Wednesday, April 26, 2017

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙி) – இலக்குவனார் திருவள்ளுவன்




 

 தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙி)

  தமிழியக்கச் செய்திகளைப் பொதுவான இதழ்கள் இருட்டடிப்புச் செய்தன. ஆனால், தி.மு.க. அன்பர்கள் நடத்தும் இலக்கிய இதழ்கள் மூலம் அவைபற்றி அறிய வாய்ப்புகள் இருந்தன. ஆனால், ஆங்கிலத்தில் அதற்கான வாய்ப்பு இல்லாமல் இருந்தது. அந்தக் குறையைப் பேராசிரியர் இலக்குவனார் நடத்திய ஆங்கில இதழ் போக்கியது. வட மாநிலங்களிலும் படைத்துறையினரிடமும் இவ்விதழுக்கு நல்ல வரவேற்பிருந்தது.
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு   
என்னும் திருக்குறள் மூலம் தெய்வப்புலவர் திருவள்ளுவர் மொழியை விழியாக எண்ணிக் காக்க வலியுறுத்துவதைப் பேராசிரியர் இலக்குவனார் விளக்கி உள்ளார். அந்த அடிப்படையில் மொழி உரிமை காப்பதும் குறள்நெறியே என்று ‘குறள்நெறி’யை மொழிப்போர் ஆயுதமாக நடத்தினார். தொடக்கத்தில் இருந்தே இந்தி எதிர்ப்பு பற்றிய கட்டுரைகள், வினா விடைகள், கவிதைகள் என இந்தித் திணிப்பை எதிர்த்தும், தமிழ்க்காப்பையும் தமிழ்ப்பயிற்சி மொழி முதலானவற்றையும்  வலியுறுத்தியும்  படைப்புகள் வந்தன. தமிழ் ஆர்வலர் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய இதழாகக் குறள்நெறி அமைந்தது.
   மாணவர்கள் மத்தியில் ‘குறள்நெறி’ பரவியது. எந்தப் புரட்சியும் திடீரென்று முளைத்து வெடிப்பதல்ல. 1965 ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போருக்கான தளத்தையும் களத்தையும் குறள்நெறி அமைத்தது. தொடக்கத்தில் இருந்தே பேராசிரியர் இந்தியை எதிர்த்து வந்தாலும்,  அவர் ஒருவர்தாம் முன்னின்று இந்தி எதிர்ப்பு இயக்கத்தைக் கொண்டு சென்றிருந்தாலும்,  1960களில் மேலும் பரவலாக்கவும் முனைப்பாக்கவும் விரும்பினார். இதற்கு அரசியல் பின்னணியும்   வேண்டும் என்பதால் அடுத்து ஆட்சியை அமைக்கும் எனக் கருதிய தி.மு.க. இந்தி எதிர்ப்புப் போரில் குதிக்க வேண்டும் என விழைந்தார். தியாகராசர் கல்லூரிக்குப் பேசுமாறு பேரறிஞர் அண்ணாவை அழைத்து, அவர் பங்கேற்றுப்பேசிய கூட்டத்தில்,1965 இல் இந்தி தானாகவே அரியணையில் அமர்ந்து நம்மை அழுத்தப் போவதால் முனைப்புடன் எதிர்க்க வேண்டும் என வேண்டினார். பேரறிஞர் அண்ணா அவர்களும் தம் கட்சிப் பொதுக்குழுவைக் கூட்டி பேராசிரியர் இலக்குவனார் கூறும் பேரிடரை எடுத்துரைத்து மொழிப்போரில் கழகத்தவரை இறங்கச் செய்தார்.
 இந்திய அரசு தமிழினப் பகை அரசாக நடந்து கொள்வதைத் தொடர்ந்து உணர்த்தி வந்தார். முழுஉரிமையுடன் கூடிய தமிழக அரசு அமைந்தால்தான் தமிழ் மொழி, தமிழ் இனம், தமிழ்க்கலை, தமிழ்நாகரிகம், தமிழ்ப்பண்பாடு முதலாயின ஓங்கவும் ஒளிரவும் இயலும் என்பதைத் தெளிவாக எடுத்துரைத்தார். இதனை விளக்கும் அவரின்  படைப்பு ஒன்று வருமாறு:
