Thursday, April 25, 2024

என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 01. பதிப்பரை

 




என் தமிழ்ப்பணி

பதிப்புரை

இருபதாம் நூற்றாண்டுத் தமிழகத்தின் வரலாற்றில் ஒரு சிறப்பிடத்தைப் பெறத்தக்க வகையில், நல்ல தமிழ் அறிஞராக, வரலாற்றுத் திறனாய்வாளராக, செந்தமிழ்ப் பேச்சாளராக, இலக்கியப் படைப்பாளராக, பாதை மாறாத பகுத்தறிவுவாதியாக, அப்பழுக்கற்ற அரசியல் தலைவராக, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவராக, என பல்திறன் படைத்த நற்றமிழ்ப் புலவராக விளங்கியவர், புலவர் கா. கோவிந்தனார் அவர்கள்

“தமிழுக்கும், தமிழ்ப் புலவர்கட்கும், தமிழ் நாட்டுக்கும் தொண்டாற்றத் தன்னையே அருப்பணித்தவர்” என்று பேரறிஞர் அண்ணா அவர்களால் பாராட்டப்பெற்ற பேறு பெற்றவர், பைந்தமிழ்ப் புலவராய் உயர்ந்து, சங்கத் தமிழ் ஏடுகளிலெல்லாம் திளைத்து, வரலாற்றுக் கண்கொண்டு ஆய்ந்து, தொல்காலத் தமிழர் வாழ்வை இக்காலத்தவரும் தெளிந்திடுமாறு தேன்தமிழ்ச் சுவடிகளாக வரைந்து வழங்கிய பெருமை உடையவர், புலவர் கா. கோவிந்தனார் அவர்கள்.

புலவர்களுள் பெரும் புலவராய் விளங்கி, திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனத்தாரின் ‘புலவரேறு’ பட்டம், தமிழக அரசின் ‘திரு.வி.க. விருது’, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் ‘தமிழ்ப் பேரவைச் செம்மல்’ பட்டம் போன்றச் சிறப்புகளைப் பெற்ற புலவர் அவர்களின் ‘தமிழ்ப்பணி’ பொன்விழாக் கண்ட பெருமையினை யுடையது.

‘என் தமிழ்ப்பணி’ என்ற தலைப்பில், புலவர் எழுதிய கடைசி கட்டுரையில், “என் எழுத்துப் பணி தொடரும். குறள் பற்றி, சங்க இலக்கியங்கள் பற்றி பல தலைப்புகளில் நூல் எழுதக் குறிப்பு எடுத்து வைத்துள்ளேன். “கல்வி கரையில, கற்பவர் நாள் சில” காலம் இடம் தந்தால், என் எழுத்துப் பணி தொடரும்” என்று அவர் தம் தமிழ்ப் பணியைத் தொடர வேண்டும் என்ற தனியா ஆவலை வெளியிட்டுள்ளார். ஆனால், காலம் இடம் தரத் தவறிவிட்டதனால், முற்றுப்பெறாத நிலையிலே அவருடைய எழுத்துப் பணி எச்சமாகவே நின்று போயிற்று! காலம் செய்த கொடுமை அது!

தமிழால் உயர்ந்து, தம் தமிழ்ப்பணி மூலம் தமிழுக்கும். உயர்வு தேடித் தரும் வகையில் எழுத்துலகம் நினைவு கொள்ளும் வண்ணம் நூற்பணியாற்றிய புலவர் அவர்கள், செத்தும் பொருள் கொடுத்த சீதக்காதி வள்ளல் போலத் தம் மறைவிற்குப் பின்னும் தமிழுக்கு அணி செய்யும் வகையில் பல இலக்கியப் படைப்புகளைத் தம் கையெழுத்து வடிவிலே அளித்துச் சென்றுள்ளார். அந்த எழுத்துச் சுவடிகளையெல்லாம் அச்சு வடிவில் வெளியிடுவதைத் தன் தலையாய கடமையாக எழிலகம் ஏற்று,

“வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி”
“மனையுறை புறாக்கள்”
“பெரும்பாணாற்றுப்படை – விளக்கவுரை”
“புலா அம் பாசறை”

ஆகிய இலக்கிய நூல்களையும்,

தமிழக வரலாறு-வரிசை என்ற தலைப்பில்,

“தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்”
“தமிழக வரலாறு-கோசர்கள்”
“தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்”

ஆகிய வரலாற்று நூல்களையும் வெளியிட்டுள்ளோம்.

புலவர் அவர்கள் விட்டுச் சென்றுள்ள, அச்சு வடிவம் பெறாத அவருடைய இலக்கியக் கட்டுரைகளைத் தொகுத்து இன்று,

“என் தமிழ்ப்பணி”

என்ற இக்கட்டுரைத் தொகுப்பைத் தமிழ்கூறு நல்லுலகத்தின் முன் படைக்கிறோம். .

“மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்
தம் புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனரே”

என்ற புறநானூற்று மொழிகளுக்கேற்ப, புகழுடம்பு பெற்றுவிட்ட புலவர் பெருந்தகை, இறவாத புகழுடைய இலக்கியங்கள் பலவற்றைத் தமிழன்னைக்கு அணி செய்ய அளித்துவிட்டுச் சென்றுள்ளார். புலவர் அவர்களின் முன்னைய படைப்புகளுக்குத் தமிழகத்துப் பெரியோர்களாகிய தாங்கள் காட்டிய பேரன்பையும், பாராட்டையும், ஆதரவையும் தொடர்ந்து அளித்திட வேண்டுகிறோம்.

“தமிழுக்குத் தொண்டு செய்வார் சாவதில்லை” என்றார் பாவேந்தர். தம் வாழ்நாள் முழுவதும், காலம் கரம் பிடித்து அழைத்துப் போன அந்தக் கடைசி நொடி வரை, தமிழ்ப் பணி ஆற்றிய புலவர் அவர்கள் வாழ்வார்; அவர் தமிழ் உலகிற்கு அளித்துச் சென்றுள்ள இலக்கியச் செல்வங்கள் உள்ளவரை என்றென்றும் நிலைத்து வாழ்வார்; தமிழறிந்தோர் நெஞ்சமெல்லாம் நிலைத்து வாழ்வார் என்பது உறுதி!

—எழிலகம் பதிப்பகத்தார்.

Saturday, April 20, 2024

உ.வே.சா. வின் என் சரித்திரம் 53: சிதம்பரம்பிள்ளையின் கலியாண நிறைவு

 




(உ.வே.சா. வின் என் சரித்திரம் 52: சிதம்பரம்பிள்ளையின் கலியாணம் – தொடர்ச்சி)

என் சரித்திரம்
சிதம்பரம்பிள்ளையின் கலியாண நிறைவு


அவற்றைக் கவனிப்பதற்காக அவர் அங்கே இருக்கிறார்.
கல்லிடைக்குறிச்சியிலும் திருவாவடுதுறையைப் போலவே மடமும் அதற்கு
அங்கமாகிய கோயில் முதலிய இடங்களும் பரிவாரங்களும் உண்டு.
சந்நிதானம் சின்னப் பட்டத்தில் இருந்தபோது சில வருடங்கள் அங்கே
எழுந்தருளி இருந்தது இந்த ஆதீனத்திற்கு இராசதானி நகரம் போன்றது
திருவாவடுதுறை. இளவரசர் இருத்தற்குரிய நகரம்போல விளங்குவது
கல்லிடைக்குறிச்சி, சின்னப் பட்டத் திலுள்ளவர்கள்
கல்லிடைக்குறிச்சியிலிருப்பது வழக்கம். அவர்களை இளவரசென்றும்
சொல்வதுண்டு.”

“திருவாவடுதுறை ஆதீனம் தமிழ்நாடு முழுவதையும் ஆட்சி புரிவது
போலல்லவா இருக்கிறது?” என்று நான் ஆச்சரியத்தோடு வினவினேன்.

“மடத்தின் பெருமை உமக்கு வர வரத்தான் தெரியும் சீடர்கள்
எங்கெங்கே இருக்கிறார்களோ அங்கெல்லாம் இவ்வாதீனத்தின் சம்பந்தம்
இருக்கும். காசி முதல் கன்னியாகுமரி வரையில் முக்கியமான
சிவத்தலங்களிலும் ஆதீனத்தின் சம்பந்தம் உண்டு
” என்று ஆசிரியர்
உரைத்தார்.

