Sunday, January 24, 2010

'கொங்குக் குலமணி' - சி.எம்.இராமச்சந்திரன் செட்டியார்



செந்தமிழ்ப் புலவராய் இருந்து தமிழை வளர்த்தோரைக் காட்டிலும், வேறு வேறு துறைகளில் புலமை பெற்றவரே தமிழ் வளர்ச்சிக்குப் பெரிதும் துணையாய் இருந்துள்ளனர்.
ந.மு.வேங்கடசாமி நாட்டார், உழவுத்தொழிலில் ஈடுபட்டிருந்து பின் புலவராகப் பொலிந்தவர். பண்டிதமணி கதிரேசச் செட்டியார், வணிகராய் இருந்து பின்னர் புலமை நலங்கனிந்தவர். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார், கா.சு.பிள்ளை, ரா.பி.சேதுப்பிள்ளை முதலான பெருமக்கள், வழக்கறிஞர் தொழில் புரிந்து வண்டமிழில் தேர்ச்சி பெற்றவராவர். பா.வே.மாணிக்க நாயக்கர், பொறியாளராய் இருந்து, பின் மொழித்தேர்ச்சி பெற்றவர். புலவரேறு வரதநஞ்சைய பிள்ளை, ஊர்க்காவலராய் இருந்து, பின் ஒண்டமிழில் தேர்ச்சி பெற்றவர். சைவ ஞாயிறு கோவைக்கிழாரும் வழக்குரைஞராய் இருந்து, பிறகு தண்டமிழில் மேதையானவர். கோவைக்கிழார் கல்லூரியில் கற்றபாடம், இயற்பியல், சட்டவியல்.
கோவைக்கிழார் தமிழ் இலக்கண, இலக்கியங்களை, திருச்சிற்றம்பலம் பிள்ளை, சபாபதிப் பிள்ளை, உ.வே.சாமிநாதய்யர் போன்றோரிடம் கற்றுக்கொண்டார். கோவைக்கிழாரின் இயற்பெயர், இராமச்சந்திரன் செட்டியார்.
1888-ஆம் ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதி மருதாசலம் செட்டியார்-கோனம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார்.
தொடக்கக்கல்வியை கோவை நகராட்சிப் பள்ளியிலும், உயர்நிலைக் கல்வியை லண்டன் மிஷின் பள்ளியிலும், கல்லூரிக் கல்வியை சென்னை மாநிலக் கல்லூரியிலும் கற்றுத் தேர்ந்தார். சென்னை சட்டக் கல்லூரியில் 1912-இல் பி.எல். பட்டமும் பெற்றார். கோவையில் வழக்குரைஞராய் பல்லாண்டுகள் பணிபுரிந்தார். அத்தொழிலில் அவர் மனம் ஈடுபடவில்லை. தமிழ்த் தொண்டிலும் சமயத் தொண்டிலும் ஆர்வத்தோடு ஈடுபாடு கொண்டார்.
சென்னையில் படிக்கும் காலத்திலேயே சமுதாயப் பணியிலும் ஈடுபட்டார். தாம் வழக்குரைஞர் தொழிலுக்குச் சென்றபிறகு, தம் குலத்துச் சிறுவர்களுக்குப் பணிபுரிய விரும்பி, "தேவாங்கர் சிறுவர் சபை' என்ற ஓர் அமைப்பை நிறுவி, அதன் செயலராக இருந்து பணிபுரிந்தார். ஏழைப் பிள்ளைகளுக்கு உதவுவதற்கு நிதி திரட்டிப் பணிபுரிந்தார். அச்சபை இன்றும் கோவை-சுக்கிரவாரப்பேட்டையில் இயங்கிவருகிறது.
கோவைக் கிழார், 1918-ஆம் ஆண்டில் கோவை நகராட்சியின் துணைத் தலைவரானார். 1943, 1946 ஆகிய ஆண்டுகளில் பட்டதாரித் தொகுதியில் நின்று சென்னைப் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுபினராக வெற்றி பெற்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் தமிழ் வளர்ச்சி ஆலோசகராக இருந்தார்.
கோவையில் தேவாங்கர் உயர்நிலைப் பள்ளியைத் தோற்றுவித்தார். அதன் ஆட்சிக்குக்குழு உறுப்பினராய் இருந்தார். கோவைத் தமிழ்ச் சங்கத்தை உருவாக்கி, சிவக்கவிமணி சி.கே.சுப்பிரமணிய முதலியார் தலைமையில் செயலாளராகப் பணிபுரிந்தார்.
சென்னை சுவடிச்சாலை, தஞ்சை சரஸ்வதிமகால் புத்தகசாலை ஆகியவற்றிலும் இவர் உறுப்பினராய் இருந்தார். கோவை-அரசுக் கல்லூரி பழைய மாணவர் கழகத்திலும், கோவை-காஸ்மோபாலிடன் கிளப்பிலும் (இறுதிக்காலம் வரை) தலைவராய் இருந்தார். இவர் இடம்பெறாத கல்விக் கழகங்களோ, பொதுப்பணி மன்றங்களோ, சமயச் சபைகளோ, பொழுதுபோக்கு அமைப்புகளோ, பொதுமாநாடுகளோ இல்லை என்றே கூற வேண்டும்.
