Tuesday, September 17, 2013

செந்தமிழ்ப் பெரியார் திரு.வி.க.வைப் போற்றுவோம் Thiru.vi.ka. by Dr.S.Ilakkuvanar



 

செந்தமிழ்ப் பெரியார்
 திரு.வி.க.வைப் போற்றுவோம்

- தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்


  செந்தமிழ்ப் பெரியார் திரு.வி.க. முத்தமிழ் வித்தகராய், தமிழ் உரை நடைத்தந்தையாய், சொற்பொழிவுக் கொண்டலாய்,  செய்தி இதழ் ஆசிரியராய், தொழிலாளர்களின்  தோழராய், அரசியல் அறிஞராய், மார்க்சியம் போற்றுபவராய், பெண்மை போற்றும் பெருந்தகையாய், மாணவர் நண்பராய், சமரச சன்மார்க்க  அருங்குணக்குன்றாய், அடக்கத்தின் எடுத்துக்காட்டாய் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றி இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் செப்டம்பர்த் திங்களில் (17.9.53) செந்தமிழ் நாட்டைவிட்டு மறைந்து விட்டார்.

 தமிழை வளர்க்கும் தலையாய பணியில் ஈடுபட்டு அருந்தொண்டாற்றிய பெருமை அவர்க்கு நிறைய உண்டு. அவர்தம் தொண்டால் இன்று நாடு முழுவதும் அரசியல் மேடைகளில் தமிழ் மணம் வீசுகின்றது. எங்கும் தமிழ்ப் பேச்சுக் கேட்கின்றது. தமிழ்! தமிழ்! என்னும் முழக்கம் யாண்டும் வானைப் பிளந்து எழுகின்றது.

  திரு.வி.க. வினுடைய எழுத்துக்களில் அழகு ததும்பும். இனிமை சொரியும். இசை நடனமிடும் அவர் எழுத்தோவியங்கள் உயர்தனிச் செம்மொழிக்கு எடுத்துக்காட்டாய் இலங்குவன. அவர் இயற்றியுள்ள ஒவ்வொரு நூலும் ஒவ்வோர் இலக்கியமாகத் தோன்றும். ஒவ்வொரு குறிக்கோளை விளங்கி நிற்கும்.  அவர் யாத்த நூல்களுள் பெண்ணின் பெருமை, மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் என்னும் பாரதி கருத்துக்கு ஏற்புடையது.  சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து. கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப் போக என்னும் இராமலிங்க அடிகளாரின் அடியொற்றியது. கடுவன் காட்சியும் தாயுமானாரும், அறிவே தெய்வம் என்று கூறிய தாயுமானாரின் பொன்மொழியை விளக்கும் பான்மையது. கிருத்துவின் அருள்வேட்டல், அன்பே கடவுள் எனும் இயேசுநாதரின் கட்டளைக்குரியது. இங்ஙனம் பல உயர் குறிக்கோள்களை விளக்குவதற்கு எழுந்த நூல்கள் யாவும் இலக்கியம் என்னும் பெயருக்கேற்ப அமைந்தனவாம். இலக்கியம் என்றால் குறிக்கோளை இயம்புதல் என்று தானே பொருள்.

  அவர் வழிநின்று நற்றமிழ்த் தொண்டாற்றுதல் நம்மனோர் கடனாகும். புலவரைப் போற்றும் நாடே பொன்னாடாகும். செந்தமிழ்ப் புலவராம் திரு.வி.க.வைப் போற்றுவோம். நம் செந்தமிழ் காப்போம் என உறுதி பூண்போம். வாழ்க திரு.வி.க.வின் புகழ்! வளர்கதமிழ்!

