Friday, April 05, 2019

சிலம்பு ஒலிப்பு நின்றது! சிலம்பொலி செல்லப்பன் இயற்கை எய்தினார்!


மூத்த தமிழறிஞர், சிலம்பொலி செல்லப்பன், இவர் உடல்நலக் குறைவு காரணமாக வீட்டில் மருததுவம் பெற்று வந்தார். இன்று (பங்குனி 23, 2050 சனி ஏப்பிரல் 06.2019) காலை 6.30 மணிக்குச் சென்னையில் காலமானார். இவரது உடல்  பதப்படுத்தப்பட்டு நண்பகல் கொணரப்படும். நாளை காலை வரை இல்லத்தில் அஞ்சலிக்கு வைக்கப்பெறும்.நாளை மறுநாள் நாமக்கல் சிவியாம்பாளையத்தில் இறுதி நிகழ்வு நடைபெறும்.
சிலப்பதிகாரம் என்றதும் நினைவிற்கு வரும் சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானம் போன்ற மற்றோர் அறிஞர் சிலம்பொலி செல்லப்பன். 60 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிலப்பதிகாரத்தைப் பாரெங்கும் பரப்பிய இலக்கியச் சொற்பொழிவாளர். சிலம்பொலி, சிலப்பதிகாரம்- தெளிவுரை , சிலப்பதிகாரச் சிந்தனைகள் ஆகிய  நூல்கள் மூலமும் சிலப்பதிகாரத்தை மக்கள் மனங்களில் பதியவைத்துள்ளவர்.
நாமக்கல்  மாவட்டத்தில் உள்ள சிவியாம்பாளையத்தில் சுப்பராயன் – பழனியம்மாள் இணையரின் மகனாக  புரட்டாசி 09, 1959 / 24.09.1928 இல் பிறந்தார். (திசம்பர் 22 1929 இல் பிறந்ததாகச் செய்தித்தாள்களில் குறிப்பு உள்ளது.) மனைவி செல்லம்மாள். ஆண் மக்கள் தொல்காப்பியன், கொங்குவேள் பெண் மக்கள் மணிமேகலை , கெளதமி, நகைமுத்து.
கல்விப்பட்டம்:  கணக்கில் இளமறிவியல் பட்டம். தமிழ் முதுகலை, ஆசிரியப் பட்டம், முனைவர் பட்டம் பெற்றவர். திருப்பதி வேங்கடவன் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற இவரின் ஆய்வுத் தலைப்பு ‘இக்காலக் கவிதை உத்திகள்’ என்பதாகும். செம்மொழி நூல்களோடு ஒப்பிட்டு இன்றைய கவிதை உத்திகள் பற்றி வெளியிடப்பட்ட இவருடைய ஆய்வுகள் மிகச் சிறப்பாக உள்ளன.
கணக்கு ஆசிரியராகத் தன் பணி வாழ்க்கையைத் தொடங்கினார். இவரது தமிழார்வம் இவரைத் தமிழ்ப்பணியின் பக்கம் ஈர்த்து விட்டது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையில் இயக்குநர், தஞ்சைத் தமிழ்பல்கலைக் கழகத்தின் பதிப்புத் துறை இயக்குநர், பதிவாளர் , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் போன்ற பணிகளில் பணியாற்றித் தமிழ் வளர்ச்சிக்கு வெகுவாகப் பாடுபட்டவர்.
1954 ஆம் ஆண்டு சொல்லின் செல்வர் இரா.பி. சேது(ப்பிள்ளை) இவருக்கு வழங்கிய ‘சிலம்பொலி’ பட்டமே இவரின் அடையாளமாக நிலைத்து விட்டது. தமிழ்நாடு அரசு வழங்கிய கலைமாமணி விருது(1997), பாவேந்தர் விருது(1999) உட்பட 46 விருதுகள் பெற்ற விருதாளர்.
செம்மொழித் தமிழோடு தொடர்புடைய முயற்சிகளிலும் பழந்தமிழர் மரபினையும் இன்றைய வளர்ச்சிகளையும் இணைக்கும் வகையில் சிலம்பொலி செல்லப்பன் அவர்கள் பல அருவினைகள் நிகழ்த்தியுள்ளார்.