தம் குலத்தினர் நெசவுத் தொழில் ஒன்றிலே நின்று, உயரும்போது உயர்ந்தும், தாழும்போது தாழ்ந்தும் துன்புறுதலைக் கண்டு உள்ளம் வருந்தினார். அத்தொழிலை வளமுடையதாக்கப் பல கைத்தறிக் கூட்டுறவு சங்கங்களை உருவாக்கினார். மாநாடுகள் பலவற்றை நடத்தினார். அவர்களின் குறைகளைப் போக்க முயன்றார்.
கோவைக்கிழார், சென்னை-ராஜதானியின் அறநிலையத்துறை ஆணையாளராக இருந்தபோது, கோயில்களின் வருவாயில் ஒரு பகுதியை, சமய வளர்ச்சிக்கென ஒதுக்க வேண்டும் என்றும், அதன் மூலம் சமயச் சொற்பொழிவுகள், நூல்கள் வெளியிடுதல், நூல் நிலையங்கள் அமைத்தல் ஆகியவற்றுக்காகத் திட்டங்கள் வகுத்துச் செயல்படுத்தினார். கோயில்களில் திருமுறைகள் ஓதுதல், திருமுறைப் பதிகங்களைக் கல்லில் பதித்தல், தல வரலாறுகள் எழுதுதல், கோயில் குடமுழுக்குகளை ஆகம முறைப்படி செய்தல் ஆகியவற்றுக்காக அயராது உழைத்தார். தவத்திரு குன்றக்குடி அடிகளாருடன் சேர்ந்து தமிழ் நாடெங்கும் உள்ள கோயில்களில் தமிழில் அர்ச்சனை நடைபெறப் பாடுபட்டார்.
சமய ஆதீனங்களான தருமபுரம், திருப்பனந்தாள், திருவாவடுதுறை, மயிலம் முதலியவற்றில் தமிழ்க் கல்லூரிகள் தோன்றக் காரணமாக இருந்தார். கொங்குநாட்டுப் பேரூர் சாந்தலிங்கர் திருமடத்தின் சார்பிலும் தமிழ்க்கல்லூரி ஒன்றைத் தவத்திரு சாந்தலிங்க ராமசாமி அடிகளாருடன் சேர்ந்து தோற்றுவித்தார், அக்கல்லூரியின் முதல்வராகவும் பணியாற்றினார். திருமடத்தின் சார்பில் உயர்நிலைப் பள்ளி தோன்றவும் காரணமாக இருந்தார்.
கோவைத் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராக கோவைக்கிழார் இருந்தபோது, "கொங்குமலர்' என்னும் திங்கள் இதழை நடத்தினார். சைவசித்தாந்த சமாஜத்தின் இதழான, "சித்தாந்தம்' இதழுக்கும் ஆசிரியராக இருந்து அரும் பணியாற்றினார்.
தஞ்சை சரஸ்வதி மகாலில் உறுப்பினராய் இருந்தபோது, "இராமப்பய்யன் அம்மானை' என்ற நூலையும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வழியாக "தமிழிசைக் கருவிகள்' என்ற நூலையும் பதிப்பித்து வெளிப்படுத்தினார்.
கோவைகிழார், தமிழ் நாட்டின் வரலாற்றையும், புலவர்களின் வரலாற்றையும், கல்வெட்டு-செப்பேடுகளின் துணையால் ஆராய்ந்து தெளிவுபடுத்தியுள்ளார்.
இதுவரையிலும் யாரும் அறிந்து எழுதாத "கொங்குநாட்டு வரலாற்றை' பலரும் போற்றும் வண்ணம் எழுதியுள்ளார். ஏறக்குறைய எண்பது நூல்களுக்கு மேல் எழுதியுள்ளார். இன்னும் அச்சில் ஏறாத நூல்களும் பல உள்ளன.
கோவைக்கிழாரின் பணியைப் பாராட்டி ஆங்கில அரசு, 1930-இல் "இராவ்சாகிப்' என்ற பட்டத்தையும் 1938-இல் "இராவ்பகதூர்' என்ற பட்டத்தையும் அளித்துச் சிறப்பித்தது. சென்னை மாநிலத் தமிழ்ச்சங்கம், "செந்தமிழ்ப்புரவலர்' என்ற பட்டத்தையும் சென்னை மாநிலச் தமிழ்ச்சங்கம், "சிந்தாந்தப்புலவர்' என்ற பட்டத்தையும் மதுரை ஆதீனம் "சைவஞாயிறு' என்ற பட்டத்தையும் வழங்கிப் பாராட்டியது. கொங்குநாட்டு வரலாறு என்ற நூலுக்குத் தமிழ் வளர்ச்சிக்கழகம் பரிசளித்துப் போற்றியது. கோவை நன்நெறிக்கழகம் பொற்பதக்கம் வழங்கிப் போற்றியது. தமிழ், சம்ஸ்கிருதம், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், இந்தி, உருது, மலையாளம் என எட்டு மொழிகளில் சிறந்த புலமை பெற்றிருந்தார்.
