Tuesday, November 29, 2016

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் : [ஙொ] – இலக்குவனார் திருவள்ளுவன்

முன் அட்டை -தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார், திரு ; mun-attai_poaraali_ilakkuvanar_ila-thiru

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார்

[ஙொ] 3. தமிழ்நலப் போராளி

  புலவர் பட்டம் பெற்ற பின்னர்த் திருவாரூர், குடவாசல், நன்னிலம் ஆகிய ஊர்களில் உள்ள அரசு (நகராண்மைக் கழக) உயர்நிலைப்பள்ளிகளில் தமிழாசிரியராகவும் அடுத்துத் திருவையாற்றில் தாம் படித்த அரசர் கல்லூரியில் விரிவுரையாளராகவும் சிறப்பாகப் பணியாற்றினார். படிக்கும் பொழுதே பரப்புரைப் பணியில் ஈடுபட்ட பேராசிரியர் இவ்விடங்களிலும் அப்பணியைத் தொடர்ந்தார். கல்லூரிகளில் உள்ளவர்களே தொல்காப்பியரை அறியாக்காலத்தில் தாம் பணியாற்றிய பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் தொல்காப்பியருக்கு விழா எடுத்துச்  சிறப்பித்தார்.தொல்காப்பியருக்கு மட்டும் அல்லாமல், திருவள்ளுவர், இளங்கோ அடிகள், ஔவையார், எனப் புலவர்கள் புகழ் போற்றும் விழாக்கள் நடத்துவதைத் தம் கடமையாகக் கொண்டு ஒழுகினார்.
 பேராசிரியர் இலக்குவனார் தாம் பணியாற்றிய கல்வி நிலையங்களில் புலவர் விழாக்களுடன் ஆண்டுதோறும் தமிழ் மறுமலர்ச்சி விழா என இயல், இசை, கூத்து என வகுத்து மூன்று நாட்கள் நடத்தினார். இது குறித்துப் பேராசிரியர்,
 தமிழ் மறுமலர்ச்சிக்குக் காரணமான புலவர்களைப் பற்றிச்  சொற்பொழிவுகள் நிகழ்த்தப்படும். இருபதாம் நூற்றாண்டுப் புலவர்கள் பற்றி இவ்விழாவில் உரைகள் நிகழும். இவ் விழாக்கள் மாணர்களிடையேயும் மற்றவர்களிடையேயும் தமிழ் மறுமலர்ச்சியை உருவாக்கப் பயன்பட்டன. தமிழ்ப் பற்றுடையோர் உள்ளங்கள் தழைத்தன
 எனக் குறிப்பிட்டுள்ளார்(என் வாழ்க்கைப் போர்). இவ்வாறு விழாக்கள் மூலம், தமிழ் இலக்கியச் சிறப்பையும் தமிழ் எழுச்சி உணர்வையும் ஊட்டினார். விழாக்களுக்குப் பெற்றோர்களையும் வரவழைத்துப் பெற்றோர் ஆசிரியர் சந்திப்புகளுக்கும் ஏற்பாடு செய்தார். அக்காலத்திலேயே பெற்றோர் ஆசிரியர் மாணவர் சந்திப்புகளை மிகுதியாக நிகழ்த்திய முன்னோடிக் கல்வியாளராகவும் திகழ்ந்தார்.
  “மக்களை வருத்தும் மூடநம்பிக்கைகளை ஒழிப்பதும் தமிழை மாய்க்கும் வேற்றுமொழிச் சோற்களின் நுழைவைத் தடுத்தலும் தமிழ் மறுமலர்ச்சியைத் தழைக்கச் செய்தலும் தமிழ் ஆசிரியர்களின் தவிர்க்கலாகாக் கடன்” (என் வாழ்க்கைப் போர்: கையெழுத்துப்படி) என முழங்கும் பேராசிரியர் தாம் அவ்வாறே முன் எடுத்துக்காட்டாகப் பணியாற்றி வந்தார். ஆதலின் தந்தை பெரியாரால் அனுப்பப்பட்ட தன்மதிப்பியக்கத் தொண்டராகப் பலர் கருதினர். இதனாலேயே சீர்திருத்தக் கருத்துகளையும் தனித்தமிழையும் விரும்பா மறு சாராருக்கு இவர் வேண்டாதவரானார். இது குறித்துப் பொருட்படுத்தாத பேராசிரியர், இலக்கியப் பரப்புரையுடன் “தமிழ்ச் சொற்களிருக்க வேற்றுச் சொற்களை விரும்புவதேன்?” எனக் கேட்டுத் “தமிழிலே உரையாடுக! தமிழிலே எழுதுக! தமிழிலே பெயர்களிடுக! தமிழ் தமிழ் என்று  முழங்குக!” என மக்களிடையே வலியுறுத்தித் தமிழராய் வாழ உணர்த்தினார்.