கடிதங்கள் எழுதப் பெற்ற கனவான்களிற் பலர் சந்தோசத்தோடு விடை
எழுதினர். நமச்சிவாய தேசிகரும் எழுதியிருந்தார்.

சிதம்பரம் பிள்ளையின் விவாகம் குறிப்பிட்ட முகூர்த்தத்தில் மிகவும்
சிறப்பாக நடந்தது. அதற்குப் பல கனவான்கள் வந்து விசாரித்து மகிழ்ந்து
சென்றனர். அக்கனவான்களை அறிந்து கொண்டது எனக்குப் பெரிய
இலாபமாயிற்று.

கலியாண நிகழ்ச்சிகள்

கலியாணத்தில், திருவாவடுதுறையிலிருந்துவந்த காரியத்தர்கள் தங்கள்
தங்களால் செய்யக்கூடிய காரியங்களைச் செய்தார்கள். என்னுடைய
சகபாடியாகிய சவேரிநாத பிள்ளை பம்பரமாகச் சுற்றிப் பல காரியங்களை
நிறைவேற்றினார். என்னால் முடிந்தவற்றை நான் கவனித்தேன்.

முகூர்த்த தினத்தின் மாலையில் பாட்டுக் கச்சேரி, விகடக் கச்சேரி, பரத
நாட்டியம், வாத்தியக் கச்சேரி எல்லாம் நடந்தன. ஒரு பெரிய சமீன்தார் வீட்டு
விவாகம் போலவே எல்லாவிதமான சிறப்புகளோடும் அது நடைபெற்றது. பரத நாட்டியம் ஆடிய பெண்பாலுக்குச் சபையில் உள்ள கனவான்கள் இடையிடையே பணம்
கொடுத்தனர்.

அப்போது பிள்ளையவர்கள் என்னை அழைத்து அருகில் இருக்கச்
செய்து என் கையில் ஒரு உரூபாயைக் கொடுத்து அப்பெண்ணிடம் அளிக்கச்
சொன்னார். எனக்கு மிகவும் சங்கோசமாக இருந்தது; ஆனாலும்,
ஆசிரியருடைய கட்டளையை மறுத்தற்கு அஞ்சி அப்படியே கொடுத்தேன்.
அங்கிருந்த யாவரும் என்பால் பிள்ளையவர்களுக்கு இருந்த அன்பை
இதனாலும் அறிந்து கொண்டார்கள்.

தஞ்சைவாணன் கோவை

விவாகம் நிறைவேறிய பின்பும் சில வாரங்கள் நாங்கள் மாயூரத்தில்
தங்கியிருந்தோம். சவேரிநாத பிள்ளையும் நானும் பழைய பாடங்களைப் படித்து
வந்தோம். அதோடு தஞ்சைவாணன் கோவையைப் புதிதாக ஆசிரியரிடம்
பாடம் கேட்டு வந்தோம். அவர் அகத்துறைச் செய்திகளை விளக்கிச்
சொன்னார். முன்பே சீகாழிக் கோவையைப் பாடம் கேட்டபோது பல
விசயங்களை நான் தெரிந்து கொண்டிருந்தாலும் மீண்டும் அவற்றை
ஞாபகப்படுத்திக் கொண்டதோடு பல புதிய செய்திகளையும் அறிந்தேன்.

தஞ்சைவாணனென்பவன் பாண்டிய மன்னனுக்குச் சேனாதிபதியாக
இருந்த வேளாளச் செல்வனென்றும், அவன் வாழ்ந்திருந்த தஞ்சை பாண்டி
நாட்டிலுள்ள தஞ்சாக்கூரென்னும் ஊரைக் குறிப்ப தென்றும் சொன்னார்.

தஞ்சைவாணன் கோவையின் ஆசிரியராகிய பொய்யாமொழிப்
புலவரை
ப் பற்றிய வரலாற்றையும் ஆசிரியர் விரிவாக எடுத்துரைத்தார்.

அப்பாத்துரை ஐயர்

இரண்டு மாத காலம் நான் மாயூரத்தில் இருந்தேன். அப்போது
தினந்தோறும் பிள்ளையவர்கள் விருப்பத்தின்படி, மாயூரநாதசுவாமி கோயில்
சந்நிதி வீதியில் இருந்த அப்பாத்துரை ஐயரென்பவர் வீட்டில் ஆகாரம் செய்து
வந்தேன். அவரும் அவர் மனைவியாரும் என்னிடம் மிக்க அன்பு
காட்டினார்கள். மடத்திலிருந்தோ பிள்ளையவர்களிடமிருந்தோ என் பொருட்டு
அவருக்கு எவ்விதமான உதவியும் கிடைக்கவில்லை. என்னாலோ
காலணாவுக்குக்கூடப் பிரயோசனம் இல்லை. அரிசி முதலிய பண்டங்கள்
அவருக்கு அளிக்கும்படி ஏற்பாடுசெய்யப்படுமென்று நம்பியிருந்தேன். அவ்வாறு ஒன்றும் நடக்கவில்லை.

அவர் வறியவரென்பதை அறிந்த நான் அவருக்குச் சிரமம் கொடுப்பதற்கு
அஞ்சினேன். என்ன செய்வதென்று தெரியாமல் கலங்கினேன்.

பழமும் பாலும்

ஒரு நாள் இரவு மற்ற மாணாக்கர்களுடன் பிள்ளையவர்களிடம் பாடம்
கேட்டபோது, அது முடிய ஒன்பது மணிக்கு மேல் ஆயிற்று. முடிந்தவுடன்
அவரவர்கள் உணவு கொள்ளச் சென்றார்கள். அப்பொழுது அதிக மழைபெய்து
கொண்டிருந்தது. எனக்கு மிகவும் களைப்பாகவும் தூக்கக் கலக்கமாகவும்
இருந்தமையால் போசனம் செய்யச் செல்லாமல் அப்படியே ஓரிடத்தில்
படுத்துத் தூங்கிவிட்டேன். ஆகாரம் செய்துவிட்டு வந்த ஆசிரியர் நான்
படுத்திருப்பதைக் கண்டார். தினந்தோறும் நான் சாப்பிட்டு வந்து ஆசிரியரோடு
பேசியிருந்துவிட்டுப் பிறகே துயில்வது வழக்கம். அன்று நான் அவ்வாறு
செய்யாமையால் நான் ஆகாரம் செய்யவில்லை என்பதை அவர் உணர்ந்து
என்னை எழுப்பச் செய்தார். நான் எழுந்தவுடன் உண்மையைக் கேட்டு அறிந்து
உடனே ஆகாரம் செய்து வரும்படி ஒரு மனுசருடன் என்னை அனுப்பினார்
இரவு நெடுநேரமாகி விட்டபடியால் அப்பாத்துரை ஐயர் வீட்டில் எல்லாரும்
படுத்துத் தூங்கிவிட்டனர். போசனம் கிடைக்கக்கூடிய வேறு சில
இடங்களுக்குப் போய்ப் பார்த்தும் ஒன்றும் கிடைக்காமல் திரும்பினேன்.
அதனை அறிந்த என் ஆசிரியர் மிகவும் வருந்திப் பாலும் பழமும் வருவித்து
அளித்து என்னை உண்ணச் செய்தார்.

மறுநாட் காலையில் நான் எழுந்தவுடன் ஆசிரியர் என்னை அழைத்து,
“நீர் திருவாவடுதுறைக்குப் போய் அங்கே உள்ளவர்களோடு பழைய
பாடங்களைப் படித்துக்கொண்டிரும். நான் விரைவில் அங்கு வந்து விடுவேன்”
என்றார்.

ஏன் அவ்வாறு சொன்னாரென்று எனக்குத் தெரியவில்லை. “நான்
அதுவரையில் இங்கேயே இருந்து ஐயாவுடன் வருகிறேனே?” என்றேன்.

“வேண்டா; இங்கே உமக்கு ஆகார விசயத்தில் சௌகரியம்
போதவில்லை. திருவாவடுதுறையில் சந்நிதானம் எல்லாவற்றையும் கவனித்துக்
கொள்ளும்” என்று வற்புறுத்திச் சொல்லவே நான் மறுப்பதற்கு அஞ்சி
அவ்வாறே செய்ய உடன்பட்டேன்.

