Wednesday, January 24, 2018

சங்கக்காலச் சான்றோர்கள் – ந. சஞ்சீவி 4

சங்கக்காலச் சான்றோர்கள்   4

வீர நெஞ்சத்தாலும் ஈர உணர்வாலும் நிகரற்று விளங்கியவன் வேள்பாரி. அவன் ஆண்ட பறம்பு மலை, பகை வேந்தர் பல்லாண்டு முற்றுகையிடினும் ‘கொளற்கரி தாய்க் கொண்ட கூழ்த்தாகி அகத்தார் நிலைக்கெளிதாய் (குறள், 745) அரண் ஆற்றல் மிக்கதாய் விளங்கியது. கலப்பை ஏந்தும் உழவர் எல்லாரும் கூர்வாள் ஏந்திப் போர் முனை புகினும் சிறியிலை மூங்கிலின் நெல்லும், தீஞ்சுவைப் பலாவின் சுளையும், வள்ளிக்கிழங்கும், நறுஞ்சுவைத் தேனும் வேண்டளவும் கிடைக்கும் வற்றா வளமுடையது அவன் மலை. அரணின் ஆற்றலும் மலையின் வளனும் ஒருபுறமிருக்க, பாரியின் படை வலியும் நெஞ்சுரனும் மாற்றார் நெஞ்சை நடுங்கச்செய்யும் தகைமையன. ஆம்! கலைஞர்கள் நடுவண் கருணையே வடிவெடுத்துக் காட்சி தரும் பாரி, பகைவர் நடுவண் இருள் கொல்லும் கதிரவன்போல விளங்கும் இயல்பினன். அதனாலன்றோ அவன், ‘அண்ணல் யானை வேந்தருக்கு இன்னானாகி அப் ‘பண்பிற் பகைவர் ஓடுகழற் கம்பலை கண்ட செரு வெஞ்சேஎய்’ ஆகவும்,
ஆளிடூஉக் கடந்து வாளமர் உழக்கி
ஏந்துகோட் டியானை வேந்தர் ஓட்டிய
கடும்பரிப் புரவிக் கைவண் பாரி ‘         (அகம். 78)
ஆகவும் காட்சியளித்தான்? இத்தகைய ‘கூர்வேற்குவை இய மொய்ம்பு’டைய வேள் பாரியின் பெரும்பெயர்ப் பறம்பை அவன் அருமை அறியாது மூவேந்தரின் வலம் படுதானை பண்பின்றிப் பல்லாண்டுகள் முற்றுகையிட்டது. முற்றுகையிட்ட மூவேந்தரின் படை அளவிலும் ஆற்றலினும் மிக்கதாயிருப்பினும், அது குறித்துப் பாரியோ, அவன் நாட்டு மக்களோ, நெஞ்சு கலங்கினாரில்லை. ‘கைவண் பாரியின் வெள்ளருவி கறங்கும் நெடு வரை, உழவர் உழாமலே நான்கு பயனுடைத்து,’ என்பது வையக மெல்லாம் அறிந்த வாய்மை அன்றோ? அம் மலை வாழ் பறவைகளும் அச்சமின்றிக் காலையில் பறந்து சென்று மாலையில் செந்நெற்கதிர்களைச் சேர்த்துக் கொணரும். இக்காட்சியினை,
… …. ‘பாரி பறம்பின்
நிரைபறைக் குரீஇயினங் காலப் போகி
முடங்குபுறச் செந்நெல் தரீஇய ரோராங்(கு)
இரைதேர் கொட்பின ஆகிப் பொழுதுபடப்
படர்கொள் மாலைப் படர்தந் தாங்கு         (அகம், 303)
என்று ஒளவையாரும் அழகுறப் பாடியுள்ளார். இவ்வாறு ஒரறிவு உயிர்களும் ஆறறிவு உயிர்களும் அச்சமின்றி இருந்த அந்நிலையில் நெடுமாப்பாரியின் உயிரனைய நட்புடைய கபிலர் பெருமானார் பாரி வேளின் பறம்பு மலையை முற்றுகையிட்டிருந்த பகை மன்னரை நோக்கிக் கூறியவற்றை அறிவிக்கும் பாடல்களைப் படிக்குக்தோறும் நம் மனம் எத்துணை இறும்பூது எய்துகின்றது!
மரந்தொறும் பிணித்த களிற்றினிர் ஆயினும், 
புலந்தொறும் பரப்பிய தேரினிர் ஆயினும், 
தாளிற் கொள்ளலிர், வாளிற் றாரலன்; 
