Saturday, December 31, 2011

வாழ்க்கையால் மேலோர் வளர்தமிழ் நூலோர் வ.உ.சிதம்பரனார் ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 31/12/2011


41. வாழ்க்கையால் மேலோர் வளர்தமிழ் நூலோர் வ.உ.சிதம்பரனார் (1872-1936).

41. தன்வரலாற்றைச் செந்தமிழ்ப் பாக்களால் வனப்புடனும் வண்ணத்தமிழ் வளமுடனும் வரைந்து காட்டியுள்ள அருமை இப்பெருமகனார் பெற்ற தனிப் பெருமை.
தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்

Friday, December 30, 2011

பைந்தமிழ்ச் சித்தர் பா.வே.மாணிக்கநாயக்கர் ~ 

அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 30/12/2011



40. பல்கலை வித்தகர் பைந்தமிழ்ச் சித்தர் பா.வே.மாணிக்க நாயக்கர் (1871-1931).

40. தமிழ் எழுத்துகளின் அமைப்பை, அருமைச் சிறப்பை, ஓர் ஆங்கில நூலின் உருவாக்கத்தால் உலகமறியச் செய்த இப்பேரறிஞர் தமிழ் எழுத்துகளை- ‘அறிவியல் ஆன்மீக ஓவியங்கள்’ என்றார்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்


Thursday, December 29, 2011

தமிழ்ப்பேச்சு வீரர் சுப்பிரமணிய சிவா ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 29/12/2011


39. சித்தம் தமிழ்மூச்சு வித்தகத் தமிழ்ப்பேச்சு வீரர் சுப்பிரமணிய சிவா (1871-1925).

39. தமிழ்ப் பெரு நாவலராகவும், தமிழ் நூல் படைப்பாளராகவும் விளங்கிய இப்பெருந்தகை. தமிழுணர்ச்சியையும் தாய்நாட்டுப் பற்றையும் மேலோங்கச் செய்யப் பல நாடகங்களை உருவாக்கி நடித்தார்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்

Wednesday, December 28, 2011


பேராசான் நா.கதிரைவேல் ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 28/12/2011



38. பெரும்புலமைச் சிங்கம் பெருஞ்சொல் இமயம் பேராசான் நா.கதிரைவேற் பிள்ளை (1871-1907).

38. ‘தமிழ்த் தென்றல்’ திரு.வி.கவைத் தமிழ்ப் பெரியாராக உருவாக்கிய குருநாதரான இப்பெருமான். வெளியிட்ட தமிழ்ப் பேரகராதியை அரிய தமிழ்த் தொண்டென அறிஞர் உலகம் பாராட்டிப் போற்றியது.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0

Tuesday, December 27, 2011


மகாவித்துவான் இரா.இராகவைய்யங்கார் ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 27/12/2011


37. வடமொழி வல்லுநர் தமிழ்மொழிப் பேராசான் மகாவித்துவான் இரா.இராகவைய்யங்கார் (1870-1946).

37. சேதுபதிகளின் அரசவைப் புலவராகத் திகழ்ந்த இப்பேரறிஞர் இயற்றிய ‘பாரி காதை’ என்னும் பெருங்காப்பியம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் முதல் வெளியீடாக 1937-ஆம் ஆண்டில் மலர்ந்தது.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்