- குறள்நெறி(மலர்1 இதழ்18): 01.10.1964

Thursday, September 12, 2013

ஏடுகாத்த பீடுடைச் செல்வர் தாமோதரனார்




ஏடுகாத்த பீடுடைச்  செல்வர் தாமோதரனார்

-          இலக்குவனார் திருவள்ளுவன், thiru2050@gmail.com

  பல்லாயிரம் ஆண்டுகள் தொன்மையும் முதன்மையும் உடைய தமிழ் இலக்கியங்கள் இயற்கையாலும் வஞ்சகத்தாலும் அழிந்து போயின. என்றபோதும் மூவாயிரம் ஆண்டுகளுக்குள் உட்பட்ட சில இலக்கியங்களையாவது அழிவிலிருந்து மீட்ட  அறிஞர்கள் சிலரால் செந்தமிழ் இலக்கியங்களை நாம் படித்து இன்புறும் பேறு பெற்றுள்ளோம். அச்சுப்பொறி நம் நிலப்பகுதியில் அறிமுகமானபோது முதலில் (1557) அச்சேறியவை தம்பிரான் வணக்கம் முதலான தமிழ் நூல்களே. இதன் பயனாய்  அங்கும் இங்குமாய் ஓலைச்சுவடிகளில் இருந்த தமிழ் இலக்கியங்கள் எங்கெங்கும் புகழ்மணக்க அச்சுச்சுவடிகளில்  அரங்கேறின. இத்தகைய அரும் பணியில் ஈடுபட்ட அறிஞர் பெருமக்களுள் முதன்மையானவர்களுள் ஒருவராகத் திகழ்பவரே ஏடுகாத்த பீடுடைச் செல்வர் தாமோதரனார்.



  அலைந்து திரிந்து அரும்பாடுபட்டு ஓலைச்சுவடிகளைத் திரட்டி அச்சேற்றியவர் என்றால் அனைவரும் குறிப்பிடுவது அறிஞர் .வே.சா. அவர்களைத்தான். அவரது பணி போற்றுதற்குரியது என்றாலும் அவருக்கும் முன்னோடியாகப் பதிப்புச் செம்மல்கள் பலர் இருந்துள்ளனர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் இலங்கையைச் சேர்ந்த ஆறுமுக நாவலரும் சி.வை.தாமோதரனாரும் ஆவர். பதிப்புப் பணியில், உலகில்  நமக்குக் கிடைத்துள்ள முதல் வாழ்வியல் அறிவியல் நூலான தொல்காப்பியத்தை  முழுமையாகப்பதிப்பித்த, தாமோதரனாரே முன்னோடி என்றும் அவர் யாழ்ப்பாணத்துக்காரர் என்பதால் புறக்கணிக்கப்பட்டு .வே.சா. குறிப்பிடப்படுவதாகவும் பலருக்கு வருத்தம் உண்டு. உண்மையில் இலங்கை அல்லது யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர் புறக்கணிக்கப்படவில்லை. பொதுவாகவே பிராமண வகுப்பைச் சேர்ந்தவர்களையே முன்னிலைப்படுத்தி மகிழும் போக்கு அவ்வகுப்பினருக்கு வழங்கப்படும்  முதன்மையால்  நிலவுகின்றது.   மேலும் தமிழ் வரலாறு இந்தியத்தால் மறைக்கப்பட்டு  உலகு தழுவிய தமிழ் வரலாறு  உணர்த்தப்படாமையாலும் பிற நாட்டு நல்லறிஞர் வரலாறு மறைவாகப் பேசப்படும் நிலை உள்ளது. தாமோரதரனார்தான் தன்  வழிகாட்டி என்று கூறும் அறிஞர் .வே.சா. அவர்களே, "தமது ஓய்வு நேரத்தைத் தமிழ் ஆராய்ச்சியிற் பெரும்பாலும் செலவிட்டு, வீரசோழியம், தொல்காப்பியச் சொல்லதிகாரம், தொல்காப்பியப் பொருளதிகாரம், கலித்தொகை, இறையனார் அகப்பொருள், இலக்கண விளக்கம் என்பனவற்றின் மூலங்களையும், உரைகளையும் பல ஏட்டுச் சுவடிகளைக் கொண்டு பரிசோதித்து முதன் முதலாகப் பதிப்பித்து வெளியிட்டவர் இவரே. இக்காலத்தில் தமிழில் பல துறைகளில் ஆராய்ச்சி செய்வோருக்குப் பெருந்துணையாக இருப்பன இவர் வெளியிட்ட புத்தகங்களாகும்.’’ என  டி.. இராசரத்தினம் பிள்ளை அவர்களின்  'தாமோதரம் பிள்ளை அவர்கள் சரித்திரம்' (சென்னை, 1934) என்னும் நூலுக்கு அளித்துள்ள அணிந்துரையில் கூறியுள்ளமையால், அறிஞர் தாமோதரனாரின் பதிப்புப்பணியைப் பாராட்ட வேறு சான்று தேவையில்லை.