முதல் அருவினை இவர் எழுதியுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆய்வு அணிந்துரைகள். தமிழகத்தில் இவரிடம் அணிந்துரை வாங்காத நூலாசிரியர்கள் மிகவும் குறைவு. அவரை அணிந்துரை நாயகர் என்றே அழைத்துப் பெருமை செய்வதைக் காண்கிறோம். பழைய இலக்கிய மரபில் சொல்வதென்றால், தமிழில் ஆயிரம் அணிந்துரைகள் எழுதியவர் என்று இவருக்கு ஒரு பரணி பாடலாம்.
இரண்டாவது அருவினை இவருடைய தொடர் சொற்பொழிவுகள். இவருடைய தொடர் சொற்பொழிவுகள் பழந்தமிழ் மரபினையும், இன்றைய வளர்ச்சிகளையும் எடுத்துக் காட்டும். வகையில் அமைந்திருக்கும். சங்க இலக்கியங்களிலிருந்து இன்று வருகின்ற புதிய இலக்கியங்கள் வரை அனைத்தையும் நன்கு ஆய்ந்து திறம்பட எடுத்துக் கூறுவதில் பெரும் வல்லமை பெற்றவராவார்.
பொதுவாக இராமாயணம், மகாபாரதம் போன்றவையே தொடர் சொற்பொழிவுகளாகச் செய்யப்பட்டன. ஆனால் இவரோ மற்றவர்கள் பெரும்பாலும் சொல்லாத இலக்கியங்களை எடுத்துத் தொடர் சொற்பொழிவுகளாகச் செய்திருக்கிறார். மணிமேகலை, சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, இராவண காவியம் , பெருங்கதை, சிற்றிலக்கியங்கள், சங்க இலக்கியங்கள், சீறாப் புராணம், தேம்பாவணி போன்ற இவருடைய தொடர் சொற்பொழிவுகள் இலக்கிய ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.
இவர் நிகழ்த்தியுள்ள இலக்கியச் சொற்பொழிவுகளின் எண்ணிக்கை 150 ஐத் தாண்டும். இந்த அளவு பல்வேறு இலக்கியங்களை ஆண்டுக்கணக்கில் தொடர் சொற்பொழிவாகச் செய்தவர்கள் இல்லையென்றே சொல்லலாம். தன்னுடைய 22 ஆவது அகவையிலிருந்து இன்று வரை ஏறத்தாழ 62 வருடங்களாகச், சிறிதும் ஓய்வு ஒழிச்சலின்றி, தமிழே மூச்சாக, தமிழே பேச்சாக, இலக்கிய பணியாற்றிக் கொண்டிருக்கும் சிலம்பொலி செல்லப்பனார், தமிழ் கூறும் நல்லுலகில் இதுவரை யாரும் நிகழ்த்தாத அருவினையாக, மிக அதிக எண்ணிக்கையில் இலக்கியச் சொற்பொழிவாற்றியுள்ளார்.
சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை, சிற்றிலக்கியங்கள்,  சீவக சிந்தாமணி, இராவண காவியம், பாரதிதாசன் கவிதைகள், சீறாப் புராணம், இராசநாயகம், தேம்பாவணி, பேரறிஞர் அண்ணாவின் சிறப்புகள் ஆகியவை தொடர்பான தொடர் சொற்பொழிவுகள் நிகழ்த்தி இலக்கியங்களை மக்கள் மனத்தில் பதித்தவர் எனலாம்.
குறிப்பாக, மணிமேகலை(18 பொழிவுகள்), சிலப்பதிகாரம்(10 பொழிவுகள்), சங்க இலக்கியம்(18 பொழிவுகள்), சீவக சிந்தாமணி குறித்த தொடர் சொற்பொழிவு-15 பொழிவுகள், பெருங்கதை(25 பொழிவுகள்), பிரபந்த இலக்கியங்கள்(12 பொழிவுகள்), சீறாப் புராணம் (20 பொழிவுகள்), முதலாகப் பல்வேறு இலக்கியங்கள் குறித்து இவர் தொடர்சொற்பொழிவுகள் ஆற்றி மக்கள் மனத்தில் இலக்கிய ஆர்வத்தை விதைத்தார். இராவண காவியம் குறித்து மட்டும், பெரியார் நூலக வாசகர் வட்டத்தில் 22 பொழிவுகள்,  நாமக்கல்பாவேந்தர் இலக்கிய பேரவையில் 12 பொழிவுகள், சென்னை சிந்தனையாளர் மன்றத்தில் 12 பொழிவுகள் எனத் தொடர் சொற்பொழிவுகள் ஆற்றித் தமிழ் இனமான உணர்வை மக்களுக்கு ஊட்டினார்.