0

புரட்சியில் பூத்த மலர்

க.இந்திரசித்து
பதிவு செய்த நாள் : 27/12/2011



புரட்சியில் பூத்த மலர்
பேராசிரியர் சி.இலக்குவனார் தமிழ் மொழியின் எழுச்சிக்கும், ஏற்றத்திற்கும் போராடிய போர்ப்படை மறவர்களின் வரிசையில் முன்னணியில் நின்றவர். கார்ல்மார்க்சு, லெனின், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகியோருடைய வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும்போதெல்லாம் ஏற்படும் உணர்ச்சியும், உந்துதலும், வேகமும், வீரமும், கிளர்ச்சியும், கிளர்ந்து எழுவதைப் போன்றே இவருடைய வாழ்க்கை வரலற்றைப் படிக்கும்போதும் தோன்றுகின்றன. என்னடா! இப்படியும் ஒரு மனிதன் வாழ்ந்து மறைந்திருக்கிறாரே – அவரை நாம் மறந்திருக்கிறோமே’ என்னும் வியப்பும், வேதனையும் ஒருங்கே எழுகின்றன. காவிய தலைவனாகவே காட்சியளிக்கும் பேராசிரியர் சி.இலக்குவனாரின் வரலாற்றை மறைமலை இலக்குவனார் நிரல் படத் தொகுத்தும், வகுத்தும், ஆய்ந்தும் இந்நூலில் எழுதியுள்ளார்.
தமிழ் மொழி காப்புப் போரில் புரட்சி வீரராகப் போராடிய சி.இலக்குவனார் தமிழ்ப் போராசிரியர்கள் தன்மானத்தோடு வாழ்ந்து காட்டவேண்டும் என்பதற்கு முன்னோடியாகத் திகழ்ந்துள்ளார். விடாமுயற்சியும், தளரா உழைப்பும் கொண்டு தன்னிகரில்லா பேராசிரியராக உயர்ந்து நிற்கிறார்.
1.இளமையும் கல்வியும், 2. கல்விப்பணி, 3.கவிதைப்பணி, 4.இதழாசிரியர், 5.நூலாசிரியர், 6.ஆராய்ச்சியாளர், 7.திருக்குறள் உரை நுட்பமும் ஆய்வுத்திறனும், 8.ஓய்வில்லா உழைப்பு, 9.பன்முக ஆளுமை என்னும் ஒன்பது தலைப்புகளில் பேராசிரியர் சி.இலக்குவனாரின் வாழ்வும், பணியும் பாங்குடன் படைக்கப்பட்டுள்ளன. இந்நூலை எழுதியுள்ள மறைமலை இலக்குவனாரின் மொழிநடை தனித்தமிழ் அருவியாய்த் தாலாட்டுகிறது. மொழிநடைச் சுவையில் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரின் பக்கத்தில் நிற்கும் தகுதியை மறைமலை இலக்குவனார் பெற்றுள்ளார்.
கார்ல் மார்ச்சு, தன்னுடைய பொதுவுடைமைக் கருத்துக்களுக்காக செர்மமி, உருசியா, பெல்சியம், இங்கிலாந்து ஆகிய நாடுகள் அவரைத் தம் நாட்டு எல்லையிலிருந்து துரத்தி அடித்ததைப் போலவே சி. இலக்குவனாரையும் அவருடைய தமிழியல் கொள்கைகளுக்காக ஒவ்வொரு கல்வி நிறுவனமும் துரத்தி அடித்த செய்தியைப் படித்துப் பார்த்து, படித்துப் பார்த்து நெஞ்சம் பதைபதைக்கிறது. விரிந்த மனப்பான்னையின்மை, அறிவியல் பார்வையின்மை,தொலை