சுருங்கிய தனமும் விரிந்த மனமும்

புறப்படுவதற்கு முன் அப்பாத்துரை ஐயரிடம் விடை பெற்றுக்
கொள்ளும் பொருட்டு அவர் வீட்டுக்குச் சென்றேன். “இவர்களுக்குஒரு பிரதியுபகாரமும் செய்யாமல் இருக்கிறோமே!” என்ற வருத்தத்தோடு செல்லுகையில், என் இடையில் இருந்த வெள்ளி அரைஞாண் ஞாபகத்திற்கு வந்தது. என் சிறிய தந்தையார் இரட்டை வடத்தில் அவ்வரைஞாணைச் செய்து எனக்கு அணிவித்திருந்தார். அப்பாத்துரை
ஐயரிடம் அதனைக் கழற்றிக் கொடுத்து, “நான் இப்போது திருவாவடுதுறை
போகிறேன். இவ்வளவு நாள் என்னால் உங்களுக்குச் சிரமம் நேர்ந்தது. இதை
வைத்துக் கொள்ளுங்கள். பிறகு செலவுக்கு அனுப்பி இதை வாங்கிக்
கொள்ளுகிறேன்” என்றேன்.

அதை அவர் திருப்பி என் கையில் அளித்து, “அப்பா, நன்றாயிருக்கிறது நீ பண்ணின காரியம்! உனக்குச் சாதம் போட்டா எங்களுக்குக் குறைந்து போய் விடுகிறது? உனக்காக நாங்கள் என்ன விசேச ஏற்பாடு பண்ணிவிட்டோம்? ஏதோ நாங்கள் குடிக்கிற கஞ்சியையோ கூழையோ உனக்கும் கொடுத்து வந்தோம். நீ நன்றாக வாசித்து விருத்திக்கு வந்தால் அதுவே போதும்” என்று சொன்னார். அவர் வருவாய் சுருங்கியிருந்தாலும், அவருக்குள்ள சௌகரியங்கள் சுருங்கியிருந்தாலும் அவருடைய அன்பு நிறைந்த மனம் எவ்வளவு விரிந்ததென்று நான் அறிந்து உருகினேன்.
இவர்களே மனிதர்கள்! இவர்களுக்காகத்தான் மழை பெய்கிறது; சூரியன்
உதயமாகிறான்”
 என்று என் மனத்துக்குள் சொல்லிக் கொண்டேன். அவரையும்
அவர் மனைவியாரையும் வணங்கிவிட்டுப் புறப்பட்டேன்.

அரைஞாணை ஏற்றுக்கொள்ள மறுத்த பிறகு நான் என்ன செய்ய
முடியும்? ‘செஞ்சோற்றுக் கடன் கழிக்கும் காலம் வருமோ?” என்று என்
உள்ளம் ஏங்கியது. பிற்காலத்தில் எனக்கு வேலையான போது அக்கடனை
ஒருவாறு தீர்த்துக் கொண்டேன்.

அப்பால் பிள்ளையவர்கள் முதலிய எல்லாரிடமும் விடை பெற்று
நான் திருவாவடுதுறை வந்து சேர்ந்தேன்.

(தொடரும்)

என் சரித்திரம், உ.வே.சா.

Saturday, April 13, 2024

உ.வே.சா. வின் என் சரித்திரம் 52: சிதம்பரம்பிள்ளையின் கலியாணம்

 




(உ.வே.சா. வின் என் சரித்திரம் 51: மகா வைத்தியநாதையர் – தொடர்ச்சி

என் சரித்திரம்
அத்தியாயம்-51

சிதம்பரம்பிள்ளையின் கலியாணம்

திருவாவடுதுறையில் இரண்டு பிரிவாக நடைபெற்று வந்த பாடங்களில்
சின்ன வகைக்குரிய பாடம் பழனிக்குமாரத் தம்பிரான், ஆறுமுகத்தம்பிரான்
முதலியவர்கள் விரும்பியபடி சில தினங்களுக்குப் பிறகு காலையிலே நடைபெற
ஆரம்பித்தது. குமாரசாமித் தம்பிரானும் நானும் கேட்டு வந்த பாடம்
பிற்பகலிலும் முன் இரவிலும் நடந்தது. அப்பாடத்தில் திருநாகைக்காரோணப் புராணம் முடிந்தவுடன் காசி காண்டத்தையும் பிரமோத்தர
காண்டத்தையும் 
நாங்கள் படித்தோம். அப்பால் கந்த புராணம்
ஆரம்பிக்கப்பட்டது. பாடம் மிகவும் வேகமாக நடந்தது. அப்போது
கண்ணப்பத் தம்பிரானென்பவரும் கும்பகோணம் வைத்தியநாத
தேசிகரென்பவரும் 
உடனிருந்து பாடம் கேட்டு வந்தனர். அவ்விருவரும்
இசையில் வல்லவர்கள்.

குமாரபுரிப் படலம்

கந்தபுராணத்தின் முதற் காண்டத்தில் குமாரபுரிப் படலமென்ற ஒரு
பகுதி உள்ளது. அதில் முருகக் கடவுள் சேய்ஞலூரை உண்டாக்கி அங்கே
தங்கியிருந்தாரென்ற செய்தி வருகிறது. சண்டேசுவரர் அவதரித்த தலமும்
அதுவே.

முருகக் கடவுள் அங்கே எழுந்தருளியிருந்தபோது அவரோடு வந்த
தேவர்களும் இந்திரனும் தங்கியிருந்தார்கள். இந்திரன் இந்திராணியைப் பிரிந்து
வந்து வருத்தத்தை ஆற்ற மாட்டாமல் இரவெல்லாம் தூங்காமல்
புலம்பினானென்று கவிஞர் வருணிக்கின்றார். அப்பகுதி விரிவாகவும்
இந்திரனது மயல் நோயின் மிகுதியைத் தெரிவிப்பதாகவும் அமைந்துள்ளது.

சாமிநாத பிள்ளை

சில காலத்திற்குப் பின்பு திருநெல்வேலி ஜில்லாவிலுள்ள
வண்டானமென்னும் ஊரிலிருந்து சாமிநாத பிள்ளையென்பவர் மடத்தில் தமிழ்
படிப்பதற்காக வந்தார். ஓரளவு பயிற்சியுள்ளவர்களுக்கு என் ஆசிரியரும்
சுப்பிரமணிய தேசிகரும் பாடம் சொல்வார்கள். நூதனமாக வந்தவர்களுக்குப்
பழைய மாணாக்கர்கள் சிலர் பாடம் சொல்வதுண்டு. முக்கியமாகக் குமாரசாமித்
தம்பிரானும் நானும் அவ்வாறு சொல்லுவோம்.

சாமிநாத பிள்ளை குமாரசாமித் தம்பிரானுக்குப் பூர்வா சிரமத்தில்
உறவினர். அவர் அத்தம்பிரானிடம் பாடம் கேட்டு வந்தார். ஒரு நாள் இரவு
பத்து மணி வரையில் அம்மாணாக்கர் தம்பிரானிடம் பாடம் கேட்டனர். பிறகு
தம்பிரான் சயனித்துக் கொண்டார். நானும் அங்கே ஓரிடத்திற் படுத்துத்
துயின்றேன்.

சேய்ஞலூர் இந்திரன்’

குமாரசாமித் தம்பிரான் நள்ளிரவில் பன்னிரண்டு மணிக்கு எழுந்து
பார்த்தபோது, சாமிநாதபிள்ளை படுத்து உறங்காமலேதூணில் சாய்ந்தபடியே இருந்தார். ‘இவர் ஏன் இப்படி இருக்கிறார்?’ என்று எண்ணினார். “ஏதோ யோசித்துக் கொண்டிருப்பதாகத் தோற்றுகிறது. நாம் இப்போது கலைக்க வேண்டாம்” என்ற கருத்தோடு தம்பிரான் மீட்டும் படுத்தனர். அப்பால் சிறிது நேரங்கழித்து விழித்துப் பார்த்தபோதும் அம்மாணாக்கர் முன்பு இருந்த படியே இருந்தார். அன்று இரவு இப்படி நான்கு முறை விழித்துப் பார்த்தபோதும் அவர் அந்நிலையில் இருந்ததைக் கவனித்த
தம்பிரான், “இவர் ஏதோ மன வருத்தத்தால் இம்மாதிரி இருக்கிறார் போலும்!
அவ்வருத்தத்துக்குக் காரணம் இன்னதென்று தெரிந்து நீக்க வேண்டும்” என்று
முடிவு செய்தனர்.

