Friday, July 29, 2016

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 35: ம. இராமச்சந்திரன்





தலைப்பு-இலக்குவனார்கவிதைகள் : ilakkuvanar kavithaikal_or_aayvu_thalaippu

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 35 

உமா மகேசுவரம்பிள்ளை
  தமிழகத்தில் மறுமலர்ச்சியைத் தோற்றுவித்த தந்தை பெரியாரின் தொண்டர் இவர். தஞ்சை மாவட்டத்தின் நாட்டாண்மைக் கழகத் தலைவராய் இருந்தவர். திருவையாறு அரசர் கல்லூரியில் தமிழ் மாணவர்க்கு(பார்ப்பனர் அல்லாதார்) படிக்க உதவிகள் செய்தவர். ‘தமிழ்ப் பொழில்’ என்னும் மாத இதழை நடத்தியவர். தூய செந்தமிழ்த் தொண்டர். இத்தகைய பெரியார் மறைவு குறித்து ‘துன்பமாலை’ என்னும் தலைப்பில் கவிதை பாடியுள்ளார், இலக்குவனார். அறுசீர் ஆசிரிய விருத்தத்தால் அமைந்தது இக்கவிதை. நான்கு விருத்தங்களை கொண்டது.
  தமிழவேள் என்று மதிக்கப்பெறும் உமாமகேசுவரம்(பிள்ளை) மறைந்த செய்தி, எம் சிந்தையில் ஆற்றமுடியாத துன்பத்தை அடையச் செய்துவிட்டது. என்னுடைய நிலை கலக்கி அறிவை அழித்து என் உயிரைப் பிரித்து விட்டதே. கரைகாணாத் துயர்க் கடலில் ஆழ்த்தி விட்டதே.
  “என் அன்னையை இழந்தேன் என்று சொல்வேனோ, அப்பனை இழந்தேன் என்று சொல்வேனோ, என் தலைவனை இழந்த காரணத்தால் என்னை இழந்தேன் என்று சொல்வேனோ நினைத்ததை முடிக்கும் முதல்வனை இழந்து பின்னையேன் இருக்கின்றேன். பேதையேன் வாழ்ந்த வாழ்வு இது தானே” என்கிறார்.
  மேலும் சிலநாள் முன்னர், பல்கலைக்கழக ஒப்புதலைப் பெற்ற கல்லூரி பலவகையிலும் சிறப்புடைய பணிபுரிவது நம் கடமை என்று அன்பாய் விடுத்த கடிதம் பெற்றேனே. இன்றோ அவர் இறந்த செய்தியைப் பெற்றேனே. என்னே இக்கொடிய வாழ்வு.
  செந்தமிழை மூச்சாகக் கொண்டவர். புலவரே அவருடைய அறிவு. புகழ் வாய்ந்த நம் மொழியின் பெருமையை அவர் நிலைநாட்ட முயலாத நாளும் உண்டோ? இவ்வரிய செயலால் செந்தமிழ்த்தாய் அவருயிரைப் போக்கினாளே, ஐயோ, செந்தமிழ்க்குத் தொண்டு செய்தோர் நூற்றாண்டு வாழ்ந்த துண்டோ? இல்லை போலும்” என்கிறார் கவிஞர்.