இந்திய அரசினர்க்குத் தமிழகம் என ஒன்றுகூடாது; தமிழ் இனம் எனக் கூறல் சாலாது. தமிழர் பண்டைய வரலாற்றை மறக்கச் செய்து மறைக்கத்தான் வழிகோலுவார்கள் போல உள்ளது.
 தமிழகத்தின் பழைய கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டு வெளிப்படுத்தப்படாமல் அப்படியே மறைவுண்டு கிடக்கின்றன. கல்வெட்டுத்துறை, பழம்பெரும் ஆராய்ச்சித் துறை எனப் பல துறைகள் இந்திய அரசினர் கொண்டுள்ளனர்; கொண்டிருந்தும் பயனில்லை.
 ஒருகால் அண்ணாமலைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் ஒருவர் சங்க காலச் சோழர் காலத்தில் சிறப்புற்றிருந்த காவிரிப் பூம்பட்டினம் கடலால் மறைவுண்டு புதைவுண்டு கிடக்கின்றது. கடலுக்கடியில் ஆய்வு நடத்தினால் சோழர் கால வரலாறு தெரிவதற்கு இயலும் என இந்திய அரசுக்கு எழுதினராம். இந்திய அரசு இப்பொழுது அத்தகைய ஆராய்ச்சிகளில் ஈடுபட வசதி யின்று என அறிவித்துவிட்டதாம். நமது முதலமைச்சர் இன்று வெளிப்படுத்தியுள்ள உண்மை பல ஆண்டுகட்கு முன்பே மெய்ப்பிக்கப்பட்டதாகும்.
 ஆகவே, இனியேனும் தமிழக அரசு விழித்தெழுந்து தமிழகப் பழம்பெருமைகளை வெளிப்படுத்த ஆவன விரைந்து செய்யும் என எதிர்பார்க்கின்றோம். புதியதற்கு அடிப்படை பழைமையே என வலியுறுத்திய தமிழக முதலமைச்சர் அவர்கள், பழைமையைக் கண்டு பிடித்து வெளிப்படுத்தவும் அதனை உலகுக்கறிவிக்கவும் முன் வருவார் என நம்புகின்றோம். இந்திய அரசு உதவாது என அறிந்து அதனை உளமார வெளிப்படுத்திய முதலமைச்சரைப் பாராட்டுகின்றோம்.
 இந்திய அரசு  தமிழக வளர்ச்சியில் முழு ஆர்வம் காட்டாது என்பதற்கு இதுவும் ஒரு சான்று. ஆகவே முழு உரிமையோடு கூடிய தமிழக அரசைப் பெற முயல்வோமாக.
குறள்நெறி (மலர்1  இதழ்144): ஐப்பசி 24, 1997: 9.11.1966
மக்களிடையே நீறுபூத்த நெருப்பாக இருந்த இந்தி எதிர்ப்பு உணர்வு பேராசிரியரால் தீப்பிழம்பாக மாறியது.
 ஆங்கிலம் அயல்மொழி; அதனால் பொதுமொழியாகத் தகுதியற்றது என்பாருக்கு அதேபோல் இந்தியும் பிற மொழியினருக்கு அயல் மொழியே என்பதை விளக்கினார்.
ஆங்கிலம் அயல்மொழி என்றால் இந்தி மொழியும் இந்தி மொழியினர் அல்லார்க்கு அயல்மொழிதானே என்று கூறுவார் கூற்றைத் தள்ளமுடியாது அன்றோ? உலகக் கூட்டரசை உருவாக்கி அனைத்துலக மக்களும் ஒன்றுபட்டு வாழவேண்டும் என்ற கொள்கையை மேலோங்கச் செய்து வெற்றி பெறவேண்டும்.
 என உலக்கூட்டரசை வலியுறுத்தினார்(குறள்நெறி). பின் வரும் நூற்றாண்டுகளில் உறுதியாக உலகக் கூட்டரசு அமையும்;  அப்பொழுது பேராசிரியர்  இலக்குவனாரின் தொலை நோக்கு உணர்வு தெள்ளிதின் புரியும்.
(தொடரும்)
– இலக்குவனார் திருவள்ளுவன்