இவை தவிர நூற்றுக்கணக்கான மாநாடுகளிலும், கருத்தரங்குகளிலும் கலந்து கொண்டு பேருரையாற்றியுள்ளார். இவர் கலந்து கொள்ளாத தமிழ் மாநாடோ, முதன்மைக் கருத்தரங்குகளோ இல்லையென்று கூறினால் அது மிகையாகாது. இவர் கலந்து கொள்ளாத, சொற்பொழிவாற்றாத தமிழ்மேடை எதுவும் இருக்குமா என்பது ஐயமே.
செம்மொழித் தமிழோடு தொடர்புடைய பழந்தமிழரின் இன்றைய வளர்ச்சிகளையும் இணைக்கும் வகையில் இலக்கிய நூல்கள் எழுதி வெளியிட்டமை, ஆய்வு அணிந்துரைகள் வழங்கியமை, செம்மொழி நூல்கள்- காப்பியத் தலைப்புகளில் ஆயிரக்கணக்கில் சொற்பொழிவுகள்-தொடர் சொற்பொழிவுகள், திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, நாலடியார், பெருங்கதை ஆகியவற்றை ஆய்ந்து தெளிவுரை எழுதியமை, எண்ணற்ற இலக்கியக் கட்டுரைகள் , மூன்று உலகத் தமிழ் மாநாட்டு மலர்கள் ஆகியன இவர் தமிழன்னைக்குச் சூட்டிய அழகு அணிகலன்களாகும்
ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆய்வு அணிந்துரைகளை எழுதி மிகப்பெரும் அருவினை ஆற்றியவர்; சிலம்பொலியார் அணிந்துரைகள் (6 தொகுதிகள்) என்னும் நூல் தமிழக அரசின் சிறந்த அணிந்துரை இலக்கிய நூலாகத் தேர்வு செய்யப்பட்டுப் பரிசு பெற்றது. இவருடைய அணிந்துரைகள் செய்திக் கருவூலமாக, கருத்துக் களஞ்சியமாக, தமிழியல் வரலாற்று ஊற்றுக்கண்ணாக இன்றியமையாச் சிறப்பினவாக விளங்குகின்றன.
மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, மொரீசியசு, ஐக்கிய அரபு நாடுகள் , அமெரிக்கா, இங்கிலாந்து, ஆத்திரேலியா ஆகிய நாடுகளுக்கு அங்குள்ள தமிழ் அமைப்புகளின் அழைப்பையேற்றுச் சென்று, திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, பத்துப்பாட்டு, எட்டுத்தொகை போன்ற செம்மொழி நூல்கள்பற்றித் தேன்மழை பொழிந்தது போன்ற அருமையான சொற்பொழிவுகளை நிகழ்த்திச் செம்மொழி ஆர்வத்தை வளர்க்கவும், பரப்பிடவும் வழி செய்தார். கடல்மடை திறந்தது போல் தடையின்றிப் பேசும் பேச்சாலும், கேட்கக் கேட்கத் திகட்டாத தேன் சுவைக்கு ஒப்பான சொற்பொழிவுகளாலும் செம்மொழித் தமிழ் இலக்கிய ஆர்வத்தை வளர்த்தார்.
சிலப்பதிகாரத்தை உலகெல்லாம் பரப்பும் நோக்கத்துடன் சிலம்பொலி சு.செல்லப்பனார், ‘சிலப்பதிகார அறக்கட்டளை’ என்னும் அமைப்பை 2014-ஆம் ஆண்டு நிறுவினார். சிலப்பதிகாரத்தைப் பரப்புதற்கு மாநாடுகள், கருத்தரங்குகள், கூட்டங்கள் நடத்திடுதலும் சிலப்பதிகாரத்திற்குத் தொண்டாற்றியவர்களுக்கு ஆண்டு தோறும் ‘இளங்கோ விருது’வழங்குதலும் இந்த அறக்கட்டளையின் செயல்முறைகளுள் அடங்கும்.
http://silambolichellappan.com/  தளத்தில் சிலம்பொலியார் பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.
தொடர்பிற்கு திரு இராகுல் காந்தி – 8695410179

திருக்குறள் சான்றோர் இலக்குவனார் திருவள்ளுவன் 1/2 – பேரா. வெ.அரங்கராசன்

திருக்குறள் சான்றோர் இலக்குவனார் திருவள்ளுவன் 1/2
முன்னுரை
திருக்குறள் சான்றோர்களை உலகிற்கு அறிமுகப்படுத்தும் உயர் நோக்கில் பேராசிரியர் முனைவர் கு.மோகன்ராசு அவர்கள் அறிஞர்களைக் கொண்டு உரையாற்றச் செய்து அவற்றை நூல் தொகுதிகளாக வெளியிட்டு வருகிறார். அந்த வரிசையில் இன்று நான் திருக்குறள் சான்றோர் இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி கொள்கின்றேன்.