‘செந்தமிழே யவருயிராம்; செழும்புலவோ ரவரறிவாம், சீர்த்தி வாய்ந்த
நந்தமிழின் மேன்மைதனை நாட்டுதற்கு முயலாத நாளுமுண்டோ?
இந்தவோர் செயலால்தான் இருந்தமிழ்த்தாய்
போக்கினளோ என்னே யையோ
செந்தமிழ்க்குப் பணிபுரிந்தோர் எவரேனும் செல்நூறும்
வாழ்ந்த துண்டோ.’101
பாரியைப் பிரிந்த பாரிமகளிர் பாடிய பாடலும்102 பாரியின் நண்பர் கபிலர் பாடல்களும் 103 இங்கு ஒப்பு நோக்கத்தக்கன.
ச. சோமசுந்தர பாரதியார்
  பசுமலை நாவலர் பாரதியார் என்று அழைக்கப்படுவார். விடுதலைக்கவிஞர் சுப்பிரமணிய பாரதியின் நெங்கிய நண்பர். சிறந்த உரையாசிரியர். தொல்காப்பியப் பொருளதிகாரம் புறத்திணைக்குப் பொருத்தமான உரை கண்டவர். முதன் முதலாக 1937 ஆம் ஆண்டில் இந்தி மொழித்திணிப்புக்கு எதிர்ப்பாகப் போராடினார். பகுத்தறிவு இயக்கத்தின் சிறந்த தொண்டருள் ஒருவராக விளங்கினார். பரந்த நூலறிவு உடையவர். தமிழ்ப்பற்று மிக்கவர். இவர் மறைவு குறித்து இரங்கல் வெண்பா பாடியுள்ளார் கவிஞர். நாவலர் பாரதியார் நினைவு மலரில் இக்கவிதை இடம் பெற்றுள்ளது. நான்கு அடிகளையுடைய நேரிசை வெண்பா.
  செஞ்சொல் கொண்ட புலவரே, தமிழ்மொழியின் காவலரே நீ, உறங்கிவிட்டாயோ? தமிழ்ப்பகையை வென்ற நீ வேறுலகம் சென்றாயோ? எமக்குத் துன்பத்தைக் கொடுத்துவிட்டு இவ்வுலகினின்று நீங்கினையோ!
 ‘செஞ்சொற் புலவ! செழுந்தமிழின் காவல!
 துஞ்சினையோ தூய தமிழ்ப்பகையை – எஞ்சாது
 வெல்லும் துணிவோடு வேறுலகம் சென்றனையோ?
 அல்லல் எமக்கே அளித்து’ 104
  இலக்குவனார் பாடிய கையறுநிலைப் பாடல்கள் இரக்க உணர்வைத் தருகின்றன. தமிழ் அன்பர்களுடைய பிரிவால் தமிழ் வளர்ச்சி குன்றவிடாமல் காத்தல் நம் கடமை என்ற எண்ணத்தை ஊட்டுகின்றன.
குறிப்புகள்:
    1. சி. இலக்குவனார் துன்பமாலை 1941, ப.13, பா.எ.4.
    2. பாரி மகளிர், புறநானூறு, பா.எ. 112
    3. கபிலர், புறநானூறு பா.எப. 113, 114.
    4. சி. இலக்குவனார், நாவலர் பாரதியார் நினைவு மலர், திருவள்ளுவர் கழக வெளியீடு, மதுரை 1960, ப.3, பா.எ.1.
தலைப்பு-தொடரும் : thalaippu_thodarum
பெயர்-ம.இராமச்சந்திரன் _peyar_ma.ramachnathiran