Monday, April 24, 2017

பாராட்டப்பட வேண்டிய வா.மு.சே. – வல்லிக்கண்ணன்




ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன்

  பாரதிக்குப் பிறகு தமிழில் கவிதை இலக்கியம் வளரவில்லை என்று சிலர் சொல்கிறார்கள். இது சரியான நோக்கு இல்லை.  பாரதிக்குப் பின் கவிதை வளர்ச்சி பற்றிப் பேசுகிறவர்கள் கூடப், பாரதிதாசன். கண்ணதாசன், பட்டுக் கோட்டை கலியாண சுந்தரம் என்ற ஒரு சில பெயர்களை மட்டுமே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதுவும் முழுமையான பார்வை ஆகாது.  பாரதிக்குப் பின்னரும் நல்ல கவிதை எழுதுகிறவர்கள் பலர் தோன்றியுள்ளனர். இப்போதும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். ஆயினும் அவர்களுடைய பெயர்கள் பரவலாகப் பேசப்படுவதில்லை. குறிப்பிட்டுச் சொல்லப் படுகிற சிலரது பெயரும் கவிதைகளும் கூட குறுகிய சிறு வட்டத்தினுள்ளேயே ஒடுங்கிப் போகிறது. பாரதிக்குப் பிறகு, வியந்து பாராட்டப் படவேண்டிய அளவுக்குக் கவிதைகள் எழுதியுள்ள ச.து.சு. யோகியார், கம்பதாசன், தமிழ் ஒளி, கலைவாணன் போன்றவர்களின் திறமை தமிழ்நாட்டில் போதிய கவனிப்பைப் பெற்ற தில்லை. அவர்கள் உயிருடன் இருந்தபோதும் அவர்களோ அவர்களின் படைப்புகளோ உரிய அங்கீகரிப்பை இந் நாட்டில் பெற முடிந்ததில்லை. அவர்களது மறைவுக்குப் அவர்களுடைய கவிதைகளும் மறதிப் பாழில் மங்கிப் போயின.
 பாரதிதாசன் ஒரு காலக்கட்டத்தில் மிகுந்த கவனிப்பைப் பெற்றார். அதை அடுத்து பாரதிதாசன் பரம்பரை’  என்று பலர் கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டனர். அவர்களிடையிலும் சிலர்தான் கவனிப்புப் பெறமுடிந்தது. சுரதா, முடியரசன், வாணிதாசன், நாரா. நாச்சியப்பன் என்று. அதுவும் குறுகிய காலக் கவனிப்புதான். தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு அரசியல் கட்சியைச் சார்ந்து கவிதை எழுதுகிறவர்கள் பெயர்வெளிச்சம் பெற முடிகிறது. அல்லது திரைத்துறையில் வெற்றி பெறுகிறவர்கள் புகழ் வெளிச்சம் அடைய முடிகிறது. அரசியல் கட்சியின் ஆதரவோ, திரைத்துறையின் துணையோ பெற்றிராத கவிஞர்கள் உரிய கவனிப்பைப் பெறத் தவறி விடுகிறார்கள். அரசியல் கட்சியைச் சார்ந்திருப்பினும், உயிர்ப்பும் எழுச்சியும் நிறைந்த கவிதைகள் படைத்துள்ள சில: கவிஞர்கள் பரவலான கவனிப்பைப் பெறமுடிந்துள்ளது. என்று சொல்வதற்கில்லை. தொ.மு.சி. இரகுதாதன், கே.