யானறி குவனது கொள்ளு மாறே : 
சுகிர்புரி நரம்பின் சீறியாழ் பண்ணி 
விரையொலி கூந்தல்நும் விறலியர் பின்வர 
ஆடினிர் பாடினிர் செலினே 
நாடுங் குன்றும் ஒருங்கீ யும்மே.’         (புறம், 109) 
‘கடந்தடு தானை மூவிருங் கூடி 
உடன்றணி ராயினும் பறம்புகொளற் கரிதே! 
முந்நூ றூர்த்தே தண்பறம்பு நன்னாடு; 
முந்நூ றூரும் பரிசிலர் பெற்றனர்; 
யாமும் பாரியும் உளமே; 
குன்று முண்டுநீர் பாடினிர் செலினே.’         (புறம்.101)
‘அளிதோ தானே பேரிருங் குன்றே!
வேலின் வேறல் வேந்தர்க்கோ அரிதே!
நீலத் திணைமலர் புரையும் உண்கண்
கிணைமகட்கு எளிதால் பாடினள் வரினே.’         (புறம்.111) 
என்று கபிலர் பாடும் பாடல்களில், ‘முந்நூறு ஊர்களை உடையது தண்பறம்பு நன்னாடு. அம்முந்நூறு ஊர்களையும் பரிசிலர் பெற்றனர்,’ என்றும், எஞ்சியிருப்பவர் தாமும் பாரியும் குன்றுமே என்றும், ‘அக்குன்றினைக் கைப்பற்றப் பரந்து கிடக்கும் பார் முழுதும் தேரைப்பரப்பியும் மரந்தோறும் களிற்றைப் பிணித்தும் எத்துணை அரும் பாடு பட்டாலும் தேர்வண்பாரி கூர்வேலுக்கஞ்சி அதை ஒரு நாளும் கொடுக்கமாட்டான்,’ என்றும், ‘ஆனால், வாளையும் வேலையும் வீசி எறிந்துவிட்டு, வாள் பிடித்த கையால் வையத்தின் நெஞ்சுருக்கும் யாழ் பிடித்து, நீல மலர் போலும் கோல விழி படைத்த விரையொலி கூந்தல் விறலியர் பின் வர ஆடியும் பாடியும், பொன்னும் மணியும் முத்தும் பவளமும் தேனும் பலாவும் சிந்திக் கிடக்கும் அவன் முற்றத்திற்குச் சென்றால், நாட்டையும் குன்றையும் எம்மையும் எம் தலைவனையும் ஒருங்கே பெறலாம்,’ என்றும் எத்துணை இறுமாப்புடன் இகல் வேந்தர் சிறுமையும், இசை வள்ளல் பாரியின் பெருமையும் தோன்ற அவர் குறிப்பிடுகிறார் பாருங்கள்!
ஆயினும், என்ன பயன்? பாரியோ, ஒருவன். ‘அழுக்காறு என ஒரு பாவி’ படைத்த பேரோ, மூவர். முற்றுகையோ, பல காலம் நடைபெற்றது. என் செய்வர் மாந்தர்! ‘பாறையும் குவடும் பாதுகாப்பாய் விளங்க, பிறை மதியின் வளைவு போலும் கரையுடைய தெளிந்த நீர் படைத்த சிறுகுளம் உடைந்து நாசமாவது போல நம் நாடும் வாழ்வும் ஆகுமோ!’ என்று அஞ்சிக் கலங்கினர். இந்நிலை கண்டான் வேள் பாரி; ஆற்றொணாக்கோபம் கொண்டான். ஓவத்தன்ன தன் வினை புனை நல் இல்லினைத் துறந்து, புலியெனப் பாய்ந்து, போர்க்களம் சென்றான்; ஒருவனை எதிர்க்க மூவராய் ஒருங்கு வந்துள்ள பொறாமைப் பேயர்களை எதிர்த்துப் போர் முரசு கொட்டினான்; வீரப் போர் புரிந்தான்; மாண்டான்! ஆம்! அறத்தை நம்பினான் பாரிஅந்த அறத்தினாலேயே வீழ்ந்தான் அழியாப் புகழ் பெற்றான். அம்பை நம்பினர் அம்மூவேந்தர்; அதனாலேயே வென்றனர்; அழியாப் பழியும் எய்தினர்
(தொடரும்)
முனைவர் ந. சஞ்சீவி:
சங்கக்காலச் சான்றோர்கள் 