இச்சான்றோர், 1969-ஆம் ஆண்டு டிசம்பர் 3-ஆம் தேதி இயற்கை எய்தினார். இவரின் சமாதி பேரூர் தமிழ்க்கல்லூரித் தோப்பில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குறளாக வாழ்ந்தவர் திருக்குறள் வீ.முனிசாமி



னொலியில் திருக்குறள் அமுதம் பருக அதிகாலையில் நம்மை எழுப்பிய ""ஏ மனிதா'' என்ற முதல் குரலை யாரும் மறந்திருக்க முடியாது. இந்தக் கணீர் குரலுக்குச் சொந்தக்காரர் திருக்குறளார் வீ.முனிசாமி.விழுப்புரம் அருகே உள்ள தோகைப்பாடி கிராமத்தில் 1913}ஆம் ஆண்டு செப்டம்பர் 26}ஆம் தேதி வீராசாமி பிள்ளை}வீரம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.திருச்சியில் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போதே முனிசாமிக்கு திருக்குறளின் மீது ஆழ்ந்த ஈடுபாடு ஏற்பட்டது. 1330 குறட்பாக்களையும் மனப்பாடம் செய்த அவர், திருக்குறளை நகைச்சுவையாகவும் நயமாகவும் அன்றாட வாழ்க்கைக்குப் பொருத்தமாக இருக்குமாறும் மக்களுக்குச் சொல்ல வேண்டும் எனும் முயற்சியில் ஈடுபட்டார்.1935}ஆம் ஆண்டில் திருச்சி மலைக்கோட்டை நூற்றுக்கால் மண்டபத்தில் தொடங்கிய திருக்குறள் பரப்பும் திருக்குறளாரின் பணி, அரை நூற்றாண்டையும் கடந்தது.1941}ஆம் ஆண்டு முதன்முதலாக சேலத்தில் இவர் நடத்திய திருக்குறள் மாநாட்டில் தேவநேயப்பாவாணர் உள்ளிட்ட தமிழறிஞர்கள் பங்கேற்றனர். சென்னை புரசைவாக்கத்தில் தங்கி, சட்டப் படிப்பினை மேற்கொண்டு திருக்குறள் வகுப்பினையும் நடத்தியபோது தமிழறிஞர்கள் அ.கி.பரந்தாமனார், நடேசனார், வடிவேலனார் ஆகியோருடன் இணைந்து குறட்பாக்களை அட்டைகளில் எழுதி தெருக்கள் தோறும் தமிழ் முழக்கம் செய்யும் தொண்டிலும் திருக்குறளார் ஈடுபட்டார். தொடர்ந்து சென்னையில் இவர் முன்னின்று நடத்திய திருக்குறள் மாநாட்டில், பேராசிரியர்கள் ரா.பி.சேதுப்பிள்ளை, சுப்பிரமணியப்பிள்ளை, இராசாக்கண்ணனார் உள்ளிட்டவர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.தந்தை பெரியார் 1948}இல் சென்னை ராயபுரத்தில் நடத்திய திருக்குறள் மாநாட்டில் திரு.வி.க., தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், கல்விக்கடல் சக்ரவர்த்தி நயினார், நாவலர் நெடுஞ்செழியன் ஆகியோருடன் பங்கேற்று திருக்குறளார் சிறப்புச் சொற்பொழிவாற்றினார்.புராண, இதிகாச நூல்களை சோறு, குழம்பு போலவும், திருக்குறளை ஊறுகாய் போலவும் வைத்துக்கொண்டிருந்த அக்காலத்தில், திருக்குறளை சோறாகவும் குழம்பாகவும் வைத்துக்கொண்டு, புராண இதிகாசங்களை ஊறுகாயாக வைத்துக்கொள்வதுதான் முறையான செயல் என்பதை மெய்ப்பிக்க வேண்டும் என்பதையே தனது வாழ்வின் அடிப்படை நோக்கமாகக் கொண்டார் திருக்குறளார் வீ.முனிசாமி.பல்பொடி, கண்ணாடி, கடிகாரம் போல் திருக்குறளும் மக்களின் அன்றாடப் பயன்பாட்டில் இருக்க வேண்டும் என விரும்பிய திருக்குறளார், தமிழகத்தின் மூலை, முடுக்கெங்கும் பயணம் செய்து திருக்குறள் பரப்பும் பணியில் ஈடுபட்டார். பாமரர்களும் புரிந்து கொள்ளும் எளிய நடையிலான அவரது பேச்சில் நகைச்சுவை ததும்பியது.""இந்த உலகத்தில் எல்லா செல்வங்களும் அழிந்துவிடும். ரொம்ப வருடங்களாக இங்கிருந்த ஆலமரம் புயல் காற்றிலே விழுந்துவிட்டது. இங்கிருந்த பெரிய கட்டடம் மழை பெய்து இடிந்துவிட்டது. அதோ போகிறாரே 10 வருடங்களுக்கு முன்பு அவர் லட்சாதிபதியாக இருந்தார். இப்போ, எல்லாம் செலவழித்து ஏழையாகிவிட்டார். இது அழியும் செல்வம். ஆனால் கல்வி அப்படிப்பட்டதல்ல. அவர் 10 வருடங்களுக்கு முன்பு எம்.ஏ., பாஸ் செய்திருந்தார். இப்போது அது எல்லாம் செலவாகி எஸ்.எஸ்.எல்.சி. ஆகிவிட்டார் என்று யாரும் சொல்ல மாட்டார்கள்'' கேடில் விழுச்செல்வம் என்ற குறளுக்கு, திருக்குறளார் அளித்த எளிய விளக்கம் இது.அதே போல் ""எல்லோரிடத்திலும் எல்லாவிதமான கேள்விகளும் கேட்டுவிடக்கூடாது. எந்த வருடத்தில் பிறந்தீர்கள் என்று கேட்கலாம். எத்தனை வருடங்கள் இருக்கலாம் என்று இருக்கிறீர்கள் என்று கேட்கக்கூடாது. யார் யாரோ போய்விட்டாங்களே, நீங்க எப்போது பேறதாயிருக்கீங்க என்று கேட்டுவிடக்கூடாது'' என்கிற திருக்குறளாரின் பேச்சு, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதே நேரம், சிரித்து மறக்கப்படாது சிந்திக்க வேண்டும்'' என வலியுறுத்தினார் திருக்குறளார்.