சி. எசு. அருணாசலம் போன்ற சிலரது திறமையும் ஆற்றல் நிறைந்த படைப்புகளும், அவை பெற்றிருக்க வேண்டிய அளவு கவனத்தைத் தமிழ் இலக்கிய நேயர்களிடையே பெற்றுவிடவில்லைதான். அவர்கள் சார்ந்துள்ள கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் ஒரளவு தெரிய வந்திருக்கலாம். இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம, திறமையாளர்களின் திறமையும் படைப்பு:ம் உரிய முறையில் எடுத்துச் சொல்லப் படுவதில்லை. இதுவே முழு முதல் காரணம் ஆகிவிடாது. திறமையாளர்களும் அவர்களது சாதனைகளும் போதுமான கவனிப்பைப் பெறமுடியாமல்போவதற்கு வேறு பல காரணங்களும் உண்டு. என்றாலும், இது முதன்மையான காரணமாகும். ஆர்வமுள்ள வாசகர்கள் குறைவாக இருக்கிறார்கள். படிப்பவர்களிலும் கவிதைகளைத் தேடிப் படிக்கிறவர் எண்ணிக்கை குறைவுதான். கவிதைகளை- அதிலும் மரபுவழிப் பட்ட படைப்புகளை படிப்பவர்கள் மிகவும் குறைவு. – – – – ஆனால் படிக்காமலே அல்லது ஒருவரின் ஒரு சில எழுத்துக்களைப் படித்து விட்டு, தடலடியாகக் கருத்து சொல்கிற இயல்பு-ஓங்கி அடித்து ஒதுக்கி விடுகிற போக்கு அதிகமாகவே வளர்ந்துள்ளது. இந்த நிலை மாறவேண்டும். வாசகர்களின், நேயர்களின், மனப் பண்பு நன்னிலை அடைய வேண்டும். படித்துப் பார்த்து, கருத்து சொன்னாலாவது, “பரவா யில்லை.; போகிறது! இவர் சுவை இப்படி… இது இவருடைய கருத்து’” என்று கொள்ளலாம். ஆனால், பலரும் படிக்காமலே’அறுதியிட்டு உறுதி கூற’த் துணிவது சரியான போக்கு அல்ல. ஒவ்வொரு படைப்பாளியின் மொத்த எழுத்துகளையும் ஆய்வு செய்து, நல்லனவற்றை எடுத்துக் கூறும் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டிருக்குமானால், இந்தப் போக்கு ஒரளவுக்குக் குறைக்கப்பட்டிருக்கும். ஆனால், தமிழ் நாட்டில் அத்தகைய திறனாய்வு முயற்சிகள் செய்யப்படவில்லை. இது பெரும் குறை பாடேயாகும்.
  பெருங்கவிக்கோ என்று சிறப்புப் பெயர் பெற்றுள்ள வா.மு.சேதுராமன் அவர்களின் சாதனைகளும் இந் நாட்டில் சரிவரப் புரிந்து கொள்ளப்படவில்லை. இது வருத்தத்துக் குரியது. கவிஞர் சேதுராமன் மரபுவழிக் கவிதையில், நல்ல கருத்துகளை வலியுறுத்தும் தன்மையில், பாராட்டப்பட வேண்டிய அளவு சாதனைகள் புரிந்திருக்கிறார். அவருடைய கவிதை நூல்கள் பெரும்பாலானவற்றைப் படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அதனால் அவருடைய ஆற்றலையும், படைப்புகளின் தன்மையையும் நான் அறியமுடிந்தது. அவற்றை எடுத்துச் சொல்ல வேண்டியது அவசியம் என்று கருதினேன். அதன் விளைவே இந்த நூல். இது பூரணமான திறனாய்வு இல்லை. பெருங்கவிக்கோவின் படைப்புகளில் நான் சுவைத்து மகிழ்ந்த நல்ல இயல்புகளை வாசகர்களுக்கு அறிமுகம் செய்ய முனைந்துள்ளேன். கவிஞரின் படைப்புகளைப் படித்து மகிழ இஃது ஒரு  தூண்டுதலாக அமைந்தால் நல்லது.
வல்லிக்கண்ணன்
முன்னுரை: ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன்