Wednesday, July 27, 2016

தமிழுக்கு ஒளி தந்த தமிழொளி 2 / 4 – சி.சேதுராமன்




 தலைப்பு-தமிழுக்கு ஒளிதந்த தமிழொளி-சேதுராமன் :thalaippu_thamizhukkuoli_thamizholi_sethuraman

தமிழுக்கு ஒளி தந்த தமிழொளி  2 / 4

  1945-ஆம் ஆண்டில் எழுதப்பட்ட தமது கவிதைகள் அனைத்தையும் திரட்டி இரண்டு தொகுதிகளாகத் தமிழ்ஒளி உருவாக்கினார். பாரதிதாசன் நண்பராக விளங்கிய திருவாரூர் டி.எம்.இராமன் என்பார், அத்தொகுதிகளை நூலாக வெளியிடுவதாகக் கூறி கவிஞரிடமிருந்து பெற்றுக் கொண்டார். பின்னர் அந்தக் கவிதைத் தொகுதிகள் இரண்டும் தொலைந்துவிட்டதாகப் பொய் சொல்லிவிட்டார். இது குறித்து மேலும் தகவல் அறிய முயன்ற போது “இருபது வயது இளைஞன் பேரால் இரண்டு கவிதைத் தொகுதிகள் வெளி வருவதா? ” என்ற அவரின் எண்ணம் தெரிய வந்தது. புலமைக் காழ்ப்பு பொறி பறந்ததைப் புரிந்து கொண்டார் தமிழ் ஒளி. வலிமைப் படைத்தவர்களை எதிர்க்க வாய்ப்பில்லாமல் சென்னைக்குப் பயணமானார்.
  புதுவைக் குயில்தோப்பில் கருக்கொண்டு எழுதிய கவிதைகள் பலவற்றைப் பெரியாரின் ‘குடியரசு’, அண்ணாவின் ‘திராவிட நாடு’ ஆகிய இதழ்களில் தமிழ்ஒளி பதிவு செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவுடைமை இயக்கத்தில் சேர்தல்
  மாணவப் பருவத்திலேயே பெரியாரின் தன்மதிப்பு(சுய மரியாதை)க் கருத்துகளில் பெரிதும் ஈர்க்கப்பட்ட தமிழ்ஒளி 1945-ஆம் ஆண்டில் பெரியாரின் தன்மதிப்பு இயக்கத்தில் ‘தீவிரக்கருஞ்சட்டை வீரராக’ இணைந்து செயல்பட்டார். 1947-ஆம் ஆண்டில் விடுதலை நாளைத் துக்க நாளாகக் கொண்டாடுமாறு பெரியார் கூறியதை ஏற்க முடியாத நிலையில் தி.க.கொள்கையில் வெறுப்புற்று தோழர் ப. சீவானந்தம் அவர்களைச் சந்தித்துப் “பொதுவுடைமைக் கட்சியில்” தமிழ்ஒளி உறுப்பினராகச் சேர்ந்தார்.
  அந்தச் சமயத்தில்தான் பதினேழு வயது இளைஞரான எழுத்தாளர் செயகாந்தன் தமிழ்ஒளியைச் சந்தித்தார். இச்சந்திப்பே ஓர் அரிய சிறுகதை எழுத்தாளரைத் தமிழ் இலக்கிய உலகிற்குத் தந்தது எனலாம். தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் ‘செயகாந்தன் காலம்’, ‘செயகாந்தன் பாணி’ என்றெல்லாம் போற்றுமளவிற்குச் சிறுகதைகளைத் தமக்கே உரிய எதார்த்தமான பாணியில் எழுதி, புகழின் உச்சியில் நின்றவர் செயகாந்தன். இப்படிப்பட்ட உன்னதமான படைப்பாளி தமிழ்ஒளியின் இலக்கியப் பாசறையிலிருந்து உருவானவர் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.
  தமிழ்ஒளியால் தாம் வார்த்தெடுக்கப்பட்ட விதத்தை, “நான் தமிழ் இலக்கியப் பாடம் யாரிடமாவது முறையாக நெடுநாட்கள் பயின்றிருப்பேன் என்றால், அது தமிழ்ஒளி அவர்களிடம்தான். படிக்கிற விசயத்தில் எனது சனாதனத்தை மிகவும் கடுமையாக விமரிசனம் செய்வதோடு அன்றி, எத்தனையோ விசயங்களில் எனது கண்களைத் திறந்தவர் அவர்; பாரதியின் படைப்புகளையே தாண்டிவரக்கூடாது என்றிருந்த என்னை புதுமைப்பித்தன்வரை இழுத்து வந்தவர் தமிழ் ஒளிதான்” எனச் செயகாந்தன் குறிப்பிடுவது நோக்கத்தக்கதாகும்.