இலக்கியம், இலக்கணம் என்றாலே முகத்தைத் திருப்பிக் கொண்டவர்கள் கூட, திருக்குறளாரின் பேச்சின் ரசிகர்களானார்கள். வள்ளுவரின் குறள் மக்களிடம் வேகமாகப் பரவியது. இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியும் தமிழ்ப் பாதுகாப்பு உணர்ச்சியும் மேலோங்கியிருந்த அக்காலக்கட்டத்தில் திருக்குறளாரின் திருக்குறள் புத்தகங்கள் ஆயிரக்கணக்கில் விற்பனையாயின.பெரியார், பாரதிதாசன், ப.ஜீவானந்தம், காமராசர், டாக்டர் மு.வ., கி.ஆ.பெ.விசுவநாதம், ரா.பி.சேதுப்பிள்ளை, ந.மு.வேங்கடசாமி நாட்டார், நாவலர் சோமசுந்தர பாரதியார், குன்றக்குடி அடிகளார், கவியோகி சுத்தானந்த பாரதி, உ.வே.சா., மகாவித்வான் தண்டபாணி தேசிகர், சுவாமி சகஜானந்தா, சுவாமி விபுலானந்த அடிகளார், சர்.பி.டி.இராசன், சி.பா.ஆதித்தனார், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் உள்ளிட்ட தமிழறிஞர்களுடன் நட்புறவு கொண்டிருந்தார் திருக்குறளார்.திருக்குறளாரின் பணியை ""குறட்பயன் கொள்ள நம்திருக் குறள்முனிசாமி சொல் கொள்வது போதுமே'' என புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் (1948) பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.1949}ஆம் ஆண்டு கடலூரில் கூட்டுறவு முறையில் திருக்குறள் அச்சகம் தொடங்கப்பட்டு, அதனைப் பொறுப்பேற்று நடத்தினார் திருக்குறளார். மேலும், "குறள் மலர்' இதழ் மூலம் மக்களிடையே திருக்குறள் பரவுமாறு செய்தார். தமிழகத்தில் மட்டுமல்லாது தலைநகர் தில்லியிலும், மும்பையிலும், கடல்கடந்து மலேசிய, சிங்கப்பூர் நாடுகளிலும் திருக்குறளாரின்÷திருக்குறள் பரப்பும் பணி தொடர்ந்தது.நாடாளுமன்ற உறுப்பினராக (1952}1957) இருந்தபோது, நாடாளுமன்றக் கூட்டங்களில் திருக்குறளுடன் பேச்சைத் தொடங்கினார். நாடாளுமன்றப் பதிவேடுகளில் தனது பெயருக்கு முன்பு திருக்குறளார் என்பதை இடம்பெறச் செய்தார். நாடாளுமன்றத்தில் அப்போது மக்களவைத் தலைவராய் (சபாநாயகர்) இருந்த அனந்தசயனம் அய்யங்கார், திருக்குறளார் நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு நல்ல ஆர்வமும் ஊக்கமும் கொடுத்தார். இக்காலகட்டத்தை தில்லி மற்றும் சுற்றுவட்டாரங்களில் வாழும் தமிழர்களிடையே குறட்பாக்களை எடுத்துப் பேசுவதற்கு திருக்குறளார் பயன்படுத்திக் கொண்டார்.1981}ஆம் ஆண்டு மதுரையில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில், திருக்குறளுக்காக ஒரு நாளை ஒதுக்கிய அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர்., அந்த அரங்கிற்கு திருக்குறளாரை தலைமையேற்று நடத்தச் செய்தார். தமிழக அரசு தொடங்கிய திருக்குறள் நெறி பரப்பு மையத்திற்கு தொடர்ந்து நான்கு முறை இயக்குநராக நியமிக்கப்பட்டார் திருக்குறளார்.வள்ளுவர் வழிப்பயணம், வள்ளுவர் வகுத்த வாழ்க்கைப் பாதை, வள்ளுவர் பூங்கா, வள்ளுவரும் பரிமேலழகரும், திருக்குறள் இன்பம், வள்ளுவரைக் காணோம், திருக்குறள் காமத்துப்பால் பொழிப்புரை, வள்ளுவர் ஏன் எழுதினார், வள்ளுவர் காட்டிய வழி என 30 நூல்களைப் படைத்திருந்தாலும், உலகப் பொதுமறை}திருக்குறள் உரைவிளக்கம், திருக்குறளாருக்கு அழியாப்புகழைக் கொடுத்தது. இதுபோன்ற விளக்க நூல் இதுவரை திருக்குறளுக்கு வெளிவரவில்லை என்ற சிறப்பைப் பெற்றது.தமிழ்மறைக்காவலர், திருக்குறள் கேசரி, முப்பால் வித்தகர், திருக்குறள் இரத்தினம், நகைச்சுவை இமயம் என ஏராளமான பட்டங்கள் உலகத் தமிழர்களால் வழங்கப்பட்டன. ஆனாலும், 23.1.1951}இல் குடந்தை மாநகரில் உடையார்பாளையம் குறு நிலமன்னர் கச்சியுவரங்க காளாக்க தோழ உடையார் முதன் முதலில் அளித்த பட்டமான "திருக்குறளார்' எனும் பட்டமே இவருக்கு வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தது.திருக்குறள் வகுப்புகள் நடத்தியும், தொடர் சொற்பொழிவுகள் ஆற்றியும் திருக்குறளுக்காக, திருக்குறளாகவே வாழ்ந்து, வள்ளுவர் வழி நடந்த திருக்குறளார் வீ.முனிசாமி 1994}ஆம் ஆண்டு ஜனவரி 4-ஆம் தேதி இவ்வுலக வாழ்வை நீத்தார்.திருக்குறள் உள்ளவரை திருக்குறளார் வீ.முனிசாமியின் பெயரும் புகழும் நின்று நிலைக்கும்.