 தீங்கனியைச் செந்தமிழைத் தென்னாட்டின்
  பொன்னேட்டை உயிராய்க் கொள்வீர்.
  ஏங்கவைக்கும் வடமொழியை, இந்தியினை
  எதிர்த்திடுவீர் அஞ்ச வேண்டா.
  …            …         …                                
  கடல்போலும் எழுக!கடல் முழக்கம்போல்
  கழறிடுக தமிழ்வாழ் கென்று!
  கெடல்எங்கே தமிழின்நலம் அங்கெல்லாம்
   தலையிட்டுக் கிளர்ச்சி செய்க!
 (பாவேந்தர் பாரதிதாசன்: தமிழியக்கம்)
 என அறிவுறுத்தி வந்தார்; தாமும் தமிழ் காக்கும் கேடயமாகத் திகழ்ந்தார்.
 நன்னிலத்தில் பணியாற்றும்போது, ‘தமிழ் கற்பிக்கும் முறை’ என இக்காலத்திற்கேற்றவாறு மரபார்ந்த தமிழைக் கற்கும் முறை குறித்துப் பேராசிரியர் நூல் எழுதினார். இது குறித்து அவரது கருத்து வருமாறு:
  “மாணவர்கள் சிறந்தோராக உருவாதல் ஆசிரியர்களையே சார்ந்துள்ளது. நல்ல தமிழ்ப்பற்றாளராக மாணவர்கள் வெளிவருதல் தமிழாசிரியர்களையே சார்ந்துள்ளது. தமிழாசிரியர்களில் பலர் மாணவர்கள் உள்ளங்களில் தமிழ்ப்பற்றை விதைக்க வேண்டும் என்ற கருத்தில்லாதவராகவே காலம் கழித்தனர். மாணவர்க்கும் தமிழார்வம் உண்டாகும் வகையில் தமிழைக் கற்பிக்கும் வழிமுறையை மேற்கொள்ளாது இருந்தனர். அப்பொழுது  தோன்றிய இந்தியெதிர்ப்பு இயக்கத்தால் மாணவர்களிடையே தமிழ்ப்பற்று கனல்போல் பரவத் தொடங்கியது. மாணவர்கள் தமிழாசிரியர்களை மதிக்கத் தலைப்பட்டனர்.
  தமிழ் மறுமலர்ச்சி கொள்ளத் தொடங்கியது. சூழ்நிலைக்கு ஏற்பத் தமிழாசிரியரும் நடந்து கொள்ள வேண்டும் என்று கருதி தமிழாசிரியரின் பொறுப்பினை வலியுறுத்திக் கூறும் நோக்குடன் ‘தமிழ் கற்பிக்கும் முறை’ என்ற நூலொன்றினை எழுதி வெளியிட்டேன். கற்பிக்கும் முறை பற்றிய ஆங்கில நூல்களைப் படித்து ஆங்கில நாட்டில் ஆங்கில மொழியின் நிலையை அறிந்து, தமிழ்நாட்டில் தமிழ் எவ்வாறு கற்பிக்கப்பட வேண்டும் என்று எழுதினேன். இந்நூலுக்கு அணிந்துரை தருமாறு தலைமையாசிரியர் சாமிநாத(ப்பிள்ளையைக்) கேட்டபோது, இதனைப் படித்து விட்டுத் தமிழாசிரியர்களில் பலர் உங்கள்மீது கல் வீசுவார்கள் என்று கூறி, அதன் புரட்சித்தன்மையை வெளியிட்டார். இந்நூலுக்கு ‘ இந்து’வில் நல்ல மதிப்புரை வெளிவந்திருந்தது. அதன் பின்னர் நாட்டில் அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. பல கல்வி நிலையங்கள் அஞ்சல் வழியாகப் பெற்றன.”
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்