நோக்கின்மை, மாணவர் நலன் கருதாமை, தன்னலமே பெரிதாகப் பேணுதல் போன்ற இழிகுணங்கள் கொண்ட கயவர்களின் கைகளில் அன்றைய கல்வி நிறுவனங்கள் செயல் பட்டமையை கண்டு, அளப்பரிய அவலம் கொண்டு நெஞ்சம் தவிக்கிறது. (கல்வித்துறையில் தொழிற்சங்கங்கள் தோன்றிய இந்நாட்களிலும் இது தொடர்கதையாய்த் தொடர்வதே கண்கூடு). “பேராசிரியர் இலக்குவனாரைப் போல பணியாற்றிய இடங்களிலெல்லாம் மாறி மாறிப் பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் வேறு எவரும் இலர் எனலாம்” (ப.54) என்னும் கூற்று அன்றைய கல்வித்துறை எப்படிப்பட்ட பிற்போக்கு மூடர்களின் கைக்குகைகளுக்குள் அகப்பட்டு, அல்லாடிக் கிடந்தன என்பதைப் பளிச்சென சுட்சுகிறது. ஒரு பேராசிரியர் எவ்வளவு இன்னலுக்கு ஆளாக்கப்பட்டிருந்தால் “துரத்தப்பட்டேன்” என்னும் தலைப்பிலேயே கவிதை படைக்கும் அவலத்திற்கு ஆளாகி இருக்கவேண்டும்? “புறநெறியில் சென்று பொல்லாங்கு கூறி என்னைத் துரத்தினர். துரத்தப்பட்டதால் அடைந்துள்ள துயரங்கள் எண்ணற்றன. என் உள்ள குமுறலை வெளிப்படுத்தினால்தான்  என் உளம் அமைதியுறும் போலிருந்தது. என்னுள்ளொலி இம்மறவழிச் செயலை மக்கள் மன்றில் முறையிடப் பணித்தது. அதன் விளைவே இந்நூல்” (ப.55) என்று இந்நூல் தோன்றியதற்கான காரணத்தை பேராசிரியர் சி.இலக்குவனார் கூறியுள்ளார்.
பகடியம் என்னும் புது உத்தியில் பண்டைய தமிழ்க் கவிதைகளை எடுத்துக்கொண்டு அதில் தன் கருத்துகளை, தன் காலச் சூழ்நிலைகளை எழுதியுள்ளார்.
“யாண்டு பலவின்றியும் நரையுளவாகுதல்
யாங்காகியர் என வினவுதிராயின்
ஆண்ட நம் மக்கள் அடிமைகளாயினர்
பூண்ட நம் பண்பு போலியதாகின்று
நற்றமிழ் மறந்தனர் நானிலமதனில்
பிறமொழிப் பற்றில் பெரியோராயினர்
தமிழகத் தெருவில் தமிழ்தான் இல்லை
ஊரும் பேரும் உயர்மொழி வழக்கும்
அயல்மொழி தன்னில் அமைந்திடக் கண்டோம்
தமிழைக் கற்றோர் தாழ்நிலை யுறுவதால்
தமிழைப் பயிலத் தமிழரே வந்திலர்
அல்லவை பெருகவும் நல்லவை குறையவும்
மக்கள் வாழ்வில் மகிழ்ச்சிதான் இன்றே
என்ற பாடல் இதற்கு மிகச் சிறந்த சான்றாக அமைந்துள்ளது.
குறிக்கோள் முழக்கம்:
‘எழுதுவதற்கு ஏடும் பேசுவதற்கு மேடையும் எப்போதும் வேண்டும் தமிழ் பரப்ப’ என்பதே இலக்குவனாரின் குறிக்கோள் முழக்கமாகும். அதற்கிணங்க, ‘சங்க இலக்கியம்’, ’இலக்கியம்’, ‘திராவிடக் கூட்டரசு’, ’குறள் நெறி’, ‘Dravidian Federation’ ஆகிய இதழ்களை நடத்தினார். பேராசிரியராக இருந்து கல்விப் பணியாற்றியதோடு இதழாசிரியராகவும் இருந்து தமிழ்ப்பணி புரிந்தார். ‘குறள்நெறி’ இதழை நாளிதழாக நடத்தி இதழியல் உலகில் புரட்சியை ஏற்படுத்தினார்.  வட்டத்தொட்டிக் குழுவினர். ‘கம்பன் புகழ் பாடிக்கன்னித்தமிழ் வளர்ப்போம்: சங்க இலக்கியத்தைத் தூக்கி வங்கக் கடலில் எறிவோம்’ என்று கூறிய முழக்கத்தை மறுத்து, ‘சங்கத்தமிழ் பாடி தமிழர் புகழ் வளர்போம்’ என்னும் முழக்கத்தை முன்வைத்தார். இதை நடைமுறைப்படுத்துவதற்காகவே ‘சங்க இலக்கியம்’ என்னும் இதழைத் தோற்றுவித்தார். “ஆண்டுதோறும் ஒரு நூலாவது எழுதி வெளிவர வேண்டும், நம் வயதை ஆண்டுகளைக் கொண்டு கணக்கிடகூடாது. நாம் எழுதிய நூல்களைக் கொண்டுதான் கணக்கிட வேண்டும்” (ப.96) என்று இலக்குவனார் கூறுவதற்கேற்ப, இருபது தமிழ் நூல்களையும் ஒன்பது ஆங்கில நூல்களையும் படைத்துள்ளார். ஏராளமான கட்டுரைகளையும் எழுதியுள்ளார். தொல்காப்பியம் குறித்து இவர் வெளியிட்டுள்ள ஆராய்ச்சி முடிவுகள் மாபெரும் அறிவுக் கொடையாக விளங்குகின்றன.
சில முடிவுகள்:
  1. தொல்காப்பியரின் காலம் கி.மு. 6ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டது.
  2. ஆரியரின் வருகைக்கு முன்னரே தமிழ் தனக்கெனத் தனியான வரிவடிவம் பெற்றிருந்தது.
  3. தொல்காப்பியரால் அந்தணர்மறை எனக்கூறப்படுபவை சமஸ்கிருத வேதங்கள் அல்ல.
  4. ஒலிநிலைப்பாடும், ஒலியழுத்தமும் தொல்காப்பியரால் ஆய்ந்து கூறப்பட்டுள்ளன.
  5. தொல்காப்பியம் பல்வேறு மொழியியற் கோட்பாடுகளையும் இலக்கியக் கோட்பாடுகளையும் மொழிகின்றது.
  6. பிறப்பின் அடிப்படையிலான சாதிப்பாகுபாடு பற்றி தொல்காப்பியத்தில் எவ்விடத்தும் குறிப்பிடவில்லை.
சென்னை பல்கலைக்கழகத்தின் கல்விக்குழுவில் உறுப்பினராக இருந்தபோது பேராசிரியர் கொண்டுவந்த தீர்மானங்களின் உள்ளடக்கத்தில் உள்ள சிந்தனைகள் இவருடைய தொலைநோக்குப் பார்வையைச் சுட்டுகின்றன. இவருடைய தீர்மானங்கள்:(ப.28)
  1. தமிழ்நாட்டுக் கல்லூரி முதல்வர்கள் குறைந்த அளவேனும் தமிழ்ப்புலமை பெற்றிருக்க வேண்டும். அதன் அறிகுறியாக வித்துவான் முன்னிலை வகுப்புத் தேர்விலாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
  2. கல்லூரிப் பாடத்திட்டத்தில் தமிழே முதற்பாக மொழியாகவும், ஏனைய மொழிகள் இரண்டாம் பாகமொழியாகவும் அமைதல் வேண்டும்.
  3. தமிழ்ப்பாடத் தேர்வில் திருக்குறளுக்கெனத் தனிக் கேள்வித்தாள் ஒன்று அமைதல் வேண்டும்.