கருத்துக்கள்

I HAVE TRIED MY BEST TO GET HIS AUDIOS ON "THIRUKKURAL". IN HIS WORDS, "A MANITHA - WHILE SOWING A SEED ITSELF WE CAN SAY THAT THIS WILL GROW AS MANGO TREE OR NEEM TREE. BUT IN THE CHILD STAGE, WE CAN NOT SAY THAT HE WILL BECOME AN ENGINEER, A DOCTOR OR A TEACHER." I LOVE TO HEAR THIS IN HIS VOICE IN A HUMOROUS TONE. T.L. SUBRAMANIAM, SHARJAH, UAE

By T.L. SUBRAMANIAM
1/24/2010 12:48:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
அருந்தமிழ்த் தொண்டர்-அரங்கசாமி நாயக்கர்



தமிழ் மொழிக்குத் தொண்டாற்றியவர் மிகப்பலர். அவருள் ஒரு சிலரையே இன்று நாமறிந்து போற்றி வருகிறோம். எஞ்சியுள்ளோரின் தமிழ்த் தொண்டும் அவர்தம் வரலாறும் வெளிப்படாமல் இருக்கின்றன. அத்தமிழ்த் தொண்டர்கள் தம் வரலாறு முழுவதுமாக வெளிப்பட்டாலன்றி, தமிழிலக்கிய வரலாறும் முற்றுப்பெறாததாகவே அமையும். ஆதலால், தமிழன்பர்கள் தாமறிந்த தமிழ்ச் சான்றோர்களின் வரலாற்றை வெளிப்படுத்த முன்வர வேண்டும். இதுவும் ஒருவகைத் தமிழ்த்தொண்டே.அரங்கசாமி நாயக்கர்,1884-ஆம் ஆண்டு பிப்ரவரி 6-ஆம் தேதி பிறந்தார். இவரது தாய், தந்தை பற்றிய விவரம் அறியக்கிடைக்கவில்லை. சு.அரங்கசாமி நாயக்கர், மேனாள் பிரெஞ்சிந்தியப் பகுதியான காரைக்காலைச் சேர்ந்த திருநள்ளாறு வட்டம், இளையான்குடி என்னும் சிற்றூரில் வாழ்ந்தவர். இந்திய விடுதலைப் போராட்டத்திலும், குறிப்பாகப் பிரெஞ்சிந்திய விடுதலைப் போராட்டத்திலும் பெரும் பங்காற்றியவர். பிரெஞ்சுக்காரர்களை எதிர்த்துப் பல போராட்டங்களைத் தலைமையேற்று நடத்திய பெருந்தகை. இவர் திருநள்ளாறு நகர மன்றத் தலைவராக நெடுங்காலம் பணியாற்றினார். ஏழைகள் மீது இரக்கம் மிக்கவர். தந்தை பெரியாரிடம் கொண்ட ஈடுபாட்டால் தம் இல்லத்திலேயே தாழ்த்தப்பட்டோர் உள்ளிட்ட அனைவருக்கும் சமபந்தி உணவளித்து மகிழ்ந்தவர்.மணியாச்சியில் ஆஷ்துரையைச் சுட்டுக்கொன்ற வீரவாஞ்சிநாதனுக்குத் துப்பாக்கி அனுப்பி உதவியவர் இப்பெருமகனாரே ஆவார் என்ற செவிவழிச் செய்தியும் உண்டு.இவரும் மற்றும் விடுதலைப்போராட்ட வீரர்கள் சிலரும் சேர்ந்து, "பிரெஞ்சிந்தியக் குடியரசுப் பத்திரிகை' என்ற பெயரில் பத்திரிகை ஒன்றை நடத்தி வந்தனர். விடுதலைப் போராட்டம் பற்றிய செய்திகளோடு, தமிழ்மொழி பற்றிய கட்டுரைகளும் இப்பத்திரிகையில் இடம்பெற்றன. குறிப்பாக தமிழ்மொழி பற்றியும், தமிழிலக்கணம் பற்றியும் அரங்கசாமி நாயக்கர் பல கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். இக்கட்டுரைகளை நூல் வடிவாக்கி வெளியிட்டோர் அரங்கசாமியின் நண்பர்களும் விடுதலைப் போராட்ட வீரர்களுமாகிய, காரைக்கால் வ.