திருவள்ளுவர் வழித்தோன்றல்கள்
திருவள்ளுவர் பெயரைத் தாங்கித் திருக்குறள் வழியில் வாழும் திருக்குறள் சான்றோர் இலக்குவனார் திருவள்ளுவன். இவருடைய பெற்றோர் தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார்-இ.மலர்க்கொடி இணையர் இவருக்குப் பிறக்கும் பொழுது சூட்டிய பெயரே திருவள்ளுவன் என்பதுதான். தம் பெயரைக் காப்பாற்றும் வண்ணம் திருக்குறள் வழியில் வாழ்ந்து வரும் நற்பெருமகனாராகத் திகழ்கிறார். தமிழ்க்காப்புப் போராளி சி.இலக்குவனார் குறித்து வையகம் நன்கறியும். தமிழ்க்காப்பிற்காக இரு முறை சிறை சென்றவர்; திருவள்ளுவருக்குச் சிறப்பான விழாக்கள் எடுத்தவர்; திருக்குறள் வகுப்புகள் நடத்தி மக்களைத் திருவள்ளுவர் வழியில் வாழச் செய்தவர்; குறள்நெறி என்னும் திங்களிதழ், திங்களிருமுறை தமிழ் இதழ், திங்கள் இருமுறை ஆங்கில இதழ்,  தமிழ் நாளிதழ் நடத்தி மக்களிடையே குறள்நெறியைக் கொண்டு சென்றவர். அவருடைய மக்களுள் ஒருவரான இலக்குவனார் திருவள்ளுவன் திருக்குறள் சான்றோராக வாழ்வதில் வியப்பு ஏதும்  இல்லை அல்லவா?
திருக்குறள் ஈடுபாட்டின் தொடக்கம்
இவர் 6-ஆம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரை திருக்குறள் ஒப்பித்தல் போட்டிகளில் ஆண்டுதோறும் பள்ளியிலும் பிற அமைப்புகளிலும் பங்கேற்றுப் பரிசுகள் பெற்றுள்ளார். இவ்வாறு முதன்முறையாக ஆறாம் வகுப்பில் 5 அதிகாரங்களைப் படித்து அவற்றில் ஒன்றை ஒப்பிக்க வேண்டும் என்றபொழுது ஏற்பட்ட ஆர்வமே இவரைத் திருக்குறளில் ஈடுபடச் செய்துள்ளது. முதல் போட்டியிலேயே முதல் பரிசு பெற்றதும் திருக்குறளை எப்பொழுதும் படிக்க வேண்டும் என்று எண்ணினார். எனவே, போட்டி நோக்கத்தில் இல்லாமலே திருக்குறள்களைப் படித்தார். உயர்நிலைப் பள்ளி முடிக்கும் முன்னரே அறத்துப்பால், பொருட்பால் முழுமையும் மனப்பாடமாக அறிந்திருந்தார்.
 குறள்நெறியைப் பின்பற்றும் கடப்பாடு
இவர் 8-ஆம் வகுப்புப் படிக்கும் பொழுது ‘புலால் மறுத்தல்’ அதிகாரத்தை ஒப்பித்துப் பரிசு பெற்றார். பரிசு பெற்றதால் படித்ததன்படி ஒழுக வேண்டும் என்று புலால் உண்பதைக் கைவிட்டார். இளம் மாணவப் பருவத்திலேயே திருக்குறள் படி வாழ்தல் வேண்டும் என்ற உணர்வுடன் இவர் இருந்துள்ளார் எனில் எத்தகைய பெருஞ்சிறப்பு அது. இப்படி ஒருவரைக் காணுதல் அரிதல்லவா? இத்தகையவரைப் பற்றி நான் பேசுகிறேன் என்றால் எனக்கும் சிறப்புதானே!
திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டில் புதிய செயற்பாடுகள்
திருவள்ளுரின் 2000 ஆம் ஆண்டுப் பிறப்புதொடங்குவதற்கு முன்னர் இவரின் தந்தையார் தமிழ்ப்போராளி சி.இலக்குவனார் 1968 ஆம் ஆண்டு இறுதியில் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் ஒன்று மடல் எழுதும் முன்னர்த் திருக்குறளை எழுதித் தொடங்க வேண்டும் என்பது. அது முதல் அனைத்து மடல்களிலும் திருக்குறளை எழுதித் தொடங்கினார். இவரது மடல்களைப் படிக்கும் நண்பர்களும் உறவினர்களும் மறுமடல் எழுதும் பொழுது இவரைப் பின்பற்றித் திருக்குறளை எழுதினர். இவ்வாறு பிறருக்குத் திருக்குறள் ஆர்வத்தை உண்டாக்கினார்.
இவ்வாறு மாணவப்பருவத்திலேயே திருக்குறளைப் பின்பற்றவும் பரப்புவும் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டார்.
அது முதற்கொண்டு தம்முடைய எல்லாப் பேச்சுகளிலும் எல்லாக் கட்டுரைகளிலும் ஏற்ற திருக்குறளைப் பயன்படுத்தித் திருக்குறள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்; திருக்குறள் கருத்தரங்கங்களில் கட்டுரை படித்துத் திருக்குறளின் சிறப்புகளைப் பரப்பி வருகிறார்.
மாணவப்பருவத்திலேயே தமிழ் அமைப்புகள் வழித் திருக்குறள் ஒப்பித்தல் போட்டி நடத்தினார். 1973 இல் தந்தையார் இறந்தபின் இறுதிக்கடன் நாளில்  திருக்குறள் ஒப்பித்தல், திருக்குறள்பற்றிய பேச்சுப் போட்டியை நடத்தினார். அது முதற்கொண்டு திருக்குறள் ஒப்பித்தல் போட்டி, திருக்குறள் பயிற்சி, திருக்குறள் தொடர்பான கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டிகள் வழிச் சிறார் முதல் பெரியோர் வரை திருக்குறளில் ஈடுபாடு காட்டவும் திருவள்ளுவரைப் போற்றவும் வழிகாட்டுகிறார்.
பணிகள் வாயிலாகத் திருக்குறள் வழியில் பிறரை வாழச்செய்தவர்
  எப்பொழுதுமே கள்உண்ணாமை, சூது ஒழித்தல், பிறன்மனை விழையாமை முதலிய குறள்நெறிப்படி வாழும் குறள்நெறியாளர் இவர். பிறரையும் இவ்வழிகளைப் பின்பற்றி வாழச்செய்த பெருமகனார் இவர். இவர் சிறைத்துறையில் நன்னடத்தை அலுவலராகப் பணியாற்றும் பொழுது குற்றவாளிகளையும் இளங்குற்றவாளிகளையும் சென்றவிடங்களில் எல்லாம் மனத்தை அலைய விடாமல் நன்றின்பால் திருப்பிப் பொய்யாமை, கள்ளாமை, கள் உண்ணாமை, விலைக்கு உடல் விற்காமை என ஒழுக்க நெறிகளில் வாழச்செய்து சிறந்த சீர்திருத்தப்பணிகளை ஆ்ற்றியுள்ளார்.
கலைகள் வாயிலாகத் திருக்குறள் பரப்பும் திருக்குறள் கலைஞர்
திருக்குறள் முத்தமிழ் விழா நடத்தி அதில் இவரே, திருக்குறட் பாக்களுக்குக் காவடி மெட்டு அமைத்தும் பிற நாட்டுப்புற மெட்டு அமைத்தும்  காவடியாட்டம், பொய்க்கால் குதிரை, கரகம் முதலான நாட்டுப்புறக்கலை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். திருக்குறளை நாட்டுப்புறக் கலை வடிவில் மக்களிடம் கொண்டு சென்றவர் இவர் ஒருவரே! ‘திருக்குறள் இசையமுது’ முதலான பிறரது திருக்குறள் இசைப் பாடல்களையும் மேடையேற்றம் செய்து கலைகள் வாயிலாகத் திருக்குறளை மக்களிடம் பரப்பியுள்ளார்.
 குறட்பாக்களுக்குக் காலத்திற்கேற்ற விளக்கம் தரும் திருக்குறள் ஆய்வறிஞர்
இலக்குவனார் திருவள்ளுவன் திருக்குறளுக்கு முழுமையான உரை நூல் எழுதினார் எனில் அது மிகச் சிறப்பாக அமையும். ஏனெனில் அவர் கட்டுரைகளிலும் சொற்பொழிவுகளிலும் திருக்குறளுக்குத் தரும் விளக்கங்கள் வாழ்வியலுக்கு ஏற்ற மக்கள் உரையாக விளங்குகின்றன. சான்றுக்குச் சில பார்ப்போம்.
