாழ்வதிலோர் இன்பம் இல்லை, இருந்துநான் வாழ்வதெல்லாம் தமிழுக்காக” என்பதைக் கொள்கையாகக் கொண்டு மூச்சு பேச்சு முழக்கம் யாவும் தமிழ் என வாழ்ந்து வருகிறார்.
பள்ளி வாழ்க்கையில் ஏற்பட்ட பொதுநல வேட்கை நாளும் வளர்ந்ததே தவிரத் தளரவில்லை. பள்ளிப்பருவத்தில் உள்வாங்கிய தமிழ்உணர்வு, இவரைச் சொற்பொழிவாளராக, கவிஞராக, இதழாளராக, அமைப்பாளுநராக. மாநாடுகளின் ஏற்பாட்டாளராக, மலரச் செய்து மலர் மாமணியாக. புலவரேறாக உயரச் செய்துள்ளது.
[தொடர்பிற்கு:
மலர்மாமணி புலவர் இளஞ்செழியன்
புலவர் குடில், 22-23, ஐந்தாம் தெரு, பெரியார் நகர்,
மடிப்பாக்கம், சென்னை – 600 091.
பேசி : 98404 15909 \ 9790721560
 மலர் மாமணி புலவர் இளஞ்செழியன்
தமிழ் மணம் கமழ நீடு வாழ்க!
 – இலக்குவனார் திருவள்ளுவன்

Tuesday, November 13, 2018

தண்டமிழ்ப் புலமையாளர் தாயம்மாள் அறவாணன் – இலக்குவனார் திருவள்ளுவன்



தண்டமிழ்ப் புலமையாளர் 

தாயம்மாள்அறவாணன்

  மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் உலகில் பெண்பாற்புலவர்கள் இருந்துள்ளனர். சங்கக்காலத்தில் 57 பெண்கள் புலமையில் சிறந்து நாடுபோற்ற வாழ்ந்துள்ளனர். அவ்வழிவழி மரபில் தமிழுக்கு ஆக்கம் சேர்க்கும் புலமையாளராகத் திகழ்பவர் முனைவர் தாயம்மாள் அறவாணன்.
பிறப்பும் தொடக்கக் கல்வியும்
  குமரி மாவட்டம் சுசீந்திரம் பக்கத்தில் மயிலாடி என்னும் ஊர் உள்ளது. அதன் அண்மையில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் சேந்தன்புதூர் என்ற ஊரில்  வைகாசி 10, 1975 / 23-5-1944இல் தாயம்மாள் பிறந்தார்.
  சித்தாந்த ஆசான், வித்துவான் திரு. பகவதிப் பெருமாள்(பிள்ளை) திருவாட்டி கோமதி இணையரின் ஏழு மக்களுள் ஐந்தாவதாகப் பிறந்தவரே தாயம்மாள். மயிலாடி அரசு தொடக்கப்பள்ளியில் 5 ஆம் வகுப்பு வரை பயின்றார். எட்டாம் வகுப்பு வரை  தென்திருவிதாங்கூரின் முதல் ஆங்கிலப்பள்ளியான மயிலாடியில் உள்ள (இ)ரிங்கல்தெளபே(Ringel taube School, Mylaudy) பள்ளியில் படித்தார். இவரது கல்வியில் பெற்றோர் தணியா ஆர்வம் கொண்டிருந்தமையால் 4 கல் தொலைவில் சுசீந்திரத்திற்கு நடந்து சென்று வந்தே மேற்கொண்டு படித்தார்.
  படிப்புடன் அம்மாவிற்குத் துணையாகப் பூப்பறித்து விற்பனைக்குக் கொடுக்கும் வேலையையும் செய்து வந்தார். புகுமுக வகுப்பைத் தென் திருவிதாங்கூர் இந்துக்கல்லூரியில் படித்தார். தமிழாசிரியராகவும் தலைமையாசிரியராகவும் தந்தை இருந்தமையால் இவருக்கும் தமிழ்க் கல்வியில் நாட்டம் ஏற்பட்டது. இந்துக் கல்லூரியில் இளங்கலை தமிழ் படித்து முடித்தார். திருவனந்தபுரம் சென்று கேரளப் பல்கலைக்கழகத்தில் தமிழ் முதுகலையை முடித்தார்.