Monday, January 22, 2018

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 37 – வல்லிக்கண்ணன்

 (ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 36 –தொடர்ச்சி)

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 37

8. தன்னம்பிக்கையும் தன்மான வீரமும்


பெருங்கவிக்கோ தன்னம்பிக்கை மிகுந்தவர்; தனது திறமைகளை நன்கு உணர்ந்தவர்; தன்மானம் மிக்கவர்; அதில் முகிழ்த்த வீரமும் துடிப்பும் கொண்டவர்.
அவருடைய இப்பண்புகள் அவரது கவிதைகளில் ஒளிப்பொறி சிதறிப் பல இடங்களிலும் பரவிக் கிடப்பதைக் காணலாம்.
காலமெல்லாம் விழித்திருந்தே
கடமையாற்றும் கவிஞன் நான்
அவனும் இவனும் எவனும் ஒன்றாய்
ஆகும் கொள்கை யுடையவன் யான்
விருப்பு வெறுப்பை வென்று வாழும்
வேதாந்தி போல் ஞானி நான்
என்று அவர் அறிவிக்கிறார்.
என்னைப் போல் முயற்சிக்கே இவ்வுலகில்
எவன் பிறந்தான்! கையில் செப்புப்
பொன் பொருள்கள் சிறிதுமிலா நிலையில் கூடப்,
புலம்பாமல் அஞ்சா நெஞ்சத்  
தன்னேரில்லாத வகை உழைக்கின்றேன்!
தாரணியில் தமிழே மேன்மைப்
பன்னலமும் பெருகிடப் பேராசை கொண்டே
பணிசெய்தேன்! பகைமை வென்றேன்!
என்று கவிஞர் கூறுகிறார்.
பெருங்கவிக்கோ ஓயாத உழைப்பில் மகிழ்ச்சி காண் பவர். பிறருக்கு உதவி புரியும் நல்ல மனம் பெற்றவர். இவை பற்றி அவர் ஒரிடத்தில் குறிப்பிடுகிறார்:
 ஒடியாடித் தினம் உழைத்து மகிழ்கிறேன்
ஓய்வுக்கு நேரமில்லை-பாக்கள்
பாடித் தேடித்தினம் பண்பட்டுத் தேர்கின்றேன்
பயணம் முடியவில்லை.

பிறர்க்குதவி செய்யப் பெருங்கேடு வந்தாலும்
பின்னுக்குப் போகவில்லை-நெஞ்சம்
அறந்தவறிப் பழி ஆக்க நினைப்பினும்
அதனை யான் செய்யவில்லை.

ஊரார் பணத்திலே நீராடி என்னையான்
ஊட்டி வளர்க்கவில்லை-யானும்
பேராக வேண்டுமென்றே வஞ்சகர் மார்பினைப்
பிடித்துத் தழுவ வில்லை.

உண்மை நெறியுண்டு உறுதிப் பணிவுண்டு
ஊக்கப் பெருக்கமுண்டு-சிங்கத்
திண்மைக் குணத் தமிழ் செயல்வீர வாளுண்டு
தீமைக் கொலைகளுண்டு!

அவரது துணிவு குறித்துக் கவிஞர் இவ்விதம் பாடுகிறார்.

இதய அகலில் ஏற்றிய தீபம்
என்றன் துணிவடா-துன்ப
விதவிதமான புயலின் நடுவினிலும்
வென்றதம் மணியடா!
(தொடரும்)
படைப்பு: வல்லிக்கண்ணன்
தரவு: இ.பு.ஞானப்பிரகாசன்

நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 3.

 