Saturday, November 26, 2016

பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – தொகுப்புரை 2/7 : இலக்குவனார் திருவள்ளுவன்




தலைப்பு-இலக்குவனாரின்தமிழ்ப்பணிகள், கருத்தரங்கம், தொகுப்புரை, இலக்குவனார் திருவள்ளுவன் ; thalaippu_ilakkuvanarin_thamizhpanigal_thokuppurai_ilakkuvanar-thiruvalluvan
வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம்,
தமிழ்த்துறை, ம.தி.தா.இந்துக்கல்லூரி
திருநெல்வேலி
பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் -பன்னாட்டுக் கருத்தரங்கம்
கட்டுரைத் தொகுப்பு நூல்

தொகுப்புரை 2/7


இலக்குவனாரின் படைப்புகள் பற்றிய கட்டுரையாளர்கள் கருத்துகள் குறித்த சுருக்கப் பார்வை வருமாறு:
  பேராசிரியர் சி.இலக்குவனார் தேவையான இடங்களில் பரிமேலழகர் உரையை மறுத்துத் தமிழ் மரபை முன்னிறுத்தி உரை கூறுகிறார் என முனைவர் பி.தட்சிணாமூர்த்தி ‘மூன்றும் ஐந்தும்’ என்னும் கட்டுரை மூலம் விளக்குகிறார்.
  “பேரா.இலக்குவனார் ‘பழந்தமிழ்‘ நூலில் மொழி மாற்றங்கள்” என்னும் தலைப்பின் கீழ் மூவகை மொழி மாற்றங்களைச் சிறப்பாக விளக்குகிறார்; பிற மொழிகளிலிருந்து சொற்களைக் கடன் பெறுதலையும் சுட்டிக்காட்டியுள்ளார்; பழஞ்சொற்களைப் போற்ற வேண்டும் என்னும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார் என்பனவற்றை முனைவர் நெல்லை ந. சொக்கலிங்கம் சிறப்பாக விளக்கியுள்ளார்.
  “சி.இலக்குவனாரின் சங்க இலக்கியப் பாடல்களின் உரைத்திறன்” மூலம் முனைவர் நா.உசாதேவி, மாமூலனார் பாடல்களுக்குப் பேராசிரியர் தரும் சிறப்பான உரைவளத்தை விளக்கியுள்ளார். 1945-47 ஆம் ஆண்டுகளில் பேரா.சி.இலக்குவனார் நடத்திய ‘சங்க இலக்கியம்’ இதழ்களில் வெளிவந்து, பின்னர் ‘சங்க இலக்கியச்  சொல்லோவியங்கள்’ என்னும் நூல் வடிவம் பெற்றவை மாமூலனார் பாடல்கள். உரை அமைப்பு முறை, சொல்லாராய்ச்சி, இலக்குவனாரின் வரலாற்று அறிவு, உவமைச்சிறப்பு, நாடகவிளக்க மாண்பு எனத் தனித்தனியே ஆராய்ந்து சிறப்பாகப் படைத்துள்ளார்.
  “செவ்விலக்கிய ஆய்வில் சி.இலக்குவனார்” கொண்டுள்ள நுண்மாண் நுழைபுலம் குறித்து முனைவர் யாழ் க.சந்திரா விளக்கியுள்ளார்.  பேராசிரியரின்  தொல்காப்பிய மொழிபெயர்ப்பு  – திறனாய்வு நூல் மூலமும் சங்க இலக்கியப் படைப்புகள் முதலான பிற மூலமும் இவற்றை அழகுபடத் தெரிவித்துள்ளார். பேரா.