தம்பிரான் தினந்தோறும் காலையில் ஐந்து மணிக்கே எழுந்து காவிரிக்கு
குளிக்கப் போவார். அப்படி அன்று காலையில் எழுந்தபோதும்
சாமிநாதபிள்ளை தூணிற் சாய்ந்தபடியே இருந்ததைப் பார்த்து, “இராத்திரி
முழுவதும் குத்த வச்சுக் கொண்டிருந்தீரே! காரணம் என்ன? என்ன துக்கம்
வந்துவிட்டது?” என்று கேட்டார்.

அவர் ஏதோ கனவிலிருந்து திடீரென்று தெளிந்தவரைப்போல எழுந்து,
“அவளைத்தான் நினைத்துக்கொண்டிருந்தேன்” என்றார்.

அம்மாணாக்கர் கலியாணம் ஆனவர். தம் மனைவியைப் பிரிந்து
வந்தவர் அந்த விசயம் தம்பிரானுக்குத் தெரியுமாதலின் சாமிநாதபிள்ளையின்
வருத்தத்திற்குரிய காரணத்தையும் தெரிந்து கொண்டார்.

நான் எழுந்தவுடன் தம்பிரான் என்னைப் பார்த்துச் சிரித்தபடியே,
“சேய்ஞலூர் இந்திரன் இங்கே இருக்கிறானே, தெரியுமா?” என்று கேட்டார்.

எனக்கு ஒன்றும் விளங்கவில்லை.

“கந்த புராணத்தில் குமாரபுரிப்படலத்தில் இந்திரன் இரவெல்லாம்
தூங்காமல் வருந்தியதாகச் சொல்லப்பட்டுள்ள விசயம் ஞாபகம்
இருக்கிறதோ?”

“ஞாபகம் இல்லாமல் என்ன? ஐயா அவர்கள், காவியங்களில்
அத்தகைய செய்திகள் வருமென்று சொன்னார்களே” என்றேன்.

“அதைப்பற்றி நான் சொல்ல வரவில்லை. சேய்ஞலூரில் தூங்காமல்
இந்திராணியை நினைத்துக் கொண்டிருந்த இந்திரன் இப்போது சாமிநாத
பிள்ளையாக அவதரித்து வந்திருக்கிறான்”என்று சொல்லிச் சிரித்தபடியே அம்மாணாக்கரைப் பார்த்தார். அவர் தம் முகத்தைக் கவிழ்த்துக் கொண்டார்.

பிறகு குமாரசாமித் தம்பிரான் எனக்கு விசயத்தை விளக்கின போது
நானும் அவரோடு சேர்ந்து சிரித்தேன். அதுமுதல் அம் மாணாக்கரை நாங்கள்
‘சேய்ஞலூர் இந்திரன்’ என்றே அழைத்து வரலானோம்.

சிதம்பரம்பிள்ளையின் விவாக முயற்சி

என் ஆசிரியருக்குச் சிதம்பரம்பிள்ளை என்று ஒரு குமாரர் இருந்தார்.
அவருக்குத் தக்க பிராயம் வந்தபிறகு கலியாணம் செய்வதற்குரிய முயற்சிகள்
நடைபெற்றன. சீகாழியிலிருந்த குருசாமிபிள்ளை என்பவருடைய பெண்ணை
நிச்சயம் செய்து மாயூரத்திலேயே கலியாணம் நடத்த ஏற்பாடாகியிருந்தது. சிரீ
சுப்பிரமணிய தேசிகரும் மடத்து உத்தியோகத்தில் இருந்த தம்பிரான்களும்
வேறு கனவான்களும் பொருளுதவி செய்தனர். கலியாண
ஏற்பாடுகளையெல்லாம் கவனிக்கும் பொருட்டு ஆசிரியர் மாயூரத்திற்குச்
சென்றார். நானும் உடன் சென்றேன்.

சிரீ நமச்சிவாய தேசிகர்

அயலூரிலுள்ள கனவான்கள் பலருக்கு விவாக முகூர்த்த பத்திரிகை
அனுப்பப் பெற்றது. சிலருக்கு விரிவான கடிதங்களும் எழுதப்பட்டன.
ஒவ்வொரு கடிதத்திலும் தலைப்பில் ஒரு புதிய பாடலை எழுதச் செய்தல்
ஆசிரியர் வழக்கம்.
 அக்கடிதங்களை எல்லாம் எழுதியவன் நானே.
கல்லிடைக்குறிச்சியில் சின்னப் பண்டார சந்நிதியாக இருந்த சிரீ நமச்சிவாய
தேசிகருக்கு ஒரு கடிதம் எழுதத் தொடங்கும்போது அவர் விசயமாக ஐந்து
பாடல்களைச் சொன்னார். கடிதம் எழுதியபிறகு நமச்சிவாய தேசிகருடைய
இயல்புகளை எனக்கு எடுத்துக் கூறினார்:-

“சிரீ நமச்சிவாய தேசிகர் நல்ல கல்வி அறிவுள்ளவர். தமிழிலும் வட
மொழியிலும் ஆழ்ந்த பயிற்சியுடையவர். இடைவிடாமற் பாடம் சொல்லுபவர்.
இலௌகிகத்திலும் திறமையுள்ளவர். கல்லிடைக்குறிச்சியில் இருந்து கொண்டு பல
சீர்திருத்தங்களைச் செய்திருக்கிறார். அவரை யாராலும் ஏமாற்ற முடியாது
உம்மைக் கண்டால் அவர் மிகவும் சந்தோசிப்பார்.”

“திருவாவடுதுறையில் இராமல் கல்லிடைக்குறிச்சியில் இருப்பதற்குக்
காரணம் என்ன?” என்று நான் கேட்டேன் .திருவாவடுதுறை மடத்திற்குத் திருநெல்வேலி சில்லாவில் பல கிராமங்கள் இருக்கின்றன. கல்லிடைக்குறிச்சியைச் சார்ந்தும் பல உள்ளன.

(தொடரும்)

என் சரித்திரம், உ.வே.சா.

Saturday, April 06, 2024

உ.வே.சா. வின் என் சரித்திரம் 51: மகா வைத்தியநாதையர்

 




(உ.வே.சா. வின் என் சரித்திரம் 50: கலைமகள் திருக்கோயில் – தொடர்ச்சி)

என் சரித்திரம்
அத்தியாயம்-50
மகா வைத்தியநாதையர்

ஒவ்வொரு நாளும் பிள்ளையவர்களிடம் பாடம் கேட்கும் நேரம் போக
மற்ற நேரங்களிற் பழைய பாடங்களைச் சிந்தித்து வருவது மாணாக்கர்கள்
வழக்கம். சில சமயம் நான் ஆசிரியர் சொல்லும் புதிய பாடல்களையும்
கடிதங்களையும் எழுதுவேன்.

தேசிகர் பாடம் சொல்லுதல்

அவகாசம் ஏற்படும்பொழுது சுப்பிரமணிய தேசிகர் தாமே சிலருக்குப்
பாடம் சொல்லுவார். திருக்குறள் பரிமேலழகருரையில் அவருக்கு மிக்க
விருப்பம் உண்டு. அதனையும், திருக்கோவையார் இலக்கண விளக்கம் என்னும்
நூல்களையும் யாருக்கேனும் பாடம் சொல்லுவார். தேசிகர் இலக்கணச்
செய்திகளை வரையறையாகச் சொல்வதும், உரிய இடங்களில் வடமொழிப்
பிரயோகங்களையும் வடநூற் செய்திகளையும் சொல்லுவதும் மிகவும்
இனிமையாக இருக்கும். சில குறிப்பிட்ட பாடங்களையே அவர் சொல்வார். ஆனால் அவற்றைத் திருத்தமாகச் சொல்வார். தமக்குப் புலப்படாத விசயம் வந்தால்,
“பிள்ளையவர்களைக் கேட்க வேண்டும்” என்று வெளிப்படையாகச் சொல்வார்.