ஆசிரியப்பணி
பாபநாசத்தில் பேரா.ச.வே. சுப்பிரமணியம், நண்பர்கள் தந்தையுடன் இணைந்து தொடங்கிய திருவள்ளுவர் கல்லூரியில் விரிவுரையாளராக முதல் பணியை ஏற்றார். பத்து மாதப் பணிக்குப் பின்னர் 1969 இல் நாமக்கல் அரசு மகளிர் கல்லூரியில்  பணியில் சேர்ந்தார்.
 21-4-1969இல் தாயம்மாளுக்கும் அருணாசலத்திற்கும் திருமணம் நிகழ்ந்தது. அருணாசலமே பின்னர் அறவாணர் ஆனார். கணவர் பாளையங்கோட்டை தூய சேவியர் கல்லூரியில் பணியாற்றினார். ஓராண்டிற்குப் பின்னர் சென்னைப் பச்சையப்பன் அறக்கட்டளையில் கணவருக்கும் கடலூர் கந்தசாமி(நாயுடு) கல்லூரியில் மனைவிக்கும் பணி கிடைத்தது. பின் சென்னை செல்லம்மாள் மகளிர் கல்லூரிக்குப் பணிமாற்றம் பெற்றார். ச.வே.சு. வழியாக பகுதி நேர ஆய்வாளராகச் சேர்ந்து ‘குழந்தை இலக்கியம்-ஒரு பகுப்பாய்வு’ தலைப்பில் முனைவர் பட்டத்தை முடித்தார்.
அயல்நாட்டில் ஆராய்ச்சியும் பணியும்
செனகால் அதிபர் இலியோ போல்ட்டு செதார் செங்கோர்அழைப்பில் மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள செனகால் நாட்டிற்கு முனைவர் அறவாணன் திராவிட ஆப்பிரிக்க ஆராய்ச்சிக்காகப் பயணம் மேற்கொண்டார். முனைவர் பட்டம் பெற்ற தாயம்மாளும் 7 மாதங்களுக்குப் பின்னர் செனகால் சென்றார். அங்கே எழுத்துப்பணியில் ஈடுபட்டார். திராவிட ஆப்பிரிக்க ஒப்பீடு என்ற நூலை எழுதினார். 1987இல் தமிழக அரசு வழங்கும் சிறந்த நூலுக்கான முதல் பரிசு இந்நூலுக்குக் கிடைத்தது. உரல், உலக்கை, முருங்கக்கீரை, சட்டிப்பானை செய்தல், சுடுதல், மருதோன்றி அணிதல், கோலா பாக்கு வாயில் மெல்லுதல், சில்லுக்கோடு ஆடுதல், அரிசி உணவு உண்ணுதல், போன்ற பல பண்பாட்டு நிகழ்வுகளைத் தமிழ் மக்களின் பண்பாட்டு நிகழ்வோடு ஒப்பிட்டு இந்நூலை எழுதியுள்ளார். பதினான்குழி/பல்லாங்குழி என்னும் தமிழர் விளையாட்டுபோல் ஆப்பிரிக்கர்களிடமும் உள்ளது கண்டு வியப்பு எய்தினார். விளையாட்டு முறையை ஒப்பிட்டு ‘பல்லாங்குழி-திராவிட ஆப்பிரிக்க ஒப்பீடு’ என்ற நூலை எழுதினார். நாட்டுப்புற விளையாட்டு நூல்களுள் குறிப்பிடத்தக்க இடம் இந்நூலுக்கு எப்பொழுதும் உண்டு.
இவரது சிறப்பை உணர்ந்த அதிபர் செங்கோர், இவருக்கு  ஆப்பிரிக்கர்களுக்குத் தமிழ் கற்பிக்க தக்கார்பல்கலைக்கழகத்தில் மொழி ஆசிரியராக நியமன ஆணை வழங்கினார். 1978-82 இல் இங்கே பணியாற்றினார்.