இலக்குவனாரின் ‘தொல்காப்பிய ஆங்கில மொழிபெயர்ப்பும் ஆராய்ச்சியுரையும்‘ நம் நாட்டிலும் பிற நாடுகளிலும் ஆய்வேடுகளுக்கு முன்னோடியாகத் திகழ்கிறது; அவரது ‘இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் – சங்க காலம்’, சமூகவியல்  நோக்கில் இக்களத்தில் எழுந்த முதனூல்; அவரது இந்நூலும் ‘சங்க இலக்கியச் சொல்லோவியங்களும்’ சங்க இலக்கிய ஆராய்ச்சியில் முன்னோடி நூல்கள்; சங்க இலக்கியக் கால வரையறை சிறப்பு மிக்கது; வேற்றுமை பற்றிய ஆராய்ச்சியும் கால்டுவெலின் கொள்ளத்தக்கக் கருத்துகளை ஏற்றும் தள்ளத்தக்கனவற்றை ஆய்ந்தும் தெரிவிக்கும் திறனாய்வு முறையும்  மிகச் சிறப்பானவை; அவரது ‘மாணவர் ஆற்றுப்படை’ சங்க இலக்கிய வகைப்பாட்டினது; அவரது குறள்வழிப் படைப்புகளும் ‘குறள்நெறி; இதழ்களும் அரிய குறள்நெறிப்பணிகளாகும்; என ஆராய்ந்து எழுதிப்  பேராசிரியர் சி.இலக்குவனாரின் செவ்வியல் புலமையை எடுத்துரைக்கிறார்.
  “பேராசிரியர் சி.இலக்குவனாரின் திருக்குறள் உரைச்சிறப்பு” தலைப்பில் முனைவர் கே.இரவிசங்கர் எடுத்துரைக்கிறார்; இன்றைய நிலையிலும் திருக்குறள் நிலைத்து நிற்பதற்குக் காரணம், அவரின் திருக்குறள் உரை எனப் பிற உரையாசிரியர்கள் கருத்துகளுடன் ஒப்பிட்டு நயம்பட எடுத்துரைக்கிறார். எளிய மக்களுக்கும் புரிய வேண்டும் என்பதற்காகச் சுருக்கமாகவும் அதே நேரம் தெளிவாகவும் உரை வழங்கியுள்ளார்;  நடைமுறை வாழ்க்கையைப் பொருத்திக் காண்பதில்  பிறருக்கு எடுத்துக்காட்டாக உள்ளார்; எண்ணும் எழுத்தும் என்பதை முதன்முறையாக அறிவியலாகவும் கலையியலாகவும் பேராசிரியர் விளக்கியுள்ளார்; எளிமையாகவும் ஆராய்ச்சிப் போக்குடனும் எழுதிக் காலம் கடந்தும் தம் உரையை நிலைக்கச் செய்துள்ளார்; என்றும் ஆராய்ந்து எழுதியுள்ளார்.
  முனைவர் க.அ.கருணாநிதி, சங்க இலக்கியங்களை மக்கள் இலக்கியங்களாக மாற்றப் பேராசிரியர் மேற்கொண்ட முயற்சிகள்;  தொல்காப்பியத்தை உலகம் அறியும் வகையில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ள அருமை; அந்நூலைத் தமிழாராய்ச்சி உலகிற்குக் கலங்கரை விளக்கமாகப் படைத்த புலமை; ஆரியத்தைத் தழுவித் திருக்குறளைத் திருவள்ளுவர்  படைத்தார் என்னும் பொய்யாபுரியார்களின் கருத்துகளுக்கு  நுண்மாண்நுழைபுல ஆய்வறிவுடன் மறுப்பு;   மொழியியல் நூல்கள் மூலம் தமிழின் செம்மொழித்தன்மையை அனைவரும் அறியச் செய்த வகைமை; சொல்லாலும் செயலாலும் யாரேனும் தமிழுக்குக்கேடு புரியும் பொழுது எதிர்க்கும் துணிவு ஆகியன குறித்தும் “பேராசிரியர் சி. இலக்குவனாரின் தமிழின் வெற்றி” என்பதன் மூலம் எடுத்தியம்புகிறார்.