மகா வைத்தியநாதையர் பட்டம் பெற்ற வரலாறு

சில நாட்களில் இரவில் பாடம் நடவாதபோது சுப்பிரமணிய தேசிகரிடம்
நான் போவதுண்டு. அப்பொழுது பிள்ளையவர்கள் சொல்லும் பாடங்களைப்
பற்றி விசாரிப்பார்; என்ன என்ன அரிய விசயங்கள் சொன்னார்கள்
என்பதைக் கேட்டறிந்து பாராட்டுவார். பல பழைய வரலாறுகளைச்
சொல்லுவார். நான் சங்கீதத்திற் பயிற்சியுடையவன் என்பதை அறிந்தவராதலின்
சங்கீத வித்துவான்களைப் பற்றிய பல செய்திகளைச் சொல்லுவார்.

ஒரு நாள், “மகா வைத்தியநாதரைத் தெரியுமோ?” என்று அவர்
கேட்டார்.

“அவர்களைப் பற்றி நான் கேட்டிருக்கிறேன்; நேரே பார்த்ததில்லை”
என்றேன்.

“நீர் அவசியம் பார்த்து அவருடன் பழகவேண்டும். இம்மடத்துக்கு
வேண்டியவர்களுள் அவர் முக்கியமானவர். தமிழ் விசயத்தில்
பிள்ளையவர்கள் எப்படியோ அப்படியே சங்கீதவிசயத்தில் அவரைச்
சொல்லவேண்டும். அவர் தமிழிலும் நல்ல பயிற்சியுள்ளவர். அவர் இங்கே
அடிக்கடி வந்து நம்மை மகிழ்வித்துப் போவார்.”

‘அவர்களது சங்கீதத்தை இதுவரையில் கேளாமற் போனது என்
துரதிர்ட்டமே” என்றேன்.

“அவரை முதலில் நாம் கல்லிடைக் குறிச்சியில் சின்னப்பட்டத்தில்
இருந்தபோது பார்த்தோம். அப்பொழுது அவர் மிகவும் பால்யமாக இருந்தார்.
அப்போதே அவரிடத்தில் சங்கீதத் திறமை மிகுதியாக விளங்கியது. பெரிய
வைத்தியநாதையர், சின்ன வைத்தியநாதையர் என்ற இரண்டு வித்துவான்களும்
வேறு பலரும் வந்திருந்தனர். இவ்விடம் போலவே கல்லிடைக் குறிச்சியிலும்
அடிக்கடி பல வித்துவான்கள் வந்து போவார்கள். ஒரு நாள் ஒரு மகாசபை
கூட்டி இந்த மூன்று வைத்தியநாதையர்களையும் பாடச் சொன்னோம்.
மற்றவர்களைவிட மகா வைத்தியநாதையருடைய சக்திதான் சிறந்ததாக
இருந்தது. இவ்விசயத்தை அவரோடு போட்டியிட்ட வித்துவான்களே
ஒப்புக்கொண்டனர். அந்த மகா சபையில் எல்லாவித்துவான்களுடைய சம்மதத்தின் மேல் அவருக்கு ‘மஃகா’ என்ற பட்டம் அளிக்கப்பெற்றது. அதற்கு முன் வெறும் வைத்தியநாதையராக இருந்த அவரை அன்று முதல்தான் யாவரும் மகா வைத்தியநாதையரென்று அழைத்து வரலாயினர்.”

சுப்பிரமணிய தேசிகர் பின்னும் அச்சங்கீத வித்துவானுடைய
பெருமைகளை எடுத்துக் கூறிவிட்டு, “மகா வைத்தியநாதையருடைய
தமையனாராகிய இராமசுவாமி ஐயரென்பவர் தமிழிலே நல்ல அறிவுடையவர்.
செய்யுட்களும் கீர்த்தனங்களும் இயற்றுவார். பெரிய புராணம் முழுவதையும்
கீர்த்தனங்களாகச் செய்திருக்கிறார். மகா வைத்தியநாதையருடைய தமிழறிவு
விருத்தியாவதற்கு அவர் முக்கியமான காரணம்” என்றார்.

மகா வைத்தியநாதையரது பெருமையையும் அவரிடம் ஆதீனத்
தலைவருக்கு இருந்த அன்பையும் நன்றாகத் தெரிந்து கொண்டது முதல்
அப்பெரியாரைத் தரிசிக்க வேண்டுமென்ற விருப்பம் எனக்கு உண்டாயிற்று.
அவர் தமிழிலும் நல்ல அறிவுள்ளவரென்று தெரிந்தபோது என் விருப்பம்
அதிகமாயிற்று. அது நிறைவேறும் காலம் வந்தது. ஒரு நாள் கோடக நல்லூர்
சிரீ சுந்தர சுவாமிகள்
 என்னும் பெரியாருடன் அவர் மடத்திற்கு வந்தார்.

சுந்தர சுவாமிகள்

சுந்தர சுவாமிகள் என்பவர் அதி வருணாசிரமம் பூண்ட ஒரு துறவி.
வேதாந்த கிரந்தங்களிலும், சிவ புராணங்களிலும் தேர்ந்த அறிவுள்ளவர்.
சூதசம்ஃகிதையை அங்கங்கே விரிவாகப் பிரசங்கம் செய்து பலருடைய
உள்ளத்தில் சிவ பக்தியை விதைத்த பெரியார் அவர். திருவையாற்றோடு
சார்ந்த சப்த தான தலங்கள் ஏழிலும் திருமழபாடியிலும் பல
செல்வர்களைக் கொண்டு திருப் பணிகள் செய்வித்து அந்த எட்டு
தலங்களுக்கும் ஒரே நாளில் கும்பாபிசேகம் நடத்த எண்ணிய அப்பெரியார்
அதன் பொருட்டுத் தமிழ் நாட்டிலுள்ள சிவநேசச் செல்வர்களிடம் பொருளுதவி
பெற்று வந்தனர்.

அவருடைய சிசுயர்கள் பலர். எல்லா வகுப்பினரிலும் அவருக்குச்
சிசுயர்கள் உண்டு. மகா வைத்தியநாதையர் அவரிடம் மந்திரோபதேசம்
பெற்றுச் சில வேதாந்த நூல்களையும் பாடம் கேட்டனர். திருநெல்வேலியில்
ஐயாசாமிபிள்ளை என்னும் அன்பர் அவருடைய உபதேசம் பெற்று ஒரு மடம்
கட்டிக் கொண்டு தத்துவ விசாரமும் ஞானசாதனமும் செய்து வாழ்ந்து வந்தார்.
தத்துவராயர் இயற்றிய பாடுதுறை முதலிய நூல்களில் ஆழ்ந்த பயிற்சியுள்ளவர்
அவர்.

திருவாவடுதுறைக்குச் சுந்தர சுவாமிகள் வந்தது கும்பாபிசேகத்திற்குப்
பொருளுதவி பெறும் பொருட்டே. அவருடன் மகா வைத்தியநாதையர்,
திருநெல்வேலி ஐயாசாமி பிள்ளை முதலிய பலர் வந்தனர்.

பிள்ளையவர்களுக்கும் சுந்தர சுவாமிகளுக்கும் முன்பே பழக்கம் உண்டு.
பிள்ளையவர்கள் தமிழில் சூதசம்ஃகிதையை மொழிபெயர்த்து இயற்றியிருப்பது
தெரிந்து அதிலுள்ள செய்யுட்களை மகா வைத்தியநாதையர் மூலமாகக் கேட்டு
அதன் சுவையில் ஈடுபட்டுச் சுந்தர சுவாமிகள் பாராட்டுவார். வடமொழிச்
சூதசம்கிதையில் நிரம்பிய ஞானமுள்ள அவருக்குத் தமிழ் நூலின் பெருமை
நன்றாக வெளிப்பட்டது. அவர் தம்முடைய பிரசங்கங்களில் இடையிடையே
தமிழ்ச் சூதசம்ஃகிதையிலிருந்தும் சில செய்யுட்களைச் சொல்வதுண்டாம்.