 உண்மையில், திருநெல்வேலி அம்பலவாண கவிராயர் (முதல் நூல் பதிப்பாண்டு 1812), .முத்துசாமிப் பிள்ள(1816), புதுவை நயனப்ப முதலியார் (1835), முகவை இராமாநுசக் கவிராயர் (1840), களத்தூர் வேதகிரி முதலியார் (1832), மழவை மகாலிங்கையர் (1847), தாண்டவராய முதலியார்  (1824), திருத்தணிகை .விசாகப் பெருமாளையர்  (1828), திருத்தணிகை .சரவணப் பெருமாளையர்  (1830),  திருவேங்கடாசல முதலியார்  (1830), காஞ்சிபுரம் மகாவித்துவான் சி.எசு. சபாபதி முதலியார் (1837), தொண்டை மண்டலம் இராசநல்லூர் இராமச்சந்திர கவிராயர்(1824), மகாவித்துவான் சி.மீனாட்சிசுந்தரம் பிள்ளை(1851), யாழ்ப்பாணம் நல்லூர் .ஆறுமுக நாவலர் (1849), வடலூர் இராமலிங்க அடிகள் (1851), காயல்பட்டினம் செய்குஅப்துல் காதிரு நயினார் லப்பை ஆலிம் (1842), என அறிஞர் தாமோதரனாருக்கு முன்னரே அறிஞர் பலர் பதிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆறுமுகநாவலரின் வழிகாட்டுதலால் தாமோதரனார் பதிப்புப்பணியில் முனைப்பாக  ஈடுபட்டார். தாமோதரனாரின் தூண்டுதலால் .வே.சா. பதிப்புப்பணியி்ல் தளராமல் ஈடுபட்டார். எனவேதான்,  தமிழ்த்தென்றல்  திரு.வி.. அவர்கள்  பதிப்புப்பணிக்கு அடித்தளம் அமைத்தவர் ஆறுமுகநாவலர். சுவர்களை எழுப்பியவர் தாமோதரம் பிள்ளை. கட்டமைத்தவர் சுவாமிநாத அய்யர்எனப் பதிப்புப்பணிகளைப் பாராட்டி உள்ளார்.



  அறிஞர் சி.வை.தா. பதிப்பித்த நூல்கள்  நீதிநெறி விளக்கம் (1852), தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையம்(1868),  வீரசோழியம்(1881), இறையனாரகப்பொருள்(1883), தணிகைப்புராணம்(1883),  தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியம்(1885), கலித்தொகை(1887), இலக்கண விளக்கம்(1889),  சூளாமணி (1889), தொல்காப்பியம்எழுத்ததிகாரம்(1891),  தொல்காப்பியம் சொல்லதிகாரம்(1892) ஆகியனவாகும். பதிப்புப்பணியுடன் கட்டளைக் கலித்துறை, வசன சூளாமணி, சைவ மகத்துவம், நட்சத்திரமாலை, காந்தமலர் அல்லது கற்பின் மாட்சி (புதினம்) முதலிய நூல்களைத் தாமே எழுதி வெளியிட்டார்.



  அறிஞர் சி.வை.தாமோதரனார் அவர்களைப்பற்றிய அறிஞர்கள் சிலரின் பாராட்டுரைகள் வருமாறு: அறிஞர் கா.சு.பிள்ளை, ‘‘தமிழ் நூல்களை அச்சியற்ற முயன்றவருள் மிக உழைத்தவர்’’ எனப் பாராட்டி உள்ளார். ‘‘தொல்காப் பியமுதலாந் தொன்னூல்க ளைப்பதிப்பிதது ஒல்காப் புகழ்மேவியவர் ’’ என அறிஞர் .வே.சா. அவர்கள் பாராட்டி உள்ளார்கள்.

‘‘ஏட்டி லிருந்த வருந்தமிழ் நூல்க ளெனைப்பலவுந்

தீட்டி வழுக்களைத் தச்சினி லாக்குபு செந்தமிழ்சேர்

நாட்டி லளித்துயர் தாமோ தரேந்திர னண்ணுபுகழ்

பாட்டி லடங்குந் தகைத்தோ புலவர்கள் பாடுதற்கே ’’

என்கிறார் சுன்னாகம் .குமாரசாமிப்புலவரவர்கள்

‘‘உண்மையான அன்போடு உண்மையான தமிழ்த் தொண்டு புரிதலே பிள்ளையவர்களின் பெருநோக்கமா யிருந்தது என்கிறார் வையாபுரியார். ‘‘கோடி புலவர்கள் கூடினும் நின்புகழ் கூறரிதே  என்கிறார் மேதை வேதநாயகம்பிள்ளை அவர்கள்
தாமோ தரம்பிள்ளை சால்பு எடுத்துச் சாற்ற எவர்
தாமோ தரம் உடையார்என்கிறார் செம்மொழிஅறிஞர் பரிதிமாற்கலைஞர் எனப்படும்
வி. கோ. சூரியநாராயணசாத்திரியார்.