  முனைவர் சா.நடராசவேலு, வடிவ வழி எதிர்மறைக்குப் பேராசிரியர் வழிகோலியுள்ளார் என்று ”சி.இலக்குவனாரின் ‘பழந்தமிழில்’ எதிர்மறைகள்” என்னும் கட்டுரை மூலம் இனிதே விளக்கியுள்ளார்; சொல்லின் அகத்தே இடம் பெறும்எதிர்மறைகள், சொல்லின் புறத்தே இடம் பெறும் எதிர்மறைகள், வடிவவழி எதிர்மறையின் வகைகள், எதிர்மறை உணர்த்தும் கிளவிகள், ஆகியன பற்றிய பேரா.இலக்குவனாரின் விளக்கங்களைத் தருகின்றார்;  பேராசிரியர் பழந்தமிழ் நூலில் கையாண்டுள்ள எதிர்மறைத்தொடர்களையும் எடுத்தாண்டு விளக்குகிறார்.
  பழந்தமிழின் தொன்மையும் மேன்மையும்  குறித்துப் பேராசிரியர் சி.இலக்குவனார், பழந்தமிழ் நூல் மூலம் பதிய வைத்துள்ளதை முனைவர் கு.நீதா முறையாக விளக்கியுள்ளார்; தமிழின் தொன்மையை உணர்த்தல், காலத்தை ஆறுநிலைகளில் பிரித்தல், தமிழின் மேன்மையை நிலைநாட்டல், திராவிட முதல்மொழி என்பது பழந்தமிழே என நிறுவல், சிந்துவெளிப் பழந்தமிழும் இன்று வழங்கும்  தமிழும் ஒன்றே என ஆய்ந்துரைத்தல், அறிஞர் கால்டுவெல்லின் கருத்தை மறுக்கும்  வையாபுரியின் கருத்தை மறுத்தல்,  அறிஞர் கால்டுவெல், அறிஞர் ஈராசு முதலான அறிஞர்களின் கருத்துகளை நடுநிலையோடு அணுகல் எனப் பேராசிரியரின் ஆய்வு முறைகளையும் அளித்துள்ளார்.
 “பேராசிரியர் சி.இலக்குவனாரின் உரையில் நடைநயம்”  குறித்து முனைவர் இர.கற்பகம் கவினுற விளக்கியுள்ளார். இதில், பண்பாட்டுச் செய்திகள் கூறல், நாடகமுறை வழக்கை விளக்குதல், அந்தாதி நடை,  கூட்டுறவு சொல்லாட்சி, திருக்குறளில் உகரச்சுட்டு வருதல்,  இலக்கணம், சொல் வருவித்தல், சொற்பொருள் வருவித்தல், சொற்பொருள் விரித்தல், சொற்களை முறைமாற்றி அமைத்துப் பொருள் கூறல் போன்றவற்றைக் கையாண்டுள்ள சிறப்பைக் கூறியுள்ளார்.
   “குறள்நெறி பரப்பிய  பேராசிரியர் சி.இலக்குவனார்” குறித்துப் பெருமைபட விளக்கியுள்ளார் முனைவர் வ.அரிகரன். திருக்குறள் தொடர்பான தம்முடைய ஆறுநூல்கள் மூலமும் குறள்நெறி இதழ்கள் மூலமும் அமைப்புகள் நிறுவனங்கள் மூலமும் மேற்கொண்ட குறள்நெறிப் பரப்புரையைத் தருகிறார். மாணவநிலையில் குறள்பரப்பும் பணியைத் தொடங்கினார்; ஆசிரியராகவும் பேராசிரியராகவும் இருந்து மாணாக்கர்களிடையே குறள்நெறிப் பணியை விரிவாக்கினார்; பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாளராக இருந்து பொதுமக்களிடையே குறள்நெறி விழிப்புணர்வை உண்டாக்கினார்; நூல்கள் வாயிலாகவும்  இதழ்கள் வாயிலாகவும் நிறுவனங்கள் வாயிலாகவும் குறள்நெறியை நிலைக்கச் செய்தார்; குறள்நெறிக்காவலராகத் திகழ்ந்தார் என்று பேரா.