பொன்னையா மற்றும் திருநள்ளாறு, தேனூர் பாலசுப்பிரமணிய பிள்ளை அவர்களுமாவர். இந்நூல் பொறையாறு, "ரத்னா விலாஸ் பிரஸ்' என்ற அச்சுக் கூடத்தில் அச்சிடப்பட்டு 3.2.1944-இல் வெளியிடப்பட்டது. "குடியரசு தமிழ் ஆரம்ப இலக்கணம்' என்பது நூலின் பெயர். நூலின் முகவுரையில் தமிழின்கண் வடமொழிக் கலப்புப் பற்றிய கருத்தினை வெளியிட்டுள்ளார். தொல்காப்பியர் காலத்திலேயே வடசொற் கலப்பு ஏற்பட்டுவிட்டது என்கிறார் அரங்கசாமி நாயக்கர். மேலும் தெய்வத் தொடர்பிற்கு வடமொழி உதவியது என்ற கருத்தினையும் வெளியிட்டுள்ளார். ""தெய்வ சம்பந்தங்களுக்கு மாத்திரம் வடசொற்களை வைத்துக்கொண்டு தமிழைத் தனித் தமிழாக்கிப் பார்க்க வேண்டும் என்று எனக்கு ஒரு ஆசை இருக்கிறது'' எனவும் அரங்கசாமி நாயக்கர் குறிப்பிட்டுள்ளது கவனத்திற்குரியது.அத்துடன், ""ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்'' என்ற தொடரினைக் குறித்து தம் கருத்தினைச் சுட்டியுள்ளார். ""அது "ஐந்திரம் அல்ல', "ஐந்திறம்', ஆகவே இருக்க வேண்டும். அதன் விவரம் வேறு கூறுவாய்'' என்று கூறியுள்ளார் (ஆனால் இந்நூலில் இதுபற்றிய செய்தி ஒன்றும் இடம் பெறவில்லை). மற்றும் வீரசோழிய இலக்கணம் பற்றியும் தம் முகவுரையில் குறிப்பிட்டுள்ளார். "பிழைகளைத் திருத்தி அமைப்பதுவே நமது இவ்வாரம்ப இலக்கணத்தின் நோக்கம்'' என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனால் இந்நூலின் நோக்கமும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நூல் எழுத்திலக்கணம் மட்டுமே இயம்புகிறது என்பதையும் சுட்டியுள்ளார்.தமிழின் ஒலிப்புமுறை, நகர, னகர பேதங்கள், லகர, ளகர பேதங்கள், ழகர, ளகர பேதங்கள், மயக்கம் (மெய்ம்மயக்கம்), முதலிடை, கடைநிலை எழுத்துகள், புணர்ச்சி என்ற தலைப்புகளில் எடுத்துக் காட்டுகளுடன் இந்நூலாசிரியர் பல செய்திகளை விளக்கிக் கூறியுள்ளார். இதுவே இந்நூல் தரும் செய்தியாகும். நூல் சிறிதாயினும், முறையாக மாணவர்களுக்குக் கற்பிக்கப்படுமானால் மொழிப் பிழைகள் குறைந்து பிழையின்றி எழுதும் திறம் பெறுவர் என்பதில் ஐயமில்லை.அரங்கசாமி நாயக்கர், தம் வாழ்நாளில் பெரும் பகுதிகளை விடுதலைப் போராட்டத்திலும், சமுதாய மேம்பாட்டுப் பணிகளிலும் செலவிட்டார் என்றாலும் தம் தாய்மொழியாம் தமிழ்மொழி மீது கொண்டிருந்த நீங்காப் பேரன்பினால், தாம் நடத்திய பத்திரிகையில், தமிழின் முன்னேற்றத்திற்கான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகள் பலவற்றையும் வெளியிட்டுத் தொண்டாற்றியுள்ளார்.இப்போது இந்நூல் கிடைத்தற்கரியதாய் இருப்பதால், தமிழக அரசும், தமிழ்ப் பல்கலைக்கழகமும் இதுபோன்று மறைந்து கிடக்கும் நூல்களை வெளியிடும் பணிகளை மேற்கொள்ளல் வேண்டும்.இவ்வாறு வெளிச்சத்திற்கு வராத தமிழ்த் தொண்டர்களையும், தமிழ் நூல்களையும் தமிழன்பர்களும், தமிழ் ஆர்வலர்களும் வெளிப்படுத்துவாராக! அயராமல் உழைத்த அரங்கசாமி நாயக்கர், 1943-ஆம் ஆண்டு ஜனவரி 6-ஆம் தேதி இம்மண்ணுலக வாழ்வை நீத்தார்.