  அறிஞர் தாமோதரனார் இலங்கை யாழ்ப்பாணத்திலுள்ள சிறுப்பிட்டி என்னும் ஊரில் வைரவநாதப் பிள்ளை- பெருந்தேவி அம்மாள்  ஆகியோர்  மகனாக, 1832 ஆம் ஆண்டில் பிறந்தார். தொடக்கத்தில் 12  ஆம் அகவைக்குள்ளாகத் தம் தந்தையாரிடமே வாக்குண்டாம், நன்னெறி, திவாகரம் முதலான இலக்கிய இலக்கண நூல்கள் சிலவற்றை முறையாகப் பயின்றார். சுன்னாகம் முத்துக்குமாரக் கவிராயர் என்பவரிடம் நைடதம், பாரதம், கந்தபுராணம் முதலிய இலக்கியங்களையும் மேலும் சில இலக்கண நூல்களையும்  கற்றுக் கொண்டார். இதன்பின்னர் தெல்லிப்பளை அமெரிக்க ஊழியக் கல்லூரியில் (மிசின் பாடசாலையில்) சேர்ந்து ஆங்கிலம் பயின்றார். தொடர்ந்து வட்டுக்கோட்டைப் பல்கலைக் கல்லூரியில் (யாழ்ப்பாணத்தில் 'செமினறி' சாத்திரக் கலாசாலையில்) 9 ஆண்டுகள் ஆங்கிலம், கணக்கு,அறிவியல், தத்துவம் கற்றுத் தேர்ச்சி பெற்றார். கோப்பாய் சக்தி வித்தியாசாலையில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார்.  இங்குதான் இவரது முதல்பதிப்புப்பணி அரங்கேறியது(1852 ஆம் ஆண்டு: நீதிநெறி விளக்கம்). ஆங்கிலக்கல்வி  பயிலக் கிறித்துவராக  மாறி, சி.எல். டபிள்யூ. கிங்க்சுபரி  எனப்பெயர் சூட்டிக் கொண்டவர் மீண்டும் சைவச்சமயத்திற்கு மாறினார்.



  யாழ்ப்பாணத்துப் பாதிரியார்  'பேர்சிவல்', சென்னையில் இருந்து வெளியிட்ட , 'தினவர்த்தமானி' எனும் தமிழ் இதழின் ஆசிரியர்  பொறுப்பேற்றார். இக்  காலத்தில், ஆங்கிலேயர் பலருக்குத் தமிழ் கற்றுக் கொடுத்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதலிரண்டு பட்டதாரிகளும் இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்நத சி.வை. தாமோதரனாரும்  டி.சி.டபிள்யூ விசுவநாதரும் ஆவர். அறிஞர் தாமோதரனார்  பல்கலைக்கழகப்பட்டம் பெற்றதும் கள்ளிக்கோட்டை அரசுப் பள்ளியில் உதவியாசிரியாராகப் பணியில் சேர்ந்தார். கல்விப்பணியுடன் பணியாட்சியிலும் (நிருவாகத்திலும்) சீர்திருத்தங்கள் செய்து சிறந்து விளங்கியமையால், அரசாங்க வரவு செலவுக்கணக்குச்சாலையில் கணக்காய்வாளர் பணிகிடைத்து அப்பதவியிலும் சிறந்து விளங்கினார். இதன்  தொடர்ச்சியாக கேட்பாளர் (விசாரணைக் கர்த்தர்) என்னும் பணியில் சேர்ந்தார். 1871 ஆம் ஆண்டில் சட்டத்துறையில் பட்டம் (பி.எல்.) பெற்றார். இவரின்  தமிழ்ப்புலமை பாராட்டப்பட்டுச்  சென்னை அரசினர் மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பண்டிதராக நியமிக்கப்பட்டார்.



1882 இல் அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றபின் கும்பகோணத்தில் வழக்குரைஞராகத் தொழில் புரிந்து 1887ஆம் ஆண்டில் புதுக்கோட்டை அரசில் சில ஆண்டுகள் நீதிபதியாகப் பணியாற்றினார்.  அப்பொழுது தலைமை நீதிபதி என்ற முறையில மன்னருக்கு மாற்றாக அவர்சார்பில் தலைமை ஆட்சியாளராகவும் இருந்தார். 1895 ஆம் ஆண்டில் அரசினர் 'இராவ் பகதூர்' பட்டமளித்துப் பாராட்டினர்.



பணி ஓய்விற்குப்பின்பு பதிப்புப்பணிகளில் முழுமையாக ஈடுபட்டார். இவர் வழங்கிய பதிப்புரைகள் ஆராய்ச்சித் திறனும் புலமைச்சிறப்பும் மிக்கன.  தமிழ் இலக்கிய வரலாற்றில் இடம்  பெறுவன. இவரது உரைநடைகளைத் தொகுத்துத் தாமோதரம் என்னும் பெயரில் நூல் வந்துள்ளது. இவரைப்பற்றிய வரலாற்று நூல்களும் ஆராய்ச்சி நூல்களும் வந்துள்ளன.