1965ஆம் ஆண்டு அனைத்துக் கல்லூரிகளிலும் தமிழ் பயிற்றுமொழியாக இருக்கவேண்டும் என்பதற்காக ‘தமிழ் உரிமைப் பெருநடைப் பயணம்’ மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தார். இதன் காரணமாக இவர் இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டார். தமிழ் மொழிக்காக எத்தகைய இன்னல்களையும் ஏற்க அணியமாக இருந்த இவரின் நெஞ்சுரத்தை இந்நிகழ்வு எடுத்தியம்புகிறது.

எக்கரணியத்தை முன்னிட்டும் யாருக்காகவும் கொள்கையில் பேராசிரியர் சமரசம் செய்துகொண்டதே இல்லை. அறிஞர் அண்ணாவின் மீது அன்பு கொண்டிருந்தபோதும் (ப66மற்றும்67) அவர் கம்பராமாயணத்தை எரிக்க வேண்டும் என்று கூறிய கருத்தைப் பேராசிரியர் ஏற்கவில்லை (ப.17). அதனால் அறிஞர் அண்ணா ‘திராவிட நாடு’ இதழில் இவருக்கு  ‘நன்னிலம் நண்பர்க்கு’ என்னும் தலைப்பில் விடையெழுதியுள்ளார். திருமணமாகாத இளம் பேராசிரியர் பா.நமச்சிவாயம், முதுகலை வகுப்பிற்குப் பாடமாக ‘குடும்ப விளக்கை’ நடத்தினார். அப்போது அங்கு வந்த பாரதிதாசன் திருமணமாகாத அவருக்கு அப்பாடத்தை நடத்தத் தகுதியில்லை என்று கூறி, திருமண மான மாணவர் ஒருவரைப் பாடம் நடத்தப் பணித்தார். இது கண்டு வெகுண்டெழுந்த பேராசிரியர் இலக்குவனார், “அப்படியானால் இளங்கோ அடிகளும், திருத்தக்கதேவரும் திருமணம் புரிந்துகொண்டா இல்லற இன்பம் பற்றிப் பாடினார்கள்” என்று கூறி பாவேந்தரையும் மறுத்துரைத்து, நீதியின் பக்கம் நின்ற பேராசிரியரின் செயலை மறைமலை இலக்குவனார் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார். ஒரு மனிதர், ஒரு பேராசிரியர், ஒரு நூலாசிரியர், ஒரு ஆராய்ச்சியாளர், ஒர் இதழாசிரியர் இப்படியும் வாழ்ந்திருக்க முடியுமா என்ற மலைப்பை  ஏற்படுத்துகின்றது இந்நூல். பேராசிரியர் சி. இலக்குவனாரின் வாழ்க்கை வரலாற்றைப் படித்து முடிக்கும் போது மனதின் அடியாழத்தில் குற்ற உணர்ச்சி தோன்றுவது தவிர்க்க இயலாததாகிறது. தமிழால் ஊதியம் பெறும் நாம் சிறிதளவாவது தமிழ் ஊழியமும் செய்யலாமே என்ற எண்ணத்தை எற்படுத்துவதே இந்நூலின் வெற்றி எனலாம்.

நன்றி: முதற்சங்கு, தீராநதி




0

Monday, December 26, 2011

பரிதிமாற் கலைஞர் ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 26/12/2011


36. பைந்தமிழ் ஆர்வலர் பன்னரும் நூலாசிரியர் பரிதிமாற் கலைஞர் (1870-1903).

36.வடமொழிக் கலப்பில்லாத தனித்தமிழ் வளர்ச்சிக்கு ஆக்கம் அளித்த இப்பேரறிவாளர், நாடகத் தமிழின் செழுமைக்கு விளக்கம் வழங்க ‘நாடகவியல்’ என்றோர் உயர் நூலைப் படைத்தார்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0

Sunday, December 25, 2011


சோழவந்தான் அரசஞ் சண்முகனார் ~அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 25/12/2011


35. பயில்வித்த தமிழாசிரியர் பன்னிரு நூலாசிரியர் சோழவந்தான் அரசஞ் சண்முகனார் (1862-1915).

35. தமது இருபதாவது வயதிலேயே ‘சிதம்பர விநாயகர் மாலை’ என்றோர் அரிய நூலை இயற்றிய இப்பெரும்புலவர் ஆற்றிய இறவாத தமிழ்த் தொண்டால் தமிழர் நெஞ்சில் மறவாத நிலை பெற்றார். 

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0
 



Saturday, December 24, 2011

வள்ளல் பாண்டித்துரை ~அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 24/12/2011


34. சங்கம்கண்ட நாவலர் சங்கத்தமிழ்க் காவலர் வள்ளல் பாண்டித்துரைத் தேவர் (1867-1911).

34.‘பைந்தமிழ்க் காவலர்’ எனப் போற்றப் பெற்ற இப்பெருந்தகை, 1901-ஆம் ஆண்டில் மதுரையில் நான்காவது தமிச் சங்கம் உருவாக்கிக் கண்ணெனத் தமிழ் காத்துக் கவிஞராகவும் உரைஞராகவும் திகழ்ந்தார்.
 
தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்





Friday, December 23, 2011

பாவலர் தவத்திரு சங்கரதாசு ~அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 23/12/2011


33. நாடகத் தமிழ் நல்லாசிரியர் நற்றமிழ் இசைப் பாவலர் தவத்திரு சங்கரதாசு சுவாமிகள் (1867-1922).

33. இருபதாம் நூற்றாண்டில் சுவாமிகளின் பாடல்களை உரையாடல்களைப் பயன்படுத்தாத நாடக நடிகர் தமிழ் நாடக உலகில் இருந்ததில்லை. ‘தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்’ எனச் சுவாமிகள் போற்றப் பெற்றார்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0
 



Thursday, December 22, 2011

படைப்பாளர் மு.சு.பூர்ணலிங்கம் ~

அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 22/12/2011


32. போற்றும் தமிழ்த்தொண்டர் புகழ்மணக்கும் படைப்பாளர் மு.சு.பூர்ணலிங்கம் பிள்ளை (1866-1931).
32. ‘திருக்குறள் ஆராய்ச்சி’ என இப்பெருமகனார் ஆங்கில மொழியில் எழுதி வெளியிட்ட ஆய்வு நூல் மேன்மைக்குரியது. இப்பேரறிஞர் உருவாக்கியளித்த ஐம்பது நூல்களில் ஆங்கில நூல்கள் முப்பத்திரண்டு.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்

Wednesday, December 21, 2011


பாவலர் சென்னிகுளம் அண்ணாமலை 

 

~அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 21/12/2011


31. கன்னித்தமிழ்க் காவலர் காவடிச்சிந்துப் பாவலர் சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார் (1865-1891).

31. குறவஞ்சியில் குற்றாலக் குறவஞ்சியும் கலம்பகத்தில் மதுரைக் கலம்பகமும், பள்ளில் முக்கூடற்பள்ளும் தமிழ் இலக்கியங்களில் புகழடைந்ததைப் போல சிந்து வகையில் இப்பெருந்தகையின் காவடிச்சிந்து புகழ் பெற்றது.
தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்




Tuesday, December 20, 2011


இசைத் தமிழ்ச் செல்வர் 

தி.இலக்குமணர்

~அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 20/12/2011


30. இசைஞானச் செம்மல் இசைத் தமிழ்ச் செல்வர் தி.இலக்குமணப் பிள்ளை (1864-1950).
30. இப்பெருமகனார் 1903-ஆம் ஆண்டில் வெளியிட்ட இசைத்தமிழ்ப் பாடல்களான ‘ஞானானந்தன் அடிமாலை’ தமிழிசைப் பேழையாக விளங்கி, பலர் விரும்பிப் பாடும் கீர்த்தனங்களாகத் திகழ்ந்தன.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்




Monday, December 19, 2011


செந்தமிழ் ஆர்வலர் செல்வக்கேசவராயர் ~ 

அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 19/12/2011


29. சீரிய பதிப்பாசிரியர் செந்தமிழ் ஆர்வலர் செல்வக்கேசவராய முதலியார் (1864-1921).

29. புகழ்மிக்க தமிழாசிரியர் போற்றுதலுக்குரிய நூலாசிரியர் சிறப்புப் பெற்ற சொற்பொழிவாளர். பாராட்டத்தக்க பதிப்பாசிரியர் எனப் பன்முகச் சிறப்புடைய இப்பெருந்தகை தனித்தமிழ் ஆர்வலர் ஆவார்.
தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்

Saturday, December 17, 2011


ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை ~

அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 17/12/2011


27. ஈழநாட்டு இதழாசிரியர் இனியதமிழ் ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை (1860-1944).