  தமிழ் ஒளி, தன்மதிப்பு இயக்கத்தில் இருந்தபோது எழுதியதைவிட, பொதுவுடைமைக்கு வந்தபிறகுதான் பொதுவுடைமைக் கொள்கைகள் பற்றி அதிகம் எழுதியுள்ளார். புதுவையிலிருந்து சென்னைக்கு வரும் போதெல்லாம் சென்னையின் பல்வேறு இடங்களில் கால்நடையாகவே சுற்றிவந்தார். குறிப்பாகச் சென்னை-வால் டாக்சு சாலையில் இருந்த பட்டறைகளை ஒட்டினாற்போன்று வசித்து வந்த கூலித் தொழிலாளிகளின் வாழ்வு அடிக்கடி இவரது கண்களில் பட்டது. வெய்யிலுக்கும்-மழைக்கும் பாதுகாப்பு இல்லாத அந்தக் குடிசைகளில், வாழ்வுக்கும் பாதுகாப்பு இன்றி வாழும் ஏழை மக்களின் அவலம் தோய்ந்த வாழ்க்கைநிலை கவிஞரின் நெஞ்சை வருத்தியது.
  அதனால் தான் சென்னைக்கு வரும் போதெல்லாம் உழைக்கும் மக்களின் வாழிடங்களையே இவரது கால்கள் சுற்றிச்சுற்றி வந்தன. வருக்க எழுச்சியைத் தோற்றுவிக்கவும், களப்பணிகளில் ஈடுபடவும் சென்னையே சிறந்த இடம் எனக் கருதியதால்தான் 1945-ஆம் ஆண்டு முதல் சென்னையிலேயே அவர் நிலையாகத் தங்கிவிட்டார்.
  ‘நிலைபெற்ற சிலை’, ‘வீராயி’, ‘கவிஞனின் காதல்’ என்னும் மூன்று காவியங்களும் இவர் சென்னையில் நிலையாகத் தங்கிய காலத்தில் எழுதப்பட்டது எனலாம். தமிழ்ஒளி எழுதிய இந்த மூன்று நூல்களும் 1947-ஆம் ஆண்டில் ஒரே சமயத்தில் வெளியாகித் தமிழ் ஒளியின் ‘இலக்கியப் போக்கை’ இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தின.
  சென்னைக்கு வந்த தமிழ்ஒளி தாம் இறப்பதற்குச் சில நாள் முன்பு வரை தமது பெற்றோர்களைப் பார்ப்பதற்காகவோ, வேறு ஏதேனும் நிகழ்வுகளுக்காகவோ புதுவைக்கு செல்லவே இல்லை. அவருக்குக் குடும்பம் என்ற ஒன்றும் இல்லை; உறவினர்களையும் நாடவில்லை.
  கவிஞருக்குத் திருமணம் செய்து வைக்க(1948இல்) அவரது பெற்றோர்கள் விரும்பியபோதும் அவர் அதை மறுத்துவிட்டார். தமது எண்ணங்களைப் புரிந்து நடக்கக்கூடிய ஒரு பெண்ணைத் தமது பெற்றோரால் தேர்ந்தெடுக்க முடியாது என்று கருதியதால் திருமணத்தை மறுத்தார்.
  சென்னையில் தனிமனிதனாக வாழ்ந்த தமிழ்ஒளி அதே சமயத்தில் தனக்கென்று ஒரு நண்பர்கள் வட்டத்தையும் அமைத்துக்கொண்டு செயல்பட்டார். அந்த வட்டத்தில், இலக்கிய ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், பதிப்பாளர்கள், தொழிற்சங்கத் தோழர்கள்… எனப் பலரும் இருந்தனர். தற்போது வள்ளலார்நகர் என்று அழைக்கப்படும் தங்கச்சாலையிலும், திருவொற்றியூரிலும் பொதுவுடைமைக்கட்சித் தோழர்களின் இருப்பிடங்கள் அமைந்திருந்ததால், அங்கெல்லாம் தமிழ்ஒளி தங்கினார். ஆனால், அவர் ஓரிடத்திலேயும் நிலைத்திருந்ததில்லை. அதேபோன்று பத்திரிகைகளுடன் அவருக்கு நெருங்கிய உறவு இருந்தபோதிலும் எந்த ஒரு பத்திரிகையிலும் அவர் மாத ஊதியத்திற்காகப் பணியாற்றியதில்லை.
  • முனைவர் சி.சேதுராமன்,
  • இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை,
  • மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.
மின்வரி: Malar.sethu@gmail.com