  1. பற்றிலர் என மொழிப்பற்றிலரைக் குறித்தல்
 அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி. (திருக்குறள் 506)
என்னும் குறளுக்குப் பெரும்பாலோர் சுற்றம் அற்றவர் என்றே குறிக்கின்றனர். மணக்குடவர்  ஒழுக்கமற்றாரைத் தேறுதலைத் தவிர்க என்கிறார். பரிப்பெருமாள், ஒழுக்கமற்றாரைத் தேறுதலைத் தவிர்க என்கிறார். பரிதி,  பொருளும் கிளையும் கல்வியும் அற்றாரை நம்பாதே என்கிறார். இவர் மொழிப்பற்று அற்றாரை நம்பக் கூடாது எனப் பொருத்தமான இக்காலத்திற்கேற்ற விளக்கம் தருகிறார்.

  1. எண் எழுத்து என்பதற்கு மொழியைக் காக்க வேண்டும் என்ற விளக்கம்
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்என்ப வாழும் உயிர்க்கு. (திருக்குறள் 392)
இதற்குப் பெரும்பாலோர் எண்ணும் எழுத்துமாகிய இரு கலைகள் என்றும் இரு பொருள்கள் என்றும் விளக்கம் தந்துள்ளனர்  புத்துரை எழுதுபவர்கள் எண் என அறிவியலையும் எழுத்து எனக் கலையியலையும் கூறுவதாகக் கூறுவர்.
ஆனால் இலக்குவனார் திருவள்ளுவன் காலத்திற்கேற்பப் பொருத்தமான விளக்கம் தருகிறார்.
எழுத்துச் சீர்திருத்தம் என்ற பெயரில் அவ்வப்பொழுது சிலர் எழுத்தைச் சிதைத்து வருகின்றனர்; எண்ணையும் அழியச் செய்கின்றனர். எழுத்து அழிந்தால் மொழி அழியும்; மொழி அழிந்தால் இனம் அழியும். எனவே, மொழியும் இனமும் அழியாமல் இருப்பதற்காக மொழியின் பகுதிகளாகிய எண்களையும் எழுத்துகளையும் அஃதாவது நாம் தமிழ் எண்களையும் எழுத்துக்களையும் கண்களெனப் போற்றிக் காக்கத் திருவள்ளுவர் வலியுறுத்துவதாக விளக்கம் தருகிறார்.

  1. நெருநல் என்பதற்கு நேற்றிருந்த நிலைமையைக் கூறுதல்
 நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு. (திருக்குறள் 336)
இத் திருக்குறளுக்கு யாக்கை நிலையாமையாக, நேற்று உயிருடன் இருந்தவன் இன்று இறந்துவிட்டான் என்பர் பெரும்பாலோர்.
இலக்குவனார் திருவள்ளுவன் காலத்திற்கேற்ற விளக்கம் அளித்துள்ளார். நேற்று ஒரு பொறுப்பில்/பதவியில்/செல்வநிலையில்/செல்வாக்குடன் இருந்தவன் இன்று அதனை இழந்து நிற்கும் பதவி, செல்வாக்கு, செல்வம் நிலையாமையக் குறிப்பிடுகிறார்.  இது மிகவும் எக்காலத்திற்கும் ஏற்றதாக உள்ளது.
  1. மொழி யறிவினையும் மொழி வளர்ப்பையும் குறித்தல்
இவரது குறள்வழிச் சிந்தளை வளத்திற்கு மற்றுமோர் எடுத்துக்காட்டு  அகரமுதல இதழின் (மார்கழி 16 – மார்கழி 22, 2048) தலையங்கம் ஒன்றில் பின்வருமாறு குறித்துள்ளார்:
நாட்டுமக்கள்மீது அன்பும் நாட்டுமொழி அறிவும் நாட்டையும் மொழியையும் முன்னேற்றும் திறமையும் பதவிகள் மீது பேராசையின்மையும் உடையவர்களைத் தேர்வு செய்ய வேண்டும்.
அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு. (திருவள்ளுவர், திருக்குறள் 513)
இன்றைக்கு நமக்குத் தேவையானவற்றைத் திருக்குறள் வழி விளக்குவதில் இவர் வல்லவர் என்பதற்கு இவையே சான்று.
(தொடரும்)
–  பேரா. வெ.அரங்கராசன்
முன்னாள் தலைவர்தமிழ்த்துறை,
கோ.வெங்கடசாமி நாயுடு கல்லூரி,
கோவிற்பட்டி 628 502