சி.இலக்குவனார் மேற்கொண்ட குறள்நெறிப் பரப்புரையை அழகுபட நமக்குத் தெரிவித்துள்ளார்.
   “சங்க இலக்கியச் சொல்லோவியங்கள் வழிப் புலனாகும் பேராசிரியர் இலக்குவனாரின் வரலாற்று அறிவை”  முனைவர் தி.முத்துலெட்சுமி திறம்பட விளக்கியுள்ளார். இதில் உரைத்திறன், மொழித்திறன்,  வரலாற்று அறிவு, ஆராய்ச்சித்திறன், தமிழ்ப்பற்று, பொதுமக்களுக்கு உரியதாகச் சங்க இலக்கியத்தை  முதன் முதலாக வழங்கிய சிறப்புடைமை, ஊரும் பேரும் பற்றி ஆராய்ந்து அளித்தல், தமிழர்க்கு உரிமைநாடாக இருந்த வேங்கடமலை இன்று நம்மிடையே இல்லை என்பதுபோன்று இக்காலத்தோடு ஒப்பிட்டு உரிமை உணர்வைத் தூண்டுதல்,   பழந்தமிழ் நாகரிகம், பண்பாடு, வாழ்வியல், சிறப்புற்ற நாடுகள், நாடாண்ட மன்னர்கள் எனப் பல்வேறு அறியப்படாத செய்திகளை வழங்குதல் முதலானவற்றைப் பேராசிரியர் இலக்குவனார் வெளிப்படுத்தியுள்ளதை நமக்குக் காட்சிப்படுத்தியுள்ளார்.
  “தொல்காப்பிய ஆராய்ச்சியில் காதல் இயல்”  மூலம் பேராசிரியர் இலக்குவனார் உணர்ச்சி வழிச் செயல்பாடுகளையும் அவை அறிவுவழிச் செயல்பாடுகளாக மாறி விடுவதையும் சுட்டிக்காட்டியுள்ளார்; கற்புநெறி போற்றும் காதல் வாழ்க்கையைக் கூறியுள்ளார்;  தொல்காப்பியரின் கூற்றை வழுவாத காதலாக, அறமுடைய காதலாக, கற்புடைய காதலாக விளக்கியுள்ளார்; இவை எக்காலத்திற்கும் பொருத்தமாக உள்ளது என ஏற்றமுடன் முனைவர் செ.சிவகாமசுந்தரி செப்பியுள்ளார். மேலும், தொல்காப்பியம் இலக்கணமாக இலங்குவதுடன் மொழிநூலாகவும் இலக்கிய ஆராய்ச்சிக்கருவி நூலாகவும் விளங்குவதைப் பேரா.இலக்குவனார் நமக்கு எடுத்துரைப்பதை விளக்குகிறார்.
சி.இலக்குவனார் அகத்திணையியல் முப்பொருள் சிந்தனை”கள் குறித்துச் சீர்மையுடன் விளக்கியுள்ளார்  இள முனைவர் சு.இரம்யா. இதில், முதல், கரு, உரிப் பொருள்பற்றியும் இவற்றின் அடிப்படையில் நிலம், பொழுது குறித்தும் கடவுள் தன்மை சிறப்பு குறித்தும் நிலத்திற்குரிய கடவுள்கள் குறித்தும் தொல்காப்பியர் குறிப்பிடுவனவற்றைச் சிறப்பாக இலக்குவனார் விளக்கியுள்ளார் என்கிறார்.
இலக்குவனார் திருவள்ளுவன்
தலைப்பு-தொடரும் : thalaippu_thodarum