Saturday, July 23, 2016

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 34: ம. இராமச்சந்திரன்




தலைப்பு-இலக்குவனார்கவிதைகள் : ilakkuvanar kavithaikal_or_aayvu_thalaippu

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 34

கையறு நிலைக் கவிதைகள்
  கையறு நிலை என்பது புறப்பொருள் பாடல்களில் அமைந்துள்ள ஒரு துறையாகும். அரசன் இறப்ப அவனைச் சார்ந்தோர் அவ்விறந்து பாட்டைச் சொல்லி ஒழுக்கம் தளர்தல் என்பது பொருளாம்.
 ‘செய்கழல் மன்னன் மாய்ந்தெனச் சேர்ந்தோர்
 கையற வுரைத்துக் கைசேர்ந் தன்று’ 90
இறந்தனுடைய புகழை எடுத்துக்கூறி இரங்கினும் கையறுநிலை என்னு ம்  துறையாம்.
கழிந்தோன் தன்புகழ் காதலித் துரைப்பினும்
 மொழிந்தனர் புலவர் அத்துறை என்ன’ 91
என்று புறப்பொருள் வெண்பாமாலை ஆசிரியர் கூறுவர். இதனை,
 ‘கழிந்தோர் தேஎத் தழிபடர் உறிஇ
  ஒழிந்தோர் புலம்பிய கையறுநிலை’ 92
என்று தொல்காப்பியரும் கூறியுள்ளார்.
  கவிஞர், கையறுநிலை என்னும் துறையில் ஆறு கவிதைகள் பாடியுள்ளார். இந்திய நாட்டின் முன்னாள் தலைமையச்சர் நேரு மறைவு குறித்து இரண்டு கவிதைகளும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் அண்ணா மறைவு குறித்து இரு கவிதைகளும், தஞ்சை நாட்டாண்மைக் கழகத் தலைவராயிருந்த உமாமகேசுவரம்பிள்ளை மறைவு குறித்து ஒரு கவிதையும், பசுமலை நாவலர் சோம சுந்தர பாரதியார் மறைவு குறித்து ஒரு கவிதையும் என ஆறு கவிதைகள் பாடியுள்ளார்.
தலைமை அமைச்சர் நேரு
இந்திய நாட்டின் விடுதலைக்குப் பாடுபட்டவர் நேரு. உலக நாடுகள் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்று உழைத்தவர் சவகர்லால் நேரு. உலகத்தின் சிறந்த தலைவர்களுள் ஒருவராக மதிக்கப்பட்டார். இந்திய நாட்டின் வறுமையை ஒழிக்கத் திட்டங்கள் பல நிறைவேற்றினார். இவர் மறைவு குறித்துக் கவிஞர் நாற்பத்தொரு அடிகளைக் கொண்ட நேரிசை ஆசிரியப்பா ஒன்றும், இருபத்தைந்து அடிகளைக் கொண்ட நிலைமண்டில ஆசிரியப்பா ஒன்றும் பாடியுள்ளார்.
  செல்வச் சிறப்பு மிகுந்த மோதிலால் நேரு அவர்களின் மகனாய்த் தோன்றினார். மேலைநாடு சென்று உயர்கல்வி பெற்றார். இந்திய நாட்டின் விடுதலையில் வேட்கை கொண்ட காரணத்தால் மகாத்மா காந்தியடிகளின் நெறியைப் பின்பற்றி ஆங்கிலர் ஆட்சியை அகற்றப்பாடுபட்டார். இன்னல் வாழ்வை மனமுவந்து ஏற்றார்.
“இன்னாமை இன்பம் எனக் கொளின் ஆகும்தன்
ஒன்னார் விழையும் சிறப்பு” 93 என்ற தமிழ்