27. புரட்சிப் பூவாக ஈழநாட்டில் மலர்ந்த ‘சுதேச நாட்டியம்’ என்னும் இதழுக்கு ஆசிரியராய்த் திகழ்ந்த இக் கவிஞர். தமிழின் உரைநடைச் செழுமைக்கும் உரமூட்டியவராவார்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்


Friday, December 16, 2011


அறிஞர் ஆபிரகாம் பண்டிதர் 

~அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 16/12/2011


26. ஈடிலாச் செயலாற்றிய இசைத்தமிழச் சாகரம் அறிஞர் ஆபிரகாம் பண்டிதர் (1859-1930).

26. இருபதாம் நூற்றாண்டின் உதய காலத்தில் வெளியிடப் பெற்ற “கருணாமிர்த சாகரம்” என்னும் திருநூல், இப்பேரறிஞர் தமிழ் மொழிக்கு வழங்கிய அருமைக்குரிய அபூர்வப் பெருஞ் சொத்து.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்

Thursday, December 15, 2011

வெள்ளக்கால் வெ.ப.சுப்பிரமணியனார் ~ 

அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 15/12/2011



25. தமிழ்ச்செம்மல் தமிழாகரர் வெள்ளக்கால் வெ.ப.சுப்பிரமணிய முதலியார் (1857-1942).

25.இப்பேரறிவாளரின் ‘தமிழ்ப் புலமை எத்தகைய ஆழமும் அகலமும், உயரமும் கொண்டதென்பதை இப்பெருமகனார் உருவாக்கி அளித்துள்ள “அகலிகை வெண்பா” உணர்த்தி நிற்கிறது.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0
 

Wednesday, December 14, 2011


மாகறல் கார்த்திகேயனார் ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 14/12/2011


மொழிநூல் அறிஞர் முத்தமிழ் உரைஞர் மாகறல் கார்த்திகேய முதலியார் (1857-1916).
24. மொழி நூல் படைத்த முதல்வராகக் கருதப் பெறும் இப்பெருமான் தமிழின் தொன்மை, நுண்மை, ஆகியவற்றை இரவு பகல் எந்நேரமும் எல்லையற்ற ஆர்வத்துடன் ஆராய்ந்த ஆய்வறிஞர்.
தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்

Saturday, December 03, 2011


அறிஞர் சொக்கலிங்கஐயா

அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 03/12/2011


23. சித்தாந்த வித்தகர் செந்தமிழ்ச் செல்வர் அறிஞர் சொக்கலிங்கஐயா (1856-1931).

23. தமிழ் மணக்கும் சிவம் பெருக்கும் நூற்றெட்டு நூல்களை உருவாக்கி அருளியுள்ள இப்பெரியாரின் தமிழ்ப் பணியால் செட்டி நாட்டுப் பகுதியில் வீடெங்கும் தமிழ் கமழ, விளங்கும் திருக்கோயில்களில் சிவம் ஒளிரத் தொடங்கியது.
தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
 


Friday, December 02, 2011


புலவர் சிந்நயச் செட்டியார் ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 02/12/2011


22. சிவம் பெருக்கிச் செந்தமிழ் வளர்த்த புலவர் சிந்நயச் செட்டியார் (1855-1900).

 இப்பெரும் புலவரின் தமிழாற்றலை அறிந்த அறிஞர் பாண்டித்துரைத் தேவர். இப்பேரறிவாளரைத் தேடி வந்து, உரையாடி உவகை கொள்வார். இப்பெருமானிடம் கொண்ட தொடர்பை, தமிழுறவாகவே கருதினார் தேவர்.
தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்





Thursday, December 01, 2011


அறிஞர் பெ.சுந்தரம்பிள்ளை ~ 

அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 01/12/2011


21. நாடக நூல் வழங்கிய நல்லாசிரியப் பெருந்தகை அறிஞர் பெ.சுந்தரம்பிள்ளை (1855-1897).

21. பல்கலைப் பன்மொழிப் புலமை பெற்று, பல்வேறு சிறந்த நூல்களைத் தமிழ்ச் செல்வங்களாக வழங்கியிருப்பினும் இப்பெருந்தகை உவந்தளித்த ‘மனோன்மணீயம்’ உயர் தமிழ்ச் சொத்தாகக் கருதப்பெறுகிறது.
தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்