இவர்மீதுள்ள நன்றி உணர்வின் காரணமாக அங்கே பிறந்த பெண்மகவிற்கு அருள் செங்கோர் எனப் பெயரிட்டார்.
பச்சையப்பன் அறக்கட்டளையில் விடுப்பு முடிந்ததால், மீண்டும் சென்னையில் திரும்பிச் செல்லம்மாள் கல்லூரியில் ஆசிரியப் பணியைத் தொடர்ந்தார். களப்பணிகளை மேற்கொண்டு பெண் மொழி, உறவு முறை நூல்களை உருவாக்கினார்.
 கணவர் புதுவைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியேற்ற பொழுது தாயம்மாளும் புதுச்சேரிக்குச் சென்றார். 1970இல் வேலை பார்த்த கடலூர் கந்தசாமி கல்லூரிக்கு மாற்றம் பெற்றார்.
 1998இல் தாயம்மாள் கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறைப் பணியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004இல் அன்னை தெரசா பல்கலைக் கழகத்திலிருந்து ஓய்வு பெற்றார் பேரா. தாயம்மாள்.
 தமிழ்க் கோட்டம்
  பேரா. தாயம்மாள் 1982 இல் கணவருடன் இணைந்து ‘தமிழ்க் கோட்டம்’ நூற்பதிப்பகத்தை நிறுவினார்.  பல நல்ல நூல்களை இதன் வழி வெளியிட்டு வருகின்றார்.
நூல்கள், பரிசுகள்
  இவரது புலமையை இவர் எழுதிய நூல்களும் அவை பெற்ற விருதுகளும் பறை சாற்றுகின்றன. மேலே குறிப்பிட்டுள்ள 4 நூல்களுடன்  புதிய கோலங்கள், பெண்ணறிவு என்பது, பெருமையே பெண்மையாய், தையல் கேளீர். தையலை உயர்வு செய், தடம் பதித்தோர், குழந்தை இலக்கியம் – ஒரு பகுப்பாய்வு, தமிழ்ச் சமூகவியல்- ஒரு கருத்தாடல், பெண்ணெழுத்து இகழேல், கண்ணகி மண்ணில், பெண் இன்று நேற்று அன்று, ஒளவiயார் அன்று முதல் இன்று வரை, மகடூஉ முன்னிலை-பெண் புலவர் களஞ்சியம், பெண் பதிவுகள், தமிழ்ப்பெண், தமிழ்க்குடும்பம்-1919, ஒளவையார், பெண்ணின் பெருந்தக்கது இல் முதலான 25 நூல்களின் ஆசிரியர். இவரது நூல்களின் தலைப்புகளே அம்மையார் பெண்ணிய உரிமையாளர் என்று நமக்கு அடையாளங் காட்டும்.
  ஒளவையார் அன்று முதல் இன்று வரை என்னும் கடும்உழைப்பில் வெளிவந்த நூலுக்குத், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றமும் புதுநூற்றாண்டுப் புத்தக மனையும் (என்.சி.பி.எச்சு.) இணைந்து இலக்கியப் பரிசு வழங்கின. 2016 ஆம் ஆண்டில் தினத்தந்தி இதழின் சி. பா. ஆதித்தனார் இலக்கியப் பரிசு பெற்றார்.
 தமிழ்ச் சமூகவியல் ஒரு கருத்தாடல் என்னும் மன்பதை யியல் நூலுக்கு இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம் சிறந்த நூலுக்கான பரிசை வழங்கியுள்ளது.
கருத்தரங்கங்களில் பங்கேற்பு
அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் மகளிருக்கான கருத்தரங்கங்களில் பங்கேற்றுள்ளார். கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் இலக்கியம் வாசித்தல், கற்பித்தல் தலைப்பில் ஆசிரியப் பணிப்பட்டறையைத்திறம்பட நடத்தியுள்ளார்.
27.10.10இல் உலகச்செம்மொழி மாநாட்டில் பங்கேற்று ‘அறியப்படாத பெண்புலவர்’ என்னும் தலைப்பில் கட்டுரை அளித்தார். இவ்வாறு தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் உலக நாடுகள் பலவற்றிலும் கருத்தரங்கங்களில் கட்டுரையாளராகப் பங்கேற்றுள்ளார். மாநாடுகளிலும் நூல்கள், இதழ்களிலுமாக இருநூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை அளித்துள்ளார்.