தமிழவேள் உமாமகேசுவரனார்



பண்டைக் காலத்தில் பெருமை பெற்றுத் திகழ்ந்த வள்ளல் பெருமக்களில் "வேள்' என்னும் சிறப்பு அடைமொழி பெற்றவர் இருவராவர். ஒருவர், "வேள்' பாரி; மற்றொருவர் "வேள்' "எவ்வி'. சங்க காலத்துக்குப் பிறகு முதன்முதலாக "வேள்' எனும் பட்டத்தைப் பெற்றவர்தான் உமாமகேசுவரனார்.தஞ்சாவூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றின் கிளை ஆறுகளான வடவாற்றுக்கும் வெண்ணாற்றுக்கும் இடையில் உள்ள "கருந்திட்டைக்குடி' எனும் கிராமத்தில், 1883-ஆம் ஆண்டு மே 7-ஆம் நாள் வேம்பப்பிள்ளை-காமாட்சி தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.÷வல்லத்திலும், கும்பகோணத்திலும் மூன்றாம் படிவம் வரை படித்தார். உமாமகேசுவரனாருக்குப் பன்னிரண்டு வயதாகும் போது, அவரது அன்னை காலமானார். எனவே, கரந்தையில் உள்ள அவரது சிற்றன்னையான பெரியநாயகத்தம்மையாரின் பொறுப்பில் விடப்பட்டார். தஞ்சாவூர் தூய பேதுரு கல்லூரியில் உமாமகேசுவரனார் நான்காம் படிவத்தில் சேர்க்கப்பட்டார். அவரது படிப்பு முடிவதற்குள் தந்தை வேம்பப்பிள்ளையும் காலமானார். உமாமகேசுவரனாரின் சிற்றன்னை இவரைத் தம் மூத்தமகன் போலவே வளர்த்துவந்தார். தஞ்சைக் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்ற உமாமகேசுவரனார், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எழுத்தர் பணியில் சேர்ந்தார்.நேர்மையான வழியில் செல்ல விரும்பிய அவருக்கு, அப்பணியில் நீடிக்க விருப்பமில்லை. எனவே, சட்டப்படிப்பு படிக்க சென்னை சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். அக்கல்வியில் தேர்ச்சி பெற்ற பின்னர், தஞ்சை கே.சீனிவாசப் பிள்ளையிடம் சில ஆண்டுகள் பயிற்சி பெற்றார். பிறகு தாமே வழக்குரைஞர் தொழிலைச் செய்யத் தொடங்கினார்.தம் இருபத்தைந்தாம் அகவையில், உலகநாயகி எனும் அம்மையாரை மணந்தார். இவருக்கு பஞ்சாபகேசன், மாணிக்கவாசகம், சிங்காரவேலு என்ற மூன்று பிள்ளைகள். மூன்றாவது பிள்ளை, பிறந்து நான்கு மாதங்கள் ஆனபோது மனைவி உலகநாயகி காலமானார். தமது மனைவி இறந்த பின் மறுமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்தார் உமாமகேசுவரனார்.துன்பத்துக்கு மேல் துன்பமாக, அவரது மூத்தமகன் பஞ்சாபகேசன் பள்ளி இறுதி வகுப்பு படிக்கும்போது இறந்தார். அவரது பெயரில் கரந்தைக் கல்லூரியில் ஒரு நினைவு நிதியை ஏற்படுத்தினார். அதன் வழியாக ஆண்டுதோறும் ஏழை மாணவர்களுக்குப் பொருள் வசதி செய்ய வழிவகுத்தார்.உமாமகேசுவரனாரின் பேச்சாற்றல் வளர, அவரது வழக்குரைஞர் பணி மிகவும் உதவியாக இருந்தது. தம்மிடம் வரும் கட்சிக்காரர்களிடம் ""இவ்வளவு தொகை தர வேண்டும்'' எனக் கேட்கமாட்டார். பணம் கொடுக்க இயலாத நிலையில் உள்ள ஏழைகளுக்கு இலவசமாக வழக்காடி வெற்றி தேடித்தந்தார். இவரது நேர்மையை அறிந்த அன்றைய அரசு, அவரை "அரசு கூடுதல் வழக்குரைஞர்' பணியில் அமர்த்தியது.தஞ்சை வட்டக்கழகத்தின் முதல் அலுவல் சார்பற்ற தலைவராகவும் தொண்டாற்றியுள்ளார். அவரது பதவிக்காலத்தில் வரகூர்-அம்பது மேலகரச்சாலை மற்றும் ஆலங்குடி-கண்டியூர்ச் சாலைகள் போடப்பட்டன. மேலும் நாகத்தி, தொண்டரையன்பாடி என்னும் சிற்றூர்களுக்குச் செல்ல ஆற்றின் குறுக்கே பாலங்கள் கட்ட ஏற்பாடு செய்தார். இவர் பொறுப்பேற்ற போது நாற்பது அல்லது ஐம்பது தொடக்கப்பள்ளிகள் தான் இருந்தன. உமாமகேசுவரனார் அந்த எண்ணிக்கையை நூற்று எழுபதாக உயர்த்தினார்.கூட்டுறவு இயக்கத்தில் அவருக்கிருந்த ஆர்வத்தால், 1926-ஆம் ஆண்டு செப்டம்பர் 10-ஆம் நாள், கூட்டுறவு நிலவள வங்கி ஒன்று தொடங்க முயற்சி எடுத்தார். 