Thursday, June 30, 2016

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 31: ம. இராமச்சந்திரன்





தலைப்பு-இலக்குவனார்கவிதைகள் : ilakkuvanar kavithaikal_or_aayvu_thalaippu

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 31

1.5 அன்பர் வாழ்த்து
கி.ஆ.பெ. விசுவநாதம், கருமுத்து தியாகராசச் செட்டியார், அறிவியல் அறிஞர் கோ.து.நாயுடு, அ.கி. பரந்தாமனார், ஆதிமூலப் பெருமாள் ஆகிய ஐவர் மீதும் வாழ்த்திப் பாடிய வாழ்த்துக் கவிதைகள் இதில் அடங்கும்.
கி.ஆ.பெ. விசுவநாதம்
  ‘வாழ்க பல்லாண்டே’ என்னும் கவிதை இவர் மீது பாடப்பெற்றதாகும். இவருடைய என்பதாவது பிறந்தாளின் போது பாடப்பட்டது. ஒன்பது அடிகளால் அமைந்துள்ளது. இக்கவிதை நிலை மண்டில ஆசிரியப்பா வகையைச் சார்ந்தது.
  ‘தமிழ்மொழியைக் காக்க உடல் பொருள் உயிர் அனைத்தையும் அளிக்கும் பெற்றியர். சொல்வன்மை படைத்தவர். புலமை நிறைந்தவர். இனிய நண்பர். தமிழ் மறையாகிய திருக்குறளுக்கு இலக்கியமெனக் கூறத்தகும் சிறப்புடையவர். வளர் தமிழ் உயிராய் வாழ்க பல்லாண்டே’ என வாழ்த்துகிறார்.
விசுவ நாதர் னெலற்கரும் வீரர்
இனிய நண்பர் இன்சொற் செல்வர்
நானிலம் மகிழ நயவுரை புகழ்வோர்
தமிழ்மறைக் இலக்கிய மெனத்தகும் தலைவர்
வாழ்க பல்லாண்டே, வளர்தமிழ் உயிராய்
சூழ்கடல் உலகின் சுடர்மணி யெனவே! 79
கருமுத்து தியாகராசச் செட்டியார்
இவர் மீது பதின்மூன்று அடிகளையுடைய நேரிசை ஆசிரியப்பா பாடியுள்ளார் கவிஞர்.
 மதுரையில் பெருந்தொழிலதிபராய் விளங்கியவர். கல்லூரி பல நடத்தியவர். கலைத் தந்தை எனச் சிறப்பிக்கப்பட்டவர். இலக்குவனாரைத் தம் கல்லூரிக்கு அழைத்துப் பணி கொடுத்தவர். தமிழ் நலம் நாடுபவர். இந்தி மொழித் திணிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தவர். அயராது உழைப்பவர்.
குறள்நெறி போற்றிய செல்வர். அருங்கலை மகிழ்நர். தமிழில் கட்டுரைகள் இயற்றுவார். புலவர்க்கு உதவும் பண்பினர். எதிலும் செம்மையைக் காண்பவர். எளிய வாழ்வினர். இவர் வழிச் செல்வோர் எவரும் புகழ்நிலை அடைவர்.’80 என்கிறார்.
கோ.து. நாயுடு
இவர் மீது நாயுடு அடிகளையுடைய நேரிசை ஆசிரியப்பா பாடியுள்ளார் கவிஞர்.
‘கோவை நகரத்தின் தொழிலதிபர்’ புதியன படைக்கும் அறிவியல் அறிஞர். உழைப்பால் உயர்ந்தவர். அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பிறந்திருப்பாரேல் பண்டாரகர் பட்டம் நிறையப் பெற்றிருப்பர். நோபல் பரிசும் பெற்றிருப்பார். மூடப் பழக்கங்களை நீக்குவதற்காக இளமை முதல் தொண்டாற்றியவர். தன்னிடம் வருவோர்க்கு வாரி வழங்குபவர் அல்லர். ஆயினும் தகுதியுடையார் எவர் எனத் தெரிந்து அன்புடன் அழைத்து எவரும் அறியாமல் கோடி கோடியாய் கொடுப்பவர். வியத்தகு செயல்கள் ஆற்றும் திறனுடையார். இந்திய நாட்டில் தோன்றியதால் காட்டில் பூத்த மலரென வீணே இருக்கின்றார். அறிவுடையவரைப் போற்றாத அவலம் நீங்கும் நாளே நாம் வாழும் நாளாம். அறிஞரைப் போற்றி நன்மைகள் பல அடைவோம். துன்பம் மிகுந்த இந்த நாட்டிலே கோவை அறிஞர் நாயுடு நலமுடன் பல்லாண்டு வாழ்க! என வாழ்த்துகிறார் கவிஞர்.