 நல்லிசைப் புலமை மெல்லியலார்கள் – 3
மற்றும் அவ் வடநூலுள் ஒருசாரார், சூத்திரசாதியாரும் பெண்பாலாரும் வேதத்தின் சொல்வழக்கும் பொருளுணர்ச்சியும் மெய்யுணர்தலும் வீடும் எய்தப்பெறார் என்று கூறி, அவரை அறியாமையுள்ளே நிறுத்துப. இஃதெல்லார்க்கும் உடன்பாடன்று. பெரும்பாலார் வேதத்தை முறையே நியமிக்கப்பட்ட ஒலியுடன் ஓதற்கண் சூத்திரசாதியாரையும் பெண்பாலாரையும் விலக்குபவல்லது, அதன் சொல்வழக்கினும் பொருளுணர்ச்சியினும் மெய்யுணர்ந்து வீடுபெறுதலினும் விலக்கார். இதுவே இத் தமிழ்நாட்டுச் சிறந்த சைவ வைணவ நல்லாசிரியர் தொன்னெறி மரபாம். சைன பௌத்தரும் மெய்யுணர்ந்து வீடு பெறுதற்கண் மகளிரை விலக்காரென்பது, அவரவர் நூல்களான் நோக்கித் தெளிக. அவருள் ஆரியாங்கனைகளும், பிக்குணிகளும் எனத் துறவொழிக்கம் பூண்டு வீடுபேறு முயலும் பெண்பாலாரும் உளராதல் அறிந்துகொள்க.
இனி, ஆண்மக்கள் காமத்தாற் கண்மயங்கிப் பிறனில் விழைந்தும் பெண்வழிச்சென்றும் வரைவின்மகளிர்ச் சேர்ந்தும் கேடுறாது பாதுகாத்தற்கண், பெண்பாலைப் பழித்து ஆண்பாற்கு அறிவுறுத்துப. அங்ஙனம் வருமாறு
‘பெண்ணி னாகிய பேரஞர் பூமியு
ளெண்ண மிக்கவ ரெண்ணினு மெண்ணிலார்.’ 
‘புரிவளை முன்கைப் புனையிழை நல்லார்
விரகில ரென்று விடுத்தனர் முன்னே.’
‘பெண்ணெனப் படுவ கேண்மோ பீடில பிறப்பு நோக்கா
உண்ணிறை யுடைய வல்ல வொராயிர மனத்த வாகும்
எண்ணிப்பத் தங்கை யிட்டால் இந்திரன் மகளு மாங்கே
வெண்ணெய்க்குன் றெரியுற் றாற்போன் மெலிந்துபின்னிற்கு மன்றே.’
‘அன்புநூ லாக வின்சொ லலர்தொடுத் தமைந்த காத
லின்பஞ்செய் காமச் சாந்திற் கைபுனைந் தேற்ற மாலை
நன்பகற் சூட்டி விள்ளா தொழுகினு நங்கை மார்க்குப்
பின்செ லும்பிறர்க ணுள்ளம் பிணையனார்க்கடிய தன்றே.’
‘நுண்ணறி வுடையோர் நூலொடு பழகினும்
பெண்ணறி வென்பது பெரும்பே தைமைத்தே.’
என இவை முதலியன பலவாம். ஆண்மக்களை நோக்கி, காமமாகாதென்றற்கண் பெண்மக்கள் பழிக்கப்படுதல்போல, ஆரியாங்கனைகள், பிக்குணிகள், கைம்மை நோன்பினர் முதலாய பெண்மக்களை நோக்கி, காமமாகா தென்றற்கண் ஆண்மக்களும் இவ்வாறே பழிப்புரை பெறுதற்குரிய ரென்பது ஒருதலையாம். ஆணும் பெண்ணும் அறிவு மயங்கிக் காமவேட்கை மீதூர்ந்து, ஒருவ ரொருவரைக் காமித்து முறை தப்பித் திரிதற்கண், பெண்ணால் எத்துணைக்கேடு ஆணுக்கு எய்துமோ அத்துணையும் பெண்ணுக்கும் எய்துவதேயாகும். இங்ஙனமாகவும், ஒருவர் ஒருவரைப் பழித்து உரைப்பது எவ்வாறு? அவரவர் கேட்டிற்கு அவரவர் அறிவும் செயலும் காரணமாவனவே யன்றிப் பிறவில்லை. இக்கருத்துணர்ந்த நல்லோரெல்லாம் இருபாலார் நல்லொழுக்கமும் வேண்டுப.