  ஓலைச்சுவடிகளின் பதிப்புப்பணியின் துயரம் குறித்து அறிஞர் தாமோதரனார், ‘‘என் சிறு  பருவத்தில் எனது தந்தையார் எனக்குக் கற்பித்த சில நூல்கள் இப்போது தமிழ் நாடெங்கும் தேடியும் அகப்படவில்லை. ஒட்டித் தப்பியிருக்கும் புத்தகங்களுங் கெட்டுச் சிதைந்து கிடக்கும் நிலைமையைத் தொட்டுப் பார்த்தாலன்றோ தெரிய வரும்! ஏடு எடுக்கும்போது ஓரஞ் சொரிகின்றது; கட்டு அவிழ்க்கும் போது இதழ் முறிகின்றது; ஒன்றைப் புரட்டும்போது துண்டாய்ப் பறக்கிறது. இனி, எழுத்துகளோவென்றால் வாலுந் தலையுமின்றி நாலுபுறமும் பாணக் கலப்பை மறுத்து மறுத்து உழுது கிடக்கின்றது ’’ எனத் தம் கலித்தொகைப் பதிப்பில் குறிப்பிட்டுள்ளார்.   



    அக்காலச் சூழலாலோ இதழாசிரியராக இருந்ததாலோ தாமோதரனாரின் நடையில் அயற் கலப்பு இருக்கும். எனினும் உள்ளம் தூய தமிழைக்காப்பதாகவே இருந்தது. எனவேதான், 'தமிழ் மாது நும் தாயல்லவா? அவள் அங்கம் குலைந்து அழிகின்ற தருணத்திலும் நமக்கென்னவென்று நாம் இருக்கலாமா?' எனத் தமிழறிஞர்களிடம் வினவித் தமிழ்த்தாயைக் காக்க வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தினார். தம்ஆராய்ச்சிகள் மூலம் இந்தியாவின் ஆதி மொழி தமிழே என்றும் சங்க இலக்கியம் யாவும் தனித்தமிழ் நூல்களே என்றும் இவர் நிறுவுகிறார். ஆரிய சம்பந்த மின்றித் தமிழ்க் கிரந்தங்கள் கிடையாஎன்போருக்கு, ‘‘இது பிறவிக் குருடன் சூரிய சந்திர ருண்மையை மறுத்த தொக்கும். இதனை முன்னரே நிராகரித்திருக்கின்றேன். இதன் பொய்மையை மதுரைச் சங்கத்து நூல்களுள் ஒன்றையாவது பார்த்து உணர்வாராக. இக் கலித்தொகையே இதற்குச் சான்று பகரும்’’ என்கிறார். ஆரியர்கள் வடமேற்குத்திசையிலிருந்து வந்தவர்கள் அவர்கள் வரும் முன்னர் இந்நாடு முழுவதும் இருந்தவர்கள் தமிழர்களே, தொல்காப்பியம் இயற்றிய பின் சென்ற காலம் எவ்விதத்தானும் பன்னீராயிரம் வருடத்திற் குறையாது, என்பனவெல்லாம் அறிஞர் தாமோதரனாரின் ஆய்வுரைகளாகும்.



  ‘‘தமிழ் என்பது தூய தமிழ்ச் சொல்லே. 16 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு மொழிக்கு ஈராயிரம் ஆண்டிற்கு முற்பட்ட மொழியால் பெயர் இடப்பட்டது  எனச் சொல்வது ஏற்கத்தக்கதா’’ என வினவுகிறார். ஐந்தெழுத்தால் ஒரு பாடையாகுமா என்று சொல்வோருக்கு ‘‘8 எழுத்தால் சமசுகிருதததை ஒரு மொழி எனச் சொல்ல முடியுமா? 2 எழுத்தால் ஆங்கிலத்தை ஒரு மொழி எனச் சொல்ல முடியுமா’’ என விளக்கித் தமிழ், தனித்தியங்கும்  மூல மொழி எனத் தெளிவுபடுத்துகிறார். சிலர் தமிழ் மொழிக்கான பெயர் திராவிடம் என்றும் அதிலிருந்துதான் தமிழ் வந்ததென்றும் குப்பைகளைக் கொட்டுகிறார்கள் அல்லவா? அவர்களுக்கும் தெளிவாகப் பின்வருமாறு விடை பகர்கிறார் தாமோதரனார்.