 ‘அறிவுடை யோரை விரும்பா அவலம்
 ஒழியும் நாளே உய்வுறும் நாளாம்.
 அறிஞரைப் போற்றுவோம் அடைவோம் நன்மைகள்
 கோவைகள் அறிஞர் குன்றா நலத்துடன்
 வாழ்க பல்லாண்டு வாழ்க
 சூழ்க நல்லின்பம் துயர்மிகு நாட்டிலே’ 81
அ.கி. பரந்தாமனார்
‘தமிழ்ப் பணிபுரியும் தக்கோர்’ என்னும் கவிதை அ.கி. பரந்தாமனாரின் மணிவிழாவின் போது பாடப்பட்டதாகும். இது பதினான்கு அடிகளையுடைய நேரிசை ஆசிரியப்பா.
  அ.கி. பரந்தாமனார், மதுரைக் தியாகராசர் கல்லூரியில் கவிஞருடன் பணியாற்றியவர். மதுரையில் உள்ள திருவள்ளுவர் கழகம் பரந்தாமனாரின் தமிழ்ப் பணியைப் பாராட்டி விழா எடுத்தது. தமிழ்ப் பணிபுரிந்த சான்றோர் அ.கி. பரந்தாமனார் பிறரிடம் அன்பும் பற்றும் கொண்டும் விளங்கினார். இன்மொழி பேசும் குணமுடையவர். இனிய நண்பர். பொன்னும் புகழும் நிரம்பப் பெற்று வாழ்க. தமிழ் மொழிக்கு உண்டாகும் இடையூறுகளைத் தகர்க்கும் வலிமையுடன் வாழ்க. வையையாற்றின் மணலினும் பலவாண்டு வாழ்க என வாழ்த்துகிறார்.
 புகழ்மிகுப் பெருகி பொன்மிகு நிறைந்து
 தமிழ்க்குறும் இடரைத் தடுக்கும் உரனுடன்
 வாழ்க வாழ்க வாழ்க
 ஆழ்கடல் உலகில் அளப்பில் ஆண்டே. 82
ஆதிமூலப் பெருமாள்.
  ‘செந்தமிழ்ச் சோலை’ என்னும் கவிதை நூலைப் படைத்தவர் ஆதிமூலப் பெருமாள். இவர் எழுதிய கவிதை நூலுக்கு கவிதை வடிவில் வாழ்த்து வழங்கியுள்ளார் இலக்குவனார். பதினான்கு அடிகளையுடைய நேரிசை ஆசிரியப்பா இது. ஆதிமூலப் பெருமாள். தமிழ்மொழிப் பற்றும், தமிழ்ப் புலமையும் நிறைந்தவர். ஓவியக் கலையில் வல்லவர். உயர்குணம் கொண்ட அன்பர். திருவள்ளுவர் முதலாக – கவிமணி தேசிக விநாயாகம் பிள்ளை வரை கவிதைகள் இயற்றியுள்ளார். கவிதை நூலைக் கண்டு மகிழ்ந்து,
 இலக்கியத் தேனில் இன்பொருள் மாவைக்
 குழைத்தெடுத் தளித்த கூறுபல் அமுதை
 உண்டேன்; உளமிக மகிழ்ந்தேன்; உலகில்
 செந்தமிழ்ச் சோலை திக்கெலாம் நறுநிழல்
 பரப்புக; பலரும் இன்புற
 நிரப்புக நன்மணம் நெடிதுவா ழீயரோ.83
என்று வாழ்த்தியுள்ளார்.
குறிப்புகள்:
  1. சி. இலக்குவனார், கி.ஆ.பெ. முத்துவிழா மலர் ‘வாழ்க பல்லாண்டு’ ப-11, அ-ள் 4-9.
  2. சி. இலக்குவனார், குறள்நெறி, 15-1-1964.
  3. சி. இலக்குவனார், குறள்நெறி, அறிவியல் பேரறிஞர் கோ.து. நாயுடு அ-ள் 25-30.
  4. சி. இலக்குவனார், அ.கி.ப. மணிமலர், ப.128,அ-ள் 11-14.
  5. சி. இலக்குவனார், செந்தமிழ்ச் சோலை, ப.9, அ-ள் 9-14.
தலைப்பு-தொடரும் : thalaippu_thodarum