ஆச லம்புரி யைம்பொறி வாளியுங்
காச லம்பு முலையவர் கண்ணெனும்
பூச லம்பு நெறியின் புறஞ்செலாக்
கோச லம்புனை யாற்றணி கூறுவாம்.
என்றார் கல்வியிற்பெரியாரும்.
நடுக்கடற் பிறந்த சங்கி னுள்ளி ருந்த பாலினற்
குடிப்பி றந்த மைந்தர்தங் குழைமு கம்பி றர்மனை
யிடைக்கண் வைத்த லில்லைகாத லார்கண் மேலு மார்வமூர்
கடைக்கணோக் கிலாத மாதர் கற்பை யாவர் செப்புவார்.
என்றார் வாமன முநிவரும்.
ஆண்மக்கள், கண்டபக்கமெல்லாம் பேராசை யெழுவிக்கும் தம் பேய்மனத்தைப் பழியாமற் பெண்பாலாரையே பழிப்பது, குருடன் தன்கண்ணைப் பழியாமல் தன்னை யிடறிய வழியைப் பழித்தலையே யொக்கும். கொன்றுதின்பான், தனது தின்றல் வேட்கையே கொலைக்குக் காரணமென்னாது, கொல்லுதற்றொழிற்குரிய கருவிகளும் கொல்லப்படும் யாடு முதலியனவும் உண்மையே காரணமென்னும்; இது, அதுவே போலுமென்க. அன்றியும், மண் பொன் பெண் என உடனெண்ணப்பட்ட மூன்றனுள் முன்னை இரண்டனையும் விழைந்து இவனடையுங் கேடெல்லாம் இவன் வேட்கை முதலியன காரணமாக விளைதல்போலப் பின்னதற்கும் ஆம் என்பது எளிதினுணரப்படும்.
காமம் ஒழியத்தக்கது என்னும் பொதுமொழிக்கண்ணும் ஆண்பாலார்க்குப் பெண்பாலார்பக்கத் துளதாகும் காமவேட்கையும், பெண்பாலார்க்கு ஆண்பாலார்பக்கத் துளதாகுங் காமவேட்கையுமே ஒழியத்தக்கன என்பதே பொருளாதலுங் கண்டுகொள்க. இனி, வீடெய்தற்கட் காமமுதலியன ஒழியற்பாலவாதலால் ஆண்பாலார் பெண்பாலாரை விடுதற்கு எத்துணை அறிவொழுக்கங்களுடையராவரோ அத்துணையும் பெண்பாலார் ஆண்பாலாரைவிடுதற்கும் வேண்டுவ ரென்பது. ‘நூலொடு பழகினும் பெண்ணறிவென்பது பெரும் பேதைமைத்தே’ என்பார்க்கு, நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தம் உண்மையறிவே மிக்காகும். ஓதியுணர்ந்தும் பிறர்க்குரைத்துந் தாமடங்காப் ‘பேதையாரும் ஆண்மக்களுள்ளும் பலருளராவராதலால் அப்பேதைமை மகளிர்க்கே சிறந்ததில்லை என்று கூறுக. இவையெல்லாம் வடித்தாராய்ந்தே வடகலை தென்கலைக் கடனிலை கண்ட ஆசிரியர் தொல்காப்பியனார் ஆண்பெண் இருபாலார்க்கும் அறிவொப்புமை கூறியமட்டி லமையாது,
கிழவனுங் கிழத்தியுஞ் சிறந்தது பயிற்ற லிறந்ததன் பயனே‘ என்பதனால், வீடுபெறுதற்கு எமஞ்சான்றவற்றை இருபாலாரும் புரிதற்கு உடன்பட்டனரென வுணர்க. சிறந்தது, சிறப்பு, சிரேயசு என்பன வீட்டின் பெயராம். இத் தொல்காப்பிய நன்னெறி கடைப்பிடித்தொழுகிய பண்டைத் தமிழ்மக்கள் அனைவரும் ஆண் பெண் இருதிறத்தாரையும் நற்றமிழ்க் கல்வியினும் அற்றமிலறிவினும் குற்றமி லொழுக்கினும் வேற்றுமை யின்றிப் பயில்வித்தனராவர். இத்தகைப் பயிற்சி ஒத்திலையாயின் மூன்றுவகைச் சங்கத்து நான்கு வருணத்தொடுபட்ட சான்றோருள்ளும், சைவ வைணவ மெய்யடியருள்ளும் உத்தமக் கல்வி வித்தகர்போற்றும் நல்லிசைப்புலமை மெல்லியலார்கள் பலரை நாம் பெற்றுய்யுமா றெங்ஙனம்! பெண்டிரெல்லாம் அறிவு நிரம்புதல் தண்டமிழ் வரைப்பிற் பண்டே நிகழ்ந்தது என்பதனை, கோப்பெருஞ்சோழற்கு உயிர்த்துணைவராகிய பிசிராந்தையார் என்னும் புலவர்பெருந்தகையார், யாண்டு பலவாகவும் தமக்கு நரையிலவாதற்குக் காரணமாகத் தம் மனைவியும் மக்களும் அறிவு நிரம்பினரா யிருத்தலைக் கூறியதனானும் அறியலாகும். ‘இல்லதெ னில்லவண் மாண்பானால்’ என்பதனையும் நோக்கிக்கொள்க.