சுவாமிகள் தம் பரிவாரத்துடன் ஓரிடத்தில் தங்கிச் சுப்பிரமணிய
தேசிகரை எப்பொழுது பார்க்கலாம் என்று விசாரித்து வர ஒருவரை
அனுப்பினார். அதற்குள் அவருடைய வரவை அறிந்த எங்கள் ஆசிரியர் அவர்
இருந்த இடத்திற்கு வந்து அவரை வந்தனம் செய்தார்.

சுவாமிகளும் தேசிகரும்

அப்பால் இருவரும் சைவ சம்பந்தமான அரிய விசயங்களைப் பற்றி
ஒருவரோடொருவர் சில நேரம் மிக அழகாகப் பேசிக்கொண்டார்கள்.
எங்களுக்கு அச்சம்பாசணையால் பல நூதன விசயங்கள் தெரியலாயின.

சுப்பிரமணிய தேசிகர் தம் வரவை எதிர்பார்த்திருக்கிறார் என்றறிந்து
சுவாமிகளும் பிறரும் எழுந்து சென்றார்கள். தேசிகர் ஒடுக்கத்தின் வாயிலுக்கு
வந்து சுவாமிகளை வரலேற்று அழைத்துச் சென்று அவரை இருக்கச் செய்து
தாமும் ஆசனத்தில் அமர்ந்தார். அவர் உத்தரவுப்படியே யாவரும் அருகில்
இருந்தனர். அக் கூட்டத்தில் இருந்த நான் மகா வைத்தியநாதையர்
முகத்தையும் சுந்தர சுவாமிகள் முகத்தையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டே
இருந்தேன்.

தேசிகரும் சுவாமிகளும் முதலில் முகமன் கூறிக் கொண்டு அப்பால் பல
விசயங்களைப் பற்றிப் பேசினர். தாம் வந்தகாரியத்தைச் சுவாமிகள் தெரிவித்தார். தேசிகர் உசிதமான பொருளுதவி செய்வதாக வாக்களித்தார்.

என் ஆவல்

மகா வைத்தியநாதையரைப் பார்ப்பதே எனக்கு மிகவும் ஆனந்தமாக
இருந்தது. அவர் முகத்திலே இருந்த ஒளியும் அமைதியும் அவர் உள்ளத்தின்
இயல்பை விளக்கின. அத்தோற்றத்தினால் மட்டும் என் ஆவல்
அடங்கவில்லை. அவர் இடையிடையே பேசின மெல்லிய வார்த்தைகளிலே
இனிமை இருந்தது. அந்த இனிமையும் என் மனத்தைக் கவர்ந்தது. ஆனால்
அவ்வார்த்தைகளாலும் என் ஆவல் அடங்கவில்லை. வைத்தியநாதையராக
இருந்த அவர் எதனால் மகா வைத்தியநாதையர் ஆனாரோ அச்சங்கீதத்தைக்
கேட்க வேண்டுமென்ற ஆசை எனக்கு அதிகரித்தது. ‘இவர் வந்திருக்கிற
காரியமோ வேறு. இக்கூட்டத்தில் ஒரு சம்பந்தமும் இல்லாமல் நமது ஆவலை
நிறைவேற்றுவதற்காக இவர் பாடுவது சாத்தியமாகுமா? நமக்கு இவ்வளவு ஆசை
இருப்பது இவருக்குத் தெரிவதற்குத்தான் சந்தர்ப்பம் உண்டா?……..எப்படியாவது
ஒரு பாட்டைக் கேட்டால் போதுமே…..ஒரு பாட்டானால் என்ன? நூறு
பாட்டானால் என்ன? அதற்கு இதுவா சமயம்?’ என்று என் மனத்துக்குள்ளே
ஆட்சேப சமாதானங்கள் எழுந்தன. இந்த யோசனையிலே சுந்தர சுவாமிகளும்
தேசிகரும் என்ன பேசினார்கள் என்பதைக் கூட நான் நன்றாகக்
கவனிக்கவில்லை.

திடீரென்று எனக்கு ஆச்சரியம் உண்டாகும்படி சுப்பிரமணிய தேசிகர்
பேசத் தொடங்கினார்: “உங்களுடைய சங்கீதத்தைக் கேட்க வேண்டுமென்று
இங்கே படிக்கும் மாணாக்கர்கள் சிலர் ஆசைப்படுகிறார்கள். பிள்ளையவர்கள்
வாக்கிலிருந்து சில பாடல்களைச் சொன்னால் திருப்தியாக இருக்கும்” என்று
அவர் மகா வைத்தியநாதையரை நோக்கிக் கூறிய போது, நான் என்
காதுகளையே நம்பவில்லை. ‘நாம் கனவு காண்கிறோமோ? நம்முடைய
யோசனையினால் விளைந்த பகற் கனவா இது?’ என்று கூட நினைத்தேன்
நல்லவேளை, அது வாசுதவமாகவே இருந்தது.

தேவகானம்

“அதற்கென்ன தடை? காத்திருக்கிறேன்” என்று சொல்லி மகா
வைத்தியநாதையர் பாட ஆரம்பித்து விட்டார். தேவகானமென்று
சொல்வார்களே அச்சங்கீதம் அப்படித்தான் இருக்குமோவென்று எனக்குத்
தோற்றியது. முதலில் தமிழ்ச் சூத சங்கிதையிலிருந்து சில செய்யுட்களைச்
சொல்லத் தொடங்கினார். தமிழ்ச் செய்யுளாகஇருப்பதனாலே முதலில் அவை மனத்தைக் கவர்ந்தன. பிள்ளையவர்கள் வாக்கென்ற பெருமையும் அவைகளுக்கு இருந்தது. மகா வைத்தியநாதையருடைய இன்னிசையும் சேர்ந்து அப்பாடல்களுக்கு
என்றுமில்லாத அழகைக் கொடுத்தது. அந்த இன்னிசை முதலில் இந்த
உலகத்தை மறக்கச் செய்தது. பாவத்தோடு அவர் பாடுகையில் ஒவ்வொரு
வார்த்தையும் உள்ளத்துள்ளே படிந்து படிந்து ஒரு பெரிய காட்சியை
நிருமாணம் செய்து வந்தது.

சூதசங்கிதையில் கைலாசத்தில் சிவபெருமான் எழுந்தருளியிருக்கும்
காட்சியை வருணிக்கும் செய்யுட்கள் அவை. வெறும் பாடல்களை மாத்திரம்
படித்தபோதும் எங்களுக்கு உள்ளத்துள்ளே காட்சிகள் எழும். புறத்தே உள்ள
பார்வையும் இருக்கும். ஆனால் அப்பாடல்கள் இசையோடு கலந்து
வந்தபோதோ எல்லாம் மறந்து போயின. அப்பாட்டு எப்படிச் சுருதியிலே
லயித்து நின்றதோ அப்படி எங்கள் மனம் அப்பாட்டின் பாவத்திலே லயித்து
நின்றது. ஒரு பாடலைக் கூறி நிறுத்தும் போதுதான் அவர் பாடுகிறார், நாம்
கேட்கிறோம் என்ற வேற்றுமை உணர்ச்சி உண்டாயிற்று.

பாடல்களைக் கூறிவிட்டுப் பிறகு பொருளும் சொன்னார். பாடல்
சொல்லும்போதே பொருள் தெரிந்து விட்டது.

பாட ஆரம்பித்துவிட்டால் அதை நிறுத்திவிட மனம் வருமா?
கேட்பவர்களுக்குப் போதுமென்ற திருப்திதான் உண்டாகுமா? சூத
சங்கிதையிலிருந்து அப்பெரியாருடைய இசை வெள்ளம் வேறு மடைகளிலே
திரும்பியது. பிள்ளையவர்கள் வாக்காகவுள்ள வேறு பல பாடல்களை அவர்
இசையுடன் சொன்னார்.

பிறகு சுப்பிரமணிய தேசிகர், “உங்கள் தமையனார் வாக்காகிய பெரிய
புராணக் கீர்த்தனையிலிருந்து சில கீர்த்தனங்கள் பாட வேண்டும்” என்றார்.
வைத்திய நாதையரிடத்திலுள்ள ‘சரக்கு’ இன்னதென்று தேசிகருக்கு நன்றாகத்
தெரியும். அவர் ஒவ்வொன்றாகக் கேட்டுக் கொண்டே வர அந்தச் சங்கீத
சிகாமணி தடையின்றிப் பாடி வந்தார்.