16.2.1927 முதல் கூட்டுறவு அச்சகம் ஒன்றை ஏற்படுத்திச் செயல்படுத்தினார். இதேபோல 1938-இல் கூட்டுறவு பால் உற்பத்தி விற்பனைக் கழகத்தையும் தொடங்கினார். இவற்றுக்கெல்லாம் உமாமகேசுவரனாரின் சிறந்த நிர்வாகத் திறனே காரணம்.1911-ஆம் ஆண்டு மே 14-ஆம் நாள் தொடங்கப்பட்ட கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவராக உமாமகேசுவரனாரைத் தேர்ந்தெடுத்தனர். இன்று ஆயிரக்கணக்கான நூல்களைப் பெற்று விளங்கும் கரந்தைத் தமிழ்ச் சங்க நூல் நிலையம் அவர் முயற்சியால் ஏற்படுத்தப்பட்டதாகும். அன்றே தொழிற்கல்வியின் இன்றியமையாமையை உணர்ந்த உமாமகேசுவரனார், தமிழ்ச் சங்கம் சார்பில் 6.10.1916-இல் செந்தமிழ்க் கைத்தொழிற் கல்லூரியைத் தொடங்கினார். மேலும், சங்கத்தின் சார்பில் 1928-29-இல் கட்டணம் இல்லா மருத்துவமனை தொடங்கப்பட்டது. உமாமகேசுவரனார் சங்கம் தொடங்கிய நான்காவது ஆண்டிலேயே "தமிழ்ப்பொழில்' என்னும் மாத இதழ் தொடங்கப்பட்டது. தமிழ்ச் சங்கத்தின் சார்பில், பல அரிய நூல்களை வெளியிட்டார். 1915-இல் கட்டணமில்லாப் படிப்பகம் ஒன்றையும் தொடங்கினார். இவரது பெரும் முயற்சியின் விளைவாக தமிழ்ச் சங்கத்திற்காக 1928-30-இல் "கரந்தைத் தமிழ்ப் பெருமன்றம்' எனும் கட்டடம் கட்டப்பட்டது.கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளிவிழா 1938 ஏப்ரல் 15,16,17 ஆகிய நாள்களில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவின் முதல் நாளன்று ஞானியாரடிகள் தலைமையில், நாவலர் சோமசுந்தர பாரதியார் முன்மொழிய உமாமகேசுவரனாருக்குத் "தமிழவேள்' பட்டம் வழங்கப்பட்டது. அவ்விழாவின் இரண்டாம் நாளில், கரந்தைத் தமிழ்க் கல்லூரியை தொடங்க வழிவகுத்தார் உமாமகேசுவரனார்.துறையூரில் நடைபெற்ற மாவட்டத் தமிழர் மாநாட்டில் நிகழ்த்திய வரவேற்புரை, நெல்லைப்பாலம் இந்துக் கல்லூரியில் நடந்த சென்னை மாகாணத் தமிழர் முதல் மாநாட்டில் ஆற்றிய தலைமை உரை போன்றவை உமாமகேசுவரனாரின் பேச்சாற்றலை விளக்குவன. "தமிழ்ப்பொழில்' இதழில் அவர் எழுதிய ஆய்வுக் கட்டுரைகளும், தலையங்கங்களும் அவரின் எழுத்தாற்றலுக்குச் சான்று பகர்வன. இவரது முயற்சியால்தான் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆட்சி மன்றத்திலும், கலை மன்றத்திலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் ஓர் இடம் கிடைத்தது.தமிழில் நிறைய கலைச்சொற்கள் உருவாக வேண்டும் என்னும் விருப்பம் கொண்ட உமாமகேசுவரனார், தமிழ்ப்பொழில் இதழில் சாமிவேலாயுதம் பிள்ளை என்பவரைக் கொண்டு, கணக்கு, அறிவியல் ஆகிய பாடங்களுக்கு நல்ல கலைச்சொற்களை உருவாக்கித் தந்தார்.ஞானியாரடிகளின் மணிவிழாவின் போது, "செந்தமிழ்ப் புரவலர்' எனும் பட்டத்தை ஞானியாரடிகள் அவருக்கு அளித்தார். சைவசமயத்தில் மிகவும் ஈடுபாடு கொண்டிருந்த இவர், மற்ற சமயங்களை வெறுக்கவோ, எதிர்க்கவோ இல்லை. மாறாக பிற சமயங்களின் வளர்ச்சிக்கு உதவி புரிந்துள்ளார்.தாகூரால் உருவாக்கப்பட்ட சாந்திநிகேதன் போல, தம்மால் உருவாக்கப்பட்ட கரந்தைத் தமிழ்ச் சங்கமும் விளங்க வேண்டும் என்று எண்ணினார். அதன் பொருட்டுத் தம் நண்பர் அ.கணபதிப் பிள்ளை என்பவருடன் வடநாட்டுப் பயணம் மேற்கொண்டார். கொல்கத்தா சென்று சாந்திநிகேதனைப் பார்வையிட்டார்.பிறகு காசி இந்துப் பல்கலைக்கழகத்தைப் பார்வையிட்டார். அப்போது அவரது உடல்நிலை குன்றியதால், அயோத்தியின் அருகே உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி 1941-ஆம் ஆண்டு மே 9-ஆம் நாள் இவ்வுலக வாழ்வை நீத்தார்.கரந்தைத் தமிழ்ச் சங்கம், ராதாகிருஷ்ணன் தொடக்கப் பள்ளி, உமாமகேசுவரர் மேல்நிலைப் பள்ளி, கரந்தை கலைக் கல்லூரி, திக்கற்ற மாணவர் இல்லம், தமிழ்ச் சங்க நூல் நிலையம், படிப்பகம், தமிழ்ப்பெருமன்றம், தமிழ்ப்பொழில்-இதழ் ஆகியவை அனைத்தும் அவரது நினைவைப் பெருமையுடன் நிலைநிறுத்துகின்றன.