Friday, April 21, 2017

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙா) – இலக்குவனார் திருவள்ளுவன்




தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙா) 

  பேரா. இலக்குவனார் புதுக்கோட்டையில் இருந்த பொழுது ‘குறள்நெறி’ என்னும் இதழை நடத்தினார் அல்லவா? இங்கு அதே பெயரில் தமிழ்த்திங்களிருமுறை இதழைத் தொடங்கினார். இது குறித்து,
இக்காலத்தில் பத்திரிகை நடத்தி வெற்றி பெறுவது கலிங்கப் போரில் ஈடுபட்டு வெற்றி காண்பதை ஒத்ததாகும். இத்தகைய துயரை அறிந்தும்கூட திரு இலக்குவனார் தமிழின்மீதுள்ள பற்றினால் குறள்நெறியை வெளியிடும் பணியில் இறங்கியுள்ளார்கள்
என்றார் முத்தமிழ்க்காலர் கி..பெ.விசுவநாதம் அவர்கள்(பக்கம் 4: குறள்நெறி : 1.2.64) இவ்விதழ் தொடங்குவதற்கான காரணங்களைப் பின்வருமாறு வெளியீட்டு விழாவில் பேராசிரியரும் தெரிவித்துள்ளார்.
இன்று வெளிவரும் பெரும்பாலான இதழ்களின் நிலை என்ன? மக்களிடம் பொறிநுகர் உணர்ச்சிகளைக் கிளர்ந் தெழும்படிச் செய்வதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகின்றன. நல்லறிவு கொடுத்து மக்களைத் திருத்தி நல்வழிப்படுத்த வேண்டிய கடமை இதழ்களுக்குண்டு. அக்கடமையைப் பலவும் மறந்து விடுகின்றன. நாட்டில் பெரும்பாலான மக்கள் வளர்ச்சியற்ற நிலையிலேயேயிருந்து வருகிறார்கள். ஆகவே, அவர்களின் நிலைக்கு இறங்கிச் சென்று  தங்களின் அறிவை விற்றால்தான் பணம் சேர்க்க முடியும் என்று கருதி அவ்விதமே செகிறார்கள். நான் அவர்களைக் குறை கூற வேண்டுமென்பதற்காக இவற்றைக் கூறவில்லை.
 செய்தியிதழ்களில் புலவர்களுக்குப் போதிய விளம்பரம் கொடுப்பது கிடையாது. அரசியல் தலைவர்களின் பேச்சுக்கும் திரைப்பட அரசிகளின் படத்துக்கும்தான் அவை பெருமதிப்பு அளிக்கின்றன. திரைப்பட அரசிகளில் பலருக்கு எழுதப் படிக்கத் தெரியாமல் இருக்கும். ஆனால், மக்களுடைய வினாக்களுக்கு அவர்கள்தான் விடை எழுதுவார்கள். மக்களிடையே இதற்கான ஆர்வம் வாழ்நாள் முழுதும் நிலைத்து நிற்காது.
[குறள்நெறி வெளியீட்டு விழாவில் பேராசிரியர் சி.இலக்குவனார் உரை:
குறள்நெறி (மலர்1: இதழ் 12): தை19, 1995: 1.2.64]
  இந்தி முதன்மையை எதிர்ப்பதைத் தலையாய கடமையாகக் கொண்டு குறள்நெறி வெளிவருவது குறித்துப் பேராசிரியர் பின்வருமாறு இதழிலும் தெரிவித்தார்:
இந்தி முதன்மையைத் தடுப்பதும் தமிழைத் தூய நிலையில் வளம்படுத்துவதும் குறள்நெறியில் மக்கள் வாழ்வதற்கு ஒல்லும் வகையால் உழைப்பதும் மக்களாட்சி முறை மாண்புற வழிகாட்டுவதுமே நம் இதழின் குறிக்கோளாகும்.
 குறள்நெறியைப் பரப்பி மக்களைக் குறள்நெறியில் வாழச் செவதுதான் தலையாய நோக்கம். அந்நோக்க அடிப்படையில் கட்சிச் சார்பற்ற அரசியல் இலக்கியப் பண்பாட்டுத் தமிழியக்க வெளியீடாகப் பணிபுரிந்துவருகின்றது என்பதனை அறிந்து, இதழைப் போற்றி ஒல்லும் வகையால் உதவுமாறு அன்போடு வேண்டுகின்றோம்.
 குறள்நெறி ஓங்குக! தமிழ் வெல்க. மக்களாட்சி மாண்புறுக!
(குறள்நெறி (மலர் 1: இதழ் 12): ஆனி 18,1995; 1.07.1964)
  அவர் காலத்தில் இவ்விரண்டிலும் வெற்றி கண்டார் எனலாம். தமிழ் மக்களிடையே இந்தி எதிர்ப்பு உணர்வை உருவாக்கவும் பரப்பவும் குறள்நெறி ஆற்றிய தொண்டு அளப்பரியது. தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல், கருநாடகம், கேரளம், ஆந்திரா, மகாராட்டிரம், முதலான மாநிலங்களிலும் தில்லியிலும் குறள்நெறி அன்பர்கள்  உருவாயினர்.
 தமிழர்களில் கற்றவர்கள் எனப்படுகின்றவர்கள் தமிழினுயர்வை நிலைநாட்ட முயலாது தம்முயர்வை நிலைநாட்டுவதிலேயே காலங்கழித்துவருகின்றனர்.
 தென்மொழி, தேன்மொழியாகவும்  இந்தியத் தேய மொழி யாகவும் ஆவதற்குரிய செயல்முறைகளைச் செய்திட  வேண்டும்.
 தமிழ்நாட்டில் தமிழுக்கே தலைமை வேண்டும். தமிழ் தலைமை பெறும் வரை தமிழர் தலைமை பெறுதல் இல்லை. பழைய வடமொழிக்கடிபணியாது வாழ்ந்த தென்மொழி புதியதொரு இந்தியெனும வட மொழிக்குத் தலை குனிந்து வாழ்ந்திடுமோ? ஒரு நாளும் இல்லை.
(குறள்நெறி (மலர்3: இதழ்10):  வைகாசி19, 1997: 1.6.1966)
(தொடரும்)
– இலக்குவனார் திருவள்ளுவன்