பெயர்-ம.இராமச்சந்திரன் _peyar_ma.ramachnathiran

Saturday, June 25, 2016

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 30 : ம. இராமச்சந்திரன்




தலைப்பு-இலக்குவனார்கவிதைகள் : ilakkuvanar kavithaikal_or_aayvu_thalaippu 

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 30

நெடுஞ்செழியன்
 1965 ஆம் ஆண்டு சனவரி 26 முதல் இந்தி மொழி, இந்தியாவின் பொது மொழியாக நடைமுறைப்படுத்தப்படும் என்று இந்திய அரசமைப்புச் சட்டம் கூறியது. அதனால்  தமிழ்நாட்டில் இந்திமொழித் திணிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து திராவிட முன்னேற்றக் கழகம் போராட்டம் ஒன்று 1964 செட்டம்பர் மாதம் நடத்தியது. போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்று மீண்ட அவரைக் கவிஞர் வரவேற்று வாழ்த்துகிறார்.
 செந்தமிழைக் காப்பதற்காக இந்தி மொழியின் ஆதிக்கத்தை எதிர்த்து சிறைப்பட்டு மீண்டவர்; தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர்; சீரிய பண்புடையவர்; செந்தமிழ் வல்ல நாவலர்; குறள்நெறி போற்றுபவர்; மதுரையை ஆண்ட நெடுஞ்செழியன் என்னும் மன்னன் பெயரைக் கொண்டவர்; அமைச்சராக அமர்ந்து நாட்டை ஆளப் போகிறவர்; பெரும் புகழ் பெற்ற நெடுஞ்செழிய! வாழ்க! என்று கூறி வாழ்த்துகிறார்.
 அரியணை வீற்று ஆண்ட
 தமிழ்மன்னன் தன்பெயர்
 விரும்பிக் கொண்ட விறலோன்
 அமைச்சர் பீடம் அமர்ந்து
 ஆளும் நிலையை அடைய இருப்பவன்
 நெடுஞ்செழியன் எனும்
 நீள்புகழ் நம்பி வாழ்க!76
இக்கவிதை 1964ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. கவிஞர் வாக்குப் பலிக்கும் என்பார்கள். அச்சொற்படி நாவலர் நெடுஞ்செழியன் 1967 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் தமிழகத்தின் கல்வி அமைச்சராகப் பதவியேற்றார். சிறப்பாகப் பணி செய்தார்.
கருணாநிதி
 இலக்குவனார், திருவாரூர் கழக உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றிப் போது, கருணாநிதி  இலக்குவனாரின் மாணவராக விளங்கினார்; இலக்குவனாரைப் போலவே தமிழ்ப்பற்று மிகுந்தவர்; இளம் வயதிலேயே பல போராட்டங்களில் ஈடுபட்டவர்; அரசியல் பணியில் ஈடுபட்டு அண்ணா அமைச்சரவையில் உறுப்பினராக இருந்தார்; அண்ணா மறைவிற்குப்பின் தமிழகத்தின் முதலமைச்சரானார்; தம் மாணவரின் உயர்வு கண்டு இலக்குவனார் பெருமிதம் அடைந்தார்; கருணாநிதியின் பிறந்த நாளின்போது வாழ்த்திச் சிறப்பித்தார்.
 கலைஞரின் நாற்பத்தெட்டாவது பிறந்த நாள் பெருமங்கல விழாவில் இக்கவிதையைப் பாடினார். இக்கவிதை அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா என்று வகையைச் சார்ந்தது. அறுபத்திரண்டு அடிளையுடையது.