இனி, ஒருசாராசிரியர், பெண்பாலார்க்கு யாழ் முதலிய சில கலைகளே கூறுவர். இவ்வாறு, ‘கலைமலிகாரிகை‘ எனவருந் திருச்சிற்றம்பலக் கோவைக்கும், ‘கலைவலார்’ என்னுஞ் சிந்தாமணிக்கும் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் கூறிய உரைநோக்கித் தெளிக. மகளிராற் பயிலப்படும் யாழ் முதலியன ஆண்மக்களானும் பயிலப்படுமாறுபோல, ஆண்மக்களாற் பயிலப்படுவனவும் மகளிராற் பயிலப்படுமென் றுணர்க. பெண்பாற் கோதிய மடைநூற்செய்தி ஆண்பாலாராலும் பயின்று செய்யப்படுதல்போலக் கொள்க. நளன் வீமன் என்னும் ஆண்பால் நன்மக்கள் மடைத்தொழில் வல்லுநராதலுங் காண்க. இவ்வேற்றுமை யின்மையானன்றே மகளிர்க்கோதிய யாழ் முதலியவற்றிற் றேர்ச்சிமிக்க நல்லாண்மக்களும், இயற்றமி ழறிவிற் சிறந்த நல்லிசைப்புலமை மெல்லியலாரும் இத்தமிழ்நாட்டுப் பலராயினரென்பது.
வீடுபயக்கும் விழுப்பேருணர்வைக் கொள்ளும் வாயெல்லாங் கொளுத்தியது இப்பழைய தமிழ்நாடே. ஆண் பெண் என்னும் வேற்றுமையின்றிப் பிறப்பினிழிபு கருதாது கடைநிலத்தோராயினுங் கற்றறிந்தோரைத் தலைநிலத்து வைத்து மகிழ்ந்தது இத் தண்டமிழ்வரைப்பே. குலத்தினும் பாவினும் குடியினும் தொழிலினும் கொள்கையினும் பல்வேறு வகைப்பட்ட நன்மக்களும் இகலிலராய் ஒருங்கு குழீஇ அறிவான் மகிழ்ந்தது இவ்வருந்தமிழ் நிலமே. ‘நன்மக்களெங்கே பிறந்தாலுமென்’ என்று அறிவின் பெருமையும் அன்பின் அருமையுமே கருதிப் பெண்டிரும் பிறப்பினிழிந்தாரும் உரைத்தருளிய நன்மொழி யனைத்தையும் வேதமெனப் போற்றி புகழ்ந்து, அவரது அன்புருவாய இன்புறுவடிவைத் திருக்கோயிலில் வைத்து வழிபடுவதும் இத் தென்றமிழ்ப்பொழிலே. ‘எக்குடிப் பிறப்பினும் யாவரே யாயினும் அக்குடியிற் கற்றோரை வருக‘ என்றழைத்தது இவ்வண்டமிழுலகே. ஆண்மையில்லென்பார் நாண்கொள முன்னே எண்டிசை வென்று பெண்டரசாண்டதிவ் வொண்டமிழகமே. இவையெல்லாம் நன்காராயின், இத்தமிழர் ஆண் பெண் இருபாலார்க்கும் அவயவவேற்றுமையல்லது அறிவுவேற்றுமை சிறிதுங் கருதினராகார் என்பது தெளிவாம். இக்கூறியவற்றிற்கெல்லாம் சான்றெனச் சிறந்த இத்தமிழ்நாட்டு நல்லிசைப்புலமை மெல்லியலாரைப்பற்றி யானறி யளவை யீண்டெடுத்தோதலுற்றேன். அவர்,
ஆதிமந்தியார்,      குறமகள் இளவெயினி,   
வெள்ளிவீதியார்,    பேய்மகள் இளவெயினி,  
ஔவையார், காவற்பெண்டு,     
பாரிமகளிர்,  காரைக்காற்பேயம்மையார்,
பூதப்பாண்டியன்றேவியார், வில்லிபுத்தூர்க்கோதையார்,
காக்கைபாடினியார்,  நச்செள்ளையார்   
எனப் பலராவர்.

(தொடரும்)
இரா. இராகவையங்கார்
நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்