சொற்பொழிவாளர்
 கட்டுரையாளராக மட்டுமல்லாமல் பெண்ணியப் பேச்சாளராகவும் இலக்கிய உரையாளராகவும் திகழ்கிறார். அண்ணாமலைப் பல்கலைக்கழகம், மேலைச்சிவபுரி செந்தமிழ்க்கல்லூரி, பேரூர் சாந்தலிங்கனார் கலைக்கல்லூரி ஆகியவற்றில் அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார்.
  1970 முதல் சென்னை, மதுரை, தூத்துக்குடி வானாலிகளில் எழுத்துரை ஆற்றி வருகிறார். வெளிநாட்டுப் பண்பலை வானொலிகளுக்காகவும் தமிழ் இலக்கியத்தில் தன்மானம், காலமாற்றத்தில் கற்பு, பூப்பு நிகழ்ச்சி முதலான பல தலைப்புகளில் ஆய்வுக்கட்டுரைகள் வழங்கியுள்ளார். மகளிர் தற்கொலை, முதியோர் சிக்கல்கள்பற்றி ஆய்வு நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார்.
விருதுகள்
சிறந்த கல்வியாளர் எனச் சிறப்பித்து, இவருக்கு வாரியார் விருது வழங்கப்பெற்றுள்ளது. சிறந்த பெண் எழுத்தாளர்  என்பதற்காகச் சக்தி 2004 விருது பெற்றுள்ளார்.
தமிழக அரசும் கி.ஆ.பெ. விருதை 2009 இல் வழங்கிச் சிறப்பித்தது.
அறிஞர் அறவாணனுடன் அக வாழ்க்கையில்மட்டும் இணைந்திராமல்  மண்பதை வாழ்க்கையிலும் இணைந்து தொண்டாற்றுகிறார். எனவே, இராம.வீரப்பன் வழங்கும் இலக்கிய இணையர் விருது 2013 இல் வழங்கப்பெற்றது.
குடும்பம்
மகன் அறிவாளன் த.ஆ.வே.(டி.ஏ.வி.) மேனிலைப்பள்ளியில் இயற்பியல் மேற்கல்வி ஆசிரியராக உள்ளார்., மருமகள் வாணி அறிவாளன், சென்னைப் பல்கலைக்கழகத்தில் துணைப் பேராசிரியர். 8 நூல்களின் ஆசிரியரான இவர், குடியரசுத்தலைவரின் இளம் செம்மொழி ஆய்வறிஞர் விருது பெற்றவர். இவர்கள் வழி, அருணன், அகிலன் என்ற பேரப்பிள்ளைகள் இருவர். மகள் அருண்செங்கோர்  காட்டாங்குளத்தூர் எசு.ஆர்.எம். மருத்துவப் பல்கலைக்கழகத்தில் உயிர் வேதியியல் துறையில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்; மருமகன் பொறியாளர் மோ.சீனிவாசன். பெற்றோர் வழிியில் மனித நோய்கள் என்ற நூலை உருவாக்கியுள்ளார். இவர்வழி அமுத யாழினி, அமுதப்பாவை எனப்பேரப்பிள்ளைகள் இருவர் உள்ளனர்.
பெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா!
பெண்மை வெல்கென்று கூத்திடு வோமடா!
எனப் பாரதியார் வழியில்
தொடர்ந்து மகளிர் நலன்களுக்காகப் பாடுபட்டு, அறியப்படாத பெண்புலவர்களை அறியச்செய்யும் அருந்தொண்டாற்றி வருகிறார்.
மகளிர் நலச் செயற்பாட்டாளர்களில் முன்னெடுத்துக்காட்டாக வாழும் தண்டமிழ்ப் புலமையாளர் தாயம்மாள் அறவாணன் ஆண்டுநூறு கடந்தும் வாழியவே!
– இலக்குவனார் திருவள்ளுவன்