‘தமிழ்மொழி பெருமை பெறவேண்டும் என்பதற்காக உடல், உயிர். உடைமை அனைத்தையும் வழங்குகின்றவர். இளம் பருத்திலேயே தமிழ்த் தொண்டு செய்தவர். பெரியாரின் வழியில் நடந்து, அண்ணாவின் உரிமைத் தம்பியாய்த் திகழ்ந்தவர். ‘கல்லக்குடி’ பெயர் மாற்றப் போராட்டம் நடத்தியவர். ‘உன் பெருமை சொல்லப் புகுந்தால் தோற்பது யானே’ என்று கவிஞர் உயர்வு நவிற்சியாகப் பாடுகிறார்.
நூல்பல இயற்றியவர். நாடகங்கள் பல இயற்றி நடித்தவர். கட்டுரை வரைந்தவர். கவிதைகள் பல இயற்றியவர்.
தேர்தலில் வெல்லும் திறம் உடையவர். இந்திப் பேயைக் கொல்ல வஞ்சினம் கூறியவர். வறுமைப் பிணியை விரட்ட முயன்றவர். பழமையை வெறுக்காவர். புதுமையை மறுக்காதவர். உழைப்பின் உறைவிடமாகத் திகழ்ந்தவர். அன்பும் அருளும் நிறைந்தவர். முத்து வேலர் அஞ்சுகம் பெற்ற அருமை மைந்தர். ‘குறள்நெறி’ போற்றியவர். உரிமைத் தமிழகம் உயர விரும்பியவர். நாட்டில் பசியும் பகையும் நீங்கி, மழையும் வளமும் பெருகி வளர, தமிழ்மொழி சிறக்க, துணைவி தயாளுஅம்மையுடன் பல்லாண்டு வாழ்க. கடல் சூழ்ந்த இவ்வுலகில் பழந்தமிழ் போன்று வாழ்க’ என வாழ்த்துகிறார்.
 உரிமைத் தமிழகம் உயர்ந்து விளங்கி
 எல்லா நாடும் இனிதே போற்றிட
 பசியும் பகையும் பாரில் நீங்கிட
 வசியும் வளனும் வந்து பொருந்திட
 இன்பத் தமிழ்மொழி இனிதே ஆண்டிட
 ……………………………………
 வாழ்க பல்லாண்டு வாழ்க
 சூழ்கடல் உலகில் தொல்தமிழ் போன்றே.77
காமராசர்
தமிழ்நாட்டுக் காங்கிரசுக் கட்சியின் தலைவராகவும் அனைத்து இந்தியக் காங்கிரசின் தலைவராகவும் விளங்கியவர்; இலவசக் கல்வித் திட்டத்தை தமிழகத்தின் முதல் அமைச்சராக இருந்தபோது அறிமுகப்படுத்தியவர்; தொண்டருள் தலைவர்.
காமராசர் பற்றி ‘கருமவீரர் காமராசர்’ என்னும் தலைப்பில் கவிஞர் நூல் ஒன்றும் எழுதியுள்ளர். காமராசர் பிறந்தநாளின் போது கவிதையும் பாடியுள்ளார்.
‘வாழ்க காமராசர்’ என்னும் இக்கவிதை பதினேழு அடிகளைக் கொண்டது. நிலைமண்டில ஆசிரியப் பாவால் அமைந்தது.
‘அறுபத்திரண்டாம் வயதை அடைந்துள்ள காமராசர் உழைப்பால் உயர்ந்தவர்; பாரத நாடு போற்றும் பெருந்தலைவர்; நேருவுக்குப் பின் யார்? என் வினாவின்போது தக்க விடையளித்தவர்; (இலால்பகதூர் சாத்திரியைப் பிரதமராக்கிக் காட்டினார்). தமக்கென வாழாதவர். பிறர்க்கென வாழும் பெருமை உடையவர். எல்லா மொழிகளும் இனிதே வளர வழிகளைக் காட்டி வாழ்க பல்லாண்டு’78 என வாழ்த்துகிறார்.
குறிப்புகள்:
  1. சி. இலக்குவனார், குறள்நெறி, மதுரை, 1-11-64 ப-1. அ-ள் 9-15.
  2. சி. இலக்குவனார், ‘கருணாநிதி பிறந்த நாள் வாழ்த்து’ 3.6.1971, அ-ள் 54-62.
  3. சி. இலக்குவனார், குறள் நெறி, வாழ்க காமராசர்
அ-ள் 2-16.
பெயர்-ம.இராமச்சந்திரன் _peyar_ma.ramachnathiran