Friday, November 25, 2016

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் : [ஙை] – இலக்குவனார் திருவள்ளுவன்

முன் அட்டை -தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார், திரு ; mun-attai_poaraali_ilakkuvanar_ila-thiru

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார்

[ஙை] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை -தொடர்ச்சி

 இவ்வரிகள் இலக்குவனாரின் தொலைநோக்கைக் காட்டுவதாக இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் சி.இலக்குவனார் குறித்து எழுதியுள்ள நூலில்(பக்கம் 50) பேராசிரியர் முனைவர் இ.மறைமலை பின்வருமாறு கூறுகிறார்:
“வறியோர்க்கு உணவு, முதியோர்க்கு உணவு, கோயிலில் உணவு என்று பல்வேறு இலவச உணவுத் திட்டங்கள் இன்று நடைமுறைப்படுத்தப் படுகின்றன. இவை யனைத்தும் பெரும் நிதியையும் கரைக்கும் செலவினங்களாகவே அமைந்துள்ளன. ஆனால், இலக்குவனார் கனவு காணும் திட்டத்தின் மூலம் உணவைப் பெறுவோர் உடல் ஊனமுற்றோரே ஆயினும் தம்மால் இயன்ற அளவு உழைக்க வேண்டும். இங்ஙனம் உழைத்துப் பெற்ற விளைவினால் கிடைக்கும் வருவாய் மீண்டும் இத்திட்டத்திலேயே முதலீடு செய்யப்படும். இதன் விளைவாகச் செலவினம் ஒருவழிப் போக்குவரத்தாக அமையாமல், வருவாய் வழங்கித் தொடர்ந்து இத்திட்டம்நடைமுறைப்படுத்த வழிவகுக்கிறது. இன்றைய சூழ லில் நடைமுறைப்படுத்தக்கூடிய திட்டங்களுக்கு வழிகாட்டும் வகையில் இலக்குவனாரின் தொலைநோக்கு அமைந்துள்ள தன்றோ?”
  மொழிபெயர்ப்பு நூல் நேரடி உருவாக்கம் போல் அமையாமல் புத்தாக்கமாக அமைய வேண்டும் என்பர் அறிஞர் பெருமக்கள். ஆங்கிலக் கவிஞர் கீட்சு என்பாரின் ‘இசபெல்லா’ என்னும் குறுங்காப்பியத்தைத் தமிழில் புத்தாக்கமாகப் படைத்துத் தந்துள்ளார் பேராசிரியர் சி.இலக்குவனார். இதன் மூலம் அவரின் ஆங்கிலப் புலமையும் மொழிபெயர்ப்புத் திறமையும் நன்கு பளிச்சிடுகின்றன. தமிழகச் சூழலுக்கேற்ற வகையிலும் தாம் பின்பற்றும் பகுத்தறிவு இயக்கக் கோட்பாடுகளுக்குப் பொருந்தும் வகையிலும் பெண்கல்வி, பெண்ணுரிமை, பெண் விடுதலை ஆகிய கருத்துகளைச் சங்க இலக்கிய நடையில் கண்ணகி, மணிமேகலை முதலான பெருமைமிகு பெண்டிரை நினைவுகூர்ந்து மகிழும் வகையில் இலக்கிய மேற்கோள்களை இனிதே இயம்பி எழிலரசி  மூலமாகப் போர்க்குணத்தைப் படிப்போருக்கு ஏற்றி விடுகிறார். மாணவப்பருவத்திலேயே பல புதுமைகள் நிறைந்த படைப்பை உருவாக்கித் தாம் படைப்புலகிலும் கால் பதித்த ஒரு போராளி என்பதை மெய்ப்பிக்கின்றார்.
 படிக்கும் பொழுதே சிறந்த புலமையாளர் எனப்(பெரும்புலவர்களைப் போட்டி மூலம் தேர்ந்தெடுத்துச் சிறப்பிக்கும்) புதுக்கோட்டை அரசரால் சிறப்பிக்கப் பெற்றார். ஒன்பான் இரவு (நவராத்திரி) விழாவில் ஒவ்வொரு நாளும் நடைபெற்ற – பெரும் புலவர்கள் பலரும் பங்கேற்ற – புலமைப் போட்டிகளில் வென்றார்; விழா நிறைவில் அரசர் நாளோலக்கத்தில் பண்டிதர் என்ற விருதும் பொற்கிழியும் அளித்துச் சிறப்பு   செய்தார். பொதுவாகப் பிராமணர்களும் சமசுகிருதப் புலவர்களும் அகவையில்  மூத்தோரும் பாராட்டு பெற்ற நிலையில் தமிழ் ஆயும் தமிழ் உணர்வாளரான இளந்தமிழருக்கு இவை கிடைத்ததில் அனைவருக்கும் மகிழ்ச்சி. கற்றவர்க்குச் சென்றவிடமெல்லாம் சிறப்புதானே. படிக்கும் பொழுதே புலமை மிக்கவராக இருந்த சிறப்பு மன்னர் வரை அறிந்து போற்றப்பட, அவரை அங்கு அனுப்பிய கல்லூரியினரும் மகிழ்ந்தனர்.