இகழ் இமிழ் உமிழ் கமழ் கவிழ் குமிழ் சிமிழ் என ழகரப் பேறு பெற்ற பதங்கள் போலத் தமிழ் என்னுஞ் சொல் தனிமைப் பொருள் குறித்த தமியென்னும் வினை அடியாற் பிறந்து, வினை முதற் பொருண்மை உணர்த்திய விகுதி குன்றித், தனக்கிணையில்லா மொழி என்னும் பொருள் பயப்பது. அங்ஙனமாயின், தமியேன் என்பது போல இழிவுபொருளன்றோ பயக்கு மெனின், அற்றன்று, ஒரே தாதுவிற் பிறந்தும் அடியேன் அடிகள் எனவும் அளியேன் அளியாய் எனவும் நிற்பனவற்றுள் ஒன்று இழிவு பொருளும் மற்றையது உயர்வு பொருளும் உணர்த்தினவென்க. செவிக்கினிமை பயத்தலான் மதுரம் என்னும் பொருட்பேறுடைத்தாகித் தமிழென வழங்கிய தென்பாருமுளர். அஃதெவ்வாறாயினும் ஆகுக. தமிழ் என்பது தென்மொழிக்குத் தென் சொல்லாகிய பெயரே யாமெனக் கொள்க. இதை ஒழித்துத் திராவிடமென்னும் வடமொழியே தமிழென்றாகியதெனச் சற்று ஆலோசனையின்றிக் கூறுவாருமுளர். அவர் மதஞ் சாலவும் நன்றாயிருந்தது!! தமிழிலே தமிழ் என்னும் பதம் வருமுன்னர்ச் சமசுகிருதத்திற் றிராவிடம் என்னும் மொழி உளதாகில் இப் பெயர் எப்பொருளை உணர்த்திற்றோ? உலகத்தில் எஞ்ஞான்றும் பெயரா பொருளா முந்தியது? பொருளெனில் அப்பொருள் இருக்கும் இடத்தா அஃதில்லாத பிறிது தேயத்திலா அதன் பெயர் முன்னர் நிகழும்? இஃதுணராது தமிழ் வழங்கிய இடத்திற் றமிழுக்கோர் பெயரிருந்ததில்லை யென்றுஞ் சமசுகிருதத்திலிருந்து அதற்குப் பெயர் வந்ததென்றுஞ் சொல்வது யார்க்கும் நகைவிளைக்குமே. இஃதொன்றோ! யாதொரு தமிழ்மொழியில் இரண்டோரெழுத்துச் சமசுகிருத மொழிக்கொப்ப நிகழுமாயின் அது சமசுகிருதத்தினின்று பிறந்ததெனச் சாதிக்கின்றனர். மேலைத்தேயவாசிகளின் இங்கிலீசு முதலிய அந்நிய மொழிகளில் இன்றியமையா வீட்டுச் சொற்களாகித் தந்தை தாயரைக் குறிக்கும் பாதர் மதர் என்பனவாதியும் வடமொழி அடியாய்ப் பிறந்த தென்பரா? அப்படியாயின் வடமொழியைக் காணுமுன் அத்தேசத்தா ரெல்லாந் தாய் தந்தையரை அழைத்தற்கோர் வீட்டுச்சொல் இல்லாதிருந்தனரென் றன்றோ முடியும்? ஆண்டுள்ள பாதர் மதர் ஒப்ப ஈண்டும் பிதா, மாதா ஆயிற்றெனில் யாது குற்றம்? தருக்கத்திற் காகதாலீய நியாயத்தினுண்மை அறியாமலும் ஆரியமொழிக்கும் அதன் அயல் நாட்டு மொழிகளுக்கும் உள்ள சம்பந்த சார்புகளின் காரணத்தை ஆராயாமலும் இவ்வாறு கழறும் இவர் கற்பனைக்கு யாது செய்யலாம். இவர் வாய்க்கு விலங்கிட யாராலும் முடியும்!