Friday, June 17, 2016

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 29 : ம. இராமச்சந்திரன்




தலைப்பு-இலக்குவனார்கவிதைகள் : ilakkuvanar kavithaikal_or_aayvu_thalaippu

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு : 29

1.4.  தலைவர் வாழ்த்து
பண்டை நாளில் அரசன் பிறந்த நாளில் அவனைப் போற்றிப் புகழ்வது வழக்கம். இதனை, நாள் மங்கலம் என்று சொல்வர்.
அறந்தரு செங்கோல் அருள்வெய்யோன்
பிறந்தநாட் சிறப்புரைத்தன்று
(பு.வெ. 212)
அறத்தை உண்டாக்கும் செங்கான்மையையும் அருளையும் விரும்பும் அரசன் பிறந்த நாளினது நன்மையைச் சொல்லியது.
 இதனைச்,
 ‘சிறந்த நாளினிற் செற்றம் நீக்கிப்
  பிறந்த நாள்வயிற் பெருமங் கலமும்’
என்று தொல்காப்பியர் கூறுவர் (தொல்.நு-1037)
தமிழ் மக்களின் மறுமலர்ச்சிக்குப் பாடுபட்ட தந்தை பெரியார் ஈ.வெ. ராமசாமியையும், அவர்வழி வந்த அறிஞர் அண்ணாதுரையு ம், நெடுஞ்செழியனையும், கருணாநிதியையும், அனைத்திந்திய காங்கிரசுத் தலைவராக விளங்கிய காமசாசரையும் கவிஞர் வாழ்த்துகிறார்.
பெரியார்
தந்தை பெரியார் மீது பாடப்பெற்ற கவிதை ‘எல்லாம் இவரின் தொண்டின் விளைவே’. இக்கவிதை முப்பத்திரண்டு அடிகளை உடைய ஆசிரியப்பாவாகும்.
தமிழ்நாட்டு மக்களின் மனத்தில் குடிகொண்டிருந்த அறியாமை என்னும் இருளை நீக்கி, பகுத்தறிவு என்னும் ஒளியைப் பரப்பியவர் பெரியார். சாதிக் கொடுமையை நீக்கியவர். மூடக்கொள்கையை அகற்றியவர். நஞ்சாம் ஆரியப் பாம்பை அடித்துக் கொன்றவர். விதிவிதி என்னும் நடமையை அகற்றியவர். சமத்துவ உணர்வை வளர்த்தவர். இதனை,
 ‘இன்றமிழ் நாட்டின் இருளெலாம் நீங்க
 பகுத்தறிவு என்னும் பாலொளி பரப்பி
 கொடிய சாதிக் கொடுமையைத் தகர்த்
 மூடக் கொள்கையாம் முட்புதர் வெட்டி
 ஆரிய நச்சு அரவை நசுக்கி
 விதிவிதி என்னும் வேலியை அகற்றி
 சமநிலை உணர்வைத் தழைக்ச் செய்து’74
என்று கூறுகிறார் கவிஞர்.
  அல்லும் பகலும் தொண்டு செய்தவர். இந்த தொண்ணூற்று நான்காம் ஆண்டிலும் தொண்டு செய்வதில் தளராதவர். நூறு ஆண்டுக்கு மேலும் வாழ்ந்து தொண்டுகள் ஆற்ற வேண்டும் என யாம் விரும்புகிறோம்.
  தமிழ்நாட்டில் தந்தை பெரியார் தோன்றியிருக்காவிட்டால் பெண்ணுக்கு உரிமை ஏது? முதிர்ந்த தமிழரும் ‘அடியான்’ என்று அழைக்கப்படுவார் அல்லவோ. அறத்தின் பெயரால் ஒரு குலத்துக்கொரு நீதி சொல்வாரே. எளியவர் எல்லாம் அமைச்சராய் இன்று ஆளுகின்றார். எல்லாம் இவர் செய்த தொண்டின் விளைவாம். தமக்கு ஈடு இணையில்லாத பெரியார் தம்முடைய எழுத்தாலும் பேச்சாலும் நம் உள்ளம் கொள்ளை கொண்டவர். உழைப்பின் உறைவிடமாக விளங்கும் பெரியார். தமிழர் வாழ்வைக் காத்துப் பல நூறு ஆண்டுகள் வாழ்க!  என வாழ்த்துகிறார்.