அவர் கீர்த்தனங்களைப் பாடும்போது பிடில், மிருதங்கம் முதலிய பக்க
வாத்தியங்கள் இல்லை. அக்காரணத்தால் அவர் இசைக்குக் குறைவு இருந்ததாக
எனக்குத் தோற்றவில்லை. அவர் கையினால் மெல்லத் தாளம் போட்டுப்
பாடியபோது ஒவ்வொருவருடைய இருதயமும் அப் பாட்டோடு ஒன்றிப்
பக்கவாத்தியம் வாசித்ததென்றுதான் சொல்ல வேண்டும்
.

இணையற்ற இன்பம்

அதுவரையில் அடைந்திராத இன்பத்தை அன்று அடைந்தேன்.
‘இவர்களுடனே போய் இருந்து சங்கீத அப்பியாசம் செய்யலாமா?’ என்ற
ஆசைகூட இடையே தோற்றியது. ஒருவாறு மகா வைத்தியநாதையரது கான
மழை நின்றது. சுந்தர சுவாமிகள் விடை பெற்றுக் கொண்டனர். அவரோடு மகா
வைத்தியநாதையரும் பிறரும் விடை பெற்று எழுந்தனர். அவர்கள் யாவரும்
மடத்தில் அவரவர்களுக்குரிய இடத்தில் விருந்துண்டு பிற்பகலில்
திருவையாற்றுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

அன்று பிற்பகலில் சுப்பிரமணிய தேசிகரை நான் பார்த்த போது,
“காலையில் மகா வைத்தியநாதையர் பாட்டைக் கேட்டீரா?” என்று அவர்
கேட்டார். “இந்த மாதிரி சங்கீதத்தை இதுவரை நான் கேட்டதே இல்லை.
அவர்களுடைய சாரீரம் எல்லாருக்கும் அமையாது. வெறும்
சாதகத்தால்மட்டும் வந்ததன்று அது” என்றேன்.

“சாதகம் மாத்திரம் போதாதென்பது உண்மைதான். அவர் நல்ல
சிவபக்தர். சிவகிருபை அவருக்கு நல்ல சாரீரத்தை அளித்திருக்கிறது. அவர்
செய்துவரும் அப்பியாசம் அந்தச் சாரீரத்திற்கு வளப்பத்தைத் தருகிறது.
எல்லாவற்றிற்கும் மேலாக அவரது தூய்மையான ஒழுக்கம் அந்தத் திவ்விய
சாரீரத்தின் அழகு கெடாமல் பாதுகாக்கிறது” என்று சொல்லி விட்டு, “அவர்
தமிழறிவும் உமக்குப் புலப்பட்டிருக்குமே!” என்றார்.

“ஆம், அவர் பாடல் சொல்லும்போதே பொருள் தெளிவாகிறது”
என்றேன்.

(தொடரும்)

என் சரித்திரம், உ.வே.சா.

Saturday, March 23, 2024

உ.வே.சா.வின் என் சரித்திரம் 49 : அபய வார்த்தை

 




(உ.வே.சா.வின் என் சரித்திரம் : அத்தியாயம்- 48 : சில சங்கடங்கள்-தொடர்ச்சி)

என் சரித்திரம்
அபய வார்த்தை

ஓதுவார், “ஐயா, அவரைச் சொன்னால் நாக்கு அழுகிப்போம்.
இருந்திருந்து பரம சாதுவாகிய அவரைச் சொல்ல உமக்கு எப்படி ஐயா மனம்
வந்தது!” என்றார். அம் மனிதர் ஒன்றும் சொல்ல மாட்டாமல் எழுந்து போய்
விட்டார்.

அபய வார்த்தை

அந்த மூவர் வார்த்தைகளையும் நான் கேட்டேன். “நல்ல வேளை,
பிழைத்தோம்” என்ற ஆறுதல் எனக்கு உண்டாயிற்று. உடனே எழுந்தேன்.
“இவ்வளவு நேரம் என்னைப் பற்றி நடந்த சம்பாசணையைக் கவனித்தேன்.
எனக்கு முதலில் உண்டான சங்கடத்தை நீங்கள் நீக்கி விட்டீர்கள். என்
உள்ளம் பதறிவிட்டது. இப்போது தான் என் மனம் அமைதியை அடைந்தது.
என்னை ஒரு பெரிய அபவாதத்திலிருந்து காப்பாற்றினீர்கள்” என்று
அவர்களை நோக்கிக் கூறினேன். அப்படிப் பேசும்போது எனக்கு ஒரு
விதமான படபடப்பு இருந்தது. அதைக் கவனித்த பன்னிருகைத் தம்பிரான்,
“நீங்கள் ஏன் கவலைப்படவேண்டும்? நாங்கள் எதையும் நம்பிவிடுவோமா?
எந்தக் காலத்தும் உங்களுக்கு ஒரு குறைவு வரும்படி செய்ய மாட்டோம்.
வந்த மனுசன் ஏதோ அசட்டுத் தனமாய்ச்சொன்னானென்று நினைக்க வேண்டும். அதை மறந்து விடுங்கள்”
என்று சொல்லி என்னைத் தேற்றினார். “இந்த அபய வார்த்தைகளை நான்
ஒரு போதும் மறவேன்” என்று கூறினேன்.

கண்டி அகப்பட்டது

எங்கே பார்த்தாலும் இந்தக் களவைப்பற்றிய பேச்சாகவே இருந்தது.
மறுநாட் காலையில் பத்து மணிக்கு மடத்தின் ஒரு பக்கத்தில் பன்னிருகைத்
தம்பிரான் சிலரோடு பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று
குளப்புரையிலிருந்து ஒரு வேலைக்காரன் மிகவும் வேகமாக ஓடிவந்து
தம்பிரானிடம் அந்தக் கண்டியைக் கொடுத்து, “சாமீ, இன்று காலையில் நான்
எல்லா இடங்களையும் பெருக்கிக் கொண்டிருந்தேன். படித்துறைச் சுவரின் மாட
மொன்றில் உள்ள விநாயகருக்குப் பின்னே ஏதோ பளிச்சென்று தெரிந்தது.
உடனே கவனித்தேன். இந்தக் கண்டி அகப்பட்டது” என்று சொன்னான்.

அதை வாங்கிக் கொண்டு பன்னிருகைத் தம்பிரான் மிகவும் மகிழ்ச்சி
அடைந்து, “நேற்று நான் அனுசுட்டானத்துக்குப் போகையில் அங்கே இதை
மாடத்தில் வைத்து விட்டுத் தோட்டத்துக்குப் போனேன். அப்போது
திடீரென்று ஒரு சேவகன். “சந்நிதானம் அவசரமாக அழைக்கிறது” என்று
குடல் தெறிக்க ஓடிவந்து சொன்னான். என்னவோ ஏதோ என்று நானும்
மிகவும் வேகமாக வேறொன்றையும் கவனியாமல் சந்நிதானத்திடம் போனேன்.
சந்நிதானம் ஒரு முக்கியமான விசயத்தைப்பற்றிக் கட்டளையிட்டது. சில நேரம்
அதே கவலையாக இருந்தேன். கண்டியைப் பற்றிய ஞாபகமே எனக்கு
உண்டாகவில்லை. சிறிது நேரம் பொறுத்தே அந்த ஞாபகம் வந்தது. பல
தடவை யோசித்துப் பார்த்தும் வைத்த இடம் ஞாபகத்துக்கு வரவில்லை. நான்
வைத்த இடத்தைவிட்டு மற்ற இடங்களிலெல்லாம் தேடினேன். பிறரையும்
தேடச் செய்தேன் அகப்படவில்லை. எப்படியோ இது சந்நிதானத்துக்கும்
தெரிந்து விட்டது. வயசு ஆக ஆக மறதி உண்டாகிறது. அனாவசியமாகப்
பலருக்குக் கவலை ஏற்பட்டது. பாவம்? சாமிநாதையர் மிக்க சஞ்சலத்தை
அடைந்து விட்டார்” என்று எல்லோரிடமும் சொன்னதோடு, உடனே எனக்கும்
அதைப்பற்றிச் சொல்லி அனுப்பினார். இச்செய்தி காதில் விழுந்ததும் நான்
விநாயகர் சந்நிதி சென்று வந்தனம் செய்தேன்.