  இன்னொரு சாரார் தமிழ் என்னுந் தென்மொழி பதமே வடமொழியிற் றிராவிடமென மரீஇயது என்பர். இவரும் உண்மை கண்டவரல்லர். இரு கூற்றாறுந் திராவிடமென்னுஞ் சொல் வந்த வரலாறும் அதன் பொருளும் அதன் வழக்கியலும் அறியாராயினார். இருவருந்தம் மனத்தின்கண் நிகழும் ஒரோர் துணிவுபற்றி, வல்லார்பாற் புல்லும் ஆயுதமென்றாற் போலத், தமது துணிவை நாட்டுவான் புக்கு மிக்கிடர்ப்பட்டுப் போலி யாதாரங்கள் காட்டி வாய்வல்லான் சொல்லே மன்று கொளுமென்று வாளா நம்பித் தம் வன்மை காட்ட முயன்ற யுத்திமான்களன்றி ஆகமப் பிரமாணங் கொண்டு சாதித்தவரல்லர். ஏமசந்திரநாநார்த்தத் தின்படி திராவிடம் என்னுஞ் சொல் திரா என்னும் அடியாற் பிறந்து ஓடிவளைந்தது என்னும் பொருளுடையது. இது மகாநதி முதற் குமரியீறாக ஓடிவளைந்த கோடி மண்டலத்தை உணர்த்துவது. . . . . . . . மேலுந் திராவிடம் மென்ப தென்னை? தமிழ் தெலுங்கு கன்னடம் மராட்டிரம் கூர்ச்சரம் என்னும் ஐந்து மொழியையுந் திராவிடமெனவே அஃது இவ்வைந்து மொழியும் வழங்கும் நிலத்தின் பெயரென்பது தானே போதரும். ஆகவே இச்சொற் வடமொழியிற் கோடி மண்டலத்தின் குறியீடாகவே நின்றதென்க. அன்றியும் ஈராயிர ஆட்டைமொழியையா பதினாறாயிர வருடப் மொழிக்கிட்ட பெயரென்பது? இவற்றாற் றமிழ் திராவிடமாயதூஉந் திராவிடந் தமிழாயதூஉம் இரண்டுந் தவறென் றுணர்க.