அண்ணா
இவர் இயற்பெயர் அண்ணாதுரை. அண்ணா என்றும், அறிஞர் அண் ணா என்றும் தமிழக மக்கள் அன்புடன் அழைப்பர்.
அண்ணா அவர்கள் மீது ‘தனிப்பெரும் தலைவர் வாழ்க’ என்ற கவிதையும், ஆசியாவின் கீழை நாடு சென்று திரும்பியபோது வாழ்த்திய கவிதையும் பாயுள்ளார்.
‘தனிப்பெரும் தலைவர் வாழ்க’ என்ற கவிதை பதினெட்டு அடிகளையுடையது.
தமிழகம் வாழவும் தமிழ்மொழி தழைக்கவும் நஞ்சு போன்ற இந்தியமொழியை தமிழ்நாட்டிலிருந்து விரட்டிய தனிப்பெருந் தலைவர் அண்ணா.
‘அறுபதாம் பிறந்த நாளை அடைந்துள்ள அண்ணா இன்னும் அறுபது ஆண்டுகள் வாழ்க. இராணி அம்மையாரின் இனிய புரப்புடன் வாழ்க. புறப்பகை வெருண்டோட, உலகம் புகழும் தலைவராக, பசி, பிணி, பகையைப் போக்கி, தமிழ்ப் பகைவர் இல்லாது ஒழிய மக்கள் ஆட்சியின் தலைவராக வாழ்க’! என வாழ்த்துகிறார் கவிஞர்.
 ‘அன்னைத் தமிழின் அயர்வினை நீக்கி
 பசியும் பிணியும் பகையும் போக்கும்
 நல்லரசு தன்னை நன்கு நிறுவி
 தமிழ்ப்பகை கட்சி தானே மறைய
 மக்கள் ஆட்சியின் மாபெருந் தலைவராய்
 என்றும் வாழ்க! இனிதே வாழ்க!
 நன்றே வாழ்க! நற்றமிழ் வெல்கவே’75
ஆசியாவின் கீழை நாடுகள் சென்று தமிழ்மொழியின் புகழ் பரப்பி வந்தவர் அறிஞர் அண்ணா. ‘அயல் மொழியின் தலைமை அகன்று ஓட, நம் தமிழ்த்தாய் அரசு நடந்தது அயராது  தொண்டுகள் ஆற்றுக! என வாழ்த்துகிறார். இக்கவிதை 1965 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. ஆறு அடிகளைக் கொண்டது.
அறிஞர் அண்ணாவிற்கு அடுத்த தலைவராக விளங்கியவர் நெடுஞ்செழியன். இவர் இயற்பெயர் நாராயணசாமி. தமிழ்ப் பற்றக் காரணமாக நெடுஞ்செழியன் என்று தம்பெயரை அமைத்துக் கொண்டார். திராவிட முன்னேற்றக் கழகத்திஙன் சிறந்த சொற்பொழிவாளராக திராவிட முன்னேற்றக் கழகத்தின் சிறந்த சொற்பொழிவாளராக விளங்கினர். அதனால் நாவலர் என்று சிறப்புடன் அழைக்கப்படுவர்.
குறிப்புகள்:
  1. எ. இளங்கோவன், இந்திய அரசியலமைப்பு, தமிழ் நாட்டுப் பாட நூல் நிறுவனம், சென்னை 1972, ப-56.
  2. சி. இலக்குவனார், குறள்நெறி ‘ஆண்டுமலர்’ மதுரை, 1965, ப-1.
  3. சி. இலக்குவனார், பெரியார் 94வது பிறந்த நாள் மலர், ‘விடுதலை’, சென்னை 1972, ப-45, அ-ள் 1-7.
  4. சி. இலக்குவனார், முரசொலி அண்ணாமலர் சென்னை, செப்டம்பர் 1968.
பெயர்-ம.இராமச்சந்திரன் _peyar_ma.ramachnathiran
தலைப்பு-தொடரும் : thalaippu_thodarum