கோளால் வந்த துன்பம்

வேறொரு சமயம் என் ஆசிரியரிடம் யாரோ ஒருவர் சென்று
என்னைப்பற்றிக் கோள் கூறினார்
. அதனால் பிள்ளையவர்கள் என்பால் சினங் கொள்ளலாயினர். யாரிடமேனும் கோபங் கொண்டால் அவரிடம்
பேசாமல் இருந்துவிடுவது ஆசிரியரது வழக்கம். என்னிடமும் அவ்வாறு
இருக்கத் தொடங்கினார். மடத்திற் பாடம் நடக்கையில் படிப்பதும், ஆசிரியர்
ஏதேனும் பாடல் சொன்னால் எழுதுவதுமாகிய வேலைகளையே நான் செய்து
வந்தேன். நான் அருகில் இருக்கும்போது, “ஏடு எடுத்துக் கொள்ளும், எழுதும்”
என்று சொல்ல மாட்டார். படுத்துக் கொண்டே ஏதேனும் ஒரு பாடலின் முதல்
அடியை ஆரம்பிப்பார். அது புதுப் பாடலாக இருந்தால் அதனை எழுத
வேண்டுமென்பது அவர் குறிப்பென்று நான் அறிந்து, ஏட்டையும்
எழுத்தாணியையும் எடுத்து எழுதத் தொடங்குவேன்.
 அவர் சொல்லிக்
கொண்டே போவார். நிறுத்த வேண்டுமானால் சரியென்பார். அந்தக் குறிப்பை
அறிந்து நான் நிறுத்தி விடுவேன்.

தனியே பாடங் கேட்பதும் பேசுவதும் இன்றி இந்நிலையில் சில நாள்
நான் இருந்து வந்தது என் மனத்தை மிகவும் உறுத்தியது. இதை வேறு
யாரிடமும் தெரிவிக்கவில்லை; உள்ளத்துள்ளே நான் மறுகினேன்.

அப்போது மாயூரத்தில் வசந்தோற்சவம் நடந்தது. அந்த உற்சவ
தரிசனத்துக்குச் சுப்பிரமணிய தேசிகர் ஒருநாள் திருக் கூட்டத்துடனும்
பரிவாரங்களுடனும் சென்றார். 
ஆசிரியரும் சென்றார். அவருடன் நானும் சில
மாணாக்கர்களும் சென்றோம். மாலையில் மாயூரம் போய்ச் சேர்ந்தோம்.
சுப்பிரமணிய தேசிகர் பரிவாரங்களுடன் சிரீ மாயூரநாதராலயத்திற்குப் போய்த்
தரிசனம் செய்து பிறகு மடத்துக்கு வந்தார். வருங்காலத்தில் என்னை ஒரு
காரியத்தரோடு அனுப்பி ஆகாரம் செய்து வரும்படி சொன்னார். இவ்விசயம்
பிள்ளையவர்களுக்குத் தெரியாது. அவர் தம் வீட்டில் தங்கியிருந்தார்.

நான் போசனம் செய்துவிட்டுப் பிள்ளையவர்கள் வீட்டுக்கு வந்து
திண்ணையில் இருந்தேன். அப்போது மடத்தில் பந்தி நடந்தமையால் அங்கே
ஆகாரம் செய்து கொள்ளப் பிள்ளையவர்கள் போயிருந்தார்.

ஆச்சரிய நிகழ்ச்சி

மடத்தில் பந்தி நடைபெறும் பொழுது சுப்பிரமணிய தேசிகரும் அங்கே
போய் உணவு கொள்வார். அப்பந்தியில் தம்பிரான்களும் சைவர்களாகிய
வெள்ளை வேட்டிக்காரர்களும் தனித்தனியே வரிசையாக இருந்து புசிப்பார்கள்.
வெள்ளை வேட்டிக்காரர்கள் வரிசையில் முதல் இடம் பிள்ளையவர்களுக்கு
உரியது
.

வழக்கம்போல் ஆசிரியர் அவ்விடத்தில் அமர்ந்தபோது அவர் எப்பொழுதும்
இருப்பதைப் போன்ற தெளிவோடு இல்லை. ஏதோ ஒரு கவலை அவர்
முகத்தில் தோற்றியது. போசனம் செய்யும் பொருட்டு ஆசனத்தில் அமர்ந்தவர்
திடீரென்று எழுந்தார். அவ்வாறு யாரும் செய்யத் துணியார். சம்பிரதாயத்தை
நன்கு அறிந்த பிள்ளையவர்கள் அப்படி எழுந்திருந்ததைக் கண்டு யாவரும்
பிரமித்துப் போனார்கள். சுப்பிரமணிய தேசிகர் அவருக்கு ஏதோ கவலை
இருப்பதை அறிந்து ஒருவர் மூலம் விசாரித்தார். “சாமி நாதையர் என்னுடன்
வந்தார். அவர் ஆகாரம் செய்வதற்கு ஒன்றும் ஏற்பாடு செய்யாமல் வந்து
விட்டேன். பட்டினியாக இருப்பாரே என்று எண்ணி விசாரித்து வருவதற்காக
எழுந்தேன்” என்று அவர் சொன்னதைக் கேட்ட தேசிகர், “அவரை ஒரு
காரியாத்தரோடு ஆகாரம் செய்ய அனுப்பியிருக்கிறோம். இதற்குள் அவர்
போசனம் செய்து வந்திருப்பார்” என்றார்.

‘அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்?’

ஆசிரியர் ஒருவாறு ஆறுதலுற்றார். ஆனாலும் அவர் மனம் சமாதானம்
அடையவில்லை. உணவிலே மனம் செல்லாமல் போசனம் செய்பவர் போலப்
பாவனை செய்து இருந்துவிட்டு யாவரும் எழுவதற்கு முன்பே எழுந்து கையைச்
சுத்தி செய்து கொள்ளாமலே வேகமாக மடத்திற்கு அடுத்ததாகிய தம் வீடு
நோக்கி வந்தார். அவர் வேகமாக வருவதைக் கண்டு திண்ணையில் இருந்த
நான் எழுந்து நின்றேன்.

நான் இருந்த இடத்தில் தீபம் இல்லாமையால் அவர் என் சமீபத்தில்
வந்து முகத்தை உற்று நோக்கி, “சாமிநாதையரா? ஆகாரம் செய்தாயிற்றா?”
என்று கேட்டார், “ஆயிற்று” என்று சொன்னதைக் கேட்ட பிறகே அவர் மனம்
சமாதானம் அடைந்தது. உள்ளே சென்று கையைச் சுத்தம் செய்துகொண்டு
தீபம் கொணர்ந்து வைக்கச் சொன்னார்.

பிறகு என்னுடன் மிக்க அன்போடு பேசத் தொடங்கினார். அவர்
அவ்வளவு வேகமாக வந்ததும், என் முகத்தைக் கூர்ந்து கவனித்ததும், சில
தினங்களாகப் பேசாதவர் அவ்வளவு அன்போடு பேசியதும் எனக்குக் கனவு
நிகழ்ச்சிகளைப் போல இருந்தன.

சிறிது நேரத்திற்குப் பிறகு மடத்திலே இருந்து சிலர் வந்து என்னைக்
கண்டு, “ஐயாவுக்கு உம்மிடத்திலே உள்ள அன்பை இன்று நாங்கள் அறிந்து
கொண்டோம். உம்முடைய பாக்கியமே பாக்கியம்
” என்று கூறி அங்கே
நிகழ்ந்தவற்றைச் சொன்னபோது எனக்கு எல்லாம் விளங்கின. சில நாட்களாகத் தாம் என்பால் காட்டி வந்த பராமுகத்துக்குத் தாமே பரிகாரம் தேடியவரைப் போல என் ஆசிரியர் விளங்கினார்.

அன்பை எவ்வளவு காலம் தடைப்படுத்த முடியும்? தடைப்படுத்தப்பட்ட
அன்பு என்றாவது ஒரு நாள் மிக வேகமாக வெளிப்படத் தான் வேண்டும்
அப்போது ஏற்படும் நிகழ்ச்சிகள் ஆச்சரியமாகவே இருக்கும்.

(தொடரும்)

என் சரித்திரம், உ.வே.சா.