மறையின் மொழிக்கேற்ப பகைவரும் மதிக்கத் தக்க தலைவராய் விளங்கினார். நாட்டு மக்களின் பசியையும் போக்க திட்டம் பல வகுத்தார். அறிவியல் நெறியே சிறந்தது என எண்ணினார். மூடக் கொள்கையை வெறுத்தார். இந்தியா தொழில் வளர்ச்சியிலும் அறிவியல் நெறியிலும் ஏற்றம் பெற ஓயாது உழைத்தார்.
 ரோசா நிறங்கொண்ட நேரு,
 ‘இன்றைய சிறுவரே நாளைய தலைவர்’
எனக் கருதி குழந்தைகள் மீது காதல் கொண்டார். உலக நாடுகள் பலவும் சுற்றிப் பார்த்தார். சொல்வன்மை படைத்த அரசியல் அறிஞராய் விளங்கினார். கலைகள் போற்றும் காவலராய், உள்ளத் தூய்மையராய் விளங்கினார். நேரு பெருமான் மறைந்ததை,
ஆசிய சோதியாய் ஆட்சி புரிந்த
 தலைமை அமைச்சர் சவகர்லால் நேரு
 பிரிந்தனர் அந்தோ! பேதுற் றனமே!
 விளக்கினை இழந்த வீட்டவர் ஆனோம்
 அளப்பருந் துயர்க்கடல் ஆழ்ந்துவிட்டோமே!’ 94
என்று அரற்றுகிறார்.
அண்ணாதுரை
  தமிழ்நாட்டின் முதலமைச்சராக 1967 மார்ச்சு மாதம் ஆறாம் நாள் பொறுப்பேற்ற அண்ணா அவர்கள் மிகக் குறைந்த காலமே ஆட்சி நடத்தினார். 1969 ஆம் ஆண்டு பிப்ரவரி மூன்றாம் நாள் நோயினால் மறைந்தார். அவர் மறைவு தமிழகத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அண்ணா மறைவு குறித்து, ‘குறள் நெறி’ இதழில் ‘கருதுவோம் என்றுமே’95 என்னும் தலைப்பில் கவிதை படைத்துள்ளார் இலக்குவனார். இக்கவிதை இருபத்து மூன்று அடிகளயுடைய நேரிசை ஆசிரியப்பாவாகும்.
அண்ணா நெடுந்துயில் கொடுத்துவிட்டார். புலவர்களே, நமக்குச் சொல்ல முடியாத துன்பத்தை அளித்த எமனைக் கொல்ல வாரீர். மருத்துவர் பலரை வறிதே நிறுத்திவிட்டு, அண்ணாவின் புன்னகையை விரும்பியோ, அவருடைய நாவன்மையை விரும்பியோ, தமிழ்நூல் படைக்கும் மெல்லிய கையைப் பற்றியோ எமன் இழுத்துச் சென்றுவிட்டான். இனி என் செய்வோம்.
 ‘சிறியரும் பெரியரும் சேர்ந்தும் தனித்தும்
 அழலும் தொழலும் அரற்றலும் அலைதலும்
 முட்டலும் மோதலும் முடிவிலை அந்தோ!
 தமிழ்த்தாய் தலைமகனை இழந்து நைந்தாள்
 தமிழரின் கலங்கரை விளக்கம் தரையில்
 உடைந்து வீழ்ந்தது!96
என்று அழுது புலம்புகிறார் கவிஞர்.
கூற்றின் கொடுமை சொல்லும் தரத்ததோ? இரங்கல் அன்றி என் செயல இயலும். அண்ணாவே, அரும்பெறல் மணியே உனை என்றும் கருதுவோம் என்று கூறி முடிக்கிறார் கவிஞர்.
வள்ளல் அதியமான் இறந்தபோது ஒளவையார் பாடும் கையறுநிலைப் பாடல் இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.
சிறியகட் பெறினே யெமக்கீயு மன்னே
 பெரியகட் பெறினே
 யாம்பாடத் தான் மகிழ்ந் துண்ணும் மன்னே 97
அண்ணா அவர்கள் மறைவு குறித்து, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ‘தமிழ்ப் பேரொளி’ என்னும் தலைப்பில் நூல் ஒன்று வெளியி ட்டுள்ளது. இதில்,