 புறநிலைச் செயல்பாடுகளில் முதன்மை பெற்றதுபோல் புலவர் படிப்பிலும் முதன்மை பெற்றார் பேராசிரியர் சி.இலக்குவனார். ஆனால், தேர்ச்சி அறிவிப்பு அனைவருக்கும் அதிர்ச்சியைத் தந்தது. மாநில முதல்மாணவராக மதிப்பெண் பெற்றிருந்தும் இதே மதிப்பெண்ணைப் பெற்றிருந்த மற்றொருவர் அகவை மூப்பின் அடிப்படையில் அத்தகுதியைப் பெற்றார்; அவர் முன்னரே பண்டிதர் பட்டம் பெற்றவர் என்பதால் அவர் வெற்றி பெற்றதில் வியப்பில்லை. ஆனால், பேராசிரியருக்குக் கிடைக்க வேண்டிய சிறப்பு அகவைக்கு முதலிடம் என்னும் கொள்கை அடிப்படையில் கிடைக்காமல் போனது பிற மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஆறாப் புண்ணாய் வாட்டியது. பேராசிரியருக்கும் பெரிதும் ஏமாற்றமாக இருந்தாலும் மீண்டும் இயல்பாகிப் பணி நாடலுக்கும் களப்பணிக்கும் ஆயத்தமாகி விட்டார்.
 புலவர் தேர்ச்சியைத் தொடர்ந்து, ஆசிரியப்பணித் தகுதிக்காக அண்ணா மலைப் பல்கலைக்கழகம் சென்று ஆசிரியப்பயிற்சி பெற்றார். பின்னர்ப் பணியில் இருந்தே படித்தும் ஆய்வேடுகள் அளித்தும் முதுகலை, கீழ்த்திசை இலக்கிய முதுகலை இயல் (எம்.ஓ.எல்/ M.O.L.), மெய்யியல் அறிஞர் (முனைவர்-பி.எச்.டி/Ph.d.) முதலான பட்டங்களைப் பெற்றார். கீழ்த்திசை இலக்கியத்தில் முதுகலை பெற்ற சிலருள் பேராசிரியரும் ஒருவர்.
 வசதி நிறைந்தவர்களுக்குக் கல்வி பொழுது போக்குபோல் அமைந்து விடுகிறது. அல்லது எச் சிக்கல் குறித்தும் கவலையின்றிப் படிப்பில் மட்டும் கவனம் செலுத்த முடிகின்றது. ஆனால், வசதி குறைந்தவர்களுக்குப் படிப்பது என்பதே ஒரு போராட்டம்தான். அப் போராட்ட வாழ்க்கையிலும் தமிழ் காக்கும் போர்க்களப் பணியில் கருத்து செலுத்தியவர் பேராசிரியர். தூய தமிழ்பற்றிய பரப்புரை என்பது நமக்கு இன்றைக்கு மிகவும் எளிதாகத் தோன்றும். ஆனால், மாணவ நிலையில் இருந்தே போராட்டங்கள் இடையேதான், தமிழின் தூய்மையைக் காக்கவும் தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், திருக்குறள் சிறப்பைப் பற்றியும் கட்டுரைகள் எழுதியுடன் நில்லாது பரப்புரையும் மேற்கொள்ளவும் தம் வாணாளைச் செலவிட்டுள்ளார்.
  பேராசிரியரின் எதிர்காலப் போராட்ட வாழ்வின் அடிக்கல் பள்ளி வாழ்க்கையிலேயே நாட்டப்பட்டு விட்டது. பேராசிரியருக்கு அமைந்த ஒத்துழைப்பும் ஊக்கமும் நல்கிய அருமையான ஆசிரியர்கள், நீதிக்கட்சி ஆட்சியால் தன்மதிப்பினை வளர்க்கும் தஞ்சாவூர் மண் முதலானவை பேராசிரியரின் எண்ணங்களுக்கு அரண் செய்தன. எனவே வறுமைப் போரிலும் சாதிப்போரிலும் எதிர்நீச்சல் போட அவரால் முடிந்தது; எத்தனையோ இடையூறுகள் வந்தபோதும் இடைவெளி  விட்டேனும் கல்வியைத் தொடர அவரால் இயன்றது; வேறு துறைக்கோ பிற பணிக்கோ செல்லும் வாய்ப்பு இருப்பினும் தமிழின்பால் அவர் கொண்ட காதல் தமிழையே படிக்கச் செய்தது; தமிழ்ச்சிறப்புகளைப் பிற மொழியினர் அறியச் செய்ய வேண்டும் என்னும் பேராவல் பிற மொழிகளையும் நன்கு கற்கச் செய்தது;  மொழி ஆராய்ச்சியில் ஈடுபட்டு மேலும் மேலும் தமிழின் மேன்மைகளை வெளிவரச் செய்யும் புலமையைத் தந்தது; எழுத்துப்பணி, சொற்பொழிவுப் பணி என்பனவற்றில் அமைதி கொள்ளாது மக்களிடையே மக்களாக இருந்து போராடி மக்களுக்கு வழிகாட்டி மக்களையும் போராட்டத்தில் ஈடுபடுத்தச் செய்தது. தமிழுக்காகத் தன்னை ஈந்த போராளியாகவே பேராசிரியர் பிறரால் மதிக்கப் பெறும் நிலை வந்தது.
(தொடரும்) 
இலக்குவனார் திருவள்ளுவன்