 
தற்காலத்தில் இங்கிலீசு பிராஞ்சியாதிக்க மொழிகள் சேர்ந்த தமிழ்ச் செய்யுட்குள்ள ஊனம் அக்காலத்தில் வடமொழிச் செறிவுக் குளதாயின் வடமொழி தமிழுக்குத் தாய்மொழி யென்றெவ்வாறு பெறப்படும். குறள் ஒளவையாடல் திரிகடுகம் நான்மணிக்கடிகை பஞ்சமூலம் ஏலாதி பழமொழி முதலியவற்றில் வரும் ஆரிய மொழி எத்துணைச் சிறுபான்மைய?....இவையெல்லாஞ் சம்சுகிருதத்தினின்று பிறந்தனவாமே!! இவ்வாறு மயங்குவார் கல்வியறிவில்லாதார் மாத்திரமன்று. தமிழிலக்கணக் கடன் முழுதுண்டு, இலக்கணக்கொத்து ஏப்பமிட்டு வடிந்து, நிலம் நீர் எனப் பொதுவெழுத்தான் வரினுந் தமிழ் தமிழே என்று வற்புறுத்துவான் பொதுவெழுத்தானுஞ் சிறப்பெழுத்தானு மீரெழுத்தானு மிலங்குந் தமிழ்மொழிஎன்று சூத்திர மியற்றிய சுவாமிநாதசேதிகரே, தம்மரபின் முன்னோர் மதத்தையும் மறந்து, “நூலுரை போதகா சிரியர்மூவரு முக்குண வசத்தான் முறைபிறழ்ந் தறைவரேஎன்னுந் தன்விதிக்குத் தன்னையே இலக்கியமாக ஒப்பித்தாற் போல, ‘அன்றியு மைந்தெழுத் தாலொரு பாடையென் - றறையவு நாணுவ ரறிவுடையோரேயென்று மாழ்கினர். இது வடமொழிப் பயிற்சியே மிக்குடையராய் அதன்மேற் கொண்ட பேரபிமானத்தானும், அம்மொழியின்மேற் றென்மொழியன்றிப் பிறிதுமொழி தெரியாக் குறைவானும் நேர்ந்த வழுவன்றோ? உலகத்தில் எம்மொழிக்குஞ் சிறப்பெழுத்துச் சில்லெழுத்தேயாம். உரப்பியும் எடுத்துங் கனைத்தும் ஒவ்வொன்றையே வேறு மும்மூன்றாக விகற்பித்துச்சரிக்கும் ஐவர்க்கத்தையுங் கூட்டெழுத்தையும் ஒழித்தால் எட்டெழுத்தாலொரு மொழி யின்றேயென்று சம்சுகிருதத்தையும் புரட்டிவிடலாமே. இங்கிலீசு மொழியில் வடமொழிக்கில்லாத எழுத்துக்கள் F,Z  இரண்டாதலால் இரண்டெழுத்தாலொரு மொழியின்றேயென அதனையும் மறுப்பார்போலும். இரண்டுக்குப் பொதுவாயுள்ளனவற்றை ஒன்றற்கே உரியனவாகத் தீர்த்து நடுவுநிலைமை குன்றல் இவர் போலியர்க்குப் பெருங் குற்றமாம். உண்மை உரைப்பின் உரோமாபுரிமொழியாகிய இலத்தீனுக்கும் இங்கிலீசுக்குமுள்ள சம்பந்தமே சம்சுகிருதத்திற்குந் தமிழுக்குமுள்ளதெனக் கொள்க. அளவில்லாத கிரந்தங்களை யுடையதாயினும் இலத்தீன்மொழி விரவாத கிரந்தமொன்றும் இங்கீலீசில் இல்லாதவாறு போலவே சம்சுகிருதமொழி சுற்றிலும் விரவாத கிரந்தந் தமிழுக்கில்லாத திருக்கலாமாகவே, “அன்றியுந் தமிழ்நூற் களவிலை யவற்று ளொன்றே யாயினுந் தனித்தமிழுண்டோஎன இலக்கணக் கொத்துடையார் முழங்கிய முழக்கம் வெற்றொலியாயினமை அறிக. அன்றியும் வடமொழியில் இல்லாத புணர்ச்சி யிலக்கணங்களுங் குறியீடுகளும் வினைத்தொகை குறிப்புவினை முதலிய சொல்லிலக்கணங்களும் உயர்திணை அஃறிணைக் கூறுபாடும் பால் விதிகளும் அகம் புறம் என்னும் பொருட் பேதங்களும் ஐந்திணை யியல்புகளும் அவற்றின் துறைகளும் வெண்பா கலிப்பா கலித்துறை முதலிய செய்யுளிலக்கணங்களும் இவைபோல்வன பிறவுங் காலத்திற்குக் காலம் பிற்றை நாளிற் றோன்றாது ஆதியிலக்கணமாகிய அகத்தியத்தில் முற்ற உரைக்கப்பட்டமையால் தமிழ் சம்சுகிருதத்தினின்று பிறவாத தன்மொழி(தற்பாசை) என்பது பசுமரத் தாணிபோல் நாட்டப்படும். இவை யெல்லாம் ஒருவர் காலத்தில் அவ்வொருவராலேயே நூதனமாகப் படைக்கப்படற் பாலனவா? அகத்தியர் மகாரீசுவரர், அன்னோர் இவற்றைக் கற்பித்தல் எளிதன்றே யெனின், நன்று கடாயினாய், ஐந்திர பாணிநீய வியாகரணங்களை நன்குணர்ந்தும், அவற்றுள்ள அதிகார முறைமை ஒத்து முறைமை சூத்திர முறைமைகளின் சிறப்பினைச் சீரிதிற் கண்டும். யாதொருகிரமமும் முன்னெடுபின் சம்பந்த சார்புமின்றித் தமிழுள் இயல் இசை நாடக இலக்கண விதிகளும் இயற்றமிழுள்ளும் எழுத்துச் சொற்பொருள் யாப்பு அணிவிதிகளும் நெறிமுறை பிறழக் கண்டபடி விரவத் தமது இலக்கணநூல் இயற்றியமையானே அஃது எத்துணை வல்லாராயினும் ஒருவருக்கரிய தென்று உணர்க. அன்றியும் இஃது எத்தேசத்து எந்தப் மொழியினது அநுபவத்திற்கும் யுத்திக்கும் முழு விரோதமென்க.

இவை போலும் அறிஞர்.வை சி.தாமோதரனாரின் ஆழமான கருத்துகள் தமிழுக்கு என்றும் வலிவும் பொலிவும் நல்குவனவன்றோ!

  அறிஞர் தாமோதரனார், தன்னரிய தமிழுக்குப் பன்னலம் பெருகச் செய்து, பதிப்புத் துறையின் 'முன்னோடி' எனப் புகழ் பெற்றுத் தமது அறுபத்து ஒன்பதாம் அகவையில், 1901ஆம் ஆண்டு தைத்திங்கள் முதல் நாள், இவ்வுலக வாழ்வை நீத்தார்.



நற்புலவர் ஏடெல்லாம் நாடிநலங் காணாமல்
உற்றசெல் உள்நுழைந் துய்ந்திடும் - பெற்றியைக்
காணாமற் காத்திட்ட சி. வை. தா மோதரனைப்
பேணுதலே நம்பெற்றிப் பேறு. (புலவர். நா. சிவபாதசுந்தரனார்)

என நாம் அறிஞர் சி.வை.தாமோதரானரின் பார்புகழ் போற்றிப் பைந்தமிழ் காப்போம்!





---000---


நன்றி : இலக்கியப்பூக்கள் தொகுப்பு 2  (தொகுப்பாசிரியர் : முல்லை அமுதன்) பக்கம் 69-80