‘இன்றிமிழ்த் தாயின் இடுக்கணோ பெரிதே’98
என்னும் பொருளில் இலக்குவனார் கவிதை எழுதியுள்ளார். இது முப் பத்திரண்டு அடிகளையுடைய நிலைமண்டில ஆசிரியப்பா.
 தமிழ் அன்னையின் புகழைக் காக்கத் தோன்றிய தலைமகன் அண்ணா அனைவரும் போற்றும்படி இருபத்து மூன்று திங்களே ஆட்சி செய்தார். மாற்றுக் கட்சியினரும் அண்ணாவின் திறமையைப் பாராட்டினார்கள். இவ்வளவு சிறப்புடைய அண்ணா விரைவிலேயே கடற்கரையில் பள்ளி கொண்டு விட்டார்.
ஏழை மக்கள் கதறினார். செல்வர் சேர்ந்து புலம்பினார்கள். ஆண்களும் பெண்களும் அழுதார்கள். அண்ணா அண்ணா எனும் ஒலி விண்ணினை முட்டியது.
கம்பர் கல்லாய் நின்று துயருற்றார். பல்கலைக்கழகம் செயலற்றுப் போனது என்கிறார். மேலும்,
வள்ளுவர் நெறியில் வாழ்ந்தார். உலகம் போற்றும் வண்டமிழ் வாழ்ந்திட இருமொழித்திட்டம் வகுத்தார். இந்திமொழியைத் தடுத்தார். ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’99 என்னும் தமிழ்மறை போற்றி தன்மதிப்புமணச்சட்டம் இயற்றினார். சொந்த நாட்டின் பெயரை, ‘செந்தமிழ் நாடு’ என்று சொல்ல வைத்தார். இன்னும் எண்ணிலாத பணிகள் செய்ய இருந்தாரே. ஐயகோ என்று அலமருகிறார் கவிஞர்.
 ஐயகோ இன்னும் அளப்பரும் பணிகள்
 செய்ய இருந்த சீர்மிகு செம்மலைக்
 கொடிய கூற்றம் கொண்டு சென்றதே
 …………………………………….
 …………………………………….
 இன்றமிழ்த் தாயின் இடுக்கணோ பெரிதே’100
குறிப்புகள்:
  1. ஐயனாரிதனார், புறப்பொருள் வெண்பாமாலை, ‘பொதுவியர் படலம்’, கொளு: 267.
  2. ஐயனாரிதனார், புறப்பொருள் வெண்பாமாலை, ‘பொதுவியற் படலம்’, கொளு:268.
  3. தொல்காப்பியர், தொல்காப்பியம், ‘புறந்திணையியல்’ நூற்பா. 79.
  4. திருவள்ளுவர், திருக்குறள் இடுக்கண் அழியாமை, குறள். 630.
  5. சி. இலக்குவனார், உலகப் பேரொளி, கழக வெளியீடு சென்னை 1964, பக்-341-342. அ-ள் 33-37.
  6. சி. இலக்குவனார், ‘இரங்கல் மலர்’ ‘கருதுவோம்என்றுமே’ குறள்நெறி, 1-3-69, ப-3.
  7. சி. இலக்குவனார், ‘கருதுவோம் என்றுமே’
            அ-ள் 11-16.
  1. ஒளவையார், புறநானூறு பா.எ. 235 அ-ள். 1-3.
  2. சி. இலக்குவனார், தமிழ்ப்பேரொளி, ‘இன்றமிழ்த் தாயின் இடுக்கணோ பெரிதே’ கழக வெளியீடு 1970, பக். 218-219.
  3. திருவள்ளுவர், திருக்குறள் ‘பெருமை’ குறள். 972.
  4. சி. இலக்குவனார், தமழ்ப் பேரெளி, ‘இன்றமிழ்த்தாயின் இடுக் கணோ பெரிதே’ அ-ள் 27-32.
தலைப்பு-தொடரும் : thalaippu_thodarum
பெயர்-ம.இராமச்சந்திரன் _peyar_ma.ramachnathiran